8 அக்டோபர், 2011

மாலன்

இரண்டு வருடங்களுக்கு முன்பாக, புதியதாக தொடங்கப்படவிருக்கும் ஒரு பத்திரிகைக்கு ஆட்கள் தேவையென்று மாலன் தன்னுடைய வலைப்பூவில் கேட்டிருந்தார். விண்ணப்பித்திருந்தேன். தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைத்தார்.

தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் இருந்த அந்த அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். பத்திரிகை உரிமையாளரோடு, மாலன், ரமேஷ்பிரபா இருவரும் நேர்முகம் நடத்தினார்கள். பத்திரிகையில் வேலையை தொடங்கி, பிற்பாடு விளம்பர நிறுவனங்களுக்கு போய்விட்டவன். மீண்டும் பத்திரிகைத்துறையில் பணியாற்ற ஆசைப்படுகிறேன் என்று சொன்னேன்.

உரிமையாளர் திடீரென ஒரு கேள்வி கேட்டார். “உங்களுடைய லட்சியம் என்ன?”

லட்சியம் மாதிரியான எந்த சமாச்சாரமும் இல்லாத எனக்கு அக்கேள்வியை எப்படி எதிர்கொள்வதென்று தெரியவில்லை. நேர்முகத் தேர்வுகளில் கேள்வி கேட்கப்பட்டால், திணறாமல் உடனடியாக ஏதாவது பதிலை சொல்லியாக வேண்டும். கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னேன். “ப்ரியா கல்யாணராமன் ஆகவேண்டும் என்பதுதான் என் லட்சியம்”

ப்ரியா கல்யாணராமனை உரிமையாளருக்கு பரிச்சயமில்லை போல. “புரியலியே?” என்றார்.

எனக்கும் புரியவில்லை. உள்மனசுக்குள் இருந்தது, நான் அறியாமலேயே வார்த்தையாக வெளிப்பட்டுவிட்டது. அந்த லட்சியத்தை எப்படி விளக்கிச் சொல்வது என்று புரியாமல் திணறினேன்.

மாலன் எனக்காக சமாளித்தார். “ப்ரியா கல்யாணராமன் குமுதம் பத்திரிகையோட ஆசிரியர். அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆகவேண்டும் என்பது இவரோட லட்சியம்”

அட. இதுவும் நல்லாருக்கே. இப்படியே வைத்துக் கொள்வோம் என்று நினைத்துக் கொண்டேன்.

உண்மையில் அந்த கேள்விக்கான என்னுடைய விடை, இந்த குறிப்பிட்ட பத்திரிகைக்கான நேர்முகத் தேர்வில் irrelevant ஆன விஷயம். நியாயமாகப் பார்க்கப் போனால், அவர்கள் என்னை உடனடியாக தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் திட்டமிட்டிருந்த இதழ், இன்று வெற்றிகரமாக நடந்துக் கொண்டிருக்கும் ‘புதிய தலைமுறை’. உள்ளடக்க ரீதியில் குமுதத்துக்கு நேரெதிரானது. ஆனால், என் லட்சியம் (?) அப்படியிருந்தும், என்னை வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள்.

இப்படித்தான் புதிய தலைமுறையின் முதல் ஊழியனாக நான் பணிக்குச் சேர்ந்தேன். காரணம் மாலன். தமிழில் சுமாராக எழுதத் தெரிந்தால் போதும். எப்படியும் ‘மோல்ட்’ செய்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இம்மாதிரியான உள்ளடக்கம் கொண்ட பத்திரிகைக்கு ஏற்ப ‘மோல்ட்’ ஆகமுடியுமென்ற நம்பிக்கை எனக்குத்தான் அப்போது இல்லை.

கடந்த முப்பது வருடங்களாக என்னைப்போல நூற்றுக் கணக்கானோரை அவர் ‘மோல்ட்’ செய்திருக்கிறார். இதை தன்னுடைய பணி தொடர்பான கடமை என்று நினைக்காமல், ஒரு இயக்கமாகவே செய்துவருகிறார். ஏனெனில் அவருக்கு இந்த உலகில் மிகவும் பிடித்தமான விஷயம் துறுதுறுவென்றிருக்கும் இளைஞர்கள்.

ஒவ்வொரு இளைஞனும் ஒரு unique என்று நினைப்பார். எனவே ஒவ்வொருவரின் கருத்தும் அவருக்கு முக்கியம். அக்கருத்து அவருக்கு உவப்பானதாகவோ, அறிவுப் பூர்வமானதாகவோ எல்லாம் இருந்தாக வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் ‘கருத்து’ இருந்தாக வேண்டும் என்பது அவருடைய எதிர்ப்பார்ப்பு.

1981ல் சாவி குழுமத்தின் ‘திசைகள்’ பத்திரிகைக்கு ஆசிரியராக மாலன் பொறுப்பேற்றபோது, என்னுடைய இப்போதைய வயதைவிட இரண்டு, மூன்று வயது அவருக்கு குறைவுதான். மிகக்குறைவான இதழ்கள்தான் வெளிவந்தன. வணிகரீதியாகவும் பெரிய வெற்றி கண்டதாக தெரியவில்லை. ஆனாலும் இன்றுவரை தமிழ் பத்திரிகையுலகில் ‘திசைகள்’ ஒரு சாதனை.

பத்திரிகையாளர்கள் என்றாலே வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, வெற்றிலை குதப்பிய வாய், நரை விழுந்த பழுத்த அனுபவம், பவுண்டன் பேனாவை எழுதத் திறந்தாலே அட்வைஸ் மழை போன்ற பழமையான சம்பிரதாயங்களை தயவு தாட்சணியமின்றி உடைத்தெறிந்தது திசைகள். இளைஞர்கள்தான் இனி தமிழ்ப் பத்திரிகைகளின் எதிர்காலம் என்கிற நிலையை உருவாக்கியது. திசைகளின் ஆசிரியரும் இளைஞர். பணியாற்றிய குழுவினர் மொத்தமும் இளைஞர்கள். இந்த இளையபடை தமிழ் பத்திரிகைகளுக்கான உள்ளடக்கம், வடிவம் என்று எல்லாவற்றையுமே மாற்றிப் போட்டது. திசைகளில் பணியாற்றிய இளைஞர் கூட்டம் பிற்பாடு எல்லாத் திசைகளுக்கும் பயணித்து, அவரவர் தேர்ந்தெடுத்த துறைகளில் திறன்ரீதியாக உச்சம் தொட்டார்கள். சுதாங்கன், ரமேஷ்பிரபா, அரஸ், சாருப்ரபா சுந்தர், மணா, ஏ.எஸ்.பன்னீர்செல்வம், மருது, பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்குனர் வஸந்த், பால.கைலாசம் என்று ஏராளமானவர்கள் திசைகளில் துளிர்த்தவர்கள்.

மாலன் தன்னிடம் பணியாற்றுபவர்களுக்கு அளிக்கும் சுதந்திரம் அளவில்லாதது. ஒரு கருத்தை அவர் சொல்லியவுடனேயே, அதற்கு எதிர்வினையாக மறுப்பையாவது தன்னுடைய குழுவினரிடமிருந்து எதிர்ப்பார்ப்பார். அவர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்த மாட்டார். உரையாடலில் மிகுந்த விருப்பம் கொண்டவர். எந்த ஒரு விவாதத்துக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கும். அவருடைய கோணத்தை தெளிவாக சொல்லிவிட்டு, மற்றவர்களின் கோணம் என்னவென்பதை அறிய அவருக்கு ஆவல் அதிகம். ஒரு கட்டுரை எழுதி, அச்சாகி விட்டால் அதோடு முடிந்தது என்று நினைக்காமல், வாசகர்கள் அக்கட்டுரை குறித்து என்னமாதிரியாக எதிர்வினைகிறார்கள் என்று இன்றளவும் ஆவலோடு வாசகர் கடிதங்களுக்கு காத்திருக்கும் ஆசிரியர் அவர். குறிப்பாக இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய விரும்புவார்.

பத்திரிகையாளன், சமூக ஆர்வலன், இலக்கியவாதியென்று அவருக்கு பலமுகங்கள் இருந்தாலும், அவரது ப்ரியாரிட்டி ‘பத்திரிகை’தான். நீண்டகால பத்திரிகை வாழ்வில் அவர் பெற்ற புகழைவிட பன்மடங்குப் புகழை மிகக்குறுகிய காலத்திலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெற்றிருக்கிறார். ஆனாலும் அச்சுப் பத்திரிகை மீதான அவருடைய மோகம் அளவில்லாதது.

இன்று எங்கள் ஆசிரியர் மாலனுக்கு பிறந்தநாள். நீண்ட நாட்களாக அவருக்கென்று ஒரு பிரத்யேக இணையத்தளத்தை உருவாக்கி வந்தார். இன்றுமுதல் அது பயன்பாட்டுக்கு வருகிறது. இணையத்தள முகவரி : http://maalan.co.in

காலையில் இருந்து ஒரு மணி நேரமாக இந்த இணையத்தளத்தை மேய்ந்ததில் ஒன்று புரிந்தது. தமிழில் எந்த ஒரு ஆளுமையின் இணையத் தளமும் இவ்வளவு விரிவான தரவுகளையும், தகவல்களையும் (அதிரடி எளிமை வடிவத்தில்) கொண்டதில்லை. இவ்வகையிலும் கூட மாலன் ஒரு முன்னோடிதான்.

7 அக்டோபர், 2011

வாச்சாத்தி - தீர்ப்புக்குப் பிறகு...

ந்த ஆலமரம்தான் அனைத்துக்கும் சாட்சி.

பத்தொன்பது வருடங்களுக்கு முன்பாக இம்மரத்துக்கு கீழேதான் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஒட்டுமொத்தமாக நிற்கவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். பெரும்பாலானவர்கள் முதியவர்களும், பெண்களும். அடி, உதை, அநியாயம், அட்டூழியம், அட்டகாசம்.

அப்போது துடிப்பான இளைஞர்களாக இருந்த பலரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள். தப்பியவர்கள் மலைகளுக்கு மேலே சென்று காடுகளில் உணவின்றி, மாற்று உடையின்றி, மனம் பேதலித்துப் போய் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஆலமரத்தின் அடியில் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் இருந்து, திருமணமாகாத பதினெட்டு இளம்பெண்களை மட்டும் தேர்வு செய்தார்கள். அவர்களை ஒரு லாரியில் ஏற்றி, ஏரிக்கரைக்கு கொண்டுச் சென்று.. அங்கிருந்த புதர் மறைவுகளில்... கூட்டம் கூட்டமாக...

அப்படியும் வெறி அடங்காதவர்கள் அப்பெண்களை அழைத்துச் சென்று அரூரில் ஒரு வாரம் வைத்திருந்தார்கள். அங்கும் தொடர்ந்தது பாலியல் வன்முறை. பின்னர் இவர்களை சிறைகளுக்கு கொண்டு செல்லும்போது, அவர்களில் பலர் குற்றுயிரும், குலையுயிருமாக ஆகியிருந்தார்கள்.


ம்பவம் நடந்த கருப்பு ஜூன் நாட்களை மீண்டும் நினைக்கும்போதே கதறியழுகிறார் முதியவரான பரந்தாயி.

“நாய்களை விட கேவலமாக நடத்தப்பட்டோம். எங்கள் இளைஞர்கள், பெண்கள் அனுபவித்த சித்திரவதைகளை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது. இப்போது கிடைத்திருக்கும் தீர்ப்பினை எங்களுக்கான நியாயமாக நினைக்கவில்லை. கவுரவமாக நினைக்கிறோம். பத்தொன்பது வருடங்கள் கழித்து எங்கள் ஊர் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்கிறது. எங்கள் மீது அவர்கள் சாட்டிய குற்றச்சாட்டுகள் தவறென்று நிரூபணம் ஆகியிருக்கிறது. தாமதமான தீர்ப்பாக இருந்தாலும், நாங்கள் வரவேற்கத்தக்க தீர்ப்பு. வெளியூர்களுக்கு செல்லும்போதெல்லாம் ஊர்ப்பெயரை கேட்டால் சொல்லத் தயங்கிக் கொண்டிருந்த எங்கள் இளைஞர்கள், இனி தைரியமாக சொல்வார்கள் ‘நான் வாச்சாத்திக்காரன்’ என்று”

பரந்தாயிக்கு ஏற்பட்டிருக்கும் பெருமிதம்தான் ஊர்க்காரர்கள் அனைவருக்குமே. தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, இத்தனை வருடங்களாக தங்கள் மீது திணிக்கப்பட்ட இழிவினை ஒட்டுமொத்தமாக துடைத்து எறிந்திருப்பதாக கருதுகிறார்கள்.

தீர்ப்பினைக் கேள்விப்பட்டதுமே அதே ஆலமரத்தின் கீழ், ஒட்டுமொத்த கிராமமும் குழுமியது. பட்டாசு வெடித்து தீபாவளியாய் கொண்டாடியது. அருகிலிருக்கும் குலத்தெய்வக் கோயில் நேர்த்திக் கடன்களால் மூச்சு திணறுகிறது. தீர்ப்புக்கு முன்னதாக குலத்தெய்வத்திடம், நல்லத் தீர்ப்பு கிடைத்தால் அவரவர் வசதிக்கு நேர்த்தி செய்வதாக ஒவ்வொரு கிராமத்தவரும் வேண்டிக் கொண்டார்களாம்.


சித்திரவதை அனுபவித்தவர்களை விட, அதை கதைகதையாய் கேட்டு, கேட்டே வளர்ந்த அடுத்த தலைமுறை, அதிகார வர்க்கம் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது. இந்த இளைஞர்களின் கோபம் நல்லவேளையாக முறைப்படுத்தப்பட்டு, அறச்சீற்றமாக மட்டுமே வெளிப்படுகிறது. ஒருவேளை தீர்ப்பு மாறியிருந்தால்..? எதுவேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

ராமதாஸ் பிறந்த அன்றுதான் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றைச் சேர்ந்த கூட்டுக்குழு வாச்சாத்திக்குள் நுழைந்தது. தங்கள் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பிருக்கும் இளைஞர்களை முதலில் கைது செய்தது. ராமதாஸின் அப்பாவும் அந்த இளைஞர்களில் ஒருவர்.

ஏழு நாள் குழந்தையாக முதன்முதலாக தனது தந்தையை ராமதாஸ் சேலம் சிறைச்சாலைக்குப் போய் பார்த்தார். கையில் கைக்குழந்தை, கணவனோ சிறையில். காட்டில் விறகுவெட்டிதான் வாழ்க்கையே. ஊரில் வனத்துறை மற்றும் காவல்துறையினரின் சித்திரவதை. ராமதாஸின் அம்மா செய்வதறியாமல் திகைத்து நின்றார்.

“என் அம்மாவும், நானும் இன்றும் உயிரோடு இருப்பதே அதிசயம்தான்!” என்கிறார் இப்போது பத்தொன்பது வயது ஆகும் மாணவரான ராமதாஸ். போலிஸ் அதிகாரியாக வேண்டும் என்பது இவரது லட்சியம். “எங்க ஊருலே எல்லாருக்கும் போலிஸுன்னா கெட்ட போலிஸுதான். நல்ல போலிஸ்னா எப்படியிருக்கும்னு நானே மாறிக் காட்டணும்னு ஆசை” என்கிறார்.

இவரைப்போலவே வாச்சாத்தியின் இன்றைய இளைய தலைமுறை ஒட்டுமொத்தமாக கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது. தங்களது முந்தைய தலைமுறையின் அறியாமைதான் அவர்களுக்கு நேர்ந்த அத்தனை கொடுமைகளுக்கும் காரணமென்று நம்புகிறது. எனவே நல்ல கல்வி கற்று, அரசுத்துறை பணியிடங்களில் அமர்ந்து, அதிகாரம் பெற்றவர்கள் அத்தனை பேருமே கெட்டவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கத் துடிக்கிறது.

“எதிர்த்துப் பேசத் தெரியாதவர்கள் என்பதால், அதிகாரம் கையில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியுமா? இந்திய அரசியல் அமைப்பு சட்டமே பழங்குடியினத்தவருக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவாக இருக்கும்போது, சட்டத்தைக் காப்பவர்களே அதை மதிக்காமல் போனதுதான் கொடுமை” என்று பாயிண்ட், பாயிண்டாக பேசும் விஜயகுமாருக்கு இருபத்தி ரெண்டு வயது. மூன்று வயது குழந்தையாக இருந்தவரை தூக்கிக் கொண்டு மலைகாடுகளில் இவரது பெற்றோர் இலக்கின்றி அலைந்து திரிந்திருக்கிறார்கள். அந்த கொடூர நாட்கள் இன்னமும் இவருக்கு லேசாக நினைவில் நிற்கிறது. அவ்வப்போது இரவுகளில் கொடுங்கனவாக வந்து துன்புறுத்துகிறது. தற்போது கிடைத்திருக்கும் நீதி, கடந்த கால துன்பங்களுக்கு ஒத்தடம் தருவதாக அமைந்திருப்பதாக சொல்லும் விஜயகுமார், ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கிறார்.

இன்னும் கூட மாவட்ட நிர்வாகம், காவல்துறை போன்ற அரசுத்துறைகள் வாச்சாத்தி மக்கள் மீது வன்மமாக இருப்பதாக இவ்விளைஞர்கள் நினைக்கிறார்கள். ஏதேனும் அரசு வேலை தொடர்பான நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்லும்போதோ, அல்லது வேறேதும் சான்றிதழ் பெறுவது மாதிரி சம்பிரதாயமான விஷயங்களுக்காக அரசு அலுவலகங்களை அணுகும்போதோ ‘வாச்சாத்திக் காரன்’ என்றாலே வெறுப்பினை உமிழ்கிறார்களாம்.

“எவ்வளவோ தடைகளை கடந்த இருபது ஆண்டுகளில் கடந்து வந்திருக்கும் வாச்சாத்தி, இதையும் கடந்துச் செல்லும். வாச்சாத்தியின் புதிய தலைமுறை ஒருநாள் அரசுப் பதவிகளில் ஆட்சி செலுத்தும். எங்களுக்கு அதிகார வர்க்கத்தால் நேர்ந்த அடக்குமுறையை கருத்தில் கொண்டு, இனி எந்தப் பிரிவு மக்களுக்கும் இம்மாதிரி கொடுமைகள் ஏற்படாமல் எங்கள் இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கிராமவாசி முருகன்.


வாச்சாத்தியில் கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளின் கொடிகளும் இன்று பறக்கிறது. தமிழகத்தை மாறி, மாறி ஆண்டு வரும் இரு பிரதானக் கட்சிகளும், மத்தியில் ஆளும் தேசியக் கட்சிகளும் கூட வாச்சாத்தியை கண்டுகொண்டதில்லை. அன்று ஆதரவாக வந்து நின்ற ஒரே அரசியல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் என்று ஊர்வாசிகள் தெரிவிக்கிறார்கள். அன்று மட்டுமல்ல. தொடர்ச்சியாக இந்த பத்தொன்பது ஆண்டுகளும் அக்கட்சி தங்களுக்கு நடந்த அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து இயக்கம் கட்டமைத்து, போராட்டங்கள் நடத்தி வருகிறது என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்கள்.

“அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை வெறியாட்டத்தால் பாதி பேர் சிறைக்குச் சென்றார்கள். மீதி பேர் மலைக்காடுகளுக்கு தப்பிச் சென்று பயந்து வாழ்ந்தார்கள். திரும்பவும் யாரும் இந்த ஊருக்கு குடிவந்துவிடக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. ஓடுகள் பிரிக்கப்பட்டன. வீட்டுக்குள் இருந்த பொருட்கள் களவாடப்பட்டன. எங்கள் வாழ்வாதாரமான ஆடுகள் வனம், காவல், வருவாய்த்துறையினருக்கு உணவாகியது. மாடுகளை கொண்டுபோய் சந்தையில் விற்றார்கள். குடிநீர் கிணறுகளில் ஆடுகளின் மிச்ச எச்சங்களை எறிந்து பாழ்படுத்தினார்கள். யாரும் வாழத் தகுதியற்ற ஊராக வாச்சாத்தியை மாற்றி, மொத்தமாக வனப்பகுதியாக மாற்றிவிடுவது அவர்களது திட்டமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் காரணம் மலை மீது இருந்த சந்தனமரங்கள்” என்று நினைவு கூர்கிறார் கோவிந்தன்.

பெண்களும், அவர்களோடு இருந்த குழந்தைகளும் கூட சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். கர்ப்பிணியாக இருந்த பெண்களுக்கு சிறையிலேயே பிரசவம் கூட ஆனது. இந்திராணி என்பவருக்கு ஜெயிலில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘ஜெயில்ராணி’ என்றுகூட பெயர் சூட்டினார்கள்.

ஊர் வெறிச்சோடிய நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாமலை வாச்சாத்திக்கு வருகை தந்தார். மக்கள் யாருமில்லாததை கண்ட அவர், ஊர் மத்தியில் ஆலமரத்துக்கு அருகில் செங்கொடி ஒன்றினை நட்டார். இந்தக் கொடி இருக்கும் வரை உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஊருக்கு திரும்ப வாருங்கள் என்று மலைகளுக்குப் போய் மக்களை அழைத்தார். ஒவ்வொருவராக தைரியம் பெற்று வரத் தொடங்கினார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கேட்டறிந்த அண்ணாமலை, அரூர் போலிஸில் வாச்சாத்தி மக்கள் சார்பாக முதன்முறையாக புகார் அளித்தார்.

போலிஸால் புகார் கண்டுகொள்ளப்படாத நிலையில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தியது. இதன் பிறகே விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களும், அவர்களுக்காக போராடிய இயக்கங்களும் சி.பி.ஐ. விசாரணை கோரினார்கள். சி.பி.ஐ. மிக நேர்மையாகவும், விரிவாகவும் வழக்கை கொண்டு சென்றதாக கிராமத்தவர்கள் நன்றியோடு சொல்கிறார்கள். பின்னர் கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டது. பின்னர் தர்மபுரி மாவட்ட அமர்வுநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, இப்போது தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

அண்ணாமலை செங்கொடி நட்ட காலத்திலிருந்தே, இம்மக்களுக்காக போராடி வருபவர் டில்லிபாபு. அப்போது இளைஞராக இருந்த இவர் (இப்போதும் இளைஞர்தான்), தற்போது அரூர் சட்டமன்ற உறுப்பினர். ஊருக்குள் இருக்கும் ஒவ்வொருவரும் இவருடன் நன்கு பழகியவர்களே. திண்ணை ஒன்றில் வசதியாக அமர்ந்துக் கொண்டு, மக்கள் புடைசூழ நம்மிடம் பேசினார்.

“தீர்ப்பினை எங்களுக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதவில்லை. எங்களுடைய தொடர்போராட்டங்களில், நீண்டகாலமாக சலிப்படையாமல் பங்குகொண்ட வாச்சாத்தி மக்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றி இது. நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட சிறப்பான தீர்ப்பை பெற்றிருக்கிறோம். குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் என்று வாசிக்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பு, இந்திய நீதித்துறை வரலாற்றின் புதிய சாதனை. பழங்குடியினரையும், ஒடுக்கப்பட்டோரையும் கிள்ளுக்கீரையாக பார்க்கும் அதிகார வர்க்கத்துக்கு கிடைத்திருக்கும் மரண அடி இது.

அதே நேரத்தில் நீதிமன்றம் பரிந்துரைக்கும் நிவாரணம் எங்களுக்கு பெரிய திருப்தியில்லை. பழங்குடியினர் பாதிக்கப்பட்டால் தந்தாக வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் நிவாரணம் மட்டுமே இவர்களுக்கு கிடைக்கும். அது மிக மிகக்குறைவான தொகை. மற்ற கலவரங்களிலோ, சம்பவங்களிலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவுரீதியாக பல லட்சங்களையும், கோடிகளையும் அள்ளித்தரும் தமிழக அரசு வாச்சாத்தி மக்களுக்கும் அதே பரிவினை காட்ட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார் டில்லிபாபு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து வாச்சாத்தி மக்களுக்கு நீதி கிடைத்திட பாடுபட்ட இயக்கம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம். இவ்வியக்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகமும் நிவாரணம் குறித்து பலமாக வலியுறுத்துகிறார்.

“குற்றம் நடந்தது உண்மை. மக்கள் பாதிக்கப்பட்டதும் உண்மை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு விட்டது. எனவே அரசு அனைத்துக்கும் முழு பொறுப்பேற்று, ஊரின் அத்தனை புனரமைப்பு வேலைகளையும் செய்துத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட பதினெட்டு பெண்களுக்கு நீதிமன்றம் அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதல்ல. எனவே எங்கள் போராட்டம் இதோடு முடிந்துவிடவில்லை. எனவே உரிய நிவாரணம் பெற சட்டப்படி எங்கள் போராட்டங்கள் தொடரும்” என்கிறார் சண்முகம்.


பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் என்ன ஆனார்கள்?

பதினெட்டுப் பெண்களில் ஒருவரான சக்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொல்கிறார் :

“எங்கள் மீது விழுந்த கறையை உடனடியாக துடைக்க ஊர்ப்பெரியவர்கள் முயன்றார்கள். எல்லாவற்றையும் மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை நாங்கள் துவக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். அக்கம் பக்கம் ஊர்களில் எங்களை திருமணம் செய்துக்கொள்ள தயங்கினார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் ஊர் இளைஞர்களே முன்வந்து பரந்த மனப்பான்மையோடு எங்களை கட்டிக் கொண்டார்கள். இப்போது குழந்தை, குட்டி, குடும்பம் என்று பிரச்சினையில்லாமல், பழசையெல்லாம் மறந்து வாழ்கிறோம்.

நீதிமன்றத்தில் கிடைத்திருக்கும் தீர்ப்பு எங்கள் ஊர் மீதான பழியை துடைத்தெறிந்திருக்கிறது என்கிற வகையில் எல்லோரைப் போலவும் நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம்”


வாச்சாத்தி மக்களுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், தீர்ப்பில் குற்றவாளிகள் என்று சுட்டிக் காட்டப்பட்டவர்கள் மத்தியில் குமுறல் நிலவுகிறது. வாச்சாத்தி சம்பவத்தின் போது வனகாவலராக பணியில் இருந்து, இப்போது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒருவரை அரூரில் சந்தித்தோம். பெயர் வெளியிட விரும்பாத அவர், தற்போது தர்மபுரியில் வசிக்கிறார்.

“மக்கள் மீது அத்துமீறல் நடந்தது உண்மைதான். பணியில் இருந்த பலரும் கூட இதை சகிக்க இயலாமல், மவுனசாட்சியாக மனம் ஒட்டாமல் இருந்தோம். இப்போது நீதிமன்றத்தில் ஒட்டுமொத்தமாக அந்தக் குழுவில் இருந்த எல்லோருமே குற்றவாளிகள் என்பதாக அறிவிக்கப்பட்டு இருப்பது சரியல்ல. அப்படியெனில் எங்களை இந்த குறிப்பிட்ட பணிக்காக அனுப்பிய மேலதிகாரிகள் மீதும் வழக்குத் தொடுத்து குற்றவாளிகள் என்று அறிவிக்க வேண்டியதுதானே?

என்னைப் போன்றே நிறைய நிரபராதிகள் குற்றவாளிகள் என்று சொல்லப்பட்டிருக்கிறார்கள். உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.


ரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். இங்கே நீதி நின்று, நிதானித்து செயல்பட்டிருக்கிறது. மக்கள் பாதிக்கப்பட்டதும், அவர்கள் மீது அதிகார அத்துமீறல் நடந்ததும் பத்து ஆண்டுகளுக்கு முன்பே சி.பி.ஐ. விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், தீர்ப்பு கிடைக்க இத்தனை காலமாகியிருக்கிறது.

குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க காலதாமதம் ஆவதைக்கூட சகித்துக் கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க இருபது ஆண்டுகளா? இந்திய நீதிமன்றங்களில் நீதி கிடைக்கும் என்பது வாச்சாத்தி வழக்குத் தீர்ப்பினால் உறுதியாகியிருக்கிறது. ஆனால் அது விரைவான நீதியா என்பது உடனடியாக இந்திய சட்டமன்றங்களிலும், பாராளுமன்ற அவைகளிலும் உடனடியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.


சில புள்ளி விவரங்கள்

• வாச்சாத்தி கிராமவாசிகளில் ஆண்கள் 15 பேர், குழந்தைகள் 28 பேர், பெண்கள் 90 பேர் என மொத்தம் 133 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் புனையப்பட்டது. சந்தன மரம் கடத்தியது, கடத்தலை தடுத்த அதிகாரிகள் மீது கொலைமுயற்சி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டது.

• வாச்சாத்தியில் மக்கள் மீதான வன்முறை சம்பவத்தின் போது, வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையை சேர்ந்த கூட்டுக்குழுவில் இருந்தவர்கள் மொத்தம் 269 பேர். இவர்களின் 54 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதம் இருக்கும் 215 பேரும் குற்றவாளிகள் என்று தர்மபுரி விரைவு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

• குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டவர்களில் 12 பேருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. 70 பேருக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் 2,000 ரூபாய் அபராதம்.

• குற்றவாளிகளிடம் இருந்து பெறப்படும் அபராதத்தொகை சம்பவத்தில் பாலியல் வன்முறையால் பாதிப்படைந்த 18 பெண்களுக்கு பிரித்துத் தரப்பட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


ஏன் நுழைந்தார்கள்?

வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த கூட்டுப்படை 1992 ஜூன் மாதம் ஏன் வாச்சாத்திக்குள் நுழைந்தது?

பல்வேறு கதைகள் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

சித்தேரி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது வாச்சாத்தி. அக்காலத்தில் சந்தன மரங்கள் மிகுந்திருந்த மலைத்தொடர் இது. வாச்சாத்திக்குள் நுழைந்தால்தான் சித்தேரி மலை மீது ஏறமுடியும். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வனச்சரக அலுவலர்கள் இங்கே முறைகேடாக சந்தனம் வெட்டிக் கொண்டிருந்தார்கள். இரு தரப்பும் தங்கள் எல்லைகளை மீறி கடந்துப்போய் மரம் வெட்டியதால் ஏற்பட்ட மோதலே ‘வாச்சாத்தி ரெய்டு’க்கான முக்கியமான காரணம் என்கிறார்கள் கிராமவாசிகள் சிலர். ‘கடத்தல்’ என்று தெரியவந்ததுமே, இருதரப்புக்கும் மரம் வெட்ட வாச்சாத்தி மக்கள் மறுத்ததால், அவர்கள் மீது அதிகார அடக்குமுறை ஏவப்பட்டது என்பது இவர்களின் வாதம்.

‘வீரப்பன் தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக இது நடந்தது’ என்று சில ஊடகங்களில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது. “வீரப்பனை உங்களைப் போலவே நாங்களும் செய்தித்தாள்களிலும், டிவிகளிலும்தான் பார்த்திருக்கிறோம்” என்கிறார் ஊர்க்காரர் கோவிந்தன்.

வாச்சாத்தி கிராம மக்கள் சந்தன மரத்தை சட்டவிரோதமாக வெட்டி கடத்தினார்கள் என்பது வனத்துறை அவர்கள் மீது சாட்டிய குற்றச்சாட்டு. கூலிக்காக சிலர் வெட்டியது உண்மைதான். ஆனால் கடத்தல் போன்ற நோக்கங்கள் இம்மக்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை எனப்படுகிறது. சி.பி.ஐ. விசாரணை இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. வாச்சாத்தி கிராமவாசிகளில் சிலர் சந்தனக் கடத்தல் முதலைகளுக்கு கூலிகளாக பணியாற்றினார்கள் என்று விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சந்தனக் கடத்தலை தடுக்கவே வனத்துறை தனிப்படைப்பிரிவுகளை உருவாக்கி, ‘சிறப்பு ஆபரேஷன்களை’ நடத்தியதாகவும் சி.பி.ஐ. விசாரணை தெரிவிக்கிறது. இந்த ஆபரேஷன்களில் ஒன்றாக மலைவாழ் மக்கள் மீதான தறிக்கெட்ட வன்முறையும் அமைந்துவிட்டதுதான் துரதிருஷ்டம்.



வன்முறைக்குப் பிறகு

பாலியல் வன்முறைக்கு ஆளாகி, பின்னர் சேலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர் சூரியகலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திரும்பவும் ஊருக்கு திரும்பிய கதையை சொல்கிறார்.

“முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாமலை, இப்போது அரூர் எம்.எல்.ஏ.வாக இருக்கும் டில்லிபாபு ஆகியோர் சிறைக்கு வந்து எங்களை சந்தித்தார்கள். எங்களை வெளியில் எடுக்க ஏற்பாடுகளை அவர்கள்தான் செய்தார்கள்.

ஊருக்குள் நுழைந்தபோது ‘மயான அமைதி’ என்பார்களே? அதை உணர்ந்தோம். ஊருக்குள் யாருமே இல்லை. என்னுடைய பெற்றோர் எங்கு போனார்கள் என்றே தெரியவில்லை. எந்த காலத்திலோ கைவிடப்பட்ட ஊர் மாதிரி, வெறிச்சோடி இடிபாடுகளுக்கு இடையே இருந்தது எங்கள் ஊர். எனக்கு பைத்தியமே பிடித்துவிட்டது.

எங்களுக்கான மாற்றுத்துணியை கூட மார்க்சிஸ்ட் கட்சிதான் ஏற்பாடு செய்தது. திரும்பவும் தாக்கப்படுவோமோ என்கிற அச்சத்தில் ஊர்க்காரர்கள் மொத்தமாக மலைகளுக்குச் சென்று வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். ஊர் மத்தியில் செங்கொடி நடப்பட்டு, ஒவ்வொரு மலையாகச் சென்று மக்களை அழைத்து வந்தார்கள் அண்ணாமலையும், டில்லிபாபுவும்.

எங்களுக்கு கொடுமை நடந்து பதிமூன்று நாட்களுக்குப் பிறகே வெளியுலகத்துக்கு தெரியவந்தது. அதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது”.


(நன்றி : புதிய தலைமுறை)

6 அக்டோபர், 2011

கவர்ச்சிகரமான தேநீர்ச்சட்டை ஓசியில் வேண்டுமா?

இண்டிபிளாக்கர் என்பது இந்திய வலைப்பதிவர்களை இணைக்கும் ஒரு இணைய அமைப்பு. இந்த அமைப்பு அவ்வப்போது இந்திய நகரங்களில் வலைப்பதிவர் சந்திப்புகளை நிகழ்த்துவது வழக்கம். வருடத்துக்கு ஒருமுறை சென்னையிலும் நடத்துகிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்வது வழக்கம். கடந்தாண்டு நிகழ்ந்த இண்டிபிளாக்கர் சென்னை வலைப்பதிவர் சந்திப்பை யுனிவர்செல் நிறுவனம் ஸ்பான்சர் செய்தது.

இவ்வாண்டுக்கான இண்டிபிளாக்கர் சந்திப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. டாட்டா க்ராண்டே டிகோர் வழங்கும் இண்டிபிளாக்கர் சந்திப்பு, வரும் 9, அக்டோபர் அன்று மதியம் ஒரு மணிக்கு தொடங்கி மாலை ஐந்தரை வரை நடக்கிறது.

இடம் : ஹ்யாத் ரீஜென்ஸி, 365, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.

மொத்தம் 250 வலைப்பதிவர்கள் கலந்துக் கொள்ளலாம். இந்த நிமிடம் வரை சுமார் 200 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். இன்னும் 50 பேர் வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். எனவே பதிவுக்கு முந்துவீர்.

கடந்த ஆண்டு பத்துக்கும் குறைவான தமிழ் வலைப்பதிவர்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள். இவ்வாண்டு கொஞ்சம் கூடுதலாக கலந்துக் கொள்ளும் பட்சத்தில் தமிழிலும் வலைப்பதிகிறார்கள் என்கிற செய்தியை இந்திய வலைப்பதிவர்களுக்கு கொஞ்சம் ஓங்கிச் சொல்ல முடியும்.

மறவாதீர் சந்திப்பில் ஹைடீ (உயர்ந்த தேநீர்?) வழங்கப்படும். அதுமட்டுமின்றி கவர்ச்சிகரமான தேநீர்ச் சட்டையும் இலவசம். உங்களுக்கு கார் ஓட்டத் தெரிந்திருக்கும் பட்சத்தில், ஓட்டுனர் உரிமமும் இருக்குமானால் ஒரு டாட்டா டிகோர் காரை ஓட்டிக்கொண்டு சந்திப்புக்கு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை தமிழ் வலைப்பதிவர்களே! பந்திக்கு முந்தும் நீங்கள் இந்த சந்திப்பின் பதிவுக்கும் முந்துவீர்!! இதுவரை உங்களுக்கு இண்டிபிளாக்கர்.இன்-ல் அக்கவுண்ட் இல்லையென்றாலும், உடனடியாக ஏற்படுத்தி, இச்சந்திப்புக்கான பதிவினை உறுதி செய்யலாம்.

பதிவு செய்யப்பட வேண்டிய இணையத்தள முகவரி : http://www.indiblogger.in/bloggermeet.php?id=130

4 அக்டோபர், 2011

கரெண்ட் கட்

எங்கள் ஊரில் ‘கரெண்ட் கட்’ என்று சொன்னால் அது சேதியுமல்ல, கதையுமல்ல. கடந்த மூன்று, நான்கு வருடங்களாக வழக்கமாகிப் போன விஷயம்தான். ஆனால் கொஞ்ச நாட்களாகவே எல்லை மீறிப்போய்க் கொண்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் இப்படித்தான் ஒருநாள் நள்ளிரவு, கரெண்ட் கட்.

ஆழ்ந்த உறக்கத்தில் ‘ஹன்சிகா’வோடு கனவில் டூயட் பாடிக் கொண்டிருந்தவனின் காதில் ‘ங்கொய்’யென்று ரீங்காரம், தேன் வந்து பாயுது காதினிலே மாதிரி. பாய்ந்தது தேன் அல்ல கொசு என்பதுதான் துரதிருஷ்டம். ஏதோ நினைவில் பட்டென்று என்னை நானே காதில் ஓங்கி அறைந்துக்கொள்ள, மீண்டும் ‘ங்கொய்’. இம்முறை வலியோடு இணைந்த வேறு ‘ங்கொய்’.

எரிச்சலோடு எழுந்தேன். நிஜமாகவே கண் எரிச்சல். தட்டுத் தடுமாறி செல்போனை எடுத்து, ஏதோ ஒரு பட்டனை அமுக்கி, ஸ்க்ரீனில் கிடைத்த குறைந்த ஒளியின் உதவியால், வத்திப்பெட்டி எடுத்து, மெழுகுவர்த்தி ஏற்றி...

கொசுவின் உதவியால் குழந்தைகள் சிணுங்க ஆரம்பித்தது. ஒன்று சிரித்தால், மற்றது சிரிப்பதில்லை. ஆனால் ஒன்று அழுதால், இன்னொன்றும் கட்டாயம் அழுகிறது. என்ன லாஜிக்கோ?

ஐந்து நிமிடம் விசிறிக் கொண்டிருந்தேன். ம்ஹூம். சின்னது விழித்துக் கொண்டது. இதன் தொண்டை பஞ்சாலை சங்குக்கு ஒப்பானது. கதற ஆரம்பித்தால், தெருவில் பாதி வீடுகள் விழித்துக் கொள்ளும். பெருசு இன்னும் மோசம். விழிப்பதற்கு ஐந்து நிமிடம் முன்பாகவே மெதுமெதுவாக சிணுங்கிக் கொண்டு, மிகச்சரியாக விழிக்கும்போது அழுகை உச்சஸ்தாயியை எட்டியிருக்கும். குழந்தைகளால் ஒரு தகப்பன் வாழ்வில் உச்சபட்ச மகிழ்ச்சிகளை அடைகிறான் என்பது ஒருபுறம். உச்சபட்ச தொல்லைகளையும் அதே குழந்தைகள் வாயிலாகதான் அடைகிறான் என்பது மறுபுறம்.

மின்சார அலுவலகத்துக்கு போன் செய்தேன். ‘நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் வேறொரு தொடர்பில் இருக்கிறார்’. தொடர்ச்சியாக பத்து, இருபது நிமிடத்துக்கு வேறொரு தொடர்புதான். மீண்டும், மீண்டும் முயற்சிக்க.. இப்போது அவர்கள் ரிசீவரை எடுத்து, கீழே வைத்துவிட்டிருக்க வேண்டும். எங்கேஜ்ட் டோன்.

கொசு, வியர்வை, எரிச்சல்... மிடில் கிளாஸ் மாதவன்களுக்கு இதுவே இரவுநேர மின்தடையின் பிரதான பிரச்சினை...

“ஒருநடை ஈ.பி. வரைக்கும்தான் போயிட்டு வந்துடேன்”

பேண்டையும், டீ-ஷர்ட்டையும் மாட்டிக்கொண்டு பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

அதிகாலை ஒரு மணிக்கே மின்வாரிய அலுவலகம் களை கட்டியிருந்தது. குறைந்தது நூறு பேர் குழுமியிருந்தார்கள். ஊரின் சில பகுதிகளில் ஆட்கள் குடியிருக்கிறார்களோ, இல்லையோ ‘குடியிருப்போர் நல சங்கம்’ மட்டும் எப்படியாவது முளைத்து விடுகிறது. அதற்கு ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு கவுரவ ஆலோசகர், பத்து பதிணைந்து செயற்குழு உறுப்பினர்கள்... இம்மாதிரி ஒவ்வொரு பகுதிக்கும் இரண்டு, மூன்று சங்கங்கள். இந்த சங்கங்களில் ஈடுபடுபவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை, எங்கள் ஊரின் வாக்காளர் எண்ணிக்கையை விட அதிகம்.

கூட்டத்தைப் பார்த்து பயந்துவிட்ட மின் அலுவலர், போலிஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்திருப்பார் போலிருக்கிறது. வாயிலிலேயே கூட்டத்தை மடக்கிவைத்து, கடமையில் சற்றும் தவறிடாத காவலராக ஏட்டு தலைநிமிர்ந்து நின்றார். ஊரின் சட்டம், ஒழுங்கு அவரது லத்திமுனையில் அடங்கியிருக்கிறது என்கிற பெருமிதம் அவரது முகத்தில் தெரிந்தது.

பார்ப்பதற்கு டிராஃபிக் ராமசாமி தோற்றத்தில் இருந்த சங்க சிங்கம் ஒருவர் அங்கிருந்த எஸ்.ஐ.யிடம் எகிறிக் கொண்டிருந்தார். அவரது நோக்கம் எப்படியாவது ஆபிஸுக்குள் நுழைந்துவிடுவதுதான். நுழைந்து என்ன செய்வார் என்பது அவருக்கே தெரியாது. கடுப்பாகிப் போன எஸ்.ஐ., அந்த ராமசாமியின் தோளில் கொஞ்சம் லேசாக கைவைக்க, அவர் குய்யோ முறையோ என கத்தத் தொடங்கினார். “பிரெஸ்ஸ கூப்பிடுங்கப்பா.. பிரெஸ்ஸ கூப்பிடுங்கப்பா” என்று ஜிந்தாபாத் போட்டார். ‘இவருக்கு யாராவது சோடா வாங்கியாங்க..’ டைப் சத்தம் அது.

என்னுடைய வண்டியில் ‘பிரெஸ்’ ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததைப் பார்த்த மாகானுபவர் எவரோ, ”தோ பிரஸ் வந்துட்டாரே?” என போட்டுக் கொடுக்க, என் நிலைமை தர்மசங்கடம் ஆனது.

“என்ன பிரஸ் சார்?”

நான் பணிபுரியும் பத்திரிகை பெயரை சொன்னேன்.

“ஜோதிடப் பத்திரிகையா?”

என்னை பிரஸ் என்று ஆள்காட்டிவிட்ட ஆள்காட்டியை முறைத்துக்கொண்டே “கிட்டத்தட்ட அதுமாதிரிதான்” என்றேன்.

“அப்போன்னா இவரு வேலைக்கு ஆவமாட்டாரு. தந்தி ரிப்போர்ட்டரை கூப்பிடுங்க”

“சன் டிவி இந்த அநியாயத்தை எல்லாம் படம் புடிச்சி போட மாட்டான்”

“இதுக்கெல்லாம் தினமலர்தான் செட் ஆவும்”

“யாராவது தினமலர் போன் நம்பர் இருந்தா சொல்லுங்களேன்”

ஊடகங்கள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை பெருமிதம் கொள்ளவைத்தது. ‘கோ’ ஜீவா மாதிரி நானும் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு வேடிக்கை பார்க்கலானேன்.

இதற்கிடையே மின் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த போலிஸ் படை அங்கிருந்த நாலு பேரை கழுத்தாமட்டையில் போட்டு வெளியே இழுத்துவந்தது. தோற்றத்திலேயே தெரிந்தது அவர்கள் லைன் மேன்கள் என்று.

“த்தா.. குடிச்சிட்டு உள்ளே மல்லாந்துக்கிட்டிருக்கானுங்க...” கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் குன்ஸாக அடித்துவிட்டார்.

அது உண்மைதான். முப்பது அடி தூரத்தில் அவர்கள் இருந்தாலும் ‘குப்’பென்று தூக்கியது சரக்கு வாசனை. நால்வரையும் சாராயம் கடத்தி, மாட்டியவர்கள் ரேஞ்சுக்கு முட்டிபோட்டு உட்காரவைத்து, அவர்களுக்கு பின்னால் சென்று கம்பீரமாக நின்றது காவல்துறை. காவல்துறையின் இந்த அதிரடி ரெய்டு மற்றும் நடவடிக்கை, குழுமியிருந்த கூட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘காவல்துறை மக்களின் நண்பன்’ என்கிற ஸ்லோகத்துக்கு ஏற்ப நடந்துகொண்ட எஸ்.ஐ.யை பாராட்ட வார்த்தைகள் இல்லாமல் தவித்தார்கள் மக்கள்.

“உடனே இதைப் படம் புடிச்சி கேப்டன் டிவியிலே போடணும். கேப்டன் டிவிக்கு போனை போடுறேன்” ஒரு இளைஞர் உணர்ச்சிவசப்பட்டு போனை எடுத்து, ஏதோ நம்பரை டயல் செய்துவிட்டு காதில் வைத்தார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திடீரென ஊரில் முளைவிட்ட தேமுதிக இயக்கத்தின் நிர்வாகிகளில் ஒருவராக அவர் இருக்கலாம்.

“அட நீ வேறப்பா. உங்க கேப்டனே இவனுங்களை மாதிரிதான் அவரு ஆபிஸில் கெடப்பாரு. எப்படியோ இன்னிக்கு கரெண்டு அரோகராதான்” சொல்லிவிட்டு ஒரு பெருசு நடையைக் கட்ட ஆரம்பித்தார்.

3 அக்டோபர், 2011

புள்ளி

முழுமையாக வெள்ளையாக விரிந்த மனத்திரை பரப்பில் நட்டநடுவில் அணுவளவே வளர்ந்திருந்தது கரும்புள்ளி. முன்பொரு காலம் கண்டதைக் காட்டிலும் கருமையின் அடர்த்தி குறைந்திருந்தது. அல்லது குறைந்தது போல தெரிந்தது. இருந்தாலும் அழுத்தமாகவே பதிந்திருந்தது புள்ளி. புள்ளியின் வடிவம் என்பது வட்டம்தானா அல்லது எப்போது வைக்கப்பட்டாலும் வட்டவடிவிலேயே புள்ளி அமைவது யதேச்சையானதா என்று தெரியவில்லை.

கொஞ்சம் உற்று உன்னிப்பாய் கவனித்தால் தெரியும், புள்ளி மெதுவாய் வளர்பிறை போலவே வளர்ந்து வருவதை. வளர வளர கருமையின் அடர்த்தி குறையும். பழுப்பு நிறமாகும். அனிச்சையாய் இமைமூடி மீண்டும் திறக்கும்போது பாதி திரையை பழுப்பு வண்ணம் மறைக்கும். வட்டவடிவில், ஓரங்கள் மட்டும் கூர்மையாய் இல்லாமல் வெண் திரையோடு விளிம்பில் கரைந்து மறைவதாய் பரிணாமம் பெறும்.

இப்போது திரைமுழுக்க நிறைந்திருக்கும் பழுப்பு நிறத்தை நீங்கள் எங்கேயோ கண்டிருக்கலாம். தூங்கும்போது அறையில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் சுண்டெலியின் நிறமாக இருக்கலாம். தேநீர்க்கடை வாசலில் வாலை ஆட்டும் வெள்ளையும் சாம்பலும் கலந்த நாயின் நிறமாகவும் இருக்கலாம். நினைவுபடுத்தி பார்க்க இயலாமல் மூளையெங்கும் கருந்திரையில் மஞ்சளும், பச்சையும், ரத்தச் சிவப்புமாக பூச்சி போன்ற வடிவத்தில் குறுக்கும் நெடுக்குமாய், மேலும் கீழுமாய் ஏதோ ஒரு வஸ்து நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில்.. இல்லையில்லை கோடிக்கணக்கில் ஓடிக்கொண்டேயிருக்கும்.

வெள்ளைத்திரை எப்போது பழுப்பானது, பழுப்பு எப்போது அடர்கருப்புக்கு மாறி வண்ண வண்ண பூச்சிகளாய் ஓடத்தொடங்கியது என்பது தெரியாது. ஓரிரு பூச்சிகளின் வடிவத்தை உற்றுநோக்கும்போது தெரிகிறது. இவ்வடிவத்தை இதற்கு முன்னால் கண்டிருக்கிறோம். ம்ம்ம்... நினைவுக்கு வருகிறது. தவளையின் அழுக்கான பஞ்சுப்பொதி போன்ற வெள்ளை முட்டையில் புதியதாய் பிறந்த தலைப்பிரட்டைகளின் வடிவமது. அறிவியலார் விந்துக்களில் இருக்கும் உயிரணுவும் இதே வடிவம் என்று படம் வரைந்து பாகம் குறித்திருப்பார்கள். சிறிய வாலுக்கு சற்றும் பொருந்தாத பெரியதலை, உடல் இருக்கிறதா, அல்லது தலைக்கு அடுத்ததுமே வாலா என்று யூகிக்க முடியாத வடிவம்.

தலைப்பிரட்டைகளின் இயங்கும் வேகம் மெதுவாக இயல்பாக அதிகரிக்கிறது. ஒவ்வொரு தலைப்பிரட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து குறுக்கும் நெடுக்கும், மேலும் கீழும் வேகவேகமாக இயங்க தலைப்பிரட்டை வடிவம் மாறி வண்ண ஒளிக்கீற்றுக்கள் மட்டும் திரைநெடுக ஓட, எந்த ஒரு புள்ளியிலும் கவனம் செலுத்த இயலாவண்ணம் எல்லாப் பக்கமும் ஒளிக்கீற்றுகள். பின்னணியில் இருந்த கருந்திரை எங்கே? எண்ணங்களை விட வேகமான ஒளிக்கீற்றுகள். காதடைப்பதைப் போன்று உணர்ந்தாலும் சத்தம் எதுவும், எங்கிருந்தும் வரவில்லை.

ஒளிக்கீற்றுகள் எதுவும் இப்போது குறுக்கும், நெடுக்குமாக ஓடவில்லை. ஒரே நேர்க்கோட்டில் எண் திசைகளிலும் பயணிக்கிறது. நேராக வரையப்பட்ட கோடுகளைப் போல பல வண்ணங்களில் ஒரே சீராக பல வண்ணக்கோடுகள். எந்தெந்த கோடு என்ன நிறம் என்பதை கவனிக்கும் முன்னர் கோடுகள் வளைகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வளையும் கோடுகள் முற்றிலும் வளைந்த பின்னர் வட்டநிறமாகிறது.

இப்போது சிறிதும், பெரிதுமாய் திரையை நிறைத்திருப்பது வண்ண வட்டங்கள். திரை நன்கருமையை மறந்து களங்கமில்லாத வெண்மையாகிறது. வட்டங்களோடு வட்டங்களாய் ஒவ்வொரு வட்டமும் மற்ற வட்டத்தில் இணைந்து ஒரே பெரிய வட்டமாய் மாற, வட்டத்தின் உட்புறம் முழுக்க பழுப்பு வண்ணம். பழுப்பு வண்ணத்தின் அடத்தி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க, இந்த வண்ணத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோம்? தூங்கும்போது அறையில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் சுண்டெலியின் நிறமா? தேநீர்க்கடை வாசலில் வாலை ஆட்டும் வெள்ளையும் சாம்பலும் கலந்த நாயின் நிறமா?

வட்டத்தின் சுற்றளவு குறைந்துகொண்டே போக வட்டத்தின் பழுப்புநிற வண்ணமோ தன் தன்மையை இழந்து கருப்பாகி கொண்டு வருகிறது. வட்டம் என்பது இப்போது வட்டமாக இல்லாமல் வெறும் கரும்புள்ளி. சென்ற முறை இருந்ததை காட்டிலும் கருமையின் அடர்த்தி குறைந்திருந்தது போல இருந்தாலும் அழுத்தமாகவே பதிந்திருந்தது புள்ளி.