31 மே, 2009

புதுப்பேட்டை!


செல்வராகவன் இயக்கிய படமல்ல. சென்னையின் டெட்ராய்ட். அண்ணாசாலையிலிருந்து தாராப்பூர் டவர்ஸ் அருகே லெஃப்ட் அடித்து நேராக போனால் சிந்தாதிரிப்பேட்டை. பாலத்தில் இடதுபக்கமாக திரும்பினால் புதுப்பேட்டை. இருசக்கர வாகன நட்டு போல்ட்டிலிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் காரின் ஸ்பேர் பார்ட்ஸ் வரை கிடைக்குமிடம்.

கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் மார்க்கெட் இது என்கிறார்கள். ஆயிரம் கடைகள் இருக்கிறது. எல்லாக் கடைகளுமே இரும்புக் குப்பைகளால் நிரப்பப் பட்டிருக்கிறது. இந்த பகுதிக்கு ‘ஆட்டோ நகர்' என்று பெயர் வைக்க வேண்டுமென்பது இப்பகுதி வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கை. கடை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ‘பாய்'கள். ஆங்காங்கே ‘இன்ஷா அல்லா' அதிகமாக கேட்கமுடிகிறது.

பொதுவாக இந்த இரண்டு பத்திகளையும் வாசிப்பவர்களுக்கு விவகாரமாக எதுவும் தெரிந்திருக்காது. பொல்லாதவன் படத்தில் தனுஷின் பைக் தொலைந்துவிடும் அல்லவா? உடனே தனுஷ் போய் தேடும் இடம் புதுப்பேட்டை. மண்ணில் புதைக்கப்பட்ட பல்சர் ஒன்றை காட்டுவார்களே? அந்த இடம் தான் புதுப்பேட்டை. சென்னையிலும், புறநகரிலும் எந்த பைக் தொலைந்தாலும் எல்லோரும் ஓடிப்போய் தேடுவது புதுப்பேட்டையில் தான். தேடிய எவருக்குமே இதுவரை பைக் திரும்ப கிடைத்ததாக சரித்திரமில்லை. பத்தே நிமிடத்தில் ஒரு பைக்கை பார்ட் பார்ட்டாக பிரித்து போடக்கூடிய வல்லுநர்கள் நிறைந்த இடம் இது.

சீப்பாக காருக்கும், டூவீலருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் ஏதாவது வேண்டுமென்றால் தாராளமாக புதுப்பேட்டைக்கு போகலாம். செகண்ட் ஹேண்டில் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விலைக்கு எதுவேண்டுமானாலும் கிடைக்கும். அந்த காலத்து பேபி ஸ்கூட்டருக்கான ஸ்பேர் பார்ட்ஸ் கூட இன்னமும் இங்கே கிடைக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிற்கான கார் ஆடியோ செட்டை நம் நண்பர் ஒருவர் இங்கே இருபதாயிரத்துக்கு முடித்துக்கொண்டு வந்தார் என்றால் நம்ப கடினமாக தானிருக்கும்.

இங்கே ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொன்று ஸ்பெஷல். டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க வெங்கடாச்சல நாயக்கன் தெரு. லைட், இண்டிகேட்டர், மீட்டர் போன்ற எலக்ட்ரிக்கல் சமாச்சாரங்களுக்கு வெங்கடாச்சல ஆசாரி தெரு. கார், வேன் ஸ்பேர்களுக்கு ஆதித்தனார் சாலை. ஒட்டுமொத்தமாக பாடியே (சேஸிங் வகையறாக்கள்) வேண்டுமானால் கூவம் சாலை.

புதுப்பேட்டைக்குள் நுழைந்ததுமே ‘இன்னா சார் வோணும்? சொல்லு சார். எதா இருந்தாலும் கொடுத்துடலாம்' என்று எதிர்படும் எல்லா கடைக்காரர்களுமே சொல்லி வைத்தாற்போல கேட்பார்கள். நான் போன அன்று இன் செய்த சட்டையை எடுத்து விட்டேன், தலையை கலைத்து விட்டுக் கொண்டேன். வாயில் ஒரு மாணிக்சந்த் போட்டு, இல்லாத கடுமையை ஒரு ‘கெத்'துக்காக முகத்தில் வைத்துக்கொண்டேன். மூஞ்சை பார்த்து ஏமாளி என்று முடிவுகட்டிவிடக்கூடாது இல்லையா?

“சிடி டான் டேங்க் வேணும்ணா. இருக்கா?”

”நேரா போய் ரெண்டாவது ரைட் அடி”

ரெண்டாவது ரைட்டு ரொம்ப குறுகலானது. டூவீலர் போவதே கடினம். இருபக்கமும் ஏராளமான வண்டிகள் கடைகள் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும். தெரியாத்தனமாக ஒரு ஆட்டோக்காரர் உள்ளே நுழைந்துவிட்டாலும் போதும். செம்மொழியில் அர்ச்சனை கிடைக்கும். “த்தா.. பிஸ்னஸ் அவர்லே எவண்டா மயிரு மாதிரி வண்டியை உள்ளே எட்தாந்தது?” என்பார்கள்.

ரெண்டாவது ரைட்டு அடித்தால் இருபுறமும் பெட்ரோல் டேங்குகள் தோரணமாக கட்டிவிடப்பட்டிருந்தன. பல்சர், யூனிகார்ன் என்று லேட்டஸ்ட் ப்ரீமியர் பைக்குகளின் டேங்குகளும் கிடைக்கிறது. அப்படியே புத்தம்புதுசாக ஒரிஜினல் பெயிண்டின் கருக்குலையாமல். ஒவ்வொரு கடையாக ”டாங்க் இருக்கா?” என்று கேட்டால் “எண்ணாண்டே டான் டேங்க் இல்லை, ஆனா ஆறாவது கடையிலே இருக்கும்” என்று தன் சகப்போட்டியாளர்களுக்கே பிஸினஸ் பிடித்துக் கொடுக்கிறார்கள். ஆறாவது கடையில் ஒரு பாய் உட்கார்ந்திருந்தார்.

”சிடி டான் டேங்க் வேணும்னா. இருக்கா?”

“இருக்குண்ணா”

வண்டியை விட்டு இறங்கவே கொஞ்சம் பயமாகதானிருக்கிறது.

“டேங்கு காட்டுண்ணா”

“எறங்கி வாண்ணா. மேல இருக்கு. மாடிக்கு போ எடுத்து கொடுப்பாங்க”

வண்டியை ஓரமாக நிறுத்தி, சைட் லாக் போட்டால், ”சைட் லாக் போடாதே” என்கிறார். கொஞ்சம் தயங்கியதுமே புரிந்துகொண்டவராக “புதுப்பேட்டைலே மட்டும் எவன் வண்டியும் திருடுபோவாது!” என்றார்.

தயங்கியபடியே வண்டியை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே மாடிக்கு சென்றேன். தரையே தெரியாத அளவுக்கு வண்டிகளின் ஸ்பேர் பார்ட்ஸ். மேலேயும் ஒரு பாய்.

“சிடி டான் டேங்க் வேணும்னே”

“இன்னா கலரு”

“பிளாக்”

ஒரு பையனை அனுப்பி “சாருக்கு ஒரு டாங்க் எடுத்துக் கொடு!” என்றார்.

பையன் உள்ளே எங்கேயோ அழைத்துப் போனான். சில படிக்கட்டுகள் ஏறி, சில படிக்கட்டுகள் இறங்கி சந்து மாதிரி போய்க்கொண்டே இருக்கிறது. கீழே விட்ட வண்டி என்னாகுமோ என்ற பயம் வேறு. ஒரு அறைக்கதவை திறந்து லைட் போட்டான். உள்ளே குறைந்தபட்சம் நூறு, நூற்றி ஐம்பது பெட்ரோல் டேங்குகளாவது இருந்திருக்கும். கவரில் சுற்றிவைக்கப்பட்ட ஒரு டாங்கை கொடுத்து “போய் அண்ணன் கிட்டே ரேட் பேசிக்கோ!” என்றான் அந்தப் பையன்.

“என் வண்டிலே வயலட் ஸ்டிக்கரு. இது பிரவுனா இருக்கே?”

“இங்கல்லாம் அப்படித்தான். கிடைக்கிறதை (?) தான் கொடுக்க முடியும்”

வேறு வழியின்றி அண்ணனிடம் போய் ரேட் பேசினேன்.

“எவ்ளோண்ணா”

“கொடுக்குறதை கொடு”

“பரவால்லை ரேட்டு சொல்லிக்கொடுண்ணா” - வெளியே நின்ற வண்டி என்ன கதியோ?

“ரெண்டாயிரம் கொடு”

“புதுசே அவ்ளோ தாண்ணா”

“புதுசு மூவாயிரத்து இருநூறு இன்னிக்கு ரேட்டு. எங்களாண்டியேவா தம்பி?”

நான் ஐநூறில் ஆரம்பித்து ஆயிரத்து நூறுக்கு வந்தேன். அவர் நூறு, இருநூறாக குறைத்துக் கொண்டே வர நான் இருபத்தைந்து, ஐம்பதாக ஏறிக்கொண்டே வந்தேன். கடைசியாக ஆயிரத்து இருநூறில் முடிந்தது. அச்சு அசலாக புது டேங்க். ஷோருமில் வாங்கியிருந்தால் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கூடுதல் ஆகியிருக்கும்.

டேங்கை எடுத்துக்கொண்டு வேகவேகமாக தாவிக்குதித்து என் வண்டிக்கு ஓடினால்.. நல்லவேளை எதுவும் ஆகவில்லை. கீழே கடையில் இருந்த பாய் புன்னகைத்தார்.

”வேறு எது வேணும்னாலும் வாங்க. ஊடு எங்கேருக்கு?”

“நந்தனம்னே, நன்றி. கெளம்புறேன்”

வண்டியை வெளியே எடுத்துக் கொண்டுவரும்போது தெருமுனையில் ஒரு புது ஸ்பெளண்டரை அக்கு அக்காக பிரித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்காலத்தில் எவனுக்காவது ஸ்பெளண்டர் டேங்க் வேண்டுமென்றால் பாய் கடையில் சகாய விலைக்கு கிடைக்கும்.

30 மே, 2009

கிம்-கி-டுக்!


தான் எடுத்த முதல் படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காட்ட விரும்பினார் அந்த இயக்குனர். பத்திரிகையாளர் பலரையும் தானே போன் போட்டு அழைத்தார். மூத்தப் பத்திரிகையாளர்கள் சிலரை நேரில் சென்றும் அழைத்தார். சாமானியத் தோற்றம் கொண்ட அந்த இயக்குனரை ஏனோ பத்திரிகையாளர்கள் அவ்வளவாக மதிக்கவில்லை. பத்திரிகையாளர் காட்சிக்கு வந்தவர்களும் கூட படம் பற்றி சுமாராகவே எழுதினார்கள்.

ஆனால் அதே படம் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, ‘எங்கள் கிம்-கி-டுக்’ என்று கொரிய பத்திரிகைகள் கொண்டாடின. அந்தப்படம் 1996ல் வெளிவந்த க்ரோகோடைல். சியோலின் ஹான் ஆற்றின் கரையில் வாழும் ஒருவன் தற்கொலைக்கு முயற்சிக்கும் பெண்ணை காப்பாற்றுகிறான். அவளோடு வன்புணர்வு கொள்கிறான். மோசமாக நடத்துகிறான். ஒருக்கட்டத்தில் இருவருக்குமிடையே அன்னியோன்யம் ஏற்படுகிறது. உறவுகளுக்கு இடையேயான முரணை இப்படம் வெகு அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறது.

கிம்-கி-டுக்-கின் முதல் படத்துக்கு கிடைத்த சர்வதேச வரவேற்பு, அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகளை வாரி வழங்கியது. வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களை குறைந்த செலவில் தரமாக எடுக்கத் தொடங்கினார். 2000மாவது ஆண்டு வெளிவந்த அவரது திரைப்படமான ’தி ஐல்’ (The Isle) வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட, ஐரோப்பா கிம்-கி-டுக்கை தத்தெடுத்துக் கொண்டது.

யார் இந்த கிம்-கி-டுக்?

1960ல் பிறந்த கிம், ஒன்பது வயதாக இருந்தபோது அவரது குடும்பம் தலைநகர் சியோலுக்கு இடம்பெயர்ந்தது. பதினேழு வயதாக இருக்கும்போது பள்ளிப்படிப்பினை நிறுத்திக் கொண்டவர் ஆலைகளில் பணியாற்றத் தொடங்கினார். அதன்பின்னர் வயிற்றுப் பாட்டுக்காக பல வேலைகளை கிம் செய்யவேண்டியிருந்தது. ஒருக்கட்டத்தில் பாதிரியாராகும் எண்ணத்தில் தேவாலயம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.

இலக்கின்றி வாழ்ந்தவர் கிம். திடீரென ஒருநாள் அதுவரை தான் சேமித்து வைத்திருந்த மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு பிரான்சுக்கு பறந்தார். சிறந்த ஓவியரான கிம் தான் வரைந்திருந்த ஓவியங்களை பாரிஸ் தெருக்களில் பரப்பி விற்பனைக்கு வைத்தார். சொற்ப வருமானம் வந்தது. அதைவைத்து வயிற்றுப்பசியை தீர்த்துக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில் தான் வாழ்க்கையிலேயே முதன்முதலாக திரையரங்கம் சென்று படம் பார்த்ததாக பின்நாளில் பேட்டியொன்றில் குறிப்பிடுகிறார். சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ் படம் பார்த்தபிறகு தூக்கமின்றி அவதிப்பட்டாராம்.

போன பாராவில் இலக்கின்றி வாழ்ந்தவர் இந்த பாராவில் தனக்கொரு இலக்கினை நிர்ணயித்துக் கொண்டு கொரியாவுக்கு திரும்புகிறார். நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதினார். ’ஏ பெயிண்டர் அண்ட் க்ரிமினல் கண்டெம்ட் டூ டெத்’ என்ற அவரது படைப்புக்கு 93ஆம் ஆண்டு ’எஜூகேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்க்ரிப்ட் ரைட்டிங்’ நிறுவனத்தின் விருது கிடைத்தது. இதையடுத்து 94ஆம் ஆண்டில் கொரிய தயாரிப்பாளர் கவுன்சிலிடம் ‘டபுள் எக்ஸ்போஷர்’ என்ற படைப்புக்காக மூன்றாவது பரிசும், 95ஆம் ஆண்டில் ’ஜேவாக்கிங்’ என்ற படைப்புக்காக முதல் பரிசும் வென்றார். கிம்-கி-டுக்-குக்கு கொரிய சினிமா கதவினை அகலமாக திறந்து காத்திருந்தது.

’தி ஐல்’ படத்துக்குப் பிறகு ஐரோப்பாவில் ஒரு முக்கியமான படைப்பாளியாக கிம் கருதப்பட்டாலும், அவரது தாய்நிலத்தில் விமர்சகர்கள் கிம்மினை குதறிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு விலங்கென்றும், சைக்கோவென்றும், தருதலை படத்தயாரிப்பாளர் என்றும் தூற்றப்பட்டார். பத்திரிகையாளர்கள் நேரடியாகவே தங்கள் பத்திரிகைகளில் இதுபோன்ற வார்த்தைகளில் விமர்சிக்க, “இனி எந்த கொரியப் பத்திரிகையாளனுடனும் பேசப்போவதில்லை” என்று காட்டமாக சபதமெடுத்தார் கிம். வெகுவிரைவிலேயே அந்த சபதத்தை வாபஸும் வாங்கிக் கொண்டார்.

கலைப்பட லெவலுக்கு எடுத்துக் கொண்டிருந்ததால் கொரிய ரசிகர்கள் கிம்மை கண்டுகொள்ளாமலேயே இருந்தார்கள். 2002ல் வெளிவந்த ’பேட் கை’ திரைப்படம் கிம்மையும் கொரியாவின் வசூல்ராஜா ஆக்கியது. வசூலில் வென்ற படம் என்றாலும் தரத்தில் எந்த குறையையும் வைக்கவில்லை கிம். பெர்லின் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.

அடுத்தடுத்து வெளியான படங்கள் சர்வதேச அங்கீகாரங்களை வென்று குவித்தாலும், ஏனோ ’பேட் கை’ அளவுக்கு கொரியர்களை கவரவில்லை. சமூகத்தின் விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்க்கையை யதார்த்தம் குன்றாமல் படமாக்குவது கிம்மின் பாணி. அமெரிக்க மோகத்தில் அலையும் கொரியர்கள் எதிர்பார்க்கும் ஃபேண்டஸி அவரிடம் குறைவு. ’ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், விண்டர்.. அண்ட் ஸ்ப்ரிங்’ என்ற அவரது திரைப்படம் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. 2004ஆம் ஆண்டு ’சமாரிடன் கேர்ள்’ திரைப்படம் பெர்லினிலும், ’3-அயன்’ வெனிஸிலும் சிறந்த இயக்கத்துக்கான விருதுகளை அள்ளியது.

மிகக்குறைவான வசனங்களோடு, விஷூவலாகவே படங்களை எடுப்பதை கிம் பாணியாக கொண்டிருக்கிறார். வசனங்கள் குறைவு என்பதாலோ என்னவோ அயல்நாட்டு ரசிகர்களை கிம் மிக சுலபமாக அடைகிறார். சர்வதேசநாடுகளில் கொரியாவின் சிறந்த இயக்குனராக கிம்-கி-டுக் மதிக்கப்பட்டாலும், சொந்தநாட்டில் சர்ச்சைக்குரியவராகவே பார்க்கப்படுகிறார். அடிக்கடி ஏதாவது எடக்குமடக்காக அறிக்கை விட்டு மாட்டிக்கொள்வது கிம்மின் வழக்கம்.

“ஏராளமான சர்வதேச விருதுகளை குவித்ததற்குப் பின்னால் கொரிய ரசிகர்களை சர்வதேச ரசனைக்கு மாற்ற முரட்டுத்தனமாக முயன்றேன். மக்கள் இதற்காக என்னை மன்னிக்க வேண்டும்” - கிம் விடுத்த ஸ்டேட்மெண்டுகளில் ஒன்று இது. கிம் இப்போதும் சொல்கிறார். ”என்னுடைய அடுத்தப்படம் கொரியாவில் திரையிடப்படாவிட்டாலும், எனக்கொன்றும் கவலையில்லை!”

பின்குறிப்பு : உலகப்படங்கள் பற்றியும், உலகப்பட இயக்குனர்கள் பற்றியும் பேச அப்படங்களை பார்த்தவர்களால் மட்டும்தான் எழுதமுடியும், பேசமுடியும் என்ற நிலை இன்றில்லை. தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் உலகம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. தகவல்களை பெறுவது இன்றைய தேதியில் டீக்கடைக்கு போய் டீ வாங்கிக் குடிப்பதைப் போல சுலபமானது. உலகப்பட ரசிகர்கள், வெறியர்கள் என்று ஃபிலிம் காட்டிவரும் பலரும் எப்படி எழுதுகிறார்கள் என்ற பரிசோதனையை நானே செய்துப் பார்த்ததின் விளைவுதான் மேற்கண்ட கட்டுரை. நான் கிம்-கி-டுக்-கின் ஒரு படத்தை கூட பார்த்ததில்லை. உலகப்படங்கள் குறித்த அறிமுகத்தை தமிழ்வாசகர்களுக்கு பெருமளவில் தந்துவரும் சாருவின் மூலமாகவே அவர் அறிமுகம். உலகப்படங்களை பார்க்க வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும் பொறுமையும், சூழலும் அமைவதில்லை.

என்னைப்போன்ற அறிவிலிகளுக்காக சென்னைப்பதிவர்கள் மாதம் ஒரு உலகப்படம் திரையிடும் திட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள். முதல் படமாக கிம்-கி-டுக்கின் ’ஸ்பிரிங், சம்மர், பால், விண்டர்... அண்ட் ஸ்பிரிங்’ திரைப்படம் ஜூன் 7, ஞாயிறு அன்று சரியாக மாலை நான்கு மணிக்கு திரையிடப்படுகிறது. இடம் : ஸ்ரீ பார்வதி ஹால், எல்டாம்ஸ் ரோடு, சென்னை.

மேலும் விபரங்களுக்கு :
பைத்தியக்காரன் அவர்களின் விரிவான பதிவு!

28 மே, 2009

ஆன்மீகம்!


“அண்ணே! 'ஆன்மீகம்'னா என்ன?”

“தம்பி! 'ஆன்மீகம்'னா வைப்ரேஷன், அதிர்வுகள்!”

“புரியவில்லை. கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?”

“நம்மை ஏதாவது ஒரு விஷயம் ஈர்க்கும்போது நம் உடலளவிலும், மனதளவிலும் சில அதிர்வுகள் ஏற்படும்!”

“அதுமாதிரி நான் உணர்ந்ததில்லையே?”

“கண்டிப்பாக எப்போதாவது உணர்ந்திருப்பாய். உனக்கு தெரிந்திருக்காது. அதீத மகிழ்ச்சியும், அதீத சோகமும் கூட இதுபோன்ற அதிர்வுகளை உன்னில் ஏற்படுத்தும்!”

“சரி ஆன்மீக அதிர்வுகளை எப்படி உணர்வது?”

“உனக்குள் தான் கடவுள் இருக்கிறார். உனக்கே திருப்தியான அளவில் நீ ஏதாவது பணியை செய்துமுடித்தால் அந்த அதிர்வுகள் ஏற்படலாம்!”

“என் திறமையையும், புத்திக்கூர்மையையும் கொண்டு எனக்கான பணிகளை செய்கிறேன். இதில் கடவுள் எங்கு வருகிறார்?”

“அந்த பணி செய்ய உன்னை தூண்டும் நெம்புகோல் தான் கடவுள். சில பேருக்கு தியானம் செய்யும்போது அதிர்வுகள் வரலாம், சில பேருக்கு கோயிலில் வழிபடும்போது அதிர்வுகள் ஏற்படலாம். அதிர்வு ஏற்பட்டாலோ அல்லது ஏற்படாவிட்டாலோ அதற்கெல்லாம் என்ன காரணம் என்றெல்லாம் ஆராய்ந்து சொல்லமுடியாது!”

“எனக்கு தியானம் செய்யத் தெரியாது. நான் கோயிலுக்கு வந்தால் எனக்குள் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?”

“யார் கண்டது? ஒருவேளை ஏற்படலாம். இப்போது அம்மன் கோயிலுக்கு போய்க் கொண்டிருக்கிறேன். என்னுடன் வருகிறாயா? உன்னால் உனக்குள் இருக்கும் ஆன்மீகத்தை அங்கே உணரமுடிகிறதா என்று சோதனை செய்து பார்ப்போம்”

“சரி”


கோயிலில் நல்ல கூட்டம். ஆண், பெண்ணுக்கு தனித்தனி வரிசை. நிரூபிக்கப்படாத ஒரு சக்தியை கண்டு வணங்க இவ்வளவு பேர் வருகிறார்களா என்று அவனுக்கு ஆச்சரியம். தீபராதனை காட்டும்போது அம்மனின் கம்பீரமான எழிலில் அண்ணன் நெக்குறுகிப் போனார். அவரை அறியாமலேயே அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது. அம்மனை வழிபட்டு குங்குமம் வாங்கி நெற்றியில் இட்டு கோயில் பிரகாரத்தை சுற்றி வருகிறார்கள்.

“கோயிலுக்கு வருவதே மன அமைதிக்காகவும், எதிர்காலம் குறித்த நம் கவலையை நம்மை வழிநடத்தும் சக்தியிடம் ஒப்படைப்பதற்காகவும் தான். கோயிலுக்கு வந்தவன் அயர்ச்சியோடு திரும்பக் கூடாது. கோயில் பிரகாரத்தில் சற்று ஓய்வெடுத்து உடலுக்கும், மனதுக்கும் எந்த பாரமுமில்லாமல் நிம்மதியாக திரும்ப வேண்டும் என்பது ஐதீகம். ஓரத்தில் அமரலமா?”

கொடிமரம் தாண்டி விசாலமாக இருந்த மண்டபத்தில் இருவரும் அமர்ந்தார்கள்.

“சிலிர்ப்போ, அதிர்வோ உனக்குள் வந்ததா?”

“ஆம்!”

ஆவலோடு, “இதுதான் ஆன்மீகம். முகத்தைப் பார்த்து உனக்கு சிலிர்ப்பு வந்ததா, இல்லை அம்மனின் அலங்காரத்தைப் பார்த்து உனக்கு அதிர்வு வந்ததா?”

“பாதங்களை பார்த்து வந்தது”

“பாதங்களைப் பார்த்தா? ம்... ஒவ்வொருவருக்கும் ஒரு மனம். எல்லா மனமும் ஒரே மாதிரி இயங்குவதில்லை”

“மருதாணியிட்டு சிவந்த பாதங்கள், அப்பாதங்களில் வீற்றிருப்பதால் சற்றே நாணம் கொண்டு தானும் சிவந்துப் போன வெள்ளிக் கொலுசுகள்! கண்டதுமே உடலும், உள்ளமும் பூகம்பம் வந்தது போல அதிர்ந்தது”

“என்ன சொல்கிறாய்? அம்மன் சிலைக்கு மருதாணியிட்டு சிவந்த பாதங்களா?”

“நீங்கள் அம்மன் சிலையை சொல்கிறீர்களா? நான் எனக்கு எதிரில் இருந்த பச்சைத்தாவணி அணிந்த அம்மனை சொல்கிறேன்”

“தம்பி! உனக்குள் அதிர்வை ஏற்படுத்தியிருப்பது ‘ஆன்மீகம்' அல்ல, ‘ஆண்மீகம்'. சுட்டுப் போட்டாலும் உனக்கு 'ஆன்மீகம்' வரவே வராது என்று உறுதியாக நம்புகிறேன்!”

25 மே, 2009

குழந்தை எனும் மேஜிக் வார்த்தை!


முதலாம் திருமணநாளின் போது தான் இளவரசியோடு அம்மா, அப்பா காலில் விழுந்து எழுந்தபோது அம்மா சொன்னாள்.

"யாராவது நல்ல டாக்டரா பாரு குமரா!"

"எதுக்கும்மா?"

"உங்களுக்கு அப்புறமா கல்யாணம் ஆன பாங்க்காரம்மா மருமவ கூட ஆறுமாசம்"

"........"

"எங்கே போனாலும் 'மருமவளுக்கு விசேஷமா?'ன்னு கேட்குறாங்க. பதில் சொல்லி மாளலை!"

"சரிம்மா. பார்க்குறேன்!"


டாக்டரம்மாவுக்கு வயது 30களின் மத்தியில் இருந்தது. சினிமாவில் வரும் டாக்டர்களைப் போலவே கோல்ட் ஃப்ரேம் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். ஆனால் வெள்ளை அங்கி எதுவுமில்லாமல் நார்மலாக புடவையில் இருந்தார்.

"ஜெனரலா இன்வெஸ்டிகேட் பண்ணதுலே ரெண்டு பேருக்கும் ப்ராப்ளம் ஒண்ணும் இருக்குறதா தெரியலை. ரெண்டு பேருக்கும் சின்ன வயசு. மேரேஜ் ஆன ஒன் இயர்க்கெல்லாம் பிரெக்னன்ஸி இல்லைன்னு டாக்டரை யாரு கன்சல்ட் பண்ண சொன்னது?"

"வீட்லே பெரியவங்க சொன்னாங்க டாக்டர்!"

"பெரியவங்களுக்கு வேற வேலையே இல்லை. கல்யாணம் ஆனதுமே பேரன், பேத்தி வந்துடணும் அவங்களுக்கு. இன்னும் ரெண்டு வருஷம் ஜாலியா இருங்களேன். கொழந்தைக்கு ஏன் அவ்வளவு அர்ஜண்ட்?"

"எங்க ஃபேமிலியிலே யாருக்குமே இவ்வளவு டிலே ஆனதில்லைன்னு சொல்றாங்க டாக்டர்!"

"ஓக்கே. நோ ப்ராப்ளம். நீ ஃபோலிக் ஆசிட் டேப்ளட்ஸ் டெய்லி எடுத்துக்கம்மா. நீங்க எச்.சி.க்யூ.எஸ்.சும், லைக்கோரெட்டும் டெய்லி எடுத்துக்குங்க. ஒரு மூணு மாசம் வெயிட் பண்ணலாமே? சொந்த பந்தங்க, ஃப்ரண்ட்ஸ் யாராவது கேட்டா தள்ளிப்போட்டிருக்கோம்னு சொல்லுங்க"


மூணுமாசம் கழிச்சி...

"ஓக்கே. நான் இப்போ ஒரு சார்ட் போடுறேன். இந்த சார்ட்லே சொன்னமாதிரி ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலாம்"

"நங்கநல்லூர் ஆஞ்சநேயருக்கு 101 வடைமாலை சாத்துறேன்னு வேண்டிக்க"

"மென்சஸ் ஆனதிலேருந்து சரியா 14ஆம் நாள்லேருந்து ஸ்கேன் எடுத்து எக் சரியா ஃபார்ம் ஆவுதான்னு பார்க்கணும். சரியா ஃபார்ம் ஆச்சின்னா நோ ப்ராப்ளம். இல்லேன்னா அதுக்கேத்தமாதிரி ட்ரீட்மெண்டை மாத்திக்கலாம்.

"புட்டலூரு புள்ளத்தாச்சியம்மனை பார்த்து வளையல் கொடுத்துட்டு வந்துடுங்க"

"எக் ஃபார்ம் ஆவுறதுலே கொஞ்சம் ப்ராப்ளம் இருந்தது. நோ ப்ராப்ளம். மெடிசின் மூலமாவே சரிபண்ணிடலாம்"

"இன்னுமா விசேஷமில்லை. எங்க ஓரவத்தி பொண்ணு கல்யாணம் ஆயி மொத மாசமே நின்னுருச்சி!"

"இப்போ எல்லாம் சரியாதான் இருக்கு. ஏன் ப்ரெக்னன்ஸி ஆவலைன்னு தெரியலை. 15% பேருக்கு ஏன் இன்ஃபெர்ட்டிலிட்டின்னு ரீசன்னே கண்டுபிடிக்க முடியாது"

"குலதெய்வம் கோயிலுக்கு பொங்கல் வெச்சுடுங்க"

"சாரி. ஐ திங்க் ப்ராப்ளம் வித் யுவர் சைட் மிஸ்டர் குமரன். தப்பா எடுத்துக்க மாட்டீண்க்களே? ஒரு சீமென் கவுண்டிங் எடுத்து பார்த்துடலாமா? மார்க் தான் சென்னையில் பெஸ்ட் லேப். அங்கே ரிப்போர்ட் எடுத்துடுங்க. அப்படியே டெஸ்டிசைட்ஸும் ஸ்கேன் பண்ணனும். ப்ரிசிஸனுக்கு எழுதித்தர்றேன்"

"ஐயப்பன் கோயில் ஜோசியருகிட்டே ஜோசியம் பார்த்தீங்களா?"

"உங்க கவுண்டிங்க்ஸ் பக்காவா இருக்கு. இளவரசிக்கு ஒரு எச்.எஸ்.ஜி டெஸ்ட் பண்ணி பார்த்துடலாமா?"

"கருமாரியம்மன் கோயிலுக்கு போயிட்டு வாங்க. எலுமிச்சைப்பழம் கொடுப்பாங்க. வெறும் வயித்துலே சாப்பிட்டா அப்படியே நிக்குமாம்"

"ரெண்டு ட்யூப்லயும் ப்ராப்ளம்னு நெனைக்கிறேன். அடுத்த வாரம் அட்மிட் பண்ணுங்க. லேப்ராஸ்கோபி பண்ணி சரிபண்ணிடலாம்"

"இதுக்கெல்லாம் சித்தவைத்தியம் தான் கரெக்ட். டாக்டர் ஜமுனா எனக்கு தெரிஞ்சவங்க தான். போயி பார்க்குறீங்களா?"

"லேப்ராஸ்கோபில சரியாகலை. டயக்னாஸ்டிக் சென்டருக்கு எழுதித்தர்றேன். டயக்னாஸ்டிக் பண்ணா சரியாக சான்ஸ் இருக்கு!"

"மாசத்துக்கு ஒருமுறை மலைவேம்பு அரைச்சிக் கொடுங்க!"

"டயக்னாஸ்டிக் பண்ணதுலே ஒரு ட்யூப் ப்லாக் க்ளியர் ஆயிடிச்சி. சோ, ப்ரெக்னன்ஸிக்கு நெறைய சான்ஸ் இருக்கு!"

"ஷாலினி டாக்டரை பாருங்க. எம்.டி. டி.ஜி.ஓ.வெல்லாம் படிச்சிருக்காங்க. கைராசி டாக்டர்!"

"இன்னும் ஒரு மூணுமாசம் பார்ப்போம். அதுக்கப்புறமா ஐ.யூ.ஐ. பண்ணிப் பார்க்கலாம்!"

"நான் கல்யாணத்துக்கு வரலை. யாராவது எத்தனை குழந்தைன்னு கேட்பாங்க!"

"ஆறு மாசத்துக்கு ரெகுலரா ஐ.யூ.ஐ. பண்ணிப் பார்க்கலாம். உங்க ஸ்பெர்ம்ஸை எடுத்து காண்சண்ட்ரேட் பண்ணி உங்க வைஃபோட எக்லே இன்ஜெக்ட் பண்ணிடுவோம். கண்டிப்பா சக்சஸ் ஆகும். இதுவும் சரிபடலைன்னா டெஸ்ட் ட்யூப்...."

"எனக்கு தான் ப்ராப்ளம்ங்கிற மாதிரி டாக்டர் சொல்றாங்களே? நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?

"என்னன்னே புரியலை. இதுவரைக்கும் என்னோட பேஷண்ட்கள்லே யாருக்கும் மூணுவாட்டிக்கும் மேலே ஐ.யூ.ஐ. பண்ணதில்லை"

ஒரு குழந்தையை தத்தெடுக்கும் மனநிலைக்கு குமரன் வந்துவிட்டிருந்தான். இளவரசி மனரீதியாக அதற்கு தயாராக இல்லை. இளவரசியே தயாராக இல்லாதபோது அம்மாவிடம் இதைப்பற்றி பேசக்கூட முடியாது. "வேண்டாம்னு சொல்றவங்களுக்கெல்லாம் பொறக்குது. இவளுக்கு ஒண்ணே ஒண்ணு பொறந்துடக் கூடாதா?"


ட்சங்களும், நாட்களும் இளவரசியின் கண்ணீரைப் போலவே கரைந்தது. இடைவிடாத மருத்துவத்தையும், மருந்தையும் கண்டு சோர்வடைந்து ஒரு ஆறுமாதம் இடைவெளி விட்டார்கள். பிறகு சித்தமருத்துவத்துக்கு போகலாம் என்று நினைத்திருந்த வேளையில்...

"ஹலோ. இளவரசி பேசுறேங்க. லேப் ரிப்போர்ட் பாசிட்டிவ்வாம். ஈவ்னிங் டாக்டரை பார்த்து கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்"

அக்கடாவென்றிருந்தது குமரனுக்கு. மகிழ்ச்சி என்று சொல்லுவதைக் காட்டிலும் நிம்மதி என்று சொல்லலம். என்றாவது ஏற்படும் நடுராத்திரி விழிப்புகளில் கேட்கும் மனசையறுக்கும் விசும்பல் இனி கேட்காது. ஆஞ்சநேயருக்கு வடமாலை, புட்டலூரு நேர்த்தி, குலதெய்வத்துக்கு பொங்கல், திருப்பதி வேண்டுதல் என்று ஏராளமான நேர்த்திக்கடன் அம்மாவுக்கு பாக்கியிருக்கிறது. 'குழந்தை வளர்ப்பது எப்படி?' புத்தகம் கிழக்கில் கிடைக்குமா? இல்லையென்றால் பரவாயில்லை, மணிமேகலையில் கண்டிப்பாக கிடைக்கும்.

இளையராஜா!


வால்மீகி படவிழாவில் இளையராஜா பேசியதை கேட்டு எனக்கும் முதலில் அதிர்ச்சியாக இருந்தது. யாரையும் இவ்வளவு விட்டேத்தியாக மேடையில் அவர் பேசியதாக நினைவில்லை. சில மேடைகளில் சூடாகியிருக்கிறார். ஆனாலும் தனிப்பட்ட முறையில் பெயரையெல்லாம் சொல்லித் திட்டியதில்லை.

மிஷ்கினைப் பற்றி பெரிய அபிப்பிராயம் எதுவும் எனக்கு கிடையாது. அவரது முதல் படம் மற்றவர்கள் சொல்லுமளவுக்கு ஆஹா, ஓஹோவென்றெல்லாம் எனக்கு படவில்லை. ’வாளமீனுக்கும்’ பாட்டால் தப்பித்தது. இரண்டாவது படமும் சுமார்தான். ஆனாலும் அவரது பேட்டிகளைப் பார்த்தால் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் மாதிரி பேசுவார்.

கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் யோகியாக மாறிவிட்ட இளையராஜா அவர் மீது கோபப்பட என்னதான் காரணம் இருக்கமுடியும்?

மிஷ்கினின் நந்தலாலா படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படம் பற்றி பேசும்போதெல்லாம் இளையராஜாவைப் பற்றி தவறாமல் சொல்லிவந்தார் மிஷ்கின். சிலநாட்களாக இளையராஜாவின் பெயரை அவர் உச்சரிக்காதது போல தெரிந்தது. ஏதோ புகைச்சல் என்று அப்போதே யூகிக்க முடிந்தது. விசாரித்துப் பார்த்தால் இளையராஜாவை வற்புறுத்தி ஐந்து பாடல்கள் கேட்டு வாங்கியவர் படத்தில் இரண்டு பாடல்களை மட்டுமே பயன்படுத்திக் கொண்டதாக சொல்கிறார்கள். அதுகூட இயக்குனரின் சுதந்திரம்.

இருப்பினும் இளையராஜாவுக்கு தெரியாமலேயே ‘ஏலிலோ’ என்ற நரிக்குறவப் பாடல் ஒன்றினை படத்தில் மிஷ்கின் சேர்த்ததாக சொல்கிறார்கள். அதாவது அப்படத்தின் இசையமைப்பாளருக்கு தெரியாமலேயே ரெகார்டிங் ஸ்டுடியோவில் ஒரு சவுண்ட் என்ஜினியரின் உதவியோடு இப்பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டதாம். இப்படி ஒரு பாடல் படத்தில் இருப்பதையே அப்படத்தின் இசையமைப்பாளர் யாரோ சொல்லி கேள்விப்படுவது கொடுமைதானே?

‘வால்மீகி’ இசைமேடையில் மிஷ்கினை பார்த்ததுமே இளையராஜா பொங்கிவிட்டதின் பின்னணி இதுதான் என்று சினிமா நண்பர்கள் சொல்கிறார்கள்.

இளையராஜா இதுபோல தொழிற்முறை சர்ச்சைகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல. ‘அஞ்சலி’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவின் போது இளையராஜாவின் கால்களில் திரையுலக முக்கியஸ்தர்கள் விழுந்து ஆசிப்பெற்றார்களாம். அக்காலக் கட்டத்தில் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ராஜ்கிரண் போன்றோர் அம்மாவின் காலில் விழும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாதிரி இளையராஜாவைக் கண்டதுமே காலில் ‘தொப்பென்று’ விழுவது வழக்கம்.

அதே மேடையில் வீற்றிருந்த தமிழ் சினிமாவின் உச்சத்துக்கு அது உறுத்தியதாம். உச்சமும், இளையராஜாவும் அடுத்தப் படத்தில் இணைந்திருந்தார்கள். அப்படத்திலும் இளையராஜாவின் கொடி உச்சத்தின் புகழைவிடவும் அதிகமாக பறந்தது. தமிழின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இன்றளவும் பட்டியலிடப்படும் அப்படத்தின் இயக்கம், நடிப்பினையும் தாண்டி இளையராஜாவின் இசை சிரஞ்சீவியாக வாழுவதற்கு இன்றும் பி.பி.சி.யின் உலகளவில் பிரபலமான பாடல்கள் பட்டியலே சாட்சி. அதன்பின்னரே இளையராஜா குறிவைத்து முதுகில் குத்தப்பட்டதாக சொல்வார்கள்.

இளையராஜாவிடமும் குறை இருக்கிறது. அவரது கர்வம் மற்றவர்களிடமிருந்து அவரை தனிமைப்படுத்தியிருக்கிறது. மற்றவர்களுக்கும் கர்வம் உண்டு. ஆனால் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்லை. கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ நூலை நீங்கள் வாசித்திருக்கலாம். அந்நூலில் இளையராஜா குறித்த கவிஞரின் கருத்துகள் மிக முக்கியமானவை. அவற்றை இளையராஜா ஏற்றுக் கொள்கிறாரோ இல்லையோ, மற்றவர்கள் ஒப்புக்கொள்ளும் வண்ணம் எழுதியிருப்பார் கவிஞர்.

இளையராஜா தனது கர்வத்தையும், போராட்டக் குணத்தையும் காட்ட வேண்டிய நேரத்தில் காட்டாததே அவரது பின்னடைவுக்கு காரணமாக அமைந்தது என்பதையும் மறுக்கமுடியாது. திருவண்ணாமலை கோவில் கும்பாபிஷேக விவகாரம் இதற்கு நல்ல சாட்சி. தலித் மக்கள் இளையராஜாவை அம்பேத்கருக்கு இணையாக தங்கள் சுவரொட்டிகளில் வெளிப்படுத்தியப்போது, ‘சாதி அடையாளம் வேண்டாம்’ என்றுகூறி அதைத் தீவிரமாக எதிர்த்தவர் திருவண்ணாமலை கோவில் விவகாரத்தில் மவுனமாக அடங்கியது, அவர்மீதான இமேஜை உடைத்தது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ‘நவீன பார்ப்பனர்’ என்ற அவர்மீதான சொல்லடிகளுக்குப் பின்னால் நியாயமுண்டு என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

‘சிம்பொனி’ சர்ச்சை குறித்து இதுவரை இளையராஜாவிடம் இருந்து தெளிவான பதில் வந்ததே இல்லை. அவர் நிஜமாகவே சிம்பொனிக்கு இசையமைத்தாரா இல்லையா என்பதெல்லாம் பிரச்சினையே இல்லை. அவரது சிம்பொனியை கேட்டுதான் அவரை நேசிக்க வேண்டும் என்ற காரணமெல்லாம் தமிழனுக்கும் இல்லை.

இளையராஜாவின் இசை மட்டுமல்ல, அவரது கர்வத்தையும் சேர்த்தே அவரை ஏனோ எனக்குப் பிடித்திருக்கிறது!