4 பிப்ரவரி, 2010

07.02.10 - படம் பார்க்க இலவச டிக்கெட்!


ஓசியில் யாராவது உங்களுக்காக பிரத்யேகமாக படம் போட்டு காட்டும் வாய்ப்பு என்பது உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது அரிதாகதான் நிகழும். யாராவது இளிச்சவாயர் மாட்டினால் மட்டுமே இது சாத்தியம். ‘உரையாடல்' அமைப்பு மிக்க மகிழ்ச்சியோடு அந்த இளிச்சவாய் பட்டத்தை ஏற்றுக் கொள்கிறது. வரும் ஞாயிறு உங்களுக்காக இலவசமாக கிழக்கு மொட்டை மாடி அரங்கில் ஒரு ஆங்கிலப்படம் திரையிடப்படுகிறது. யார் வேண்டுமானாலும் வரலாம். படம் பார்க்கலாம். வீட்டில் இருந்து வரும்போது ஒரு தலையணையையும், பாயையும் நீங்கள் கொண்டு வருவதாக இருந்தால் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் வசதியும் கிழக்கு அரங்கில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாமறிந்த அளவில் உலகில் இதுவரை எந்த அரங்கிலுமே இப்படிப்பட்ட வசதி இல்லை.

பெயர்: The Beautiful Country

மொழி : ஆங்கிலம்

வெளியான ஆண்டு: 2004

பட நேரம் : 125 நிமிடங்கள்

நாள் : 07.02.10, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை.

அனைவரும், ஆர்வமுள்ள தங்கள் இஷ்டமித்திர பந்துக்கள் மற்றும் பேட்டுகளோடு வருமாறு கேட்டுக் கொள்கிறோம். படத்தின் போஸ்டரைப் பார்த்தால் ‘பிட்’ பிட்டாக சூப்பராக இருக்கும் என்று தோன்றுகிறது.

தொடர்புள்ள சுட்டிகள்:

http://naayakan.blogspot.com/2010/02/blog-post_04.html

http://en.wikipedia.org/wiki/The_Beautiful_Country

http://www.imdb.com/title/tt0273108/

3 பிப்ரவரி, 2010

மறுப்பாளனின் நினைவடுக்குகளிலிருந்து...


06-09-1980, காஷ்மீர் விமான நிலையம். காலை நேரம். விமானத்துக்கு காத்திருக்கும் கும்பலில் இரண்டே இரண்டு பேர் சென்னைவாசிகள். ஒருவர் ரஜினிகாந்த். இன்னொருவர் இயக்குனரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன். விமானத்தில் இருவருக்கும் அடுத்தடுத்த சீட் கிடைத்தது.

பட்டன் போடாத சீனிவாசனின் சட்டைக்குள்ளாக ஊடுருவிப் பார்க்கிறார் ரஜினிகாந்த்.

“என்ன ரஜினி இப்படி ஆச்சரியமாப் பார்க்கறீங்க?”

“ஒண்ணுமில்லே. உங்களுக்கு பூணூல் இல்லையே?”

“இல்லை”

இதையடுத்து இருவருக்கும் ஆன்மீக தர்க்கம் தொடங்குகிறது. மதம், சாதி, உறவு இத்யாதிகளை மறுக்கிறார் சீனிவாசன். பூர்வஜென்மம், ஜீவாத்மா, பரமாத்மா குறித்த தன்னுடைய நம்பிக்கைகளை அடுக்குகிறார் ரஜினிகாந்த்.

டெல்லியை நெருங்கும் வேளையிலே விவாதங்களால் எந்தப் பயனுமில்லை. இருவரும் அவரவர் நிலையிலிருந்து ஒரு மில்லி மீட்டர் கூட விலகவில்லை. முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் ரஜினி இன்னமும் அதே நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. அப்போது தன்னை மறுப்பாளனாக சொல்லிக்கொண்ட சீனிவாசனும் அப்போது இருந்தபடியே இப்போதும் இருக்கிறாரா என்று தெரியவில்லை.

சிறுவயதில் எனக்கு அதிகம் படிக்க கிடைத்த பத்திரிகைகள் முரசொலியும், துக்ளக்கும். துக்ளக்கில் முக்தாவின் திரைப்பட வரலாற்றினை விரும்பி வாசித்து வந்தேன். 1940களின் இறுதியில் தமிழ் சினிமாத்துறைக்கு வந்தவர். தொண்ணூறுகள் வரையிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர். கிட்டத்தட்ட ஐம்பதாண்டு தமிழ் திரையுலக வரலாற்றை அருகில் இருந்து கண்டவர். எளிய மொழியில் சுவாரஸ்யமாக, தன்னுடைய அனுபவங்களைக் கோர்த்து எழுதுவார்.

எளிமையான தமிழில் எழுதுபவர் என்ற காரணத்துக்காகவே சீனிவாசனை எனக்கு நிரம்ப பிடித்திருந்தது. அவர் நிறைய சிவாஜி படங்களை இயக்கியவர் என்பதால், அவரது படங்களை பார்த்த நினைவு இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நாயகனை தயாரித்ததின் மூலமாக தமிழ் திரையுலகை தேசிய நீரோட்டத்துக்குள் நுழைத்தவர்.

சமீபத்தில் புத்தகக்காட்சியில் முக்தா வி.சீனிவாசன் என்ற பெயரை பார்த்ததுமே அந்த நூலை கையில் எடுத்தேன். ‘கலைஞர்களோடு நான்’

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி, சிவகுமார், கமல், பாக்யராஜ், சோ, சவுகார் ஜானகி, சுஜாதா, ஜெயலலிதா, ஸ்ரீப்ரியா, மனோரமா ஆகியோருடனான அவரது அனுபவங்களை சம்பவச் சான்றுகளோடும், அவரது டிரேட்மார்க் எளிமையோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

நூல் முழுக்க சுவாரஸ்யமான பத்திகளுக்கு பஞ்சமேயில்லை.

சினிமா பைத்தியம் படம் காமராஜருக்கு பிரத்யேகமாக போட்டு காட்டப்படுகிறது. படம் முடித்து வெளியே வந்தவரிடம் கமல்ஹாசனை அறிமுகப்படுத்துகிறார்கள். கமலிடம் நலம் விசாரித்துவிட்டு காமராஜர் சொல்கிறார். “பரமக்குடி பக்கம் போனால் கமலின் அப்பா சீனிவாசன் வீட்டில் சாப்பிடுவதுதான் வழக்கம்!”. கமலின் அப்பா ஒரு வக்கீல், தேசியவாதி என்பது தெரியும். அரசியல் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பதை கமல் கூட இதுவரை எங்கும் பதிவு செய்ததாக தெரியவில்லை.

ஜெயலலிதா குறித்த அத்தியாயம் ஆச்சரியங்கள் நிரம்பியது. ‘காத்திருக்கிறோம் ஜெயலலிதா’ என்று தலைப்பிட்டு எழுதியிருக்கிறார். ”சினிமாத்துறையில் 100க்கு 90 பேர் அந்தத் தொழிலை தவிர வேறு எதற்கும் தகுதியற்றவர்கள். அவர்களால் சினிமாவைத் தவிர வேறு எங்கும் குப்பை கொட்ட முடியாது. சில அபூர்வமான விதிவிலக்குகள் உண்டு. தமிழ்த் திரைப்பட நடிகைகள் மூவர் அந்த விதிவிலக்குக்கு யோக்கியதை உள்ளவர்கள். அவர்கள் அரசியலுக்கு சென்றிருந்தால் மந்திரிகள் ஆகியிருக்க முடியும். வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆகியிருக்க முடியும். அந்த மூவரில் ஒருவர் ஜெயலலிதா!” என்று எழுதுகிறார்.

இந்த குறிப்பிட்ட கட்டுரை தினமணி கதிர் 13-2-1981 இதழில் வெளிவந்திருக்கிறது. ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் 1982, கடலூர் அதிமுக மாநாட்டில் நடந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று. அரசியலுக்கு வந்து ஒன்பதே ஆண்டில் முதல்வர் ஆகி அவர் சாதனை படைத்ததும் மறக்க முடியாத வரலாறு. ஜெயலலிதா தவிர்த்து அவர் குறிப்பிட்டிருந்த மற்ற இரண்டு நடிகைகள் யார் தெரியுமா? சவுகார் ஜானகி, லட்சுமி.

”கடந்த கால நிகழ்ச்சிகளை திரும்பிப் பார்ப்பதில் ஒரு சுகம் கிடைக்கிறது. அந்த சுகத்தை அனுபவிக்கும் வாய்ப்பு வாசகர்களால் கிடைக்கிறது” என்று முன்னுரையில் எழுதியிருக்கிறார் சீனிவாசன். அவர் எழுதி முப்பது ஆண்டுகள் கழித்து வாசிக்கும்போது, அவருக்கு கிடைத்த அதே சுகம் இன்றும் வாசிப்பவனுக்கு அட்சரம் பிசகாமல் கிடைக்கிறது.

நூல் : கலைஞர்களோடு நான்

பக்கங்கள் : 96

விலை : ரூ.7.50

வெளியீடு : பாரதி பதிப்பகம்,
108, உஸ்மான் சாலை,
தியாகராய நகர், சென்னை-17.

குறிப்பு : 1986ல் வெளிவந்த நூல். பிரதிகள் பதிப்பகத்தில் இன்னும் கிடைக்குமா என்பது சந்தேகமே.

2 பிப்ரவரி, 2010

திட்டியதில் பிடித்தது!

கீழ்க்கண்ட கட்டுரையின் கடைசி பாராவை மட்டும் படிக்கவும் :

http://www.charuonline.com/Feb2010/suyapuranam.html

1 பிப்ரவரி, 2010

கிராமி நாயகன்!


நான் பணிபுரியும் பத்திரிகைக்கு ஒரு ஒவ்வாமை உண்டு. அது பிரபலங்கள் குறித்தானது. மற்ற பத்திரிகைகளிடம் இருந்து எங்கள் பத்திரிகை வேறுபடும் புள்ளியும் அதுதான். எங்களுக்கு கலைஞரோ, புரட்சித்தலைவியோ, சூப்பர்ஸ்டாரோ பிரபலம் அல்ல. எங்களுடைய பிரபலங்கள் திருப்பூண்டியிலும், கொட்டிக்காரம்பட்டியிலும் இருக்கிறார்கள். சென்னையில் குளிர் அறைகளில் முன் அனுமதி பெற்று நாங்கள் யாரையும் பேட்டி எடுப்பதில்லை. அரசுப்பேருந்தில் முன்னூறு, நானூறு கிலோ மீட்டர் பயணித்து வயலில் களை பிடுங்கிக் கொண்டிருப்பவரையும், சைக்கிளை மாங்கு மாங்குவென்று மிதித்துக் கொண்டிருப்பவரையும் பேட்டி எடுப்பதே எங்களது வழக்கமாக இருக்கிறது.

முதல்வர் கலைஞரின் போட்டோ கூட ஒரே ஒருமுறைதான் எங்கள் பத்திரிகையில் இதுவரை வெளிவந்திருக்கிறது. அதுவும்கூட அட்டைப்படச் செய்தியாக வந்ததால், முக்கியத்துவம் கருதி, பாஸ்போர்ட் அளவில்தான்.

முதன்முறையாக ஒரு விதிவிலக்கு : பத்மபூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்!

நான் இங்கே பணிக்கு சேர்ந்தபோதே, என்னுடைய சீனியர் கல்யாண்சார் எங்கள் பத்திரிகையின் புதிய தலைமுறைக்கு ஒரு வாக்கு கொடுத்திருந்தார். “நாம எல்லாருமா போய் ஏ.ஆர்.ரகுமானை சந்திச்சு பேட்டி எடுக்கலாம்!”.

கல்யாண்சாரை பற்றி இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம். 80களின் தொடக்கத்தில் ‘திசைகள்’ கண்டெடுத்த முத்துக்களில் ஒருவர். சினிமா தொடர்பானவர் என்பதால் பிரபலமான சினிமா பத்திரிகையாளராக உருவெடுத்தவர். இந்தியா டுடே தமிழில் தொடங்கப்பட்டபோது அதில் பணியில் இருந்தவர். துணை ஆசிரியராக பணியாற்றியவர். இதெல்லாவற்றையும் விட மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், ஏ.ஆர்.ரஹ்மானை ரோஜா வெளிவருவதற்கு முன்பாகவே முதன்முதலாக பேட்டி எடுத்த பத்திரிகையாளர். இதன்மூலமாக கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக தொழில் அடிப்படையில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் ரஹ்மானுக்கு நண்பராக இருப்பவர். இன்று தமிழ் சினிமாத் தொழிலில் இருப்பவர்களில் கிட்டத்தட்ட எழுபத்தி ஐந்து சதவிகிதம் பேராவது கல்யாண்சாரின் நண்பராக இருப்பார்கள்.

கல்யாண்சார் எங்களுக்கு வாக்கு கொடுத்து ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டதால், அவ்வப்போது அவரை நச்சரித்துக் கொண்டிருந்தோம். இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். பேட்டிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புக்கொண்டார். தேதி மட்டும் முடிவாகவில்லை. அதே நேரத்தில் எங்கள் ஆசிரியரின் அனுமதிக்கு காத்திருந்தோம். ‘பிரபல ஒவ்வாமை’ காரணமாக ஆசிரியர் அனுமதிப்பாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது.

ஆசிரியருக்கு ரஹ்மானின் இசை குறித்த பெரிய அபிப்ராயம் இருப்பதாக அவரது பேச்சில் தெரியவில்லை. ‘அவரது இசையில் நேட்டிவிட்டி மிஸ்ஸிங்’ என்பதாக அவர் நினைக்கிறார் என்று கருதுகிறேன். மேலும் அவர் இளையராஜா ரசிகராகவும் இருக்கக்கூடும் என்றும் யூகிக்கிறேன். ஒவ்வொரு மேடையிலும் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று ரஹ்மான் க்ளிஷேவாக சொல்லுவார். ஆயினும் ஆஸ்கர் வாங்கியபோது ‘எனக்கு இரண்டு வழி இருந்தது. ஒன்று அன்பு, மற்றொன்று வெறுப்பு. அன்பு பாதையை தேர்ந்தெடுத்தேன். ஆஸ்கர் வரை வந்தேன்’ என்ற ரஹ்மானின் கருத்து ஆசிரியரை மிகவும் கவர்ந்திருந்தது. வாழ்ந்து முடித்த ஒருவருக்கு வந்து சேரவேண்டிய முதிர்ச்சி இளைஞரான ரஹ்மானுக்கு வாய்த்திருப்பது குறித்த ஆச்சரியம் ஆசிரியருக்கு இருந்தது. பாரம்பரியமிக்க ஆஸ்கர் மேடையில் ரஹ்மானால் தமிழ் முதன்முதலாக உச்சரிக்கப்பட்டு தமிழுக்கு பெருமையும் சேர்ந்தது. இதுவே நாங்கள் அவரை பேட்டியெடுப்பதற்கான நியாயத்தையும் தந்தது.

பொங்கல் விடுமுறை முடிந்து, ஒருநாள் மாலை ஐந்து மணிக்கு பேட்டி என்பதாக முடிவாகி இருந்தது. அன்றைய தினம் பிற்பகலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஆங்கிலப் படம் ஒன்றின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் சென்னையில் நடந்தது. ஐந்து மணியளவில் கோடம்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் எங்கள் குழு ஆஜர். குழுவிலிருந்த நானும், தோழர் கவின்மலரும் தீவிர இளையராஜா ரசிகர்கள். அதிஷா ஒரு பலபட்டறை. சமீபமாக விஜய் ஆண்டனியின் குத்துப்பாடல்களுக்கு ரசிகராக இருக்கிறார். புகைப்படக் கலைஞர் அறிவழகன் மட்டும் தீவிர ஏ.ஆர். விசிறி. கல்யாண்சாருக்கும் ஏ.ஆரின் இசை பிடிக்குமா என்று தெரியாது. ஆனால் எம்.எஸ்.வியின் ரசிகர் என்று மட்டும் தெரியும்.

ஆங்கிலப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி நீண்டு கொண்டிருந்ததால், ஆறு மணி ஆகியும் ஏ.ஆர். வீடு வந்துசேரவில்லை. அந்த ஒரு மணி நேரத்தில் கல்யாண்சார் ரஹ்மானுடனான தனது முதல் பேட்டியில் தொடங்கி, அவருடனான அனுபவங்களை சொல்லிக் கொண்டிருந்தார். திரையுலகில் பெரும் பொருள் ஈட்டியும், அப்பாவுடைய அதே வீட்டில் ரஹ்மான் வசிக்கிறார் என்று குறிப்பிட்டார். ஒரு வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில் சந்திக்க வந்தபோது, ‘தொழுகை முடிச்சிட்டு வந்துடறேனே!’ என்று சொல்லி, ஒரு பிரைவேட் ஆட்டோவில் ஏறிச்சென்ற ரஹ்மானின் எளிமையை விவரித்துச் சொன்னார். ரஹ்மானின் வீட்டு மாடியில் பாகிஸ்தான் கொடி பறக்கிறது என்று ஒரு புலனாய்வு இதழ் பரபரப்பு கிளப்பியதின் பின்னணி குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

மூத்தப் பத்திரிகையாளரான கல்யாண்சாரின் அனுபவங்கள் சுவையாக ஓடிக்கொண்டிருந்தபோதே, ஆஸ்கர்நாயகன் வந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்தது. அவரது பிரத்யேக அலுவல் அறையில் அமர்த்தப்பட்டோம். ரோஜாவில் வாங்கிய விருதில் தொடங்கி, நூற்றுக்கணக்கான விருதுகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆஸ்கரும், தேசிய விருதுகளும் மட்டும் மிஸ்ஸிங் என்று நினைக்கிறேன். ரோஜா படத்துக்கு இசையமைத்தபோது, அவர் வாசித்த கீபோர்டு சுவரில் மாட்டிவைக்கப்பட்டிருக்கிறது (படத்தில் பார்க்கவும்).

ஐந்து நிமிடத்தில் இசைப்புயல் கருப்புச் சட்டையில் நுழைந்தது. ஜீனியஸ், அமைதியானவர் என்றெல்லாம் ஊடகங்கள் மூலமாக அவர் குறித்த கற்பிதம் வைத்திருந்த எனக்கு, அவரது பழகும் முறை ஆச்சரியமளித்தது. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு டிபிக்கல் சென்னை இளைஞர். அவரது பேச்சுத்தமிழ் இலகுவானதும், நட்பானதும் ஆகும். இடையிடையே ஏதாவது ஜோக்கடித்துவிட்டு, இதையெல்லாம் எழுதாதீங்க என்கிறார். சக்கரைக்கட்டி படத்தின் தோல்வி அவரை நிரம்பவும் நோகடித்திருக்கிறது. ஒருவேளை நான் மியூசிக் போடலேன்னா அந்தப்படம் வேறமாதிரி வந்து ஹிட் ஆகியிருக்கும் என்கிறார்.

ஆஸ்கர் மேடையில் அவரது பேச்சுக்குறித்து கேட்டபோது, ”அன்பு பாதை என்பது அடக்கமான பாதை. விமர்சனங்களை கண்டு நான் பதிலளிக்க முனைந்திருந்தால் அது வெறுப்புப் பாதையாக இருந்திருக்கும். ஆஸ்கர் வரை என்னால் சென்றிருக்க முடியாது” என்று விளக்கமளித்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீண்ட நீளமான பேட்டி அது. ஒரு நண்பரிடம் கேஷுவலாக உரையாற்றும் உணர்வையே தந்தது. எந்த ஒரு நொடியிலும் உலகரங்கில் உயரமான இடத்தில் இருக்கும் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே வரவில்லை.

‘விண்ணைத் தாண்டி வருவாயா?’ குறித்து நல்ல நம்பிக்கையில் இருக்கிறார். என்னை ஆச்சரியப்படுத்திய இன்னொரு விஷயம், தேவாவின் கானா பாடல்களை ஏ.ஆர். தீவிரமாக ரசிக்கிறார் என்பது. ஒவ்வொரு இசையமைப்பாளரும் இசையின் நல்ல வடிவங்களை மக்களிடம் பரவலாக்குகிறார்கள். தேவா சென்னை இசையை தமிழர்களிடையே பரவலாக்கியிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

நேரம் நீண்டுவிட்டதால், “முடிச்சுக்கலாமா?” என்று எங்களிடமே அனுமதி கேட்டார். முடிச்சுக்கிட்டப் பிறகு, பத்திரிகையாளர்களாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் அவரோடு தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டோம். தீவிர ஏ.ஆர். வெறியரான எங்கள் புகைப்படக் கலைஞர், அவரது மாஸ் ஹிட்டுகள் குறித்த தனது அபிப்ராயங்களை கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளோடு கொட்டியபோது, அமைதியாக புன்முறுவலோடு ரசித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் அந்தப் பேட்டி, அடுத்தவார ‘புதிய தலைமுறை’ இதழில் வெளிவரும்.