10 மே, 2010

அம்மா தின வாழ்த்துகள்!

நேற்று பாடவேண்டிய பாடலை இன்று பாடித் தொலைக்கிறேன்!

அம்மாவென் றழைக்காத உயிரில்லையே...
அம்மாவை வணங்காது உயர்வில்லையே!
நேரில் நின்று பேசும் தெய்வம்..
புரட்சித்தலைவியின்றி வேறிங்கு ஏது...

நேற்று ‘அம்மா' தினம்...

இடதுசாரிகளுக்கும், ம(ட்டை)திமுகவினருக்கும், ஈழத்தாயின் பதிவுலக ரசிகர்களுக்கும், இந்த வார தமிழ்மண நட்சத்திரத்துக்கும் எனது தாமதமான அம்மாதின வாழ்த்துகள்!


அம்மாதின சிறப்பு கோஷம் :

கும்தலக்கடி கும்மாவா..
அம்மான்னா சும்மாவா..?

8 மே, 2010

உடைஞ்சது மண்டை மட்டுமில்லே..

உங்களுக்கு காது கொஞ்சம் பெருசா? இரண்டு பக்கமும் வாழைப்பூவை சொருகினால் தாங்குமா? ஆமாவா? வாங்க சார். உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கோம். இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தோட டிக்கெட் உங்களுக்கு தமிழக அரசின் இலவச டிக்கெட் திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

படத்தோட கதை என்ன? இருந்தாதானே சொல்றதுக்கு!

திரைக்கதை? அதை ஷூட்டிங் ஸ்பாட்லே பார்த்துக்கலாம்!

வசனம்? வெண்ணிற ஆடை மூர்த்தி இதைவிட நன்றாக எழுதியிருப்பார். படத்தோட நேர்த்தியான, கதைக்கு திருப்பத்தை தரக்கூடிய வசனமே இந்த விமர்சனத்தின் தலைப்பு.

இயக்கம்? சிம்புதேவன். இயக்குவதை காட்டிலும் நன்றாக கார்ட்டூன் போடுவார் என்று தெரிகிறது. படம் முழுக்க விரவியிருக்கும் ஷோலேபுரம், ஜெய்சங்கர்புரம், எம்.ஜி.ஆர் மணிக்கூண்டு, USA புரம், பஜனைக் கோயில் தெரு, பாஸ்மார்க், சப்பல்லோ ஹாஸ்பிட்டல் மாதிரியான நுணுக்கமான சித்தரிப்புகள் ஒரு கார்ட்டூனிஸ்ட்டால் மட்டுமே சிந்திக்க முடிகிற விஷயங்கள்.

ஹீரோ? ஸ்டார்ட்டிங்கில் ஜீரோ. பிக்கப் ஆக பிக்கப் ஆக யமஹா சைலன்ஸர் மாதிரி நல்ல சவுண்டு. நிழலைவிட வேகமாக சுடுவது போன்ற அடாவடிகளை லக்கிலூக் கேரக்டரில் இருந்து லவட்டியிருக்கிறார்கள். காமிக்ஸ்களில் கவுபாயை ரசித்தவர்கள் திருப்தியடைவது கொஞ்சம் கஷ்டம்தான்.

ஹீரோயின்? பத்மப்ரியா மெயின். சந்தியா சைட். லட்சுமிராய் மிடிள். மிடிள் ஹீரோயின் தான் மேட்டரே. லெக்பீஸ் நல்ல உயரம். தொப்புள் பீஸ் நல்ல அகலம். கொஞ்சம் மேலே வந்தால்.. லூஸ்ல விடுங்க. சென்சார்லே தட்டிடுவாங்க.

வில்லன்ஸ்? சாய்குமார் சகிக்கலை. நாசர் குயிக்கன் முருகன் ஷூட்டிங்கில் இருந்து அதே காஸ்ட்யூமில் கிளம்பி வந்திருக்கிறார். நத்திங் ஸ்பெஷல்! படத்தின் ஆகப்பெரிய மைனஸ் பாயிண்ட் மொக்கையான வில்லன்கள்!

இதுவரை இந்த விமர்சனத்தை வாசித்தவர்கள் படம் மொக்கை என்று அவசரப்பட்டு முடிவு கட்டிவிட வேண்டாம். யோசித்துப் பார்த்தால் ப்ளஸ் என்று சொல்ல பெரிய விஷயங்கள் எதுவும் படத்தில் இல்லைதான். ஆனாலும் இரண்டரை மணி நேரத்தில் குறைந்தபட்சம் ஒரு நிமிட இடைவெளிக்கு ஒருமுறையாவது வாய்விட்டு சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறேன் என்பதுதான் இரும்புக்கோட்டையின் அசலான வெற்றி!

மேஜிக் ஷோ என்பது வெங்காயம் உரிப்பது மாதிரி. காரியம் முடிந்தவுடன் வெறுமைதான் சூழும். ஆனாலும் ஷோவின் போது லைவ்லியான, ஜாலியான அனுபவம் கிடைக்குமில்லையா? இப்படம் தருவது அதே அனுபவத்தைதான்.

செவ்விந்தியத் தலைவனாக வரும் எம்.எஸ்.பாஸ்கரும், அவருடைய டிரான்ஸ்லேட்டரும் செய்யும் அலப்பறைகள் என்ன என்னவென்று வாயால் சொல்லியோ, எழுத்தால் எழுதியோ மாளாது. படத்தை பார்த்து தொலைத்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். பம்மல் கே. சம்பந்தம் சொன்னமாதிரி இந்தப் படத்தை ஆராயக்கூடாது. அனுபவிக்க வேண்டும்.

கதைநாயகனை வைத்து சிம்புதேவன் வெறுமனே காமெடி மட்டும் செய்ய விரும்பவில்லை. சமகால மாவீரனின் கதையையும் ஊடாக சீரியஸாக சொல்லிகிறார். வேண்டியவர்கள் எடுத்துக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வெறும் படமாக பார்த்து சிரித்துவிட்டு வெளியே வரலாம்.

கடந்த படத்தில் கடவுளால் வீழ்ந்த சிம்புதேவன், இந்தப்படத்தில் கவுபாயாக கம்பீரமாக எழுந்து நிற்கிறார்!

4 மே, 2010

பள்ளிக்கல்வி கட்டணம் இனி?

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர் மத்தியில் எப்போதும் புகைச்சல் இருந்துகொண்டேதான் இருக்கிறது. குறைபட்டுக் கொண்டே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் கொண்டு சேர்ப்பது நடுத்தர மக்களின் வழக்கமாகவும் இருக்கிறது.

தொடர்ச்சியான இதுபோன்ற புகார்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் மூலமாக கல்விக் கட்டணங்களை ஒழுங்கு படுத்த முடியும் என்றது அரசுத்தரப்பு. சட்டத்தை அமல்படுத்துவதற்கு வாகாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் மூலமாக, தனியார் பள்ளிகளில் கட்டண விகிதங்கள் சரியாக இருக்கிறதா என்று ஆராய ஒரு கமிட்டியும் உருவாக்கப்பட்டது.

தமிழக அரசு கொண்டு வந்திருந்த இந்த சட்டத்தினை எதிர்த்து சில தனியார் பள்ளிகளும், தமிழ்நாடு நர்சரி, மெட்ரிக்குலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சங்கமும் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் சட்டத்தில் இருந்த ஒரே ஒரு பிரிவினை மட்டும் ரத்துசெய்து சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு எந்த ஆட்சேபணையுமில்லை என்று தீர்ப்பு சொன்னது.

தமிழ்நாடு பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறை சட்டம் எவ்வகையில் செயல்படும் என்று சட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

• இந்த குழு பள்ளிகளுக்கு இவ்வளவுதான் கட்டணங்கள் வாங்க வேண்டும் என்று எந்த வரையறையையும் நிர்ணயிக்காது.

• ஆனால் ஏற்கனவே பெறப்படும் கட்டணங்கள் நியாயமான முறையில் வரையறுக்கப்பட்டு பெறப்படுகிறதா என்பதற்கான விளக்கங்களை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு கோரும்.


• கட்டண விவரங்களும், அந்த கட்டணங்கள் ஏன் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கங்களும் பள்ளித் தரப்பிடமிருந்து குழுவுக்கு தரப்பட வேண்டும்.

• நன்கொடை என்ற பெயரில் தேவைக்கு அதிகமாக மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து கூடுதல் தொகையை பள்ளிகள் பெறக்கூடாது. அப்படி பெறப்படுவதாக தெரிந்தால் குழு தலையிடும்.


• பள்ளி நிர்வாகத்தின் கருத்துகள் பெறப்பட்டு, ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் சரியானதா, மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமா என்பதை குழு முடிவு செய்யும்.

• தனியார் பள்ளிகள் தங்களுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதற்கும், ஒப்புதல் வாங்குவதற்கும் இச்சட்டத்தில் போதிய வழிமுறைகள் இருக்கின்றன.


• இலவச மற்றும் கட்டாயக் கல்வி குழந்தைகளுக்கான உரிமைச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. எனவே தனியார் பள்ளிகளிலும் ஏழை குழந்தைகளுக்கு இருபத்தைந்து சதவிகித இடத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும்.

• தனியார் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று குழு சோதனையிடவும், தேவைப்பட்டால் ஆவணங்களை சரிபார்க்கவும் அதிகாரத்தை இச்சட்டம் வழங்குகிறது. தேவைப்படும் ஆவணங்களை குழுவால் பறிமுதலும் செய்ய இயலும்.

கடைசியாக சொல்லப்பட்ட பிரிவினை தவிர்த்து இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த தடையுமில்லை என்றே இப்போது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கல்வி வணிகமயமாவதை தடுக்கும் நடவடிக்கைகள் இச்சட்டத்தில் இருப்பதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

தனியார் பள்ளிகளிடையே இச்சட்டம் குறித்த அச்சம் நிலவுவதும் தெரிகிறது.

“25 சதவிகிதம் ஏழைக்குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இடம் அளிக்க சொல்லி சட்டம் சொல்கிறது. இதற்கான கட்டணத்தை அரசு பங்கிட்டுக் கொள்கிறது என்றாலும், அரசு பங்கிடும் தொகை மிகக்குறைவானதாக இருக்குமோ என்ற ஐயம் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு இருக்கிறது.

சில பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது என்பதால் எல்லாப் பள்ளிகளையும் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது நியாயமில்லை. குழு நிர்ணயிக்கும் கட்டணத்தொகை மிக அதிகமானதாக இருந்தால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளிகளில் சேர்ப்பது குறித்து பயப்படுவார்கள். மிகக்குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்படுமானால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும் கூட தனியார் பள்ளிகளுக்கு சிரமமானதாகிவிடும்” என்கிறார் ராமசுப்பிரமணியன். இவர் மண்ணிவாக்கம் நடேசன் வித்யாசாலா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தலைமை பிரின்சிபாலாகவும், கரெஸ்பாண்டெண்ட் ஆகவும் இருக்கிறார்.

“தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டனம் வாங்குகிறார்கள் என்றால் அரசுப் பள்ளிகளை விட அங்கே கூடுதல் வசதிகள் இருப்பதாக பெற்றோர் நம்புகிறோம். ஆசிரியர்கள் அதிகமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு கல்விச்சூழல் வசதியானதாக இருக்கும். இதுபோன்ற காரணங்களுக்காகவே பணம் செலவழித்து தனியார் கல்வி நிலையங்களை நாடுகிறோம்.

அரசு இப்பள்ளிகளுக்கு குறைவான கட்டண நிர்ணயம் செய்துவிட்டால், ஏற்கனவே இருக்கும் வசதிகளை பள்ளிகள் குறைத்துவிடுமோ என்று அஞ்சுகிறோம். அதே வேளையில் சில கட்டணங்களை கட்டும்போது இது அநியாயக் கொள்ளையாக இருக்கிறதே என்று நினைப்போம். அதுபோன்ற கூடுதல் கட்டணங்கள் இச்சட்டத்தால் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று சென்னையை சேர்ந்த கமலக்கண்ணன் சொல்கிறார். இவரது இரண்டு மகள்களும் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்கள்.

“கிட்டத்தட்ட 11,000 தனியார் பள்ளிகள் நம் மாநிலத்தில் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பள்ளிக்கும், அதன் வசதிகளைப் பொறுத்து தனித்தனியாக கட்டணம் நிர்ணயிப்பது என்பது மலையை உளியால் செதுக்கும் வேலை. 50 உறுப்பினர்கள் இதற்காக இரவும் பகலுமாக பணியாற்றி வருகிறார்கள்” என்று தனது குழுவைப் பற்றி சொல்கிறார் நீதிபதி கோவிந்தராஜ்.

இந்த சட்டம் மற்றும் குழுவின் செயற்பாடுகளால் கல்விக்கட்டணங்கள் குறித்த வெளிப்படையான ஒரு சூழல் உருவாக வேண்டுமென்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பார்ப்பு.

(நன்றி : புதியதலைமுறை)

3 மே, 2010

வானில் மர்ம வெளிச்சம்!

நேற்று இரவு பத்து மணிக்கு மேல் சென்னையின் சில பகுதிகளில் (மடிப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி இத்யாதி) வானில் ஒரு வித்தியாசமான வெளிச்சம் தெரிவதாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஃப்ளாஷ் நியூஸ் வெளியாகியது. அவசர அவசரமாக சென்று வானைப் பார்த்தபோது நிலவொளியைத் தவிர வேறு ஒளி எதையும் என்னால் காணமுடியவில்லை.

இப்படி ஒரு ஒளியை தாங்கள் காணவில்லை. எனவே கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்று அறிவியலாளர்கள் கைவிரித்துவிட்டதாகவும் இன்று காலை செய்தித்தாள்களில் காண நேர்ந்தது. சென்ற வாரம் ஸ்டீபன் ஹாக்கிங் வேறு வேற்றுக்கிரக வாசிகள் நிச்சயமாக இருக்கிறார்கள் என்று சொல்லி உலகம் முழுக்க பரபரப்பாகியிருக்கிறது. ஒருவேளை வித்தியாசமான விண்கலம் ஏதாவது கும்மியடித்திருக்கலாமோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

சிறுவயதில் இதுபோல ஏராளமான ஒளிகளை மடிப்பாக்கத்துக்கு தென்மேற்கு திசையில் கண்டு வியந்திருக்கிறேன். அது கொள்ளிவாய்ப் பிசாசின் வேலை என்று அறிவியலாளர் எவரிடமும் உறுதிசெய்யாமல் நானே பல இரவுகள் முடிவு கட்டி அஞ்சி நடுங்கியிருக்கிறேன்.

மேடவாக்கம் பகுதியில் யூகலிப்டஸ் காடொன்று முன்பு இருந்தது. இப்போதும் சின்னாபின்னப்படுத்தப்பட்டு ஓரளவுக்கு காடு என்று சொல்லிக் கொள்ளும் வகையில் (காயிதேமில்லத் காலேஜூக்கு பின்புறம்) இருக்கிறது. அக்காடு பெரும்பாலும் பாலியல் தொடர்பான கசமுசாக்களுக்கு சமூகவிரோதிகளால் பயன்படுத்தப் பட்டதாக சொல்வார்கள். அக்கால இளைஞர்களுக்கு தண்ணியடிக்கவும், காதலர்களுக்கு சுதந்திரமாகப் பேசி பழகவும் வாகாக இருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது குமுதா 'செட்' ஆனால், அங்கேதான் அழைத்துச் செல்வதாக திட்டமிட்டிருந்தேன் என்பது இங்கே தேவையில்லாத இடைச்செருகல்.

அந்த காட்டினையொட்டி சமவெளிப் பகுதி ஒன்றும், கரடுமுரடான குன்று ஒன்றும் இன்றும் உண்டு. அங்கே ராணுவப்பயிற்சி அவ்வப்போது நடக்கும். இரவுகளில் ராணுவ சமிக்ஞைகள் குறித்த பயிற்சி வீரர்களுக்கு வழங்கப்படும்போது, வித்தியாசமான வண்ணங்களில் வானவேடிக்கை நிகழ்த்தப்படும். வண்ண வண்ணப் புகைகள் வானில் வட்டமிடும். இதைத்தான் தூரத்தில் இருந்து பார்த்து கொள்ளிவாய்ப் பிசாசின் சேட்டை என்று நினைத்திருக்கிறேன்.

இப்போது அங்கே ராணுவப்பயிற்சி நடக்கிறதா என்று தெரியவில்லை. கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை பயல்கள் பகலில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பது மட்டும் தெரியும். இதைப்போன்ற ஏதோ பட்டாசுப்புகை நேற்று வானில் வட்டமிட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். அனேகமாக தென்னாப்பிரிக்காவை இந்தியா வென்ற மகிழ்ச்சியில் ஏதோ ஒரு கிரிக்கெட் ரசிகர் விட்ட வான வேடிக்கையாக அந்த 'மர்ம' வெளிச்சம் இருந்திருக்கலாம் என்று யூகிக்கத் தோன்றுகிறது.

‘தி ஹிண்டு'வுக்கு லெட்டர் போடும் மாமா யாரோ ஒருவர், மின்வெட்டால் காற்றுவாங்க மொட்டை மாடிக்குப் போகும்போது இந்த ‘மர்ம' வெளிச்சத்தை கண்டு அஞ்சி, சன் நியூஸுக்கு தகவல் கொடுத்திருக்கலாம். ஆனாலும் மடிப்பாக்கத்துக்கும், மயிலாப்பூருக்கும் அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் இருக்கும் தூரம் இருக்கிறது. இருவேறு பகுதிகளில் ஒரே வெளிச்சம் எப்படி தெரிந்திருக்கும் என்ற கேள்வியை பகுத்தறிவு தட்டி எழுப்புகிறது. அப்படியெனில் இடையில் இருக்கும் வேளச்சேரி, தரமணி, அடையாறு பகுதிகளிலும் இந்த ‘மர்ம' வெளிச்சம் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் லாஜிக்.

சரி, லூசில் விடுங்கள். மர்மமான விஷயங்கள் எப்போதுமே மர்மமாக இருப்பதுதான் மர்மத்துக்கான குறைந்தபட்ச அளவுகோல்.

சுறா!

படத்தில் ஒரு காட்சி...

சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்க, பாம் ஸ்குவாட்டை சேர்ந்த ஒரு காவலர் ஒரு சூட்கேஸை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். சுற்றியிருப்போர் முகத்தில் பரபரப்பும் பதட்டமும்.

சூட்கேஸை திறந்து பார்த்தவர் அதிர்ச்சியோடு முகத்தைப் பிதுக்க,

“பாம் இருக்கா?” ஒரு காவல்துறை அதிகாரி

“பணம் இருக்கா?” அமைச்சர்

“மயிறுதான் சார் இருக்கு!” சூட்கேஸைத் திறந்தவர்.

ஒட்டுமொத்த படமும் சூட்கேஸுக்குள் இருந்த சமாச்சாரம் மாதிரிதான் இருக்கிறது.

பாடல்கள் மட்டும் ஆறுதல். ஓபனிங் பாடலில் விஜய் அணிந்துவந்த ஃப்ளோரசண்ட் ப்ளூ கலர் சட்டை அருமை. சரவணா ஸ்டோர்ஸில் இதே கலர் சட்டை கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்து வாங்க வேண்டும்.