19 ஜனவரி, 2011

சென்னைக்கு அருகே நெல்லை!

ஊரைச் சுற்றியும் பச்சை பசேல் மலைகள். நுழையும்போதே சில்லென்று முகத்தில் அறைகிறது குளிர் காற்று. தேநீர்க்கடை சட்டசபைகளில் 'எலேய், காந்தியை கூட சுட்டுட்டாங்களாமே?' என்று புராதன அரசியலை நெல்லைத் தமிழில் பேசும் வெள்ளந்தி மனிதர்கள். பள்ளி இடைவேளையில் 'பாண்டி' விளையாடும் மாணவிகள். ஆடு, மாடு, கோழி, டிராக்டர் என்று தமிழ் கலாச்சார கிராம அடையாளங்களை அச்சு அசலாக சுமந்து நிற்கும் இந்த ஊர், சென்னைக்கு வெகு அருகில் அமைந்திருக்கிறது என்று சொன்னால் கொஞ்சம் ஆச்சரியமாகதான் இருக்கும். அதுவும் சென்னை விமான நிலையத்திலிருந்து கூப்பிடுதூரத்தில் இருக்கிறது திரிசூலம்.

விமான நிலையத்துக்கு நேரெதிரே, ரயில்நிலையத்தை கடந்து உள்ளே நுழைந்தால் நெல்லை மாவட்ட கிராமம் ஒன்றுக்குள் நுழைந்த அனுபவம் உங்களுக்கு சர்வ நிச்சயம். இருசக்கர வாகனங்கள், செல்போன் போன்ற அத்தியாவசிய நவீனங்களைத் தவிர்த்து பார்த்தால், நகருக்கு அருகிலிருக்கும் சுவடு இங்கே சற்றும் தெரியாது. அவ்வப்போது ரயில், விமானச் சத்தங்களைத் தவிர்த்து வேறெந்த சந்தடியும் இங்கில்லை.

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்ரயில் மார்க்கத்தில் பயணித்தவர்கள் ஒரு விஷயத்தை உணர்ந்திருக்கலாம். எல்லா ரயில் நிலையங்களுக்கும் அருகே கான்க்ரீட் காடுகளாய் 'அபார்ட்மெண்ட்கள்' ஏகத்துக்கும் முளைத்திருக்கும். திரிசூலம் ரயில் நிலையம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இன்னமும் அபார்ட்மெண்ட் கலாச்சாரம் எட்டிப் பார்க்காத இயற்கை எழில் மிகுந்த ஊர் இது.

"முதன்முதலாக இங்கே நுழைபவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். நான் இந்த ஊருக்கு வந்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது. இங்கேயே வசிப்பதால் முன்பை விட நிறைய மாற்றங்களை காண்கிறேன். துறைமுகப் பணியாளர் குடியிருப்பு வந்திருக்கிறது. அரசு ஊழியர்கள் நிறையப்பேர் புதியதாக குடியேறி இருக்கிறார்கள். பெண்கள் முன்பெல்லாம் வீட்டுக்குள் அடைந்திருப்பார்கள். அல்லது கல் உடைக்கும் பணிக்கு போவார்கள். இப்போது அவர்கள் ஊரைத்தாண்டி ஏற்றுமதி ஆயத்த ஆடை தொழிற்சாலைகளுக்கு வேலை செய்யப் போகிறார்கள். எங்கள் ஊரும் மாறிவருகிறது – அதேநேரம் வளர்ந்து வருகிறது என்பதுதான் உண்மை" என்கிறார் திலகவதி ராமச்சந்திரன். இவர்தான் திரிசூலம் ஊராட்சிமன்றத் தலைவி. குடிநீர், கான்க்ரீட் சாலைகள், மின்விளக்குகள் என்று அடிப்படைத் தேவைகளில் 100 சதவிகிதம், இக்கிராமம் தன்னிறைவு பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

குவாரிகள் நிறைய இயங்குவதால் கிராமத்தவர்களில் நிறைய பேர் கல் உடைக்கும் வேலைக்குச் செல்கிறார்கள். இந்த வேலையை செய்யவே மூன்று தலைமுறைக்கு முன்பாக நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் இங்கு அதிகம். 75 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் இவர்கள்தான். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 5997 பேர் திரிசூலத்தில் வசிக்கிறார்கள். இப்போது மக்கள்தொகை நான்கு, ஐந்து மடங்கு அதிகரித்திருக்கலாம் என்று ஊராட்சி உதவியாளர் சுப்பையா சொல்கிறார்.

ஊரின் மத்தியில் அமைந்திருக்கும் கோயில்தான் இந்த ஊரின் பெயருக்கே காரணம். திரிசூலநாதர் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட புராதனமான கோயில். ஊர்ப்பெரியவர்கள் சிலர், இக்கோயில் அதைவிடப் பழமையானது. 1500 வருடப் பாரம்பரியம் கொண்டது. குலோத்துங்கச் சோழனால் புனரமைப்புதான் செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள். 'வாழும் கலை' ரவிசங்கர் சென்னை வரும்போதெல்லாம், விமான நிலையத்திலிருந்து நேரே இக்கோயிலுக்கு வந்துவிடுவாராம்.

ஊரைத்தவிர்த்துப் பார்த்தால் திரிசூலம் ஒரு டூரிஸ்ட் பாயிண்ட். சென்னைவாசிகள் பணிச்சுமையில் இருந்து வார இறுதிகளில் 'ரிலாக்ஸ்' ஆக ஏதுவான இடம். பெரும்பாலான தமிழ்ப்பட க்ளைமேக்ஸ்களில் திரிசூலம் மலைகளை நீங்கள் கண்டிருக்கலாம். மலையிலிருந்து காரை உருட்டிவிட வேண்டுமா? மலைமுகட்டில் தொங்கும் நாயகியை, நாயகன் வில்லன்களோடு சண்டையிட்டு காப்பாற்ற வேண்டுமா? வேறு வழியே இல்லை. சினிமாக்காரர்கள் இங்குதான் வந்தாக வேண்டும்.

சினிமாக்காரர்கள் மட்டுமல்ல. பேச்சாளர்களும் திரிசூலம் மலைக்கு படையெடுக்கிறார்கள். 'மேடை பயம்' (Stage fear) போக்க இங்குதான் பயிற்சி எடுக்கிறார்கள். மலை உச்சிக்குச் சென்று ஏதேனும் பாறைமுகடுகளில் நின்று கொள்கிறார்கள். எதிரே 180 டிகிரி கோணத்தில் தெரியும் சென்னை மாநகரை, லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதாய் நினைத்து, "கலைஞர் அவர்களே", "புரட்சித்தலைவி அவர்களே" என்று கத்திப்பேசி பேச்சுப்பயிற்சி பயில்கிறார்கள். டிரைனிங்கில் இருக்கும் மதப்பிரசங்கர்களும் இதே டெக்னிக்கை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சென்னையில் வசிக்கும் மலையேற்ற வீரர்களுக்கும் திரிசூலம் முக்கியமான பயிற்சி பாயிண்ட். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இங்கே மலையேற்றம் செய்ய வசதிகளை செய்து கொடுக்கிறார்கள்.

மலை மீதிருந்து சென்னை விமான நிலையத்தை முழுமையாக பறவைப் பார்வையில் பார்த்து மகிழ முடியும். விமானங்கள் மேலெழும்புவதையும், கீழிறங்குவதையும் உயரமான ஓரிடத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதே அலாதியான அனுபவம். ரயில், சாலை, விமானம் என்று, சென்னையின் மூன்றுவித போக்குவரத்துப் பரிமாணங்களை இங்கிருந்தே காணலாம். நன்கு வெயில் அடிக்கும்போது கிழக்கு நோக்கி உற்றுப் பார்த்தால் கடல்கூட தெரியும்.

மலையுச்சியில் ஒரு மிகப்பழமையான மசூதி இடிபாடடைந்த நிலையில் இருக்கிறது. இருப்பினும் இங்கே மிலாதுநபி பெருவிழா விமரிசையாக நடைபெறுவதாக ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். ஒரு முருகர் கோயிலும் உண்டு. சுற்றுலாப் பயணிகள் சென்று வர வசதியாக மலையுச்சிக்கு கான்க்ரீட் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. கார்களும், வேன்களும் கூட இப்பாதையில் செல்ல முடியும். மின்விளக்கு வசதி இல்லாததால் மாலை 5.00 மணிக்குப் பிறகு இம்மலை மீது இருப்பது பாதுகாப்பானதல்ல.

இது மாதிரியான 'மசாலா' அம்சங்களை தவிர்த்துப் பார்த்தால், பாதுகாப்பு அடிப்படையிலும் திரிசூலம் மலையின் பங்கு முக்கியமானது. ஸ்கை மார்ஷல் படையினர் சென்னை விமான நிலையத்தை இங்கிருந்து தொலைநோக்கி மூலமாக கண்காணிக்கிறார்கள். ஓடுபாதையில் ஏதேனும் விஷமம் செய்யப்பட்டிருந்தால் கூட இங்கிருந்தே கண்டுபிடித்து விட முடியுமாம்.

இன்னொரு வகையிலும் திரிசூலம் சென்னையின் தவிர்க்க முடியாத ஒரு இடத்தைப் பெறுகிறது. சென்னையின் மிக உயரமான இடம் திரிசூலம் மலை. தாழ்வான இடம் இங்கிருக்கும் குவாரி பகுதிகள். அண்ணா பல்கலைக் கழகத்தின் தொலையுணர்வு மையம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்ட செய்தி இது.

இனிமேல் சென்னையில் வசிக்கும் நெல்லைக்காரர்கள், ஊர் ஏக்கம் வந்தால் ஒரு நடை திரிசூலத்துக்கு போய்விட்டு வந்துவிடலாம். நெல்லையையே கண்ணால் பார்க்காதவர்களும் வந்துப் பார்க்கலாம். தவறில்லை. பாஸ்போர்ட், விசாவெல்லாம் கேட்கமாட்டார்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

FLASH NEWS : நித்யானந்தாவின் மானநஷ்ட ஈடு வழக்கு

பிட்டு வீடியோ புகழ் நித்தியானந்தர்,  எழுத்தாளர் ஒருவருக்கும், பத்திரிகை ஒன்றுக்கும் 10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்ததாக கேள்விப்பட்டோம். இன்னும் யார் யாருக்கு, எந்தெந்த நிறுவனங்களுக்கு இதுபோன்ற வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டிருக்கிறது என்கிற தகவல் முழுமையாக தெரியவில்லை.

நித்யானந்தாவுக்கு என்ன மானம் இருக்கிறது, அதற்கு இப்போது நஷ்டம் வந்துவிட்டது என்ற குழப்பம் ஏற்படுகிறது.

தொலைக்காட்சிகளில் வெளியான வீடியோ துண்டுப்படம் உண்மையானது என்று தடய அறிவியல் துறையும் கூட உறுதி செய்துவிட்டதாகவே தெரிகிறது. மோசடியை வெளிக்கொணர்ந்தவர்களுக்கு மோசடியாளன் மானநஷ்ட ஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பும் கொடூரம் இந்த நாட்டில் மட்டும்தான் நடக்கும்.

சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கும், ஊடகங்களுக்கும் தார்மீக ஆதரவு கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

நித்யானந்தரின் மோசடிகளை அறிந்துகொள்ள சாருநிவேதிதா எழுதிய 'சரசம், சல்லாபம், சாமியார்' நூலினை வாசிக்க பரிந்துரைக்கிறேன். வெளியீடு உயிர்மை. இணையம் மூலமாக இந்த நூலை இந்தச் சுட்டியை சொடுக்கி வாங்கலாம்.

18 ஜனவரி, 2011

அஜால் குஜால் Undie Party


ஐரோப்பாவே அரண்டு போய் கிடக்கிறது.

குளிர்காலம் இவ்வளவு சூடாக ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் இதுவரை தொடங்கியதே இல்லை.

தேசிகுவல் என்பது ஸ்பெயினைச் சேர்ந்த ஓர் ஆயத்த ஆடை நிறுவனம். தேசிகுவல் என்ற ஸ்பானிய சொல்லுக்கு 'அது இது இல்லை' என்று பொருளாம். 1984ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் உடை விஷயத்தில் கொஞ்சம் 'தாராளமான' வடிவமைப்புகளை வழங்குவதில் கில்லாடி.

ஐரோப்பா முழுக்க நன்கு கால் விரித்துவிட்ட இந்நிறுவனம், ஆசியாவிலும் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. முன்னதாக சில காலம் முன்பு அமெரிக்காவில் காலூன்றத் திட்டமிட்டது. அமெரிக்காவில் ஏற்கனவே பழம் தின்று கொட்டை போட்ட நிறுவனங்கள் ஏராளம். என்ன செய்து இளசுகளை கவரலாம் என்று நகம் கடித்து யோசிக்கத் தொடங்கினார்கள் தேசிகுவல் அதிகாரிகள்.

அஜால் குஜாலான ஆசாமி யாரோ ஒருவரது சிந்தையில் திடீரென பல்பு எரிந்தது. Undie Party என்றொரு ஆண்மீக ஐடியாவைப் பிடித்தார். Undies என்ற சொல்லுக்கு பெண்களின் கீழாடை என்று பொருள். அமெரிக்காவில் Undie Party சக்கைப்போடு போட, ஐரோப்பாவிலும் இக்கலாச்சாரம் திகுதிகுவென பரவி வருகிறது. அமெரிக்கர்கள் மறுபடியும் எப்போ பார்ட்டி? எப்போ பார்ட்டி? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.

Undie Party என்பது என்ன?

இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளும் முதல் நூறு பேருக்கு தேசிகுவல் இலவசமாக ஆடைகளை அளிக்கும். அவர்கள் அறிவிக்கும் தேதியில், அறிவிக்கும் கடைக்கு வந்து திருப்பதி க்யூ மாதிரி வரிசையாக நிற்கவேண்டும். First come, First gift அடிப்படையில் பார்ட்டி நடக்கும். பார்ட்டியில் கலந்துகொள்ள ஒரே ஒரு நிபந்தனை உண்டு. ஆணாக இருப்பின் ஜட்டியோ அல்லது ட்ரவுசரோ மட்டுமே அணிந்து வரவேண்டும். பெண்களுக்கு கொஞ்சம் கூடுதல் சலுகை உண்டு. கீழாடையோடு, மார்க்கச்சையும் அணிந்து வரலாம்.

100 பேருக்குதான் இலவச ஆடை தரமுடியுமென்றாலும் தங்களுக்கும் 'டோக்கன்' (நம்மூர் இலவச டிவிக்கு கொடுப்பது மாதிரி கொடுக்கிறார்கள்) கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று ஆயிரக்கணக்கில் மக்கள் 'ஆய் டிரெஸ்' போட்டுக்கொண்டு குவிந்துவிட Undie party நடந்த நகரங்களில் எல்லாம் திருவிழாக்கோலம் தானாம். பற்களை கிடுகிடுக்க வைக்கும் ஐரோப்பா குளிரிலும் அனல் பறக்கிறதாம். பார்ட்டியில் பங்குபெற ஐநூறு பேர் வந்தால்.. பார்வையாளர்கள் பத்தாயிரக் கணக்கில் குவிகிறார்களாம். ஆபிஸுக்கு லீவ் போட்டுவிட்டெல்லாம் நிறைய பேர் வந்து விடுவதால், விரைவில் அரசு பொதுவிடுமுறையாக Undie party தினம் அறிவிக்கப்படலாம். கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரும் பார்ட்டி கோலாகலங்களில் தங்களையே மெய்மறந்துவிடுகிறார்கள். 

ஐரோப்பாவின் இளசுகள் இப்போது தங்கள் ஊரிலும் தேசிகுவல் கடை திறக்காதா? Undie party நடக்காதா என்று ஏங்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாவுக்கு இக்கலாச்சாரம் வந்து, சரவணா ஸ்டோர்ஸில் இப்படி ஒரு பார்ட்டி நடந்துவிடுமோ என்று இனம்புரியாத இன்பமான பீதி இப்போதே நமக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது. ரங்கநாதன் தெரு நல்ல நாளிலேயே நாயகம். இம்மாதிரி ஒரு பார்ட்டி நடந்தால் என்ன கதிக்கு ஆளாகும்? பாலியல் பசுமைக்கு பெயர்போன ஐரோப்பாவே Undie காய்ச்சலில் ஆடிப்போயிருக்கிறது. காய்ந்துபோன தேசமான இந்தியாவில் இது எடுபடாதா என்ன?

13 ஜனவரி, 2011

மானமுள்ள ஒரே கவிஞன்!

தோழர்களே!

கவிஞர் காத்துவாயன் (முன்பு குமுதத்தில் கவிதை எழுதியவரா என்று தெரியாது) அவர்கள் சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக நமது லக்கிலுக் ஆன்லைன் டாட் காமுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இதற்கு முன்பாக சி.என்.என். டாட் காம், பி.பி.சி. டாட் காம் என்று பல டாட் காம்களுக்கு இதே கடிதத்தை எழுதி அவர்கள் பிரசுரிக்காமல் துப்பி திருப்பி அனுப்பிவிட்டதால் கடைசியாக தூர்தர்ஷன் டாட் காமுக்கு அனுப்பியிருக்கிறார். அங்கும் இந்த கடிதத்தை ஒத்துக் கொள்ளாததால் கடைசியாக நமக்கு அனுப்பி பிரசுரிக்க சொல்லி கேட்டிருக்கிறார். கவிஞர் காத்துவாயனுக்கு லக்கிலுக் ஆன்லைன், அவரது விடா முயற்சியைப் பாராட்டி, தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.

இனி காத்துவாயனின் கடிதம் :


அன்புக்குரியவர்களே!

வணக்கம்.

கடந்த சில வருடங்களாக சென்னை சங்கமத்தில் கவிதை சங்கமம் ஒன்று நடக்கும். அவர்கள் கூப்பிடாமல் நானே போய் அங்கே யார் கையிலாவது காலிலாவது விழுந்து கவிதை வாசிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். என்னை ஊர் உலகம் கவிஞன் என்று ஒப்புக் கொள்கிறதோ இல்லையோ, நான் ஒப்புக் கொள்கிறேன். எனவே அதே இறுமாப்போடு அவர்கள் கூப்பிட்டாலும், கூப்பிடாவிட்டாலும், கண்டாலும், கண்டுகொள்ளாவிட்டாலும் என் பணி கவிதை பாடி கிடப்பதே என்று பாடி வந்திருக்கிறேன்.

இந்த ஆண்டும் என்னை யாரும் அழைக்கவில்லை. கலந்துகொள்ள ஆர்வம் இருந்தாலும் சென்னை வரை வந்து போக காசு இல்லை. எனவே ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டித்து நான் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பதாய் நீங்கள் புரிந்துகொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள் மக்களே. இதை நான் சுயவிளம்பரத்துக்காக செய்வதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். இதை என் பதிவில் போட்டிருப்பதாலோ, ஃபேஸ்புக்கில், ட்விட்டரில், கிடைக்கும் கேப்பில் எல்லாம் போட்டிருப்பதாலோ நீங்கள் அப்படி நினைத்துவிட வேண்டாம்.

நான் புறக்கணிப்பதால் சென்னை சங்கமத்திற்கு எந்தவிதமான தடங்கலும் இல்லை. நான் புறக்கணிக்கா விட்டாலும் ஒன்றும் சீரும் சிறப்புமாக நடந்தேறிவிடப் போவதில்லை. வழக்கம்போல நான் கவிதை எழுதி என்னுடைய வலைப்பூவில் பதிந்து அதை நானேதான் படித்துக் கொண்டிருக்கப் போகிறேன். யாரும் என் கவிதைகளை படித்து புரிந்து பின்னூட்டம் போடப்போவதில்லை. இருந்தாலும் இதை ஒரு எதிர்ப்பாக நீங்களெல்லாம் பதிவு செய்துக்கொண்டு, என்னை மனச்சாட்சியும் மானமும் உள்ள தமிழனாக, கவிஞனாக போற்றவேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

அன்புடன்
மானமுள்ள கவிஞர் காத்துவாயன்


அன்பிற்குரிய கவிஞர் காத்துவாயர் அவர்களே!

இனி உங்கள் பெயரை 'வாயன்' என்று 'ன்' போட்டு எவனாவது மரியாதைக்குறைவாக எழுதினால் அவனுடைய மென்னியை முறிக்க லக்கிலுக் ஆன்லைன் கொலைவெறிப்படை தயாராக இருக்கிறது. நமது லக்கிலுக் ஆன்லைன் தளத்தில் உருப்படியாக எதையும் இதுவரை பிரசுரித்ததில்லை. இனியும் பிரசுரிக்கும் எண்ணமும் இல்லை. உருப்படாத இந்த வலைப்பூவில் உங்களுடைய உருப்படாத கவிதைகளை இட சித்தமாக இருக்கிறோம். பின்னூட்டங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். நாமே வெவ்வேறு பெயர்களில் பாராட்டியும், திட்டியும் எழுதி கணக்கு காட்டிக் கொள்ளலாம். உங்களுக்கு கவிதை எழுத பணம் மட்டும் கொடுக்க இயலாது. உங்கள் கவிதைகளை படிக்கும் துன்பகரமான உணர்வுகளுக்கு நீங்கள்தான் லக்கிலுக் ஆன்லைனுக்கு ஏதோ பார்த்து போட்டு கொடுக்க வேண்டும்.

12 ஜனவரி, 2011

சென்னைப் புத்தகக் காட்சி - சில பரிந்துரைகள்

புத்தகக்காட்சிக்கு செல்லும் நண்பர்கள், ஏதாவது புத்தகங்களை பரிந்துரையுங்களேன் என்று கேட்கிறார்கள். என்னமாதிரியான ஒரு வறட்சியான இலக்கியச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் இது. பின்னே, இம்சை அரசன் வடிவேலுவிடம் பார்க்க வேண்டிய உலகப் படங்கள் பட்டியலை கேட்கலாமா? நாம் அவ்வளவு ஒர்த் இல்லை சார். 'சென்னையில் ஃபிகர் வெட்ட ஏற்ற இடங்கள் யாது யாது' என்று கேட்டால் டக், டக்கென்று லிஸ்ட்டை எடுத்து விடலாம். எனக்குப் பிடித்த இலக்கியவாதி பதலக்கூர் சீனிவாசலு என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். அதற்குப் பிறகும் இதுமாதிரி ஆடம் டீஸிங் பண்ணிக் கொண்டிருந்தால் என்னத்தைச் செய்வது?

இருந்தாலும், நம் சிற்றறிவுக்கு எட்டிய சில பரிந்துரைகள் :

புத்தகக் காட்சிக்குள் நேரே நுழைந்து விடாதீர்கள். பச்சையப்பா கல்லூரியை ஒட்டிய பிளாட்பாரத்தில் நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. 'உள்ளே' நூறு, நூற்றி ஐம்பதுக்கு விற்கப்படும் புத்தகங்களை இங்கே வெறும் இருபது, முப்பதுக்கு புத்தம் புதுசாக வாங்க முடியும். உதா : அருளன் எழுதிய லங்காராணி. Haunted house என்கிற வித்தியாச வடிவமைப்பு கொண்ட ஐரோப்பிய குழந்தைகள் புத்தகம் ஒன்றினை வெறும் முப்பது ரூபாய்க்கு வாங்கினேன். லேண்ட்மார்க்கில் இதன் ரேட் ஐநூறுக்கும் மேலாக இருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் 'பைண்டிங்' செய்யப்பட்ட பழைய காமிக்ஸ்கள் கூட கிடைக்கும். பிரேம்-ரமேஷின் நாவல் ஒன்று இங்கே சல்லிசாக கிடைத்தது. உள்ளே அதன் விலை நூற்றி இருபதோ, நூற்றி ஐம்பதோ. ஒரு முன்னூறு ரூபாய்க்கு பர்ச்சேஸ் செய்ய முடிந்தால், குறைந்தபட்சம் பத்து புத்தகங்கள் உங்கள் பையில் நிச்சயம்.

கண்காட்சிக்கே நுழைவுக் கட்டணம் ரூ.5 (இந்த வார புதிய தலைமுறையின் விலை ரூ.10. அதில் இலவச கூப்பன் கொடுத்திருக்கிறார்கள்). ஆனால் டூ-வீலர் பார்க்கிங்குக்கு ரூ.10. டூ-வீலர் விடும்போது டோக்கன் வாங்க வேண்டாம். ரிடர்னில் கேட்டால் பத்து ரூபாய் நோட்டு ஒன்றினைக் கொடுக்கலாம். கொஞ்சம் தில்லு இருப்பவர்கள் கைச்சின்னம் மாதிரி கை-யை காட்டினாலேயே போதும். ஏதோ பாஸ் இருக்கிறது என்று நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். அல்லது 9 மணிக்கு மேல் வண்டியை எடுத்து வந்தால் டோக்கன் வாங்க ஆளே இருக்காது. இந்த 10 ரூபாயை மிச்சம் செய்தால், பாரதி புத்தகாலயத்தில் இரண்டு புத்தகம் கூடுதலாக வாங்க முடியும்.

தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகளை நுழைந்ததுமே வாங்கிவிடுவது உத்தமம். 375 ரூ மதிப்புள்ள புத்தகத்தை கலைஞர் புண்ணியத்தால் ரூ.300க்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பத்து சதவிகித புத்தகக்காட்சி தள்ளுபடி போக ரூ.270/-க்கு கனமான, ஹார்ட் பவுண்டிங் அட்டை போடப்பட்ட பொக்கிஷம் கிடைக்கிறது. பிரேமா பிரசுரத்தில் மதனகாமராஜன் கதை, விக்கிரமாதித்யன் கதை போன்ற உருப்படியான நூல்கள் எளிமையான தமிழில் கிடைக்கும். இங்கே 1950களின் கிளாசிக் மர்மநாவல்களும் உண்டு. அரு.ராமநாதனின் நூல்கள் நிஜமாகவே முக்கியமானவை.

வானதியில் வாண்டுமாமா நூல்கள் நிறைய கிடைக்கும். மர்மமாளிகையில் பலே பாலு செமத்தியான காமிக்ஸ் கலெக்‌ஷன் (விலை ரூ.150). சாண்டில்யனின் வாழ்க்கை வரலாறு கிடைத்தால் வாங்கி வைத்துக் கொள்ளலாம். மணிமேகலையிலும் கூட அப்புசாமி காமிக்ஸ் கிடைக்கும். பூம்புகாரில் பழைய புஷ்பாதங்கதுரை மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் நூல்கள் சல்லிசான விலையில் கிடைக்கிறது. உதாரணம் : சிறைக் கதைகள், ரூ.15.90. மீனாட்சி நிலையத்தில் குமரிப் பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் சில நூல்களை (உதா : விக்ரம்) பத்து, பண்ணிரெண்டு ரூபாய்க்கு வாங்க முடிந்தது. இதே விலையில் மேலாண்மை பொன்னுச்சாமியின் அந்தக் காலத்து சிறுகதைத் தொகுப்புகளையும் இங்கே வாங்கலாம்.

சாகித்திய அகாதமியில் நிறைய இலக்கிய நூல்கள் குறைந்த விலையில் கிடைக்கும். வாசிக்க தம் இருப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இருபத்தைந்து ரூபாய் புத்தகங்களை கூட (இந்த சைஸ் புத்தகங்கள் மற்ற பதிப்பகங்களில் மினிமம் ரூ.75) ஐம்பது சதவிகித தள்ளுபடியில் தள்ளி விடுகிறார்கள். வாங்கத்தான் ஆளில்லை. இராமாயணம், மகாபாரதம் வாங்கியே ஆகவேண்டுமென்றால் ராஜாஜி எழுதியவற்றை வாங்கலாம் (வானதி என்று நினைவு). மலிவு விலையில் வேண்டுமானால் விஜயபாரதத்தில் சித்பவானந்தர் எழுத்தில் வாங்கி வைத்துக் கொள்ளலாம் (ஈச் ரூ.25 ஒன்லி). சத்திய சோதனை, அக்னிச் சிறகுகள் எல்லாம் ரூ.30 ரேஞ்சில் பல ஸ்டால்களில் கிடைக்கிறது.

எந்த ஒரு புத்தகத்தையுமே வாங்குமுன் ஒன்றுக்கு நான்கு முறை யோசியுங்கள். கடந்த பத்தாண்டுகளில் லட்ச ரூபாய்க்கு மேலாக புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். அவற்றில் இருபத்தைந்து சதவிகித புத்தகங்களை முழுமையாக வாசித்திருந்தாலே அதிகம். தீபாவளிக்கு பட்டாசு வாங்கினாலாவது வெடித்துத் தீர்க்கிறோம். புத்தகங்களை என்ன செய்வது? நீங்கள் படித்தே ஆகவேண்டும் என்று நினைக்கின்ற புத்தகங்களை வாங்கலாம். ஒரு எழுத்தாளர் ரொம்ப பிரபலமாக இருக்கிறார் என்று நினைத்து அவரது புத்தகங்களை வாங்குவது மடத்தனம். சாம்பிளாக அவரது ஓரிரு சிறுகதைகளை படித்துப் பார்த்து, உங்களுக்கு 'செட்' ஆனால் மட்டும், அவரது நூல்களை வாங்கலாம். துறைசார்ந்த நூல்கள் வாங்கும்போதும் கவனம் தேவை. நீங்கள் ஏதோ ஒரு கம்பெனியில் குமாஸ்தாவாக குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் பட்சத்தில், யுவகிருஷ்ணா எழுதிய 'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்' வாங்கினீர்களேயானால், உங்களைப் போன்ற அம்மாஞ்சி உலகத்திலேயே கிடையாது. நண்பர்கள் எழுதினார்கள், நண்பர்கள் பரிந்துரைத்தார்கள் என்று முகதாட்சண்யத்துக்காக புத்தகம் வாங்குவதை தவிருங்கள். வாசிப்பு முக்கியம்தான். அதைவிட உங்களுடைய ஒவ்வொரும் காசும், உங்களுக்கு ரொம்ப முக்கியம். நான் கவிதைகளையே படிப்பதில்லை. பாரதியார் கவிதைகளில் தொடங்கி, நிறைய கவிதைத் தொகுப்புகளை காரணமேயில்லாமல் கடந்தகாலங்களில் காசுகொடுத்து வாங்கி வைத்திருக்கிறேன். இது எனக்கு தேவையா? உங்களுக்கு எதை படிக்க முடியுமோ, அதை வாங்கினா போதும் சார்.

ஓக்கே, பத்து நூல்கள் பரிந்துரை. நான் சொல்வதற்காக இவற்றை நீங்கள் வாங்கியாக வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை. இந்த நூல்களை நான் வாசித்திருக்கிறேன் என்பதைத் தவிர்த்து வேறெந்த சிறப்புக் காரணமும் இந்தப் பரிந்துரைக்கு இல்லை. உங்கள் பர்ஸுக்கு பெரியதாக வேட்டு வைத்துவிடக்கூடாது என்கிற பாச உணர்வும் இந்த பரிந்துரையின் பின்னால் ஒளிந்திருக்கிறது. இது எல்லாமே கொஞ்சம் உருப்படியான புத்தகங்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணமும் கூட. இந்தப் புத்தகங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறையும் வாசிக்க முடியும் என்பதால் 'துட்டுக்கேத்த தோசை' என்கிற வகையிலும் எடுத்துக் கொள்ளலாம்.

1. என் சரித்திரம் - உ.வே.சாமிநாதைய்யர்

2. பாரதியார் கதைகள், கட்டுரைகள்

3. என் கதை - நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

4. எஸ்.ஏ.பி - ஜ.ரா.சு, புனிதன், ரா.கி.ர

5. ஜெயமோகன் குறுநாவல்கள்

6. கூனன் தோப்பு & சாய்வு நாற்காலி - தோப்பில் முகமது மீரான்

7. மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் - சாரு நிவேதிதா

8. பின் கதைச் சுருக்கம் - பா.ராகவன்

9. கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன் - கிரேஸி மோகன்

10. சுகுணாவின் காலைப்பொழுது - மனோஜ்