16 ஜனவரி, 2013

மரியாவின் சவால்

அக்டோபர் 28, 2007. பதினான்கு வயது மரியா செத்துப்போனாள்.
நண்பர்களோடு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தவள் மீது கார் மோதியது. காரை ஓட்டிவந்தவன் இருபது வயது இளைஞன். கண்மண் தெரியாத அளவுக்கு குடித்திருந்தான். மரியாவோடு நடந்து வந்த நண்பர்களுக்கும் படுகாயம். மருத்துவமனையில் பல மணி நேரம் வலியோடு துடிதுடிக்க உயிருக்குப் போராடி பரிதாபமாக மரணித்தாள் மரியா.
அமெரிக்காவில் இருக்கும் மாண்டனா ஒரு குடிகார மாகாணம். அந்நாட்டிலேயே அதிக குடிகாரர்கள் வசிக்கும் மாகாணங்கள் முதல் ஐந்தில் மாண்டனாவும் இடம்பெறுகிறது. இங்கிருக்கும் பட்டே நகரில்தான் மரியா வசித்தாள். அவளுடைய அகால மரணத்தையடுத்து, குடிப்பழக்கத்துக்கு எதிராக இங்கே கிளம்பிய குரல், இன்று அமெரிக்கா முழுக்க எதிரொலிக்கிறது.
மரியாவின் மரணத்தையடுத்து அவரது தோழர்கள் இறுதி அஞ்சலி செலுத்தவும், அவரது தந்தை மெக்கார்த்தியிடம் துக்கம் விசாரிக்கவும் அவளது வீட்டில் கூடினார்கள். நியாயமாகப் பார்க்கப்போனால் மகள் இறந்த துக்கத்திலிருந்த மெக்கார்த்தி, அவளது அநியாய மரணத்துக்கு காரணமானவனை சட்டத்தின் முன் நிறுத்தி தூக்கில் போடவேண்டும் என்றுதான் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிதானமாக யோசித்தார். குடிபோதையில் கார் ஓட்டிவந்தவனை குடிநோயாளியாகதான் பார்த்தார். நோய்க்கு சிகிச்சைதான் அவசியம். தண்டனையல்ல என்று நினைத்தார்.
மரியா சவப்பெட்டியில் கிடக்க, சக மாணவியின் திடீர் மரணம் தந்த அதிர்ச்சியில் பயந்துப்போயிருந்த குழந்தைகளிடம் ஓர் உரை நிகழ்த்தினார் மெக்கார்த்தி.
“குழந்தைகளே! மரியாவின் மரணத்தோடு நம்முடைய நம்பிக்கைகள் முற்றுப்பெற்றுவிடப் போவதில்லை. இந்த அகால மரணத்தின் பின்னணியில் இருக்கும் பிரச்னைகளை நாம் பேசியாகவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். செயல்பட்டாக வேண்டிய நேரம் இது.
நான்கே நான்கு ஆண்டுகள் மட்டும் நான் சொல்வதை கேளுங்கள். உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். இந்த சவாலை வெல்பவர்களுக்கு இறுதியில் நான் பணம் தருவேன்”
மரியாவின் குரலாகவே அவரது தந்தையின் குரலை மாணவர்கள் கேட்டார்கள். அவரது சவாலில் இடம்பெற்றிருந்த விஷயங்கள் இவைதான்.

* உங்களது வயது இருபத்தி ஒன்றுக்கு கீழே இருந்தால் நீங்கள் மதுபானத்தை தொடவே கூடாது. யாரேனும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்களது வாகனத்தில் ஏறக்கூடாது.

* இருபத்தி ஒன்று வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் குடிப்பதை நான் ஆட்சேபிக்கப் போவதில்லை. அது உங்கள் தேர்வு. ஆனால் குடித்துவிட்டு கட்டாயம் வாகனம் ஓட்டக்கூடாது. நம் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக நீங்கள் திகழ வேண்டும்.

* நீங்கள் மதுபானம் விற்கும் பணியில் இருப்பவரேயானால் குழந்தைகளின் கைக்கு அது கிடைக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* நீங்கள் சட்டத்தை அமல்படுத்தும் பணியில் இருப்பவரேயானால் நமது சட்டத்தை முழுமையாக பின்பற்றி குழந்தைகளை பாதுகாக்கும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மெக்கார்த்தியால் வெளியிடப்பட்ட ‘மரியாவின் சவால்’, அவள் வயது குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் பொருந்தியது. இந்த சவால் விவரம் ஊடகங்களில் வெளியாக, அடுத்த சில நாட்களிலேயே சுற்றுவட்டார மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இச்சவாலை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தனர். மேலும் தன்னார்வலர்கள் பலரும் இணைந்து மரியாவின் சவால் குறித்த விழிப்புணர்வை நாடெங்கும் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு கொண்டுச்செல்லும் பணியில் ஈடுபட்டனர்.
மெக்கார்த்தி சொல்பேச்சு தவறாதவர். முதல் கட்டமாக சவாலை ஏற்றுக்கொண்டு வெற்றி கண்ட 140 பேருக்கு தலா ஆயிரம் டாலர் (நம்மூர் பணத்தில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய்) வழங்கினார். மரியா இறந்த விபத்தில் அவளோடு படுகாயம் அடைந்த குழந்தைகளின் பெற்றோரும் மெக்கார்த்தியோடு இப்பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த உதவித்தொகை விவரத்தை கேள்விப்பட்ட பல நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து மரியாவின் சவாலை ஏற்றுக்கொண்டு வெல்பவர்களுக்கு பணம் தர ஒப்புக் கொண்டது. அமெரிக்காவெங்கும் இப்போது பலரும் இந்தப் பணிக்கு பொருள்ரீதியான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.
பீப்பிள் பத்திரிகை மெக்கார்த்தியை நாட்டின் முக்கியமான முப்பது நம்பிக்கை நட்சத்திரங்களுள் ஒருவராய் புகழாரம் சூட்டியது. ஐம்பத்தி இரண்டு வயதாகும் மெக்கார்த்தி இப்போது அமெரிக்காவின் ஹீரோ.  2012ன் சிறந்த மனிதர்கள் என்று சி.என்.என். தொலைக்காட்சி பட்டியலிட்டிருக்கும் முதல் பத்து பேரில் மெக்கார்த்தியும் இடம்பெற்றிருக்கிறார்.
மரியாவின் சவாலை நாமும் எடுத்துக் கொள்ளலாம். http://www.mariahschallenge.com என்கிற இணையத்தள முகவரிக்கு சென்று, இச்சவாலை ஒப்புக்கொள்வதாக ஒப்பந்தம் இடவேண்டும். சவால் காலத்தில் குடி தொடர்பான எந்த குற்றச்சாட்டும் பெறாதவர்கள், சவால் காலம் முடிந்தவுடன் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். மரியாவின் சவால் தங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்று 300 வரிகளில் விளக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பவர்களை மெக்கார்த்தியும், அவரோடு இணைந்திருப்பவர்களும் நேர்முகம் காண்பார்கள். இப்போதைக்கு அமெரிக்காவில் இருக்கும் மாணவர்களுக்குதான் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்டு குழந்தைகளும் சவாலை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தெரிந்தால் மெக்கார்த்தி அதற்காக மகிழ்ச்சியடைவாரே தவிர, கூடுதல் பரிசு தரவேண்டியிருக்கிறதே என்று சோர்ந்துவிட மாட்டார்.
கடந்த சில ஆண்டுகளில் மரியாவின் சவால் நிறைய பேரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. சவாலை வென்று உதவித்தொகை பெற்ற ஜோஷ் என்கிற மாணவர் சொல்கிறார். “பார்ட்டிகளில் குடிப்பதை தவிர உருப்படியான நிறைய வேலைகள் எனக்கு இருக்கின்றன என்பதை மரியாவின் சவால் உணர்த்தியது. இப்போது இரண்டு பகுதிநேர வேலைகளை செய்து, நிறைய பணம் சம்பாதிக்கிறேன். விளையாட்டுகளிலும் ஆர்வமாக பங்கேற்கிறேன். இந்தப் பாதையில் பயணம் செய்ததால் நிறைய பேருக்கு என் மீது மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நிறைய நண்பர்களை பெற்றுத் தந்திருக்கிறது”
மாணவப் பருவத்தில் குடியைத் தொடாதவர்கள் பெரும்பாலும் பிற்பாடு அப்பழக்கத்துக்கு அடிமையாவதில்லை. மரியாவின் சவால் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை உருவாக்கித் தருவதால், அவர்களது எதிர்காலம் குடிநோயில் வீழாமல் பாதுகாப்பானதாக மாறுகிறது.
மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர் பலரும் கூட இச்சவாலை ஏற்றிருக்கிறார்கள். உதவித்தொகைக்காக அல்ல. குடிப்பது தவறு என்று குழந்தைகளுக்கு போதிக்கும் முன்பாக, தாங்கள் குடிப்பதை நிறுத்தவேண்டும் என்கிற தார்மீக உணர்வுக்காக.
“மரியாவை நான் திரும்பப் பெற முடியாது. ஆனால் எனக்கு ஏற்பட்ட இழப்பு வேறு ஒரு தந்தைக்கு ஏற்படாமல் தடுக்க முடியும்” என்கிறார் மெக்கார்த்தி.
தமிழ்நாட்டில் இப்படி ஒரு சவால் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டியது இன்றைய அவசரத்தேவை.

12 ஜனவரி, 2013

சென்னை புத்தகக் காட்சி – சில விளம்பரங்கள்


முத்து காமிக்ஸின் நாற்பதாண்டு பயணநிறைவை கொண்டாடும் வகையில் ‘never before special’ஐ கொண்டு வந்திருக்கிறது. 456 பக்கங்கள். ரூ.400/- விலை. தரமான இந்த வண்ணப் புத்தகத்தின் விலை நியாயமாகப் பார்க்கப் போனால் ஆயிரம் ரூபாயாக இருந்திருக்க வேண்டும்.

புத்தகக் காட்சியின் முதல் நாள் ஸ்பெஷல் அட்ராக்‌ஷன் முத்து காமிக்ஸ் ஸ்டால்தான். பயங்கர கூட்டம். முத்துவின் நிறுவனர் சவுந்தரபாண்டியன், ஆசிரியர் எஸ்.விஜயன், விஜயனின் மகன் என்று மூன்று தலைமுறையையும் ஒருங்கே ஸ்டாலில் காணமுடிந்தது. காமிக்ஸ் வாசகர்களோடு அவர்களது உரையாடல் நெகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கியது.

நெவர் பிஃபோர் ஸ்பெஷலைத் தவிர்த்து பழைய லயன்/முத்து இதழ்களும் இங்கே விற்பனைக்குக் கிடைக்கிறது. ஸ்டால் எண் 343.

ஸ்டால் எண் 300ல் ‘ஸ்டார் காமிக்ஸ்’ விற்பனைக்குக் கிடைக்கிறது. கேப்டன் பிரின்ஸின் பனிமண்டலக் கோட்டை இன்னமும் குறைந்த பிரதிகளே மிச்சமிருக்கின்றன. விலை ரூ.100. ஹார்ட்பவுண்ட் அட்டை, கண்ணைப் பறிக்கும் வண்ணமென்று இந்த காமிக்ஸும் பட்டாசுதான்.

இணையத்தில் பிரபலமான நண்பர் நர்சிம்மின் ‘ஒரு வெயில் நேரம்’ சிறுகதைத் தொகுப்பு பட்டாம்பூச்சி பதிப்பகத்தில் கிடைக்கும். இணையத்தில் எழுதிய சில சிறுகதைகள், இதழ்களில் வெளிவந்தவை என்று கலந்துக்கட்டி தொகுப்பாக்கி இருக்கிறார்கள். கதைகளில் ஆர்வமிருக்கும் வாசகர்கள் வாங்கலாம். நிச்சயம் ஏமாற்றாது என்பதற்கு நான் கேரண்டி. நர்சிம்மின் ‘உன்னை அழைத்துப்போக வந்தேன்’ கவிதைத் தொகுப்பும் இதே பதிப்பகம் பதிப்பித்திருக்கிறது.

கேபிள் சங்கர் எழுதிய ’கேபிளின் கதை’ நாகரத்னா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் உள்ளிட்ட நிறைய ஸ்டால்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. நம் அன்றாட வாழ்வில் ஒன்றிப்போய்விட்ட ‘கேபிள் டிவி’யின் பின்னணியை அறிந்துக்கொள்ள இந்நூல் உதவும்.

சத்ரபதி வெளியீடான ‘சின்மயி விவகாரம் : மறுபக்கம்’ ஒரு முக்கியமான நூலாக படுகிறது. பணத்திமிர் பிடித்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும், பிரபலங்களும் சாமானிய மனிதர்களை போட்டுத் தள்ளுவது ஆண்டாண்டு காலமாக நடைமுறைதான். அதை ஓர் எழுத்தாளர் தட்டிக்கேட்டு, விவகாரத்தின் முழுமையான பார்வையை ஒரு நூலாக கொண்டுவருவது எனக்குத் தெரிந்து இதுதான் முதல்முறை. “முகமற்றவர்களின் முகமாகவும் குரலற்றவர்களின் குரலாகவும் ஆன்மா மறுக்கப்பட்டவர்களின் ஆன்மாவாகவும் செயல்படுபவனே எழுத்தாளன்” என்கிறார் விமலாதித்த மாமல்லன். அவர் எழுத்தாளர்தான் என்பதை இந்நூல் நிரூபிக்கிறது. கிழக்கு, காலச்சுவடு ஸ்டால்களில் இந்நூலை வாங்கலாம்.

8 ஜனவரி, 2013

ஜென்னீ

நீதானே என் பொன்வசந்தம்படத்தில் சமந்தாவின் பேரழகையும், அபாரமான நடிப்பையும் பலரும் விதந்தோதுகிறார்கள். தினகரன் வெள்ளிமலர் தன்னுடைய நடுப்பக்கத்தை சமந்தாவுக்கு ஒதுக்கி ‘it’s a girl thing’ என்று தலைப்பிடுகிறது. காட்டாறாய் அடிக்கும் சமந்தா மழையில் அடித்துப்போன சந்தனமரங்களில் ஒருவர் வித்யூலேகா. பவுர்ணமியின் போது நட்சத்திரங்கள் ஒளிமங்கி தெரிவது இயல்புதான்.
சமந்தாவுக்கு தோழியாய் தொடக்கத்தில் ஸ்கூல் யூனிஃபார்மில், கல்லூரியில், பிற்பாடு படத்தின் இறுதிக்காட்சி வரைக்கும் இரண்டாம் நாயகியாய் கலக்கிய ஜென்னீ இவர்தான். தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வித்யூவுக்கு இதுதான் முதல் படம். படத்தின் தெலுங்கு பதிப்பிலும் இவரே சொந்தக்குரலில் நடித்திருக்கிறார்.

படம் நெடுக வரும் ஜென்னி இடைவேளைக்குப் பிறகான இரண்டாம் பாதியின் ஓபனிங் ஹீரோயின். வருண் நித்யாவுக்கு இடையேயான அபாரமான காதலுக்கு நடுவில் இவருக்கும் சந்தானத்துக்கும் திடீரென லவ் தோன்றும். விண்ணைத்தாண்டி வருவாயா த்ரிஷா பாணியில் வித்யூ நீலப்புடவையில் என்ட்ரி கொடுக்கும்போது தியேட்டரே அலறும். இவர்களது குறும்புக்காதலை க்யூட்டான பாட்டு போட்டு கவுரவப்படுத்தியிருப்பார் இளையராஜா.

றுபது ஆண்டுகளுக்கு முன்பு அடையாரில் ராமச்சந்திரன் என்றொரு நடிகர் வசித்து வந்தார். அவரது அம்மாவுக்கு உடல்நலமில்லாமல் அடிக்கடி மருத்துவமனைக்கு ராயப்பேட்டை வரவேண்டி இருந்தது. அந்த காலத்தில் அடையாருக்கும், ராயப்பேட்டைக்குமான பயணமே கூட நெடும்பயணம்தான். ஜட்கா வண்டி அல்லது ரிக்‌ஷாவில் வரவேண்டும். உடல்நலம் குன்றியிருந்த அம்மா அலைக்கழிக்கப்படுவதை விரும்பாமல் ராயப்பேட்டையிலேயே அவருக்கு வசதியாக ஒரு வீடு வாடகைக்கு தேடினார் ராமச்சந்திரன்.

லாய்ட்ஸ் சாலையில் இப்போதைய அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அருகில்- ஏ.வி.ராமன் என்பவருக்கு சொந்தமான ஒரு வீடு இருந்தது. இவர் ராஜாஜியின் நெருங்கிய நண்பர். இவரது வீடு ராமச்சந்திரனுக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆனால் சினிமாக்காரர் என்பதால் வீடு தர ஏ.வி.ராமன் மறுத்துவிட்டார். காங்கிரஸ்காரரான ராமச்சந்திரன் ராஜாஜியிடம் சிபாரிசுக்கு சென்றார். ‘சினிமாக்காரராக இருந்தாலும் சொக்கத்தங்கம்’ என்று ராஜாஜி சான்றிதழ் கொடுக்க, ராமச்சந்திரனுக்கு வீடு கிடைத்தது.

இதற்கிடையே ராமச்சந்திரன் சினிமாவில் வளர்ந்து எம்.ஜி.ஆர் ஆகிவிட்டார். ஆனாலும் அதே வீட்டில் வாடகைக்கு அண்ணன் குடும்பத்தோடு கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். எம்.ஜி.ஆரின் முதல் மனைவி சதானந்தவதி அம்மையார் இந்த வீட்டில்தான் காலமானார். போலவே எட்டாவது வள்ளலை ஈன்றெடுத்த அன்னை சத்யாவும் இங்கேதான் இயற்கையோடு இணைந்தார்.

வீட்டு உரிமையாளர் ஏ.வி.ராமனின் மகனான வழக்கறிஞர் வி.பி.ராமன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிரமாக இயங்கிவந்தார். பிற்பாடு ஈ.வி.கே.சம்பத்தோடு தமிழ் தேசியக்கட்சி கண்டவர்களில் இவரும் ஒருவர். எம்.ஜி.ஆரும் இப்போது திமுக என்பதால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள். தன் தாய் வாழ்ந்த வீடு என்பதால் அந்த வீட்டை விலைக்கு வாங்க எம்.ஜி.ஆர். விரும்பினார். வி.பி.ராமனும் பெருந்தன்மையோடு மிகக்குறைந்த விலைக்கு வீட்டை எம்.ஜி.ஆருக்கு எழுதித் தந்தார்.

எம்.ஜி.ஆர் ஆசையோடு அந்த வீட்டுக்கு ‘தாய்வீடு’ என்று பெயரிட்டார். அவரது சக தொழில் போட்டியாளரான சிவாஜியின் போக் ரோடு வீட்டுக்கு ‘அன்னை இல்லம்’ என்பது பெயர். இந்த தாய்வீட்டில்தான் பிரசித்தி பெற்ற எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் பொங்கல் விழா நடைபெறும். பிறப்பால் மலையாளி என்று சொல்லப்பட்டாலும் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தவரை கொண்டாடிய பண்டிகைகள் பொங்கலும், தமிழ்ப்புத்தாண்டும் மட்டும்தான். பொங்கல் விழாவின் போது எம்.ஜி.ஆருடைய ஸ்டண்ட் கோஷ்டியினர் நாடகம் போடுவார்கள். எம்.ஜி.ஆரது படங்களில் கொடூரமான வில்லன்களாக தோன்றும் அவர்கள் அன்று ‘நல்ல’ கேரக்டர்களில் உருக வைப்பார்கள். குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடக்கும். அன்று தாய்வீட்டுக்கு வருகை தருபவர்களுக்கு கைக்கு கிடைத்ததை எல்லாம் அள்ளி அள்ளி கொடுப்பார் எம்.ஜி.ஆர்., தாய்வீட்டு பொங்கல் விழாவுக்கு அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்ததுண்டு.

நியாயமாகப் பார்க்கப்போனால் எம்.ஜி.ஆரின் மனதுக்கு மிகவும் நெருக்கமான அந்த ‘தாய்வீடு’தான் அவரது நினைவு இல்லம் ஆகியிருக்க வேண்டும். இப்போது அந்த வீடு யாருடைய ஆளுகையில் இருக்கிறதோ தெரியவில்லை.

எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதுமே நன்றி மறவாமல் வி.பி.ராமனை தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆக்கினார்.  அவருக்கு இரண்டு மகன்கள். இளையவர் பி.எஸ்.ராமன். இவரும் 2006ல் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக பதவியேற்றார்.
மூத்தவர் மோகன்ராம். நாம் அடிக்கடி சினிமாக்களில் பார்க்கும் அதே மோகன்ராம்தான். சினிமா, டிவி நாடகங்களின் படப்பிடிப்புக்கு தன் வீட்டை தந்துவந்த இவரும் தற்செயலாக நடிகர் ஆனதாக சொல்வார்கள். படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவரை ‘மர்மதேசம்’ தொலைக்காட்சித் தொடர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாக்கியது.

தாய்வீட்டின் நிஜவாரிசான மோகன்ராமின் வாரிசுதான் நம்ம ஜென்னீ.

5 ஜனவரி, 2013

காத்தாடி

நந்தகுமாரின் போனவருடத்து டயரியிலிருந்து
காத்தாடி விடுவது சிறுவயதிலிருந்தே பிடித்தமான செயல். எட்டு வயதில் வால் வைத்த கலர் காத்தாடி. பத்து வயதில் பாம்பே ரெடிமேட் காத்தாடி. பண்ணிரெண்டு வயதில் ஃபுல்ஷீட் பாணா காத்தாடி. நூல்கண்டு முழுக்க தீரும் வரையில் பறக்க விட்டு.. எண்ணிப் பார்க்க முடியாத உயரத்தில் அமைதியாக, நிலையாக நாம் விடும் காத்தாடி பறப்பதை காணும்போது, ஒருவகையான மோனநிலையில் மனம் அமைதி கொள்ளும்.
இதில் இரண்டு பிரச்னைகள்.
ஒன்று, மாஞ்சா போடுவது. முன்பெல்லாம் ரெடிமேட் மாஞ்சா நூல்கண்டு கிடைக்காது. வெள்ளை நூல் வாங்கி, பிரத்யேகமாக மாஞ்சா தடவவேண்டும். பெருவண்டு, சிறுவண்டு என்று இருநூல் வகை. பெருவண்டு நூலில் காத்தாடி விட்டால் இடையில்தொப்பைவிழும். சிறுவண்டு ஸ்ட்ரிப்பாக இருக்கும். ஆனால் டீலுக்கு தாங்காது. மாஞ்சாநூல் இல்லாமல் காத்தாடி விடுபவன் சப்பை. அவனால்டீல்போக முடியாது. எனவே உயரவும் பறக்க மாட்டான். தன் காத்தாடிக்கு அருகில் வேறொரு காத்தாடியை பார்த்ததுமே பயந்துப்போய் தரையிறங்கிவிடுவான்.
மாஞ்சாவுக்கான கச்சாவான கலவையை தயாரிப்பது கல்யாணவேலை. தனிமனித முயற்சியில் சாத்தியமாகாது. கலர் பவுடர், வஜ்ஜிரம், நைஸ் கண்ணாடி பீஸ், இன்னபிற சமாச்சாரங்கள் போட்டு, சுண்டக் காய்ச்ச வேண்டும். காத்தாடியை பறக்கவிட்டு வெள்ளைநூலில் திக்காக மாஞ்சாவை தடவிக்கொண்டே வரவேண்டும். விரல் அறுபடாமல் மாஞ்சா போடுவது தனி கலை. எல்லோருக்கும் வராது. முழு நூல்கண்டும் முடிந்தவுடன், மாஞ்சா காய்வதற்கு கொஞ்சம் நேரமெடுக்கும். மாஞ்சா போடும்போது எவனாவது டீல் விட்டால் முடிந்தது கதை.
கை மாஞ்சா என்றொரு ரிஸ்க் இல்லாத முறை இருக்கிறது. காத்தாடி இல்லாமல் மாஞ்சா போடும் முறை. இரண்டு மரங்களுக்கு இடையே நூலை இழுத்து, இழுத்து கிட்டத்தட்ட நெசவு பாவும் வேலை போல மாஞ்சா போடும் முறை. கை மாஞ்சா போடும் பயல்களுக்கு ஏரியாவில் மரியாதையே இருக்காது.
சில டொக்குகள் ட்வைன் நூல் வாங்கி மாஞ்சா போட்டு வைத்துக் கொள்வார்கள். ட்வைன் நூலில் காத்தாடி விடுவதைப் போல கோழைத்தனம் வேறில்லை. ரொம்ப உயரப்போக முடியாது என்பதோடு டீலும் போடமுடியாது. டீல் போட்டால் ட்வைன் நூல் அறவே அறாது. அதே நேரம் அறுக்கவும் செய்யாது.
இரண்டு, காற்று. காலை பத்து மணிக்கு மேல் கிரவுண்டில் காற்று அடிப்பது கிட்டத்தட்ட நின்றுவிடும். மரங்களில் இலைகள் அசையவே அசையாது. அந்த நேரத்தில் காத்தாடி விட நினைப்பவனை விட பெரிய துரதிருஷ்டசாலி வேறு யாரும் இருந்துவிட முடியாது. காத்தாடிடேக் ஆஃப்ஆகாது. யாராவது காத்தாடியை பிடித்து தூக்கிவிட்டு உதவினால் மட்டுமே, தட்டி தட்டி மேலே ஏற்ற முடியும். அதற்கும் கூட சூத்திரநூல் நேர்த்தியாக போடப்பட்டிருக்க வேண்டும். எல்லா காத்தாடிக்கும் சூத்திரம் நறுக்காக அமையாது. அவ்வாறு அமையப்பெறாத காத்தாடிகள் எழும்புவது நல்ல காற்று அடிக்கும்போது மட்டுமே சாத்தியம்.
இம்மாதிரி நேரங்களில் காத்தாடியை கிளப்ப சில நேரங்களில் இரண்டு மணி நேரம்கூட ஆகும். எத்தனையோ முறை வியர்வை தெறிக்க ஓடி ஓடி கிளப்பியிருக்கிறேன். அவ்வாறு கிளப்ப முடியாத சந்தர்ப்பங்களில் சில முறை வெறுத்துப் போய் காத்தாடியை கிழித்துப் போட்டுவிடுவேன். வேறு புது காத்தாடி வாங்க அப்பாவிடம் காசு கேட்டு கெஞ்சுவேன்.
புது காத்தாடி வாங்கி முதல்முறையாக பறக்க விட்டதுமேடீல்போட மனம் வராது. அப்படியும் யாராவது டீலுக்கு வர்றியா என்று கேட்டுக்கொண்டே இருப்பான். கேட்டுக்கொண்டே இருப்பான் என்றால் வாய்திறந்து கேட்கமாட்டான். அவனுடைய காத்தாடியும், நம்முடைய காத்தாடியும் வானத்தில் சமிக்ஞை மூலமாக பேசிக்கொள்ளும். டீலுக்கு ரெடி என்றதுமேசர்ரென்று சப்தம் எழுப்பிக்கொண்டே அவனுடைய காத்தாடி நம் காத்தாடிக்கு அருகில் வரும். நாமும் அவனை நெருங்குவோம். டீல் விழுந்ததுமே நம் கைவிரல்கள் ஒரு அதிர்வை உணரும். வேகமாக நூல் விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். க்ரிப் இல்லாமல் காத்தாடி அப்படியே வானில் நழுவி விழுவது மாதிரி தெரியும். நூல்கண்டு முடிந்துவிட்டாலோ அல்லது நூல்விடுவதில் போதிய திறமையில்லாமல் இருந்தாலோ டீலில் தோற்றுவிடுவோம். நூல் அறுந்து, நம் காத்தாடி நான்கைந்து கிலோ மீட்டர் தாண்டி எங்காவது போய் விழும். சாமர்த்தியமிருப்பவர்கள் ஓடிப்போய் எடுத்துக்கொள்ளலாம். இல்லாதவர்கள் புது நூல்கண்டும், புது காத்தாடியும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். நான் பல டீல்களில் வென்றிருக்கிறேன். போலவே பல டீல்களில் தோற்றுமிருக்கிறேன். டீலில் தோற்ற நேரங்களில் அறுந்து, வீழும் என்னுடைய காத்தாடிகள் என்ன ஆனது என்று இன்றுவரை தெரியவில்லை. நான் காத்தாடி பிடிக்க ஓடியதுமில்லை.

02-01-2013 தினகடிதம் நாளிதழிலிருந்து

மயிலாப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார் (34). சோழிங்கநல்லூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு புனிதா (27) என்கிற மனைவியும், சம்யுக்தா (2) என்கிற அழகான பெண் குழந்தையும் உண்டு. இவர் குடும்பத்தோடு புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடினார். மதியத்துக்கு மேல் தன் மனைவியையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டு பிரியாணி வாங்கிக்கொண்டு, புளியந்தோப்பில் இருக்கும் மாமியார் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
சென்ட்ரல் தாண்டி வால்டாக்ஸ் ரோட்டில் சென்றுக் கொண்டிருந்தபோது, திடீரென பறந்துவந்த பட்டம் ஒன்றின் மாஞ்சா நூல் சிக்கி பைக் விபத்துக்குள்ளானது. நந்தகுமாரின் மனைவியும், குழந்தையும் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

4 ஜனவரி, 2013

‘ராஜா’ங்கம்

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை ‘நீதானே என் பொன்வசந்தம்’. காதல், காதலர்கள், ஈகோ என்று ஏற்கனவே பார்த்து சலித்த கதையை ஃப்ரெஷ்ஷாக கவுதம் இயக்கியிருக்கிறார். ஆனாலும் இசைதான் படத்தை திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டுகிறது.
முப்பத்தியெட்டு வருடங்களாக ஒரு இசையமைப்பாளர் எப்படி அதே consistencyயை தொடர்ச்சியாக maintain செய்ய முடியும் என்று எப்படி யோசித்தாலும் புரிபடவில்லை. அதனால்தான் இளையராஜா இசைஞானி. இதுவரை வந்த இளையராஜா படங்களிலேயே சிறைச்சாலையும், ரமணாவும்தான் பின்னணியிசையில் தலைசிறந்தது, அந்த சாதனையை உடைக்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீ.எ.பொ.வ மிகச்சுலபமாக உடைத்தெறிந்திருக்கிறது. எங்கே டிரம்ஸ் அடிக்க வேண்டும், எங்கே கிடாரை மீட்டவேண்டும், எங்கே வயலினை முழங்கவேண்டும் என்பது மட்டுமில்லாமல் எங்கே மவுனிக்க வேண்டும் என்கிற வித்தையை கற்றுத் தேர்ந்திருப்பதில்தான் ராஜாவின் இமாலய வெற்றி அடங்கியிருக்கிறது. இயக்குனர் எடுத்திருக்கும் காட்சிகளின் வீரியத்தை அல்லது பலகீனத்தை முழுமையாக உணர்ந்து, எங்கே மேம்படுத்த வேண்டும், எங்கே சரிக்கட்ட வேண்டும் என இளையராஜா அளவுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் உலகில் வேறு யாரும் இருந்துவிட முடியாது.
பாடல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கிட்டத்தட்ட முக்கா மணி நேரத்துக்கு ராஜா பாட்டுதான். பல பாடல்களை கவுதம் திரும்பத் திரும்ப ரிபீட் அடித்திருப்பதால் எப்படியும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீ.எ.பொ.வ பாடல்களாலேயே நிறைந்திருக்கிறது. ஒரு சர்வதேசத்தரம் வாய்ந்த வீடியோ இசை ஆல்பத்தை காணும் அனுபவம் இதனாலேயே படம் பார்க்கும்போது கிடைக்கிறது. இந்த அற்புதமான, அழகான அனுபவத்தை உள்வாங்கிக் கொள்ள முடியாதவர்களை பார்த்து அனுதாபம்தான் கொள்ள முடிகிறது.
நீ.எ.பொ.வ.வின் எட்டு பாடல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எட்டு அதிசயங்கள். ‘காற்றை கொஞ்சம் நிற்கச் சொன்னேன்’ என்று கார்த்திக் பாடும்போது, லேசாக காற்றடித்து உங்கள் முன்னந்தலை முடி அசைந்து நிற்கும் உணர்வு உங்களுக்கு ஏற்படவில்லையெனில், உங்கள் காதில் ஏதோ கோளாறு என்று பொருள். ‘சாய்ந்து சாய்ந்து உனை பார்க்கும்போது’ என யுவன்ஷங்கர் ராஜா உருகும்போது தேன்வந்து பாயுது காதினிலே. அப்போது காதைத் தொட்டுப் பாருங்கள். நிஜமாகவே தேனின் பிசுபிசுப்பு. ‘என்னோடு வா வா’வுக்கு உங்கள் கால்கள் தாளம் போடவில்லையெனில், சைக்காலஜிக்கலாகவே எதனாலோ நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளலாம். ‘பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா’, ’சற்று முன்பு பார்த்த’, ’முதல் முறை’ என்று, படத்தின் எல்லாப் பாடல்களிலுமே ராஜா நிகழ்த்தியிருக்கும் சாதனை அசாத்தியமானது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராஜாவின் இசையை மட்டுமே பிரதானமாக நம்பி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ராஜாவின் நண்பர்கள் அவருடைய இசையில் படமெடுத்திருக்கிறார்கள். ராஜாவே சொந்தமாக படம் எடுத்திருக்கிறார். ஆனால் இதுவரை எந்த இயக்குனரும் தன்னுடைய ஈகோவை சுத்தமாக விட்டுக் கொடுத்து, அவருக்கு தந்திராத மிகப்பெரிய இடத்தை, கவுரவத்தை நீ.எ.பொ.வ.வில் கவுதம் தந்திருக்கிறார். நாடி, நரம்பெல்லாம் ராஜாவின் இசைவெறி ஏறிப்போன ஒரு ரசிகனால் மட்டுமே இப்படிப்பட்ட படத்தை கொடுக்க முடியும். படத்தின் டைட்டிலே ராஜாவுக்கு செய்யப்பட்டிருக்கும் tributeதான் எனும்போது, மேலும் விளக்கி விளங்கிக்கொள்ள ஏதுமில்லை.
once again thank you gautham!