5 நவம்பர், 2009

பீகார் ஜெயில் தகர்ப்பு!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!


ரன்வீர் சேனா


2005 நவம்பர் 13. பீகாரில் மூன்றாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு அன்று நடந்து முடிந்திருந்தது. ஜெகன்னாபாத் கிளை சிறைச்சாலை. 140 பேரை மட்டுமே அடைக்க முடிந்த அந்த சிறைச்சாலையில் 650 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நக்சல்பாரிகள். அவர்களில் பல பேர் மீது முதல் தகவல் அறிக்கை கூட கிடையாது. சந்தேகத்தின் பேரில் அடைபட்டவர்கள் பல ஆண்டுகளாக கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

பீகார் அப்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாக இருந்தது. சாதி மற்றும் கிரிமினல் அரசியல் கொடிகட்டிப் பறந்தது. ராஜபுத்திரர், பூமிகார், பிராமணர், குர்மி ஆகிய சாதியினர் நிலமுதலாளிகளாக இருந்தார்கள். வழக்கம்போல அங்கும் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடியினரும் இவர்களுக்கு அடிமைகளாக சேவகம் புரிந்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவான ரன்வீர் சேனா என்றொரு உயர்சாதி அமைப்பு உண்டு. இந்த அமைப்பினர் துப்பாக்கியேந்தி விவசாயக் கூலித்தொழிலாளர்களை கொடுமைபடுத்தும் ஒரு அமைப்பினர். இவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த காரண காரியமே தேவையில்லை.

ரன்வீர் சேனா பீகாரில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு. பெயருக்கு தான் தடையே தவிர அவர்களது செயல்பாடுகளுக்கு ஒன்றுமல்ல. 1994ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் ஆண்டுவரை மட்டுமே இந்த அமைப்பு பீகாரில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது 27 முறை கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருந்தது. துப்பாக்கிகள் மட்டுமன்றி அதிநவீன அழிவு ஆயுதங்கள் அத்தனையும் இந்த அமைப்புக்கு மிக சுலபமாக கிடைக்கும். இந்த அமைப்பினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்திருக்கிறார்கள்.

1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த அமைப்பு ஜெகன்னாபாத் லட்சுமண்பூர்பதே கிராமத்தில் 61 தாழ்த்தப்பட்டோரை நள்ளிரவில் கோடாரி, கத்தி கொண்டு மண்டையை பிளந்து கொடூரமாக சாகடித்தது. 1999ல் சங்கர்பிகா என்ற கிராமத்தில் 58 தாழ்த்தப்பட்டோரை இதே அமைப்பு சுட்டுக் கொன்றது. “தாழ்த்தப்பட்டவனாக பிறக்கும் ஒவ்வொருவனும் நக்சலைட் ஆகிவிடுவான். அதனால் தான் இந்த கொலைகள்” என்று ரன்வீர்சேனா வெறியர்கள் பகிரங்கமாக கொக்கரித்தார்கள். இந்த அமைப்பினரோடு ஆங்காங்கே நக்சல்பாரிகளுக்கு மோதல் இருந்தது.

2005 நவம்பர் 13ல் ஜெகன்னாபாத் சுமார் ஆயிரம் பேர் கொண்ட கூட்டத்தால் முற்றுகையிடப்பட்டது. அந்த ஆயிரம் பேர் இருந்த கூட்டத்தில் 300 பேர் ஆயுதங்களோடு இருந்த நக்சல்பாரிகள். மற்றவர்கள் சுற்றுப்புற கிராமங்களில் வசித்த நக்சல்பாரி ஆதரவு கிராமப்புறத் தொழிலாளர்கள்.

ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டது. “மக்களே யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்! நாங்கள் உங்களது நண்பர்கள், காவலர்கள். நீங்கள் எங்களது எதிரிகள் அல்ல. போலிசுக்கும், பண்ணையார்களுக்கும் பாடம் புகட்டப் போகிறோம். ஜெகன்னாபாத் சிறையை தாக்கப் போகிறோம். சிறையை காக்கும் போலிசாரே துப்பாக்கியை போட்டுவிட்டு உயிர் தப்பி ஓடுங்கள்” என்று நக்சல்பாரிகள் அறிவித்தார்கள். தேர்தல் நடந்த நேரம் என்பதால் போலிசார் பலரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சிறையை ஒன்பதே ஒன்பது காவலர்கள் மட்டுமே காத்து நின்றார்கள்.

துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ஆயிரம் பேரும் சிறையை முற்றுகையிட்டார்கள். சிறை தகர்க்கப்பட்டு சிறையில் இருந்த நக்சல்பாரி போராளிகள் 341 பேர் விடுவிக்கப்பட்டார்கள். சிறைக்கைதியாக இருந்த ரன்வீர் சேனாவின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான படேசர்மா என்பவர் அங்கேயே கொல்லப்பட்டார். ரன்வீர் சேனாவைச் சார்ந்த 20 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

சிறை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சில போலிஸார் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்ற நக்சல்பாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். பதிலுக்கு நக்சல்பாரிகளும் துப்பாக்கிச்சூடு நடத்த, இருதரப்பிலும் நான்கு பேர் பலியானார்கள். நக்சல்பாரிகள் வெற்றிகரமாக சிறைதகர்ப்பை நடத்தி வெளியேறினார்கள்.

தப்பிச் சென்ற நக்சல்பாரிகளை பிடிக்க மாநில போலிஸ் படை முடுக்கி விடப்பட்டது. பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட ரன்வீர் சேனா அமைப்பினர் 8 பேரின் சடலங்கள் தான் போலிஸுக்கு கிடைத்தது. ரன்வீர் சேனா அமைப்பின் மீதி 12 பேர் எச்சரிக்கப்பட்டு நக்சல்பாரிகளால் விடுவிக்கப்பட்டனர்.

நக்சல்பாரி இயக்கம் முன்னெடுத்த போராட்டங்களிலேயே இந்திய அரசை அசைத்துப் பார்த்த சம்பவமாக ஜெகன்னாதபுரம் சிறைதகர்ப்பு சம்பவம் நடந்தது. இந்தியா முழுவதுமே அச்சப்பட்டு நின்ற நேரம் அது. இந்திய வரலாற்றிலேயே ஒரு சிறை போராளிகளால் தகர்க்கப்பட்டதும் அதுதான் முதல்முறை.

(தொடர்ந்து தகர்க்கப்படும்)

4 நவம்பர், 2009

இந்தியாவின் தேசிய நீர் விலங்கு!


இந்தியாவின் தேசியப் பறவை எது? இந்தியாவின் தேசிய விலங்கு? சுலபமாக மயில், புலி என்று சொல்லிவிடுவீர்கள். இந்தியாவின் தேசிய நீர் விலங்கு எது தெரியுமா? தெரியாவிட்டாலும் பிரச்சினையில்லை. தெரிந்துகொள்ளுங்கள். போன மாதம் தான் இந்தியாவின் தேசிய நீர் விலங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘டால்பின்’.

கடலில் துள்ளி விளையாடும் டால்பின்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சில பேர் பார்த்தும் கூட இருப்பீர்கள். ராமேஸ்வரத்துக்கு அருகிலிருக்கும் குருசடை தீவுக்கு அருகாக டால்பின்களை நிறைய காண்பதாக மீனவர்கள் சொல்கிறார்கள். கடலில் மூழ்கிக் கொண்டிருந்தவர்களை டால்பின்கள் காப்பாற்றியதாக கதைகள் கூட உண்டு. அவை நிஜமாகவும் இருக்கக்கூடும். ஏனெனில் மனிதனுக்குப் பிறகு உயிரினங்களில் அதிக பகுத்தறிவோடு வாழும் விலங்கு டால்பின் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நாய்கள், யானைகள் போன்றே மனிதனுக்கு இணக்கமான நீர்வாழ் உயிரினம் இது.

நம் நாட்டின் தேசிய நீர் விலங்காக அறிவிக்கப்பட்டிருப்பது கடலில் வாழும் டால்பின்கள் அல்ல. நதிநீரில் வாழும் டால்பின்கள். டால்பின்கள் நதிகளிலும் வாழும் ஓர் உயிரினம். இவை கடல் டால்பின்களை ஒப்பிடுகையில் உருவம், அளவு மற்றும் குணத்தில் நிரம்பவே மாறுபடுகிறது.

நதிநீர் மாசுபடுதல் மற்றும் மனித வேட்டைகளின் காரணமாக இந்த உயிரினம் அருகிக் கொண்டே வருகிறது. இந்த வகை டால்பின்களுக்கு பார்வைக் குறைபாடு உண்டு. சிலவற்றுக்கு சுத்தமாக கண்ணே தெரியாது. எனவே ஆபத்து வருவதை அறியாமல் எங்கோ போய் முட்டிக்கொண்டு மரணிக்கின்றன. குறிப்பாக மனிதர்கள் பயன்படுத்தும் படகுகளிலும், மீன்வலைகளிலும் மாட்டிக் கொண்டு உயிரிழக்கின்றன.

இந்தியாவில் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய வற்றாத நதிகளில் இப்போது நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே டால்பின்கள் வாழ்கின்றன. 1993ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் கங்கையில் மட்டும் அறுநூறும், பிரம்மபுத்ராவில் மட்டும் நானூறும் இருந்தன. கங்கையில் வாழும் டால்பின்கள் ‘சூசு’ (Susu) எனவும், சிந்துவில் வாழும் டால்பின்கள் ‘புலான்’ (Bhulan) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்திய நதிநீர் டால்பின்கள் பொதுவாக பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில், நீண்ட மூக்கோடு, பெரிய தலையோடு காணப்படும். அதிகபட்சமாக எட்டு அடி நீளம். சராசரியாக நூறு கிலோ எடை. மேல் தாடையிலும், கீழ் தாடையிலும் மிகக்கூர்மையான தலா இருபத்தெட்டு பற்கள் உண்டு. இருபுறமும் அகலமான துடுப்பு போன்ற இறக்கைகள் உண்டு. திமிங்கலத்தைப் போலவே இவையும் பாலூட்டி இனம் என்பதால் நுரையீரல் மூலமாகவே சுவாசிக்கிறது. முப்பது முதல் ஐம்பது நொடிகளுக்கு ஒருமுறை நீர்மட்டத்துக்கு மேலே வந்து சுவாசித்துவிட்டு செல்லும். இவற்றின் கர்ப்பக்காலம் ஒன்பது மாதம். புதியதாக பிறக்கும் டால்பின் குட்டிகள் 65 செ.மீ நீளம் இருக்கும். குட்டியாக இருக்கும்போது தாய்ப்பாலும், வளர்ந்த பிறகு சிறுமீன்கள், இறால் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளும். நதிநீர் டால்பின்கள் சராசரியாக முப்பத்தைந்து ஆண்டுகள் உயிர்வாழும். பார்வைக் குறைபாடு இவைகளுக்கு இருப்பதால் கடல் டால்பின்களைப் போல பயிற்சியளித்து, மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது. கடல் டால்பின்கள் அமெரிக்க ராணுவத்தில் கூட உளவுப் பணியாற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா டால்பின்களுக்குமே ஒலியலைகளை (Sonar sense) கிரகித்துக் கொள்ளக்கூடிய தன்மை உண்டு. நீரில் வாழும் பாலூட்டிகளில் டால்பின்கள் மட்டுமே இந்த சிறப்பினைப் பெற்றிருக்கின்றன. ஒலியலைகளை உணர்வதின் மூலமாகவே இவை இரை தேடுகின்றன. டால்பின்களால் 2,00,000 ஹெர்ட்ஸ் அளவுக்கான அல்ட்ரா சோனிக் ஒலியலைகளை ஏற்படுத்த முடியும் (மனிதர்களது காது 18,000 ஹெர்ட்ஸ் அளவுக்கே கேட்கும் சக்தி கொண்டது). பார்வைக் குறைபாட்டை ஒலிகள் மூலமாகவே டால்பின்கள் தவிர்க்கின்றன.

சீனநதி டால்பினான ‘பைஜி’ என்ற உயிரினம் அழிந்துவிட்டதாகவே கூறப்படுகிறது. கடைசியாக ‘பைஜி’யை 2004ஆம் ஆண்டுதான் பார்க்க முடிந்ததாம்.

உலகின் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக இருப்பதால், இவற்றைக் காக்கும் முகமாக ‘தேசிய நீர் விலங்காக’ மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையின் முக்கியத்துவத்தை பிரதமரின் அமைச்சரவை ஏற்றுக்கொண்டதின் அடிப்படையில் டால்பின் அதிகாரப்பூர்வமாக ‘இந்தியாவின் தேசிய நீர் விலங்காக’ மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம்ரமேஷால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனி மீதமிருக்கும் டால்பின்களை காக்கவும், அவை இனப்பெருக்கம் செய்யவும் இனி திட்டங்கள் தீட்டப்படும்.

இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி மாமிசத்துக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ இந்த டால்பின்களை வேட்டையாடும் பட்சத்தில், வேட்டையாடுபவர்கள் மீது சட்டம் பாயும். பெரும்பாலும் மருத்துவத்துக்கு உதவும் மீன் எண்ணெய்கள் தயாரிக்கவே இவை வேட்டையாடப் படுகின்றன. வேட்டையாடுபவர்களுக்கு ஒன்று முதல் ஆறு வருடங்கள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

3 நவம்பர், 2009

பெரியாரைப் பற்றி சாரு!


தமிழ் வலையுலகில் மிக அதிகமாக புகழப்படும்/ஏசப்படும் ஒரு ஆளுமை சாரு. புகழ்பவர்கள் இயல்பாகவே அவரது வாசகர்கள். ஏசுபவர்களிடம் கேட்டால் ”சாருவைப் படித்ததில்லை. ஸீரோ டிகிரி நாலு பக்கம் தாண்டியதில்லை. ராஸலீலா அப்படின்னா என்ன? எப்போதாவது அவரது இணையத்தளத்தை படிப்பதுண்டு” என்பார்கள்.

இன்று தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் எதை வேண்டுமானாலும் உட்கார்ந்த இடத்திலிருந்தே வாசித்துவிட/பெற்றுவிட முடிகிறது. ஆனால் இணையமோ, கணினியோ இல்லாத காலத்தில் சாரு இலக்கியம் கற்றவர். வெறித்தனமாக தேடித்தேடி அயல்மொழி படைப்புகளை வாசித்தவர். டீக்கு கூட காசில்லாமல் ஒவ்வொரு நாடக மேடையாக அலைந்து கொண்டிருந்தவர்.

வாசகரும் எழுத்தாளரே என்ற நிலையை இன்று இணையம் ஏற்படுத்தியிருக்கலாம். சாரு எழுத்தாளராக ஆவதற்கு முன்பு எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் அசுரத்தனமானவை. பன்முகப் பார்வையும், பரவலான அவதானிப்பும் அவரது பலம். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக வெப் உலகம்.காம் இணையத்தளத்துக்கு சாரு தந்த பேட்டியை இங்கே தருகிறேன். அடுத்த முறை சாருவைத் திட்டி பதிவோ/பின்னூட்டமோ போடுவதற்கு முன்பாக பதிவர்கள் ஒருமுறை இப்பேட்டியை மெனக்கெட்டு வாசிக்கலாம். ஏனெனில் திட்டுவதற்கு இன்னமும் கூட சில காரணங்கள் வகையாக மாட்டக்கூடும்.

எச்சரிக்கை : சுமார் மூவாயிரத்து ஐநூறு வார்த்தைகள் கொண்ட நீ...ளப்பேட்டி இது! (வேறெங்கும் காணக்கிடைக்காத அரியப்பேட்டியும் கூட)


தத்துவ இலக்கிய உலகிற்குள் எப்போது நுழைந்தீர்கள்? ஏன்?

அப்போது எனக்குப் பதினான்கு வயது-ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் இடையே செக்ஸ் உறவு ஏற்பட்டது. எனக்கு அந்தப் பெண் அபூர்வமாய்த் தோன்றினாள். உறவு தொடர்ந்தது. பிரபஞ்ச ரகசியங்களைப் போல் மர்மங்களையும் புதிர்களையும் கொண்டதாக இருந்தது அவள் உடல்.

நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் காதலித்துக் கொள்ளவில்லை. உடலின் மர்மங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்தோம். உடல் களியாட்ட வெறியென மாறியது. மனமும் சிந்தனையும் அற்றுப் போன சூன்யத்தின் பெரு வெடிப்பு அது. இருத்தலில் இருந்து சூன்யத்திற்குச் சென்ற நிகழ்வு அது.

பள்ளி இறுதி வகுப்பு வரும்போது நான் பள்ளிக்கூடம் செல்ல முடியாதவனானேன். காச நோய் கடுமையாக என்னைத் தாக்கியிருந்தது. தினமும் ஒன்று என 150 ஊசி போட்டார்கள். கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத விதவிதமான உணவு வகைகள் கொடுக்கப்பட்டன. இப்படியாக, போக இருந்த உயிர் காப்பாற்றப்பட்டது. "ஒரு வேளை செத்தே போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?" என்று யோசிக்க ஆரம்பித்தேன். அந்த விசாரணை என்னை மரணம் பற்றிய ஆதாரமான கேள்விக்குள் தள்ளியது.

சமணம், பௌத்தம், சைவம், வைணவம், இஸ்லாம் என்று எல்லா சமய நூல்களையும் படிக்கத் தொடங்கினேன். ஆய்வுக் கட்டுரைகள் சமயப் பத்திரிகைகளில் பிரசுரமாயின, நிவேதிதா என்ற பெயரில்.


உங்கள் தத்துவ விசாரணை அத்துடன் முடிந்ததா?

இல்லை . . திருவண்ணாமலைப் பகுதி மலைகளில் திரிந்தேன். பல துறவிகளைச் சந்தித்தேன். ஒரு துறவியிடம் இருந்து ஹடயோகம் பயின்றேன். பிராணாயாமம், நௌலி போன்ற பயிற்சிகள் கற்றேன்.

சேஷாத்திரி சுவாமிகள், விவேகானந்தர், ரமணர், சுவாமி சிவானந்தா என்று பல ஞானிகளின் உபதேசங்களைக் கற்றேன். ரிஷிகேசம், இமயமலைப் பிரதேசங்களில் சுற்றித் திரிந்தேன்.

மக்கள் குளிராலும், பனியாலும், பட்டினியாலும் செத்து மடிவதைக் கண்டேன். வருடத்தில் ஆறு மாதங்கள் அதிகப் பனியால் மக்கள் வாழ்வை இழந்து படும் இன்னல்கள் என்னை மிகவும் பாதித்தது.

கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று கதறிக் கொண்டு தஞ்சாவூர் வந்து சேர்ந்தேன்.

அதன் பின் ஒரு மார்க்சீயத் தோழரை சந்தித்தேன். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுத்துக்களை அவரே எனக்கு அறிமுகப் படுத்தினார். அதிலிருந்து மேற்கத்திய தத்துவ உலகின் மாணவனாக மாறினேன். கிரேக்கத் தத்துவவாதிகளிலிருந்து துவங்கி, கீர்க்கேகார்ட், விட்ஜென்ஸ்டைன், ஹைடேக்கர், சார்த்தர், லெவி ஸ்ட்ராஸ், ஃபூக்கோ வரை வந்தேன். இன்றளவும் ஒரு மேற்கத்திய தத்துவ உலகின் மாணவனாகவே இருந்து வருகிறேன் . . .


அப்படி என்றால், தற்போது நீங்கள் மார்க்சீயர் என்று எடுத்துக் கொள்ளலாமா?

சார்த்தர் ஒரு முறை சொன்னார் - Marxism is the only unsurpassable philosophy of our time என்று.

சில ஆண்டுகளுக்கு முன்பு தெரீதா எழுதி வெளிவந்த Spectre of Marx என்ற புத்தகம் கூட மார்க்சீயத்தை மிகவும் சாதகமான முறையிலேயே அணுகியிருப்பதாக அறிகிறேன்.

"பசியால் செத்துக் கொண்டிருக்கும் ஒரு குழந்தைக்கு முன்னால் எனது நாசியாவுக்கு எவ்வித அர்த்தமும் இல்லை" என்று சார்த்தர் கூறியதை நினைத்துப் பார்க்கிறேன்.


ஒருபுறம் கலையும் இலக்கியமும் . . . மறுபுறம் பசியால் சாகும் குழந்தை . . . இரண்டுக்கும் நடுவே ஊடாடிக் கொண்டு தான் இருக்கிறேன். இந்தக் குரூரம் என்னை ஒரு மனநோயாளியாக ஆக்கிவிடக் கூடியதாக இருக்கிறது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே எழுத்தைப் பற்றிக் கொள்கிறேன்.


சிறு பத்திரிகைகளில் தீவிரமாக எழுத ஆரம்பித்தது எப்போது?

நான் தஞ்சாவூரில் படித்துக் கொண்டிருந்த போது "பிரக்ஞை" என்ற பத்திரிகையின் தீவிர வாசகனாக இருந்தேன். பிறகு சென்னை வந்த போது அதன் ஆசிரியர் குழுவில் இருந்தவர்களைச் சந்தித்தேன். வீராச்சாமி என்னை வெகுவாக ஈர்த்தார். ஆனாலும் நான் அப்போது வெகுஜனப் பத்திரிகைகளிலேயே எழுதிக் கொண்டிருந்தேன்.

1978 ல் தில்லி சென்றேன். கொல்லிப் பாவை, படிகள் போன்ற பத்திரிகைகளின் தொடர்பு ஏற்பட்டது. படிகள் பத்திரிகை என்னை மிகவும் ஊக்குவித்தது. வெங்கட்சாமி நாதனுடன் ஏற்பட்ட நட்பு மறக்கவே முடியாதது. சுமார் இரண்டு வருட காலம் அவரோடு குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது விவாதிக்காத நாளே கிடையாது என்று சொல்லலாம். சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர் தான்.

அப்போது இலக்கிய வெளிவட்டம் என்ற ஒரு பத்திரிகை வந்தது. அதன் ஆசிரியர் நடராஜன் வத்தாயிருப்புக்குப் பக்கத்தில் உள்ள புதுப்பட்டி என்ற குக்கிராமத்திலிருந்து அந்தப் பத்திரிகையைக் கொண்டு வந்தார். அதிலும் என்னுடைய முக்கியமான பல கட்டுரைகள் வெளிவந்தன. நடராஜன் அப்போது கிழிந்த ஜாக்கெட்டுகளுக்கு ஒட்டுப் போடும் டைலராக வேலை பார்த்து வந்தார் என்பது மிகவும் குறிப்பிட வேண்டிய விஷயம்.

அவரிடமிருந்து நான் மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் குடும்பம் என்ற அமைப்பினால் அமுங்கிப் போனவர்களில் அவரும் ஒருவராகப் போனது நமது துரதிர்ஷ்டம்.


எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்", "ஸீரோ டிகிரி" என்றும் பெயர் வைக்கக் காரணம் என்ன?

சார்த்தரையே மீண்டும் குறிப்பிட்ட விரும்புகிறேன். "ஒரு ஐரோப்பியனாக இருந்த என்னை மூன்றாம் உலகத்தை நோக்கித் திருப்பியவர் ஃப்ரான்ஃஸ் ஃபானன்" என்றார் சார்த்தர். Wretched of the Earth என்ற நூலை வாசித்திருப்பீர்கள். சேகுவாராவின் தீவிர ஆதரவாளராக இருந்தார் சார்த்தர். தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மாவோயிஸ்டுகளோடு மட்டுமே அவர் உரையாடி வந்தார். அதனால் தான் அவரால் அப்போது ஸ்ட்ரக்சுரலிசத்தை எதிர்கொள்ள முடியாமல் போனது.

இந்தப் பின்னணியில் எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்ற தத்துவத்தைப் பாருங்கள். "எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்" நாவலில் ஒரு வாசகம் வருகிறது. "The main threat to existentialism is non-availability of good quality condoms" மார்க்சீயவாதிகள் எக்ஸிஸ்டென்ஷியலிசத்தை எப்படிப் பார்த்தார்கள் என்பதைப் பற்றிய கிண்டலே அந்தத் தலைப்பு. ஒரு வேளை சுய கிண்டலாகவும் இருக்கலாம்.

Zero visibility என்பார்கள். பார்வையே தெரியாத பனி மூட்டம். பனி என்பது மரணம். பச்சையின் எதிர்முனை பனி. பச்சை துவக்கம். பனி முடிவு. பனி என்பது apocalypse. மகாபாரதம் apocalypse-ல் முடிகிறது. One Hundred Years of Solityde நாவலும் apocalypse லேயே முடிகிறது. பனியைப் பற்றி யோசிக்கும் வேளையில் ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. லட்சக் கணக்கான பூத உடல்களை அப்புறப்படுத்துவது எப்படி என்று யோசிக்கிறார்கள் நாஜிகள். பனிப்பாறைகளாய் உறைந்து கிடக்கும் நதியில் வெடிகுண்டு வைத்து தகர்த்து உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் நதியில் யூத உடல்களைப் போடுகிறார்கள்.

ஸீரோ டிகிரியில்-வாழ்வின் அவலத்தால் துரத்தப்பட்டு பனிப் பாலையில் தனித்து அலைகிறான் ஒருவன். அவன் சொர்க்கத்துக்கு செல்லவில்லை. நாம் பின் தொடரவில்லை. மார்க்கமேதும் விளங்கவில்லை. மஹிமான் கூட்டங்கள் அலை அலையாய் நிழல் ரூபமென பாய்ந்து சென்று கொண்டிருக்கின்றன. வாழ்வின் அத்தனை வார்த்தைகளையும் தள்ளிவிட்டு மண்டியிட்டுக் கதறுகிறான்.

கிரேக்கத் துன்பவியல் காவியங்களில் கேட்கும் "கோரஸ்" இது.

இது ஒரு விதமான விளக்கம். இதே போல் joy, celebration, laughter, estacy, frenzy, eroticism, parady, humour என்பதாகவும் "ஸீரோ டிகிரியை வாசிக்கலாம்.

It is a blend of Apollonian and Dionysian Characters. இந்த விதத்தில் "ஸீரோ டிகிரி" யை ஒரு "நீட்ஷேவிய நாவல்" என்று சொல்லலாம்.

அதோடு, Nothingness என்பதற்கு எதிர்ப்புள்ளியிலிருந்து அந்த நாவல் உடலை மையப் படுத்துவதையும் ஒருவர் மிகச் சுலபமாக கண்டு கொள்ளமுடியும். உடல் Carnival ஆக மாறுகிறது. "எல்லா" அர்த்தங்களுக்கும் அறிவுக்கும் உடலே ஆதாரம். ஆரோக்கியமும் வலிமையும் முக்கியப் பண்புகளாக அங்கீகரிக்கப் பட வேண்டும்" என்று ஜாரதூஷ்ட்ராவில் நீட்ஷே எழுதுவதையும் இங்கே ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்.

மற்றொரு இடத்தில் நீட்ஷே எழுதுகிறார் : "A mere disciplining of feelings and thoughts amounts to almost nothing . . . one must first persuade the body . . . It is decisire for the fate of peoples and humanity that one begins inculcating culture in the proper place-not in the 'soul' . . . the proper place is the body ; gestures, diet, physiology ; the rest will follow . . ." இங்கே நாம் தாவோவுக்கும், நீட்ஷேவுக்கும் உள்ள ஒற்றுமை-உடலை மையப்படுத்தும் ஜென் பௌத்தம்-ஜப்பானிய Martial arts - நான் ஏற்கனவே குறிப்பிட்ட ஹடயோகம் எல்லாவற்றையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

இங்கே எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் "உன்னதம்" பத்திரிகையின் ஆசிரியர் கௌதம சித்தார்த்தன் புதுவகை எழுத்து அல்லது நவீன எழுத்து என்று ஏதோ ஒரு அசட்டுத் தனமான தலைப்பு-தலைப்பு சரியாக நினைவில்லை-அந்தத் தலைப்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்-ஈரோட்டில். முக்கியமான பேச்சாளரான எம்.டி.எம் வராததால்-பார்வையாளனாகச் சென்றிருந்த என்னை பேசுமாறு அழைத்தார் சித்தார்த்தன். நான் அப்போது, "நவீன எழுத்து என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை" என்று தெரிவித்து விட்டு, வேட்டை பற்றியும், விதவிதமான சமையல் முறைகள் பற்றியும், மலையேற்றம், ஸ்கீயிங், பயணம் பற்றியும் பேசினேன். அந்தப் பேச்சைப் பற்றி உன்னதம் பத்திரிகையில் சித்தார்த்தன் குறிப்பிடும்போது

"நவீன எழுத்து பற்றிப் பேசுங்கள் என்றால் சமையல் பண்ணி சாப்பிடுவது பற்றிப் பேசினார் சாரு" என்று எழுதி என்னை ஒரு முட்டாளாகச் சித்தரிக்க முயன்றார்.

இவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு முதலில் நீட்ஷேவைப் பயில வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொள்கிறேன்.


நேநோ என்று ஒரு கதைக்கு பெயர் வைத்திருக்கிறீர்களே?

Nine என்பதன் மூலவார்த்தை. ஒன்பது என்பது விளிம்பு. ஆல preoccupation with numbers-Nine is mystical. It is a precipice. You will fall into an abyss-numberless-void-beginning of nothingness. இங்கிருந்து தான் ஸீரோ டிகிரி துவங்குகிறது. But 'Nano' is a story of procreation and mysteries of sexuality.

பனிவெளியில் முடியும் மரணத்துக்கும்-வாழ்வுக்கும் இடையிலான நாவல் ஸீரோ டிகிரி என்றால் நேநோ அதற்கு மாறாக ஸீரோ டிகிரி எங்கே முடிகிறதோ அங்கே துவங்குகிறது.

ஒன்பது என்பது முடிவின் துவக்கம். பாறை விளிம்பிலிருந்து பார்த்தால் அதல பாதாளம், எண்களைப் பற்றிய விஞ்ஞானத்தில் ஒன்பது அலளவiஉயட குணாம்சங்களைக் கொண்டது. வான வாஸ்திரத்தில் அது ரௌத்திரம், போர், Apocalypse.

ஆனால் அதுவே ஜனனத்தின் குறியீடு. கருவியலைப் பயின்று கொண்டிருந்த போது அது எனக்குக் கிடைத்தது. Nano Seconds என்று சொல்வார்கள். கலவியின் போது கருவணு கருமுட்டையை அடைய எடுத்துக் கொள்ளும் பாலம் Nanoseconds. ஒரு நொடியில் .000000009 அளவு அது. கருவணுவின் உருவமும் ஒன்பதை ஒத்திருக்கும்.

இவ்வளவு அற்புதமாக, அதிசயத்தைப் போல் உருவாகும் உயிர் எவ்வளவு சாதாரணமாக, அபத்தமாக அழிக்கப்படுகிறது என்ற துக்கத்தின் வெளிப்பாடே நேநோ சிறுகதை. ஜனனம்-மரணம்-வாழ்வின் குரூரம் பற்றிய கதை அது. ஒரே ஒரு கருவணு கருமுட்டையைச் சென்று அடைவதற்குள் லட்சக்கணக்கான கருவணுக்கள் சிதைவுறுகின்றன. அழிந்து போகின்றன. ஜனன கேந்திரத்திலேயே ஒரு பேரழிவு. பிறகு உயிரின் துளிர்ச்சி என்று இந்த வினை மாறி மாறிச் சென்று கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் நீட்ஷேவைப் படித்துக் கொண்டிருந்த போது "நேநோ"வுடன் இணைந்து போகும் ஒரு பகுதியைக் கண்டேன்.

What was it that the Hellene guaranteed himself by means of these mysteries, Eternal life. the eternal returen of life ; the future promised and hallowed in the past ; the triumphant. Yes to life beyond all death and change ; true life as the over-all continuation of life through procreation, through the mysteries of sexuality-For the Greeks the sexual symbol was therefore the venerable symbol par excellence, the real profundity in the whole of ancient piety. Every single element in the act of procreation, of pregnancy, and of birth aroused the highest and most solemn feelings. In the doctrine of the mysteries, pain is pronounced holy : the pangs of the woman giving birth hallows all pain. That there may be the eternal joy of creating that the will to life may eternally affirm itself, the agony of the woman giging birth must also be there eternally. All this is meant by the word Dionysuys . . ."

Twilight of the Idols என்ற புத்தகத்தில் What I owe to the Ancients என்ற கட்டுரையில் நீட்ஷே.

இப்படியாக, நேநோ சிறுகதை கிரேக்க புராணங்கள், கருவியல், தத்துவம், எண் கணிதம் என்று பல தளங்களில் விரியும் ஒன்று.


மௌனி மற்றும் புதுமைப் பித்தன் மீது உங்களுக்கு என்ன கோபம்?

நான் ஒரு அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை செய்கிறேன். அங்கே நான் ஒரு எழுத்தாளன் என்று அறிய நேர்கிற பெண்கள், தாங்களும் கதை என்று எதையோ எழுதி-அநேகமாக அது மாமியார் கொடுமை, புருஷன் கொடுமை, அல்லது முதல் காதல் என்பதாக இருக்கும். கற்பனையே கலக்காத அச்சு அசல் உண்மைச் சம்பவங்கள். என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார்கள். அழகான பெண்கள் என்றால் பொய் சொல்லி விடுவேன். அதை வைத்து மேற்கொண்டு பேசவும், பழகவும், எட்ஸெட்ரா, எட்ஸெட்ரா என்று மனம் கணக்குப் போடும்.

அந்த மாதிரிக் கதைகளின் தரத்தில் இருக்கிறது புதுமைப் பித்தன் கதைகள். அவருக்கு எழுதத் தெரியவில்லை. வாயிலேயே வைக்க வழங்காத சமையலைப் போல் இருக்கிறது அவர் கதைகள்

நான் ஒரு Connoisseur. மிகத் தேர்ந்த சமையல்காரன், உலகின் அற்புதமான பதார்த்தமான அக்கார வடிசல் அதி ருசியாய் சமைப்பேன். ஓலன் போன்ற வழக்கொழிந்து போன உணவு வகைகளும் தெரியும். அதே போல் அசைவ உணவு வகையில் lobster, நியூசிலாந்திலிருந்து இங்கே இறக்குமதியாகும் ஒரு வகை மீன், trout மீன் என்று நூற்றுக்கணக்கான உணவு வகைகள்-பல்வேறு தேசங்களைச் சேர்ந்த உணவு வகைகள் எனக்கு அத்துப்படி, என் நண்பன் ஒருவன் என் சமையலைச் சாப்பிட்டு விட்டு 'Creativity' யின் உச்சம் இது. இதில் நூற்றில் ஒரு பங்கையாவது உன் எழுத்தில் காண்பிக்கக் கூடாதா? ' என்று கேட்டான். (அவனுக்கு என் எழுத்து பிடிக்காது)

சமையல் என்பது ஒரு கலை. ஆனால் அதை நாம் பெண்களுக்கென ஒதுக்கி விட்டதால் ஏதோ தினந்தோறும் மலம் கழிப்பது தான் வாழ்வின் ஆதாரமான கடமை என்பது போலவும், அந்த ஆதாரமான செயல் தடங்கல் ஏதும் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காகவே எதையோ தின்ன வேண்டும் என்பது போலவும் தான் சமையல் என்கிற கலை உருமாறியிருக்கிறது. பாவம் பெண்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ரஷ்யாவின் நிலக்கரிச் சுரங்கங்களில் கை விரல்களாலேயே நிலக்கரியைச் சுரண்டுவார்களாம். நகங்கள் கிழிந்து குருதி ஓடும் தொழிலாளர்களின் அவலம் பற்றி அப்போதைய ரஷ்ய இலக்கியங்கள் சொல்லுகின்றன. அந்தத் தொழிலாளர்களின் நிலையில் இருக்கிறார்கள் நமது பெண்கள்.

ஆனால் சமையல் என்பது கலை. நல்ல சமையல் தீவிரமான கலவியைப் போல் இன்பம் அளிக்கக் கூடியது. புதுமைப் பித்தனுக்கு சமைக்கத் தெரிகிறதே இல்லையோ, எழுதத் தெரியவில்லை. அவருக்குள்ளிருந்த படைப்புத் திறனை எழுத்தாக மாற்ற தெரியவில்லை. ஆனால் அதற்காக அவர் மீது எனக்குக் கோபமில்லை. ஒருவருக்கு எழுதத் தெரியாதது ஒரு குற்றமா என்ன? ஆனால் எழுதத் தெரியாத ஒருவர்-தான் உலக இலக்கியம் படைத்து விட்டதாகப் பீற்றிக் கொள்ளும் போது தான் கோபம் வருகிறது. சமகாலத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் பிடித்திருக்கும் இந்த வியாதியைப் பரப்பியவர்கள் மௌனியும் புதுமைப் பித்தனும். சமகாலத் தமிழ் இலக்கியத்தின் சீரழிவின் மூலவர்கள் இவர்கள்.

ஆனால் தமிழ் இலக்கியவாதிகளே பெரும்பாலும் ஆநனiடிஉசந களாகவும், படிப்பறிவு இல்லாதவர்களாகவும் இருப்பதால் இவர்களுக்கு மௌனியையும் புதுமைப் பித்தனையும் உயர்த்திப் பிடிப்பது வசதியாகப் போயிற்று.

வெகுஜன அரசியலில், கலாச்சாரத்தில் எவ்வகை மனோபாவம் இயங்குகிறதோ அதே தான் சிறு பத்திரிகை எழுத்தாளர்களிடமும் இயங்குகிறது என்று பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன். வெகுஜன தளத்தில் எப்படி ICON உருவாக்கப் படுகிறார்களோ அதைப் போலவே தான் சிறு பத்திரிகைத் தளத்திலும் மௌனி, புதுமைப் பித்தன் என்ற ICONS உருவாக்கப் படுகிறார்கள்.

நகுலனை ஏன் இவர்கள் தீண்டவே இல்லை? கரிச்சான் குஞ்சு, லா.ச.ரா, எம்.வி. வெங்கட்ராம் என்று எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், எம்.வி.வியின் பைத்தியக்காரப் பிள்ளை-உலகத் தரமான ஒரு சிறுகதை, குடும்பம் என்ற அமைப்பின் சீரழிவை இதை விட வலுவாக வேறு எந்தக் கதையும் சொல்லவில்லை, லா.ச.ராவின் வேண்டப்படாதவன் என்ற சிறுகதை. உலகிலேயே மிகக் கொடுமையான ஒடுக்குதலுக்கு ஆளாகிறவர்கள் சிறுவர்கள். அதே போல், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், லா.ச.ராவின் கதையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன், கரிச்சான் குஞ்சுவின் "பசித்த மானிடம்" என்ற நாவல்-இப்படிப் பார்த்தால் மௌனியிடமும், புதுமைப் பித்தனிடமும் கூட ஒன்றிரண்டு கதைகள் தேறலாம். தி.ஜ.ர, என்று அழைக்கப்பட்ட தி.ஜ.ரங்கநாதனிடம் ஒரு கதை தேறுவதைப் போல, இப்படி தமிழில் எழுதிய ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு கதை கிடைக்கலாம். யார் கண்டது, திருவாளர் சுஜாதாவிடமிருந்து கூட ஒரு நல்ல கதை கிடைக்கலாம்! ஆக, மௌனிக்கும் புதுமைப் பித்தனுக்கும் மட்டும் என்ன தனி மரியாதை என்று கேட்கிறேன்.


புதுமைப் பித்தன் தன் கால கட்ட ஜாதீய ஒடுக்குமுறைக்கு பாராமுகமாய் இருந்தார் என்கிறீர்கள். அப்படியானால் பாரதி-பகத்சிங் காலத்தில் மாயாவாதக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார் என்பதைத் தாண்டி பாரதியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

புதுமைப்பித்தன் மட்டுமல்ல, என் குற்றச் சாட்டில் மௌனியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும், மேலும் அவர்கள் தங்கள் காலகட்ட ஜாதீய ஒடுக்குமுறைக்கு பாராமுகமாய் இருந்தார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் கதைகளே அந்த ஜாதீய ஒடுக்குமுறையை ஆதரிப்பதாகவும் நியாயப் படுத்துவதாகவும் இருக்கின்றன.

மௌனியின் "மாறாட்டம்" என்ற கதையை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒருவனை மற்றொருவன் கை தட்டிக் கூப்பிடுகிறான். இவனைப் பொறுத்தவரையில் கை தட்டிக் கூப்பிடுவது அநாகரிகம், காட்டு மிராண்டித்தனம், யார் அப்படிக் கை தட்டிக் கூப்பிடுவது-அப்பேர்ப்பட்ட பிராணியைப் பார்ப்போமென்று தலையைத் திருப்புகிறான். இன்னும் வேகமாகத் தட்டிக் கொண்டே "உங்களைத் தானுங்க . . ." என்று கூச்சலிட்டுக் கொண்டு நெருங்குகிறான். இங்கே வரும் "ங்க" என்ற பிரயோகத்தைக் கவனியுங்கள். உலகத்தில் பிரளயமே வந்திருந்தாலும் கூட அவன் அப்படி பீதி அடைந்திருக்க மாட்டான். அந்த அளவுக்கு ஆடிப் போய் விடுகிறான். பக்கத்தில் வந்து "உங்களைத் தானுங்க . . " என்று உரத்தே சொல்கிறான். இவனுக்கு அவனை மூக்கைப் பிடித்து குலுக்க வேண்டும் போல் ஆத்திரம் பீறிடுகிறது.

"ஆமாங்க, எனக்குத் தெரியுங்க" என்றான் நாட்டுப்புறத்தான், இவனை மேலும் கீழும் உற்றுப் பார்த்துக் கொண்டே அவன் ஒரு முடிச்சு மாறியாக ஏன் இருக்கக் கூடாது. அப்படி இருந்தாலும் பரவாயில்லை, தன்னுடைய ஸில்க் ஷர்ட்டுக்குப் பை இல்லை, மடியிலும் "பர்ஸ்" இல்லை, ஒருக்கால் தாசி வீட்டுத் தரகனாக இருக்கலாமோ? அப்படியாயின் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்ளுவார்கள் அப்போது பார்க்கும் தனது நண்பர்கள்? ஒருக்கால் தன் ஊர்ப் பண்ணை ஆளோ என்றும் எண்ணுகிறான். தன் பெருமையை மிகவும் நோவச் செய்ததில் மனது இவனுக்கு உருகியே போய் விடுகிறது.

நாட்டுப் புறத்தானை ஒருவழியாக தவிர்த்து விட்டு வேறு பக்கம் சென்று விடுகிறான் இவன். அனால் என்ன துரதிர்ஷ்டம். அங்கேயும் வந்து "உங்களைத் தானுங்க . . ." என்கிறான் நாட்டுப் புறத்தான். சரி தொலையட்டுமென்று "உனக்காகத் தான் காத்திருந்தேன்" என்கிறான் இவன்.

"ஆமாங்க-தெரியுங்க-" என்று அவன் பின் தொடர்கிறான். இவன் அவனுடைய மூக்கை கவனிக்க அவன் "ஆமாங்க-என்னைப் பாத்தாலே மறுக்காதுங்க-என் மூக்குங்க-" என்கிறான்.

இப்படியாக "ஆமாங்க . . சரீங்க" என்றபடி உரையாடல் தொடர்கிறது. ஸில்க் ஷர்ட்காரன் நாட்டுப் புறத்தானை "டா" போட்டுப் பேசுகிறான். இதில் ஒரு குளறுபடி என்னவென்றால் அந்த நாட்டுப்புறத்தானும் பிராமண பாஷை பேசுவது தான். கவனியுங்கள்.

"அவங்க-ரயிலிலே, என்னைத் தெரிஞ்சுண்டு-அந்த ஐயா எங்கிட்ட சொன்னாரு-கொடுத்தாரு-" நாட்டுப்புறத்தான் கதையின் போக்கில் "பட்டிக்காட்டான்" ஆகி விடுகிறான்.

"உங்களைப் பார்த்தே தெரிஞ்சுடுத்தே எனக்கு!" என்றான் பட்டிக்காட்டான்.

கடைசியில் கதையின் 'labyrinth' என்னவென்றால் வக்கீல் சுப்ரதிவ்யம் அய்யங்கார் என்று நினைத்து அந்தப் "பட்டிக்காட்டான்" அதே அடையாளமுள்ள (சில்க் சட்டை, விசிறி மடிப்பு அங்கவஸ்திரம்) மற்றொருவனைப் பிடித்து விடுகிறான். எப்படி இந்தத் தவறு நேர்கிறதென்றால், அன்று சாயங்காலம் "ஜவஹர்" அவ்வூருக்கு வருகிற படியால் அய்யங்கார் சில்க் சட்டைக்கும், விசிறி மடிப்புக்கும் ரஜா கொடுத்து விட்டு ஜிப்பாவும் குல்லாவுமாக வந்து விட்டார். கதாநாயகனோ அன்று எதேச்சையாக சில்க் சட்டையும், விசிறி மடிப்புமாக வந்து விட்டான். கதையின் முத்தாய்ப்பைக் கவனியுங்கள் . . .

"தனியாக பைத்தியக்காரத்தனத்தில் தான் இருப்பதாக ஒரு எண்ணம் முதலில்-பிறகு உலகமே பைத்தியக்காரத்தனமாய்ப் போய் விட்டதோ என்ற யோசனையும், சம்சயமும், கடைசியாக , ஒன்றுமே புலப்படாமல் "பைத்தியக்காரத்தனம்" என்று ஒரு தரம் முணுமுணுத்து மூச்சு விட்டான். யார் யார் எப்படி எப்படி என்பதை அவனால் உணர முடியவில்லை அப்போது"


இப்படி கதை எழுதுகிறவர்களின் முகத்தில் காறி உமிழ வேண்டும் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?

மௌனியையும், புதுமைப் பித்தனையும் Philistines என்கிறேன் நான்.

ஆனால் என்னுடைய முக்கியக் குற்றச்சாட்டு இது இல்ல. அவர்கள் எழுதிய கதைகள் குப்பைக் கூடைக்குப் போயிருக்க வேண்டியவை-இலக்கியமாகத் தேறாதவை என்பது தான்.

பாரதி அப்படி அல்ல.

தலித்துகளைப் பற்றி அவர் எழுதிய "ஆறில் ஒரு பங்கு" என்ற கதை சர்வதேசத்தரம் வாய்ந்தது அல்ல எனினும் அவர் கவிதைகள் பல உலக கவிதைகளுக்கு நிகரானவை. மேலும் அவர் கவிஞர் மட்டுமல்ல. பத்திரிகையாளர். விடுதலைப் போரளி. சிறுகதை, கட்டுரை, வசன கவிதை என்று பல்வேறு இலக்கிய வடிவங்களையும் செழுமைப் படுத்தியவர். மிகப் பெரிய கலகக் காரர். சமகாலத் தமிழ் இலக்கியத்தில் காணக் கிடைக்காத Dionysian Spiritஐ என்னால் பாரதியின் எழுத்தில் மட்டுமே காண முடிகிறது. அதைப் புரிந்து கொள்ளாமல் அவரை மாயாவாதக் கவிஞர் என்று குறுக்குவது வறட்டுத் தனம். பாரதி கஞ்சா உட்கொண்டது உட்பட அவரது வாழ்வும் எழுத்தும் Unique ஆனவை. சமகாலத் தமிழ் இலக்கியத்தில் காணக் கிடைக்காதவை.


சிறு பத்திரிகை தளத்தில் தாஸ்தாவ்ஸ்கி கொண்டாடப் பட்ட அளவுக்கு டால்ஸ்டாய் கொண்டாடப் படவில்லை. உங்கள் இலக்கிய மதிப்பீட்டின் படி டால்ஸ்டாய் தானே உங்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்-என்பது சரியா?

என்னைக் கிண்டல் செய்வதற்காக கேட்கப்படும் கேள்வி என்றே இதைப் புரிந்து கொள்கிறேன். டால்ஸ்டாய் ஒரு நீதிமான். உய்விப்பவர். மன்னிப்பு வழங்குபவர். புத்துயிர்ப்பு அளித்து பரலோக சாம்ராஜ்யத்துக்கு இட்டுச் செல்பவர்.

கிறித்தவம் குறித்து நீட்ஷே எழுதியவற்றை இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

ஆனால் தாஸ்தாவ்ஸ்கி குற்றவாளிகளின் பக்கம் நிற்பவர். சூதாடி. சைபீரிய சிறைச்சாலைகளில் இருந்தவர். நோயாளி. பதிப்பகத்தாரிடம் பணம் வாங்கிக் கொண்டு குறித்த தேதிக்குள் நாவலை முடித்துக் கொடுக்க முடியாமல் வழக்குகளைச் சந்தித்தவர். அப்படி ஒரு முறை அவரது நரம்பு வியாதியின் காரணமாக குறித்த தேதிக்குள் நாவலை முடித்துக் கொடுக்க முடியவில்லை. பதிப்பகத்தார் கடைசித் தவணையாக ஒரு தேதியைக் குறிக்கிறார். கடும் குளிர். உடல் உபாதை. கொடிய வறுமை. நரம்புத் தளர்ச்சியும் சேர்ந்து கொள்கிறது. பேனாவைத் தொடவே முடியவில்லை. மீண்டும் சைபீரியாவா என்று பதறுகிறார். அப்போது அவரிடம் வந்து சேர்கிறாள் அன்னா என்ற இளம் பெண்.

தாஸ்தாவ்ஸ்கியின் கதை சொல்லும் வேகம், அவரது உக்கிரம், வெறி எல்லாம் சேர்ந்து அவள் அவரைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறாள், அவரது மரணம் வரை உற்ற துணையாகவும் காதலியாகவும் இருக்கிறாள்.

தாஸ்தாவ்ஸ்கியின் வாழ்க்கையே ஒரு நாவலைப் போன்றது. குற்றவாளிகளின் உலகம் அது. ஒரு பத்தாண்டுக் காலம் நான் தாஸ்தாவ்ஸ்கியின் உலகத்தில் வாழ்ந்தேன் என்று சொல்லாம். எனது எழுத்தியக்கத்தின் எக்ஸிஸ்டெஷியலிச கால கட்டம் அது.

பின்னர் லெவி ஸ்ட்ராஸ், ரொலான் பார்த், ஃபூக்கோ என்று ஸ்ட்ரக்சுரலிசத்தின் பக்கம் நகர்ந்த போது போர்ஹேஸ், நபகோவ் போன்றவர்களைக் கண்டடைந்தேன். தாஸ்தாவ்ஸ்கியை விட நபகோவ் இப்போது எனக்கு மிகுந்த நெருக்கமானவராக இருக்கிறார். விளக்கங்கள் இல்லாத-புதிர்களும் மர்மங்களும் நிறைந்த உலகம் அது. பதிமூன்று வயதுப் பெண்ணின் மேல் ஐம்பது வயதுக்காரனுக்கு எப்படிக் காதல் ஏற்படும்?

Lolita வில் விளக்கங்கள் இல்லை. It just happens.

நபகோவ் தாஸ்தாவ்ஸ்கியை நிராகரிக்கிறார். "அவர் ஒரு க்ரைம் ரைட்டர் . . . தினசரிகளில் க்ரைம் நியூஸ் படித்து எழுதுகிறவர்' என்கிறார் நபகோவ். தாஸ்தாவ்ஸ்கிக்கு தினசரிகளைப் படிப்பது பெரிதும் விருப்பமான விஷயம் என்றாலும் அவரது எழுத்தை நான் அப்படி நிராகரிக்க மாட்டேன். மேலும் ஒரு சுவாரசியமான தகவல்-நபகோவ் ஒரு வண்ணத்துப் பூச்சி சேகரிப்பாளர். உலகெங்கிலும் உள்ள முக்கியமான பல்கலைக் கழகங்களில் நபகோவின் வண்ணத்துப் பூச்சி ஆய்வுகள் பாடத் திட்டத்தில் உள்ளன. "நான் இலக்கியத்தில் சாதித்ததை விட வண்ணத்துப் பூச்சி ஆய்வில் சில பெருமைக்குரிய சாதனைகளைச் செய்திருக்கிறேன்" என்கிறார் நபகோவ். அதற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள் பெரும் சாகசங்களைக் கொண்டவை. சுவாரசியமானவை. இலக்கியம் தவிர வேறு துறைகளையும் நலம் பயில வேண்டியுள்ளது. ஆனால் இலக்கியமே தயிர்வடையாக இருக்கும் தமிழ்ச் சூழலில் என்னுடைய எதிர்பார்ப்பு அதிகபட்சமானது தான்!


எந்த ஒரு கலைஞனும் தன்னுடைய காலத்திற்கு உணர்வுள்ளவனாக ஏன் இருக்க வேண்டும்? JRR டோல்க்கீன் போன்றவர்கள் கற்பனையின் உச்சத்தில் தானே சிறந்த எழுத்தாளராகிறார்? ஒரு political allegroryயைக் கூட அவர் மறுத்தார் என நான் படித்திருக்கிறன்.

ஒரு எழுத்தாளர் அரசியல் பிரக்ஞை கொண்டவராக இருந்தாக வேண்டும் என்பது என் நிபந்தனை அல்ல. கட்டாயம் அல்ல. போர்ஹேஸுக்கு அரசியல் தெரியாது. தென்னமெரிக்காவின் கொந்தளிப்பான, புரட்சிகரமான அரசியல் சூழலிலிருந்து தன்னை முற்றாக விலக்கிக் கொண்டவர். இடது சாரி எழுத்தாளர்களைக் கடுமையாகச் சாடியவர். அவருக்கும் ஹுலியோ கொர்த்தஸாருக்கும் நடந்த கடும் விவாதங்களுமே கொர்த்தஸாரைப் போல், மார்க்வெஸைப் போல்அரசியல் பிரக்ஞை கொண்டவர்களகாக இருக்க வேண்டும் என்று நலம் நிர்ப்பந்திக்க முடியாது. இன்னும் ஒரு வேடிகக்கை என்னவென்றால், மாரியோ வார்காஸ் லோஸா-தென்னமெரிக்காவின் மிகச் சிறந்த கதை சொல்லியான அவர் பெரூவில் பயங்கரவாத அரசின் பக்கம் நின்றவர், புரட்சியாளர்களை எதிர்த்தவர். சில காலம் ஃபாஸிஸ அரசின் ஜனாதிபதியாக இருந்தவர். ஆனால் அவருடைய Real Life of Alejandro Majta வை நீங்கள் படித்தால் நீங்களே புரட்சியாளராக மாறி விடுவீர்கள். Conversations in the Cathedral -நாவலில் பெரூவின் அவலத்தை-ஒரு தேசமே குப்பைத் தொட்டியாகக் கிடப்பதை-பெரூவின் கொடூரமான-ரத்தக் கறை படிந்த அரசியலை எவ்வளவு வலுவாக எழுதிருக்கிறார்! முழுக்கவும் இந்திய நிலைமைக்குப் பொருந்தி வருகிற ஒரு நாவல் அது. தெருவில் திரியும் நாய்களைப் பிடித்துக் கொண்டு போய் அடித்தே கொல்லும் அந்த முனிசிபாலிட்டி ஊழியனை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

லோசாவினால் இது எப்படி சாத்தியமாகிறது? கூடு விட்டுக் கூடு பாய்கிறான் லோஸா. அலெஜாந்த்ரோ மாய்த்தா என்ற புரட்சியாளனாக-முனிசிபாலிட்டி ஊழியனாக-ரேடியோ நாடக சீரியல் எழுதும் கதை வசன கர்த்தாவாக-புரட்சிகரப் பாதிரியாக-இன்னும் நூற்றுக்கணக்கான பாத்திரங்களாக மாறுகிறான் லோஸா. இதைத் தான் Travelling into the other என்கிறேன். ஆனால் தமிழ் எழுத்தாளர்களுக்கோ Travel என்பதே இல்லை,

இங்கே தான் வாசிப்பு என்ற செயல்பாடும் வருகிறது. போர்ஹேஸின் வாசிப்பு எப்படிப்பட்டது? அவர் ஒரு நடமாடும் நூலகம் என்பார்கள். இந்தியச் சமூகத்தைப் பற்றி ஒரு பத்து புத்தகங்களைப் படித்து அறிந்து கொள்வதை விட போர்ஹேஸின் "The way to Al-Mutasim" என்ற ஒரே ஒரு சிறுகதையின் மூலம் நலம் அதிகம் தெரிந்து கொள்ள முடியும். வரலாறு, மானுடவியல், மொழியியல், அமைப்பியல் வாதம் போன்ற பல துறைகளில் அறிஞர்களில் கண்டு பிடித்த ஆய்வு முடிவுகளை போர்ஹேஸ் வெகு எளிதாக தனது கதைகளினூடே கண்டடைகிறார். போர் ஹேஸுக்கு அமைப்பியல்வாதம் தெரியாது என்றாலும் கூட அமைப்பியல்வாதிகள் எதிர் கொண்ட பல புதிர்களை போர்ஸேஸின் எழுத்து விடுவிக்கிறது.

மண்ணில் ஆழமாக ஒரு துளையிட்டால் நீர் பீறிட்டு அடிக்கும். ஆழம் எவ்வளவு போகிறதோ அவ்வளவு வீர்யமாகவும் உக்கிரமாகவும் இருக்கும் நீரூற்றின் வேகம். இதை நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கிய வெளிவட்டத்தில் எழுதிய கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். சமீபத்தில் நீட்ஷே இந்த உதாரணத்தைக் கொடுத்திருப்பதைப் படித்தேன்.

நான் டோல்க்கீனை இன்னமும் படித்ததில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால் இவரது எழுத்தை தர்மு சிவராமு எனக்கு அறிமுகப்படுதினார். இதே போல் கார்லோஸ் காஸ்டனாடாவைப் படிக்க வேண்டுமென ஒரு நண்பர் சிபாரிசு செய்கிறார். இதோடு, நானே தெரிவு செய்து சிலரை இன்னமும் படிக்காமல் வைத்திருக்கிறேன். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒரு வேளை டோல்க்கினின் நீரூற்று வெகு உக்கிரமானதாக இருக்கலாம்.


இரண்டு விதமான செயல்பாடு-ஒன்று-அரசியல் போராட்டம் பற்றிய பிரக்ஞை. இரண்டு-துறவு மனப்பான்மையுடன் செயல்படுவது-தத்துவத் தேடல்-இது போன்று, கலைஞனின் செயல்பாட்டை இப்படி இரண்டு எல்லைகளுக்குள் குறுக்க முடியுமா?

இந்த விஷயத்தை வேறொரு விதமாகப் பார்க்கலாம் என்று நினைக்கிறோம். தென்னமெரிக்காவிலும், இன்னும் உலகின் பல்வேறு மூலைகளிலும், அதிகாரத்திற்கெதிரான போராட்டங்களுக்கெல்லாம் சேகுவாராவின் பெயர் ஒரு குறியீடாகவே மாறியிருக்கிறது. இதே போல் Richard Feynmann, Stephen Hawking போன்றவர்கள் இந்த உலகத்திற்கு வழங்கியுள்ளவை அதிகம்.

ஆக, கலைஞன் என்று தனியாக யாரும் இல்லை என்று தோன்றுகிறது. உதாரணமாக, தமிழ்ச் சூழலில், எழுத்தாளர்களை விட பெரியாரின் பங்களிப்பே அதிகம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.


பயணம் பற்றி கூறினீர்கள், நீங்கள் சொல்லும் பெரியாருக்கு என்ன பயணம் இருக்கிறது? உங்களுடைய இலக்கிய / அரசியல் கொள்கையில் பெரியாரின் இடம் என்ன?

இரண்டு விதமான பயணங்கள் உள்ளன. எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் இருக்கிறார். நரசிம்மன் என்பது பெயர். வயது எண்பதுக்கு மேல் இருக்கும். எனது வட இந்தியப் பயணங்களில் அவரே எனது வழிகாட்டி. என்னோடு உடன் வராவிட்டாலும் ஒவ்வொரு இடமாக எனக்கு சொல்லித் தருவார். இமாசலப் பிரதேச எல்லையில் இருக்கும் ரோத்தங் பாஸுக்கு எப்படிப் போக வேண்டும்-தேசிய நெடுஞ்சாலை எண் : 1 என்ற அந்தச் சாலையின் அகலம் எவ்வளவு-அங்கிருந்து எப்படி எப்படிச் சுற்றி இந்தியாவின் மற்றொரு எல்லைப் புற மாவட்டமான லஹோல் ஸ்பிட்டிக்கு வர வேண்டும்-எவ்வளவு காலம் ஆகும்-அங்கே இருக்கும் பனிக் குகைகள்-வளைவுகள்-இன்னும் சொல்லப் போனால், குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட ஒருவரின் பெயர்-அவரைச் சந்தித்தால் என்னென்ன சாதகங்கள்-என்று மணிக்கணக்கில் சொல்லுவார். இமயமலைப் பிராந்தியத்தில்-அவர் கால் படாத இடமே இல்லை என்பது என்னுடைய எண்ணம். ரிஷிகேஷ் பற்றிச் சொல்லுவார். காசியிலுள்ள அத்தனை இடங்களும், சந்து பொந்துகளும் படித்துறைகளும் அவருக்கு அத்துப்படி. காசியில் சுடுகாட்டுப் பொறுப்பாளராக இருக்கும் ஹரிசிங்-அங்கே கங்கைக் கரையில் மரணத்துக்காகக் காத்திருக்கும் முதுமையின் விளிம்பில் நிற்கும் ஆண்கள், பெண்கள்-என்று ஏராளமாகச் சொல்லுவார். போய்ப் பார்த்தால், எல்லாமே சரியாக இருக்கும். ஆனால் சமீபத்தில் தான் தெரிந்தது-அவர் சென்னைக்கு வடக்கே சென்றதே இல்லை என்று.

போர்ஹேஸும் அதிகம் பயணங்கள் செய்ததில்லை. இந்தியாவுக்கு அவர் வந்ததே இல்லை. ஆனால் இந்தியாவைப் பற்றி அவர் நிபுணர். காரணம்-வாசிப்பே அவரது பயணமாக இருந்தது.

பெரியாரும் அப்படியே. உலகம் பூராவையும் சுற்றுவதை விட அதிக அளவு தமிழ்நாட்டில் சுற்றியவர் அவர்.


இலக்கியவாதிகளுக்கு அரசியல் பிரக்ஞை தேவை? அரசியல்வாதிகளுக்கு-பெரியார் போன்றவர்களுக்கு இலக்கியம் தேவையில்லையா? எழுத்தாளர்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்?

பெரியாருக்கு பியானோ வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. மைக்ரோ பயாலஜியில் ஈடுபடும் ஒரு விஞ்ஞானிக்கு மலையேற்றம் தெரிந்திருக்க வேண்டுமா என்ன? பெரியாரின் துறை வேறு. அதில் அவர் ஒரு சாதனையாளர். அவர் சிந்தித்த பல விஷயங்கள் அவரது காலத்திற்கு மிகவும் முன்னால் சென்றவை. Some people are born posthumously என்பார் நீட்ஷே. இது நீட்ஷேவுக்கே மிகவும் பொருந்தும் என்று சொல்லுவார்கள். இது பெரியாருக்கும் பொருந்தும். அவரது சிந்தனைகள் அவரது இறப்புக்குப் பின்னும் புதிதாக உள்ளன.

உலகிலேயே மிக அதிகமான சொற்களைப் பேசியவராக அவர் இருக்கக் கூடும். ஒரு நாளில் ஐந்து கட்டங்கள். இப்படியே ஐம்பது ஆண்டுகள். மலைப்பாக இருக்கிறது.

மூத்திரம் போவதற்கான டியூபைப் பிடித்துக் கொண்டு ஊர் ஊராக கலைந்த அந்தப் பெரியவர் ஒரு நாவலின் முக்கியப் பாத்திரமாகவே எனக்குள் கற்பிதங் கொண்டிருக்கிறார். பெரியாரின் இயக்கத்தை இலக்கியத்துக்குள் கடத்துவதே எனது எழுத்தின் அடிப்படை என்று நினைக்கிறேன்.

ஆனால் இந்தப் பதிலில் எனக்குத் திருப்தியில்லை. அவரை ஒரு அரசியல்வாதியாகக் குறுக்க முடியுமா? முடியாது. வில்லியம் பர்ரோஸுக்கும் பெரியாரின் நடவடிக்கைகளுக்கும் மிகுந்த ஒற்றுமை இருக்கிறது. பெரியார் வெளிநாடு சென்றிருந்த போது-நிர்வாணிகளாக இருந்த குழுவினரைச் சந்தித்திருக்கிறார். அப்போது பெரியாரும் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆலன் கின்ஸ்பெர்கின் நிர்வாணப்படம் நமக்குத் தெரியும். Beat writers என்று அழைக்கப்பட்ட-பின்னாளில் ஹிப்பி இயக்கத்துக்கு முன்னோடியாகவும் உந்து சக்தியாகவும் இருந்த-வில்லியம் பர்ரோஸ், ஆலன் கின்ஸ்பெர்க், ஜாக் கெரோவாக் போன்ற எழுத்தாளர்களின் கலக இயக்கத்தோடு பெரியாரின் வாழ்வும், எழுத்தும், பேச்சும் இணைத்துப் பார்க்கத்தக்கது. எழுத்தாளர்கள் தங்கள் தேசம், மதம், ஜாதி போன்றவற்றுக்கு விசுவாசிகளாக இருந்த வேளையில் பெரியார் ஒருவர் தான் தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் என்ற மூன்றையும் ஒருவர் துறக்க வேண்டும் என்று சொன்னார்.

How can a literary person possess anything? இந்த விதத்தில் பெரியாரை ஒரு literary phenomenon என்று சொல்லுவேன்.

இதற்கும் மேலாக, நீட்ஷேவுக்கும் பெரியாரின் சிந்தனைகளுக்கும் உள்ள ஒற்றுமை பற்றியும் நீங்கள் கவனிக்க வேண்டும். இது விரிவான ஆய்வுக்குரியது என்பதால் பிறகு இது பற்றிப் பேசுவேன்.


நீங்கள் கூறும் இலக்கிய அளவுகோல்களின் படி சுந்தர ராமசாமியின் பள்ளம், கி.ராஜநாராயணனின் கதவு போன்று இன்னும் பல கதைகள் இருக்கின்றன. அப்படியிருக்கும் போது, நீங்கள் தமிழ் எழுத்தை வறட்சியாகப் பார்ப்பது ஏன்?

நீங்கள் இப்படி இரண்டு கதைகளைக் குறிப்பிட்டால் நான் என் பங்குக்கு இரண்டு கதைகளைக் குறிப்பிடுவேன். ஏற்கனவே சொன்ன எம்.வி.வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை. லா.ச.ராவின் வேண்டப்படாதவன். இப்படியே ஒரு பட்டியல் போட்டால் கடந்த ஐம்பது ஆண்டுகளின் முக்கியமான கதைகள் என்று ஒரு முப்பது தேறுமா? போனால் போகிறதென்று மௌனிக்கு ஒரு கதை, புதுமைப் பித்தனுக்கு ஒரு கதை என்று கொடுத்தால் கூட முப்பது தேறுமா என்பது சந்தேகம். சரி, ஒரு பேச்சுக்கு-முப்பது கதைகள் தேறுகின்றன என்று வைத்துக் கொண்டால்-இது ஒரு மொழிக்கு வெட்கக் கேடான விஷயம் இல்லையா?

நான் குறைந்த பட்சம் பதினைந்து உலகச் சிறுகதைகளையேனும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். கடல்கன்னி என்று ஒரு கதை. இதற்கு இணையான ஒரே ஒரு தமிழ்க் கதையை நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம். கொர்த்தஸாரின் 'சந்திப்பு' என்று ஒரு கதை. ரத்த வேட்கை-என்று ஒரு ளுயனநயn கதை. மொழியில் பலவித சோதனைகளைச் செய்து பார்க்கும் ரொனால்ட் சுகேனிக்கின் ஒரு சிறு கதை. 'மழை' என்ற மேஜிகல் ரியலிசக் கதை.

இங்கே தமிழில் பிரச்சனை என்னவென்றால்-இதுவரை இங்கே செயல்பட்டிருப்பது Apollonian Character. பொருள்? Individual as seperate from the rest of reality. எனவே Individual தனிமைப் பட்டுப் போகிறார்.

இங்கே Dionysian spirit இல்லை. Chorus இல்லை. நாம் முழுமையின் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. வாழ்க்கையில் ஈடுபடவில்லை. அதனால் joy இல்லை- pleasure of the text இல்லை- Carnival இல்லை- immediacy இல்லை- sorrow இல்லை-தமிழ் வாழ்வின் துக்கமும் சந்தோஷமும் கொண்டாட்டமும் கோரஸாக மாறவில்லை.

இதுவே தமிழ் இலக்கியத்தின் குறைபாடு, தயிர்வடை sensibility என்று சொன்னதற்கு விளக்கம் கேட்டவர்கள் இப்போது நான் சொல்வதை விளங்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். எதிர் கொள்ள வேண்டும்.


தலித்தியம், பெண்ணியம்-இதை பிரதிநிதித்துவப் படுத்துவது தான் இலக்கியத்தின் அடிப்படைத் தேவையாக இருக்க வேண்டுமா?

இலக்கியத்துக்கு இலக்கியம் என்பதைத் தவிர வேறு எவ்வித முன் நிபந்தனைகளும் கிடையாது. ஆனால் தலித்துகள், பெண்கள் என்ற பகுதிகளிலிருந்து தமிழில் பதிவுகளே இல்லை. அதனால் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது. Apologiaவை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். 'நான் ஒரு தலித்-அதனால் முப்பது ரன்கள் எடுத்து விட்டால் அது செஞ்சுரி' என்று சொன்னால் அதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். விவியன் ரிச்சர்ட்ஸ் தன்னுடைய ஒவ்வொரு 4 ஐம் 'வெள்ளை இன-வெறிக்கு எதிரான அடி' என்று கூறினான்.

ஆனால் இங்கோ அச்சு பிச்சு என்று உளறி வைத்து விட்டு தலித் இயக்கம் என்கிறார்கள். இதற்கு உதாரணம் இமயம். அவர் எழுத்து எனக்கு Sanctum Sanctorum Ina நினைவு படுத்துகிறது. அவர் எழுத்தில்"புனிதப் புளிப்பு" தாங்க முடியவில்லை. க்ரியா ராம கிருஷ்ணன் போன்றவர்கள் இந்தப் புனிதங்களை தூக்கி விடுவதன் அரசியலும் இதனால் தான்.

வேறு சிலர் வெறும் கோபதாபங்களையும், ஏச்சுகளையும், வகைகளையும் எழுதி தலித் எழுத்து என்கிறார்கள். தான் ஒரு தலித் என்பதனாலேயே தான் எழுதுவதெல்லாம் இலக்கியம் என்கிற அசட்டு நம்பிக்கையில் இருக்கிறார்கள் இவர்கள்.

இலக்கியம் என்பது மிகுந்த உழைப்பை வேண்டும் ஒரு கலை. நீட்ஷே போன்றவர்கள் ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம் படித்தார்கள் என்று அறிகிறோம். ஒரு இசைக் கருவியைப் பயின்று கொள்வதற்கே தினமும் ஆறு மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டியிருக்கிறது. ஒரே ஒரு நாள் பயிற்சி தவறினாலும் தொடர்ச்சி விட்டுப் போகிறது. அப்படியானால் எழுத்துக்கு எவ்வளவு பயிற்சி வேண்டும்?

ஒரு மாட்டை அறுத்துக் கூறு போடுவதற்கும், ஆழ் கடலில் மீன் வேட்டைக்குச் சென்று வருவதற்கு எவ்வளவு பெரிய பயிற்சி தேவைப்படுகிறது? அதுவே தான் எழுத்துக்கும்.

மலும், தலித், பெண் என்றெல்லாம் இனிமேல் ஒற்றை அடையாளத்துக்குள் குறுக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால்-ஒரு மேட்டுக்குடி பிராமணப் பெண்ணை விட ஒரு தலித் ஆண் அதிக ஒடுக்குதலுக்கு ஆளாகிறான். ஒரு தலித் ஆணை விட தலித் பெண் அதிக ஒடுக்குதலுக்கு ஆளாகிறாள். ஒரு தலித் பெண்ணை விட ஒரு ஏழை பிராமணப் பெண் பாலியல் ரீதியாக அதிக ஒடுக்கு முறைக்கு ஆளாகிறாள். இவர்கள் எல்லோரையும் விட அலிகளின் நிலைமை மிகவும் அவசியமானது. இன்னும் நிறைய விளிம்பு நிலை மனிதர்கள் இருக்கிறார்கள். சிறு குற்றவாளிகள்-நாடோடிகள்-செக்ஸ் தொழிலாளிகள்-ஹோமோ செக்ஷுவல்கள்-அனாதைகள்-குழந்தைத் தொழிலாளர்கள்-பிச்சைக்காரர்கள் என்று இவர்கள் எழுதினால் அந்த எழுத்தையும் தலித்தியம் என்று சொல்ல முடியுமா?

எந்த எழுத்துமே Universalise ஆக மாற வேண்டும். Mediocrityக்கு இலக்கியத்தில் மன்னிப்பே கிடையாது.


எதார்த்தவாதம் பிரதிநிதித்துவம் செய்யும் பொது மனிதனின் அக / புறப் பிரச்சனைகளை பேசிய காலம் போக, சாதி-குலக் குறி நோக்கிச் செல்லும் போக்கு, தனித்த அடையாளக் கூட்டமைப்பு போன்றவைகளைப் பெருக்கும் நிலை ஆரோக்கியமானதா?

இன்றைய நிலையில் பெரியாரையே நாம் திரும்ப வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வெகுஜன அரசியல் போக்குகளின் செல்வாக்கையே தமிழ் எழுத்திலும் காண முடிகிறது. வெகு ஜனத் தளத்தில் சாதிச் சங்கம் என்றால் இலக்கியத்தில் சாதீய இலக்கியம். சுய இரக்கம், மத்திய தர வர்க்க மதிப்பீடுகள், தாங்களே அதிக பட்சம் ஒடுக்கப்பட்டதான கற்பிதங்கள், ஜாதி அபிமானம் போன்றவை இவ்வகை எழுத்துக்களின் அடையாளங்கள். இந்த வகையில் தமிழ் எழுத்து இன மைய வாதத்தை நோக்கிச் செல்லும் அபாயத்தில் இருக்கிறது.

தனது அடையாளத்தைச் சொல்வதில் தவறில்லை. ஆனால் அந்த அடையாளத்தை transcend செய்ய வேண்டும்.

வில்லியம் பர்ரோஸ்-அமெரிக்க ராணுவத்தின் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு எதிராக தன்னை / தனது உடலை தகுதியில்லாததாக ஆக்கிக் கொள்வதற்காக போதை ஊசிகளை தனது உடலில் ஏற்றிக் கொண்டான். அப்போது அவன் குறிப்பிட்டான்-நான் போட்டுக் கொள்ளும் ஒவ்வொரு (போதை) ஊசியும் அமெரிக்க ராணுவம் வியத்நாமில் போடும் ஒவ்வொரு குண்டுக்கும் எதிரானது. அவனது Naked Lunch போன்ற நாவல்களும் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை தாண்டிச் செல்லக் கூடியது. தமிழ் இலக்கியம் உலகத்தரமான எழுத்தை உருவாக்க முடியாததன் காரணம்-இந்த transcendence இங்கே நடக்கவில்லை என்பது தான்.

மழைக்குப் பின் புயல்!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!


1969-70களில் பிரபலமடைந்து பல வெற்றிகளை தங்களது ஆயுதப் போராட்டங்கள் மூலமாக குவித்த நக்சல்பாரிகளுக்கு அதன் பின்னர் தொடர் பின்னடைவு ஏற்படத் தொடங்கியது. கட்சியின் முன்னணியினரும், தொண்டர்களும் காவல்துறையால் வேட்டையாடப்பட்டார்கள். சரணடைபவர்களுக்கு உயிர் மிச்சம், முரண்டு பிடிப்பவர்களுக்கு அதுவுமில்லை என்கிற நிலை.

ஆயினும் நக்சல்பாரிகளின் எழுச்சி இந்திய அரசுக்கு ஒரு அபாயமணியை அடித்தது. நக்சல் குழுக்கள் தோன்றுவதற்கு என்ன காரணம், அவர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க என்ன காரணம் என்றறிய மத்திய அரசு ஒரு குழுவினை அமைத்தது. ஏழை விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் நம் தேசத்தில் சரிசமமாக நடத்தப்படவில்லை. சட்டமும் கூட அவர்களை காப்பாற்ற இயலவில்லை என்ற அவலநிலையை பட்டவர்த்தனமாக அந்த குழு போட்டுடைத்தது. குழுவின் பரிந்துரைகளைப் பார்த்த பின்னரும் கூட அரசு இந்த பிரச்சினை தோன்றுவதற்கான காரணத்தை முளையிலேயே கிள்ளி எறிவதை விட்டுவிட்டு நக்சல்களை அடக்குவதிலேயே முழுக்கவனத்தை செலுத்தியது.

ஆந்திராவில் முன்நின்ற முன்னணியினரான பஞ்சாத்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆறு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து கட்சியின் முன்னணி தலைவர்களாகிய சுப்பாராவ் பாணிக்ரஹி, நிர்மலா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்களுக்கும் இதுதான் கதி. கொல்கத்தாவில் இயங்கிய தேசப்ரதி பத்திரிகை அலுவலகம் காவல்துறையினரால் சூறையாடப்பட்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீகாகுளம் புரட்சியில் முன்நின்ற வெம்படாபு சத்யநாராயணா, அடிபாட்லா கைலாசம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு காவல்துறையினரால் கொல்லப்பட்டார்கள். இதையடுத்து ஸ்ரீகாகுளம் புரட்சி ஒடுக்கப்பட்டது. தமிழகத்தில் நக்சல்பாரிகளின் கட்சியை கட்டமைத்த அப்பு போலிசாரோடு நடந்த மோதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இவர் மரணமடைந்தது கூட மறைக்கப்பட்டு சில நாட்கள் கழித்தே இறந்த செய்தி வெளியானதாக சொல்கிறார்கள்.

வங்காளதேசப் போரில் வெற்றி கண்ட இந்திய ராணுவம் அதே வேகத்தில் நக்சல்களை நசுக்கவும் ஈடுபடுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் சண்டையிட்டு மாண்டார்கள். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறைக்கம்பிகளுக்கு பின்னால் அடைக்கப்பட்டனர். சரோஜ் தத்தா என்ற கட்சியின் மத்திய குழு உறுப்பினர் போலிசாரால் ரகசியமாக கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. கொல்கத்தாவுக்கு அருகில் காசிப்பூர்-பாராநகர் பகுதியில் 150 நக்சலைட்டுகள் 1971 ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய இருதேதிகளில் கொல்லப்பட்டனர்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக நக்சல் நாயகன் சாரு மஜூம்தார் கொல்லப்பட்டது நக்சல்பாரி இயக்கத்தின் தலையில் பெரிய இடியாக இறங்கியது. ஜூலை 1972ல் கொல்கத்தாவில் போலிசாரால் பிடிக்கப்பட்ட சாரு மஜூம்தார் பண்ணிரண்டு நாட்கள் காவல்துறை விசாரணைக்குப் பின்னர் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்டவர்கள் சட்டப்படி நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்படாமல் கொல்லப்பட்டது நாடெங்கிலும் இருந்த சிந்தனையாளர்கள் மனங்களை கொதிக்க வைத்தது.

தலைவர்களையும், இயக்க முன்னணியினரையும் இழந்து வந்த நக்சல்பாரி இயக்கத்துக்கு 1975ல் எமர்ஜென்சி ரூபத்தில் தீர்க்கமுடியாத பிரச்சினை ஏற்பட்டது. ஜனநாயக முறையில் இயங்கிக் கொண்டிருந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கூட சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட நேரமது, நக்சல்பாரிகளை சும்மாவா விடுவார்கள்?

நக்சல்பாரி தலைவர்களையும், தொண்டர்களையும் தேடித்தேடி சிறைகளில் தள்ளினார்கள். காவல்துறையின் சித்திரவதைகளை அறிந்த பலரும் தப்பி ஓடி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்கள். இதே காலக்கட்டத்தில் தான் பீகாரின் போஜ்பூர் மற்றும் பாட்னா மாவட்டங்களில் ஆயுதம் தாங்கிய போராட்டம் மும்முரமாக இருந்தது. போஜ்பூரில் காவல்துறையுடனான துப்பாக்கிச் சண்டையில் நக்சல்பாரி கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளர் ஜவஹர் என்கிற சுப்ரதா தத் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்ததாக காவல்துறை தெரிவித்தது. எமர்ஜென்ஸி இருந்த காலக்கட்டத்தில் நக்சல்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்ற தோற்றம் இருந்தது.

1977ல் காங்கிரஸ் அல்லாத கூட்டணி அரசு மத்தியில் ஏற்பட்டது. தேசிய அளவில் பல மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியதின் பேரில் சிறையில் இருந்த நக்சல் தலைவர்களையும், தொண்டர்களையும் விடுதலை செய்தது. 80களின் ஆரம்பத்தில் இக்கட்சி அழித்தொழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட்டு கலாச்சார அமைப்பாகவும், மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்பாகவும் மாற்றம் பெற்றது. இக்கட்சி நேரடியாக ஆயுதம் ஏந்துவதில் ஈடுபடாவிட்டாலும் மக்களை ஆயுதவழிப் போராட்டத்துக்கு ஆதரவாக மாற்றியது என்பதை மறுக்க இயலாது.

கருத்து வேறுபாடுகளாலும், சித்தாந்த மோதல்களாலும் பல குழுக்கள் பிற்பாடு தோன்றினாலும் அவை அனைத்திற்குமே வேர் 1967ல் மலர்ந்த நக்சல்பாரி புரட்சி தான். இப்போதும் கூட ஆந்திரப்பிரதேசத்தில் செல்வாக்காக இருக்கும் மக்கள் போர்க்குழு (People's War Group), பீகாரில் கோலோச்சும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு (Maoist Communist Centre) ஆகியவை இன்னமும் கொரில்லா போர்முறையை பின்பற்றி வருகின்றன. இவ்வமைப்புகள் அவரவர் செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் காவல்துறை, அரசுநிர்வாகம், நிலப்பிரபுக்கள், தொழில் முதலாளிகள் ஆகியோரை எதிர்த்து ஆயுதவழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இருபதாண்டுகளில் அடிக்கடி செய்திகளில் தலைகாட்டிய நக்சல் குழுக்கள் இவை இரண்டும். இவை தவிர்த்து மக்கள் கொரில்லா படை, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) நவசக்தி என்று பல நக்சல் குழுக்களும் உண்டு.

கடந்த நாற்பதாண்டுகளில் நக்சல் குழுக்கள் பிராந்திய செல்வாக்கோடு இந்திய அரசுக்கு பெரும் தலைவலியாக இன்று வளர்ந்து நிற்கிறது. நக்சல் குழுக்கள் தீவிரவாதிகள் என்பதையும் தாண்டி புரட்சியாளர்களாக, மாவோயிஸ்ட் சிந்தனையாளர்களாக உலகளவில் இன்று அங்கீகரிக்கப்பட்டு விட்டனர். மக்கள் போர்க்குழு, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு ஆகியவை நேபாளம், வங்காளதேசம், பூடான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருக்கும் இவர்களது கருத்தினை ஒத்த கிளர்ச்சியாளர்களோடு ஒருங்கிணைந்து தெற்காசிய மாவோயிஸ்ட் கட்சிகளின் கூட்டமைப்பு என்ற அமைப்பினை ஏற்படுத்தி சர்வதேச அளவில் செயல்படுகிறார்கள். அதுமட்டுமன்றி இந்த அமைப்புகள் எல்லாமே சர்வதேசப் புரட்சியாளர் இயக்கம் என்ற உலகளாவிய இயக்கத்திலும் உறுப்பினர்களாக இருக்கின்றன.

(புயலும், மழையும் புரட்சி வடிவில் தொடரும்)

2 நவம்பர், 2009

சாமுவேல் Made in சூளகிரி அரசினர் மேனிலைப் பள்ளி!


மலைகள் சூழ்ந்த கிருஷ்ணகிரியில் இறங்கி “சூளகிரி எங்கே இருக்கு?” என்று கேட்டால், “சாமுவேல் ஊர்தானே?” என்று கூறி எந்த பஸ்ஸில் போவது என்று வழிகாட்டுகிறார்கள். சூளகிரியின் அடையாளமாய் மாறிப் போயிருக்கிறார் பதினேழு வயது சாமுவேல் வெங்கடேசன்.

சூளகிரி அரசினர் மேனிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஐசக் பாலசிங்கத்தின் அறை. ஆசிரியர் மாறன் அழைத்து வந்த மாணவர் ஒல்லியாக, மாநிறத்துக்கும் சற்று குறைவாக, எளிமையாக தோற்றமளிக்கிறார். இவர் முன்மொழிந்த பிரகடனத்தையே, சமீபத்தில் இத்தாலியில் நடந்த ஜி-8 மாநாட்டில் உலகத்தலைவர்கள் வழிமொழிந்திருக்கிறார்கள்.

“பையனோட அம்மா பெங்களூர்லே வீட்டு வேலை செய்யுறாங்க. அப்பா இல்லை. ரொம்ப ஏழ்மையான குடும்பம். மாமா வீட்டுலே தங்கிப் படிக்கிறான். இவனோட தம்பியும் இதே ஸ்கூல்லே பத்தாவது படிக்கிறான்” சாமுவேலை நம்மிடம் அறிமுகப்படுத்துகிறார் ஐசக்.

“எங்க பள்ளியிலே கல்வி போதிக்கிறது மட்டுமே எங்க வேலைன்னு நினைக்காம, மாணவர்களோட மற்ற திறமைகளையும் கண்டறிஞ்சு, ஊக்குவிச்சு வளர்த்தெடுக்கிறோம். இதுக்கு கிடைச்ச பலன் தான் சாமுவேல்!” பெருமிதப்படுகிறார் ஆசிரியர் மாறன்.

என்னதான் செய்தார் சாமுவேல்? தலைமையாசிரியரும், ஆசிரியரும் விளக்குகிறார்கள்.

இந்தியாவின் பின் தங்கிய மாவட்டங்களில் வளரும் குழந்தைகளின் செயல் திறனை வளர்த்தெடுக்கும் திட்டத்தினை யூனிசெப் அமைப்பு செய்து வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிரியேட்டிவ் & பிலிம் மேக்கிங் துறையில் ஆர்வமுள்ளவர்களை வலைவீசித் தேடியதில் கண்டெடுக்கப்பட்டவர் சாமுவேல்.

இவருக்கு சென்னையில் இயங்கும் நாளந்தாவே அமைப்பு தேவையான பயிற்சிகளையும், உதவிகளையும் யூனிசெப் சார்பாக செய்திருக்கிறது. தொடர்ந்து சாமுவேலே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘அச்சம் தவிர்’ பலரின் பாராட்டுகளை பெற்றது. சாமுவேலுக்குள் இருக்கும் இயக்குனரை வெளிக்காட்டியது. இந்த குறும்படம் தான் சாமுவேலின் விசிட்டிங் கார்டு. வளர்ந்த நாடுகளின் ஜி-8 மாநாட்டு அரங்கில் நடந்த ஜே-8 (ஜூனியர் 8) குழந்தைகள் மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு இதனால் அவருக்கு கிடைத்த்து.

பதினான்கு நாடுகளில் இருந்து, நாட்டுக்கு நாலு பேர் வீதம் இம்மாநாட்டில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் சாமுவேலும் ஒருவர். ஒருவரால் தவிர்க்க இயலா சூழ்நிலை காரணமாக பங்கேற்க முடியாத நிலையில், ஒரிசாவைச் சேர்ந்த மாணவி சஞ்சிதா மாங்கே, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நரேந்திரகுமார் ஆகியோரோடு சாமுவேலும் இத்தாலிக்கு பிளைட் பிடித்திருக்கிறார்.

அம்மாநாட்டில் பொருளாதார வீழ்ச்சி சூழலில், ‘குழந்தைகளின் உரிமைகள்’, ‘பருவநிலை மாற்றங்கள்’, ‘ஆப்பிரிக்க குழந்தைகளின் முன்னேற்றம்’ ஆகியத் தலைப்புகளில் ஜூனியர்கள், சீனியர்களுக்கு நிகராக சூடாக கருத்தரங்கில் விவாதித்திருக்கிறார்கள்.

மாநாட்டின் முடிவில் மாநாட்டுக்கான பிரகடனத்தை தேர்வு செய்யும் பொறுப்பும் கலந்துகொண்டவர்களுக்கே தரப்பட்டது. பலரும், பலவித ஐடியாக்களை அள்ளித் தெளிக்க, நம் சாமுவேல் கொடுத்த ஐடியா ஏகமனதாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு தேவையானது தரமான கல்வி என்பதின் அடிப்படையில் இப்பிரகடனம் உருவாக்கப்பட்டது.

ரோம் நகர மேயர் முன்பாக சாமுவேலால் முன்மொழியப்பட்டது. தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தமிழிலேயே வாசித்திருக்கிறார். அதன் பின்னர் வேறு ஒருவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டது. ரோமில் ரோமானியனாக இரு என்பார்கள். சாமுவேலைப் பொறுத்தவரை ரோமுக்குப் போனாலும் தமிழனாகவே இருந்திருக்கிறார். ரோமில் இத்தாலி நாட்டின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. வெகுவிரைவில் பாரதப் பிரதமரை சந்தித்து மாணவர்களுக்கு தரமான கல்வி குறிட்துப் பேச இருக்கிறார் சாமுவேல்.

ஆசிரியர்கள் பேசும்போது அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார் சாமுவேல். +2வில் எலெக்ட்ரிக்கல் மோட்டார் ரீவைண்டிங்கை பாடமாக எடுத்து படித்து வருகிறார். கூச்சம் தவிர்த்து, சகஜமாகப் பேசுகிறார்.

“+2 முடிச்சிட்டு சென்னையில் விஸ்காம் படிக்கணும்னு ஆசையா இருக்குங்க சார். விஸ்காம் முடிச்சிட்டு சினிமா இயக்குனர் ஆகணும்ங்கிறது இப்போதைய லட்சியம்!”

சினிமா இயக்குனர் என்றால் மசாலாப்படங்களாக எடுப்பீர்களா என்று கேட்டால், “இல்லைங்க. எனக்கு மசாலாப்படங்களில் ஆர்வமில்லை. மக்களுக்கு நல்ல மெசேஜ் கொடுக்குற பேரல்லல் சினிமா (Parrallel Cinema) எடுக்கணும்! என்கிறார்.

சூளகிரியில் இருந்தும் நாளை ஒரு சத்யஜித்ராயோ, அடூர் கோபாலகிருஷ்ணனோ உருவாகினால் ஆச்சரியப்பட எதுவுமில்லை.


அச்சம் தவிர்!

மூடநம்பிக்கைகளை எள்ளலோடு சாடுகிறது சாமுவேல் இயக்கிய ‘அச்சம் தவிர்!’ குறும்படம். வேலைக்கு செல்லும் இளைஞர் ஒருவரிடம் அமாவாசை இரவில் தனியாக வரவேண்டாம் என்று பயமுறுத்துகிறார்கள். ஒருநாள் அதுபோல வந்துவிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

தனியாக அமாவசை இரவில் நடந்து வருபவருக்கு ‘ஜல்.. ஜல்’ என்ற சப்தம் கேட்க, பேயோ, பிசாசோ, மோகிணியோ என்று வியர்த்துவிடுகிறார். பயத்தில் ஓட ஆரம்பிக்க ‘ஜல்.. ஜல்’ சப்தம் அதிகமாக கேட்கிறது. கண்மண் தெரியாமல் இருட்டில் ஓடுபவர், ஓரிடத்தில் இடறி விழுகிறார்.

அதற்குப் பிறகு ‘ஜல் ஜல்’ சத்தம் சுத்தமாக இல்லை. வீட்டுக்கு வந்தவர் தன் சட்டைப்பை சில்லறைகளை எடுத்து வைக்க நினைக்க, பையில் சில்லறைகளே இல்லை. ‘ஜல்.. ஜல்’ சத்தத்தின் பின்னணியை உணர்ந்தவர், தன் மூடத்தனத்தினை எண்ணி தன்னையே நொந்துக் கொள்கிறார்.

இந்த லேசானக் கதையை சுவாரஸ்யமான வசனங்களோடு, நகைச்சுவைக் கலந்து, விஷூவலாக அசத்தி அருமையாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் சாமுவேல்.