4 பிப்ரவரி, 2011

பொதுக்கூட்டம்!


சிறுவனாக இருந்தபோது சென்னையில் கலைஞர் கலந்துகொள்ளும் எந்த கூட்டமாக இருந்தாலும் சரி. அப்பா என்னை கட்சிக்கொடி கட்டிய சைக்கிளில் உட்காரவைத்து அழைத்துப் போய்விடுவார். நான் கண்ட பெரும்பாலான கூட்டங்கள் சீரணி அரங்கில் நடந்தவை. சிலநேரம் சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை, அமைந்தகரை போன்ற இடங்களுக்கும் போய்வந்த ஞாபகம். வடசென்னையில் நடக்கும் கூட்டங்களுக்கு அப்பா மட்டும் போய்வருவார். பரங்கிமலை ஒன்றிய அளவில் நடக்கும் கூட்டங்களில் அப்பா பேசுவார். மைக் பிடித்து அவர் பேசுவதை பெருமையோடு பார்ப்பேன் (இன்றும் ஏராளமான பிளாக் & ஒயிட் புகைப்படச் சொத்துகளை பாதுகாத்து வருகிறேன்). மேடைப்பேச்சு முடிந்து இரவு வீடு திரும்புகையில், எதிர்க்கட்சியினரின் தாக்குதலுக்கும் உள்ளாகியிருக்கிறார். 86 உள்ளாட்சித் தேர்தலில் அப்பாவின் நண்பருக்கு (அதிமுக) மேடையேறி, மழலைக்குரலில் நான் பிரச்சாரமும் கூட செய்திருக்கிறேன்.

சிறுவயது கூட்டங்களின் நினைவு மங்கலாக நினைவுக்கு வருகிறது. தொண்டர்கள் சாரை சாரையாக சைக்கிளில் கருப்புச் சிவப்பு கொடியேந்தி வருவார்கள். திமுகவில் அப்போதெல்லாம் ஏராளமான பேச்சாளர்கள். குறைந்தது இருபது பேராவது பேசி முடித்தபின் தான் 'முக்கியத் தலைகள்' பேசும். கூட்டம் முடிய ஒன்று, ஒன்றரை ஆகிவிடும். நன்றியுரை வரை கூட்டம் கலையாமல், அப்படியே கட்டுக்கோப்பாக இருக்கும். திமுக கூட்டங்களில் 'பெண்கள்' அவ்வளவாக கலந்துகொள்ள மாட்டார்கள். 90 சதவிகிதம் ஆண்கள்தான். மாறாக அதிமுக பொதுக்கூட்டங்களில் கொடிவண்ண சேலையணிந்த மகளிர் கூட்டம் கும்மாளமாக கும்மும். மகளிரை கவரும் கலைநிகழ்ச்சிகள் பலவற்றையும் அதிமுகவினர் ஏற்பாடு செய்திருப்பார்கள் என்பது இதற்கு கூடுதல் காரணம். திமுகவில் வெறும் பேச்சு மட்டும்தான்.

கலைஞர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு கட்சிக்காரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஏராளமாக வருவார்கள். "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே" என்ற கரகர குரலை கேட்டு கண்ணீர் விட்ட தொண்டர்களை கண்டிருக்கிறேன். அப்பாவும் கூட சினிமா டாக்டர் மாதிரி, கண்ணாடியை கழற்றி லேசாக கண்ணைத் துடைத்துக் கொள்வார். கலைஞர் பேச ஆரம்பித்ததுமே குறைந்தது மூன்று நிமிடங்களுக்கு கரகோஷம் அதிரும். வானவேடிக்கை, பட்டாசு சத்தத்தில் ஏரியாவே அலறும். சத்தத்தில் அவரால் பேச இயலாது. ஆனாலும் கடுமை காட்டாமல் பொறுமையாக சந்தடி அடங்க காத்திருப்பார். இந்த ஆரவாரமான நிமிடங்களில் இனமானப் பேராசிரியர் அவர்களேயில் தொடங்கி சைதைப் பகுதி பொருளாளர் அவர்களே வரைக்கும் 'அவர்களே' சொல்வதற்கான நேரமாக எடுத்துக் கொள்வார்.

பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் அவரை குளோஸ்-அப் எடுக்க வாகாக, அவ்வப்போது அப்படியே 'ஸ்டில்' ஆகிவிடுவதும் அவரது வாடிக்கை. கூட்டத்தில் என்ன முக்கியமான பிரச்சினை என்பதை பேச்சின் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்திவிடுவார். அப்படி பேசினால்தான் அடுத்த நாள் காலை நாளிதழ்களில் செய்தி இடம்பெறும். அனாயசமாக ரெண்டு, ரெண்டரை மணி நேரம் பேசுவார். இடையில் சோடா, கீடா குடித்ததாக எனக்கு நினைவேயில்லை. பேச்சை முடிக்க 15 நிமிடம் இருக்கும்போது ஒரு 'க்ளூ' இருக்கும். அந்த 'க்ளூ' வாடிக்கையாக எதிரே இருக்கும் தொண்டர்களுக்குப் புரியும். கூட்டத்தில் இருக்கும் மகளிர், கூட்டம் முடிந்ததும் ஏற்படும் நெரிசலில் அவதிப்படாமல் இல்லம் திரும்ப உடனே கிளம்பிவிடுவார்கள்.

மறக்க முடியாத கூட்டமென்றால் சென்னையில் தேசியமுன்னணி தொடக்கவிழாதான். கடற்கரையெங்கும் மனித உடல்களால் ஏற்பட்ட கச கச நெரிசல். என்னை தோள் மீது தூக்கி வைத்து அழைத்துப்போனார் அப்பா. அன்று கண்ட எழுச்சியையும், எண்ணிக்கையையும் திரும்ப வாழ்நாளில் காணவே முடியாது என்று இருபது ஆண்டுகளாக நினைத்திருந்தேன். கடந்தாண்டு கோவையில் நடந்த செம்மொழி மாநாடு அக்குறையைப் போக்கியது.

மதுரை, தஞ்சை, கோவை, சேலம் என்று தமிழகத்தின் பெருநகரங்களில் வசிக்கும் திமுக நண்பர்கள் முன்பெல்லாம் சொல்வார்கள். "சென்னைக்கு வரும்போது தாய்வீட்டுக்குள்ளே நுழையுற எண்ணம் வருதப்பா!". அது உண்மைதான். 1959ல் மாநகராட்சியை திமுக கைப்பற்றியதிலிருந்தே சென்னை திமுகவின் கோட்டைதான். செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வேண்டுமானால் யாரிடமும் இருக்கலாம். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலேயே சென்னை மட்டும் திமுகவிடம்தான் இருக்கும். இந்தப் பெருமையெல்லாம் 96 வரைக்கும்தான்.

90களின் தொடக்கத்தில் திமுக முகாமில் ஏகப்பட்ட குழப்பம். நானும் கொஞ்சம் வளர்ந்துவிட்டேன் என்பதால், அப்பாவின் உதவியில்லாமல் தனியாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன். திமுக கூட்டம் என்றில்லாமல், எந்த கூட்டமாக இருந்தாலும் ஆவலுடன் முன்வரிசையில் போய் உட்கார்ந்துக் கொள்வேன். திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்டதால், அம்மா அனுதாபியாகவும் இருந்தேன் (அப்போது தி.க., அதிமுகவை ஆதரித்தது). ஆயினும் கொஞ்சநாளிலேயே அம்மாவின் பாசிஸ நடவடிக்கைகள் பிடிக்காமல் போய்விட்டது. திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்டபோது கொதித்துப் போனேன் (உள்ளகரம்-புழுதிவாக்கம் நகர கழகச் செயலாளராக இருந்த குபேரா.முனுசாமி அவர்களின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக மதிமுகவுக்கு மாறியதும் ஒரு ஸ்பெஷல் காரணம்). சென்னையெங்கும் நடந்த மதிமுக பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு விடிய விடிய உணர்ச்சிவசப்பட்டு அழுதிருக்கிறேன். சென்னைக்கு வைகோ பாதயாத்திரையாக வந்தால் தாம்பரத்துக்கு அந்தப் பக்கமாக போய் வரவேற்று, பாதம் தேய தேய நகருக்கு நடந்துவருவேன். இந்நாட்களில் எல்லாம் வீட்டில் தினமும் அரசியல் சண்டைதான். அப்பா கலைஞருக்கும், நான் ஆரம்பத்தில் அம்மாவுக்கும், பிறகு வைகோவுக்குமாக சண்டை போட்டுக் கொண்டிருப்போம்.

95-96 காலக்கட்டத்தில் ஜூனியர் விகடன், நக்கீரன் இதழ்களையெல்லாம் தொடர்ச்சியாக வாசித்து, வாசித்து திமுக ஆதரவாளனாக முழுமையாக மாறிவிட்டேன். இடையில் வைகோவின் 'சப்பை'யான பல நடவடிக்கைகளும் (வெறுமனே செண்டிமெண்ட் அரசியல்) இதற்கு காரணம். தேர்தல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டேன். சென்னை, காஞ்சி மாவட்டங்களில் நடைபெறும் பெரிய கூட்டங்கள் எதையுமே விட்டதில்லை. கலைஞருக்கு விஜயகாந்த் நடத்திய கடற்கரைப் பாராட்டுவிழாக் கூட்டம் பசுமையாக நினைவிருக்கிறது. ஒரு ஓட்டை எக்ஸ்ஃப்ளோரர் வண்டியில் த்ரிபிள்ஸ் போய், கல்யாணி ஹாஸ்பிடல் அருகே விழுந்து வாரி எழுந்து வந்தோம். இந்த காலக்கட்டம் வரையில் மட்டும், சிறுவயதிலிருந்து குறைந்தபட்சம் ஐநூறு, அறுநூறு கூட்டங்களுக்குப் போய்வந்திருப்பேன் என்று நினைக்கிறேன். திமுக, அதிமுக, மதிமுக, திக, பாஜக, ஜனதாதளமென்று கட்சி வேறுபாடெல்லாம் பார்த்ததில்லை. அயோத்தியா மண்டபம் உபன்யாசங்களுக்கு கூட மூன்று, நான்கு முறை சென்று வந்ததுண்டு.

இதற்குப் பிறகு காதல், கருமாந்திரமென்று திசை மாறித் தொலைத்துவிட்டதால் பொதுக்கூட்டங்களுக்கு போய்வரும் பழக்கம் வெகுவாக குறைந்தது. இதற்கேற்றாற்போல சீரணி அரங்கத்துக்கும் 'அம்மா' புண்ணியம் தேடிக்கொண்டார். நகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த தோதான இடம் எதுவும் இப்போது சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதே  சிந்தாதிரிப்பேட்டை, புல்லா ரெட்டி அவென்யூ, காரணீஸ்வரர் கோயில், சின்னமலை என்று மொக்கையான லொக்கேஷன்கள்தான் திரும்ப திரும்பவும்.

இடையில் மடிப்பாக்கத்தில் நடந்த சில கூட்டங்களில் பேசியிருக்கிறேன். இடஒதுக்கீட்டுக்காக திமுக நடத்திய பொதுவேலைநிறுத்தம் குறித்து விளக்கம் கூறி நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஆவேசமாகப் பேசினேன். அப்பாவின் அந்தக் காலத்து நண்பரான ஆர்.எஸ்.பாரதி, பெருமையோடு என்னைப் பாராட்டினார்.

கலைஞரின் 83வது பிறந்தாள் என்று நினைவு. சின்னமலையில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நினைவிருக்கிறது. பெரியார், அண்ணா ஆகியோரின் சிந்தனைகளையே இன்னமும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். கலைஞர் புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டுமென வீரபாண்டியார் கர்ஜித்தார். அவ்வளவு சுவாரஸ்யமான கூட்டங்கள் எல்லாம் இப்போது எங்கே நடக்கின்றன? இப்போதெல்லாம் கண்டன ஆர்ப்பாட்டங்களும், மறியலும்தான் நடக்கிறது. பொதுக்கூட்டம் எங்கே நடக்கிறது?  இப்போதெல்லாம் டிவியும் பெருமளவு பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், பெரிய கூட்டங்களை லைவ்வாகவே கலைஞர் செய்திகளிலும், ஜெயா நியூஸிலும், கேப்டன் டிவியிலும் பார்த்துக்கொள்ள முடிகிறது.

நேற்று திமுக பொதுக்குழு விளக்கக்கூட்டம் சைதையில் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சைதை மாதிரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் திமுகவினர் கிரிக்கெட் போட்டிதான் நடத்துவார்கள். இப்போது பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள் என்றதுமே ஆவலோடு விரைந்தேன். அடடா.. என்னே அற்புதம்? 96க்கு முந்தைய காலக்கட்டம் நினைவுக்கு வருகிறது. சாரை சாரையாக தொண்டர்கள். பெரிய மைதானம். பிரம்மாண்டமான மேடை. எதிரே மைதானம் முழுக்க மனிதத் தலைகள். குறைந்தபட்சம் 50,000 பேராவது கூடியிருப்பார்கள். ஆச்சரியப்படும் வகையில் மகளிர் கூட்டம் அதிகமாக இருந்தது. திமுக பழைய மேடைப்பேச்சு கலாச்சாரத்தை மீண்டும் வழக்கில் கொண்டு வருவதாக தோன்றுகிறது. ஏனெனில் ஊடகங்களில் பெரும்பாலானவை திமுகவுக்கு எதிராக மாறிவிட்ட சூழல் நிலவுகிறது. எனவே மக்களை இனி நேரடியாகவே சந்திக்க திமுக தலைமை முடிவெடுத்திருக்கலாம்.

ஜெ. அன்பழகன், சற்குணப் பாண்டியன், ஆற்காடு, தளபதி, பேராசிரியர் என்று அனைவரும் பேசி முடிக்க.. இரவு 9 மணிக்கு மைக்கைப் பிடித்தார் கலைஞர். "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!" கரகர குரலைக் கேட்டதுமே, அந்தக் காலத்தில் கேட்ட அதே கரகோஷத்தை பலவருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கேட்டேன். இந்தக் குரலை கேட்கவே கூடியிருந்த கூட்டம் மொத்தமும் எழுந்து நின்று, கைகளை விரித்து உதயசூரியன் சின்னத்தை மேடை நோக்கி காட்டியது. எனக்கு அருகில் அமர்ந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க உடன்பிறப்பு ஒருவர், துண்டு எடுத்து கண்களை துடைத்துக் கொண்டார். எனக்கு அப்பா ஞாபகம் வந்தது.

31 ஜனவரி, 2011

Your support can make a difference in Indian Fishermen's Life - Pls Fwd through mail

Hi Friends,

I am sure you must have heard about the recent killings of Indian Fishermen from Tamil Nadu. by Sri Lankan Navy., if you have not request you to read through these links from popular dailies. - Pandiyan Killed on 12th of Jan 2011Jayakumar Strangulated on 24th Jan 2011 ,


So far, in the last few decades 530 fisherman has been killed, thousands of fisherman has been harassed, and multiple crores of rupees worth fishing equipments and boats have been demolished by Sri Lankan Navy. Our Indian Government has been a silent spectator for all this.

As a fellow Indian brothers & sisters , I appeal to you to voice your support for the fellow Indian fishermen brothers . As a fellow Indian you can do the following to voice your support for the poor fishermen, who have become target for the Sri Lankan Navy.

1.Sign the petition to stop the killing by Sri Lankan Navy - http://www.petitiononline.com/TNfisher/petition.html
2.Join the online protest to save the fishermen by tweeting about this using #tnfisherman tag - http://twitter.com/#!/search?q=%23tnfisherman
3.You can add the twibbon to your twitter profile / Face book profile picture to show your protest - http://twibbon.com/join/TNFisherman
Read and contribute for the Face Book page on Save Tamil Nadu Fisherman - http://www.facebook.com/savetnfisherman
4.Read and contribute articles for www.savetnfisherman.org

We are also seeking volunteers to contribute to this cause. If you are interested you can write to us savetnfisherman@gmail.com, tnfishermancampaign@gmail.com

One last request, Please send this mail to as many us of your friends and colleagues.

with best regards,

A Fellow Indian

நாத்திகம் காத்தல் - உருப்படியான ஒரு வலைப்பதிவு!



தமிழ் சமூகத்தில் நாத்திகனாய் வாழ நேர்வது துரதிருஷ்டம். ஒரு நாத்திகன் தனது சொந்த குடும்பத்தினராலேயே கூட பைத்தியக்காரனாய் பார்க்கப் படுகிறான். தவிர்க்க இயலாத சூழல்களில் சனாதான சடங்குகளில் கலந்துகொண்டாக வேண்டிய கட்டாயங்களின்போது அவன் அடையும் சங்கடங்களுக்கு அளவேயில்லை. தான் சார்ந்த சமூகத்தோடேயே ஒட்டமுடியாத தனித்தீவாய் வாழ்வது அவனது சாபக்கேடு!

தமிழக நாத்திகன் குறித்த உளவியல்ரீதியான, அற்புதமான பதிவொன்றினை வாசிக்க நேர்ந்தது.

வாழ்த்துகள் ஆதிமூல கிருஷ்ணன்!

25 ஜனவரி, 2011

ஜி.எஸ்.எல்.வி – சில தகவல்கள்!



ஜி.எஸ்.எல்.வி. என்றால் என்ன?


Geosynchronous Satellite Launch Vehicle என்று தொழில்நுட்ப மொழியில் சொல்லப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO), இன்சாட் வகை செயற்கைக் கோள்களை விண்வெளியில் அதற்குரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் வேலையைதான் ஜி.எஸ்.எல்.வி. செய்கிறது.

இன்னும் கொஞ்சம் எளிமையாக சொல்வதென்றால், வீட்டிலிருந்து உங்களை அலுவலகத்துக்கு ஸ்கூட்டர் கொண்டு செல்கிறது இல்லையா? செயற்கைக் கோள்களுக்கு ஸ்கூட்டர் என்று ஜி.எஸ்.எல்.வி.யை புரிந்துகொள்ளலாம்.

நம் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மற்ற முன்னேறிய நாடுகளின் ராக்கெட்டுகளை நாம் பயன்படுத்த வேண்டுமானால் பல்லாயிரம் கோடி செலவாகும். ஜி.எஸ்.எல்.வி. நம்முடைய தொழில்நுட்பம், நம்முடைய நிபுணர்களால் செயல்படுத்தப்படுவது என்பதால் சிக்கனமானது. அதாவது சில நூறு கோடிகள்.

ஜி.எஸ்.எல்.வி பிறந்த கதை

உலகோடு உறவாடக்கூடிய (Geosynchronous satellites) செயற்கைக் கோள்கள், ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இந்தச் செயற்கைக் கோள்களை உருவாக்கிவிடக் கூடிய நாடுகளால், அவற்றை விண்ணுக்கு ஏவும் ராக்கெட் தொழில்நுட்பத்தை சுலபமாக ஏற்படுத்திவிட முடிவதில்லை.'

1990ல் இந்தியா தனது செயற்கைக் கோள்களை தானே செலுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்ப திட்டத்தை முன்னெடுத்தது. ஏனெனில் அதற்கு முன்பு இதுபோன்ற தொழில்நுட்ப உதவிகளை நமக்கு சோவியத் யூனியன் செய்து வந்தது. அந்நாடு சிதறுண்ட நிலையில் சொந்தக்காலில் நிற்கவேண்டிய அவசியத்தை இந்தியா உணர்ந்தது.

ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. (Polar Satellite Launch Vehicle) தொழில்நுட்பத்தில் நமது நிபுணர்கள் கைதேர்ந்தவர்கள் என்பதால் ஜி.எஸ்.எல்.வி.யை வெற்றிகரமாக உருவாக்கிடும் தன்னம்பிக்கை நம்மவர்களுக்கு நிறையவே இருந்தது. ஜி.எஸ்.எல்.வி.யை இயக்கிடும் கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தை நமக்கு மற்ற நாடுகள் நியாயமற்ற காரணங்களுக்காக மறுத்தன (இந்திய கிரையோஜெனிக் கதையை பெட்டிச் செய்தியாக காண்க). எனினும் ஏற்கனவே நாம் பெற்றிருந்த ரஷ்ய என்ஜின்களை வைத்து 18, ஏப்ரல் 2001 அன்று வெற்றிகரமாக ஜி.எஸ்.எல்.வி.யை ஏவினோம்.

கட்டமைப்பு எப்படி?

பி.எஸ்.எல்.வியை மேம்படுத்தியே, மேலதிக நவீன தொழில்நுட்பத்தோடு ஜி.எஸ்.எல்.வி. உருவாகி இருக்கிறது. இது மொத்தம் மூன்று அடுக்குகளாக இருக்கும். கீழ் அடுக்கு முழுக்க திடப்பொருட்கள் அடங்கியது. இரண்டு மற்றும் மூன்றாவது அடுக்குகள் திரவங்கள் நிரம்பியது. மூன்று அடுக்குகளிலுமே விண்ணுக்கு உந்திச் செல்லும் (propelled) இயந்திரங்கள் நிரம்பியிருக்கும். முதல் இரண்டு அடுக்குகளும் பி.எஸ்.எல்.வி. மாதிரியே இருக்கும். மூன்றாவது அடுக்கில்தான் ஜி.எஸ்.எல்.வியின் சிறப்பம்சமான கிரையோஜெனிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஏன் கிரையோஜினிக்?

பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களை சுமந்தபடி மிக்ககுறுகிய காலம் மட்டுமே பயணிக்கும். அவையின் சக்தி அவ்வளவுதான். இதனால் சில நூறு கிலோ மீட்டர்கள் உயரத்தில்தான் செயற்கைக்கோள்களை நிறுவமுடியும்.

35,000 கி.மீ உயரத்தில் நிறுவக்கூடிய செயற்கைக்கோள்கள்தான் பன்முகப்பயன்களை தரக்கூடியவை. குறிப்பாக தகவல் தொடர்புக்கு ஏதுவான செயற்கைக்கோள்களை இந்த உயரத்தில்தான் நிறுத்தியாக வேண்டும். இதற்கு பி.எஸ்.எல்.வி சரிப்படாது. ஜி.எஸ்.எல்.வி. தான் ஒரே தீர்வு. மிகவும் சக்திவாய்ந்த இயந்திரங்களை பொருத்தினால் மட்டுமே இவ்வளவு உயரத்துக்கு ராக்கெட்டை அனுப்பமுடியும். அந்த இயந்திரம்தான் கிரையோஜெனிக்.

மைனஸ் 183 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட ஆக்சிஜன், மைனஸ் 253 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட ஹைட்ரஜன் ஆகியவைதான் கிரையோஜெனிக்கின் எரிபொருள். ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் திரவநிலையில் இருக்கும். ராக்கெட் கிளம்புவதற்கு முன்பான 30 நொடி வரை இந்த எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டே இருக்கும்.

ஜி.எஸ்.எல்.வி. எத்தனை முறை ஏவப்பட்டது?

ஜி.எஸ்.எல்.வி. இதுமுறை ஏழு முறை ஏவப்பட்டிருக்கிறது. முறை ஏப்ரல் 2001லும், மே 2003லும் ஜி-சாட் 1, ஜி-சாட் 2 ஆகியவை ஏவப்பட்டது. EDUSAT தகவல் செயற்கைக்கோள் செப்டம்பர் 2004ல் வெற்றிகரமாக விண்ணுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஜூலை 2006ல் இன்சாட்-4சியை ஏவ நடந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இயந்திரக்கோளாறு ஏற்பட்டதின் காரணமாக வங்காள விரிகுடாவுக்கு மேலாக ராக்கெட்டும், செயற்கைக்கோளும் வெடித்துச் சிதறடிக்கப்பட்டன. முந்தைய தோல்வியை ஈடுகட்டும் வகையில், செப்டம்பர் 2007ல் இன்சாட் 4சிஆர் விண்ணில் நிறுவப்பட்டது.

ஏப்ரல் 2010ல் ஜிசாட்-4னை சுமந்த ஜி.எஸ்.எல்.வி. தோல்வியடைந்தது. கிரையோஜெனிக் இயந்திரத்துக்கு செல்லவேண்டிய எரிபொருள் தடைபட்டதால் இம்முயற்சி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. கடந்த டிசம்பரில் ஜிசாட்-5பியை விண்ணில் நிறுவ நடந்த முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்கிறது. இவ்வாண்டில் ஜி-சாட்6-ஐ விண்ணில் நிறுவ திட்டமிடப்பட்டிருக்கிறது. 2003 மற்றும் 2004ல் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் மட்டுமே திட்டமிடப்பட்ட இடத்தில் விண்ணில் சரியாக நிறுவப்பட்டவை.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள், சென்னையில் இருந்து 80 கி.மீ தூரத்தில், ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஏவப்படுகிறது.

தோல்வி

வருட கடைசியில் ஜிசாட் -5பியை நிறுவும் முயற்சியில் இந்தியா தோல்வியடைந்திருப்பது நிச்சயமாக இஸ்ரோவுக்கு பெரிய பின்னடைவுதான். கடந்த ஏப்ரல் மாதம், முதன்முறையாக முழுக்க இந்திய தொழில்நுட்பத்தோடு கூடிய கிரையோஜெனிக் எந்திரத்தை உருவாக்கி ஜிசாட் -4ஐ ஏவும் முயற்சியும் தோல்வி அடைந்திருக்கிறது. பி.எஸ்.எல்.வி. தொழில்நுட்பத்தில் இன்று இந்தியாவுக்கு சர்வதேச அளவில் கிடைத்திருக்கும் மரியாதையை, நிச்சயமாக இந்த ஜி.எஸ்.எல்.வி. தோல்விகள் குலைக்கும். 2013ஆம் ஆண்டு நாம் ஜி.எஸ்.எல்.வி. மூலமாகதான் சந்திராயன்-2ஐ ஏவ இருக்கிறோம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியல் எழுச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்கு மகத்தானது. இந்நிறுவனத்தின் வெற்றிகளும், தோல்விகளும் இந்திய கவுரவத்தோடு சம்பந்தப்பட்டது. கடந்த ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது பிரான்ஸ் அதிபர், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைதான் முதலில் சுற்றிப் பார்த்தார். விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியாவோடு கைகோர்த்து செயல்பட அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்தியாவும், சீனாவும்தான் எதிர்காலத்தில் ராக்கெட், செயற்கைக்கோள் தொடர்பான வான்வழி வர்த்தகத்தில் கோலோச்சப் போகிறார்கள் என்று பாரிஸைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கணக்கீடு செய்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நாம் கடந்த வருடத்தில் அடுத்தடுத்து பெற்றிருக்கும் இரு தோல்விகள் கொஞ்சம் சோர்வடையவே செய்கின்றன.

அதே நேரத்தில் கடந்த மாதம் ரஷ்யா, ஓராண்டுக்கு முன் நாசா (அமெரிக்கா), மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பான் போன்ற தொழில்நுட்பத்தில் வெகுவாக முன்னேறிய நாடுகளும் கூட சமீபமாக சில தோல்விகளை கண்டிருக்கிறார்கள். ராக்கெட் அறிவியலுக்கே கொஞ்ச காலமாக சகுனம் சரியில்லை போலும்.

இந்திய-கிரையோஜெனிக் கதை!

2003 மார்ச் மாதம். பிரதமர் வாஜ்பாய் பாராளுமன்றத்தில் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே அறிவித்தார். "நாமே கிரையோஜெனிக் எந்திரத்தை சொந்தமாக உருவாக்கும் தொழில்நுட்ப தன்னிறைவைப் பெற்றுவிட்டோம்!" – இந்தியா அன்று அடைந்த பெருமிதத்துக்கு பின்னால்தான் எவ்வளவு அரசியல் சூழ்ச்சிகள்?

கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை நாம் 1993ல் இருந்து பயன்படுத்தி வருகிறோம். 1998ல் பொக்ரானில் செய்யப்பட்ட அணுசோதனை நம்மை உலகின் மற்றநாடுகளிடமிருந்து விலக்கி வைத்தது. மற்ற நாட்டு விஞ்ஞானிகளோடு நம் விஞ்ஞானிகளுக்கு இருந்த தொழில்நுட்ப ஆலோசனை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்திய விஞ்ஞானிகள் அணு ஆயுதத்தை சுமந்துச் செல்லும் ஏவுகணைகளை உருவாக்குகிறார்கள் என்று அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டு, நமக்கு தொழில்நுட்பம் மறுக்கப்பட்டது.

இதற்குப் பின்னால் உலகத்தின் பாதுகாப்பு காரணமாக காட்டப்பட்டாலும், வணிகம் – மிகப்பெரிய வணிகம்தான் உண்மையான காரணம். அமெரிக்கா, ரஷ்யா, சைனா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருந்தார்கள். தகவல் தொடர்புக்கு ஏதுவான பெரிய செயற்கைக்கோள்களை ஒரு நாடு விண்ணில் நிலைநிறுத்த வேண்டுமானால் இவர்களைத்தான் சார்ந்து இருக்க வேண்டும். மிகப்பெரிய பணவர்த்தனை நடைபெறும். இந்தியா, இந்த தொழில்நுட்பத்தில் கைதேர்ந்துவிட்டால் மிக்க்குறைந்த காசுக்கு மற்றவர்களுக்கு செயற்கைக்கோளை ஏவித்தரும் என்று இந்நாடுகள் அஞ்சின. இதனால் தங்கள் பங்குக்கு பங்கம் வரும் என்பதாலேயே உலகப் பாதுகாப்பை காரணம் காட்டின.

இந்நிலையில் இந்தியா தனக்கான தொழில்நுட்பத்தை தாமே வடிவமைப்பது என்று அதிரடியாக முடிவெடுத்தது. தமிழகத்தின் மகேந்திரபுரியில் Liquid Propulsion System Centre என்கிற இந்திய நிறுவனம் இந்த எந்திரங்களை உருவாக்குவதில் முனைப்பாக இயங்கி வருகிறது. 2002 பிப்ரவரியிலேயே சில நொடிகளுக்கு விண்ணில் செயற்கைக்கோளை உந்திச்செல்லும் இயந்திரத்தை நாம் உருவாக்கிவிட்டோம். 2002 செப்டம்பரில் 1000 நொடிகளுக்கு உந்திச்செல்லுகிற இயந்திரம் தயார். எவ்வளவு நொடிகளுக்கு இது விண்ணைக் கிழித்துச் செல்லும் என்பது மிக முக்கியம். அதிக நொடிகளுக்கு இயங்கும் இயந்திரத்தால்தான் நல்ல உயரத்தில், திட்டமிட்ட பாதையில் செயற்கைக்கோளை நிறுவமுடியும். அடுத்தடுத்த சோதனைகளில் வெற்றிகண்ட பின்னரே மார்ச் 12, 2003 அன்று கிரையோஜெனிக் இயந்திரங்களை தயாரிக்கும் வல்லமையை இந்தியா பெற்றுவிட்டதாக உலகுக்கு அறிவிக்கப்பட்டது.

கிரையோஜெனிக் இயந்திரங்களை காசுகொடுத்து வாங்குவது வேறு. தொழில்நுட்ப ஆலோசனைகளை ஒப்பந்தங்கள் மூலமாக பெறுவது என்பது வேறு. ரஷ்யாவிடமிருந்து நாம் மொத்தம் 7 கிரையோஜெனிக் எந்திரங்களை வாங்கியிருந்தோம். அவற்றில் 6 எந்திரங்களை இப்போது பயன்படுத்தி விட்டோம். 2011 மத்தியில் மீதியிருக்கும் எந்திரமும் ஏவப்பட்டு விடும். அனேகமாக நான் பிரான்ஸையோ, ரஷ்யாவையோ மீண்டும் உதவிக்கு நாட வேண்டிய அவசியம் வரலாம். இது தற்காலிகமானது.

நாம் உருவாக்கும் இயந்திரங்களை வைத்து நமது செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலைபெறும்போது, மற்ற நாடுகளில் இருந்து நமக்கு 'கிரையோஜெனிக் ஆர்டர்' நிறைய வரும். இவ்வளவு நாட்களாக இந்த தொழில்நுட்பத்தை பூதம் மாதிரி அடைகாத்து, கொள்ளை லாபம் சம்பாதித்து வந்த நாடுகளுக்கு நம் மீது எரிச்சலும் வரும்.

கிரையோஜெனிக் தொழில்நுட்பம் தெரிந்தால், இந்தியா அழிவுகர ஏவுகணைகளை உருவாக்கும் என்று இந்நாடுகள் முன்பு பூச்சாண்டி காட்டியதில்லையா? கடந்த இருபது ஆண்டுகளில் நாம் அப்படிப்பட்ட ஒரு ஏவுகணையை கூட இதுவரை உருவாக்கவில்லை. இவ்வகையிலும் இந்தியா முன்னேறிய நாடுகளின் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)