3 அக்டோபர், 2009

மாங்குடி மாறிய கதை!


ஜோதிமணிக்கு வயது பத்தொன்பது. அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். விரும்பி சேர்ந்த வேலை இது. அவருக்கு ஒரு கனவு இருந்தது. அடிப்படையில் இருந்து எல்லாமே மாறவேண்டும். மாணவர்களின் தலையெழுத்து மாற்றி எழுதப்பட வேண்டும். ஆசிரியப் பணியில் மட்டுமே இது சாத்தியம்.

மாணவர்கள் சோர்வின்றி கல்வி கற்கவேண்டும். இதற்கு வாகான வகுப்பறைகள் வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு தொலைக்காட்சி பெட்டி, சுவர்க் கடிகாரம், காலண்டர், குடிதண்ணீர் குழாய், முகம் பார்க்கும் கண்ணாடி, நகம் வெட்டும் நெயில் கட்டர், குப்பைக்கூடை, மாணவர்கள் தங்களுக்குள் கடிதப் பரிமாற்றம் செய்துகொள்ள அஞ்சல்பெட்டி, கம்ப்யூட்டர், சுகாதாரமான கழிப்பறை, விளையாட்டுப் பொருட்கள், பூங்கா... இப்படியெல்லாம் நீண்டுக்கொண்டே போனது ஜோதிமணியின் கனவு. மனது வைத்தால் இவை சாத்தியப்படக் கூடிய மிக எளிய விஷயங்களே என்று நம்பினார்.

கிட்ட்ததட்ட இருபது ஆண்டுகள் கழித்து கனவை நனவாக்க இவருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைக்கிறது. இப்போது மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஜோதிமணிதான் தலைமை ஆசிரியர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து, பேராவூரணி செல்லும் சாலையில், சரியாக ஏழாவது கிலோ மீட்டரில், மெயின்ரோட்டில் இருந்து இடதுபுறம் திரும்பி ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தால் மாங்குடி.

எல்லா அரசுப்பள்ளிகளையும் போன்றுதான் மாங்குடி பள்ளியும் அப்போது இருந்தது. மாணவர்கள் கூட்டமாக, கத்திக்கொண்டே, ஒழுங்கில்லாமல் பள்ளிக்கு ஏனோதானோவென்று வந்து சென்றார்கள். தலைவாருவதில்லை. அழுக்கான ஒழுங்கற்ற உடை. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கிடையாது. கழிப்பறை கிடையாது. சீமை ஓடு வேய்ந்த சிறிய கட்டடங்கள். மாணவர்கள் கிட்டத்தட்ட இங்கே அடைக்கப்பட்டிருந்தார்கள் என்று சொல்லுவதே பொருத்தம்.
மாற்ற வேண்டும். எல்லாவற்றையும் மாற்றவேண்டும். எங்கிருந்து தொடங்குவது? முதலில் எதை மாற்றுவது? எதை செய்யவேண்டும் என்ற தெளிவு எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால் எந்த புள்ளியிலிருந்து தொடங்குவது என்பதில்தான் எல்லோருக்குமே குழப்பம். அந்தப் புள்ளி சீக்கிரமே ஜோதிமணிக்கு பிடிபட்டு விட்டது.

தலைவாராமல் பள்ளிக்கு வரும் மாணவிகளை சரிசெய்வதில் ஆரம்பித்தார். மாணவிகளை குறை சொல்லி என்ன பிரயோசனம்? பெற்றோர் தினமும் தலைவாரி அனுப்பினால் ஒழுங்காக வரப்போகிறார்கள். பெற்றோர்களை அழைத்துப் பேசினார். “பாருங்க இனிமே திங்கள் ரெட்டைசடைன்னா, செவ்வாய் ஒத்தசடை, புதன் மறுபடியும் இரட்டைசடை. இப்படி மாத்தி மாத்தி தலை பின்னிதான் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பணும்!” – இந்த ஐடியா நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. மாறி, மாறி ஒற்றைசடை, இரட்டைசடை என்பதால் தினமும் தலைசீவியாக வேண்டிய கட்டாயம்.

அடுத்ததாக யூனிபார்ம். அரசு அளிப்பது வருடத்திற்கு ஒரே ஒரு செட். ஒருநாள் அணிந்து வந்ததை மறுநாள் அணியமுடியாது என்பதால், மாணவர்கள் இஷ்டத்துக்கும் கலர் உடை அணிந்து வந்தார்கள். சிலரது உடை கிழிந்திருக்கும். சிலரது உடை அழுக்காக இருக்கும். மாணவர்களுக்குள்ளே இதனால் ஒவ்வொருவரின் பொருளாதார அளவுகோல் என்னவென்பது தெளிவாய் தெரிந்தது. வசதிகுறைந்த மாணவர்கள் தாழ்வுமனப்பான்மையில் மனம் குன்றினர்.

அவ்வருட தீபாவளிக்கு முன்பாக ஒட்டுமொத்தமாக பெற்றோரை அழைத்து கூட்டம் போட்டார் ஜோதிமணி. “தீபாவளிக்கு எல்லோரும் பசங்களுக்கு எப்பாடு பட்டாவது துணி எடுத்துடுவீங்கன்னு தெரியும். ஆனா இந்தமுறை ஒரே ஒரு கண்டிஷன். எல்லாரும் யூனிபார்ம் தான் எடுக்கணும். ஏற்கனவே ஒரு செட் இருக்கு. இன்னொரு செட் வந்துடிச்சின்னா பசங்க எல்லா நாளும் யூனிஃபார்மிலே ஸ்கூலுக்கு வரலாமில்லே?”

பெற்றோர்கள் யோசித்தார்கள். இவர் வேறுமாதிரியான ஆசிரியர். நம் பிள்ளைகளுக்கு ஏதோ நல்லது செய்ய நினைக்கிறார். நாம் ஏன் குறுக்கே நிற்கவேண்டும்? ஜோதிமணி என்ன சொன்னாலும் தலையாட்டத் தயார் ஆனார்கள். குழந்தைகள் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கம்பி மாதிரி. எப்படி வளைக்கிறோமோ அப்படி வளைகிறார்கள். ஜோதிமணி நல்லபடியாக வளைக்க ஆரம்பித்தார்.

இதெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கதை...

இன்று, மாநில தொடக்கக் கல்வித்துறை 2007-08ஆம் ஆண்டின் சிறந்த பள்ளியாக மாங்குடி பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அளிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி சுகாதாரத்துக்கான யூனிசெஃப் அமைப்பின் பத்துநட்சத்திர விருதும் கூட. இன்னும் ஏராளமான அமைப்புகளின் விருதுகள் தலைமையாசிரியர் அறையை அலங்கரிக்கிறது. ‘கேம்பஸ்’ என்று சொல்லக்கூடிய ஒரு கல்லூரி வளாகத்துக்குள் இருக்கும் எல்லா வசதிகளுமே இந்த பள்ளிக்கு இப்போது உண்டு. முழுமையான சுற்றுச்சுவர், சுகாதாரமான கழிப்பிடம், இருச்சக்கர வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங், ஐந்தாம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு டெஸ்க், கம்ப்யூட்டர் லேப், நூலகம், அறிவியல் பரிசோதனைக் கூடம், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தனித்தனியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்க்குழாய், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி... இன்னும் என்னவெல்லாமோ...

வெறும் ஐந்தே ஆண்டுகளில் இதெல்லாம் எப்படி சாத்தியம்?

“இதெல்லாமே அரசு கொடுக்குறதை வெச்சிதாங்க பண்ணுறோம். எல்லா பள்ளிகளுக்கும் இதே வசதிகளை அரசு கொடுக்குது. அதை ஆசிரியர்கள் நாம எப்படி எடுத்து பயன்படுத்தறோம்கிறது முக்கியம்!” என்கிறார் ஜோதிமணி. நாற்பத்தின் மூன்று வயதான ஜோதிமணியின் பெயர் இவ்வருட நல்லாசிரியர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். முன்கூட்டிய வாழ்த்துகள் ஜோதிமணி சார்! (இது கட்டுரை எழுதும்போது இருந்த நிலை. கடந்த ஆசிரியர் தினத்தன்று ஜோதிமணிக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்கிறது)

இவர் சொல்லுவதைப் போல இந்த மாற்றங்கள் எல்லோராலேயுமே சாத்தியப்படுத்தக் கூடியதுதான். என்ன.. ஜோதிமணிக்கு இருந்தது போல கொஞ்சம் கனவும், நிறைய மனசும் முதலீடாக தேவைப்படும்!

லைவ் ஃப்ரம் மாங்குடி!

எட்டாம் வகுப்பு படிக்கும் பதிமூன்று வயது விஜயகாந்துக்கு தனியாக ஈமெயில் ஐடி இருக்கிறது. “விஜய்97@ரீடிஃப்மெயில்.காம். நோட் பண்ணிக்குங்க சார்” என்கிறான். இவனுக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் எல்லா மாணவர்களுக்குமே ஈமெயில் ஐடி இருக்கிறது. கம்ப்யூட்டர் தண்ணி பட்ட பாடு. தலைமையாசிரியர் ஜோதிமணியிடம் இணைய இணைப்புக்கான டேட்டாகார்ட் இருக்கிறது. குறிப்பாக மாணவர்கள் இங்கே இணையத்தில் பார்ப்பது தமிழ் விக்கிபீடியா.

“தமிழ் விக்கிபீடியா ஸ்டூடண்ஸுக்கு ரொம்ப உபயோகமா இருக்குங்க. பாடப்புத்தகத்துலே நாங்க பாடம் நடத்தி முடிச்சதும் அந்தப் பாடம் சம்பந்தமா விக்கிபீடியாவில் அவங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா பார்த்து தெரிஞ்சுக்குறாங்க. ஆசிரியர்களோட வேலைப்பளு இதனால குறையுது”

எல்லா மாணவர்களுக்கும் ஈ-கலப்பை மென்பொருள் பயன்படுத்தி தமிழில் டைப் அடிக்கத் தெரிகிறது. பவர்பாயிண்டில் வேகமாக இயங்குகிறார்கள். பேஜ்மேக்கரில் டிசைன் செய்கிறார்கள். பாடம் முடிந்ததும் பவர் பாயிண்டில் குழுவாக அசைன்மெண்ட் செய்யவேண்டும். ஒவ்வொரு குழுவிலும் மூன்று அல்லது நான்கு மாணவர்கள் இருக்கிறார்கள். வகுப்பு ஒன்றுக்கு ஆறு, ஏழு குழுக்கள் இருக்கின்றன. வாரத்துக்கு ஒருமுறை தாங்கள் செய்த அசைண்மெண்ட்களை மற்ற குழுவினர் மத்தியில் ப்ரசண்டேஷன் செய்யவேண்டும். இதற்காக எல்.சி.டி. புரொஜெக்டர் ஒன்றும், பெரிய திரை ஒன்றும் வாங்கி வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பொதுவாக கல்லூரிகளில் இருக்கும் நடைமுறை.

குழு அசைண்மெண்ட் மட்டுமல்லாது ஒவ்வொரு மாணவனுக்கும் தனி அசைண்மெண்ட் உண்டு. முழுநீள வெள்ளைத்தாளில் ஆசிரியர் மூலமாக தான் கற்ற பாடத்தை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டோம் என்பதை எழுதியாக வேண்டும். ஒவ்வொரு அசைண்மெண்டும் தனித்தனி ஃபைல்களில் ஆவணப்படுத்தப் படுகிறது. தேர்வு நெருங்கும் நேரத்தில் இந்த ஃபைலை மாணவன் எடுத்துப் பார்த்து தன்னுடைய முன்னேற்றத்தை சுயமதிப்பீடு செய்துக் கொள்கிறான்.

நூலகம் இங்கே சிறப்பாக இயங்குகிறது. பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் போன்ற விலையுயர்ந்த நூல்களும் உண்டு. மாணவர்கள் ஓய்வுநேரத்தில் தங்களுக்கு வேண்டிய நூல்களை எடுத்துப் படித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வகுப்பறையிலும் சிறியளவிலான நூலகம் தனியாக அமைந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கையாள நிறைய பேர் தேவைப்படுகிறார்கள். ஆனால் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எட்டு மட்டுமே? எப்படி சமாளிக்கிறார்கள்?
“எல்லாத்தையும் பசங்களே பண்ணிடுறானுங்க சார். பள்ளியிலிருந்து எழுதப்படும் கடிதங்களில் ஆரம்பிச்சு, பள்ளியோட மாணவர்கள் வருகைப் பதிவேடுன்னு எல்லாத்தையும் மாணவர்களே கையாளுறாங்க. இங்கே படிக்கிற 241 மாணவர்களில் 200 பேர் ஏதோ ஒரு குழுவில் கட்டாயம் இருப்பாங்க. ஒவ்வொரு வேலைக்கும் ஒரு குழு.

உதாரணத்துக்கு குடிநீர் கண்காணிப்புக் குழு, சுகாதார கண்காணிப்புக் குழு, நூலகக் கண்காணிப்புக் குழுன்னு ஏராளமான குழுக்களா வேலைகளை பிரிச்சிக் கொடுத்திருக்கோம். ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்குறதாலே, அந்தப் பொறுப்புக்கான கடமைகளை, நாங்க சொல்லாம அவங்களே எடுத்துப் பண்ணிடுறாங்க. ஒண்ணு, ரெண்டு முறை தவறு வரும். சின்னக் குழந்தைகள்தானே? ஆனா அதை நாங்க பெரிசுப் படுத்திக்குறது இல்லை. ஆனா இதனால ஒவ்வொரு மாணவனுக்கும் தலைமைப் பண்பு இயல்பாகவே வந்துடுது” என்கிறார் தலைமை ஆசிரியர் ஜோதிமணி.

தொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு இங்கிருந்து போன முன்னாள் மாணவி ஒருவர் டி.சி. கேட்டு வருகிறார். ஒரு விண்ணப்பம் எழுதித்தரச் சொல்லி தலைமையாசிரியர் கேட்க, அவர் முழிக்கிறார். உடனே ஒரு மாணவனை அழைத்து, “தம்பி. இவங்களுக்கு ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடு” என்கிறார். வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒரு வெள்ளைத்தாளில் அழகாக விண்ணப்பம் எழுதிக் கொடுக்கிறான் மாணவன்.

“வெள்ளைத்தாளை கையாளத் தெரிஞ்சுடிச்சின்னா போதும். ஒருத்தன் எதை வேணும்னாலும் சாதிக்கலாம். இங்கே இதைத்தான் நாங்க கற்றுத் தருகிறோம். நாளைக்கு இவங்க வளர்ந்து, அலுவலகங்களில் வேலை பார்க்கும்போது எந்த்த் தயக்கமும் இல்லாம வேலை பார்ப்பாங்க. ஏன்னா எங்க அலுவலக வேலைகளையும் அவர்களே பகிர்ந்துக்கிட்டு அனுபவப் பட்டுடுறாங்க! விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுறது, தேர்வு மதிப்பெண் அட்டைகளை தயார் செய்யுறதுன்னு கம்ப்யூட்டர்லேயே பசங்க எல்லா வேலையையும் முடிச்சிட்டு அழகா பிரிண்ட் எடுத்துக் கொடுத்துடுவாங்க”

பள்ளிக்குள்ளேயே ஒரு போஸ்ட் ஆபிஸ் நடைபெறுவது சுவாரஸ்யமானது. ஒரு போஸ்ட் மாஸ்டர், இரண்டு போஸ்ட் மேன்கள் உண்டு. இவர்களும் மாணவர்கள்தான். இவர்கள் அஞ்சல்குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள். நாலாம் வகுப்பு படிக்கும் மாணவன், எட்டாம் வகுப்பு படிக்கும் தன் அண்ணனுக்கு கடிதம் எழுதி, தன் வகுப்பில் இருக்கும் போஸ்ட் பாக்ஸில் போட்டுவிடலாம். அது போஸ்ட் மேன் மூலமாக சேகரிக்கப்பட்டு, போஸ்ட் மாஸ்டரால் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை இடப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவனுக்கு போய்ச்சேர்ந்து விடுகிறது. ஆசிரியர்களையும் மாணவர்கள் தபால் மூலமாகவே தொடர்பு கொள்கிறார்கள். சாக்பீஸ் தீர்ந்துவிட்டது, வாங்கவேண்டுமென்றால் கரும்பலகைகள் கண்காணிப்புக் குழு, தலைமையாசிரியருக்கு ஒரு கடிதம் மூலமாக தன் தேவையை அனுப்பி வைக்கிறது. இந்த உள்பரிமாற்ற விஷயங்கள்’கடிதம் எழுதுவது’ குறித்த அச்சம் ஏதுமின்றி மாணவர்களை வளர்த்தெடுக்கும் என்கிறார்கள்.

சிறுசேமிப்புத் திட்டமும் உண்டு. மாணவர்கள் சேமித்துத் தரும் பணத்தை ‘ரிகரிங் டெபாசிட்’ ஆக முதலீடு செய்து, அவர்கள் பள்ளியை முடித்துச் செல்லும்போது மொத்தமாக தருகிறார்கள். இது அவர்களது மேல்கல்வித் தேவைகளுக்கு உதவுகிறது.
இந்தப் பள்ளிக்கென்றே தனிச்சின்னம் (Emblem) உருவாக்கியிருக்கிறார்கள். தினசரி காலை தேசியக்கொடியேற்றம் மற்றும் இறைவணக்கக் கூட்டம் நடக்கிறது. மாணவர்கள் சாப்பிடச் சென்றாலும் சரி, இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்றாலும் சரி. வரிசையாகவே செல்கிறார்கள். வரிசையாகவே வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே இவர்களது கையெழுத்து மெச்சப்படக் கூடியதாக இருக்கிறது. இதற்குப் பின்னாலும் தலைமையாசிரியர் இருக்கிறார். பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கிலப் பயிற்சி நிறுவனத்தில் அவர் எடுத்துக் கொண்ட பயிற்சியின் விளைவாகவே, மாணவர்களுக்கு சிறந்த கையெழுத்துத் திறனை அளிக்க முடிகிறது. எல்லா மாணவர்களின் கையெழுத்தும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருக்கிறது. ஒரே மாதிரியான மார்ஜின் விட்டு எழுதுகிறார்கள்.

ஓர் ஆண்டுக்கு மொத்தமாகவே மூன்று மூன்று நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே மாணவர்கள் வாங்க வேண்டியிருக்கிறது. இதற்கு மேல் நோட்டுப் புத்தகங்களில் எழுதியாகவேண்டிய அவசியம் இல்லவேயில்லை என்கிறார்கள் ஆசிரியர்கள். அசைன்மெண்டை வெள்ளை பாண்ட் பேப்பரில் எழுதுகிறார்கள். நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வெள்ளைத்தாள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பேப்பர் லிட் (TNPL) நிறுவனத்தில் வாங்குகிறார்கள்.

மதிய உணவு சாப்பிட வசதியாக கடப்பா கற்களால் அமைக்கப்பட்ட மேடைகள் உண்டு. ஒரே நேரத்தில் நூறு குழந்தைகள் இங்கு வரிசையாக அமர்ந்து சாப்பிடலாம். திறந்தவெளி கலையரங்கம் உண்டு. மூலிகைச்செடிகள் வளர்க்கப்பட்ட பூங்காவில் சறுக்குமரம், ஊஞ்சல் என்று குழந்தைகள் விளையாட இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் கூடம், தொழிற்கூடம் எல்லாம் கூட உண்டு. சென்னையில் இயங்கும் தமிழ்நாடு அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் பங்கு இப்பள்ளியின் அடிப்படைக் கட்டுமானத்தில் உண்டு என்கிறார்கள்.

ஒவ்வொரு வகுப்பறையிலும் டிவி இருக்கிறது. நூலக அறையில் சிடிக்களில் ஒளிபரப்பப்படும் படங்கள் எல்லா வகுப்பறைகளிலும் மாணவர்கள் பார்க்க இயலுகிறது. பாடம் முடிந்துவிட்டால் மாணவர்கள் டிவி பார்க்கலாம். சினிமாப் படங்களும் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதி, காமராஜர் என்று தலைவர்களின் வரலாற்றுப் பட சிடிகளை நிறைய சேமித்து வைத்திருக்கிறார்கள். மதிய வேளையின் போது மாணவர்கள் சத்தம் போடுவதை நிறுத்த ஒலிபெருக்கியில் தேசபக்திப் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள்.

ஒரு வகுப்பில் கூட ‘பிரம்பு’ என்ற வஸ்துவையே பார்க்கமுடியவில்லை என்பது மற்றொரு ஆச்சரியம். ஆசிரியர்கள் முகத்தில் எப்போதும் கனிவு. “நாங்க சத்தம் போடுற மாதிரி மாணவர்கள் நடந்துக்கறதே இல்லை. எல்லாமே ஒரே ஒழுங்கில் செயல்படுறாங்க. இங்கே லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட், ஆவரேஸ் ஸ்டூடண்ட்ஸெல்லாம் இல்லவேயில்லை. ஒவ்வொரு மாசமும் அவங்க அவங்க இடத்தை மாத்துவோம். எல்லோரும் ஒரே மாதிரி நல்லாவே படிக்குறாங்க. இங்க இருந்து போன பசங்க எஸ்.எஸ்.எல்.சியில் நானூறுக்கு மேல மார்க் வாங்குறாங்கன்னு கேள்விப்படுறப்போ மகிழ்ச்சியா இருக்கு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் செயல்வழி கற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் கல்விமுறை மவுனமான கல்விப்புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது என்கிறார் தலைமையாசிரியர். இதன் பலன்கள் இன்னும் சில வருடங்களில் தெரியும். இப்போதே நம் கல்விமுறையை பார்த்து, இதே முறையை பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் அமல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாங்குடிப் பள்ளி இந்தியாவுக்கே ஒரு மாதிரி பள்ளி. தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளும் மாங்குடிப் பள்ளியாய் மாறிவிட்டால் கல்வி வளர்ச்சியில் உலகிலேயே முதல்மாநிலமாக தமிழகம் திகழும் என்பது உறுதி.

(நன்றி : புதிய தலைமுறை)

1 அக்டோபர், 2009

டாஸ்மாக் ஞானி!


நேற்றிரவு தண்ணி அடித்து விட்டு பட்டினப்பாக்கம் டூ மந்தைவெளி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டு இருந்தான் டமாரு. ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகதான் வாந்தி எடுத்திருந்தான். மாவா போட்டிருந்ததால் அது கடைவாயில் ஒழுகி சட்டையை கறையாக்கி இருந்தது. ஏர்டெல் ஆபீஸை தாண்டியதுமே கொஞ்சம் இடதுபுறம் திரும்ப வேண்டி இருந்தது. மப்பு அதிகமானதால் க்ளர்ச்சுக்கு பதிலாக ப்ரேக்கையும், ப்ரேக்குக்கு பதிலாக ஹார்னும் அடித்து தலைகுப்புற விழுந்தான்.

அப்படியே ஓரக்கண்ணால் ரோட்டைப் பார்த்தான். பட்லிஸ் ஏதாவது பார்த்துவிட்டால் மானம் போய்விடும் என்ற பயம் வந்தது. 'கபாலீஸ்வரா' என்று போதையில் பினாத்திவிட்டு, தள்ளாடியபடியே எழுந்து, வண்டியை எட்டி உதைத்துவிட்டு தூக்கினான். மணி எட்டேமுக்காலை தாண்டி இருந்ததால் ரோட்டில் பட்லிஸ் நடமாட்டம் இல்லை. காய்கறி விற்றுக்கொண்டிருந்த சப்பை பட்லிஸ் மட்டும் அவனை சைட் அடித்தது. டமாரும் பதிலுக்கு திருப்பி சைட் அடித்தபோது அவன் அட்டு முகத்தை வெளிச்சத்தில் பார்த்த பட்லிஸ் தூவென காறி உமிழ்ந்தது. அவனது பேண்ட் பாக்கெட்டில் வாட்டர் கலந்து வைத்திருந்த குவார்ட்டர் பாட்டில் ஒன்று சாலையில் கிடந்தது.

எடுத்துக்கொண்டு திரும்பும்போது வேகமாக ஒரு தெருநாய் அவனை நோக்கி கொலைவெறியோடு ஓடிவருவதை பார்த்தான்.

நாய் ஓடிவந்த வேகத்தைப் பார்த்த டமாருக்கு, அது அவனது கிட்னியையே கவ்வி விடுமோ என்ற பயத்தை கொடுத்தது. எப்போதும் நாயை அடிக்க பாக்கெட்டில் கல் வைத்திருப்பது டமாருவின் பழக்கம். அன்று கல் ஸ்டாக் இல்லை. போதையில் வாய் குழற முண்டகக் கண்ணியம்மா என்று பினாத்திக்கொண்டே அருகில் இருந்த கல்லை எடுத்தான். கல்லை கண்டதும் நாயை காணோம். போதை சுத்தமாக இறங்கிவிட அருகிலிருந்த ஒயின்ஷாப்புக்கு மீண்டும் வண்டியை விட்டான் டமாரு.

பின்பு வண்டி ஓட்டும்போதுதான் எங்கெங்கு எல்லாம் அடிபட்டு இருக்கும் என்பதை உணரதொடங்கினான். கிண்ணியிலும், முட்டியிலும் லேசாக வலித்தது. போதை லைட்டாக இருந்தது. தனியாக சென்று கொண்டிருந்ததால் பாக்கெட்டில் அமுக்கி வைத்திருந்த மாவா பாக்கெட்டை பிரித்து வாயில் போட்டான். பேச்சு துணைக்கு யாரும் இல்லாததால் ‘நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு ஓடு ராஜா' என்று வாத்தியார் பாட்டை என்று முணுமுணுக்க தொடங்கினான். கொஞ்சமாக போதை ஏறியது.

“தண்ணி அடிச்சதால தான் கீழே விழுந்தேன்னு சொல்ல வரல. ஆனா தண்ணி அடிச்சா கீழே விழுந்துடுவேனோன்னு பயமாயிருக்கு” என்று அலைபாயுதே மாதவன் மாதிரி பினாத்த ஆரம்பித்தான். டமாரு காண்டாக இருக்கிற நேரங்களில அவனையும் மீறின ஒரு சக்தி, ஒரு தாகம் டாஸ்மாக்குக்கு அவனை அழைத்து செல்கிறது. ஒரு பீரோ, விஸ்கியோ அடித்து அந்த சக்தியை, அந்த தாகத்தை அந்த நேரத்துக்கு தணிக்கிறான்.

டமாரு எப்போதுமே இப்படித்தான். அவனைப் பொறுத்தவரை எப்போதும் டாஸ்மாக் திறந்திருக்கிறதா, மூடியிருக்கிறதா என்று ஒருநாளும் குழம்பியதில்லை. காந்தி ஜெயந்தி அன்றைக்கு கூட ஸ்டாக் வாங்கிவைத்து ரெடியாக இருப்பான். அதுக்காக அன்றைக்கும் ஒயின்ஷாப் ப்ளாக்கில் திறந்திருந்தால் அங்கும் ஒரு குவார்ட்டர் வாங்காமல் இருந்தது இல்லை. ஓசியில் யாராவது சரக்கு வாங்கி கொடுக்க கூப்பிட்டாலும் சரி, கூப்பிடாவிட்டாலும் சரி டமாரே அவர்களோடு போவது உண்டு. டமாரு விஸ்கிதான் சாப்பிடுவான், அதற்காக பீர் அடிப்பவர்களை பார்த்து போதை ஏறுமா என்று ஒருநாளும் அவன் கேட்டது இல்லை. ஒரு கட்டிங் வாங்கி மிக்ஸ் பண்ணி கொள்ளுங்கள் என்று சொல்வதும் இல்லை.

அவனுக்கு தோன்றினால் எப்போதாவது ஜோதி தியேட்டருக்கோ, போரூர் பானு தியேட்டருக்கோ தியேட்டருக்கோ அல்லது சாந்தி தியேட்டருக்கு பக்கத்தில் இருக்கும் காபரே கிளப்புக்கோ செல்வதுண்டு. சரக்கடித்தால் தான் போதை என்ற எண்ணம் வந்தால் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள திருசூலம் டாஸ்மாக், கடல் ஓரத்தில் அமைந்திருக்கும் முனியம்மா சுண்டக்கஞ்சி ஷாப் போன்ற வித விதமான லொகேஷன்களுக்கு ஊறுகாயோடு சென்று விடுவான்.

சரக்குக்கு சைட் டிஷ் வாங்குவதை விட பக்கத்தில் குடிக்கும் குடிகாரர்களிடமிருந்து பொடிமாஸ்ஸோ, இரத்த வறுவலையோ ஆட்டையை போடுவது டமாரின் வழக்கம். ஆனால் பதிலுக்கு ஊறுகாய் கொடுத்து விடுவான். டாஸ்மாக்குக்கு சரக்கடிக்க போவது தப்பா இல்லையா என்று அவனை கேட்டால் தப்பில்லை என்றே சொல்லுவான். ஆனால் மிலிட்டரி சரக்கு வாங்கி வேறு ஒரு பாரில் போய் அந்த கடை சரக்கு வாங்காமல் உட்கார்ந்து அடித்தாலோ, அல்லது சரக்கடிக்காமல் பாரில் உட்கார்ந்து சைட் டிஷ் மட்டும் சாப்பிட்டாலோ அதை கண்டிக்கும் முதல் ஆளும் டமார்தான்.

''ரெண்டு ரவுண்ட் உள்ளப்போனா சுத்தியிருக்குறவன் பேசுற பேச்சுலேர்ந்து, உட்கார்ந்திருக்கிற இடம் வரைக்கும் எதுவுமே விளங்கப்போறதில்லை. இதுல என்ன கருமத்துக்கு 'நான் த்ரீ ஸ்டார் பார்லதான் குடிப்பேன்'னு சிலபேர் வீராப்பா இருக்கானுங்கன்னு தெரியலை. அதே சரக்கு... அதே பாட்டில்... விலை மட்டும் மூணு மடங்கு. அட மடப்பயலுகளா... நானாவது போதையேத்திக்கிட்டு என்னை மறக்குறேன். இவனுங்க போதையேத்தப் போகும்போதே உலகத்தை மறந்து போறானுங்களே.. காசை கரியாக்காதீங்கடா கசுமாளங்களா"

''சரக்கு அடிச்சா போதை வரும். இன்னும் எவ்வளவு அடிச்சாலும் ப்ளாட் ஆகமாட்டோம்ங்குற தன்னம்பிக்கை வரும். அடக்கம் வரும். இங்க்லீஸ் வரும்"

''இந்த ஊரு உலகமே உன்னை சந்தோஷமா இருக்க விடாம அமுக்குது. எவனுக்காச்சும் உன்னோட சந்தோஷத்தைப்பத்தி கவலை இருக்கா. எல்லாரும் அடுத்தவனை ஏறிமிதிச்சுக்கிட்டு 'போடா ங்கொய்யால'னு போறான். அப்புறம் என்னை ......த்துக்கு நீ உலகத்தைப்பத்தி கவலைப்படனும். தவிர உன்னை சந்தோஷமா இருக்கவிடாம செய்யிறதுதானே ஊரு, உலகத்தோட நோக்கம். நீயும் அழுதுகிட்டே இருந்தியன்னா அந்த நோக்கம் நிறைவேறிடும்ல... ஆகக்கூடி நான் சொல்ல வர்றது என்னன்னா, வாழ்க்கையைக் கொண்டாடு தலைவா. டாஸ்மாக் வாழ்க"

இதெல்லாம் டமாருவின் போதை நேரத்து தத்துவ தரிசனங்கள். தற்சமயம் டமாருவை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி, பச்சை போர்டு கடை, (அனிதா பார் எதிரில்) கடை எண் 887, திருவல்லிக்கேணி ஹை ரோடு.

நாய்க்காதலன்!


டமாருக்கு நாய்கள் என்றாலே ஆவாது. நைட்டு சரக்கடித்துவிட்டு போதையில் தள்ளாடிக்கொண்டு வரும்போது இருட்டில் தெருவில் தூங்கும் சொறிநாய்களை மிதித்துவிடுவான். ஒரு குடிகாரனுக்கு இதற்கு கூட உரிமையில்லையா என்ன? உயிரே போய்விட்டது போல அந்த நாய்கள் 'வாள் வாளென்று' கத்தி அதனாலேயே அவனுக்கு பலமுறை போதை தெளிந்துவிடும். மறுபடியும் போய் ஒரு கட்டிங் அடிக்க வேண்டும்.

இந்த மேட்டராலேயே நாய்கள் மீது கொலைவெறி ஏற்படும். எங்கு எந்த நாயைப் பார்த்தாலும் குறிபார்த்து கல்லால் அடிப்பதை டமாரு ஒரு வேண்டுதலாகவே செய்து வந்தான். கல்லை கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழி நம்மாளுக்கு பொருந்தவே பொருந்தாது. நாயை அடிப்பதற்காகவே பாக்கெட்டில் ரெண்டு, மூன்று கல்லு எப்போதும் ஸ்டாக் வைத்திருப்பான். அதிலும் குறிப்பாக நடுரோட்டில் நாலு பேர் பார்க்க காதலிக்கும் நாய்களையும், தெருவோரத்தில் எதையாவது தின்னும் நாய்களையும் பார்த்தால் கூடுதல் ஆர்வத்தோடு அடிப்பான்.

டமாரும் ஒரு காலத்தில் நாய் வளர்த்தவன் தான். சூப்பர் ஸ்டாரின் தாய்வீடு படத்தைப் பார்த்தவன் அதுபோலவே ஒரு நாய் வளர்க்க ஆசைப்பட்டான். இராம. நாராயணன் படங்களில் நாய்கள் செய்யும் சாகசங்களை கண்டவன் நாய் இனத்தை நேசிக்க ஆரம்பித்தான். ஒரு கார்த்திகை மாத மழைநாள் இரவில் சாய்பாபா கோயில் வாசலில் ஒரு நாய் நாலு குட்டி போட்டது.

பெரிய நாய்க்கு தெரியாமல் ரகசியமாக ஒரு குட்டி நாயை அபேஸ் பண்ணிக் கொண்டு வந்து சீராட்டி, தாலாட்டி வளர்த்தான். காலையில் டீக்கடைக்கு போகும் போது நாலு பொறை வாங்கிப் போடுவான். ஊட்டில் தனக்கு போடப்படும் சோற்றில் ஒரு பங்கினை அந்த நாய்க்கும் போடுவான், அது கண்டதை தின்றுவிடக்கூடாது என்பதில் டமாரு குறியாக இருந்தான். பார்ப்பதற்கு ரொம்ப பரிதாபமாக சோனியாக அந்த நாய் தென்பட்டாலும் கம்பீரமாக, வெயிட்டாக டைகர் என்று பெயர் வைத்தான். டமாரின் காலையே டைகர் எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும்.

டமாரின் பால்ய சிநேகிதன் முத்து. ஒரு முறை டமாரு வீட்டுக்கு வந்தவன் டைகரை பார்த்து ரொம்பவும் இம்ப்ரஸ் ஆகிவிட்டான். அவனோடு டைகர் நல்லவிதமாகவே விளையாடியது. "டமாரு பார்க்க நல்ல ஜாதி நாயா தெரியுது. நம்ம தெரு சொறிநாய்ங்க கூட ஏதாவது அஜாலு குஜாலு ஆயிடப்போவுது. கொஞ்சம் கேர்புல்லா இருந்துக்கோ" என்று அட்வைஸ் செய்தான்.

முத்து சொன்னது நியாயமாகவே டமாருக்கு பட்டது. நடுத்தெருவில் வேறொரு பொட்டை நாயோடு டைகரை இணைத்துப் பார்க்கவே டமாருக்கு குமட்டியது. அதற்கும் முத்து இன்னொரு ஐடியாவை எடுத்துவிட்டான், முத்து ஒரு ஐடியா மணி. "தோ பாரு டமாரு. நாயின்னா கொஞ்சம் முன்ன பின்ன தானிருக்கும். இப்போ டைகரு ஒழுக்கமா நடந்துக்கணும்னா நீ நெனைச்சியானா அதோட வாலை கொஞ்சம் வெட்டி உட்டுடணும்"

"இன்னாடா சொல்றே முத்து. வாலை வெட்டணுமா?"

"ஆமாண்டா. அய்யிரு வூடுங்கள்ல நீ பாத்ததில்லை. அவுங்கல்லாம் அப்படித்தான் செய்வாங்கோ."

முத்து சொன்னால் சரியாக தானிருக்கும் என்று டமாரு நம்பினான். தெருநாய்களோடு சேர்ந்து டைகர் கெட்டுப்போகாமலிருக்க இதுதான் வழியென்றால் அதை செய்துவிட வேண்டியதுதான் என்று டமாரு முடிவெடுத்தான். டைகரின் வாலை வெட்ட ஒரு சுபமுகூர்த்த சுபதினத்தை குறித்தான். லஸ் கார்னர் பாய் பேன்சி கடையில் பத்து ரூபாய் கொடுத்து ஷார்ப்பாக ஒரு கத்தி வாங்கினான்.

வீட்டில் யாருமில்லாத ஒரு நேரத்தில் நாலு பொறையை எடுத்து டைகரின் முன்னால் போட்டான். போனஸாக எக்ஸ்ட்ரா பொறை கிடைத்த சந்தோஷத்தில் டைகர் வாலை ஆட்டிக்கொண்டே பொறையை மொசுக் மொசுக்கென்று திங்க ஆரம்பிக்க, டமாரு கத்தியை எடுத்தான். அப்போது அவன் முகம் அந்த காலத்து நம்பியார் முகம் போல மாறிப்போனது. முகத்தில் சிகப்பு விளக்கு எரிந்ததைப் போல வில்லன் எஃபெக்ட்.

டைகர் ஆட்டிக் கொண்டிருந்த வாலை நீவி விட்டவன் அப்படியே இழுத்துப் பிடித்து சரக்கென்று கத்தியை போட்டான். கத்திப் பட்டதுமே டைகர் துள்ளிக் குதித்து பெருங்குரலெடுத்து குலைக்க ஆரம்பித்து விட்டது. வாலும் முழுமையாக அறுபடாமல் பாதியாக தொங்கிக் கொண்டிருக்க மேட்டரை சரியாக முடிக்காமல் விட்டுவிட்டோமே என்று கலங்கிவிட்டான் டமாரு.

எப்போதுமே முதலாளி விசுவாசத்தோடு நன்றியான பார்வையை டமாரு நோக்கி செலுத்தும் டைகர் அப்போது வெறிபிடித்த ஓநாயைப் போல ஆவேசமாக காட்சியளித்தது. பக்கத்தில் நெருங்கிய டமாரை சைக்கோ கொலைவெறியோடு பார்த்த டைகர் பாய்ந்து வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவனது கையை கடித்து, சத்தம் போட்டு குலைத்துக் கொண்டே குணா கமல் மாதிரி டமாரை ஆவேசமாக சுற்றி சுற்றி வந்தது. டமாருக்கு குலை நடுங்கிவிட்டது. சடாரென்று கதவை மூடிக்கொண்டு ஓடித்தப்பினான். வீட்டுக்குள் டைகர் வால் வலி தந்த வேதனையில் கோரமாக ஊளையிட்டுக் கொண்டிருந்தது.

டைகர் ரொம்ப ஸ்ட்ராங்காக கடிக்கவில்லையென்றாலும் லைட்டாக குமாரின் கை எரிந்தது. கை வலித்ததை விட தான் செல்லமாக வளர்த்த நாயை இப்படி சின்னாபின்னப் படுத்திவிட்டோமே என்றுதான் அதிகமாக வருத்தப்பட்டான். அன்றிரவு சோகம் தாங்காமல் எப்போதையும் விட கொஞ்சம் அதிகமாகவே குடித்தான். குடித்துவிட்டு வழக்கமாக அவன் போதையில் விழுந்து கிடக்கும் லஸ் கார்னர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து உட்கார்ந்தான். கண் செருகிக்கொண்டே போனது.

யாரோ தன் முகத்துக்கு அருகே மூச்சு விடுவதைப் போல உணர்ந்தவன் ஒன்றரை கண்ணை லேசாக திறந்துப் பார்த்தான். டைகர். டைகரைப் பார்த்ததுமே உணர்ச்சிவசப்பட்ட டமாரு, தான் அதற்கு இவ்வளவு கொடுமை செய்தும் நன்றியோடு தன்னை தேடி வந்திருக்கிறதே என்ற உணர்ச்சிப் பெருக்கில் டைகரை கட்டியணைத்து முத்தம் தர முயன்றான்.

அவன் கன்னத்தில் தான் முத்தம் தர முயன்றான். அந்த நேரத்தில் டைகர் கொஞ்சம் முகத்தை திருப்பிவிட அதனது உதட்டில் முத்தமிட வேண்டிய நிலை வந்துவிட்டது டமாருக்கு. இவன் முத்தமிட்டமிட்டதுமே குடி நெடி தாங்காத டைகர் ஆவேசமாகி இவனது உதட்டை கடித்து குதறிவிட்டு, வந்த வழியே திரும்பி நிதானமாக ஓடியது. திரும்ப ஓடும்போது தான் கவனித்தான் டமாரு, வால் முழுமையாக இருந்தது. அய்யய்யோ டைகர்னு நெனைச்சின்னு வேற ஏதோ நாய்க்கு முத்தம் கொடுத்து உதட்டை கிழிச்சிக்கிட்டோமே என்று நொந்துப் போனான்.

டீயில் தொட்டு பொறையை சாப்பிடும்போது வாயில் போனது போக மீதி இருக்கும் பொறையின் ஷேப்பை பார்த்திருக்கிறீர்களா? ஒரு மாதிரியாக பிஞ்சிப்போய் அமீபா ஷேப்பில் இருக்கும். இப்பொது டமாரு குமாரின் உதடும் அதுபோல தான் ஒழுங்கற்ற ஒரு வடிவத்தில் இருந்தது. வாலை அறுக்க முயற்சித்த அன்றே டைகர் வீட்டை விட்டு ஓடிவிட்டிருந்தது. அது எங்கேயிருக்கிறது என்று தேடிக்கண்டுபிடிக்கிற மனநிலையில் டமாரு இல்லை.

கிட்டத்தட்ட டைகரை மறந்துவிட்ட நிலையில் ஒரு நாள் மாலை திருவள்ளுவர் சிலைக்கு எதிரேயிருந்த டாஸ்மாக்கில் சரக்கு அடிக்க டமாரு போனான். கடைக்கு எதிரே பாதிவால் அறுந்து ஒப்புக்குத் தொங்கிக்கொண்டிருந்த ஒரு நாய் இன்னொரு பெண் நாயுடன்.. ச்சே.. ச்சே.. எது நடக்கக்கூடாது என்று டமாரு நினைத்தானோ, அது அவன் கண் முன்பாகவே நடந்துகொண்டிருந்தது. எப்போதும் குவார்ட்டர் அடிக்கும் டமாரு அன்று வெறுப்பில் ஹாப் அடித்தான். நாயென்றாலே டமாரு குமாருக்கு வெறுப்பு வந்த கதை இதுதான்.

நேற்று இரவு மெலோடி தியேட்டரில் அடிமைப்பெண் பார்த்துவிட்டு வந்தான். சரக்கடிக்காததால் ஸ்டெடி என்று சொல்லிக் கொள்ளும் ரேஞ்சில் டமாரு இல்லை. தெருமுனைக்கு வந்தபோது எப்போதும் டமாருவை பார்த்து குரைக்கும் கருப்பு நாய் அவன் போதையில் இல்லை என்பதை தெரிந்துகொண்டு அன்று கொஞ்சம் ஓவராகவே குரைத்தது. சூ.. சூ.. என்று டமாரு விரட்டியும், ரெண்டு மூன்று கல்லெடுத்து அடித்தும் கூட அவனை கடிப்பதைப் போல அருகில் வந்து அச்சுறுத்தியது.

வாத்தியார் படம் பார்த்துவிட்டு வந்த வீரத்தாலோ, என்னவோ வாத்தியார் அடிமைப்பெண்ணில் சிங்கத்தை தலைக்கு மேல் தூக்கிப் போடுவதை சடாரென குனிந்து அந்த கருப்புநாயை தலைக்கு மேல் தூக்கி நான்கு சுற்று சுற்றி எங்கேயோ தூக்கிப் போட்டான். ஒரு இருபதடி தூரத்தில் போய் விழுந்திருக்கும் போலிருக்கிறது. வலியில் "அய்யய்யோ.. அம்மா!" என்று கத்தியது.

மறுநாள் காலை டமாரு ட்யூட்டிக்கு கிளம்பும்போது தெருமுனையில் சாவுமோளம் அடித்துக் கொண்டிருந்தது. "எது புட்டிக்கிச்சோ தெரியலையே?" என்ற கேள்வியோடு தெருவில் வந்தபின் தான் தெரிந்தது, அஞ்சலை ஆயா செத்துவிட்டதாம். நேற்று இரவு "அய்யய்யோ.. அம்மா!" என்று கத்தியது நாயல்ல என்பது டமாருக்கு இப்போதுதான் புரிந்தது.

காதலித்த கதை!


டமாரு கொமாரை உங்களுக்கு தெரியுமா? டமாரு கொமாரு மயிலாப்பூர் பல்லாக்கு மாநகரில் வாழும் சாமானியத் தமிழன். சாயங்காலம் ஆறரை மணிக்கு மேல் பட்டினப்பாக்கம் டாஸ்மாக்குக்கு புனித யாத்திரை சென்று வந்தவுடன் 'தமிளு' அவன் நாவில் கொஞ்சி வெளையாடும். லஸ் கார்னர் கேசவன் பீடா ஸ்டாலின் பரமணெண்டு கஸ்டமர் நம்ம டமாரு. மாவா போட்டு வாயை குதக்கி குதக்கி அவன் வாயே மிக்கி மவுஸின் ரப்பர் வாய் போல ஆகிவிட்டது. பத்து மணிக்கு மயிலாப்பூர் ஸ்டேஷன் எஸ்.ஐ. ரவுண்ட்ஸ் வரும் வரை டமாரு கொமாருவின் லந்து லஸ் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் கொடிகட்டிப் பறக்கும்.

கொமாருக்கு பல்லு கொஞ்சம் நீளம். பார்க்க தேங்காய் துருவி மாதிரி இருக்கும். சினிமா நடிகன் மாதிரி நல்ல கலரு. வடிவேலுவும் சினிமா நடிகர் தானே? அந்த காலத்து வையாபுரி மாதிரி நல்ல உடல்வாகு. ஹிப்பு சைஸு 26. ஆனா சட்டை சைஸு 44. ஏழாவது படிக்கும்போது பெரியம்மை போட்டதால, மூஞ்சி, காதல் படத்தில் வரும் சந்தியாவின் அப்பா மாதிரி கொதறிவெச்சி இருக்கும். மொத்தத்துலே ஒருத்தன் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் டமாரு இருப்பான்.

அதிருக்கட்டும், அவனுக்கு டமாருன்னு ஏன் பேரு வந்துச்சி தெரியுமா? அது ஒரு சப்பை மேட்டரு. வூட்டாண்ட கையை உட்டு சைக்கிள் ஒட்டி பொண்ணுங்களுக்கு ஃபிலிம் காட்டிக்கினு இருந்தப்போ சைக்கிள் டயர் டமாருன்னு வெடிச்சிடிச்சி. ஏர்யால மூக்கு ஒழுவினு இருந்த சின்னப்பசங்கள்லாம் அப்போலேருந்து 'டமாரு மாமா, டமாரு மாமா'னு கூப்பிட்டு அதுவே 'டமாரு கொமாரு' ஆயிப்போச்சி. போலிஸ் ஸ்டேசன்லே கூட கேசு ஃபைல் பண்றப்போ டமாரு குமாருன்னு தான் ஃபைல் பண்ணுவாங்க. டமாருங்கிறது ஒரு மாதிரியா டெர்ரரா இருந்ததாலே கொமாருக்கு டமாரு ரொம்ப பிடிச்சிருந்திச்சி!

டமாரு எப்பவாச்சும் படம் பார்ப்பான். சரக்கு அடிக்க கையிலே காசில்லைன்னா காமதேனு தியேட்டருக்கு போயிடுவான். பத்து ரூவாய்க்கு மாவா வாங்கிப்பான், அஞ்சு ரூவாய்க்கு பீடி வாங்கிப்பான். டிக்கெட் ரேட்டு பத்து ரூவாதான். ஒரு முறை அவன் பார்த்த படம் 'பூவே உனக்காக'. படத்தோட லவ்வு அவனுக்கு ரொம்ப ஃபீலிங்க்ஸ் ஆயிப் போச்சு. படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் போட்ட 'லால்ல.. லா.. லா..' மியூசிக்கு அப்படியே அவனுக்கு ங்கொய்யின்னு ரீங்காரம் அடிச்சிக்கினு இருந்தது. க்ளைமேக்ஸுலே விஜய் பேசுற டயலாக்கு 'வெற்றி தோல்வின்னு சொல்றதுக்கு காதல் ஒண்ணும் எக்ஸாம் இல்லே. ஃபீலிங்' இன்ற டயலாக்கு அப்படியே அவன் மூளையிலே ஆணி அடிச்சி உட்காந்திடிச்சி...

அதே ஃபீலிங்கோடு எதுர்லே இருந்த கேசவன் கடைக்கு வந்தான்.

"இன்னா டமாரு இன்னிக்கு ஆபிஸ் போவலியா?" லுங்கியில் இருந்த டமாரை பார்த்து கேசவன் கேட்டான். டமாரு ஒரு ஆபிஸில் ஆபிஸ் பாயா வேலை பார்க்குறான். மாசத்துக்கு ரெண்டு நாள் லீவு போடுவான்.

"ஆமா சகா. நேத்து நைட்டு அடிச்ச சரக்கு ஒடம்புக்கு ஒத்துக்கலே. ரெண்டு தரம் காலீலேர்ந்து காவாக்கரைக்கு போயாந்துட்டேன். டயர்டா இருந்திச்சா. அப்டியே படத்துக்கு வந்துட்டேன்". சிகப்பாக இருப்பவர்களை 'அய்யிரே' என்று கூப்பிடுவதும், மற்றவர்களை 'சகா' என்று கூப்பிடுவதும் டமாரின் வழக்கம்.

"மாவா போடறியா டமாரு"

"வேணாம் சகா. ஒரே பீலிங்ஸா இருக்கு"

"இன்னா பீலிங்ஸு டமாரு?"

"லவ்வு பண்ணனும் மாதிரி இருக்குது சகா. யாரை லவ்வு பண்ணுறதுன்னு தெரியலை!"

"டமாரு கேட்குறேன்னு தப்பா நெனைச்சிக்காதே. லவ்வு பண்ணனும்னா கொஞ்சமாவது பார்க்குறமாதிரி இருக்கணும். நாமெல்லாம் லவ்வு பண்ணுறவங்களுக்கு ஹெல்ப்பு தான் பண்ணமுடியும்"

டமாருக்கு கோவம் கன்னாபின்னாவென்று வந்தது. "சகா லவ்வுங்கிறது அழகை பார்த்து வர்றது கிடையாது. அப்புடி வந்துச்சின்னா கமலாசனும், அஜித்தும் மட்டும் தான் லவ்வு பண்ணமுடியும்! அவ்ளோயேன... நம்ம பல்லி பன்னீர் கூட லவ்வு மேரேஜி தானே பண்ணான். அவன் இன்னா என்னை விட அழகா?"

கேசவனுக்கு புரிந்துவிட்டது. பயல் காதல்வெறியில் இருக்கிறான். என்ன சொன்னாலும் அவன் காதில் விழப்போவதில்லை.

"எங்க வூட்டு எதிர்லே இருக்கே மஞ்சு. அத்த ஜூட்டு உட்டுக்கலாமா சகா?" ஏதோ ஒரே நாளில் காதலித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தவனை போல கேட்டான் டமாரு.

"ஒன் இஷ்டம் டமாரு. ஆனாக்க மஞ்சு நல்லாருக்குமான்னு தெர்ல. உனக்கு செட் ஆவும்னா லவ்வு பண்ணு. மஞ்சுவோட அண்ணனுங்க நம்ம கடைக்கு வருவானுங்கோ. பாடி கீடில்லாம் காட்டுத்தனமா இருக்கும். கவுன்சிலரு கிட்டே வேலை பார்க்குறானுங்களாம். ஏதாச்சிம் ஏடாகூடமா ஆச்சின்னா பிரச்னை பெருசாயிடும். பார்த்துக்கோ!" கேசவன் தீர்மானமாக சொன்னான். 'இவன் என்ன எழவோ ஆயிட்டு போவட்டும், எனக்கென்ன' என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டான்.

அதிலிருந்து தினமும் கேசவன் கடைக்கு வரும் டமாரு 'மஞ்சு புராணம்' பாட ஆரம்பித்துவிட்டான்.

"எக்ஸ்போர்ட்டு வேலைக்கு போவுது சகா. 45பிலே தான் கிண்டி வரைக்கும் போவுது. டெய்லி சைக்கிள்லே தேனாம்பேட்டை வரைக்கும் ஃபாலோ பண்ணுறேன்"

"மஞ்சத்தாவணிலே எப்டி இருந்திச்சி தெரீமா?"

"வெள்ளிக்கெளம வெள்ளிக்கெளம முண்டக்கன்னி அம்மன் கோயிலுக்கு போவுது"

"பயமாயிருக்கு சகா. அவனுங்க அண்ணனுங்க மேலே ஏற்கனவே கொல கேசுல்லாம் இருக்காம்"

டமாரு சொல்வதெல்லாம் காமெடியாகவே இருந்தது கேசவனுக்கு. மஞ்சு கொஞ்சம் செவப்பா இருந்திருப்பா போலிருக்கு. நம் கருமை நிற டமாருக்கு அதனாலேயே அவள் மீது 'பீலிங்சு' வந்திருக்கணும். ஆனாலும் வெட்டு ஒன்று, துண்டு ரெண்டுன்னு பேசுற டமாரு தன் பீலிங்ஸை மட்டும் அவளிடம் சொல்வதற்கு ரொம்பவும் ஷையா இருந்தான்.

மயிலாப்பூர் அறுவத்தி மூவர் திருவிழா வந்தது. டமாரு எப்படியாவது தன் மனசை படக்குன்னு தாப்பா தொறக்குறா மாதிரி தொறந்து மஞ்சுவிடம் காட்டிடலாம்னு முடிவு பண்ணிட்டான்.

"திருவிழாவுக்கு மஞ்சு ஃப்ரெண்ட்ஸோட வரும். நேரா போயி, 'எனக்கு பீலிங், உனக்கு பீலிங்கா?'ன்னு கேட்டுடணும் சகா. நீயும் என் கூட தொணைக்கு வா. அவனுங்க அண்ணனுங்க பார்த்துட்டாங்கன்னா எஸ்கேப் ஆவ வாட்டமா இருக்கும்" என்றான். கேசவனும் தலையெழுத்தே என்று வந்தான். அறுவத்து மூவர் திருவிழா நடக்கும்போதெல்லாம் கேசவன் கடையை மூடிவிடுவது வழக்கம்.

தெற்கு மாடவீதியில் இருந்த ஒரு திண்ணையில் ஏறி நின்றுகொண்டான் டமாரு. டென்ஷனாக இருந்ததால் ஒரு மாவா பாக்கெட்டை அப்படியே வாயில் போட்டு துப்பிக்கிட்டிருந்தான். மஞ்சூ தூரத்தில் வருவது தெரிஞ்சது. குமார் பேஸ்கட்டுக்கு அது கிடைச்சா அவனுக்கு லாட்டரியில் பம்பர் விழுந்தது மாதிரிதான். அவளோடு ரெண்டு எக்ஸ்போர்ட் பிகருங்க. அதுங்க கொஞ்சம் சுமாரா இருந்ததாலே அதுங்கள்லே ஒண்ணை கரெக்ட் பண்ணிடலாமான்னு கேசவன் கூட யோசிக்க ஆரம்பிச்சிட்டான்.

மெதுவாக திண்ணைலேர்ந்து இறங்கி மஞ்சுவை நெருங்கினான் குமார். கேசவன் சுத்தும் முத்தும் மஞ்சுவோட அண்ணனுங்க வர்றானுங்களான்னு பாத்துகினே இருந்தான். திக்கு.. திக்கு..ன்னு இருந்திச்சி. இவன் மூஞ்சிய அது ஏத்துக்குமா என்ற சந்தேகம் கேசவனுக்கு இருந்தது. நாளாக நாளாக டமாரு மூஞ்சி மூஞ்சூறு மாதிரி ஷேப்பு மாறிக்கினே போவுதே?

"இன்னா மஞ்சு எப்டி கீறே?"

"நா நல்லா கீறேன். நீ எப்டி கீறே?"

"நான் சூப்பரா கீறேன். ரெண்டு பேரும் கண்ணாலம் கட்டிக்கலாமா?"

டீ சாப்பிட போலாமா என்பது மாதிரி டமாரு டமாருன்னு கேட்டிட கேசவனுக்கு தாவூ தீர்ந்துவிட்டது. சினிமாவில் பார்த்தமாதிரி எல்லாம் இல்லாம ரொம்ப கேஸ்வலா கேட்டுட்டான் டமாரு. 'லால்லா.. லா.. லா...' மியூசிக்கெல்லாம் எதுவும் கேட்கலை. ஏதோ பெரீய்ய மேட்டருன்னு நெனைச்சுக்கினு இருந்த கேசவனுக்கு சப்புன்னு போயிடிச்சி. மஞ்சுவும் ஒத்துக்கிட மஞ்சு பின்னாடியே டமாரு போயிட்டான்.

ஒருவாரம் கழிச்சி கேசவனுக்கு நியூஸ் வந்தது. டமாரு மஞ்சுவை இஸ்துக்கினு எங்கியோ ஒடிட்டானாம். மஞ்சுவோட அண்ண‌னுங்க டமாரை மட்டுமில்லாம டமாரோட ப்ரெண்ட்ஸுகளையும் தேடிக்கிட்டிருக்கானுங்களாம். கேசவன் ரெண்டு வாரத்துக்கு கடையை தொறக்கலை.

ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சி டமாரு, மஞ்சுவோட பல்லக்குமாநகருக்கு வந்திருக்கான். அதுக்குள்ளே மஞ்சுவோட அண்ணனுங்களும் சமாதானம் ஆயிட்டானுங்க. கல்யாணம் கட்டிக்கினு ரெண்டு மூணு மாசமா வேலைக்கு போவாததாலே டமாருக்கு வேலை போயிடிச்சி. டமாரு இப்போ பாண்டிபஜார் பிளாட்பார்முலே துணிக்கடை பிசினஸு பண்ணுறான். ரெண்டு கொழந்தைங்க ஆயிடிச்சி. இன்னா பணம் கையிலே பொரள்றதாலே டெய்லி ரெண்டு வேளை குடிக்கிறானாம்.

நம்மாளுங்க இப்படித்தான... டவுசர் கயட்டுற நேரத்துலே லவ்வு வந்துரும். அதே டவுசரை திருப்பி மாட்டுற நேரத்துலே கல்யாணத்தையே முடிச்சிட்டிருப்பானுங்க.

அன்னைக்கி பிஸினஸ் டல்லா இருந்திச்சி. கேசவனுக்கு ரொம்ப போர் அடிச்சிடுச்சு. கடையை இளுத்து மூடிட்டு சினிமாவுக்கு போவலாம்னு இருந்தான். அஞ்சு ரூவாய்க்கு பீடி கட்டு வாங்கிக்கினு எதிர்லேருந்த காமதேனு தியேட்டருக்கு போனான். விஜய் நடிச்ச காதலுக்கு மரியாதை. படம் பார்த்ததுமே கேசவனுக்கு ரொம்ப பீலிங்ஸா ஆயிடிச்சி.. இளையராஜா போட்ட 'லால்ல.. லா.. லா..' மியூசிக்கு, அப்படியே அவனுக்கு ங்கொய்யின்னு ரீங்காரம் அடிச்சிக்கினு இருந்தது. ஷாலினியும், விஜய்யும் பீச்சுலே பேசுற டயலாக்கு அப்படியே அவன் மனசுல‌ ஆணி அடிச்சாமாதிரி உட்கார்ந்திடுச்சி...

அப்புறம் என்னா ஆச்சா? ஸ்டோரியை பர்ஸ்ட்டுலே இருந்து மறுபடியும் படி மாமு...

அக்டோபர் மாத உலகப்படம்!


உரையாடல் அமைப்பு சார்பாக மாதமொருமுறை உலகப்பட கொண்டாட்டம் என்ற வரிசையில் அக்டோபர் மாத படமாக ’The Legend of 1900’ கிழக்கு டூரிங் டாக்கீஸில் திரையிடப்படுகிறது.

படத்தின் பெயர்: The Legend of 1900 (123 நிமிடங்கள்)
நாடு : இத்தாலி
மொழி: ஆங்கிலம்
இயக்குநர் : Giuseppe Tornatore
நாள் : அக்டோபர் 4ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடி
எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை
சென்னை.

இப்படத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்கள் பைத்தியக்காரனின் இந்தப் பதிவை தயவுசெய்து வாசித்துவிட வேண்டாம். தாவூ தீருகிறது :-( அதற்குப் பதிலாக கூகிளில் இப்படத்தின் பெயரை தட்டி ஏதாவது கில்மா படங்கள் விழுகிறதா என்று உபயோகமாக தேடிப்பார்க்கலாம்.

இப்படத்தின் இயக்குனர், தமிழ் அறிவுஜீவிகளிடம் ஏகத்துக்கும் லோல்பட்ட ’சினிமா பாரடைஸோ’ என்ற டக்கர் படத்தையும் இயக்கியவராம்.