13 ஆகஸ்ட், 2009

பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன்!


எழுத்தாளர் ஞாநியின் ‘கோலம் குறுந்தகடு இயக்கம்’ பற்றி இந்தவார குமுதத்தில் வாசித்திருப்பீர்கள். படங்கள் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் திரையிடாமல் நேரடியாக மக்களுக்கு குறுந்தகடு வாயிலாக (துட்டு வாங்கிக் கொண்டுதான்) அனுப்பும் இயக்கம் இது. இந்த இயக்கத்தின் தொடக்கம் இன்று மாலை சரியாக 6.30 மணிக்கு (13-08-09) சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெறுகிறது.

இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா மற்றும் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். அனைவரும் நண்பர்களோடு வரலாம் என்று ஞாநி அறிவித்திருக்கிறார்.

ஞாநியின் விழாக்களில் கவர்ச்சிகர அம்சமாக அவருடைய டிசைனர் பைஜாமா உடையலங்காரத்தை முக்கியமாக குறிப்பிடலாம். எங்கேயாவது ரெடிமேடாக கிடைக்கிறதா? இல்லை அவருக்கென்று ஆர்டர் செய்து தைக்கிறாரா என்று நேரில் விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம்.

கோகுலாஷ்டமி கும்பிடாத புண்ணியவான்கள் வந்துசேரலாம். சென்னை பிலிம் சேம்பர் அரங்கு, அண்ணா மேம்பாலத்துக்கு கீழே இருக்கிறது.

12 ஆகஸ்ட், 2009

சும்மா டைம்பாஸ்!

பன்றிக் காய்ச்சல் - ஊடகங்கள்!

பாரதிக்கு வயது 20. கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் நடந்தது. கணவர் மாடசாமி. மடிப்பாக்கத்தில் மளிகைக்கடை வைத்திருக்கிறார். ஆடிமாசத்துக்காக தாய்வீட்டுக்கு வந்த பாரதிக்கு திடீர் காய்ச்சல். உள்ளூர் மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்றும் காய்ச்சல் சரியாகவில்லை. சீரியஸான நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பன்றிக்காய்ச்சலுக்கான சோதனை அவருக்கு செய்யப்பட்டது. சோதனை முடிவுகளுக்கு முன்பே பாரதி பரிதாபமாக மரித்துப் போனார்.

மடிப்பாக்கம் பகுதியில் தீயென பரவியது பாரதியின் மரணச்செய்தி. ஏற்கனவே கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களிலும், வார இதழ்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் பார்த்துப் பதறிய பன்றிக்காய்ச்சல் தங்கள் ஊருக்கும் வந்துவிட்டதோ என்று அஞ்சி நடுங்கினார்கள். இடையில் வேளச்சேரியில் ஒரு குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலியானது நாளிதழ்களின் தலைப்புச் செய்தியானது.

தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினார்கள். மெடிக்கல் ஷாப்களில் விற்கப்படும் ‘மாஸ்க்’ வாங்கி அணிய ஆரம்பித்தார்கள். இன்று மடிப்பாக்கம், வேளச்சேரி சுற்றுவட்டாரங்களில் எந்த மெடிக்கல் ஷாப்பிலும் ‘மாஸ்க்’ ஸ்டாக் இல்லை. தென்சென்னையில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. ”எதுக்கும் உஷாரா இருந்தோப்பமே?” என்று கிங் இன்ஸ்ட்டிட்யூடில் வரிசையில் நின்று பன்றிக்காய்ச்சலுக்கான பரிசோதனையை செய்துக் கொள்கிறார்கள். மொத்தமாக பரிசோதனைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் பரிசோதகர்களே திணறிப் போயிருக்கிறார்கள்.

பாரதிக்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகள் இப்போது வெளிவந்திருக்கிறது. அவருக்கு பன்றிக்காய்ச்சல் இல்லையாம்.

* - * - * - * - * - * - * - * - *

பன்றிக்காய்ச்சல் காரணமாக ஊரே பிணக்காடாகி விட்டது போன்ற பீதியை ஊடகங்கள் கிளப்பி வருகின்றன. நூற்றி பத்து கோடி பேர் வசிக்கும் நாட்டில் ஆயிரத்துக்கு ஏழு பேர் இறப்பதும், புதியதாக இருபத்து மூன்று பேர் பிறப்பதும் இயல்பாக நடந்து வரும் விஷயம். ஆயிரத்துக்கு ஏழு பேர் என்றால் நூற்றி பத்து கோடிக்கு எத்தனை பேர் இறக்கிறார்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். மரணங்களும், பிறப்புகளும் நம் நாட்டுக்கு புதியதல்ல.

சுனாமி பேரிடரின் போது நம் பத்திரிகைகள் நடந்துகொண்ட விதம் உலகுக்கே முன்னுதாரணம். ஆனால் இப்போது பன்றிக்காய்ச்சல் போன்ற அசாதாரண சூழலில் நடக்கும் ஒவ்வொரு சாதாரண மரணமும் கூட ஊடகங்களால் பெரிதுப்படுத்தப்பட்டு உயிரோடு இருப்பவர்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணம்தான் மேலே கண்ட பாரதியின் மரணம். மரணம் கொடுமையானதுதான். ஒவ்வொரு மரணத்தின் போதும் அவர்களது குடும்பத்தார் கதறியழுவது சகஜமாக நடப்பதுதான். இதையெல்லாம் படம் பிடித்து டிவியில் போட்டு, பத்திரிகைகளில் படமாக்கி, பல கோடி பேரை அச்சமடையச் செய்வது நம் ஊடகங்களின் இன்றைய டிரெண்ட் ஆக இருக்கிறது. ’மும்பை 26/11’ சம்பவத்தின் போதே நம் ஊடகங்களின் யோக்கியதை சந்தி சிரித்தது.

போலியோ மருந்து போடப்படும் தினங்களிலும் இதுபோலவே பொறுப்பின்றி ஊடகங்கள் நடந்துகொள்வதால் பல்லாயிரம் குழந்தைகளுக்கு அந்தச் சொட்டுமருந்து போடப்படாமல் போவது கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு தினமும் தமிழகத்தில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து குழந்தைகளாவது மரித்துப் போகிறது. போலியோ சொட்டு மருந்து போடப்படும் தினத்திலும் இது தவிர்க்க இயலாதது. ஆனால் சொட்டு மருந்து போட்டுக் கொண்டதால் நான்கு குழந்தைகள் பலி என்று டிவியில் ஸ்க்ரோல் ஓட்டுவதாலும், மாலைச் செய்திகளில் குழந்தையின் பெற்றோர் கதறியழும் படத்தை அச்சிடுவதாலும் ஏற்படும் விளைவுகள் என்ன?

மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பது அவசியமென்றாலும், வீணான வதந்திகளையும் இலவசமாக கொண்டு சேர்க்கும் பொறுப்பற்றத் தனத்தையும் நம் ஊடகங்கள் செய்துவருகிறது. இதுபோன்ற அசாதாரணச் சூழல்களில் பணியாற்றி, பாடுபட்டு வரும் அரசுக்கும், அரசின் ஊழியர்களுக்கும் இவை சிக்கலையும், சோர்வையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும்.

குறிப்பாக, பிராந்திய மொழி ஊடகங்களிடமே இந்த ’பரபரப்பு’ தொற்றுநோய் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. தேசிய அளவில் செயல்படும் ஆங்கில ஊடகங்கள் ஓரளவுக்கு பரவாயில்லை. நிபுணர்களின் கருத்துகள், தவிர்க்கும் முறைகள் என்று கொஞ்சம் ஆழமாக செய்திகளை வெளியிடுகிறார்கள். இன்று காலை ஒரு தமிழ் நாளிதழில் பன்றிக்காய்ச்சல் குறித்து ஒரு ஜோசியர் சொன்னதை கட்டம் கட்டி வெளியிடப்பட்டதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டேன். விரோதி வருடம் பிறந்தபோதே, அவர் ஒரு உபன்யாசத்தில் இதை கோட்டிட்டுக் காட்டியிருந்தாராம். பன்றிக்காய்ச்சல் வருவதைத் தடுக்க சிவ வழிபாடு செய்யவேண்டுமாம். சிவன் கோயிலில் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடப்போகிறார்கள். யாராவது பன்றிக்காய்ச்சல் வந்தவரும் அந்தக் கூட்டத்துக்கு வந்து வழிபட்டுச் சென்றால், முடிந்தது ஜோலி.

உலகளவில் ஊடகங்களிடம் இரண்டு பாணி உண்டு. ஒன்று பிபிசி பாணி. மற்றொன்று சி.என்.என் பாணி. நடந்ததை நடந்ததாக சொல்லுவது பிபிசி பாணி. நடந்த விஷயங்களை வைத்து என்னவெல்லாம் இனி நடக்கும் என்று யூகித்து செய்து வெளியிட்டு, சென்சேஷனல் ஆக்குவது சி.என்.என். பாணி. பன்றிக்காய்ச்சல் போன்ற நோய் பரவும் காலங்களிலும், பேரிடர் சமயங்களில் மட்டுமாவது பிபிசி பாணியை நம் ஊடகங்கள் பாவித்தால் தேவலை.

11 ஆகஸ்ட், 2009

டாப் 10 தமிழ் வலைப்பூக்கள்!


இப்பொழுது போட்டி முடிவில் வென்றால் கூட ‘நான் ஏன் வென்றேன்?’ என்று காரணம் விசாரிக்கிறார்கள். எனவே, தமிழ்ப்பதிவுகளில் டாப் 10 சொல்லுமுன், அதற்கான நியாயங்கற்பித்தல் பட்டியல்:

இன்றைய தேதியில் யாருடைய பதிவு அனேக இணைய வாசகர்களால் மொயக்கப்படுகிறது?

எவர் எழுதினால் தமிழ்மணம் துவங்கி ட்விட்டர் வரை இரத்த பீஜனாக ரணகளமாகும்?

உயிர்மை போன்ற இலக்கிய குறு பத்திரிகை அளவிலும் சரி; குமுதம் போன்ற பெரு சஞ்சிகை வாசகர் ரேஞ்சிலும் சரி… ரீச் உண்டா?

அலெக்ஸா தர வரிசை எண் கணிதம்.

கூகிள் பேஜ் ரேங்க் என்ன?

பத்ரியின் பக்கவாட்டு பட்டியலில் பெயர் பெற்றிருக்கிறாரா?

கூகிள் ரீடரில் எவ்வளவு பேர் சந்தாதாரர் ஆகியிருக்கிறார்? செய்தியோடையை ப்ளாக்லைன்ஸ் மூலம் வாசிக்கும் எண்ணிக்கை எவ்வளவு?

‘புதுசு… கண்ணா… புதுசு’ மட்டுமில்லாமல், பச்பச்சென்று பார்த்ததும் கொள்ளை கொள்வதில் மேகன் ஃபாக்சாக எவர் உள்ளார்?

போன புல்லட் பாய்ன்ட்டிற்கு நேர் எதிராக கே பாலச்சந்தர் போல் வயசான காலத்திலும் சின்னத்திரை, மேடை நாடகம் என்று பழைய காவேரியை பாடில்ட் வாட்டர் ஆக்குபவரா?
என்னுடைய இதயத்தில் இடம் உண்டா?

டாப் 10 வலைப்பதிவுகளை காண இங்கே அழுத்தி அமுக்கவும்!

10 ஆகஸ்ட், 2009

அனார்கலி!


போர் - வாள் - இரத்தம் - வெற்றி! இடையில் இளைப்பாற அரண்மனை - அந்தப்புரம் - மது - மாது - இசை - நடனம்! இது தான் மொகலாயப் பேரரசர்கள்!

புத்திரப் பாக்கியம் வேண்டி பாலைமணலில், கடும் வெயிலில் வெறும்காலுடன் இந்துஸ்தானை ஆளும் மொகலாயப் பேரரசர் அக்பர் பாதயாத்திரை நடத்தும் காட்சியில் படம் தொடங்குகிறது. தவமாய் தவமிருந்து மாமன்னர் அக்பரின் மனைவி ஜோத்பாய்க்கு ஒரு மகன் பிறக்கிறார். அவர் இளவரசர் சலீம்.

மொகலாயப் பேரரசின் ஒரே வாரிசாகிய சலீம் அந்தப்புர மகளிரின் மென்மையான கரங்களுக்குள் செல்லமாய் வளர்கிறார். எட்டு வயதிலேயே மது, மாது என கேளிக்கைகளில் கலந்து, தந்தையைக் கலவரப்படுத்துகிறார். மகனின் இந்த மனம் போன போக்கை கண்ட மாமன்னர் அவர் போராடித் திருந்த வேண்டும் என்பதற்காக அந்த வயதிலேயே போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கிறார். வாளின் இடையறா 'கிளிங், கிளிங்' சத்தம், பீரங்கி குண்டுகளின் 'டமார் டுமீர்'. இதற்கிடையே போர்க்களத்தில் வளர்கிறார் இளவரசர். அசராத வீரம் காட்டி வெற்றி மேல் வெற்றியாக குவித்து தன் தந்தையின் காலடியில் சமர்ப்பிக்கிறார்.

சுமார் 14 ஆண்டுகள் கழித்து மாமன்னருக்கு புத்திரப் பாசம் பொத்துக் கொண்டு வருகிறது. போர் போதும், அரண்மனைக்கு திரும்பு என ஆணையிடுகிறார். மகனைப் பிரிந்த மகாராணி மகனின் வரவை எண்ணி மகிழ்ச்சியடைகிறார். மாவீரனை வரவேற்க அரண்மனையே விழாக்கோலம் பூணுகிறது. இளவரசரை வரவேற்கும் விதமாக அவரை அசத்தும் வகையில் ஒரு சிலையை செய்யுமாறு அரண்மனைச் சிற்பிக்கு ஆணை போகிறது.

குறித்த நேரத்துக்குள் சிலையைச் செய்து முடிக்க இயலாத சிற்பி, ஒரு சித்து விளையாட்டைச் செய்கிறார்! சிலைக்கு மாடலாக நின்ற அந்த அழகுப் பெண்ணையே சிலையாக நிறுத்தி முத்துத் தோரணங்களால் மூடி வைக்கிறார். சிலைப்பெண்ணின் அழகு இளவரசரை சொக்க வைக்கிறது. தான் உயிர்ப்பெண் என்பதை அவள் ஒப்புக் கொண்டுவிடுகிறாள். அதன்பின் வேறென்ன நடக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? காதல் தான்! இளவரசரை சிலிர்க்கவைத்த அந்த சிங்காரச் சிலை தான் அனார்கலி.

சாதாரணப் பணிப்பெண்ணை மகாராணியாக்க இளவரசர் முடிவெடுக்கிறார். மொகலாயப் பேரரசரும், அவர் மனைவியும் பாரம்பரியத்தை காரணம் காட்டி இளவசரின் காதலை நிராகரிக்கிறார்கள். அரசர் அனார்கலியை சிறை வைக்கிறார். காதல் போதை ஏறிய இளவரசர் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் படையை கொண்டு மன்னர் மீதே போர் தொடுக்கிறார். இடையில் அனார்கலியை தன் ராஜபுத்திர நண்பனின் துணைகொண்டு சிறையில் இருந்து கடத்துகிறார் சலீம்.

என்னதான் வீர, தீரம் இளவரசர் சலீமுக்கு இருந்தாலும் அவர் மோதுவது இந்துஸ்தானின் பேரரசரிடம் ஆயிற்றே. பப்பு வேகுமா? மன்னரின் வீரத்துக்கு முன் சலீமின் படை சின்னாபின்னம் ஆகிறது. கலகம் விளைவித்ததாக குற்றம் சாட்டி இளவரசருக்கு மரணதண்டனை விதிக்கிறார் அரசர். மரணதண்டனையை வாபஸ் வாங்குமாறு நாடே கேட்டுக் கொள்கிறது அரசரை. அரசர் வாபஸ் வாங்க ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதாவது அனார்கலியை திரும்ப ஒப்படைத்தால் இளவரசருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்கிறார். மாமன்னர் அக்பரின் மகனாயிற்றே சலீம். ஒத்துக் கொள்வாரா?

சலீமுக்கு மரணதண்டனை என்பதை கேள்விப்பட்ட அனார்கலி அவராகவே வந்து சரணடைகிறார். மரணதண்டனை மாற்றி அமைக்கப்படுகிறது. சலீமுக்கு பதிலாக அனார்கலிக்கு மரணதண்டனை. உயிருடன் அவருக்கு கல்லறை கட்ட வேண்டுமென்பது மன்னரின் ஆணை. அனார்கலியிடம் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்படுகிறது. ஒரு நாளாவது மொகலாயப் பேரரசுக்கு மகாராணியாக இருக்க வேண்டுமென்பது அனார்கலியின் ஆசை. மன்னரும் இதற்கு ஒத்துக் கொள்கிறார் வழக்கம்போல ஒரு நிபந்தனையுடன்.

அதாவது மகாராணியாகும் அனார்கலி முதலிரவுக் கொண்டாட்டம் முடிந்து மறுநாள் விடிவதற்குள் சலீமை மயங்கவைத்து விட்டு (ரோஜாப்பூவில் மயக்க மருந்து) மரணதண்டனைக்கு சம்மதிக்க வேண்டும் என்பதே நிபந்தனை. அவ்வாறே நடக்கிறது. சலீம் மயங்கியவுடன் மாமன்னரின் சிறப்பு மெய்க்காவல் படையினர் அனார்கலியை அழைத்துச் சென்று உயிருடன் கல்லறை கட்டுகின்றனர். கல்லறை 99 சதவிகிதம் முடிந்து விட்டது. அனார்கலியின் கண்கள் மட்டுமே வெளியே தெரிகிறது.

என்ன ஆச்சு? அனார்கலி மரணமடைந்தாரா? இல்லை மயக்கம் தெளிந்த சலீமால் காப்பாற்றப் பட்டாரா? கருணை நிறைந்தவராக வரலாற்றில் குறிப்பிடப்பட்ட பேரரசர் அக்பரின் கருணை இவ்வளவு தானா? பரபரப்பான கிளைமேக்ஸை நீங்களும் வண்ணத்திரையில் காணுங்களேன். ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இப்படம் வரும் பதினான்காம் தேதி திரையரங்குகளில் திரையிடப்படுவதாக விளம்பரப் படுத்தப் பட்டிருக்கிறது.

1960ல் வெளியிடப்பட்ட முகல்-இ-ஆஸம் என்ற இந்தித் திரைப்படம் கருப்பு வெள்ளையில் வெளியானது. மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை மவுண்ட் ரோட்டில் "ப்ளாக்கில்" டிக்கெட் வாங்கி பெருசுகள் படம் பார்த்தார்களாம். இந்த மாபெரும் காவியம் 2004ல் வண்ணமாக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் சுமார் 3 லட்சம் பிரேம்களை வண்ணமாக்கியிருப்பது என்பது மாபெரும் அதிசயம். அசுர உழைப்பு உழைத்திருக்கிறார்கள் கம்ப்யூட்டர் வல்லுனர்கள்.

சலீம் - அனார்கலி கதை வரலாற்றில் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. இது கட்டுக்கதையே. பீர்பால் மற்றும் தெனாலிராமன் கதைகளில் நம் ஆட்கள் சுவாரஸ்யத்திற்காக எவ்வளவு கற்பனை செய்திருக்கிறார்களோ அதுபோலவே அக்பர் மற்றும் அவரது மகன் வாழ்வையும் சுவாரஸ்யமான காதல் கதை ஆக்கியிருக்கிறார்கள்.

படம் வரலாறோடு எந்த அளவுக்கு ஒத்துப் போகிறது என்று பார்த்தோமானால் அக்பர் குழந்தை வரம் வேண்டி ஒரு முஸ்லிம் துறவியை சந்திப்பது போல முதல் காட்சி அமைந்திருக்கிறது. அது உண்மையே அக்பர் சந்தித்த முஸ்லிம் துறவியின் பெயர் ஷேக் சலீம் சிஸ்டி. இது அக்பரின் 27ஆவது வயதில் நடந்தது. அக்பரின் சுயசரிதையான "அக்பர் நாமாவை" எழுதிய அப்துல் பஸல் இதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

அக்பரின் மகன் பெயர் சலீம் என்பதும் உண்மையே. பிற்காலத்தில் இவர்தான் "ஜஹாங்கீர்" என்ற பெயரில் மொகலாயப் பேரரசை கட்டிக் காத்தவர். அக்பரின் பட்டத்து மகாராணி ஒரு இந்து என்பதும் உண்மையே. அவர் பெயர் ஜோத்பாய். இவர் ஆம்பர் நாட்டு இராஜபுத்திர மன்னர் பீர்மால்சிங்கின் மகள்.

சலீம் படத்தில் காட்டியபடி காதலுக்காக உயிர் விடும் அளவுக்கு போனவர் தான். வரலாற்றில் இவருக்கு 20 மனைவிகள் வரை இருந்ததாக குறிப்புகள் இருக்கிறது (இவர் தந்தையின் மனைவிகள் எண்ணிக்கை செஞ்சுரியைத் தாண்டி விட்டிருக்கிறது) சலீமின் முதல் மனைவியும், பட்டத்து மகாராணியும் கூட ஆம்பர் நாட்டு இந்து இளவரசி தான். சலீம் ரொம்பவும் காதல் செய்து மணந்தது நூர்ஜகான் எனும் கைம்பெண் ஒருவரை. இன்றளவில் மிக உயர்ரக வாசனைத் திரவியமான அத்தர் எனும் ரோஜாப்பூவில் தயாரிக்கப்படும் வாசனைத் திரவியத்தை கண்டுபிடித்தது இந்த நூர்ஜகான் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அனார்கலி என்ற ஒரு கேரக்டரே வரலாற்றில் கிடையாது. அப்துல் பஸல் மட்டுமல்ல மற்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கூட அனார்கலி - சலீம் காதலை கட்டுக்கதை தான் என்று உறுதிப்படுத்துகிறார்கள். கற்பனை தான் என்றாலும் கூட சுவாரஸ்யமாக இருப்பதால் இந்தக் கட்டுக்கதை எழுதியவர்களை மன்னித்து விட்டு விடலாம்.

உண்மை வரலாற்றுக்கும், இந்த திரைப்படத்துக்கும் நிறைய வேறுபாடுகளும், ஒரு சில ஒற்றுமைகளும் மட்டுமே இருக்கிறது. படத்துக்கு செய்யப்பட்ட லைட்டிங் கருப்பு வெள்ளைக்காக செய்யப்பட்டிருப்பதால் இப்போது வண்ணத்தில் பார்க்கும் போது ஒரு சில இடங்களில் கண்ணை உறுத்துகிறது. பாடல்காட்சிகளில் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து வண்ணம் அமைத்திருக்கிறார்கள். குறிப்பாக கிருஷ்ணஜெயந்தி பாடலும், கிளைமேக்ஸ் பாடலும் கண்ணைக் கொள்ளை கொள்கிறது. பாடல்கள் எல்லாமே "ஆஹா, ஓஹோ" ரகம் தான். மனதை மயக்கும் இசை. பாடல்களில் பெரும்பாலானவை கோட்டைகளிலும், அசரவைக்கும் செட்கள் அமைத்தும் படமாக்கப் பட்டிருக்கின்றன.

படத்தின் வசனங்கள் முழுக்க முழுக்க கவிதை நடையிலேயே அமைக்கப்பட்டிருப்பது சிறப்பானது. போருக்கு சென்று விழுப்புண்களுடன் திரும்பும் தன் மகனைப் பார்த்து தாய் சொல்கிறார் "நான் பாலூட்டி உனக்கு கொடுத்த இரத்தத்தை எல்லாம் விவசாயிகள் வயலுக்கு நீர் பாய்ச்சுவது போல போர்க்களத்தில் உன் இரத்தத்தை எல்லாம் பாய்ச்சினாயா?"

ஒருநாள் பட்டத்து ராணியாக அக்பர் கைகளால் கிரீடம் சூட்டிக்கொள்ளும் அனார்கலி திரும்பிப் போகும் போது நின்று அக்பரைப்பார்த்து, "மொகலாயப் பேரரசின் மகாராணியாக இப்போது முடிசூட்டடப் பட்டிருக்கும் அனார்கலி, சக்கரவர்த்தி அக்பர் நாளை காலையில் செய்யப்போகும் குற்றத்தை மன்னித்தருள்கிறாள்" என்று சொல்வது கவிதைச் சவுக்கடி!

இவ்வாறாக படம் முழுவதும் வசனக் கவிதையாக இருப்பதால் பெரும் இடங்களில் ரசிக்க முடிகிறது. சில நேரம் அதுவே ஓவர்டோஸோ என்று கூட நினைக்க வைக்கிறது. சரித்திரக் கதைகளை இனி டப்பிங் செய்யும்போது "இம்சை அரசன்" படத்தின் வசனநடையில் எழுதினாலேயே போதுமானது. இன்றைய தலைமுறை புரிந்துக் கொள்ள கொஞ்சம் வசதியாக இருக்கும். செந்தமிழை எல்லாம் தியேட்டரில் இளைஞர்கள் எந்த அளவுக்கு ரசிப்பார்கள் என்று தெரியவில்லை. "தம்" அடிக்க வெளியே எழுந்துப் போய்விட வாய்ப்புகள் அதிகம்.

போர்க்கள காட்சிகளை 45 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு பிரம்மாண்டமாக எப்படி எடுத்திருப்பார்கள் என்று வியப்பு மேலிடுகிறது. சந்திரலேகா போன்ற பிரம்மாண்ட படங்களை மிஞ்சும் வகையில் ஆயிரக்கணக்கான வீரர்களைப் பயன்படுத்தி நம் கண்களையே நம்ப முடியாத வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களுமே மிக இயல்பாக (ஓவர் ஆக்டிங் இல்லாமல்) தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அக்பராக நடித்திருக்கும் பிருத்விராஜ்கபூர் (ராஜ்கபூரின் நைனாவா?) கம்பீரமாக கலக்கலாக நடித்திருக்கிறார். அக்பர் அறிஞர் அண்ணாவைப் போல ரொம்பவும் குள்ளம் என்று படித்திருக்கிறேன். இவர் கொஞ்சம் உயரமாக இருப்பதுபோல படுகிறது.

சலீமாக நடித்த திலீப்குமார் போர்க்களத்தில் செங்கிஸ்கான் மாதிரி வீரம் காட்டுகிறார். அவர் பார்வையும், நடையும் அருமை. காதலிக்கும் போது தான் "சொங்கி"ஸ்கான் மாதிரி சோம்பல் காட்டுகிறார். எப்போது பார்த்தாலும் காதல் ததும்பும் கண்களுடனேயே போதையுடன் இவர் இருப்பது கடுப்பாக இருக்கிறது. அனார்கலியாக நடித்த மதுபாலா கொள்ளை அழகு. கண்களாலேயே காதல் சுனாமி ஏற்படுத்துகிறார். பொறாமைக்கார அந்தப்புர பணிப்பெண்ணாக பாகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரும் அழகாக இருக்கிறார். அருமையாக நடிக்கிறார்.

45 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருந்தாலும் இந்தப் படத்தின் முக்கியக் கருவான "காதல்" எல்லா காலக்கட்டத்துக்கும் பொருந்தும் ஒரே டிரெண்ட் என்பதால் எவர்க்ரீன் ஹிட் இந்தப்படம்!