28 ஜூலை, 2011

டால்ஃபின்களை காப்பாற்றிய சிட்டுக்குருவிகள்!

கேம்பல் ரிவர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்திருக்கும் ஒரு தீவு நகரம். இங்கிருக்கும் நதியில் அடிக்கடி கடல் உட்புகுந்து, கரைமட்டம் அதிகரிக்கும். அப்படியொரு நாளின் அதிகாலை ஆறு மணியளவில் பாப் சோல்க் தன் வீட்டின் முகப்பில் இருந்த புற்களை வெட்டிக் கொண்டிருந்தார்.

யதேச்சையாக நதிக்கரையோரம் பார்த்தவருக்கு ஆச்சரிய அதிர்ச்சி. சுமார் பத்து அடி நீளமுள்ள நான்கு அபூர்வ வகை டால்பின் மீன்கள், கரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். கடல்நீர் உட்புகுந்தபோது இவற்றையும் அடித்துவந்து கரையோரத்தில் தள்ளிவிட்டு, மீண்டும் உள்வாங்கியிருக்கிறது.

நான்கு உயிர்களையும் காக்க வேண்டுமே? என்ன செய்வது, ஏது செய்வது என்று புரியவில்லை. யாரை தொடர்பு கொண்டு என்ன கேட்க வேண்டும்?

உடனடியாக உள்ளூர் மீன்வளத்துறைக்கும், கடல் தொடர்பான துறை அதிகாரிகளையும் தொடர்புகொள்ள முயற்சித்தார். அதிகாலையில் எந்த அலுவலகம்தான் இயங்கிக் கொண்டிருக்கும்?
டால்ஃபின்களை உயிரோடு காக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் சமூக வலைத்தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் இச்செய்தியை பகிர்ந்தார். “நதியோரத்தில், என் வீட்டு வாசலில் நான்கு டால்ஃபின்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன”

பாப் செய்தது இவ்வளவுதான். இவருடைய செய்தியை இணையத்தில் அறிந்த உள்ளூர் ரேடியோ ஸ்டேஷன் அலற ஆரம்பித்தது. செய்தி கேட்ட தன்னார்வலர்கள் பலரும் பக்கெட்டோடு பாப் வீட்டுக்கருகே படையெடுக்க ஆரம்பித்தார்கள். சுமார் எண்பது பேர் காலை ஏழு மணிக்கே அவர் வீட்டு வாசலில் குழுமினார்கள். டால்ஃபின் மீட்புக்குழு தயார்.

பக்கெட்டில் நீரெடுத்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த டால்ஃபின்கள் மீது ஊற்றினார்கள், உடல் ஈரம் வற்றிவிடக் கூடாது என. அவை இருந்த இடத்தில் இருந்து நதிக்குள் செல்ல சிறு கால்வாய் வெட்டினார்கள். கால்வாயில் போதிய நீர் வருமாறு செய்தார்கள். டால்ஃபின்கள் அதுவாகவே மெதுவாக நகர்ந்து, ஆற்றுக்குள் நீந்தி, கடலுக்கு சென்றது.

சடுதியில் நடந்து முடிந்த விஷயங்கள் இவை. “இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை. இணையத்தின் மூலமாக இப்படியெல்லாம் கூட நல்லது செய்யமுடியும் என்பதை இன்றுதான் அறிந்தேன்” என்று இம்முறை ஆனந்த அதிர்ச்சியோடு சொல்கிறார் பாப் சோல்க்.

இணையம் இருமுனை கத்தி. அரட்டையடிக்கப் பயன்படும் சமூக வலைத்தளங்களை, சமூகப் பணிகளுக்கும் கூட பாப் பயன்படுத்தியதைப் போல பயன்படுத்தலாம்.

(நன்றி : புதிய தலைமுறை)

27 ஜூலை, 2011

தெய்வத்திருமகள்!

மகள் அப்பாவுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை அள்ளித்தருவாள் என்பது கருவானபோதே தெரிந்திருந்தால், நானும் என் அப்பாவுக்கு மகளாக பிறந்திருப்பேன்!

23 ஜூலை, 2011

காஞ்சனா

பெரிய ஹீரோ. பெரிய டைரக்டர். பெரிய மியூசிக் டைரக்டர். என்றெல்லாம் ஏகத்துக்கும் எதிர்ப்பார்த்து முதல் நாள் முதல் காட்சியே தியேட்டருக்குப் போய் உட்கார்ந்து பல்பு வாங்கியதும் உண்டு.

என்னவோ ஒரு படம். மூன்று மணிநேரத்தை போக்கியாக வேண்டும் என்கிற கட்டாயத்தால் தியேட்டருக்குப் போய் இன்ப அதிர்ச்சியும் அடைந்தது உண்டு.

காஞ்சனா இரண்டாவது அனுபவத்தை தருகிறாள்.

சரண் தயாரிப்பில், லாரன்ஸின் இயக்கத்தில் முனி பார்த்திருக்கிறேன். முதல் தடவை பார்க்கும்போது மொக்கையாகவும், பின்னர் யதேச்சையாக டிவியில் அடிக்கடி காண நேரும்போது ‘அட சுவாரஸ்யமா இருக்கே’ என்று உட்கார்ந்தது உண்டு.

அதே கதை. அதே ஹீரோ. அதே இயக்குனர். கதாபாத்திரங்களை மட்டும் கொஞ்சம் ஷேப் அடித்து, டிங்கரிங் செய்து குலுக்கிப் போட்டால் முனி பார்ட் டூ ரெடி. முதல் பார்ட்டில் எங்கெல்லாம் ‘லாக்’ ஆகியது என்பதை கவனமாக பரிசீலித்து, காஞ்சனாவில் அதையெல்லாம் ‘ரிலீஸ்’ செய்திருப்பதில்தான் லாரன்ஸின் வெற்றியே இருக்கிறது. எந்திரன் ரிலீஸின் போதே ஜிலோவென்றிருந்த உட்லண்ட்ஸில் காஞ்சனாவுக்கு திருவிழாக் கூட்டமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தமிழில் நிச்சயமாக ஹிட். தெலுங்கில் அதிநிச்சயமாக சூப்பர் டூப்பர் ஹிட்.

ஒரு பேய்ப்படத்தை பார்த்து தியேட்டரே வயிறு வலிக்க சிரித்துத் தீர்ப்பது அனேகமாக தமிழ் சினிமா வரலாற்றில் இதுதான் முதல் தடவையாக இருக்கக்கூடும். ஒரு அட்டகாச காமெடி. அடுத்தக் காட்சி மயிர்க்கூச்செறிய வைக்கும் திகில். இப்படியே மாற்றி, மாற்றி அழகான சரமாக திரைக்கதையை தொடுத்திருக்கிறார் லாரன்ஸ்.

கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் என்று எல்லாருமே இந்த உத்தி புரிந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கோவைசரளா. மனோரமாவின் உயரத்தை தாண்டுமளவுக்கு அபாரமான டைமிங் சென்ஸ் இவருக்கு.

லஷ்மிராய் மட்டும் தேவையில்லாமல் வருகிறார். ஃபேஸ் கொஞ்சம் சப்பை என்றாலும், பீஸ் நல்ல சாண்டல் வுட். அதிலும் இடுப்பு முட்டை பாலிஷ் போட்ட மொசைக் தரை மாதிரி பகட்டாக பளபளக்கிறது.

காஞ்சனாவும் இதர இரண்டு ஆவிகளும் லாரன்சுக்குள் புகுந்திருக்கிறார்கள் என்பதை காட்டும் அந்த டைனிங் டேபிள் காட்சி அநியாயத்துக்கு நீளம். ஆனாலும் நீளம் தெரியாதவகையில் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருப்பதில், தான் ‘ரியல் மாஸ்’ என்பதை நிரூபிக்கிறார் லாரன்ஸ். நடனக் காட்சியில் மாற்றுத் திறனாளிகளை புகுத்தியிருப்பது துருத்திக் கொண்டு தெரிகிறது என்றாலும் நல்ல முயற்சி.

முதல் பாதியின் ஒட்டுமொத்த சுவாரஸ்யத்தையும், இரண்டாம் பாதியில் தன் முதுகில் சுமக்கிறார் சரத்குமார், எம்.எல்.ஏ., இந்த பாத்திரத்தை தைரியமாக ஒத்துக்கொண்டு நடித்த எம்.எல்.ஏ.,வை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஓவர் ஆக்டிங் ஆகியிருக்கக் கூடிய அபாயம். நீண்டகால திரையுலக அனுபவம் வாய்ந்த சரத் ‘அண்டர்ப்ளே’ செய்து அசத்தியிருக்கிறார். நடிப்புச் சாதனையாளர் நடிகர் திலகம் நடிக்க விரும்பி, கடைசிவரை வாய்க்காமல் போன பாத்திரம், சரத்துக்கு கிடைத்தது எவ்வளவு பெரிய புண்ணியம்? சரத்தின் கேரியரில் குறிப்பிடத் தகுந்த மைல்கல் காஞ்சனா.

படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தாலும், கடைசி பகுதி ரத்த வெறியாட்டம் அச்சமூட்டுகிறது. படம் பார்த்த குழந்தைகளுக்கு நீண்டகால கொடுங்கனவுகளை வழங்கவல்லது. குறிப்பாக ரத்தச்சிவப்பான க்ளைமேக்ஸ் பாடல். இவ்வளவு வன்முறை வெறியாட்டத்தோடு ஒரு பாடலை சமீபத்தில் பார்த்ததாக நினைவில்லை.

திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை, பிரச்சார நெடியின்றி இயல்பாக ஒரு கமர்சியல் படத்தில் செருகியிருப்பதற்காகவே காஞ்சனாவை எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்கலாம்.

காஞ்சனா – கட்டாயமா பார்க்கணும்ணா...

21 ஜூலை, 2011

அசோகர் கல்வெட்டு


ங்கள் தெருவில் ஒரு பெந்தகொஸ்தே சர்ச் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஓர் ஐயர் வீடு. ஐயர் கொஞ்சம் வயதானவர். அவர் வீட்டுத் தோட்டம் சரியாகப் பராமரிக்கப் படாமல் எப்போதும் புல்லும் பூண்டும் மண்டிக்கிடக்கும். இன்று காலை நான் அலுவலகத்துக்கு வரும்போது, அந்தத் தோட்டத்தை நடுத்தர வயதுடைய ஒருவர் கடப்பாரை, மண்வெட்டிகொண்டு, ஒழுங்குசெய்துகொண்டு இருந்ததைப் பார்த்தேன். கொஞ்சம் கூன் விழுந்த அந்த நடுத்தர வயது மனிதரை எங்கோ பார்த்த தாக நினைவு. பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அவரைப் பார்த்து லேசாகப் புன்முறுவல் செய்தேன்.

 யாரோ ஒருவர் சம்பந்தம் இல்லாமல் நின்று சிரிப்பதைப் பார்த்த அந்த நபர், 'இன்னா சார்... உங்க வூட்ல ஏதாச்சும் வேலை இருக்கா?'' என்று திக்கித் திக்கிப் பேசினார். குரலைக் கேட்டதுமே அடையாளம் கண்டுகொண்டேன். அது அமல்ராஜேதான்!

அமல்ராஜ் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ரங்கிமலை ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. ஐந்தாவதுக்குப் பிறகு, தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தேன். பையன்களுக்கு 'ஏ’ செக்‌ஷன். பெண்களுக்கு 'பி’ செக்‌ஷன். 'ஏ’ செக்‌ஷனில் மட்டுமே 106 பேர். முதல் வரிசையில் நான் அமர்ந்து இருந்தேன். எனக்கு அருகில் கொஞ்சம் கூன் போட்ட ஒரு பையன் உட்கார்ந்து இருந்தான். அவனை அது வரை பார்த்தது இல்லை. அவன் மடிப்பாக்கம் பஞ்சாயத்துப் பள்ளியில் இருந்து வந்திருந்தான். பார்த்ததுமே தெரிந்துகொள்ளலாம், அவனுக்கு வயதுக்கு ஏற்ற போதுமான மூளை வளர்ச்சி கிடையாது என்பதை.

சீருடை என்கிற விஷயம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதே, மாணவர்களுக்குள் வேற்றுமை இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால், அதில் கூட நுண்ணிய அளவில் வேறுபாடு இருப்பதை அரசுப் பள்ளிகளில் தெரிந்துகொள்ளலாம். ஏழை மாணவர்கள் காட்டன் சட்டை போட்டு இருப்பார்கள். கொஞ்சம் நடுத்தர வர்க்கத்துப் பையன்கள் டெரிகாட்டன் அணிந்து இருப்பார்கள். வசதியான வீட்டுப் பையன்கள் பாலியஸ்டர் அல்லது சைனா சில்க் அணிந்து இருப்பார்கள்.

அமல்ராஜ், சைனா சில்க் சட்டை அணிந்து இருந்தான். நான் வெள்ளை டெரிகாட்டன் சட்டையும் பிரவுன் நிற டவுசரும் அணிந்து இருந்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போதே, அவனுக்கு 16 வயது இருக்கும். வகுப்பில் பேன்ட் அணிந்து வந்தவன் அவன் மட்டும்தான். அவனுடைய அப்பா, அப்போது ஊரில் பெரிய ஆள். நிலம் நீச்சு, பரம்பரைச் சொத்து என்று கொஞ்சம் தாராளமாகவே இருந்தது. அவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரத்தின் மூத்த மகன் நம்ம அமல்ராஜ்.

புதிய நோட்டையும் புத்தகங்களையும் முகர்ந்து பார்த்தபோது வந்த வாசனையும், முதல் நாள் வகுப்பு தந்த மகிழ்ச்சியும் இன்னமும் மனதில் ஓரமாக இருக்கிறது. சொர்ணாம்பிகை மிஸ்தான் கிளாஸ் டீச்சர். முதல் நாள் என்பதால், பாடம் எதுவும் எடுக்கவில்லை. டேபிளில் இருந்த நொச்சிக் குச்சிக்கும் வேலை இல்லை.

கதைக்கு இடையே சின்ன இடைச் செருகல்...


நொச்சி என்பது மரமாகவும் வளராமல், செடியாகவும் குறுகிப்போகாமல் வளரக்கூடிய ஒரு தாவரம். நொச்சிக் குச்சி வளைந்து கொடுக்கும் தன்மைகொண்ட, உறுதியான கொம்பு. எருமை மாடு ஓட்டு பவர்கள் நொச்சிக் கொம்பைப் பயன்படுத்து வதைக் கிராமங்களில் காணலாம். இந்தக் குச்சியைவைத்து நுங்கு சைக்கிள் தயாரித் தால், பலன் அமோகம். நொச்சியின் இலை நல்ல வாசனைகொண்டது. காய்ந்த நொச்சி இலைகளை நெருப்பில் எரித்தால் யாகங்களில் வருவதுபோல வெண்மையான புகை வரும். இந்தப் புகை, கொசுக்களையும் பூச்சிக்களையும் அழிக்கவல்லது.
அப்போது எல்லாம் வகுப்பறை டேபிளில் தினமும் ஒரு புதிய நொச்சிக் குச்சிதயாரித்து வைக்க வேண்டும். இதற்காக வாத்தியார் களின், டீச்சர்களின் அல்லக்கை மாணவர் யாராவது வகுப்புக்கு ஒருவர் இருப்பர். அந்த அல்லக்கை வேலையை எட்டாவது வரை நான் செய்து வந்தேன். எட்டா வதுக்குப் பிறகு, பொறுக்கிப் பசங்க பட்டியலில் நான் சேர்ந்துவிட்டதால், பத்மநாபனோ வேறு யாரோ டீச்சருக்கு அல்லக்கையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். நொச்சிக் குச்சிக்கு டிமாண்ட் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக, நுணா மரத்தின் கிளையை உடைத்து, பிரம்பு தயார் செய்துவைக்க வேண்டும். கறு நிற நுணாம்பழம் சுவையாக இருக்கும். ஆனால், வாசனை அவ்வளவு சிலாக்கியமாக இருக்காது!

ஓ.கே. கமிங் பேக் டு தி பாயின்ட்...

சொர்ணாம்பிகை டீச்சரின் வகுப்பு  முடிந்ததுமே ஒல்லித் தமிழய்யா வந்தார். ஒல்லித் தமிழய்யா ரொம்ப ஜாலியான ஆள். டைமிங் கமென்ட்கள் அடிப்பதில் கில்லாடி. கோபம் வந்துவிட்டால் மட்டும், நொச்சிக் குச்சி பிய்ந்துபோகும் அளவுக்கு விளாசிவிடுவார். குச்சியே பிய்ந்துவிடும் என்றால், அது பிய்யக் காரணமான முதுகின் கதி என்னவென்று சொல்ல வேண்டியது இல்லை.

அன்று வகுப்புக்கு வந்த ஐயா எல்லோரையும் உயிரெழுத்து, மெய் எழுத்து எழுதச் சொன்னார். உயிர் எழுத்துக்களை வரிசையாக எழுதிவிட்டேன். மெய்யெழுத்து எழுதும்போது, மட்டும் கொஞ்சம் திணறிப்போனேன். எல்லார் நோட்டுக்களையும் வரிசையாக நடந்தவாறே கவனித்து வந்த ஐயா, அமல்ராஜின் நோட்டைப் பார்த்து உலகையே வெறுத்து விட்டார். அவன் எழுதியதில் ஒன்றுகூட சத்தியமாகத் தமிழில் இல்லை. அது எந்த மொழி என்று ஐயாவால்கூடக் கண்டு பிடிக்க இயலவில்லை.

''என்னய்யா இது? அசோகர் கல் வெட்டை அப்படியே பார்க்குறது மாதிரி இருக்கே?'' என்றார்.

அமல்ராஜ் அமைதி காத்தான். அவனுக்கு லேசாகத் திக்குவாய். வேகமாகப் பேச முடியாது.

''ஏன்டா, கேட்டுக்கிட்டு இருக்கேன். உன்னால பதில்கூடச் சொல்ல முடியாதா... வாய்ல என்ன கொழுக்கட்டையா?'' என்றவாறே நொச்சிக் குச்சியை எடுத்தார். பக்கத்தில் இருந்த பையன், ''ஐயா, அவனுக்குச் சரியாப் பேச வராது'' என்றான்.

''சரி... உன்னோட பேரை நோட்டுல எழுது!'' என்றார், ஐயா கண்டிப்பான குரலில்.

அமல்ராஜ் எழுதியது மீண்டும் அசோகர் கல்வெட்டு மாதிரியே இருந்தது. அமல்ராஜால் அவன் பெயரைக்கூட எழுத முடியவில்லை என்பதுதான் சோகம்.

''நீயெல்லாம் எப்படிடா ஆறாம் கிளாஸ் வந்தே?'' என்று கோபமாகக் கேட்டவாறே நொச்சிக் குச்சியால் அடித்து விளாசிவிட்டார் ஐயா. முதுகிலும் உள்ளங்கையிலும் ஏராளமான அடிகளைப் பொறுமையாக வாங்கிய அமல்ராஜ், ஒரு சின்ன எதிர்ப்புக்கூடத் தெரிவிக்கவில்லை. சிலை மாதிரி உணர்ச்சிகளைக் காட்டாமல் மௌனமாக வந்து அமர்ந்தான். அவனது கையைப் பிடித்துப் பார்த்தேன். சிவந்து போய் ரத்தம் கட்டியிருந்தது. அமல்ராஜைப் பார்க்க ரொம்பப் பாவமாக இருந்தது.

மறு நாள் காலையில் ஹெட்மாஸ்டர் ரூம் அல்லோலகல்லோலப்பட்டது. அமல்ராஜின் அப்பா அவரது உறவினர்களோடு வந்து, மகன் அடிபட்டதற்காக நீதி கேட்டுக்கொண்டு இருந்தார். அவனால் அ, ஆ என்றுகூட எழுத முடியவில்லை என்று சொன்ன தமிழய்யாவின் நியாயம் சுத்தமாக எடுபடவில்லை. ''அதைச் சொல்லிக் கொடுக்கத்தான் உங்ககிட்டே அனுப்புறேன்!'' என்று அமல் ராஜின் அப்பா அழும்பு செய்தார். ''ஆறாம் கிளாஸ்ல எப்படிங்க அ, ஆ, இ, ஈ கத்துக் கொடுக்க முடியும்?'' என்று ஐயாவின் கேள்வியை அவர்கள் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நிராகரித்தார் கள். கடைசியாக, தமிழய்யா நொந்துபோய் மன்னிப்பு கேட்டதாக நினைவு.

அன்று முதல் அமல்ராஜை எந்த வாத்தியாரும், டீச்சரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவன் பாட்டுக்கு வகுப்புக்கு வருவான். கடைசி வரிசையில் மந்தமாக உட்காருவான். ஏதோ எழுதுவான். பரீட்சைகூட அசோகர் கல்வெட்டு மொழியில்தான் எழுதுவான். எப்போதுமே எல்லா பேப்பரிலுமே மார்க் 'ஜீரோ’தான். ஓரிரு டீச்சர்கள் பரிதாபப்பட்டு ஐந்தோ, பத்தோ ரிவிஷன் டெஸ்டில் தந்ததும் உண்டு.

மற்ற பையன்களைப்போல விளையாட்டிலும் அமல்ராஜுக்கு ஆர்வம் இல்லை. அவனுடைய சைனா சில்க் வெள்ளைச் சட்டையில் மட்டும் ஒருநாள்கூட நான் அழுக்கைக் கண்டது இல்லை. பாட்டா செருப்புதான் அணிவான். கையில் கோல்டு கலர் வாட்ச் கட்டி இருப்பான். கழுத்தில் தடிமனான செயின். விரல்களில் மோதிரம் என்று மிருதங்க வித்வான் கெட்-அப்பில் அசத்துவான்.

தமிழய்யா அவனது எழுத்தை 'அசோகர் கல்வெட்டு’ என்று விமர்சித்து இருந்ததால், அவனை மற்ற மாணவர்களும் 'அசோகர் கல்வெட்டு’ என்றே பட்டப் பெயர் வைத்து அழைத்தோம். அமல்ராஜ் என்று அட்டெண்டென்ஸில் அழைப்பதோடு சரி. தமிழய்யா அட்டெண்டன்ஸ் எடுத்தால் அமல்ராஜ் என்று சொல்ல வேண்டிய நேரத்தில்கூட 'அசோகர் கல்வெட்டு’ என்றுதான் குசும்பாகச் சொல்வார். அமல்ராஜால் உடனே 'உள்ளேன் ஐயா’ சொல்ல முடியாது. கையை மட்டும் தூக்கிக் காட்டுவான்.

ஆறாம் வகுப்பில் 105 பேர் தேர்ச்சி பெற்றார்கள். வெற்றி வாய்ப்பை இழந்த ஒரே மாணவன் அசோகர் கல்வெட்டு மட்டுமே. காரணம், சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

நான் ஏழாம் வகுப்புக்குப் போன பின்பு, அசோகர் கல்வெட்டைப் பார்ப்பது குறைந்துபோனது. எப்போதாவது பார்த்தால் சினேகமாகச் சிரிப்பதோடு சரி. அவனுக்கு மூடு இருந்தால், பதிலுக்குச் சிரிப்பான். இல்லை என்றால், உர்ர் என்று போய்விடுவான்.

பள்ளிக் கட்டடம் கட்ட நிதி திரட்டிய போது அமல்ராஜின் அப்பா பெருத்த தொகை ஒன்றை அளித்தார் என்று கேள்விப்பட்டேன். வகுப்புகள் மாற மாற, அசோகர் கல்வெட்டையே சுத்தமாக மறந்துவிட்டோம். ஓரிரண்டு ஆண்டுகளில் பள்ளியைவிட்டு, அவன் நின்றுவிட்டான் என்று நினைக்கிறேன்.

ஃப்ளாஷ்பேக் ஓவர்

ன்னோடு ஆறாம் வகுப்பு படித்த அதே அமல்ராஜ்தான் இன்று காலை ஐயர் வீட்டில் தோட்ட வேலை செய்துகொண்டு இருந்தவன். அழுக்கான லுங்கி அணிந்து இருந்தான். சட்டை இல்லை. வியர்வையில் உடல் நனைந்து இருந்தது. உழைப்பின் பலனால் ஆர்ம்ஸ் கொஞ்சம் வெயிட்டாக இருந்ததுபோலத் தெரிந்தா லும், கூன் போட்ட முதுகால் சுத்தமாக அவன் தோற்றத்துக்குக் கம்பீரம் இல்லை.

''நான்தான்டா குமாரு... உங்கூட ஆறாவது படிச்சேனே?''

அவனால் நினைவுபடுத்திப் பார்க்க இயலவில்லை. பொத்தாம் பொதுவாகச் சிரித்தான். அவனுக்கு வயது இப்போது 33 அல்லது 34 ஆக இருக்கலாம். ஆனால், 45 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் இருக்கிறான்.

'ஞாபகமில்ல!''

'பரவாயில்லை அமல். நல்லா இருக்கியா?'

'ம்ம்ம்... நல்லாத்தான் இருக்கேன். கட்டட வேலை பார்க்குறேன். வேலை இல்லாத நாள்ல இதுமாதிரி தோட்ட வேலையும் செய்வேன்.'

முன்பைவிட இப்போது திக்கு கொஞ்சம் பரவாயில்லை. தொடர்ச்சியாகப் புரியும்படி பேசுகிறான்.
வேறு எதுவும் பேசாமல், ''வர்றேன்டா!'' என்று சொல்லிவிட்டு, விடைபெற்றேன். அவனுக்கு இப்போதாவது அவன் பெயரை எழுதத் தெரியுமா என்று கேட்க ஆவல். கேட்காமலேயே கிளம்பிவிட்டேன்.

அவன் அப்பா இருந்த இருப்புக்கு இவன் இந்த நிலைக்கு வந்திருக்க வேண்டி யதே இல்லை. விசாரித்துப் பார்த்தால் ஏதோ ஒரு கதை நிச்சயம் இருக்கும். அவன் தம்பி, தங்கைகள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டால், அந்தக் கதை யின் அவுட்லைன் கிடைத்துவிடும்.

 அமல்ராஜ் மாதிரி பசங்களைப் பார்க் கும்போதும், அதே கனம்!இடுப்பிலும் கையிலும் குழந்தையோடு... கூடப் படித்த கவிதா மாதிரி பெண்களை எங்காவது ரேஷன் கடையிலோ, மருத்துவமனையிலோ காண நேர்ந்தால்... எனக்கு லேசாக மனசு கனக்கும்.

(நன்றி : ஆனந்த விகடன் 20.07.2011 இதழ்)

20 ஜூலை, 2011

அதென்ன 4டி?

புகைப்படத்தில் இருக்கும் உருவங்கள் நகரும் என்பதை நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் சாத்தியமில்லாத விஷயமாக கருதிக் கொண்டிருந்தார்கள். அசையும் படங்களுக்கான ஃபிலிம் புரொஜெக்டரை கண்டுபிடித்த லூமியர் சகோதரர்கள் சிறு சிறு படங்களை உருவாக்கி மக்களுக்கு திரையிட்டுக் காட்டினார்கள். அப்போது இந்த சமாச்சாரத்துக்கு சினிமா என்று பெயர் வைக்கப்படவில்லை. Actualities (உண்மை நிகழ்வுகள்) என்று பெயர்.

The arrival of a train at Station என்கிற 46 நொடிகள் நீளமுள்ள திரைப்படத்தை (?), 1895ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ரிலீஸாக லூமியர் சகோக்கள் திரையிட்டபோது, பெரும் அமளி துமளி ஏற்பட்டது. திடீரென்று திரையில் தோன்றிய ரயில் பார்வையாளர்கள் மத்தியில் புகுந்து பெரும் விபத்து ஏற்பட்டு விடுமோவென்று அஞ்சி, ரசிகர்கள் சிதறி ஓடினார்கள்.இத்தனைக்கும் இவையெல்லாம் ஒலியற்ற மவுனப்படங்கள்.

இதுபோல மொத்தம் ஐந்து துண்டுப் படங்களை லூமியர்கள் உருவாக்கி திரும்பத் திரும்ப அவற்றைத் திரையிட்டு உலக ரசிகமகாஜனங்களை குஷிப்படுத்தினார்கள் என்று வரலாறு செப்புகிறது. சினிமாவை வெறும் செப்படி வித்தையாகதான் லூமியர்கள் பார்த்திருக்கிறார்கள். லூயிஸ் லூமியர் ஒருமுறை சொன்னார். “சினிமா என்பது ஒரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மட்டுமே. இதற்கு பெரிய எதிர்காலம் எதுவும் கிடையாது. இதை வைத்து காசெல்லாம் சம்பாதிக்க முடியாது”. லூமியரின் அறியாமையை விட்டு விடுவோம். அவர் பாவி. தெரியாமல் சொல்லிவிட்டார். பரலோகத்தில் இருக்கும் பிதா அவரை இரட்சிக்கட்டும்.

கருப்பு, வெள்ளையில் எடுக்கப்பட்டிருந்தாலும் லூமியரின் படங்கள் அனைத்துமே 2டி டெக்னாலஜிதான். அதாவது சினிமா பிறந்தபோதே 2டியாகதான் பிறந்தது. 2டி என்றால் டபுள் டைமென்ஷன். அதாவது திரையில் காட்சிகளின் நீள, அகலத்தை நீங்கள் உணர்ந்துக் கொள்ள முடியும். 1டியில் படமெடுக்க முடியுமாவென்று யாராவது கேமிராமேன்கள்தான் சொல்ல வேண்டும் (1டி என்று ஒன்று இருக்கிறதா என்ன?). நீளத்தை X என்று எடுத்துக் கொண்டால், அகலத்தை Y என்று புரிந்துகொள்ளுங்கள். XY = 2D என்று நீங்கள் இப்போது அறிந்து கொண்டால் போதுமானது.

அதற்குப் பிறகு ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று சினிமா வளரத் தொடங்கியது. பேசத் தொடங்கியது. தனக்கு வண்ணம் பூசிக்கொள்ளத் தொடங்கியது. திரையை அகலப்படுத்தி ஸ்கோப் ஆக்கிக் கொண்டது. அழவைத்தது. சிரிக்க வைத்தது. கிளுகிளுப்பூட்டியது. பாடியது. ஆடியது. அரசியல் பேசியது. புரட்சியை வெடிக்க வைத்தது. உண்மை சொன்னது. பொய் பேசியது. இன்னும் என்ன என்னவெல்லாமோ செய்தது.

ஒரு ஐம்பது ஆண்டுகள் கழிந்த நிலையில், அதாவது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிறைய பேர் வெட்டியாக இருந்தார்கள். உலகத்தையே மாற்றிக் காட்ட வேண்டும் என்று எல்லாத் துறைகளில் ஏதாவது ஒரு மாற்றத்தை ‘உல்டா’வாகவோ, அட்வான்ஸாகவோ செய்துக்கொண்டே இருந்தார்கள். பொழுதுபோகாத யாரோ ஒருவர் சினிமா ஏன் XY என்று இருபரிமாணத்திலேயே தெரியவேண்டும், மூன்றாவது பரிமாணத்தைக் கொண்டிருந்தாலும் இன்னும் reality கிடைக்குமேவென்று ஆசைப்பட்டார்.

ஆசை, தோசை, அப்பளம், வடை. சாதாரண காரியமா இது? அவர் ஆசைப்பட்ட மூன்றாவது பரிமாணம் Z. அதாவது perspective dimension. நீள அகலத்துக்கு இடையேயான depthஐ பார்வையாளனுக்கு காட்டுவது. நம்முடைய கண்கள் இயற்கையிலேயே 3டி என்பதால், நமக்கு ரோட்டில் நடந்து வரும் சிகப்புச்சேலை ஆண்டிக்கும், பஸ் ஸ்டேண்டில் பச்சை சுடிதார் போட்ட ஃபிகருக்கும் இடையிலான தூரம் பெர்ஸ்பெக்டிவ்வாக தெரிகிறது. ஒரு வெள்ளைத் திரையில் புரொஜெக்டர் மூலம் திரையிடப்படும் படத்தை 3டியாக காட்டுவதென்றால் நடக்கின்ற காரியமா? நடத்திக் காட்டினார்கள்.

என்ன ஒரு தொல்லை? முப்பரிமாணக் காட்சிகளை உணர ரசிகனுக்கு ஒரு எக்ஸ்ட்ரா கண்ணாடி தேவைப்பட்டது. படப்பிடிப்பின் போது கூடுதல் கேமிரா வைத்து அதே காட்சிகளை perspective depthல் படம் பிடிக்க வேண்டியிருந்தது. இது கொஞ்சம் காஸ்ட்லியான சமாச்சாரம். சீன் சரியில்லை ‘கட்’ என்று சொல்லிவிட்டால், ஃபிலிம் இருமடங்கு வேஸ்ட் ஆகும். திரையரங்கில் திரையிடும்போது பார்வையாளர்களுக்கு கண்ணாடி கொடுக்க வேண்டும். காட்சி முடியும்போது கண்ணாடியை பத்திரமாக திரும்பி வாங்கியாகவேண்டும். இரண்டு புரொஜெக்டர் ஒரே நேரத்தில் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். டைமிங் கொஞ்சம் மிஸ் ஆனாலும் படம் ஏடாகூடமாக தெரியும். இதுமாதிரி சின்ன சின்ன தொல்லைகளை தாண்டிப் பார்த்தால், 3டி ஓக்கேதான். XYZ பரிமாணத்தில் நம்மால் இன்று அவதாரை அசால்ட்டாக ரசிக்க முடிகிறதென்றால் பல்லாயிரத்து சொச்சம் பேர் பகல், இரவு பார்க்காமல் உழைத்திருக்கிறார்கள்.

1952ல் வெளியான ப்வானா டெவில் என்கிற திரைப்படம்தான் 3டி டெக்னாலஜியில் வெளிவந்த முதல் முழுநீளத் திரைப்படம் என்கிறார்கள். திரையில் பாயும் சிங்கம், எங்கே நம்மையும் கடித்து, கிடித்து வைத்துவிடுமோவென்று முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் பலரும் தப்பியோட வசதியாக கதவுக்கு அருகிலிருந்த சீட்டில் உட்கார்ந்துக் கொள்வார்கள்.

ஆனாலும் 3டியை திரையிடுவதற்கு ஏகத்துக்கும் மெனக்கெட வேண்டியிருந்தது. இதற்கு செலவாகும் கூடுதல் தொகையை ரசிகர்கள் தலையில்தான் கட்ட வேண்டியிருந்தது. மொக்கைப் படங்கள் சிலவும் 3டியில் வந்து தொலைத்ததால், அதிக கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் வெறுத்துப் போனார்கள். இவ்வாறாக 3டியின் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

80களில் ஐமேக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் ஏதாவது வித்தியாசமாக செய்து மக்களை கவரவேண்டுமே என்கிற ஆர்வத்தில் மீண்டும் 3டியை தூசுதட்டி எடுத்தது. அந்த காலக்கட்டத்தில் தான் இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான் மலையாளத்தில் எடுக்கப்பட்டு, இந்தியாவின் பலமொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு சக்கைப்போடு போட்டது. தமிழிலும் மொக்கையாக 3டி படங்கள் எடுக்கப்பட்டன. தமிழின் முதல் 3டி படம் ஒரு விஜயகாந்த் படம் (படத்தின் டைட்டில் அன்னைபூமி என்று நினைவு. அப்பா ஜெயலட்சுமி தியேட்டருக்கு அழைத்துப்போய் காண்பித்தார்). 3டியில் விஜயகாந்த் காலை நம் முகத்துக்கு மேலே உயர்த்தி உதைக்க, படம் பார்த்த ஒவ்வொரு ரசிகனின் மூக்கிலும் ரத்தம் வந்த எஃபெக்ட். இந்த பீதியை எல்லாம் தாங்க முடியாததால் இந்தியாவில் 3டி அவ்வளவு பெரிய வரவேற்பை பெறவில்லை.

மீண்டும் 2003ல் கோஸ்ட்ஸ் ஆஃப் தி அபிஸ் மூலமாக 3டி ஐமேக்ஸில் ஜேம்ஸ் கேமரூன் கலக்கத் தொடங்க, அன்று பீடித்த 3டி ஃபீவர் இன்றுவரை உலகுக்கு ஓயவில்லை. இப்போதெல்லாம் ஹாலிவுட்டில் இயக்குனர்கள் கதை சொல்லும்போதே, “ஹீரோ வீசுற கத்தி, அப்படியே சொய்ங்குன்னு பயங்கர சவுண்டோட போயி ஆடியன்ஸு நெஞ்சுலே குத்துது சார்” என்றுதான் ஆரம்பிக்கிறார்களாம்.

இந்தப் போக்கினை ஜேம்ஸ் கேமரூனே கண்டிக்கிறார். “கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் டாய் ஸ்டோரி வந்து பெரும் வெற்றி கண்டவுடன், தொடர்ச்சியாக பத்து மொக்கைப் படங்கள் மோசமான கிராஃபிக்ஸோடு வெளியாகி மக்களை நோகடித்தது. இப்போது 3டி கதையும் அதேதான். தேவைப்படுகிறதோ இல்லையோ. ஆளாளுக்கு 3டியில் படமெடுத்து, 3டி மீது மக்களுக்கு இருக்கும் பிரமிப்பினை ஒழித்துத் தொலைக்கிறார்கள்” என்று காரமாக சொல்லியிருக்கிறார்.

இந்த கந்தாயத்தை எல்லாம் விட்டுவிடுவோம். அடுத்து 4டி டெக்னாலஜி வருகிறதாம். உலகின் முதல் 4டி டெக்னாலஜி திரைப்படமான ஸ்பை கிட்ஸ்-4 ஆகஸ்ட் 19 அன்று உலகெங்கும் வெளியாகிறதாம். XYZ ஓக்கே. அதற்கப்புறம் ஆங்கிலத்தில் வார்த்தையே இல்லையே? நீள, அகலம், perspective ஆகிய மூன்றினையும் தாண்டி இன்னொரு பரிமாணமும் இருக்கிறதா என்று நிறையப்பேர் குழம்பிப் போய் திரிகிறார்கள். நாலாவது பரிமாணம் கண்ணுக்கு அல்ல, மூக்குக்கு. ஆமாம், படம் பார்க்கும்போது காட்சிகளுக்கு ஏற்ப வாசனைகள் தோன்றுமாம். அதாவது நாயகன் நாயகியின் கழுத்தில் மூக்கை வைத்து மோப்பம் பிடித்து காதல் செய்தால், நாயகி உபயோகித்திருக்கும் குட்டிகுரா பவுடரின் வாசனை உங்கள் மூக்கைத் துளைக்கும். எப்பூடி? இந்த தொழில்நுட்பத்தை அரோமா ஸ்கோப் என்கிறார்கள்.

இது எப்படி சாத்தியம்?

படம் பார்க்க உள்ளே செல்லும்போது 3டி கண்ணாடி தருகிறார்கள் இல்லையா? கூடவே ஒரு அட்டையையும் தந்து விடுவார்கள். அந்த அட்டையில் ஒன்று முதல் எட்டு எண்கள் வரை பொறித்திருக்கும். குறிப்பிட்ட காட்சியில் உங்கள் மூக்கை குறிவைத்து, இயக்குனர் ஒரு காட்சியை வைத்திருந்தால், திரையில் ஒரு எண் தோன்றும். உங்கள் அட்டையில் அதே எண்ணை நீங்கள் தேய்த்துவிட்டால், காட்சிக்கேற்ற வாசனை பரவும். உங்களோடு படம் பார்க்கும் அத்தனை பேரும் அட்டையை அதே நேரத்தில் தேய், தேயென்று தேய்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதால், அரங்கே வாசனையில் அல்லோல கல்லோலப்படும்.

குமுதம் இதழ் ஒரு தீபாவளி ஸ்பெஷலில், இதே டெக்னிக்கை பிரிண்டிங்கில் கொண்டு வந்தது. ஒரு ரோஜாப்பூ படம் அச்சடிக்கப்பட்டிருக்கும். அதை விரலில் தேய்த்து முகந்துப் பார்த்தால், ரோஜா வாசனை வரும். அடுத்த வாரம் ஒரு வாசகர் கடிதம் எழுதியிருந்தார். ரியல் ரோஜாவுக்கு பதிலாக, நடிகை ரோஜா படத்தை தேய்த்து முகர்ந்துப் பார்க்குமாறு செய்திருக்கலாமேவென்று.

தமிழகத்தில் எத்தனை தியேட்டர்களில் இந்த 4டி இருக்குமென்று சரியாகத் தெரியவில்லை. நம் மக்கள் எண்ணை மாற்றித் தேய்த்து குளறுபடி பண்ணாமல் இருப்பார்கள் என்பதற்கும் நிச்சயம் ஏதுமில்லை. இதற்காக தியேட்டர்காரர்கள் எவ்வளவு துட்டு எக்ஸ்ட்ரா வாங்கப் போகிறார்கள் என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.

கட்டுரையை முடிக்கும் முன்னர் இன்னொரு முக்கியமான தகவல். இந்த 4டி வாசனை டெக்னாலஜியை ஏதோ புதியதாக இன்றுதான் கண்டுபிடித்ததாக ஹாலிவுட்காரர்கள் ஆணவத்தில் ஆடுகிறார்கள். என்னவோ ராபர்ட் ரோட்ரிக்யூஸால் மட்டும்தான் இப்படியெல்லாம் சிந்திக்க முடியும் என்றெல்லாம் அலட்டிக் கொள்கிறார்கள்.

ஹாலிவுட் அல்பங்களே! இதே டெக்னாலஜியை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எங்கள் ஊர் புதுமை இயக்குனர், சகலகலா வல்லவர், பன்முக படைப்பாளி பாபுகணேஷ் முயற்சித்து, கின்னஸ் லெவலுக்கு போய்விட்டார் என்பதை இக்கட்டுரை வாயிலாக பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். தி.நகரின் பாடாவதி தியேட்டரான கிருஷ்ணவேணியிலே கூட இந்த அற்புதத்தை பாபுகணேஷ் நிகழ்த்திக் காட்டியதை வரலாறு மறந்துவிடாது. அவர் இயக்கிய சூப்பர் டூப்பர் மொக்கைப் படமான ‘நானே வருவேன்’ படத்தில் பேய் வரும் பாடல் காட்சியில் மல்லிகைப்பூ மணம் கும்மென்று தியேட்டரில் வீசும். ஹாலிவுட்காரர்களுக்கு 4டி தான் தெரியும். பாபுகணேஷுக்கு 5டியே தெரியும். பேய் வரும் காட்சிகளில் மல்லிகைப்பூ வாசனை மட்டுமில்லை. தியேட்டருக்குள்ளே வெண்புகையும் பரவும் வகையில் அப்படத்தின் தொழில்நுட்பம், சினிமாவை நாலு கால் பாய்ச்சலில் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது. ஹீரோயின் வகிதாவும், பெரும் ரிஸ்க் எடுத்து, முழு நிர்வாணமாகவும் நடித்திருந்தார் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்துவிடக் கூடாது.

இந்த 4டி விஷயத்தில் ஹாலிவுட்டுக்கு முன்னோடி நம்ம கோலிவுட்டுதான் என்பதை உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரும் நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக் கொள்ளலாம்.