7 ஜூலை, 2011

லதானந்த்

லதானந்த் என்கிற பெயர் வலைப்பூ எழுதுவதற்கு முன்பாகவே எனக்கு ஓரளவு பரிச்சயமான பெயர்தான். பல இதழ்களிலும் சிறுகதை, கட்டுரை, நையாண்டி என்று எழுதி வந்தவர். விகடனில் திருக்குறளை மாற்றி சென்னை பாஷையில் எழுதி, பிற்பாடு பெரும் எதிர்ப்பு கிளம்பி பாதியிலேயே நின்ற தொடரை எழுதியவர் இவர்தான்.

2008ல் அவர் வலைப்பூ தொடங்கி எழுதிக் கொண்டிருந்தபோது, எனது தளத்தில் அவரைக்குறித்து பின்வருமாறு எழுதியிருந்தேன்.

கடந்த சிலநாட்களாக மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பார்க்கிறேனோ இல்லையோ? லதானந்த் அங்கிளின் பக்கங்கங்களை தவறாது வாசித்து விடுகிறேன். வலையுலகுக்கு வந்து இன்னமும் முழுமையாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. என்னை அவரது பரமரசிகன் ஆக்கிவிட்டார், அங்கிள் எல்லா மேட்டரிலும் செம விளாசு விளாசுகிறார், சண்டை போடுகிறார், கொஞ்சுகிறார், கோபப்படுகிறார், நிறைய சாப்பிடுகிறார், ஜோக் அடிக்கிறார், அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். மிக சுலபமாக இளைஞர்களை கவர்ந்துவிடும் ஒரு ஆளுமை லதானந்த் அங்கிள். ம்... வலையுலகில் எல்லாப் பெருசுகளுமே இவரைப் போல இருந்துவிட்டிருந்தால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. வலைப்பதிவர்களில் எப்போதுமே நான் சந்திக்க விரும்பும் ஒரு பதிவர் போர்பறை அசுரன். இப்போது லதானந்த் அங்கிளையும் சந்தித்துப் பேச வேண்டுமென்ற கொலைவெறி வந்திருக்கிறது.

இதை வாசித்துவிட்டு, கைப்பேசியில் தொடர்பு கொண்டார். முதல் பேச்சிலேயே மிக நெருக்கமாக அவரை உணரமுடிந்தது. அவரோடு பேசியவர்களுக்கு தெரியும். உரையாடல் என்பது அவரைப் பொறுத்தவரை ஒன் வே டிராஃபிக். தொண்ணூறு சதவிகிதம் அவர்தான் பேசுவார். மீதி பத்து சதவிகிதம் கூட நாம் ‘ம்’ கொட்டியதாகதான் இருக்கும். அவரோடு ஒரே ஒருமுறை பேசியவர்கள் கூட சுலபமாக சொல்லிவிடலாம். லதானந்த் ஒரு வெள்ளந்தியான மனிதர்.

பொதுவாக இரவுகளில் நீண்டநேரம் பேசுவார். முன்னிரவில் தொடங்கி, பின்னிரவு வரை ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். வீட்டில் இருப்பவர்கள் எரிச்சல் படுவார்கள். ஒரு பெரிய ஆபிஸரோடு பேசிக்கொண்டிருக்கிறேன் என்று சமாளிப்பேன். என்ன ஆபிஸர் என்று கேட்டால், சிட்டிக்கு கமிஷனர் மாதிரி, அவர் காட்டுக்கு கமிஷனர் என்று சொல்லி வைப்பேன்.

ஒருமுறை ஏதோ பணி தொடர்பாக சென்னைக்கு வந்திருந்தார். சந்திக்கலாமா என்று கேட்டு, தான் தங்கியிருந்த விடுதியின் பெயரை சொன்னார். சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி, வால்டாக்ஸ் சாலையில் இருந்த விடுதியில் அவரை நானும், பாலா அண்ணாவும் சந்தித்தோம். பாலா அண்ணாவுக்கு ஒரு பழக்கம். வலையுலக நண்பர்கள் யாரிடம் பழகுவதாக இருந்தாலும், அவர்களது உண்மையான பெயரை கேட்டுத் தெரிந்துக் கொள்வார். பெரும்பாலும் அப்பெயரிட்டுதான் அழைப்பார். லதானந்த் அவரது உண்மைப்பெயரை சொல்ல மறுத்ததால் பாலாண்ணாவுக்கு அவர் மீது கோபம்.

அதன்பிறகு எப்போதெல்லாம் சென்னை வருகிறாரோ, அப்போதெல்லாம் சந்திப்பார். ஒருமுறை அசோக்நகரில் ஏதோ ஒரு பாரில் ஜ்யோவ்ராம் உள்ளிட்ட நண்பர்களோடு பேசியதாக நினைவு. இன்னொரு முறை நானும், அதிஷாவும் அவரை ரயிலேற்றிவிட சென்ட்ரலுக்குப் போயிருந்தோம். அன்ரிசர்வ்ட் பெட்டியில் முட்டி, மோதி உட்காரும் சீட்டினை வென்று எடுத்தார். பெரும்பாலும் வண்டலூர் வனத்துறை மாளிகையில் தங்குவார் என்பதால், நகரம் தாண்டிப்போய் அவரை சந்திப்பது எங்களுக்கு கொஞ்சம் சிரமம். சந்திக்க முடியாத சந்தர்ப்பங்களில் உடனே கோபித்துக் கொள்வார். ஆனால் மறுநாளே இணைய அரட்டைப் பெட்டியில் வந்து வழக்கமான ‘குஜால்’ மூடில் உரையாடுவார்.

என்னையும், அதிஷாவையும் காட்டுலாவுக்கு வருமாறு தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருந்தார். பணி நெருக்கடி காரணமாக இருவருமே ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் விடுப்பு எடுக்க முடியாததால் அவரது அழைப்பை ஏற்றுக்கொள்ள இயலாத சூழல். இதற்காகவும் ஒரு முறை கோபித்துக் கொண்டார். இன்னொரு முறை குடும்பத்தோடு ஊட்டிக்கு வாருங்கள் என்று அழைத்தார். குழந்தை மிக சிறியவளாக இருக்கிறாள், பெரிய பயணத்துக்கு அழைத்துவர அச்சமாக இருக்கிறது என்று மறுத்தேன். அதற்கும் கோபித்துக் கொண்டார்.

அடிக்கடி கோபித்துக் கொள்வது குழந்தை மனம். லதானந்த் குழந்தை மனதுக்காரர்.

செம்மொழி மாநாடு கோவையில் நடந்தபோது, வருகிறீர்களா என்று கேட்டார். ஆமாம், பணிநிமித்தம் வருகிறேன் என்றபோது, வீட்டுக்கு கட்டாயம் வரவேண்டும் என்று கட்டளையிட்டார். பத்திரிகையாளர்களின் பயணத்திட்டத்தை செய்தி மக்கள் தொடர்புத்துறை ஏற்பாடு செய்திருந்ததால், அங்கே அப்படி, இப்படி நகரமுடியவில்லை. சென்னை வந்தபோது தொலைபேசி மன்னிப்பு கேட்டேன். அப்போதும் கோபித்துக் கொண்டார். பின்னர் விசாரித்துப் பார்த்ததில் கோவைக்கு வந்து செல்லும், எந்த நண்பருமே அவரை பார்க்காமல் திரும்பினால் இப்படித்தான் செல்லமாக கோபித்துக் கொள்வார் என்று தெரிந்துகொள்ள முடிந்தது.

இப்படி கோபித்து, கோபித்து விளையாடுவதுதான் அவரது குணம். ஏதாவது குறும்பாக விளையாடிக் கொண்டே இருப்பார். ஐம்பதை கடந்தவர் என்பது அவரது பேச்சில் தெரியவே தெரியாது.

சமீபத்தில் அவருக்கு இதய அறுவைச்சிகிச்சை நடந்ததாக கேள்விப்பட்டேன். வழக்கமான விருமாண்டி மீசையில்லாமல் சஞ்சய் திருமணத்துக்கு வந்திருந்தார். என்ன சார், சிங்கத்தைப் போய் இப்படி சிரைச்சி விட்டுட்டாங்களே என்று விளையாட்டாக கேட்டேன். உடலும் கொஞ்சம் உள்வாங்கியிருந்தது. ’மசுருதானே, வளர்த்துடலாம் லக்கி’ என்றார்.

சில நாட்களுக்கு முன்பாக சென்னை வந்திருப்பதாகவும், எங்கேயாவது சந்திக்கலாம் என்றும் சொல்லியிருந்தார். அப்போது தோழர் அதிஷாவுக்கு ‘காலில் ஆணி’ (இந்தச் சொல்லில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறது)பிரச்சினை தொடர்பாக, அலைச்சலில் இருந்தோம். சந்திக்க முடியவில்லை. வழக்கம் போல லதானந்துக்கு கோபம்.

நேற்று இரவு திடீரென இறங்கியது அந்தச் செய்தி. சென்னை நண்பர்கள் கலந்துப் பேசி சனிக்கிழமை மாலை ஒரு அஞ்சலிக் கூட்டத்துக்கு கூட ஏற்பாடு செய்துவிட்டோம். நல்லவேளையாக இன்று காலை அந்த கூட்டம் ‘கேன்சல்’ என்கிற மகிழ்ச்சிக்குரிய செய்தி கிடைத்திருக்கிறது. நேற்றிரவு முழுக்க இருந்த கடுமையான மன உளைச்சல் இன்று தீர்ந்ததில் நிம்மதி. லதானந்த் இம்மாதிரி விளையாடியது குறித்து எந்த கோபமுமில்லை. இப்படி விளையாடுமளவுக்கு அவருக்கு ‘தில்’ இருப்பது குறித்துதான் ஆச்சரியமும், வியப்பும். குழந்தையின் சுபாவம் விளையாடுவதுதான். லதானந்த் விளையாடியிருக்கிறார். இதில் கோபப்படவோ, கண்டிக்கவோ எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவரை கொஞ்சத்தான் தோன்றுகிறது. கவியரசர் கண்ணதாசன் கூட இதுமாதிரி செத்து, செத்து விளையாடியதாக வனவாசத்தில் எழுதியிருந்ததாக ஞாபகம்.

அப்புறம் இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேனே?

நேற்று இரவு கிடைத்த அந்த ‘டுபாக்கூர்’ அதிர்ச்சிச் செய்தியை பாலாண்ணாவோடு பகிர்ந்துக் கொண்டபோது, அதிர்ந்துப் போய் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பேச்சின் இறுதியாக ‘குறுகுறுப்பு’ தாங்காமல் கேட்டார். “இப்பவாவது சொல்லுய்யா. அவரோட உண்மையான பேரு என்னா?”

எனக்கு இப்பவும் நிஜமாகவே அவரது பெயர் தெரியாது.

6 ஜூலை, 2011

YES, I AM LUCKY!

அதிகமான நண்பர்கள் இருப்பதின் அவஸ்தை நேற்றுதான் புரிந்தது.

மதியம் ஒரு மணிக்கு, பத்து பத்து பேராக க்ரூப் எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பித்தேன். நாலரை மணி வரைக்கும் இடைவிடாமல் அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது.

எஸ்.எம்.எஸ். கிடைத்ததுமே செளபா அண்ணன் போன் செய்தார்.

“டேய் இங்கிலீஷ்லே என்னமோ அனுப்பியிருக்கே. எனக்கும் ஒண்ணும் புரியல. என்ன மேட்டருன்னு வாயாலேயே சொல்லுடா” – சீவலப்பேரி பாண்டிகள் இங்கிலீஷ் எஸ்.எம்.எஸ்.-சுக்கு பழகவில்லை என்பதும், தமிழில் எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி இன்னமும் கார்பன் மொபைலுக்கு வராத அவலமும் ஒருசேர சுட்டது.

“பொண்ணு பொறந்துருக்குன்னு எஸ்.எம்.எஸ். அனுப்புனேண்ணே”

“அடப்பாவி. நீ விடலைப் பையனாவே என் மனசுலே பதிஞ்சிட்டியேய்யா.. உனக்கு அதுக்குள்ளே கல்யாணம் ஆகி, ஒரு பொண்ணும் பொறந்துடிச்சா?”

“அண்ணே! இது ரெண்டாவது பொண்ணுண்ணே!”

YES, I AM LUCKY.

தமிழ்மொழிக்கு தங்கச்சி பிறந்துவிட்டாள்.

அகிலம் ஆளும் அம்மா, தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவியின் சிம்மராசி, மகம் நட்சத்திரத்தில் ‘தமிழ் நிலா’ பிறந்திருக்கிறாள். எப்படியோ எங்கள் வீட்டிலும் ஒரு ‘முதல்வர்’ சில பல பத்தாண்டுகளுக்கு பிறகு உருவெடுக்க, ஜோசியப்படி வாய்ப்பிருக்கிறது.

’பொண்ணு’ பிறந்ததால், என்னுடைய அம்மாவுக்கு மட்டும் கொஞ்சம் வருத்தம். அவருக்கு கொள்ளி வைக்கவாவது, நான் ஒரே புள்ளையாக பிறந்திருக்கிறேனாம். எனக்கு கொள்ளி வைக்க ஒரு புள்ளை இல்லையே என்பது அவரது அங்கலாய்ப்பு. நெருப்புக்கு பையனோ, பொண்ணோ கணக்கு கிடையாது. கட்டையில் ஊற்றப்படும் கிருஷ்ணாயிலின் (மண்ணெண்ணெய்) அளவுதான் நெருப்பின் வீரியத்துக்குக் காரணம் என்று அவருக்கு பகுத்தறிவுப் பாடமெடுத்து சமாளித்திருக்கிறேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது, தண்டபாணி சாரிடம் நடந்த ஒரு ஈழ விவாதத்தில் எனக்குப் பிறக்கப் போகும் மகனுக்கு ‘திலீபன்’ என்று பெயர் வைப்பதாக சபதம் செய்திருந்தேன். அந்த சபதம் நிறைவேறாது என்பதுதான் எனக்கிருக்கும் ஒரே வருத்தம். இனி தமிழ் திலீபனுக்கு வாய்ப்பில்லை. இந்திய அரசின் ‘நாமிருவர், நமக்கிருவர்’ கோஷத்தை, ஓர் இந்தியனாக மதிக்கிறேன்.

முதல் குழந்தை பிறந்தபோது பாரா சொன்னார். “இன்னும் இருவது வருஷத்துலே நீ ஒரு கோடி ரூபாய் சம்பாதிச்சியாவணும். அப்போ தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சரூபாயா கூட இருக்கலாம்”.

ம்.. இன்னும் இருபது வருடத்தில் இரண்டு கோடி ரூபாயாவது சம்பாதித்தே ஆக வேண்டும்.

எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல், ட்விட்டர், ஃபேஸ்புக், பஸ், கூகிள் ப்ளஸ், இத்யாதி, இத்யாதியிலெல்லாம் வாழ்த்து சொல்லிய நட்புள்ளங்களுக்கு தனித்தனியாக நன்றி சொன்னால், முழுவதுமாக 48 மணி நேரம் (அதாவது அடுத்த இருபது வருடத்தில் முழுசாக ரெண்டுநாள்) வீணாகி விடும் என்பதால், இப்பதிவின் வாயிலாகவே எல்லோருக்கும் நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன். நன்றி. நன்றி. நன்றி.

4 ஜூலை, 2011

GET OUT!

ஈக்காடுதாங்கலுக்குப் பின்னால் என்று சொன்னால் அந்த ஏரியாவை சரியாக தெரியாது. தனுஷ் வீட்டுக்கு அருகில் என்று சொன்னால் சென்னை வாசிகளுக்கு புரியும். டிஃபன்ஸ் காலனி என்று பெயர். இராணுவ மருத்துவமனை, இராணுவ குடியிருப்பு என்று மிச்சம் போக பல்லாயிரக் கணக்கான ஏக்கர் இடம் பாக்கியிருக்கும்.

பலநூறு ஏக்கர் காலியிடங்களை முள்கம்பி வைத்து ஃபென்ஸிங் அமைத்து பாதுகாத்திருப்பார்கள் இராணுவத்தினர். அந்த இடங்கள் எதற்கும் உபயோகமில்லாமல் தேமேவென்றிருக்கும். சென்னையில் கிரிக்கெட் ஆட மைதானம் கிடைக்காத இளைஞர்கள் மீதியிருக்கும் பகுதிகளில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

டிஃபன்ஸ் காலனியின் வடக்கு முனை அடையாறு ஆற்றங் கரையோரமாக முடியும். ஆற்றங்கரை நந்தம்பாக்கம் பேரூராட்சியை சார்ந்தது. அங்கிருக்கும் குடியிருப்பு பகுதி பர்மா காலனி. கீழ்நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வசிக்கும் பகுதி. சினிமாக்களில் அடிக்கடி காட்டப்படும் ஆற்றங்கரை அய்யனார் கோயில் இந்த காலனியின் இறுதியிலும், நந்தம்பாக்கம் கிராமத்தின் தொடக்கத்திலும் அமைந்திருக்கிறது.

நகரில் இருந்து அய்யனார் கோயிலுக்கு செல்பவர்கள் டிஃபன்ஸ் காலனிக்கும், பர்மா காலனிக்கும் இடையே ஊடாகச் செல்லும் சிறுசாலையைதான் பயன்படுத்த வேண்டும். நந்தம்பாக்கம் கிராம மக்களும் கூட நகருக்குள் வர இச்சாலையையே உபயோகித்து வந்தார்கள். வாரயிறுதி கிரிக்கெட் வீரர்களுக்கும் மைதானத்துக்குச் செல்ல இப்பாதை மட்டுமே ஒரே கதி.
கடந்த மாதம் திடீரென இப்பாதை கான்க்ரீட் கழிவுகள் கொண்டு அடைக்கப்பட்டது. இதனால் கிராமமக்கள் பட்ரோடு வழியாக ஊரெல்லாம் சுற்றிக்கொண்டு நகரத்துக்குள் நுழைய வேண்டிய நிலை. பர்மா காலனி வழியாக வருவதாக இருந்தாலும் கார் போன்ற வாகனங்கள் இலகுவாக செல்ல முடியாத குறுகிய பாதை.

பொங்கியெழுந்த மக்கள், தாங்கள் பயன்படுத்தி வரும் பாதையை அடைக்கக்கூடாது என்று ஆட்சேபணை தெரிவித்தார்கள். அனைத்துக் கட்சியினர் ஆதரவோடு மறியலும் செய்தார்கள். அப்பகுதியில் இருந்த இராணுவத்தார் அம்மக்களோடு மோதலில் ஈடுபட்டார்கள். மக்கள் பிரதிநிதியான நந்தம்பாக்கம் பேரூராட்சித் தலைவரிடம் கூட எவ்விதமான மரியாதையான பேச்சுவார்த்தைக்கு இராணுவம் தயாராக இல்லை. போலிஸ் தலையிட்டு மக்களை கலைத்து அனுப்பினார்கள். மாவட்ட ஆட்சியர் வரை இப்பாதை பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டும், இன்றுவரை பாதை மூடப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி புதியதாக முள்கம்பி கொண்டு அடைக்கப்பட்டும் இருக்கிறது.

இப்போது நகரிலிருந்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பட்ரோடு வழியாக சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. அல்லது அடையார் ஆற்றின் குறுக்கே போடப்பட்டிருக்கும் தற்காலிக பாதையை பயன்படுத்த வேண்டியிருக்கிறது (அந்த பாலமும் கடந்த வாரம் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது).

நானும் படுக்க மாட்டேன், அடுத்தவனையும் படுக்க விட மாட்டேன் என்கிற இந்திய ராணுவத்தின் உயரிய பண்புக்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. சென்னை விமான நிலையத்திலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் பாதையிலும் கூட, விமான நிலையம் தாண்டிய அடுத்த இடதுபுறப்பாதை இதேபோல பள்ளம் தோண்டியும், கான்க்ரீட் கொட்டப்பட்டும் ராணுவத்தால் மூடப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.

நந்தம்பாக்கம் மட்டுமல்ல. மீனம்பாக்கம், பரங்கிமலை, தாம்பரம், தீவுத்திடல் என்று எங்கெல்லாம் ராணுவத்தினர் நிலை கொண்டிருக்கிறார்களோ, அங்கெல்லாம் மக்களுக்கு ரோதனைதான். ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் சாதாரண பொதுமக்களிடம் உரையாடும் மொழியே நாராசமானது. ஒருமுறை Officer Training Academy-க்கு ஒரு சில விளக்கங்களை நாடி சென்றிருந்தோம். வாயிலில் இருந்த வீரரிடம் அடையாள அட்டையை காட்டி, கட்டுரை தொடர்பான விளக்கங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி யாரையாவது சந்திக்க வேண்டும் என்று கோரினோம். பத்திரிகை என்று சொல்லியும் உள்ளேவிட மறுத்தது பிரச்சினையில்லை. “ஒழுங்காக ஓடிவிடுங்கள். TRESPASSING என்று போட்டுத் தள்ள எங்களுக்கு உரிமை இருக்கிறது தெரியுமா?” என்று அச்சுறுத்தியதுதான் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம். மறுபடியும் அடையாள அட்டையை நீட்டி, நாங்கள் PRESS என்று சொன்னோம். “யாராயிருந்தாலும், இராணுவ இடத்துக்குள் நுழைந்தால் எங்களுக்கு சுடுவதற்கு உரிமையிருக்கிறது” என்று திரும்பவும் பயமுறுத்த, பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடிவந்தோம். நகரின் பரப்பளவில் குறைந்தது பத்து, பதினைந்து சதவிகிதமாவது இராணுவத்தினரின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தகுந்த அம்சம். அவசரத்துக்கு எங்காவது ‘வெளிக்கி’ போகிறவனை கூட (தீவுத்திடலில் இது சகஜம்) இராணுவம் சுட்டுத் தள்ளலாம். TRESPASSING என்று காரணமும் காட்டலாம்.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையே கூட இராணுவத்தின் சொத்து என்பதே, சில வருடங்களுக்கு முன்பாக ‘அம்மா’ கொடுத்த அறிக்கையின் மூலமாகதான் மக்களுக்கு தெரிந்தது. ஜோதி தியேட்டர் எதிரே ஆயிரக்கணக்கான ஏக்கரை வளைத்துப் போட்டு பெரிய பச்சை மைதானம் ஒன்றினை நீங்கள் கண்டிருக்கலாம். இராணுவ அதிகாரிகள் முன்பெல்லாம் அங்கே குதிரை ஓட்டுவார்கள். போலோ விளையாடுவார்கள். இப்போது அவர்களுக்கு குதிரை ஓட்டத் தெரியாதோ என்னமோ, சில ஆண்டுகளாக போலோ விளையாடுவதில்லை. வெட்டியாகதான் அந்த (சென்னையின் மிகப்பெரிய) மைதானம் இருக்கிறது. பல லட்ச ரூபாய் பராமரிப்புக்கும் செலவளிக்கப் படுகிறது.

எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரி பேருந்து நிறுத்தம் அமைந்திருப்பது கூட ஏதோவொரு இராணுவ அலுவலகத்தின் வாயிலில்தான். முன்பெல்லாம் ‘சைட்’ அடிக்கச் செல்லும் மாணவர்கள் அங்கிருந்த குட்டிச்சுவரில் உட்கார்ந்து ‘தம்’ அடித்துக் கொண்டிருப்பார்கள். யாரோ ஒரு ஜவான் வந்து இந்தியில் காச்மூச்சென்று எச்சரித்துவிட்டுப் போவார்.

சென்னையில் இவ்வளவு இராணுவத்தினர் என்னதான் செய்துக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் இவர்களுக்கு இவ்வளவு இடம் தேவை? தமிழக அரசாங்கமே தனது தலைமைச் செயலகத்தை கூட இவர்களது வாடகைக் கட்டிடத்தில்தான் நடத்த வேண்டியிருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இங்கே இராணுவத்தின் பயன் என்ன? அதிகபட்சமாக டிசம்பர் 6க்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் துப்பாக்கியோடு நிற்பார்கள். தேர்தல்களின் போது சாலையில் அணிவகுப்பார்கள். கொடியேற்றத்தின் போது தென்படுவார்கள். எப்போதாவது விமானப் படையினர் மெரீனாவில் விமான சாகசம் காட்டுவார்கள். இவற்றைத் தவிர்த்து இவர்களால் மக்களுக்கு எந்த நேரடிப் பிரயோசனமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்புகளைவிட இவர்களது ஆக்கிரமிப்பு அக்கப்போர் தாங்கமுடியவில்லை.

இவர்களுக்கு போலிஸ்காரர்கள் லட்சம் மடங்கு பரவாயில்லை. வாங்குகிற சம்பளத்துக்கு (கிம்பளத்துக்கும் சேர்த்து) ஏதோ வேலை பார்க்கிறார்கள். புருஷன் பட்டுப்புடவை வாங்கித் தராவிட்டாலும் கூட, வரதட்சணை கேஸு கொடுக்க பொண்டாட்டி காவல்நிலையத்தைதான் நாட முடிகிறது. ஏதோ ஒருவகையில் (சிக்னலுக்கு சிக்னல் மாமூல் வாங்கினாலும் கூட) மக்களோடு தொடர்பிலேயே இருக்கிறார்கள் போலிஸ்காரர்கள். துரதிருஷ்டவசமாக அவர்களுக்கு வாய்க்கும் கட்டிடங்கள் ‘டொங்காகவே’ இருக்கிறது. தமிழக போலிஸுக்கு இராணுவம் மாதிரி சொத்து, கித்து, நிலம், நீச்சு என்று பார்க்கப்போனால் ஒன்றும் பெரிசாக தேறாது என்றுதான் தோன்றுகிறது. உதவி கமிஷனர் எல்லாம் பணி செய்ய வேண்டியிருக்கும் மடிப்பாக்கம் காவல் நிலையம் கூட, கீழ்க்கட்டளையில் வாடகை கட்டிடத்தில்தான் இயங்குகிறதாக தெரிகிறது. மடிப்பாக்கத்திலிருந்த போது ஒருமுறை இடத்துக்கு சொந்தக்காரர் பிரச்சினை செய்து இவர்களை துரத்தி அடித்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

24 x 7 x 365 நாட்களும் மக்கள் பிரச்சினைகளோடு மல்லுக்கட்டி வாழ்ந்துக் கொண்டிருக்கும் காவல்துறைக்கே இதுதான் கதி. ஆனால் என்றோ ஒருநாள் வரப்போகும் போருக்கு (உலகம் அழியும்வரை சென்னைக்கு போர் வராமலேயே கூட போகலாம்) துப்பாக்கியை எண்ணெய் போட்டு துடைத்துக் கொண்டிருக்கும் இராணுவத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம், அதிகாரம்?

எங்கள் ஊரில் பத்துக்கும் மேற்பட்ட முன்னாள் இராணுவத்தினரை தனிப்பட்ட முறையில் அறிவேன். பதினைந்து, இருபது ஆண்டுகாலம் இராணுவத்தில் சேவை புரிந்தவர்கள். ஒரு போருக்கு கூட இவர்கள் போனதில்லை. அவ்வளவு ஏன்? ஒரு வாய்க்கா, வரப்பு தகராறினை கூட இவர்களது பணிக்காலத்தில் இவர்கள் சந்திக்க நேர்ந்ததில்லை. வெறும் பயிற்சி, பயிற்சி, பயிற்சிதான். வீரர்களே இப்படித்தான் என்றால், அதிகாரிகள் நிலையை சொல்லியாக வேண்டியதில்லை. இவர்களுடைய சம்பளம், பணிக்காலத்துக்குப் பிறகான சலுகைகள் என்றெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால், ஐடி ஊழியர்களே பொறாமைப் படுவார்கள் (என்னைப் போன்றவர்கள் அங்கே சீப்பாக கிடைக்கும் ரம்முக்குதான் வாயிலும், வயிற்றிலுமாக அடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது).

இப்படிப்பட்ட இராணுவத்துக்கு ஏன் சென்னையில் கால் வாசி இடத்தை தாரைவார்த்து தரவேண்டும்? போர் வரும்பட்சத்தில் வந்து எல்லா இடத்தையுமே கூட எடுத்துக் கொள்ளட்டுமே? எல்லா இடமும் இவர்களுடையது என்கிற அதிகார மமதையால்தானே பாதாங்கொட்டை எடுக்கவந்த பதிமூன்று வயது சிறுவனை படுகொலை செய்திருக்கிறார்கள்? பட்டவர்த்தனமாக படுகொலை என்று தெரிந்தும் கூட, தமிழக முதலமைச்சரே நடவடிக்கை எடுக்க இயலாமல் இராணுவத்துக்கு வேண்டுகோள்தான் விடுக்க வேண்டியிருக்கிறது. இங்கே கடவுளுக்கு அடுத்து அதிக அதிகாரம் படைத்தவர்கள் இராணுவத்தினரா?

நாளை டிஃபன்ஸ் காலனியில் கிரிக்கெட் ஆடச்செல்லும் இளைஞர்கள் கூட இவர்களால் வேட்டையாடப்படலாம். இராணுவம் இங்கே மக்களுக்கு உதவிகரமாக இருப்பதற்குப் பதிலாக உபத்திரவமாகவே இருக்கிறது. இவர்களால் நகர மக்களுக்கு என்ன பாதுகாப்பு?

தமிழக அரசின் நிர்வாகப் பணிகளுக்கு கூட போதிய அலுவலகங்கள் இல்லாத நிலையிலிருக்கும் போது இராணுவம் சும்மாவே எல்லா இடங்களையும் வளைத்துப் போட்டிருப்பது அநீதியாகப் படுகிறது. புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களை விரட்டியடிக்கும் தமிழக அரசு, பயன்படுத்த வழியில்லாமல் இராணுவத்திடம் அடைபட்டிருக்கும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும். பதிலுக்கு வேண்டுமானால் எங்கேயாவது வண்டலூர் காடு தாண்டி இருக்கும் தரிசு இடங்களை அளித்துக் கொள்ளட்டும். இனியும் நகரத்துக்கு நடுவில் வசதியாக அமர்ந்துக் கொண்டு இவர்கள் அட்டூழியம் செய்ய அரசு அனுமதிக்கக் கூடாது.

வேண்டுமென்றே இக்கட்டுரையை எழுத ஒரு அபத்தமான கருத்து மையத்தையும் , மொழிநடையையும் கையாண்டிருக்கிறேன். சீரியஸாக பேசினால், தில்ஷனை போட்டது மாதிரி போட்டுவிடுவார்களோ என்கிற அச்சமும் ஒரு காரணம். ஆயினும் இங்கிருந்து இந்திய இராணுவம் வெளியேற நிஜமான நியாயமான காரணங்கள் ஏராளமாக இருக்கிறது. அவற்றை பிரிதொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாம். இக்கட்டுரையை வாசிக்கும் ஒரேயொரு சென்னைவாசியாவது, “ஆமாம். இவங்களுக்கு இங்கே என்ன வேலை?” என்று சீரியஸாக சிந்தித்தால் போதுமானது

பார்வை!


ஆட்டோவிலிருந்து இறங்கும்போது உச்சிவெயில் உண்மையாகவே மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. பிளந்துவிட்ட மண்டையை ஈரக்கர்ச்சீப்பால் மூடினேன். சிகப்பான சென்ட்ரல் அடுப்பில் காணக்கிடைக்கும் தீக்கங்குகள் மாதிரி கனகனவென்றிருந்தது. கொடுத்ததை வாங்கிச் செல்லும் ஆட்டோ டிரைவர் வாய்ப்பது முன்னோர் எக்காலத்திலேயோ செய்த புண்ணியம். பயணச்சுமையை முதுகில் தாங்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஓடினேன். இரண்டு மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ். மணி ஒன்று நாற்பத்தி ஐந்து.

சரியான நடைமேடை கண்டறிந்து, என் பெட்டியை அடைவதற்குள் சட்டை வியர்வையால் தொப்பலாகிவிட்டிருந்தது. சன்னலோரத்தில் அமர்ந்தேன். லேசான காற்று வியர்வையால் நனைந்த உடல்மீது பட்டது இதமாக இருந்தது. திறந்திருந்த சன்னல் வழியாக பார்வையை ஓட்டினேன். இருப்புப் பாதையில் தேங்கியிருந்த அழுக்கு நீரை இரு காக்கைகள் அருந்திக் கொண்டிருந்தன. அலகால் நீரை உறிஞ்சி வானத்தைப் பார்த்து காக்கைகள் நீரருந்தும் பாணியே அழகுதான்.

என் பக்கத்தில் நாற்பது கூட்டல் வயதுடையவர் அமர்ந்தார். வெள்ளைச்சட்டை. கருப்பு கால்சட்டை. கையில் தினகரன். செய்தித்தாளைப் பிரித்தவாறே பேச ஆரம்பித்தார்.

“ராஜபக்‌ஷேவை போட்டுத் தள்ளணும் சார்”

“ஆமாங்க. டிவி பார்க்குறப்போவெல்லாம் மனசு பிசையுது” பதிலுக்கு பேசியாக வேண்டும். அதுதான் மரியாதை.

“நான் சந்திரசூடன்ங்க. கோயமுத்தூரு. மெட்ராஸ் ஹைகோர்ட்டுலே லாயரா இருக்கேன்” உடனடியாக அறிமுகப்படுத்திக் கொண்டார். கைகொடுத்து என்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

ரயில் கிளம்பப் போவதாக இந்தி, ஆங்கிலம், தமிழில் கொஞ்சம் சுமாரான பெண்குரலில் அறிவிப்பு கொடுத்தார்கள். இஞ்சின் பெட்டியிலிருந்து ஹாரன் சத்தம் கேட்டது. பெட்டி இருக்கைகள் கிட்டத்தட்ட முழுமை அடைந்து இருக்க, எதிர் இருக்கை மட்டும் காலியாக இருந்தது கண்ணை உறுத்தியது.

அவசர அவசரமாக ஒரு பெரியவரும், இருபத்தெட்டு முதல் முப்பது வயது மதிக்கத்தவனும் வந்து அமர்ந்தார்கள். அந்த மதிக்கத்தக்கவன் பெரியவரின் மகனாக இருக்கக் கூடும். எனக்கென்னவோ அவனைப் பார்த்ததுமே பிடிக்கவில்லை. சிலபேரை பார்த்ததுமே பிடித்துவிடும். பழகியவுடன் கசந்துவிடும்.

அவன் முகம் வெறிகொண்ட வேங்கையைப் போல இருந்தது. அவனது கண்கள் என்னை மிகவும் துன்புறுத்தியது. அவன் ஒரு சைக்கோ என்று உள்ளுணர்வு உறுத்தியது. இவனோடு பழகினாலும் இவனைப் பிடிக்காது என்று தோன்றியது. பெரியவர் வெள்ளைச் சட்டையும், வேட்டியும் கொஞ்சம் அழுக்காக அணிந்திருந்தார். அவனோ கசங்கிப்போன சட்டையும், சாயம்போன கால்சட்டையுமாக நாகரிகத்துக்கு தொடர்பில்லாதவனாக இருந்தான்.

பக்கத்திலிருந்த லாயரைப் பார்த்தேன். சகப்பயணியாக என்னை திருப்தியோடு பார்த்தவருக்கு எதிர் இருக்கை பயணிகள் அதிருப்தியை தந்திருக்கிறார்கள் என்பது பார்வையிலேயே தெரிந்தது.

பெரியவர் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்தார். ரயில் கிளம்பியது. காணாததை கண்டவன் மாதிரி அந்த பிஸ்கட்டை பிடுங்கி கடித்தான் அவன். பிஸ்கட் துணுக்கு சிதறியது. வாயெல்லாம் துகள்கள். நிமிர்ந்துப் பார்த்த எனக்கோ அருவருப்பாக இருந்தது. லாயருக்கும் அதேபோல இருந்திருக்க வேண்டும். ஒரு டவல் துண்டினை எடுத்து முகத்தில் போர்த்திக்கொண்டு இருக்கையில் வசதியாக சாய்ந்தார். அனேகமாக தூங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்.

ரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்க ஜன்னல் வழியாக காற்று ஜம்மென்று உள்நுழைந்தது. திடீரென்று அவன் உட்கார்ந்த நிலையில் குதித்தவாறே, “அப்பா.. அப்பா.. மரமெல்லாம் பச்சையா அழகாருக்குப்பா” என்று கொஞ்சம் சத்தமாக சொன்னான். பெரியவர் பதிலுக்கு “ம்” என்றார். ஒருவேளை மனநிலைப் பிறழ்ந்தவனோ?

“அப்பா அங்கே பாருங்க. எவ்ளோ அழகாயிருக்கு!” குதூகலமான குரலில் கத்தினான். எரிச்சல் மண்டியது.

பக்கத்திலிருந்தவர் துயில் களைந்து காதுக்கு பக்கத்தில் வந்து சொன்னார். “க்ராக்கு பய சார்!”

திடீரென்று இருண்டதைப் போல தோன்றியது. சடசடவென்று மழைத்துளி விழுந்தது. வானம்தான் எவ்வளவு வேகமாக மாற்றத்துக்கு தயாராகிறது. ஜன்னலை மூட எழுந்தேன். அவன் முரட்டுத்தனமாக என் கையைப் பற்றி முறைத்தான். இச்சூழலில் அவனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பி, உட்கார்ந்தேன். பெரியவரைப் பார்த்தேன். கெஞ்சும் தொனியில் ஒரு பார்வை பார்த்தார்.

“அப்பா. மழை ஜோன்னு பெய்யுது. ஹைய்யா. ரொம்ப அழகா இருக்கு. சூப்பரா இருக்கு” என்னவோ மழையைப் பார்த்ததே இல்லை என்பது மாதிரி கத்தினான். பெட்டியில் இருந்த மற்றவர்கள் வித்தியாசமாக திரும்பிப் பார்த்தார்கள். பெரியவர் பாவமான தொனியிலேயே அமர்ந்திருந்தார்.

ரயில்வேகத்தில் மழைத்துளி ஜன்னலுக்குள் புகுந்து என் சட்டையை நனைக்க, இதற்குமேல் பொறுக்க முடியாது என்ற நிலையில் ஜன்னலை மூட மீண்டும் எழுந்தேன்.

”ஜன்னலை மூடாதீங்க!” முரட்டுக்குரலில் சொன்னான். எரிச்சல் எல்லை மீறிப் போனது.

“ஏன் சார்? பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே இவனை சேர்த்து சரி செய்யுறதை விட்டுட்டு, வயசான காலத்துலே இப்படி கஷ்டப்படறீங்க?” பெரியவரிடம் கொஞ்சம் காட்டமாகவே கேட்டேன். அவனது முகம் இருளடைந்தது. இதெல்லாம் மட்டும் புரியும்.

அவர் அமைதியாக சொன்னார்.

“தயவுசெஞ்சு தொந்தரவுக்கு மன்னிச்சுடுங்க தம்பி. ஆஸ்பத்திரியிலிருந்து தான் வர்றோம். அவனுக்கு ஜூரம் வந்து பத்து வயசுலே பார்வை போயிடிச்சி. போனவாரம் தான் கண் தானம் மூலமா அவனுக்கு மறுபடியும் பார்வை கிடைச்சிருக்கு. மழையும், மரமும் அவனுக்கு புதுசாதான் தெரியும்”

ஜன்னலை மூடாமலேயே லேசாக அதிர்ச்சியடைந்து இருக்கையில் சாய்ந்தேன். பக்கத்து சீட்டுக்காரர் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். அவன் எதுவும் நடக்காதது போல மீண்டும் மழையை ரசிக்க ஆரம்பித்தான். கடந்துச்சென்ற டீனேஜ் பெண் ஒருத்தியின் டீஷர்ட்டில் ”Don't Judge Too Soon” என்று எழுதியிருந்தது.



நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த ஆங்கில மின்னஞ்சல் சமாச்சாரத்தை தழுவி புனையப்பட்ட கதை.

(நன்றி : தினகரன் வசந்தம் - இக்கதையின் சுருக்கப்பட்ட ஒரு பக்க வடிவம் 03-07-2011 வசந்தம் இதழில் வெளிவந்திருக்கிறது)

2 ஜூலை, 2011

பெண் ஏன் அழகாக இருக்கிறாள்?

பெண் ஏன் அழகாக இருக்கிறாள்?

இந்த கேள்வியை நான் கேட்டுக் கொள்ளாத நாளே கடந்த கால் நூற்றாண்டுகாலமாக இல்லை.

சங்கர வித்யாலயாவில் எல்.கே.ஜி. சேர்ந்தேன். எனக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவள் பூர்ணிமா. மாநிறம். பெரிய குண்டு பல்பு கண்கள். மை அப்பியிருப்பாள். புருவம் முடியும் இடத்திலிருந்து காதுக்கு மிக நெருக்கமாக ஒரு மைத்தீற்றல் ஓவியமாய் வரையப்பட்டிருக்கும். ஆனால் சரியான அராத்து. ஒருமுறை சண்டை போடும்போது கூராக தீட்டப்பட்டிருந்த பென்சிலை எடுத்து முகத்தில் கண்ணுக்கு அருகாக கீறிவிட்டாள். கேவிக்கேவி அழுதுக் கொண்டிருந்தவனை டீச்சர் கேட்டார். ”ஏண்டா அழுவுறே?”. ஏனோ அவளைப் போட்டுக் கொடுக்க வேண்டுமென்று அந்த வயதிலேயே தோன்றவில்லை. ஏதோ பொய் சொல்லி சமாளித்ததாக நினைவு. அழகான பெண், பிரம்படி படலாமா?

இப்போது அவளுக்கு பத்தாங்கிளாஸ் படிக்கும் பையனோ, பெண்ணோ இருக்கலாம். எங்கேயாவது காண நேர்ந்தால் அடையாளம் காணமுடியுமா தெரியவில்லை. ஆனால் அவளது கண்களை மட்டும் மறக்கவே முடியாது. எத்தனை லட்சம் பேருக்கு நடுவிலும், அவளது கண்களை பார்த்தால் உடனே கண்டறிந்துவிடுவேன். துரதிருஷ்டவசமாக பெண்களின் கண்களை பார்த்து பேச இன்றும் பயமாகவே இருக்கிறது (பூர்ணிமா பென்சிலால் கீறியதால் ஏற்பட்ட உளவியல் பாதிப்பால் இருக்கலாம்).

ஒண்ணாங்கிளாஸ் சபிதா, மூணாங்கிளாஸ் கவிதா, ஆறாங்கிளாஸ் குணசுந்தரி, எட்டாங்கிளாஸ் குமுதா, பத்தாங்கிளாஸ் அனுராதா, பண்ணிரெண்டாங் கிளாஸ் தமிழரசி என்று பள்ளிப் பருவம் முழுக்க பிரமிக்க வைத்துக் கொண்டே இருந்தார்கள் ஏராளமான அழகிகள்.

விரைவில் குழந்தை பெறப்போகும் நண்பர் ஒருவர் சொன்னார். “இதுவும் பொண்ணா பொறக்கணும்னு விரும்பறேன்”. அவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உண்டு. “எதுக்கு? ஒரு பையனாவது இருக்கட்டுமே?” என்று கேட்டதற்கு சொன்னார்.

“பொண்ணுன்னா நாம சாகறவரைக்கும் நமக்கு குழந்தையாவே தெரியும். பையன்னா சீக்கிரமாவே குழந்தை பொஸிஸனில் இருந்து பிரமோஷன் வாங்கிடுவான். சாவுறவரைக்கும் அவனோடு மல்லுக்கட்டி தினம்தினம் சாவணும். பொண்ணை வளர்த்து கட்டிக் கொடுக்குறதுதான் சார் இண்டரெஸ்டிங் டாஸ்க்கு. அதுவுமில்லாமே பொண்ணுன்னா கடைசிக்காலத்தில் பொறுப்பா பார்த்துக்கும். பசங்க அப்படியா? நானே என் அப்பன் ஆத்தாவுக்கு சோறு போடறதில்லை. ஆனா என் பொண்டாட்டி, அவளோட சம்பளத்துலே பாதியை அவங்க அப்பா அம்மாவுக்கு பொறுப்பா மாசாமாசம் கொடுத்திடறா”

இந்த தலைமுறையில் நிறைய பேர் இந்த நண்பரைப்போல யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எதிர்க்காலத்தில் ஆண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால், அபார்ஷன் மாதிரியான ஆபத்துகள் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது. சரி இந்த மேட்டரை லூசில் விடுங்கள். நம் டாபிக்கே வேற.

பையன்கள் எல்லாம் பச்சாக்களாக இருக்க, பெண்கள் மட்டும் ஏன் பேரழகிகளாக இருக்கிறார்கள்?

குட்டியில் குரங்கு கூட அழகுதான் என்பார்கள். பயல்களும் பிறக்கும்போது கொஞ்சம் சுமாராகதானிருக்கிறார்கள். பெற்றோர்களும் கொஞ்சக்கூடிய அளவுக்கு, அதிகபட்சம் மூணு, நாலு வயசு வரைக்கும் வளர்கிறார்கள். என்றைக்கு டவுசர் போட ஆரம்பிக்கிறான்களோ, அன்றிலிருந்து ‘பையன்’ ஆகிறார்கள். அதுவும் பதிமூன்று வயசு வாக்கில், பால்யப்பருவம் முற்றிலுமாக முடிந்து லேசாக மூக்குக்கு கீழே முடிவளரும் பருவத்தில் காண சகிக்க முடியாத தோற்றம். சிறுபையன்களாக இருந்தபோது பார்ப்பதற்கு புஷ்டியாக இருந்த பயல்கள் கூட பஞ்சத்தில் அடிபட்ட தோற்றத்தில் இருப்பார்கள் பதினெட்டு வயதில்.

மாறாக பெண்களோ பத்து வயதிலிருந்து இருபது வயதுக்குள்ளாக அவர்களது வாழ்நாளின் உச்சபட்ச பேரெழிலை எட்டுகிறார்கள். இந்த கூற்றிலிருந்து சில ஒல்லிக்குச்சிப் பெண்களை மட்டும் விலக்கிவிடலாம். முப்பது வயதுக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக சதை போட்டு நாற்பது வயதில் கிளியோபாட்ராக்களாக வலம் வரும் அழகான ஆண்டிக்கள் அவர்கள்.

முதன்முதலாக காதலிக்கும்போது என்னுடைய வயது பதினாறு. அவளுக்கு வயது பதிமூன்றோ, பதினாலோ. ஒரு நெருக்கமான சந்தர்ப்பத்தில், சில இன்ச் கேப்பில் ஈரமான அவளது உதடுகளை காண நேர்ந்து, கிட்டத்தட்ட மூர்ச்சையாகி விட்டேன். பெண்களின் உதடை ஆரஞ்சுச் சுளையோடு ஒப்பிடும் கவிஞர்கள் பைத்தியக்காரர்கள். உண்மையில் இவர்களது உதட்டை ஒப்பிட்டுக் காட்டக்கூடிய அளவுக்கு எழில்வாய்ந்த பொருள் உலகிலேயே இல்லை. நாசி. நாசிக்கு கீழே கால் இஞ்ச் கேப். மேலுதடு. கீழுதடோடு இணையும் ஓரவாய். கீழுதடுக்கு கீழான முகவாய். ச்சே.. வாய்ப்பேயில்லை. உலகின் தலைசிறந்த ஓவியங்களான பெண்களை வரைந்த இயற்கைக்குதான் எவ்வளவு கற்பனைத்திறன், கவித்திறன்?

பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள். கலைஞரின் படமோ, புரட்சித்தலைவி அல்லது புரட்சிப்புயல் அல்லது இளையதளபதி அல்லது செந்தமிழன் அல்லது தமிழகத்து பிரபாகரன் யாருடைய படமோ பிரதானமாக இருக்கும். சிறியதாக பாஸ்போர்ட் அளவில் மணமக்கள் படம் இடம்பெற்றிருக்கும். அடுத்தமுறை இந்த விளம்பரத்தைப் பார்க்கும்போது உற்றுப் பாருங்கள். மணமகள் உலக அழகியாகவும், மணமகன் உலகமகா குரூபியாகவும் இருக்கும் யதார்த்த உண்மையை கண்டறிவீர்கள். உடனே உங்கள் திருமண ஆல்பத்தை கூட புரட்டிப் பார்த்து இந்த பேருண்மையை நீங்கள் உறுதி செய்துக் கொள்ளலாம். மணமகள் அழகு. மணமகன் சுமார் அல்லது சப்பை. ஏனிந்த நிலை?

சரி. திருமணத்தின் போதுதான் ‘பசங்க’ சுமார் ஆக இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு? குழந்தை பிறந்தவுடன் ஏற்கனவே அழகாக இருந்த பெண் மேலும் அழகு பெறுகிறாள். மாறாக பசங்களோ, கிழங்களாக மாறி முன் தலையிலோ, பின் தலையிலோ முடிகொட்டி, தொப்பை போட்டு ‘அவன் இவன்’ ஹைனஸ் மாதிரி ஆகிவிடுகிறார்கள். இப்போதெல்லாம் பசங்களுக்கு இருபதுகளின் இறுதியிலேயே வேறு நரைக்க ஆரம்பித்துவிடுகிறது.

நீங்கள் உலகை உற்றுப் பார்க்கும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பின், வெள்ளிக்கிழமை காலைகளை நினைவுபடுத்திப் பாருங்கள். சாலையெங்கும் சோலைதான். சித்தாளு ஃபிகரில் தொடங்கி, சீமாட்டி ஃபிகர் வரை சீயக்காயோ, சிக் ஷாம்போ போட்டு சுத்தபத்தமாக தலைகுளித்து, ஃப்ரீ ஹேர்ஸ்டைலில் பட்டாம்பூச்சி மாதிரி படபடக்கிறார்கள். மாறாக, பசங்களோ வீக்கெண்டு டாஸ்மாக் பார்ட்டியை நினைத்து, நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு விலங்கினம் மாதிரி திரிகிறார்கள்.

உலகில் தோன்றிய எந்த உயிரினத்தை எடுத்துக் கொண்டாலும் ஆணினம்தான் அழகு. ஆண் சிங்கத்துக்கு கம்பீரமான பிடரி இருக்கும். பெண் சிங்கம் ஷேவிங் செய்த டி.ராஜேந்தர் மாதிரி இருக்கும். ஆண் மயிலுக்குதான் தோகை. பெண் மயிலுக்கு அருக்காணி வால் ஸ்டைல். இப்படி நீங்கள் எந்த உயிரினத்தை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், ஆணினம் அழகில் கொள்ளை கொள்ளும். மாறாக பாழாய்ப்போன இந்த மனிதக் குலத்தில் மட்டும்தான் இந்த ஓரவஞ்சனையை இயற்கை நிகழ்த்திப் பார்த்திருக்கிறது.

என் அருமைக்குரிய ஆணினமே.. அழகை நினைத்து உரலை இடித்துக் கொள்வதுதான் ஆணினத்துக்கு விதிக்கப்பட்ட விதி. சரக்கெடு. மட்டையாகு.