16 ஜூலை, 2007

தினமலர் ரமேஷ் சார்!

"17 வயசு தான் ஆவுது. இந்த வயசுலே படிக்காம ஏன் வேலைக்கு வர்றே?"

"இல்லே சார். +2 பெயில் ஆயிட்டேன். டைப்ரைட்டிங் க்ளாஸ், கம்ப்யூட்டர் க்ளாஸ், ஸ்பீக்கிங் இங்கிலிஷ், எல்லாம் போறேன். அக்டோபர்லே எக்ஸாமும் எழுதறேன். இருந்தாலும் வீட்டிலேயே எப்பவும் தண்டச்சோறு மாதிரி இருக்குறமாதிரி பீல் பண்ணுறேன். ஏதாவது சம்பாதிக்கணும்னு தோணுது சார். அப்பாவோட சம்பாதியத்துலே சாப்புடுறதுக்கு செல்ப்-ரெஸ்பெக்ட் எடம் கொடுக்கலை. வேலை செஞ்சுக்கிட்டே படிக்கலாம்ணு முடிவெடுத்துருக்கேன்"

"வெரிகுட். ஆனாலும் பத்திரிகை வேலைங்கிறது அவ்வளவு சுலபம் இல்லே. எக்ஸ்பீரியன்ஸ், எலிஜிபிலிட்டி எதுவும் இல்லேன்னாலும் உன்னோட செல்ப் கான்பிடன்ஸ்காக வேலைகொடுக்கறேன். ஹார்ட் ஒர்க் பண்ணனும். ஒழுங்கா கொடுத்த வேலையை செஞ்சீன்னா சீக்கிரமா லைப்லே முன்னுக்கு வந்துடுவே!"

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவம் இது. வேலை கொடுத்தவர் தினமலர் ரமேஷ் சார். +2 பெயில் ஆகிவிட்டு வேலை கேட்டவன் நான். இச்சம்பவம் ரமேஷ் சாருக்கு நினைவில்லாமல் இருக்கலாம். ஏனென்றால் என்னைப் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியவர் அவர். ஒவ்வொருவரையும் நினைவில் வைத்திருப்பாரா என்ன? என்னுடைய இன்றைய வாழ்க்கைக்கு "அன்னா, ஆவன்னா" எழுதியவர் அவர்.

* - * - * - * -

"என்னடா கண்ணா?"

"சார். தினமும் நைட் ஷிப்ட் வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போறேன். சரியா சாப்பிடமுடியலை. வெயிட் ரொம்பவும் லாஸ் ஆயிடிச்சி. வேலைக்கு போகவேணாம்னு வீட்டுலே சொல்றாங்க"

"நைட்ஷிப்ட் தானே உனக்கு பிரச்சினை? என்னோட வாரமலருக்கு வந்துடேன். நீ நல்லா ஒர்க் பண்றதா போர்மேன் சொன்னாரு. நாளைலேர்ந்து உனக்கு டே ஷிப்ட் மட்டும் தான். ஓகேவா?"

"ரொம்ப தேங்க்ஸ் சார்!"

* - * - * - * -

சனிக்கிழமை காலை 10 மணி.

"சார்! இன்னைக்கு விஸ்வநாதன் இல்லே. லீவ் போட்டுட்டாரு. அவரு கொழந்தைக்கு உடம்பு சரியில்லையாம்"

"சரி பரவாயில்லை. மேட்டர் இந்த வாரம் வேணாம். வேற ஏதாவது போட்டு லே-அவுட்டை முடிச்சிடுங்க"

"இல்லே சார். கிச்சான்னு பையன் ஒருத்தன் இருக்கான். நல்லா சுறுசுறுப்பா வேலை பார்ப்பான்"

"யாரு அந்த பொடியனா? வரச்சொல்லு"

சிறிது நேரம் கழித்து,

"வெரிகுட். ஒரு மிஸ்டேக் கூட இல்லை. கமா, புல்ஸ்டாப், கொட்டேஷன் எல்லாம் பக்காவா இருக்கு. கல்விமலருக்கு ஒரு ஆள் வேணும்னு கேட்டுக்கிட்டிருந்தாங்க. இவனைப் போட்டுருங்க"

* - * - * - * -

ரமேஷ் சார் கேள்வி பதிலும், பா.கே.ப. எழுதும் அழகே தனி. சனிக்கிழமை காலை தான் எழுத ஆரம்பிப்பார். தனித்தனி தாளாக எழுதுவார். ஒவ்வொரு தாள் எழுதிமுடித்ததும் கம்போஸிங்குக்கு வந்துவிடும். கையெழுத்து மணிமணியாக இருக்கும். இரண்டு மணிக்கு முன்பாக முடித்துவிடுவார். அவர் எழுதும் பகுதிகளுக்கான ப்ரூப், லே-அவுட் ஆகியவற்றை ரொம்பவும் கவனமாக பார்ப்பார். பயணக்கட்டுரைகளுக்கு புதுவடிவம் கொடுத்தது அவரது சாதனை. ஒவ்வொரு வாரமும் ஒரு தொடர்கதைக்கான சஸ்பென்ஸை அவரது தொடர்கட்டுரைகளின் இறுதியில் பார்க்கலாம்.

தொடர்களை அவர் எப்படித்தான் தேர்ந்தெடுப்பாரோ தெரியாது? வாரமலரில் வந்த தொடர்கள் எல்லாமே ஒரு நேரத்தில் சூப்பர் ஹிட். "கலையுலகில் கருணாநிதி" என்ற தொடர் நான் விரும்பிப் படித்த ஒன்று. அதே நேரத்தில் ராஜேஷ்குமார், ஆர்னிகாநாசர் போன்ற எழுத்தாளர்களின் தொடர்கதைகளும் கலக்கலாக இருக்கும்.

அவரால் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அனேகம் பேர். ஆர்னிகாநாசர் போன்ற எழுத்தாளர்களை லைம்லைட்டுக்கு வரவழைத்த பெருமை ரமேஷ் சாருக்கே உண்டு. அவரது அலுவலகத்தில் தான் பல எழுத்தாளர்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இவர் தான் ஜே.டி.ஆரா? இவர்தான் ஜி.ஏ.வா? என்று அவருடைய நண்பர்களை கண்டு வாய்பிளந்து நிற்பேன்.

முதன்முதலாக நாளிதழ்களுக்கு இணைப்பு என்ற கான்செப்ட்டை தமிழுக்கு கொண்டு வந்தவர் ரமேஷ் சார். சிறுவயதில் அவரது கைவண்ணத்தில் உருவான சிறுவர்மலரை விரும்பிப் படித்தவன் அவருடனேயே பணியாற்றுவேன் என்று நினைத்துகூட பார்த்ததில்லை.

ரமேஷ் சார் கோக்கோ, பெப்ஸியோ அருந்தி நான் பார்த்ததில்லை. இளநீர் தான் அருந்துவார். அவருக்கு "பிளட் ரெட்" கலர் ரொம்பவும் பிடிக்கும். நான் பணியாற்றிய காலத்தில் அவர் வைத்திருந்த கார்கள் எல்லாம் பிளட் ரெட் நிறத்திலேயே இருக்கும். எப்பவும் ரமேஷ் சார் செல்ப் டிரைவிங் தான். டிரைவர் ஓட்டி அவர் அமர்ந்து நான் பார்த்ததேயில்லை.

மிகக்கடுமையான உழைப்பாளி அவர். இரவு நேரங்களில் அண்ணாசாலை அலுவகத்துக்கு திக்விஜயம் செய்து வேலை ஒழுங்காக ஓடுகிறதா என்று பார்ப்பார்.

* - * - * - * -

சமீபத்தில் அவர் குறித்து வந்திருக்கும் சர்ச்சை என்னை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழ் வலையுலகைப் போன்றே பத்திரிகையுலகமும் கேடுகெட்டு போய்க்கொண்டிருக்கிறது. மதுரை வன்முறை சம்பவங்களின் போது தினமலரின் பேனர் நியூசாக "பெருச்சாளிகள் தொல்லை" வந்திருந்தது.

தற்போது பெண் பத்திரிகையாளர் உமாவின் குற்றச்சாட்டுக்குப் பிறகு தினகரனில் "பெருச்சாளிகள் ஊழல் அம்பலம்" என்று செய்தி வருகிறது. பத்திரிகையாளர்கள் தங்கள் சகப்போட்டியாளர்களை இதுபோல சந்தி சிரிக்க வைப்பதென்பது "சொந்தச் செலவில் சூனியம்" வைத்துக் கொள்வதைப் போன்றதே. பத்திரிகையாளர்களுக்கு என்று மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரை அவர்களாகவே கெடுத்துக் கொள்ளும் மோசமான சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு முன்னாள் பெண் நிருபர் தினமலர் நிர்வாகி மீது புகார் கொடுத்திருக்கிறார். அவ்வளவு தான். அந்த குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா என்று நிரூபணமாகாத சூழ்நிலையில் புனைபெயரில் இயங்கிவரும் ஒரு பத்திரிகையாளர் மீது மோசமான வண்ணத்தில் வெளிச்சம் போட்டு அவரது படத்தையும் பிரசுரித்திருப்பது கேவலமான முன்னுதாரணம். இந்த முன்னுதாரணத்துக்கு தினகரன் நிறுவனம் பிள்ளையார் சுழி போட்டிருப்பது வருந்தத்தக்க விஷயம்.

4 மார்ச், 2007

வாங்க 3க்கு போலாம்!

விளம்பரத் துறையில் “Teaser” என்ற வார்த்தை மிக பிரபலமானது. வாசகர்களை சீண்டும் வாசகங்கள் கொண்ட விளம்பரங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு அந்த விளம்பரம் என்ன சொல்ல வருகிறது? எந்தப் பொருளை விற்க வருகிறது என்று சஸ்பென்ஸ் கொடுக்கும் விளம்பரங்களை Teaser Ad என்பார்கள். தமிழகத்தில் அனைவருக்கும் தெரிந்த மிகப் பிரபலமான Teaser ad “புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?” என்பதே.
சமீபத்தில் (2005ல்) தமிழகத்தில் பிரபலமடைந்த இன்னொரு Teaser Adம் உண்டு. அது “சண்டேன்னா ரெண்டு” என்ற குறும்பான ஸ்லோகனைக் கொண்ட தினமலருக்கான விளம்பரம். முதல் மூன்று வாரங்களுக்கு வெவ்வேறான சூழ்நிலைகளில், வெவ்வேறான மனிதர்களைக் கொண்டு “சண்டேன்னா ரெண்டு” என்ற வாசகத்துடன் கூடிய விளம்பரங்கள் மட்டுமே வெளிவந்து மக்களை வெறுப்பேற்றியது. இது எய்ட்சு எதிர்ப்புக்கான விளம்பரம் என்றெல்லாம் ஒருவாறாக யூகித்த மக்கள் கடைசியில் அது தினமலர் விளம்பரம் என்றதுமே வெறுத்துப் போனார்கள்.

ஆரோக்கியா பாலின் “அர்ஜீனோட அம்மா யாரு?” Teaser விளம்பரமும் நல்ல கவனம் பெற்ற விளம்பரங்களில் ஒன்று.

மக்களை மட்டுமே Tease செய்யாமல் தங்களது போட்டி நிறுவனங்களை Tease செய்து விளம்பரங்கள் வெளியிடுவதும் உண்டு. கோகோ கோலா – பெப்சி இரு நிறுவனங்களுக்கிடையே ஆன Teaser விளம்பரங்கள் மிகப் பிரபலம். சுமார் 80 ஆண்டுகளாக இரு நிறுவனங்களும் மாறி மாறி மற்றொன்றை கிண்டல் செய்து விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. கோகோ கோலா நிறுவனம் பெப்சியை விளம்பரம் செய்து வெறுப்பேற்றுவதற்கென்றே Sprite என்ற புதிய தயாரிப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியது. Sprite நிறுவனத்தில் “மசால் வடை ப்ரீ மாமே” விளம்பரம் உங்களுக்கு நினைவிருக்கலாம். பெப்சி இலவசப் பரிகள் தந்துக் கொண்டிருந்த நேரத்தில் பெப்சியை வெறுப்பேற்றவே Spriteக்கு அதுபோன்ற விளம்பரங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆயினும் சும்மா கும்மிக்காக உருவாக்கப்பட்ட Sprite என்ற தயாரிப்பு Barகளில் மிக்ஸிங்குக்கு பக்காவாக செட் ஆகிறது என்ற காரணத்தால் கோக்குமாக்காக ஹிட்டாகி கோகா கோலா நிர்வாகத்தையே ஆச்சரியப்படுத்தியது.

அயல்நாடுகளில் தங்களது போட்டி நிறுவனங்களை கிண்டல் செய்து விளம்பரங்கள் வெளியிடுவது சகஜம். எடக்கு முடக்கான சட்டங்களை கொண்ட இந்தியாவில் அந்த அளவுக்கெல்லாம் செல்ல முடியாது. ஓரளவு லைட்டாக நக்கலடித்து விளம்பரங்களை வெளியிடலாம். பொதுவாக இங்கே வெளியிடப்படும் விளம்பரங்கள் சர்வே முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தங்களது சகப் போட்டியாளர் தங்களை விட மட்டம் தான் என்று Comparison Chartகளை காட்டி விளம்பரம் போடுவார்கள்.

உதாரணத்திற்கு இங்கே தினமலர் தான் நெ.1 என்று காட்டுவதற்காக ஏராளமான விளம்பரங்களைப் போடும். காலையில் 4 மணிக்கு முன்பே பேப்பர் படிக்கிறவர்களில் 100க்கு 80 பேர் தினமலர் தான் படிக்கிறார்கள். அதிகாலையில் கக்கூசில் தம்மடிக்கும் 100க்கு 95 பேர் தினமலர் தான் படிக்கிறார்கள் என்ற ரேஞ்சுக்கு Category பிரித்து போட்டு தான் தான் நெ.1 என்று விளம்பரங்கள் வெளியிடுவது தினமலருக்கு வாடிக்கை. தினத்தந்தியோ Categoryகளை குறிப்பிடாமல் “மொத்தமா யாருய்யா நெ.1?” என்று கேட்டு தினத்தந்தி நெ.1 என்பதற்கான ஆதாரங்களை வெளியிடும். தினமலர் – தினத்தந்தி விளம்பரப் போர் கடந்த 15 ஆண்டுகாலமாக மிக மிக சுவாரஸ்யமாக நடந்து வருவது எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.

பொதுவாக எந்த Teaser Campaign வரும்போதும் நண்பர்கள் என்னைத் தொடர்புகொண்டு “எந்த கம்பெனி? எந்த Product?” என்று துளைத்தெடுப்பார்கள். நான் விளம்பர ஏஜென்ஸிகளில் வேலை செய்வதால் சுலபமாக சொல்லிவிடுவேன் என்பது அவர்கள் எண்ணம். நானும் பல நேரங்களில் யூகித்தே சொல்லவேண்டியிருக்கிறது. Teaser Ad வெளியிடும் விளம்பர நிறுவனங்கள் இந்த விடயத்தில் மிக மிக கவனமாக செயல்படுவார்கள்.

புள்ளிராஜா Campaign வந்தபோதும் சரி, ஆரோக்கியா, தினமலர் Teaser Campaignகளின் போதும் சரி எனது கணிப்பு சரியாகவே இருந்தது. இப்போது புதிய தலைவலி! ஒரு நண்பன் தொலைபேசி, “மச்சான் அது என்னடா 3க்கு போலாம் வாங்க?” என்றான். எனக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. அதன்பின்னரே கொஞ்சம் விளக்கினான். சிலநாட்களாக விஜய் தொலைக்காட்சியில் “வாங்க 3க்கு போலாம்” என்று ஒரு விளம்பரம் வருகிறது. அது எந்த கம்பெனி? என்ன புராடக்ட்? என்று கொஞ்சம் தெளிவாக்கினான்.

நான் தொலைக்காட்சிகளை அதிகமாக பார்ப்பதில்லை என்பதால் ஆரம்பத்தில் கொஞ்சம் புரியவில்லை. நண்பன் குறிப்பிட்ட Teaser விளம்பரங்களை சற்று உற்றுநோக்க ஆரம்பித்தேன். இந்த விளம்பரங்களுக்கு பின்னால் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் இரண்டு ஒன்றுக்கொன்று அடித்துக் கொள்வது அதன் பின்னரே தெரியவந்தது.

சுமார் 14 ஆண்டுகளாக தமிழகத்தின் நெ.1 தனியார் தொலைக்காட்சியாக விளங்கும் சன் தொலைக்காட்சிக்கு சவால் விடும் தொடர் விளம்பரங்களே “வாங்க 3க்கு போலாம்” என்பது. (இது என் யூகம் மட்டுமே, வேறு கம்பெனி விளம்பரமாக இருந்தால் என்னை அடிச்சிடாதீங்க). சன் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து அரைத்த மாவு நிகழ்ச்சிகளே 14 ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஆனால் விஜய் தொலைக்காட்சியோ புதிது புதிதாக சிந்தித்து Innovative ஆன நிகழ்ச்சிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

விஜய் தொலைக்காட்சி சமீபத்தில் அறிமுகப்படுத்திய “கலக்கப் போவது யாரு” என்ற நிகழ்ச்சி பெரும் வெற்றி அடைந்தது. மக்களின் பெருவாரியான வரவேற்பைத் தொடர்ந்து முடிந்துவிட்ட அந்நிகழ்ச்சியை “கலக்கப்போவது யாரு-2” என்றும் சில மாதங்களுக்கு நடத்தி முடித்தது விஜய் தொலைக்காட்சி.

இந்நிலையில் மெகாசீரியல் மாயையிலிருந்து திடீரென்று முழித்துக் கொண்ட சன் தொலைக்காட்சி “கலக்கப் போவது யாரு” நிகழ்ச்சியில் பங்கு கொண்ட டீமை அப்படியே அழைத்து (துட்டா, மிரட்டலா தெரியவில்லை) விஜய் தொலைக்காட்சியை “பிட்” அடித்து “அசத்தப் போவது யாரு?” என்ற நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்திருக்கிறது.

சன் தொலைக்காட்சியின் இந்த கேவலமான போக்கை விமர்சித்தே விஜய் தொலைக்காட்சி சன்னை சீண்டும் வகையில் “3க்கு போலாம் வாங்க” “3 தான் ஒரிஜினல்” என்றெல்லாம் சீண்டல் விளம்பரங்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. “சன்” “மூன்” மேட்டர் புரிகிறதா? “3” என்பது வேறொன்றும் இல்லை. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் 3-ம் பாகத்தையே விஜய் “3” என்று குறிப்பிடுகிறது. இதில் சன்னுக்கு எதிராக “மூன்” என்ற வார்த்தை ஜாலத்தையும் உள்குத்தாக வைத்திருக்கிறது.

அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக சன் தொலைக்காட்சி தனக்குத் தானே சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதோ என்று நினைக்கிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் Trend setter என்ற பலமான இமேஜை தக்கவைத்துக் கொண்டிருந்த சன் தொலைக்காட்சிக்கு இதெல்லாம் தேவைதானா என்று தோன்றுகிறது. மக்களிடையே இன்று சன் தொலைக்காட்சி இந்த கேவலமான போக்கின் காரணமாக ஜோக்கர் ரேஞ்சுக்கு காட்சியளிக்கிறது.

மெகாத் தொடர்களாலும், மகா அறுவை விளையாட்டுகளாலும் தொலைக்காட்சி நேயர்களை சாகடித்துக் கொண்டிருக்கும் ராதிகாவை சன் தொலைக்காட்சியை விட்டே துரத்தினால் தான் நிலைமை சீர்படும் என்ற நிலையிலும் இன்னமும் அவரை வைத்து சன் டிவி மக்களை அறுத்துக் கொண்டிருப்பது ஏனோ தெரியவில்லை.

சன் டிவி பழைய மொக்கை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களை துரத்தியடித்து விட்டு இளையத் தலைமுறையினருக்கு வாய்ப்பளித்து நிகழ்ச்சிகளை மேம்படுத்த வேண்டும். இல்லையேல் மக்கள் சன் தொலைக்காட்சியை இன்னொரு தூர்தர்ஷனாகத் தான் எதிர்காலத்தில் பாவிப்பார்கள்.

12 பிப்ரவரி, 2007

ஓரம் போ


தமிழுக்கு புதிய, வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கிய புதுமுக இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரிக்கு முதலில் கைகொடுத்து விட்டு விமர்சனத்தை ஆரம்பிக்கிறேன். இதற்கு முன்பாக வந்த 'ஆட்டோ ஓட்டுனர்களை' ஹீரோக்களாகவும், பாத்திரங்களாகவும் வந்தப் படங்களை காட்டிலும் நிஜவாழ்வுக்கு மிக நெருங்கி வந்த படம் இது. இதுபோன்ற கதைக்களத்தை சரண் போன்ற கிரியேட்டிவ் டைரக்டர்கள் மட்டுமே சிந்தித்து, தைரியமாக படமாக்க இயலும். கையில் வெயிட்டான பட்ஜெட் இருந்தால் நிச்சயம் இந்த இரட்டை இயக்குனர்கள் கலக்குவார்கள் என்ற நம்பிக்கை வருகிறது.

சன் ஆப் கன், பிகிலு இருவரும் சிட்டியில் பெரிய மெக்கானிக்குகள், தொழில்முறை போட்டியாளர்கள். இருவருக்குமிடையே அடிக்கடி தங்கள் பலத்தை காட்டிக்கொள்ள ஆட்டோ ரேஸ் நடக்கும். பிகிலிடம் ஷார்ப்பான ஆட்டோ ட்ரைவரான ஹீரோ இருப்பதால் இடைவேளை வரை ஜெயிக்கிறார். இடைவேளைக்குப் பின்பு தொடர்ந்து பல காரணங்களால் தோற்கிறார். க்ளைமேக்ஸ் ரேஸிலும் தோற்பது குறிப்பிடத்தக்கது. ரேஸில் தோற்கும் ஹீரோவும், பிகிலும் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள். இடையில் சுவாரஸ்யத்தைக் கூட்ட கருப்பு முத்து கடத்தல், பிரியாணி கடை ஹீரோயின், மும்பை அண்ணாச்சி என்று தோரணம் கட்டுகிறார்கள். எந்த கேரக்டருமே ரொம்ப சீரியஸாக இல்லாமல் எல்லோரும் கோமாளிகளே என்பதால் புன்னகைத்துக் கொண்டே படம் பார்க்க முடிகிறது.

ஹீரோ என்றால் ரொம்பவும் நல்லவன், வில்லன் என்றால் ரொம்பவும் கெட்டவன் என்ற வழமையான பொதுப்புத்தியை காட்டாமல் எல்லோரும் நார்மலான மனிதர்களே என்று காட்டியிருப்பது சிறப்பு. ஆர்யா ஆட்டோ ட்ரைவர்களின் பாடி லேங்குவேஜை அனாயசமாக காட்டியிருக்கிறார். கொஞ்சம் சிவப்பாக இருப்பது தான் மைனஸ் பாயிண்ட். பிகிலு கேரக்டரில் மலையாள லால் கண்களாலேயே நடித்து மனதை அள்ளுகிறார்.

ஜி.எஸ்.டி. ரோட்டில் பெரிய பெட்டிங்குடன் நடக்கும் ஆட்டோ ரேஸ், நைட்டு ரேஸ் என்று இதுவரை தமிழ் சினிமாவும் காட்டாத பக்கங்களை காட்டியிருப்பது சுவாரஸ்யம். ஆர்யாவுக்கு எதிராக ஆட்டோ ஓட்டும் ரேஸ் ஓட்டுனரான 'கோழி'யின் பேஸ்கட் சூப்பர்.

பிரியாணி கடையில் வேலை பார்க்கும் ஹீரோயின் பூஜா, தொடைக்கறி மாதிரி 'கிண்ணென்று' இருக்கிறார். டல் மேக்-அப், கண்ணை உறுத்தாத காஸ்ட்யூம்களில் மிளிர்கிறார். அவருக்கும், ஆர்யாவுக்கும் சமோசாவுக்குள் சொருகப்பட்ட மசாலா மாதிரி கெமிஸ்ட்ரி கலக்கலாக ஒர்க்-அவுட் ஆகிறது.

படத்தின் டைட்டில் காட்சி அருமை. Hulk படபாணியில் எடிட் செய்யப்பட்டிருக்கிறது. டைட்டில் இசையும் சூப்பர். ஆட்டோ ட்ரைவர்களின் வாழ்க்கை தான் கதை என்பதால் படம் முழுக்க சென்னையின் எதிர் அழகியல் சொல்லாடல்கள் சென்சார் கண்ணுக்கு மண்ணைத் தூவி, அள்ளி தெளிக்கப்பட்டிருக்கிறது. ஆடியன்ஸ் இவர்கள் தான் என்று இயக்குனர்கள் முன்முடிவோடு களமிறங்கி இருப்பதால் கிளுகிளு காட்சிகள் ஏராளம். கிட்டத்தட்ட மேட்டர் படம் லெவலுக்கு சில காட்சிகள் உண்டு.

ஜி.வி.ப்ரகாஷின் இசையமைப்பில் 'இதென்ன மாயம்?' பாடல் இதம், விஜய டி.ஆர். வாய்ஸில் கன் கன் கணபதி கலக்கல் காக்டெயில். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக க்ளைமேக்ஸ் பாடலான 'முயலுக்கும், ஆமைக்கும் ரேஸு.. ஜிஞ்சிக்காம்.. ஜிஞ்சிக்காம்.. ஜிக்காம்' அமர்க்களம். சிறுவயதில் பள்ளியில் பாடிய 'ரஜினிக்கும், கமலுக்கும் சண்டை... அதில் கிழிஞ்சது...' பாட்டு நினைவுக்கு வருகிறது.

எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்ட படங்கள் ஏமாற்றங்களை தரும் நிலையில், 'ஓரம் போ' மாதிரியான சோட்டா படங்கள் அசத்துகின்றன.

கதையெல்லாம் லூசுல விடு மச்சி... ரெண்டு மணிநேர டைம்பாஸ் கேரண்டி..

23 அக்டோபர், 2006

மரணதண்டனையை ஆதரிப்பவர்கள் காட்டுமிராண்டிகள்!

"ஒவ்வொரு புனிதனுக்கும் ஒரு இறந்தகாலம் உண்டு, ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு" - இதை இத்தருணத்தில் நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முகம்மது அப்ஸல் குறித்த எனது முந்தையப் பதிவு ஏற்படுத்தியதின் தாக்கமாக இந்த இரண்டாவது பதிப்பை சமர்ப்பிக்கிறேன். இந்தியாவின் தலைசிறந்த மனித உரிமைப் போராளியும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான பெருமதிப்பிற்குரிய வி.ஆர். கிருஷ்ணய்யர் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியொன்றின் அடிப்படையில் இந்தப் பதிவினை சமர்ப்பிக்கிறேன்.

சாதாரண மனிதர்களான நாமெல்லாம் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் தவறிழைக்க வாய்ப்புண்டு. பாரபட்சமான தண்டனை வழங்கவும் வாய்ப்புள்ளது. ஒரு கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலையை அரசே செய்வது என்பது மிகப்பெரிய பாவம்.

1957ல் கிருஷ்ணய்யர் ஈ.எம்.எஸ்.சின் அரசில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது அவரிடம் உச்சநீதிமன்றத்தில் மரணதண்டனை பெற்ற சி.ஏ.பாலன் என்பவரின் மனு வந்திருந்தது. அப்போதைய குடியரசுத் தலைவரும் கூட சி.ஏ. பாலனின் கருணைமனுவை நிராகரித்திருந்தார். கிருஷ்ணய்யர் பெரும் போராட்டம் நடத்தி சி.ஏ. பாலனின் மரணதண்டனையை குறைத்தார்.

இதுபோலவே உச்சநீதிமன்றத்தில் கிருஷ்ணய்யர் நீதிபதியாக இருந்தபோது எடிகா என்ற பெண்ணின் வழக்கு அவர் பார்வைக்கு வந்தது. ஒரு கொலைவழக்கில் எடிகா என்ற பெண்ணுக்கு உயர்நீதிமன்றம் மரணதண்டனை விதித்திருந்தது. இதற்கு தீர்ப்பெழுதிய கிருஷ்ணய்யர் அந்தப் பெண்ணின் தண்டனையைக் குறைத்து "கடவுள் தந்த உயிரைப் பறிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது" என்ற மகாத்மா காந்தியடிகளின் கூற்றினை நினைவுபடுத்தினார்.

மரணதண்டனையில் இருந்து தப்பிய சி.ஏ.பாலனும், எடிகாவும் அதன்பின்னர் கொலைவெறியோடு அலைந்ததாக தகவல் இல்லை.

மூன்றாம் உலகநாடுகளில் பெரும்பாலானவை மரணதண்டனை என்பது காட்டுமிராண்டித்தனம் எனக் கண்டித்து மரணதண்டனையை ஒழித்திருக்கும் நிலை நிலவுகிறது. மவுண்ட்பேட்டனை கொடூரமாக கொன்றவனுக்கு கூட பிரிட்டிஷ் அரசாங்கம் மரணத்தண்டனை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைசெய்பவன் ஆத்திரத்தில் அறிவிழந்து மிருகமாகி அந்த தருணத்தில் ஈடுபடுகிறான். மூளைச்சலவை செய்யப்பட்ட பயங்கரவாதியும் கூட இதுபோன்ற ஒரு சூழ்நிலையிலேயே மிருகமாகிறான். குற்றங்களுக்கு தண்டனை வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் மரணதண்டனையோ "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்ற பிற்போக்குத் தனம் கொண்டது.

"நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது" என்று வி.ஆர். கிருஷ்ணய்யர் ஒரு தீர்ப்பில் கூறியிருக்கிறார். மகாத்மா காந்தி இன்றைய தேதியில் உயிரோடு இருந்திருந்தாலும் கூட அப்சலுக்கோ அல்லது வேறு யாருக்குமோ மரணதண்டனை என்பதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். அதற்காக அவரையும் "தீவிரவாதி" என்று நம் தேசிய ஜல்லிகள் முத்திரை குத்துவார்களா?

ஆனாலும் பிற்போக்குத்தனமான தேசிய ஜல்லிகள் தங்கள் தேசியப்பற்றை காட்ட துரதிருஷ்டவசமாக முகம்மது அப்சல் இப்போது மாட்டிக் கொண்டார். தெரிந்தோ தெரியாமலேயோ தேசப்பற்று எனும் இனிப்புத் தடவி மரணதண்டனை என்னும் காட்டுமிராண்டித் தனத்துக்கு ஆதரவு திரட்டப்படுகிறது.

"மக்களிடம் மரணதண்டனைக்கு ஆதரவான போக்கு இருக்கிறது என்பதற்காக நானும் அதை ஆதரித்து கும்மி அடிக்க முடியாது. மக்கள் எப்போதும் சரியாக, நேர்மையாகவே சிந்திப்பார்கள் என நான் கருதவில்லை. மக்களை மந்தைகளாக நினைத்து ஏமாற்றுபவர்கள் வேண்டுமானால் இந்த மரணதண்டனை-ஆதரவு கருத்துடன் ஒத்துச் செல்லட்டும். நான் மக்களுக்கு நல்ல மேய்ப்பவனாகவே இருக்க விரும்புகிறேன்" என்கிறார் வி.ஆர். கிருஷ்ணய்யர்.

"அன்பை பளிங்கில் பதிந்திடுங்கள், காயங்களைத் தூசிப்போல துடைத்திடுங்கள்" என்பது பாரசீக பழமொழி. அன்பு எல்லாவற்றையும் பெற்றுத் தரும். சமாதானத்தையும், நிம்மதியையும் தந்திடவல்லது அன்பு மட்டுமே. அன்பினை போதித்த புத்தன் பிறந்தநாட்டின் குடியரசுத் தலைவர் நல்ல முடிவு எடுப்பார். ஒரு மனித உயிரைக் காப்பார் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.

7 மே, 2006

முகம்மது அப்ஸல்!

அப்சல் என்பவர் யார்?

முகம்மது அப்சல் உங்களையும், என்னையும் போல இந்தியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவரே. டெல்லியில் மருத்துவம் படித்தார். 15 ஆண்டுகளுக்கு முன்னால் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு JKLF (ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி) இயக்கத்தில் இணைந்தார். தீவிரவாதப் பயிற்சிக்காக பாகிஸ்தானுக்கு சென்றவர் அங்கே 2 மாதம் தங்கியிருந்திருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு காஷ்மீர் விடுதலையில் எந்த ஆர்வமும் இல்லை. காஷ்மீர் இளைஞர்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு தலைவலி கொடுக்க மட்டுமே பாகிஸ்தான் விரும்புகிறது என உணர்ந்தவர் தாயகம் திரும்பி எல்லைப் பாதுகாப்புப் படையிடம் இரு சக தீவிரவாதிகளுடன் மனந்திருந்தி சரணடைந்தார்.

திருந்திய பின்பே அப்சலுக்கு சத்திய சோதனை நேர்ந்தது. காஷ்மீரில் மனம் திருந்திய தீவிரவாதிகளுக்கு அரசு வேலை கிடைக்காது. அவர்களால் போலிஸ் இன்பார்மர் தொழில் மட்டுமே செய்ய இயலும். வேண்டுமானால் அங்கிருக்கும் எல்லை பாதுகாப்புப் படை மற்றும் போலிசார் உதவியுடன் தாதாவாக மாறி சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை அதிகார வர்க்கத்துக்கு லஞ்சமாக கொடுத்து வாழலாம்.

தீவிரவாதப் பாதையில் இருந்து திருந்தி பாதை மாறியவர்களுக்கு நித்திய கண்டமாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் உண்டு. எப்போது வேண்டுமானாலும் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாயலாம். இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில் இருந்தார் அப்ஸல்.


எப்படி சமாளித்தார் அப்ஸல்?

வேலையிலும் சேர முடியாது, இன்பார்மராக பணிபுரிந்து தீவிரவாதிகளின் விரோதத்தையும் சம்பாதிக்க முடியாது என்ற நிலையில் இருந்த அப்ஸல் மருத்துவ உபகரணங்களை வாங்கி வினியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். வாழ்க்கை நல்லமுறையில் பயணிக்கத் தொடங்கியது. புதிய வாழ்க்கை அமைத்துக் கொண்டதின் சாட்சியாக அவருக்கு திருமணமும் நடந்தேறியது.


அப்ஸலை நெரித்த அராஜகம்!

இந்நிலையில் தான் முகம்மது அப்ஸலுக்கு வில்லனாக முளைத்தார் அதிரடிப்படையின் டி.எஸ்.பியான திராவிந்தர் சிங். அப்ஸல் தொழிலில் நன்றாக வளர்ந்து வருவதை கண்டு மனம் பொறுக்க முடியாத அந்த மிருகம் லாபத்தில் பங்கு கேட்கத் தொடங்கியது. இல்லாவிட்டால் தீவிரவாதி என்று கூறி என்கவுண்டரில் போட்டுத் தள்ளிவிடுவோம் என்று மிரட்டியிருக்கிறது. அப்ஸலும் பல ஆயிரத்தைக் கொட்டிக் கொடுத்துக் கூட அந்த மிருகத்தின் பணவெறியைத் தணிக்க முடியவில்லை. தன் மனைவியின் நகையை விற்று பணத்தைக் கொடுத்திருக்கிறார். அப்ஸல் புதியதாக வாங்கிய இரு சக்கர வாகனத்தைக் கூட அந்த மிருகம் இரக்கமில்லாமல் பிடுங்கியிருக்கிறது.

இந்நிலையில் அப்ஸல் சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்குச் சென்று பிழைப்பைப் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார். அவர் மருத்துவம் படித்த டெல்லிக்கே சென்று தொழிலை தொடர நினைத்தார். அவர் இடம் மாறப்போவதை அறிந்த திராவிந்தர் சிங் அவரை அழைத்து தனக்கு வேண்டிய ஒருவரையும் டெல்லிக்கு உடன் அழைத்துச் செல்லவேண்டும் என மிரட்டியிருக்கிறார். திராவிந்தர் சிங்குக்குக்கு வேண்டிய ஒருவர் தான் முகம்மது. நாடாளுமன்றத் தாக்குதலின் மூளை.

டெல்லிக்கு முகமதுவை அழைத்துச் சென்ற அப்ஸல் திராவிந்தர் சிங்கின் பரிந்துரையின் பேரில் அவருக்கு ஒரு வீடு வாடகைக்கு அமர்த்தி ஒரு காரும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த நேரத்தில் அப்ஸலும், காஷ்மீர் அதிரடிப்படை டி.எஸ்.பி. திராவிந்தர் சிங்கும் பலமுறை மொபைல் போனில் பேசியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தாக்குதலில் அப்ஸலின் பங்கு மொத்தமே இவ்வளவு தான். மனம் விரும்பி அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக எந்த சாட்சியமும் இல்லை. அவர் அழைத்து வந்த முகமது நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபடப்போகிறார் என்று அப்ஸலுக்கு தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.


அதன் பிறகு நடந்தது என்ன?

இந்நிலையில் டெல்லியில் தானும் தன் குடும்பமும் தங்குவதற்கு வீடு பார்த்து விட்டு காஷ்மீருக்கு தன் குடும்பத்தை அழைத்துவரச் சென்ற அப்ஸல் கைது செய்யப்பட்டு நாடாளுமன்றத் தாக்குதலின் சூத்திரதாரி என்று டெல்லி போலிசால் குற்றம் சாட்டப்படுகிறார். நிருபர்கள் முன்னிலையில் அப்ஸல் பேச அனுமதிக்கப்படவில்லை. இதை ஆஜ்தக் சேனலின் நிருபர் கூட நீதிமன்றத்தில் சாட்சியாக சொல்லியிருக்கிறார்.


போலிஸ் எப்படி அப்ஸலை தீவிரவாதியாக சித்தரிக்கிறது?

அப்ஸலின் மொபைல் போனில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் நவம்பர் 6 முதல் பலமுறை பேசியிருப்பதாக போலிஸார் கூறுகிறார்கள். அதை வைத்தே அப்ஸல் தான் இந்த தீவிரவாதச் செயலின் மூளை என்பதாக வர்ணிக்கிறது டெல்லி காவல்துறை. அந்த மொபைல் போனின் சிம்கார்டே (மொபைல் எண் 9811489429) டிசம்பர் 4ல் தான் வாங்கப்பட்டிருக்கிறது. அதற்கான பில்லும் அப்ஸலின் வசம் இருக்கிறது. அதாவது ஒரு மாத காலமாக Activate செய்யப்படாத ஒரு எண்ணில் தீவிரவாதிகள் அப்ஸலிடம் பேசியிருக்கிறார்கள் என்று போலிஸார் நீதிமன்றத்தின் காதுகளில் பூச்சுற்றுகிறார்கள். அந்த பூச்சுற்றலையும் சந்தோஷமாக நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

நீதிமன்றத்தில் அப்ஸலின் சார்பாக வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதுமாதிரி நேரத்தில் நீதிமன்றமே குற்றவாளிக்கு ஒரு வக்கீலை நியமிப்பது வழக்கம். அந்த நடைமுறை அப்ஸலின் வழக்கில் மட்டும் மீறப்பட்டது ஏனோ?

தன்னுடைய மொபைல் எண்ணுக்கு காஷ்மீர் மாநில போலிஸ் அதிகாரிகள் பேசியிருக்கிறார்கள் என்று நீதிமன்றத்திலும், போலிஸ் விசாரணையிலும் அப்ஸல் கூறியிருக்கிறார். அதுகுறித்து போலிசார் எந்த விசாரணையும் நடத்தாது ஏன்? விரும்பத்தகாத உண்மைகள் ஏதாகினும் வெளிவந்துவிடப் போகிறது என்பதாலா?


நீதிமன்றத்தின் அடாவடி

அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே குற்றத்தின் கொடூரத்தன்மையைக் கணக்கில் கொண்டு மரணதண்டனை விதிக்கவேண்டும் என்பது இந்திய நீதித்துறையின் அரிச்சுவடி. ஆனால் அப்சலுக்கு மரணதண்டனை வழங்கிய நீதிமன்றம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மரணதண்டனை விதிக்கிறோம் என்று தீர்ப்பு எழுதியிருக்கிறது. நூறுகோடி மக்கள் ஒன்று சேர்ந்து அப்ஸலுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார்களா என்ன? நீதிபதி குறிப்பிட்ட "மக்கள்" என்பவர் யார்? யார்?

அப்படி மக்களின் உணர்வுகள் இருந்திருந்தால் இன்று காஷ்மீரிலும், இந்தியாவின் எஞ்சிய பகுதிகளிலும் அப்ஸலின் மரண தண்டனைக்கு எதிரான கடுமையான குரல் ஏன் எழுகிறது. இந்த எதிர்ப்புக் குரல் ஒருவேளை மக்களின் உணர்வுகள் இல்லையா?


அப்சல் ஏன் இதுவரை ஜனாதிபதிக்கு கருணைமனு அனுப்பவில்லை?

"அதுமாதிரி ஒரு கருணைமனு கோரினால் என் மீது சொல்லப்பட்டுள்ள குற்றத்தை நானே ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும். ஒருவேளை நான் மரணமடையவேண்டும் என்று இறைவன் விரும்பினால், இறைவனின் தீர்ப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்" என்கிறார் அப்ஸல்.


அப்ஸலை தூக்கில் போடவேண்டும் என்று கோருபவர்கள் யார்? யார்?

அப்ஸல் இஸ்லாமியர் என்பதால் அவரை தூக்கில் போடவேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. தீவிரவாதத்தை அடக்க இதுதான் சிறந்தவழி என்பது அவர்கள் எண்ணம். தாங்கள் "தேசபக்தி கொண்டவர்கள்" என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்வதை மட்டும் செய்யாத சில தேசியவியாதிகளும் இவர்களோடு சேர்ந்து ஜால்ரா அடித்து வருகின்றனர்.

இன்னொரு தரப்பினர் இஸ்லாமியத் தீவிரவாதிகள். அப்பாவியான அப்ஸல் தூக்கிலிடப்பட்டால் அதன் மூலம் இஸ்லாமிய இளைஞர்களிடையே மத வெறியையும், தீவிரவாத மனப்பான்மையையும் ஏற்படுத்தி தீவிரவாதத்தை வளர்க்கலாம் என்பது அவர்கள் எண்ணம்.

ம்ம்ம்.... மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி.

இடையில் அப்ஸலின் மரணதண்டனைத் தீர்ப்பால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் அவரது ஏழு வயது மகனும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான் என்பது ஒரு சோகமான பெட்டிச் செய்தி.