20 செப்டம்பர், 2010

மரம் காத்த மாணவர்கள்!

கோவை மாவட்ட ஆட்சியர் எத்தனையோ மனுக்களை கண்டிருக்கிறார். ஆனால் இப்படி ஒரு மனுவை, வாழ்வில் முதன்முறையாக வாசிக்கிறார். ஒரு அரசமரம் நேரடியாக வாய்திறந்துப் பேசுவதைப் போன்ற வார்த்தைகள். திரும்ப திரும்ப வாசிக்கிறார்.

"நான் உங்களுக்கு நிழல் தருகிறேன். சுவாசக்காற்று தருகிறேன். அப்படியிருந்தும் என்னை ஏன் அழிக்க நினைக்கிறீர்கள்? என்னை அழித்துவிட்டு வெயிலில் வாடி, வதங்கி நீங்கள் அழிந்துப் போகாதீர்கள். என்னை நீங்கள் சாய்த்துவிட்டால், என்னை நம்பி, கிளைகள் மீது கூடுகட்டி வாழும் புள்ளினங்களுக்கு என்ன 

பதில் சொல்வேன்? கார்பன்-டை-ஆக்ஸைடை நான் எடுத்துக்கொண்டு, சுத்தமான பிராணவாயுவை உங்களுக்கு தரும் என்னை அழித்திடாமல் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் காத்திட வேண்டும்!"

பீளமேட்டைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் அருண்குமாரும், அவனது நண்பர்கள் குழாமும் சேர்ந்து எழுதியிருந்த மனுவில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் இவை.

என்ன பிரச்சினை?

கோவையைச் சேர்ந்த வின்சென்ட் விளக்குகிறார். சுற்றுப்புறச் சூழல் ஆர்வலரான இவர், இது பசுமை தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கிறார். மர வளம் என்ற பெயரில் இணையத்தளம் ஒன்றையும் இதற்காக நடத்தி வருகிறார்.

"செம்மொழி மாநாடு கோவையில் நடந்ததை ஒட்டி, சமீபகாலமாக நகரத்தின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கத்துக்காக பல்லாயிரம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனையோடு பார்த்து நின்றோம்.
கோவை அவினாசி பிரதான சாலையிலிருந்து 200 மீட்டர் தூரத்தில், மசாக்காளிபாளையம் செல்லும் சாலையில் பிள்ளையார் கோயில் ஒன்றும், அம்மன் கோயில் ஒன்றும் இருந்தது. இக்கோயில்களை ஒட்டி பழமையான பிரம்மாண்டமான அரசமரம் ஒன்று, அப்பகுதி மக்களுக்கு பசுமையான நிழலையும், சுத்தமான காற்றையும் 55 வருடங்களாக தந்து வந்தது.

சாலை விரிவாக்கத்துக்காக இம்மரம் வெட்டப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கோயில்கள் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், அப்பகுதி மாணவர் அருண்குமாரும், அவரது நண்பர்களும் குறைதீர்க்கும் நாளன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவொன்று கொடுத்தார்கள்" என்று வின்சென்ட் பின்னணிக் கதையை சொல்லி முடித்தார்.

அரச மரத்தின் இன்றைய கதி என்ன? நேராக அங்கேயே சென்று பார்த்துவிடுவோமே?

எந்தவித சேதாரமுமின்றி மரம் தன்னுடைய கம்பீரத் தோற்றத்தோடு இன்னமும் அங்கேயே வீற்றிருக்கிறது. மரத்தைச் சுற்றியும் சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. மரத்தை நம்பி கூடுகட்டி வாழும் நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அச்சாலையிலேயே இன்று 'நிழல்தரும் ஒரே குளிர்தரு' இதுமட்டும்தான்.

மரம் காத்த மாணவக் கூட்டம், மரத்தின் நிழலில் நின்று கூட்டாக வெற்றிப் புன்னகையோடு போஸ் கொடுக்கிறார்கள். "இது எங்கள் தாத்தா பாட்டி நட்ட மரம். எங்கள் அப்பாக்கள் ஓடி பிடித்து விளையாடிய இடம். எங்கள் முன்னோர் சொத்தை நாங்களும் அனுபவிக்க வேண்டாமா?" என்கிறார்கள். அருகிலிருக்கும் கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், குழந்தைகளின் பெற்றோர் என்று அனைவருக்குமே ஆனந்தம்.

மாணவர்களின் மனுவில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் மரத்தை வெட்டக்கூடாது என்று நேரடியாக ஆணையிட்டு தடுத்திடுக்கிறார்.

"எங்கள் குழந்தைகளுக்கு தன்னிச்சையாகவே இம்மரத்தை காக்க வேண்டுமென்று ஆர்வம் இருந்தது. எப்படி காப்பது என்று நடைமுறைகளை மட்டுமே சொல்லிக் கொடுத்தோம். அருண்குமார் மனு தயாரிக்க, இப்பகுதி குழந்தைகள் அனைவரும் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள். மாவட்ட ஆட்சியரும் பெருந்தன்மையோடு நடவடிக்கை எடுத்திருக்கிறார்" என்றார் தண்டபாணி. இவர் அருண்குமாரின் தந்தை.
இயற்கையை காக்க வேண்டும் என்ற அக்கறையை இம்மாணவர்களுக்குள் விதைத்திருக்கும் அவர்களது பெற்றோரும், ஆசிரியருமே முதலில் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

மரத்தை காக்க மாணவர்கள் மனு கொடுக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அதனை கனிவோடு பரிசீலிக்கிறார். மரம் தப்புகிறது. - அரசிடம் பிரச்சினைகளுக்காக சென்றால் தீர்வே கிடைக்காது என்று புலம்புபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய நிகழ்வு இது.

(நன்றி : புதிய தலைமுறை)

18 செப்டம்பர், 2010

நூல் சூட்டாதீர்கள், கயிறு திரிக்காதீர்கள்!

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் என்றொரு ஊர் இருக்கிறது. அந்த ஊரில் ஒரு திருமண வீட்டில் நிகழ்ந்த கலவரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த சர்ச்சையை நாம் கொஞ்சம் ஆழமாகவும் அலசிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

நடந்தது என்ன? டி.எஸ்.கார்னர் பகுதியில் ஒரு கல்யாணம் நடந்திருக்கிறது. அதற்கு வருமாறு கல்யாண வீட்டுக்காரர் தன்னுடைய உற்றாரையும், உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்திருக்கிறார். நேரில் சென்றும் அழைத்திருக்கிறார். தபால் அனுப்பியும் அழைத்திருக்கிறார். பொதுவாக ஒரு தமிழன் கல்யாணத்துக்கு எப்படியெல்லாம் மற்றவர்களை அழைக்க வேண்டுமோ அப்படியெல்லாம் அழைத்திருக்கிறார்.

ஆனால், கல்யாணம் முடிந்ததும் 'மொய்' கூட எழுதாமல் உறவினர் உற்றார் பாகுபாடில்லாமல் ஒட்டுமொத்தமாக பந்திக்கு முந்தியிருக்கிறார்கள். இதனால் சாப்பாட்டுக் கூடத்தில் வாயிலில் தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. ஒட்டுமொத்தமாக 100 பேர் மட்டுமே சாப்பிடக்கூடிய அளவிலான சாப்பாட்டுக் கூடங்கள்தான் தமிழகத்தில் பெரும்பான்மையான (அதாவது 89.99%) திருமண மண்டபங்களில் இருக்கிறது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் திருமண மண்டபத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் சாப்பிடும் வசதி இருக்கிறது. தமிழக சராசரியை விட இது பத்து மடங்கு அதிகம். இது தமிழகத்தை ஆளும் கலைஞர் கருணாநிதிக்கு நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும்.

டி.எஸ்.கார்னர் பகுதி திருமண மண்டபத்தின் இடநெருக்கடி தந்த எரிச்சல் சாப்பிட வந்தவர்களை வன்முறையாளர்களாக்கி இருக்கிறது. அதே பகுதி காமராஜபுரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். தள்ளுமுள்ளு நெருக்கடியால் கடுப்பாகிப் போய் இலைக்கு முன்பாக மனைவிக்கு அருகாக அமர்ந்திருக்கிறார். இலையில் இட்லி வைத்திருக்கிறார்கள். ஜெகநாதனுக்கு உலகிலேயே பிடிக்காத வார்த்தை சட்னி. எனவே இட்லிக்கு சட்னி வேண்டாம் என்று பரிமாறுபவரிடம் ஜனநாயக அடிப்படையில் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

ஆனால், இதை காதில் வாங்காத பரிமாறுபவர் அவருக்கு வேண்டுமென்றே சட்னியை ஊற்றியிருக்கிறார். கலைஞர் கருணாநிதியின் ஆட்சி இலட்சணம் இதுதான். வேண்டாமென்பவர்களுக்கு போதும் போதும் என்ற வகையில் சலுகைகளை வழங்குவதும், வேண்டும் என்பவர்களுக்கு அல்வா தருவதுமே கலைஞர் கருணாநிதியின் கடந்த ஐந்தாண்டுகால சாதனை. சாம்பார் பரிமாறியவரின் பெயர் கன்னிமுத்து. அதாவது க.மு. திருப்பிப் போட்டால் மு.க. கன்னிமுத்து ஏன் வேண்டுமென்றே ஜெகநாதனுக்கு அவருக்கு பிடிக்காத சாம்பாரை ஊற்றியிருக்கிறார் என்பது இப்போதாவது புரிகிறதா?

இந்த சட்னி-சாம்பார் பிரச்சினையில் கன்னிமுத்துவுக்கும், ஜெகநாதனுக்கும் வாய்த்தகராறு முற்றி வன்முறை ஏற்பட்டிருக்கிறது. கன்னிமுத்து தன் கையில் இருந்த சட்னி வாளியை, ஜெகநாதனின் தலையில் கவிழ்த்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருக்கிறார். மேலும் சில கன்னிமுத்து ஆதரவாளர்கள் சேர்ந்து படுகாயமடைந்த ஜெகநாதனை உதைத்து கொடுமைப் படுத்தியிருக்கிறார்கள். பின்னர் ஜெகநாதன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேற்கண்ட நிகழ்வுகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட சில கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய கடமை முதலமைச்சருக்கு இருக்கிறது.

1. இவ்வாறான ஒரு சம்பவம் அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால் திமுக தலைவர் என்ன அறிக்கை விட்டிருப்பார்?

2. 1995ல் தூத்துக்குடியில் மிளகாய் பஜ்ஜியில் மிளகாய் இல்லை என்று இதேமாதிரியான ஒரு பிரச்சினை வந்தபோது, தூத்துக்குடி நகர திமுக யாருக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தியது? பின்னர் 1996ல், 2006ல் என்று இருமுறை திமுக ஆட்சி வந்தும் இன்னமும் அந்த மிளகாய் பஜ்ஜி தகராறுக்கு காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை கூட பதியப்படவில்லையே?

3. சட்னி வாளியை தலையில் கவிழ்த்த கன்னிமுத்துவின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ஒரு உண்மையை மனித உரிமை ஆர்வலர்கள் கண்டிருக்கிறார்கள். கன்னி முத்துவின் வீட்டில் இருப்பது தமிழக அரசு கொடுத்திருக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி. அரசு கேபிள் கார்ப்பரேஷனின் கனெக்‌ஷன் அவரது வீட்டில் இல்லை. முதல்வரின் பேரர்களான நிதி சகோதரர்களின் சுமங்கலி கேபிள் விஷன் கனெக்‌ஷனை கன்னிமுத்து வைத்திருக்கிறார். அதுவுமின்றி அடிக்கடி கலைஞர் தொலைக்காட்சி பார்க்கிறார். கலைஞரின் இன்னொரு பேரன் வினியோகித்திருக்கும் 'நான் மகான் அல்ல' திரைப்படத்தின் விளம்பரத் துண்டு காட்சிகளை தொடர்ச்சியாக பார்த்தபின்பே அவருக்கு சட்னி வாளியை சகமனிதரின் தலையின் கவிழ்க்கும் வன்முறை எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விரும்பத்தகாத சம்பவங்களுக்கு கலைஞர் கருணாநிதியின் குடும்பம் பொறுப்பேற்க வேண்டுமா? இல்லையா?

4. சட்னி வேண்டாம், சாம்பார் வேண்டும் என்று கேட்டவர் தலையில் சட்னி வாளியை கவிழ்க்கும் ஆணவம் ஒரு குடிமகனுக்கு வருகிறது என்றால், அதற்கு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதுதானே பொருள்? சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர்தானே பொறுப்பேற்க வேண்டும்?

முதல்வர் அவர்களே, இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்ல விருப்பமில்லாவிட்டால் மவுனமாக இருங்கள். குறுக்கே நூல், நெடுக்கே கயிறு என்று பழங்கதைகளை எங்கள் மீது திணிக்காதீர்கள். உங்களுக்கு உங்கள் குடும்பம் தரும் நிர்ப்பந்தத்தையும், அதனால் விளையும் விபரீதங்களையும் நாங்களே புரிந்துக் கொள்கிறோம்.

* - * - * - * - * * -

ஒன்றுமில்லை தோழர்களே. ஒரு சப்பை மேட்டரை எப்படி சாகஸப் பத்தியாக எழுதுவது என்று எழுதிப் பழகிக் கொண்டிருக்கிறேன். செய்திக்கு உதவி : சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் வழங்கும் 'தினகரன்'

இந்த எழுத்து உத்தி யாராவது பிரபல சிந்தனையாளரை உங்களுக்கு நினைவுபடுத்துமேயானால் அதற்கு கொம்பெனி பொறுப்பல்ல.

17 செப்டம்பர், 2010

காதுல பூ!

உலகிலேயே இரட்டையர் குறித்த அதிக மூடநம்பிக்கைகளை மக்களிடையே பரப்பும் சாதனம் எதுவென்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு 'தமிழ் சினிமா'வென்று சத்தமாக சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு 'டபுள் ஆக்‌ஷன்' படங்களை சக்கையாக எடுத்துக் குவித்துத் தள்ளியிருக்கிறார்கள்.

உலகளவில் சினிமாவின் சொர்க்கமான ஹாலிவுட்டில் இரட்டைவேடப் படங்கள் மிகவும் அரிது. ஏனெனில் அங்கெல்லாம் கதையில் 'லாஜிக்' இல்லையென்றால் ரசிகர்கள் கடித்துக் குதறிவிடுவார்கள். நாம் தான் காலம் காலமாக காதில் பூ வைத்த, திரைரசிகப் பாரம்பரியத்தில் வந்தவர்களாயிற்றே? திரையில் எவ்வளவு டூப்பு அடிக்கப்பட்டாலும் கைவலிக்கத் தட்டுகிறோம். வாய்வலிக்க விசிலுகிறோம்.

ஹாலிவுட்டில் 70 வருடங்களுக்கு முன்பாக Man in the iron mask என்றொரு இரட்டைவேடப் படம் வந்து பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை அந்தக் காலத்து தமிழ் இயக்குனர் யாரோ தெரியாத்தனமாக பார்த்துத் தொலைத்திருக்க வேண்டும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தது சனி.

தமிழின் முதல் இரட்டைவேடப் படமான 'உத்தம புத்திரன்' 1940ல், பி.யூ.சின்னப்பா கதாநாயகனாக நடித்து வெளிவந்து சக்கைப்போடு போட்டது.  இதே படம் பிற்பாடு சிவாஜிகணேசனை நாயகனாக்கி, இதே கதையோடு வெளிவந்து மீண்டும் சக்கைப்போடு போட்டது. சக்கைப்போடு போடு ராஜாவென்று அதே உத்தமபுத்திரனின் கதையை மீண்டும் மீண்டும் உல்டா அடித்து தமிழில் வெளிவந்த திரைப்படங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டைச் செஞ்சுரி அடித்திருக்கும். நேற்றைய இம்சை அரசன் 23வது புலிகேசி கூட உத்தமபுத்திரனின் கதையை உருவியது தானென்பது உற்றுப் பார்க்காமலேயே தெரியும்.

எத்தனை தடவை ஒரே கதையை வேறு வேறு நடிகர்களை வைத்து எடுத்தாலும், திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருக்குமளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்ட ரசனை நம்முடையதாகிப் போனது. இரட்டையர்களாக பிறக்கும் அண்ணன் தம்பிகள் பிரிந்து விடுவார்கள். ஒருவன் நல்லவனாக வளர்வான். மற்றொருவன் கெட்டவனாக வளர்வான். இருவரும் மோதிக் கொள்வார்கள். கடைசியில் கெட்டவன் திருந்தி நல்லவனாகி, நல்லவனோடு சேர்ந்து இன்னொரு கெட்டவனை அழிப்பான். தமிழில் வெளிவரும் பெரும்பாலான டபுள் ஆக்‌ஷன் படங்களின் டெம்ப்ளேட் கதை இதுதான். இதே பூவைதான் இயக்குனர்கள், நடிகர்கள் என்று மாறி மாறி நம் காதுகளில் சொருகி வருகிறார்கள். சொருகிறதுதான் சொருகிறார்கள். ஒரு முறை ரோஜா, ஒரு முறை மல்லி என்று மாற்றி மாற்றியாவது சொருகித் தொலைக்கக்கூடாதா? எப்பவுமே சாமந்திப்பூதானா?

இந்த இரட்டைவேடப் படங்களில் 'வித்தியாசம்' என்ற பெயரில் அடிக்கப்படும் கூத்துகள் அளவில்லாதவை. குறிப்பாக அந்தக்கால எம்.ஜி.ஆர். படங்களிலும், இந்தக் காலத்து அர்ஜூன், சரத்குமார் படங்களிலும் இந்த வித்தியாசக் கொடுமையை நாம் உணரலாம். ஒரு நாயகனுக்கும், இன்னொரு நாயகனுக்கும் வித்தியாசப்படுத்திக் காட்ட மச்சம், குறுந்தாடி, கண்ணாடி என்று மொக்கையாகவே யோசிக்கிறார்கள் நம் இயக்குனர்கள். உதாரணத்துக்கு, உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அண்ணன் எம்.ஜி.ஆருக்கு குறுந்தாடி இருக்கும். தம்பி நீட்டாக ஷேவ் செய்திருப்பார். ரசிகர்கள் யார் எந்த எம்.ஜி.ஆர். என்று குழம்பிப் போய்விடுவார்களாம். எனவே அப்படத்தின் இயக்குனரான எம்.ஜி.ஆர் வித்தியாசமாக சிந்தித்து இப்படியொரு மாறுவேட ஏற்பாட்டை ரசிகர்களின் வசதிக்காக செய்திருந்தார். அய்யோ. அய்யோ.

இரட்டை வேடம் என்பதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டவர்களும் ஒரு சிலர் உண்டு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக கமலஹாசனின் சில படங்களை சொல்லலாம். இவர் இருவேடம் என்பதை தாண்டி மூன்று, நான்கு என அதிகரித்துக் கொண்டே சென்று பத்து வேடங்கள் வரை நடித்தவர். உருவ ஒற்றுமையால் ஏற்படும் குழப்பங்கள் என்பது இம்மாதிரியான படங்களில் பெரும்பாலும் ஒன்லைனர். இதுபோன்ற படங்களில் இருவேடங்கள் என்பது தவிர்க்கவே இயலாதது. கரு. பழனியப்பன் இயக்கிய 'பார்த்திபன் கனவு' திரைப்படத்தில் ஸ்னேகா இரட்டை வேடத்தில் தோன்றுவதுதான் கதையின் அடிப்படையே.

ஆனால் சும்மா 'கெத்'துக்காகவும், செண்டிமெண்டுக்காகவும் இருவேடங்கள் என்பதுதான் அதிகம். தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கமர்சியல் இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் அடிக்கடி இரட்டைவேடப் படங்களை எடுப்பதுண்டு. இவர் இரட்டைவேட படத்தை தமக்காக இயக்கினால், அது நிச்சயம் ஹிட்டென்று சரத்குமார், அஜித்குமார் போன்ற நடிகர்கள் நம்புகிறார்கள்.

ரஜினி மாதிரியான மாஸ் ஹீரோக்களுக்கு வணிக அடிப்படையில் இரட்டைவேடம் அத்தியாவசியமாகிறது. ஒவ்வொரு படத்துக்கும் இடையே நீண்டகால இடைவெளி கொடுப்பதால், ரசிகர்களுக்கு ஒரே ஒரு தலைவர் திரையில் போதவில்லை என்பது இதற்கான அடிப்படைக் காரணம். படம் முழுவதுமே தலைவர் வந்தாகவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். வெளிவர இருக்கும் எந்திரன் திரைப்படத்தில் நூற்றுக்கணக்கான ரஜினிகள் வருகிறார்கள். கொண்டாட்டத்தின் அளவை சொல்லவும் வேண்டுமா?

மாஸ் ஹீரோக்கள் இரட்டை வேடத்தில் நடித்தால்தான் ஹிட் கொடுக்க முடியுமென்ற செண்டிமெண்டும் சிலர் விஷயத்தில் உடைந்ததுண்டு. கடந்த பத்தாண்டுக் காலத்தில் தமிழ் சினிமாவில் குறிப்பிடும்படி வளர்ந்து நிற்கும் விஜய் முதன்முதலாக இரட்டைவேடத்தில் (அதே கதைதான். ஒருவன் நல்லவன். மற்றொருவன் கெட்டவன்) நடித்த அழகிய தமிழ்மகன் தோல்வியடைந்தது. மீண்டும் இந்த விஷப்பரிட்சையை எழுதிப்பார்க்க விஜய் தயாராக இருப்பதாக தெரியவில்லை.

எப்படியோ கொஞ்சகாலமாக இரட்டைவேட மோகம் நடிகர்களிடமும், ரசிகர்களிடமும் குறைந்துவருவதாக தெரிகிறது. கடைசியாக நீங்கள் பார்த்த இரட்டைவேடப் படம் எதுவென்று யோசித்துப் பார்த்தால் இந்த ட்ரெண்ட் விளங்கும். ஆனால் அதற்குப் பதிலாக ஒன்றுக்கு மேற்பட்ட (பெரும்பாலும் இரட்டை) கெட்டப்புகளில் நடித்து, நம் நடிகர்கள் கொடுமைப்படுத்தி வருகிறார்கள். ஏதாவது லேட்டஸ்ட் ஹாலிவுட் படத்தைப் பார்த்துவிட்டால், அதுபோன்ற கெட்டப்புகளில் தங்களுக்கு வேடம் அமைக்குமாறு இயக்குனரை வற்புறுத்துகிறார்கள்.

சரி, விடுங்கள். நரி இடம் போனாலென்ன? வலம் போனாலென்ன? நம் மீது விழுந்து கடித்து குதறாதவரைக்கும் சரிதான். நீங்கள் உங்கள் வாழ்வில் பார்த்த அபத்தமான இரட்டைவேடப் படங்களை கொஞ்சம் கொசுவர்த்தி சுழற்றி (அதாவது ஃப்ளாஷ்பேக் ஓபனிங்) யோசித்துப் பாருங்கள். இன்றையப் பொழுது இனிமையாய் மலரும்.

14 செப்டம்பர், 2010

டாஸ்மாக் இல்லாத ஊர்!



‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது பழமொழி. இந்த ஊரில் கோயில் இல்லை. இருப்பினும் சுமார் 800 பேர் குடியிருக்கிறார்கள். “கோயில் மட்டுமில்லை. சாராயக் கடையும் இங்கே இல்லை. அதனாலேதான் நாங்க நிம்மதியா வாழமுடியுது” என்கிறார் கிராமவாசி ஒருவர்.

நிஜமாகவே ஆச்சரியம்தான்! இங்கே ‘டாஸ்மாக்’ மதுக்கடை இல்லவேயில்லை. இங்கே மட்டுமல்ல. இந்த ஊர் அமைந்திருக்கும் கோட்டைப்பூண்டி ஊராட்சி மன்றத்தில் எங்குமே இல்லை. யாருக்காவது குடிப்பழக்கம் இருந்தால்தானே ‘டாஸ்மாக்’ கல்லா கட்டும்?

அட. இதென்ன கலாட்டா? ‘டாஸ்மாக்’ இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு ஊரா? உங்களுக்குத் தோன்றும் அதே ஆச்சரியம்தான் நமக்கும்.

சமத்துவபுரம் என்பது பெரியாரின் கனவு. ஒரு ஊரில் வாழும் எல்லோருமே சாதி, மத பேதமற்று, ஆண் பெண் சமத்துவத்தோடு வாழவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு போராடிய சமூகப் போராளி அவர். அவருடைய ஆசையை நிறைவேற்றும் பொருட்டே ‘பெரியார் சமத்துவபுரம்’ என்ற பெயரில் சிற்றூர்களை, தமிழகஅரசு ஆங்காங்கே சில வருடங்களாக உருவாக்கி வருகிறது. ஆனால் அரசு இத்திட்டத்தை சிந்திப்பதற்கு முன்பாகவே, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகவே இந்த ஊர் சமத்துவபுரமாகவே செயல்பட்டு வருகிறது.

மது மட்டுமல்ல. சிகரெட், பான்பராக் என்று லாகிரி வஸ்துகள் எதையுமே பழக்கப்படுத்திக் கொள்ளாமல் வாழ்கிறார்கள். மக்களுக்கு எந்தப் பழக்கமும் இல்லை என்பதால் கடைகளில் இந்த சமாச்சாரங்கள் விற்கப்படுவதில்லை. தமிழக அரசின் சுகாதாரத்துறை இந்த கிராமத்தை ‘புகையில்லா கிராமம்’ என்று அறிவித்திருக்கிறது.

அகிலம் ஆளும் அங்காளபரமேஸ்வரியின் அருள் வேண்டி செஞ்சிக்கு அருகில் இருக்கும் மேல்மலையனூர் சுற்று வட்டாரமே செவ்வாடை அணிந்திருக்கிறது. அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் மட்டுமே இருக்கும் இந்த ஊர் மட்டுமே கருஞ்சட்டை அணிந்து, கடவுள் மறுப்பு கூறி, கம்பீரமாக தன்னை பகுத்தறிவுக் கிராமமாக பறைசாற்றி வருகிறது.

செக்கடிக்குப்பம்!

“எல்லா ஊரையும் போலதான் எங்கள் ஊரும் ஒரு காலத்தில் இருந்தது. ஊரில் ஆறு ஓடாத குறையை சாராய ஆறு நிவர்த்தி செய்தது. மது மயக்கத்தில் எங்கள் சமூகம் அழிந்துகொண்டு வருவதைக் கண்டு மனம் வெறுத்துப் போனோம். தொடர்ச்சியான பிரச்சாரம் மூலமாகவே மனமாற்றத்தைக் கொண்டுவந்தோம். போதைப் பழக்கத்தால் உயிரிழந்த எங்கள் ஊர்க்காரர்களின் சோகக்கதைகளை இளைஞர்களுக்கு பரப்பினோம். மது, சிகரெட் பழக்கங்கள் உடல்நலத்தை கெடுப்பது மட்டுமின்றி குடும்பத்தையும் அழிக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்தினோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். எங்கள் இளைஞர்கள் இப்போது பத்தரைமாற்றுத் தங்கங்கள்” என்கிறார் ஊர்ப்பெரியவரான மா. அர்ச்சுனன்.

விவசாயத்தை பிரதானத் தொழிலாக கொண்டவர்கள் செக்கடிக்குப்பத்துக் காரர்கள். அறுபதுகளில் மேல்மலையனூருக்கு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய பெரியார் வந்தார். செஞ்சிக்கு அண்ணா வந்தார். இவர்களது சிந்தனைகளை மேடைவாயிலாக உணர்ந்த ஒரு இளைஞர் கூட்டம், தங்களை பகுத்தறிவுப் பாதைக்கு திருப்பிக் கொண்டது. மூடநம்பிக்கைகளை ஒழித்து, தமிழுணர்வுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார்கள்.

ஆரம்பத்தில் இவர்களது பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு பெரிய வரவேற்பில்லை. “புரோகிதர் இல்லாமல் சீர்த்திருத்த திருமணமா? மணமக்கள் கடவுள் அருள் இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா?” என்று அவநம்பிக்கையோடுதான் பார்த்தார்கள்.

அவர்களது நம்பிக்கையை உடைக்க அர்ச்சுனன் தன் வாழ்வையே பணயம் வைத்து ஜெயித்துக் காட்டினார். மார்கழி மாதத்தில் இந்துக்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. பீடைமாதம் என்று வழங்கப்படுகிற இம்மாதத்தில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகள் அமங்கலமாகும் என்பது காலம் காலமாக நிலவி வருகிற வாடிக்கை.

1968, மார்கழி மாதத்தில் சீர்த்திருத்த முறையில் திருமணம் செய்துகொண்டார் அர்ச்சுனன். சீரும், சிறப்புமாக வாழ்ந்து திருமணச் சடங்குகளில் இல்லை வாழ்க்கையின் சிறப்பு. சேர்ந்து வாழ்வோரின் மனங்களில்தான் அது இருக்கிறது என்று நிரூபித்தார். இவர் ‘பிள்ளையார் சுழி’ போட்டு ஆரம்பித்து வைக்க, அடுத்தடுத்து சீர்த்திருத்தம் தொடர்ந்தது.

“ஆரம்பக் காலங்களில் மக்களின் மனதை மாற்றுவதற்கு நிரம்ப சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கலைவடிவங்கள் மூலமாக பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து, மக்களை கவர்ந்தோம். அண்ணா எழுதிய நாடகங்களை சுற்றுவட்டார கிராமங்களில் நடத்திக் காட்டினோம். திருவண்ணாமலை வட்டாரங்களில் நாங்கள் ரொம்ப பிரபலம். ‘பகுத்தறிவுப் பஜனை’ என்கிற பெயரில் மார்கழி பஜனை பாணியிலேயே, அதே ராகத்தில் கடவுள் மறுப்பு பஜனைகளை செய்வோம். கருப்புச்சட்டை அணிந்து தாப்ளாக்கட்டையோடு தெருத்தெருவாக நாங்கள் பஜனை செய்வதைப் பார்த்து, பக்தர்கள் சிலரும், எங்களை பக்தர்கள் என்று நினைத்துக்கொண்டு பஜனையில் கலந்துகொள்வார்கள். பாடப்பாட வார்த்தைகளின் பொருளுணர்ந்து பதறுவார்கள்” என்று சிரிக்கிறார் பகுத்தறிவுப் பாடகரான காத்தவராயன். இந்த வயதிலும் “கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் என்பது இல்லையே” என்று ஏழுக்கட்டைக் குரலில் அசத்தலாகப் பாடுகிறார்.

இப்போது இங்கே நடக்கும் திருமணங்கள் அனைத்துமே சீர்த்திருத்த, மத-சாதி மறுப்புத் திருமணங்கள்தான். “இருவரும் நண்பர்களாக வாழ்கிறோம்” என்று மணமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். பெண்ணடிமைத் தனத்தை எடுத்துக் காட்டுவதாகச் சொல்லி தாலியை புறக்கணிக்கிறார்கள். வரதட்சிணை? கொன்றுவிடுவார்கள்!

திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஊருக்குப் பொதுவாக ‘இராவணே அசுரன்’ திறந்தவெளி நினைவரங்கம் கட்டியிருக்கிறார்கள். ஊர்க்காரர்கள் அவரவர் இல்ல நிகழ்ச்சிகளை இங்கே நடத்திக் கொள்ளலாம். கட்டணம் எதுவுமில்லை.

ஊரில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட மதம்சார்ந்த பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை. இந்த கொண்டாட்டத்துக்கு மாற்று ஏற்பாடாக சித்திரை மாதத்தில் ‘தமிழ் மன்னர் விழா’, ‘தமிழ் திருநாள்’ மட்டும் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். ஆடி மாதத்தில் தமிழகத்தின் கிராமந்தோறும் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றப்படுகிறது இல்லையா? வருடம் முழுக்க எங்கள் மக்கள் கூழ்தான் குடிக்கிறார்கள் என்றுகூறி தமிழ் மன்னர் விழாவில் இட்லி, தோசை, கேசரி, பொங்கல் என்று ‘வெரைட்டியாக’ வழங்கி அசத்துகிறார்கள்.

கிராமத் திருவிழாக்களில் ‘சாமி ஊர்வலம்’ நடக்கும். தமிழ் மன்னர் விழாவில் இராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகிய பண்டையத் தமிழ் மன்னர்களின் வேடம் அணிந்து இவர்கள் ஊர்வலம் நடத்துகிறார்கள். சிலம்பம், இசை, பகுத்தறிவுப் பாடல்கள், சமூக நாடகங்கள் என்று தமிழ் மன்னர் விழா களைகட்டும். மதப்பண்டிகைகள் தரக்கூடிய குதூகல உணர்வை, பகுத்தறிவு நிகழ்வுகளிலும் கொண்டுவந்து விடுவதால் மக்களுக்கு எதையும் இழந்த உணர்வு இல்லவேயில்லை. பட்டாசுக்கு மட்டும் தடா. அது சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு என்பதால். சுற்றுப்புற ஊர்கள் தீபாவளியைக் கொண்டாடும்போது இவர்கள் மட்டும் கருத்தரங்கம், பட்டிமன்றம் என்று நடத்துகிறார்கள்.

“பொதுவாக மரண ஊர்வலங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ‘பறை’ அடிப்பது வழக்கம். சாதியச் சமூகத்தை எதிர்ப்பவர்கள் என்பதால் எங்கள் ஊர் மரண ஊர்வலங்களில் இங்கே ‘பறை’ அடிப்பதில்லை” என்றார் மதியழகன் என்கிற ஊர்க்காரர்.

சரி, இவர்கள் எந்த சமரசமுமின்றி பகுத்தறிவோடு இருக்கிறார்கள். ஆதலால் விளைந்த பயனென்ன?

இந்த ஊர்க்காரரான பேராசிரியர் அ.பெரியார் சொல்கிறார். இவர் எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

“முதல் பயன் ஆண்-பெண் சமத்துவம். எங்கள் ஊரில் பெண்களுக்கு முழுமையான சமத்துவம் உண்டு. ஊரில் எல்லோருமே தற்காப்புக்கலையாக சிலம்பம் கற்றுக் கொள்கிறோம். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்களும் இங்குண்டு. இக்கலையை கூட பால்பேதமின்றி பெண் குழந்தைகளுக்கும் முழுமையாக சொல்லித்தரப் படுகிறது.

எல்லோருமே பகுத்தறிவாளர்களாக மாறிவிட்ட எங்கள் ஊரில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எல்லோருக்கும் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகம். தமிழுணர்வும் அதிகம். ஊர்க்காரர்களாக சேர்ந்து தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி ஒன்று நட்த்துகிறோம். அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரை விட தாய்த்தமிழ் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகம்.

பிறப்பு மட்டுமல்ல, இறப்பிலும் எங்களுக்கு சாதி மதமில்லை. அறியாமையையும், மூடநம்பிக்கையையும் முற்றிலுமாக ஒழித்திருக்கிறோம் என்று சாதகமாக ஏராளமான விஷயங்கள் பல இருந்தாலும் கூட பகுத்தறிவால் எங்கள் ஊருக்கு விளைந்த முக்கியமான நன்மைகளாக சமத்துவத்தையும், கல்வி விழிப்புணர்வையும் நினைக்கிறேன்” என்றார்.

ஊரில் அடுத்து ஆச்சரியப்படுத்தும் விஷயம் ‘தமிழ்’ பெயர்கள். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கு 95 சதவிகிதம் தமிழ்ப் பெயர் சுமந்திருக்கிறார்கள். மீதி ஐந்து சதவிகிதம் பேருக்கும் கூட தேசியத் தலைவர்களின் பெயர்களாகவே இருக்கின்றன. கப்பலோட்டிய தமிழர் என்பது இளைஞர் ஒருவரின் பெயர். சமீபத்தில் பிறந்த பெண்குழந்தை ஒன்றுக்கு செஞ்சோலை என்றுகூட பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

நபர்களுக்கு மட்டுமல்ல. சுய உதவிக்குழுக்களுக்கும் கூட தமிழ்ப்பெயர்கள்தான். இராவணன், கும்பகர்ணன் ஆகியவை ஆண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு சூட்டியிருக்கும் பெயர். இசைத்தமிழ், விண்ணில் தமிழோசை, சுயமரியாதை ஆகிய பெயர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு. ‘பகுத்தறிவு என்றால் என்ன?’ என்பது இவர்களது விவசாய மேம்பாட்டுக் குழுவுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர்.

“பகுத்தறிவு எல்லோருக்குமே இருப்பதால் உள்ளாட்சி திறந்தமனதோடு சிறப்பாக நடைபெறுகிறது. ‘நல்ல ஊர்’ என்று அரசு வட்டாரத்தில் பெயர் எடுத்திருப்பதால் அதிகாரிகளோடும், அரசோடும் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எல்லாமே எங்களுக்கு சிறப்பாக அமைந்திருக்கிறது” என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவரான வீரமணி.

இப்படிப்பட்ட ஊர் கடந்த ஒன்றரை ஆண்டாக சோகத்தில் மூழ்கி இருக்கிறது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் துக்கத்தை பறைசாற்றி வருகிறார்கள். கடந்த ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக பாஸ்பரஸ் குண்டுகளில் தமிழர்கள் வெடித்துச் சிதறியது இவர்களது மனங்களில் ஆறாத வடுவாக பதிந்துவிட்டது. தமிழ் மன்னர் விழா, தமிழர் திருநாள் என்று ஊர் விசேஷங்கள் எதுவும் நடத்தும் மனநிலையில் இவர்கள் இல்லை.

“விரைவில் எல்லாம் சரியாகும். நாங்களும் எங்கள் விழாக்களை நடத்துவோம் என்கிற நம்பிக்கையில் காலம் கழிகிறது!” என்கிறார்கள் இந்த கருஞ்சட்டை மனிதர்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

3 செப்டம்பர், 2010

டான் சீனு


டைட்டிலில் ரவிதேஜாவுக்கு மாஸ் ராஜா என்று தப்பாக பட்டம் தருகிறார்கள். அவர் மாஸ் மகாராஜா. ஜெமினி டிவியில் பார்க்கும் பழைய ரவிதேஜா படங்கள் ‘ஆவ்’ ரகம். அவரது முகம், நம்மூர் சத்யராஜூக்கு ஒப்பான கவர்ச்சி கொண்டது. முகலட்சணம் சுமார்தானென்றாலும் தேஜாவின் பரபரவென்ற உடல்மொழி, ‘கோயிந்தா’ பாணி டான்ஸ், நான்ஸ்டாப் காமெடியென்று, பார்க்க பார்க்க பிடிக்கும் ரகம் இவர்.

மசாலா என்ற பெயரில் தமிழில் சுவாமிஸ் கஃபே மசால்தோசை மசாலாவாக இட்டுக் கொண்டிருக்க, தெலுங்கிலோ செட்டிநாட்டு நாட்டுக்கோழி மசாலாவை, காரம் தூக்கலாக வறுத்துத் தள்ளுகிறார்கள். செண்டிமெண்ட், லாஜிக், கலைவடிவம், இத்யாதி, இத்யாதியெல்லாம் யாருக்கு வேண்டும்? படத்தை சுட்டோமா, பரபரவென்று மொளகா பஜ்ஜி மாதிரி விற்றுத் தீர்த்தோமாவென்று இருக்கிறது டோலிவுட்.

கதை ரொம்ப சிம்பிள். சிறுவயதில் அமிதாப்பின் டான் படத்தை முப்பது முறைக்கு மேல் பார்க்கிறான் சீனு. தானும் டான் ஆகவேண்டும் என்ற ஆவலில் டான் சீனுவாக மாறுகிறான். பெயர் மாற்றம் சுலபமானதே தவிர, ஹைதராபாத்தில் டான் ஆவது அவ்வளவு சுலபமல்ல. ஏற்கனவே ஏட்டிக்குப் போட்டியாக கவுண்டமணி – செந்தில் மாதிரி இரண்டு டான்கள். அந்த இரண்டு டான்களுக்கும், துபாயில் இருந்து ‘ஒர்க் ஆர்டர்’ கொடுக்கும் வி.கே.ராமசாமி பாணியில் இன்னொரு இண்டர்நேஷனல் டான் உண்டு. காட்சிக்கு காட்சி சரவெடி சிரிப்போடு அதிரடி க்ளைமேக்ஸ். மேட்டர் ஃபினிஷ்ட். இண்டர்வெல் ப்ளாக்கில் ஆரம்பிக்கும் குட்டி குட்டி சஸ்பென்ஸ்கள், இரண்டாம் பாதி முழுக்க ஆங்காங்கே தொடர்வது சுவாரஸ்யம்.

ரவிதேஜாவுக்கு ஒரு ஹீரோயின் என்றாலே உரசி உரசி தேய்த்துவிடுவார். ஒன்றுக்கு ரெண்டு. புகுந்து புகுந்து ஃபுட்பால் விளையாடுகிறார். ஷ்ரேயாவையே ஐஸ்வர்யாராய் ரேஞ்சுக்கு காட்டியிருக்கும் கேமிராமேனை இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்கலாம். ஜெர்மனி குளிரில் கூட அம்மணிக்கு வேர்க்கும் போல. ஹாயாக திரிகிறார். இன்னொரு ஹீரோயின் அஞ்சனா சுஹானி. சாதா காட்சிகளில் பார்ப்பதற்கு குத்துவிளக்கு மாதிரி இருப்பவர், பாடல் காட்சிகளில் நைட் லேம்ப் ஆகிவிடுகிறார்.

இரட்டை டான்களான ஷாயாஜியும், ஸ்ரீஹரியும் சீரியஸாக நடித்தாலும், திரைக்கதையமைப்பில் கோமாளிகள் தானென்பதால் ‘த்ரில்லிங்’ குறைவு. இவர்களை விட மெகா கோமாளி மெயின் வில்லன். எனவே க்ளைமேக்ஸில் கிடைக்க வேண்டிய ஆக்‌ஷன் டேஸ்ட் டோட்டலாக மிஸ்ஸிங். ஹீரோ, வில்லன்களே காமெடியன்கள் என்றால் காமெடியன்கள் படுத்தும் பாட்டை வேறு புதுசாக சொல்லவேண்டுமா? பிரம்மானந்தம் தலைமையில் ஒன்றுக்கு மூன்று பபூன்கள். வயிற்று வலிக்கு மாத்திரை வாங்கிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைவதைத் தவிர வேறுவழியில்லை.

ஏன் தான் இதுமாதிரி சப்ஜெக்ட்கள் நம் இளையதளபதிக்கும், அல்டிமேட் ஸ்டாருக்கும் மாட்ட மாட்டேங்கிறதோ என்று ஏக்கப் பெருமூச்சுதான் விடமுடிகிறது.