3 ஜூன், 2013

வரலாறே வாழ்க

அஞ்சுகம்மாள் ஈன்ற திருமகன்
அசுரர்குல தலைவன்
ஆரிய கொட்டம்
அடக்கப் பிறந்தவன்
அண்ணாவின் தம்பி
அன்புத்தம்பிகளுக்கு அண்ணன்
திராவிட தங்கம்
தினவெடுத்த சிங்கம்
கன்னித் தமிழ்த்தாய்க்கு
செம்மொழி ஆடை போர்த்தியவன்
ஏழைகளின் ஏந்தல்
அவன் தமிழ் காந்தல்
சாதி இழிவுக்கு
சாவுமணி அடிப்பவன்
உழைப்பாளரின் உடன்பிறப்பே
வஞ்சகத்தை வீழ்த்தி
வசவாளவர் வயிறெரிய
வரலாறே இன்னுமொரு நூற்றாண்டு
வாழ்க... வாழ்க...

29 மே, 2013

எழுத்து புரம்

அன்புள்ள யுகி,

தற்போது சமூகத்தில் எழுத்தாளனின் இடமென்ன. எழுத்தாளனை சாதாமக்கள் இழிவுபடுத்தும் நிலை இருப்பதாக இணையத்தில் எழுத்தாளர்கள் குற்றம் சாட்டுகிறார்களே. சாதா தோசைக்கும், மசாலா தோசைக்கும் இந்த சாதாமக்களுக்கு வித்தியாசம் தெரியாதா. உங்களுடைய நேர் அல்லது எதிர்வினை என்ன?

அன்புடன்
சரவணர்
அன்புள்ள சரவணர்,

1. இணையத்தில் நான் ஏதேனும் கில்மா படங்களை போட்டு ஒப்பேற்றி நூற்றி சொச்சம் லைக்குகளையும், முப்பது நாப்பது கமெண்டுகளையும் வாங்குவதைத் தவிர்த்து வேறெதுவும் செய்வதில்லை. அதற்கான நேரமும் எனக்கு இல்லை. தலா ஒரு ஆபாசத் தொடரும், ஆபாச நாவலும் எழுதிவிட்டதாலேயே என்னை எழுத்தாளன் என்று இந்த சமூகம் நம்புகிறது. மற்றவர்கள் அரசுப் பேருந்துகளோடும், டிவிஎஸ் எக்ஸெல்லோடும், சைக்கிளோடும் மாரடித்துக் கொண்டிருக்கையில் நான் ஒன் பிஃப்டி சிசி பைக்கில் உல்லாசமாக உலாவருகிறேன். என்னுடைய அலுவலகத்தில் ஏசி இருக்கிறது. எனக்கு தனி கேபின் அளித்திருக்கிறார்கள். சன்னலை திறந்தால் மாமரத்தில் காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. அணில்கள் ஓடி விளையாடுகின்றன. பேருந்து நிறுத்தத்தில் சுடிதார் அணிந்த பெண்கள் நிற்கிறார்கள். டிராஃபிக்கில் வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்கின்றன. பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுகிறார்கள். சினிமா தியேட்டரில் படம் ஓட்டுகிறார்கள். என்னுடைய வாழ்க்கை இன்பங்களால் ஆனது. காலையில் இட்லி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் ‘ஜெலுசில்’ வாங்க மருந்துக்கடைக்கு போகும் வாழ்க்கை அல்ல.

2. எழுத்தாளன் என்பதால் எனக்கு எல்லோரும் தரும் மரியாதையை மற்ற எழுத்தாளர்களுக்கும் தருகிறார்கள் என்று பொதுமைப்படுத்த விரும்பவில்லை. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்ததுமே அங்கிருக்கும் எழுத்தாளர்களை போய் முதலில் சந்தித்தார் சித்தராமையா. ஆனால் இங்கோ ஜெயலலிதா ஆளுநரை போய்தான் பார்த்தார். நீங்களே கூட சிறுவயதில் சரவணனாக இருந்தீர்கள். வளர்ந்ததும் சரவணர் ஆகிவிட்டீர்கள். ஆனால் எழுத்தாளனோ பிறந்ததில் இருந்தே எழுத்தாளனாகதான் இருக்கிறான். அவனை எழுத்தாளர் என்று சொல்வதிலோ, எழுதுவதிலோ கூட இச்சமூகத்துக்கு தயக்கம் இருக்கிறது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், மாலன், பாலகுமாரன், மனுஷ்யபுத்திரன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன், விஜயமகேந்திரன் என்று எழுத்தாளர்களை ‘ன்’ விகுதியிலேயே பதிப்பாளர்கள் பதிப்பிக்கிறார்கள். வாசகர்கள் வாசிக்கிறார்கள். ‘ர்’ போட்டால் குறைந்தாபோய் விடுவார்கள். ஆனால் ஐரோப்பாவில் பாருங்கள். டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி, சார்த்தர், சாக்ரடிஸ், காரல்மார்க்ஸ் என்று மரியாதையோடு விளிக்கிறார்கள். அங்கேயெல்லாம் ‘ன்’ விகுதியில் ஒரு எழுத்தாளனைகூட நீங்கள் பார்த்திருக்க முடியாது. இந்த அற்பத்தனத்தை, அராஜகத்தை எதிர்க்காவிட்டால் நான் எழுத்தாளனே அல்ல.

3. இரக்கமற்ற இந்த இழிநிலையை புறக்கணிப்பதோடு எதிர்க்கவும் செய்கிறேன். இணையத்தில் கொட்டப்படுவதெல்லாம் குப்பை என்பதாலேயே என்னுடைய குப்பையையும் அங்கேதான் கொட்டவேண்டியிருக்கிறது. இதை நீங்கள் சமரசம் என்று பார்க்கக்கூடாது. நிர்ப்பந்தம் என்றும் பார்க்கலாம். வேறு வழியில்லை என்றும் நினைக்கலாம். எனக்கும் மின்னஞ்சலில் வாசகர் கடிதங்கள் வரவேண்டாமா. என்னுடைய ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களுக்கும் ‘லைக்’ ‘கமெண்ட்’ வேண்டாமா. நான் எழுத்தாளன் என்பதாலேயே வெகுசாதாரணர்களுக்கு கிடைக்கும் இச்சலுகைகளை இழக்க வேண்டுமா?

4. பாண்டிச்சேரி பெரியவர் பற்றி நிறையபேர் பேசுவதையும், எழுதுவதையும் இணையத்தில் காண்கிறேன். இதையெல்லாம் காண எனக்கு நேரமில்லை என்றாலும் கூட காண்கிறேன். பாண்டிச்சேரி மதுவுக்கு பெயர் பெற்றது. அவ்வப்போது நானும் அங்கு சென்று மது அருந்துவதுண்டு. எனக்கு அங்கே கிடைக்கும் மதுவகையும், சாதாரணரான பாண்டிச்சேரி பெரியவருக்கு கிடைக்கக்கூடிய மதுவகையும் ஒரே வகை என்பதை அறிவுலகம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். குறைந்தபட்சம் சைட் டிஷ்ஷிலாவது வித்தியாசம் வேண்டாமா. நான் எழுத்தாளனாக இருந்து எனக்கு என்ன பிரயோசனம்?

5. யாரோ ஒருவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்மிடம் எலக்ட்ரிஷியன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, எங்கள் வீட்டிலும் கொஞ்சம் எலக்ட்ரிக்கல் வேலை இருக்கிறது என்று கூறி அவரது உதவியை நாடலாம். பிளம்பருக்கும் இதுவே பொருந்தும். கொஞ்சம் விரிவாக சிந்தித்தோமானால் டிவி மெக்கானிக், கொத்தனார், மேஸ்திரி ஆகியோரை சந்திக்கும்போதும் கூட இதே சாத்தியம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒரு எழுத்தாளனை நீங்கள் சந்திக்கும்போது கற்பூர ஆரத்தி காட்டி, மணி அடித்து, பூஜை செய்ய வேண்டாமா. கிரேக்கத்தில் சாக்ரடிஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோருக்கு அதைதானே செய்தார்கள். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு சாக்ரடிஸுக்கு கடைசியில் விஷக்கோப்பை கொடுத்ததை மட்டும் இன்னும் தமிழர்கள் மறக்காமல் இருப்பது ஏன்? ஓர் ஈழத்தமிழரோ, மலேசியத்தமிழரோ, தென்னாப்பிரிக்கத் தமிழரோ, சீனத்தமிழரோ, ரஷ்யத்தமிழரோ, செவ்வாய்க்கிரகத் தமிழரோ இம்மாதிரி நடந்துகொண்டு நான் பார்த்ததில்லை. தமிழகத் தமிழர்தான் இப்படி நடந்துக் கொள்கிறார்கள். இவர்கள் பூமியில்தான் இருக்கிறார்களா. அல்லது பூலோகத்தில் இருக்கிறார்களா என்று எனக்கு ஐயம் ஏற்படுகிறது.

6. நான் எழுதுவதால்தான் என்னை எழுத்தாளன் என்கிறார்கள். நீங்கள் வாசிப்பதால்தான் உங்களை வாசகன் என்கிறார்கள். மகத்தான விஷயங்கள் எழுத்தாளனுக்கு சொந்தமானது. அதை மற்றவர்கள் பட்டா போட்டுக்கொண்டு கொண்டாட ஆசைப்படக்கூடாது.

யு

24 மே, 2013

அட்லீஸ்ட் வெறும் ஆண்

எப்போதோ படித்த பாலகுமாரனின் சிறுகதை ஒன்று. ஒரு சினிமா பத்திரிகையாளன். ஒரு சூப்பர் ஸ்டார் நடிகரைப் பற்றி எப்பவுமே மோசமாக கிசுகிசு எழுதுவான். குறிப்பாக சகநடிகைகளோடு அவரை இணைத்து வக்கிரமாக கற்பனையிலேயே கதைகளாக எழுதித்தள்ளுவான். ஊரிலிருந்து பத்திரிகையாளனின் டீனேஜ் மச்சினிச்சி லீவுக்கு வந்திருப்பாள். மாமா பெரிய சினிமா பத்திரிகையாளர் என்பதால் ஷூட்டிங் பார்க்கவேண்டுமென்று அடம்பிடிப்பாள். ஸ்கூட்டரில் இவன் ஸ்டுடியோவுக்கு அழைத்துச் செல்வான்.

படப்பிடிப்புத் தளத்தில் திடீரென்று மச்சினிச்சி வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஓரமாக உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிடுவாள். என்ன ஏதுவென்று புரியாமல் இவன் குழம்பிப்போய் கிடப்பான். அது அந்த சூப்பர் ஸ்டார் நடிக்கும் படப்பிடிப்பு. உடனடியாக நிலைமையை உணர்ந்த நடிகர் தன் மனைவியை அழைத்து, அந்தப் பெண்ணை கவனிக்கச் சொல்லி, பத்திரமாக காரில் அனுப்பி வைப்பார். இவரைப் பற்றிப் போய் இப்படியெல்லாம் கிசுகிசு எழுதினோமே என்று பத்திரிகையாளன் நொந்துப்போவதாக கதை முடியும்.

திடீரென்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பிக்கும் மச்சினிச்சியைப் பார்த்து கை, கால் உதற பத்திரிகையாளன் திணறி முழிக்கும் கட்டத்தை பாலா அவருக்கேயுரிய வர்ணனைகளோடு அசத்தியிருப்பார்.

அக்கம் பக்கம் வீடுகளிலோ, உறவினர் வீடுகளிலோ நாம் தூக்கி கொஞ்சி வளர்த்த குழந்தைகள் திடீரென்று ‘பெரிய மனுஷி’ ஆகிவிட்டதென்று தகவல் வரும். பாலகுமாரனின் கதையில் வரும் நாயகனை மாதிரி பதட்டம் அடைவோம். “அது குழந்தைதானே. பண்ணெண்டு, பதிமூணு வயசிருக்குமா. அதைப்போயி இப்படி சொல்றாங்களே?” என்று குழம்பிவிடுவோம். நீ தூக்கி வளர்த்த குழந்தையே பெரிய மனுஷின்னா, உனக்கு ஏழு கழுதை வயசாவுதுடா தடிமாடு என்று சப்கான்சியஸாக நம்முடைய மூளை சிந்திக்கத் தொடங்கிவிடுவதால்தான் இந்த பதட்டம்.

அடுத்த முறை அந்த குழந்தையை பார்க்கும்போது ஒருமாதிரி மருண்ட பார்வையோடு நம்மை வெறிப்பாள். பொருள் புரிபடமுடியாத பார்வை அது. அப்பார்வையில் தெரிவது அச்சமா, நாணமா, பாசமா ஒன்றுமே புரியாது. நாமெல்லாம் அட்லீஸ்ட் வெறும் ஆண்கள்தானே. ஆண்களின் ஜீன்களிலேயே இவன் அசட்டு அம்மாஞ்சி என்று விதியை அறிவியல் எழுதிவிடுகிறது. மயிலாக வளரும் பெண்குழந்தை பருவமடைதலின் மூலம் மானாக பரிணமிக்கிறாள். மாறாக தேவாங்கு மாதிரி வளரும் ஆண்குழந்தையோ பருவத்தில் குரங்காக மாறுகிறான்.

‘தோனி’ திரைப்படத்தில் ஒரு காட்சி. குழந்தை என்று நினைத்துக் கொண்டிருக்கும் தன்னுடைய மகள் திடீரென்று பெரிய மனுஷியாகிவிடுவாள். பிரகாஷ்ராஜ் தடதடத்துவிடுவார். அவருக்கு மனைவி இல்லை. அக்கம் பக்கம் பெண்கள் சேர்ந்து சடங்கு செய்வார்கள். புடவை கட்டிய தன் குழந்தையைப் பார்த்து நெகிழ்ச்சியான மனநிலையில் இருப்பார். இவரைப் பார்த்து குழந்தை வெட்கப்படும். முட்டைக் கண்களை உருட்டி, உருட்டி முழிப்பார்.

சமீபத்தில் இதேமாதிரியான மனநிலையோடு நண்பர் ஒருவரை சந்தித்தோம். பொதுவாக நண்பரது முகத்தில் எந்த உணர்ச்சியையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. எப்போதுமே ஒரேமாதிரி முகபாவம்தான். அன்று ஒருமாதிரியான சோர்வான பூரிப்பை அவர் முகத்தில் காணமுடிந்தது. “தங்கச்சி பொண்ணு வயசுக்கு வந்துட்டா பாஸ். செம்ம செலவு” வெயிட்டாக தாய்மாமன் சீர் செய்துவிட்டு வந்திருந்தவர், செலவைப்பற்றி கவலைப்பட்டதைப் போல கொஞ்சம் சோகமாக சொல்லும் தொனியில் பேசினாலும், குரலின் ஊடாக மறைந்துத் தொக்கி நின்றது ஓர் உற்சாகம், பெருமை. பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் அவர் பார்த்து பார்த்து வளர்த்த குழந்தை அது. அன்று அவரது கண்களில் ஒரு தாய் தெரிந்தாள். ‘தாய்’மாமன் என்று இந்த உறவுக்கு சும்மாவா பெயர் வைத்திருக்கிறார்கள். ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் இருந்தாலும் இந்தியக் குடும்ப வாழ்க்கைமுறை இதுபோன்ற சில சுவாரஸ்யங்களால்தான் இனிக்கிறது.

23 மே, 2013

5000 கோடி - கொடி கட்டிப் பறக்கிறது தண்ணீர் வியாபாரம்!

“மக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கும் தொழில் பத்தாயிரம் கோடி ரூபாய் வருமானம் தரும் தொழில் எனக் கேள்விப்படுகிறேன். பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் இதில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கின்றன, தண்ணீர் சேமிப்புதான் நாம் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்சினை. 2025ம் ஆண்டில் தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கும் தொழில் பெட்ரோலிய நிறுவனங்களைப் போல (கோடிகளில் புரளும்) ஆகிவிட்டால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை ” 

- இளைஞர்களிடம் உரையாற்றும் போது டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (ஜூலை 17, 2010)
“வாரத்துக்கு சராசரியாக ஐந்து கேன் வாங்குகிறோம். குடிப்பதற்கும், சமைப்பதற்கும் கேன் தண்ணீர்தான்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த குடும்பத்தலைவி தேவிகண்ணன். இரண்டு குழந்தைகள், கணவன், மனைவி என்று நாலு பேர் கொண்ட குடும்பம். ஒரு கேன் தண்ணீர் இருபத்தி ஐந்து ரூபாயிலிருந்து, முப்பத்தி ஐந்து ரூபாய் வரை சென்னையில் விற்கிறது. எனவே ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் பட்ஜெட்டில் வாரத்துக்கு குறைந்தபட்சம் நூற்றி இருபத்தைந்து ரூபாயாவது குடிநீருக்காக மட்டுமே செலவழிக்கப்படுகிறது. மாதத்துக்கு ஐநூறு ரூபாய். வருடத்துக்கு ஆறாயிரம் ரூபாய்.

வேகமாக வளர்கிறது 

’பாக் செய்யப்பட்ட குடி தண்ணீர் இன்று இந்தியாவில் வளர்ந்துவரும் மிகப்பெரிய தொழில் கடந்தாண்டு இந்தியாவில்,அதன் விற்பனை 30 ஆயிரம் கோடி ரூபாய். தமிழகத்தில் மட்டும், 5,000 கோடி. ஆண்டுக்கு 40 முதல் 50 சதவிகிதம் வரை இத்தொழில் வளர்ந்துக்கொண்டே செல்கிறது. 1999ல் ஆண்டொன்றுக்கு 1,5 பில்லியன் லிட்டர் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் பருகப்பட்டு வந்தது. 2004ல் அது மூன்று மடங்கிற்கும் மேலாக, அதாவது 5 பில்லியன் லிட்டருக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

முன்பு வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் பயணிகள் மட்டும் இந்த தண்ணீர் பாட்டில்களை வாங்கிப் பருகி வந்தார்கள். பின் நகர்ப்புற மேல்தட்டு வர்க்கம் அவர்களைப் பின்பற்ற ஆரம்பித்தது. இன்று கிராமப்புற மக்கள் கூட தண்ணீர் பாட்டிலுக்கோ, கேனுக்கோ மாறிவிட்டார்கள். ஏழை அடித்தள மக்களின் பர்சைக் குறி வைத்து பிளாஸ்டிக் பைகளில் தண்ணீர் வருகிறது.

பெட்டிக்கடைகளில் கூட கையடக்கமான பிளாஸ்டிக் சாஷே, 100மிலி பாட்டில் 330 மிலி பாட்டில், 500 மிலி பாட்டில், ஒரு லிட்டர், இரண்டு லிட்டர், 20 லிட்டர், 50 லிட்டர் கேன்கள் எனப் பல அளவுகளில், பல வடிவங்களில், தண்ணீர் சந்தைக்கு வருகின்றன. (இது தவிர டாங்கர் லாரிகளில் மொத்தமாக விற்கப்படும் தண்ணீரைப் பற்றி நாம் இங்கு பேசவில்லை) பெட்டிக்கடை, பான் ஷாப்பிலிருந்து, பஸ் ஸ்டாண்டு, ரயில் நிலையம், உணவுவிடுதி, பலசரக்குக்கடை, பெரிய மால் என அங்கிங்கிங்கெனாதபடி, எங்கும் கொடி கட்டிப் பறக்கிறது இந்த வியாபாரம். உலகில் பாட்டில் தண்ணீரை அதிகம் பயன்படுத்தும் முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று

வியாபாரம் இப்படிச் சக்கை போடு போடுவதால், இந்தத் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் தொழிற்சாலைகளும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றன. பெய்லி என்ற பிராண்டில் தண்ணீர் விற்கும் பார்லே அக்ரோ நிறுவனம் 29 தொழிலகங்களை நடத்தி வந்தது. அண்மையில் அதை இரட்டிப்பாக, அதாவது அறுபது தொழிலகங்களாக அதிகரித்துள்ளது. தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கும் தொழிலகங்கள் அதிகம் தென் மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தென் மாநிலங்களிலும் தமிழ்நாட்டில்தான் அதிகம். இந்தியாவில் உள்ள 1200 தொழிலகங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 600 தொழிலகங்கள் இயங்கி வருகின்றன.

கொள்ளை லாபம் 


இத்தனை பெரிய அளவில் பலர் இந்தத் தொழிலில் இறங்கியிருப்பதற்குக் காரணம் தேவை மாத்திரம் அல்ல. லாபமும் ஒரு காரணம். உதாரணத்திற்கு ஜெய்பூர் அருகில் உள்ள காலாதாரா என்ற இடத்தில் கோகோ கோலா நடத்திவரும் தொழிலகத்தை எடுத்துக் கொள்வோம். நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. அது 2000-02ம் ஆண்டில் தண்ணீருக்கு செலவிட்ட தொகை வெறும் 5000ரூபாய். 2003ம் ஆண்டில் செலுத்திய தொகை 24,246 ரூபாய். இந்தத் தொகையும் அது சுத்தப்படுத்தும் போது மீந்துவிடும் கழிவுகளை வெளியேற்றியதற்காக மாசுக் கட்டுப்பாரியத்திற்குச் செலுத்திய கட்டணம். தண்ணீருக்கு அது ஏதும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.அதனால் பதினைந்து ரூபாய் விற்கும் ஒரு கின்லே பாட்டிலில் உள்ள தண்ணீருக்கு அதற்காகும் செலவு 0.02-0.03 பைசாக்கள் மட்டுமே.

காசு கொழிக்கிறது என்று மூக்கில் வேர்த்ததுமே களமிறங்கிவிட்டன பன்னாட்டு நிறுவனங்கள் . கோகோ கோலா, பெப்சி, நெஸ்லே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், டாடா, பார்லே கிங் ஃபிஷர் போன்ற பெரிய இந்தியக் கார்ப்பரேட்கள், சிறிய அளவில் இயங்கும் உள்ளூர் நிறுவனக்கள் என மூன்று வகையான நிறுவனங்கள் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. இருநூறுக்கும் மேற்பட்ட பெரிய ‘பிராண்ட்’கள் இப்போது சந்தையில் இருக்கின்றன.

ஏன் இந்த நிலைமை? 

சுத்தமான குடிநீர் என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதி மன்றம் 2000ம் ஆண்டு டிசம்பர் முதல்வாரம் தீர்ப்பளித்திருக்கிறது. இது நம்முடைய உரிமை மட்டுமல்ல, தன்னுடைய குடிமக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவது அரசின் கடமை. ஆனால் அந்தக் கடமையில் நம் அரசுகள் தவறிவிட்டன. தினமும் 1600 இந்தியர்கள் குடிநீர் தொடர்பான நோய்களால் மரணமடைகிறார்கள். குடிநீரால் நோய் பரவும் என்கிற மக்களின் அச்சம்தான் தண்ணீர் வர்த்தகமயமாகிக் கொண்டிருப்பதற்கு முதன்மையான காரணம்.

“ஒருமுறை என்னுடைய இரண்டு குழந்தைகளும் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது மருத்துவர், குடிநீரால்தான் பிரச்சினை என்றார். எனவேதான் குழாய்த்தண்ணீரை பயன்படுத்துவதை தவிர்த்து கேன் வாட்டர் வாங்க ஆரம்பித்தோம்” என்கிறார் தேவிகண்ணன். இவரைப்போலதான் அனைவருமே பாக்கெட், பாட்டில் மற்றும் கேனில் அடைக்கப்பட்டு வரும் தண்ணீர் பாதுகாப்பானது என்று கருதுகிறார்கள்.

ஆனால் அது உண்மைதானா? அகமதாபாத்தில் உள்ள Consumer Education and Research Society (CERS), என்ற ஒரு நுகர்வோர் அமைப்பு சந்தையில் உள்ள 13 முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளை எடுத்து வேதியில் மற்றும் நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தியது. 13 பிராண்டுகளில் 10 பிராண்டுகள் தரமானவை அல்ல எனத் தெரியவந்தது . சென்னையில் உள்ள மருத்துவர்களின் கருத்தும் பாதுகாப்பானவை அல்ல என்பதாகத்தான் இருக்கிறது.

தரத்துக்கு உத்திரவாதமா

குடிநீரைப் பாட்டிலில் அடைக்கும் தொழில் குறித்த சட்டங்கள் இந்தியாவில் தெளிவாக இல்லை. தண்ணீர் எந்த முறையில் சுத்தப்படுத்தப்படுகிறது, சுத்தப்படுத்துவதற்கு என்னென்ன வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, என்ன அளவில் பயன்படுத்தப்படுகின்றன போன்ற தகவல்களை அறிந்து கொள்ள நுகர்வோருக்கு உரிமை உண்டு. ஆனால் பல பிராண்ட்களில் அது தெளிவாகக் குறிப்பிடப்படுவதில்லை. பாக் செய்து விற்கப்படும் தண்ணீருக்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஐ.எஸ்.ஐ. முத்திரை அத்தியாவசியமானது. தொழிற்சாலையை தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ஆராய்ந்து, தயார் செய்யும் தண்ணீரை சாம்பிள் எடுத்து ஆராய்வார்கள். அரசின் தரக்கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே ஐ.எஸ்.ஐ. வழங்கப்படும்.

தண்ணீர் பேக்கேஜிங் செய்யும் ஒவ்வொரு தொழிற்சாலையில் ஓர் ஆய்வுக்கூடம் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு வேதியியல் நிபுணராலோ அல்லது மைக்ரோ பயாலஜிஸ்ட்டாலோ அது நடத்தப்பட வேண்டும். தயாராகும் தண்ணீரின் தரம் அங்கே சோதிக்கப்பட வேண்டும். தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அங்கே திடீர் விசிட் அடித்து சோதிப்பார்கள். தர அளவுகளில் ஏதேனும் குறைபாடு இருப்பது தெரியவந்தால் ஐ.எஸ்.ஐ. முத்திரை திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும். ஆலையை மூடுவதற்கும் கூட அரசுக்கு அதிகாரம் உண்டு.

“இம்மாதிரியான கட்டுப்பாடுகள் அவசியம்தான்” என்கிறார் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள, அம்பத்தூர் எச்2ஓ ஏஜென்ஸி நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயப்பிரகாஷ்.

“நல்ல தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வின் பேரில் தரம் குறித்த நம்பிக்கையோடுதான் மக்கள் எங்களிடம் தண்ணீர் வாங்குகிறார்கள். அது சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறதா, நம் அரசின் தர அளவுகோல்களை எட்டியிருக்கிறதா என்பதெல்லாம் மக்களுக்கு தெரியப்போவதில்லை. ஆனால் அவர்களது நம்பிக்கையை மெய்ப்பிக்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது” என்கிறார்.

புற்றீசலாய் வளர்ந்துவரும் சிறு சிறு தண்ணீர் தயாரிப்பு தொழிற்கூடங்கள் அரசின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இஷ்டத்துக்கும் தண்ணீரை விற்று வருகிறார்கள். நிலத்தடி நீரை வரைமுறையின்றி உறிஞ்சி போதுமான நெறிமுறைகளை பின்பற்றாமல் அப்படியே விற்று வருகிறார்கள்.

தீர்வு? 

முதலில் அரசு இப்பிரச்சினையை தீவிரமாக அணுகவேண்டும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவேண்டியது அரசின் கடமை. தண்ணீரில் குளோரின் கலந்து குழாய் வழியாக சப்ளை செய்வது என்ற வழக்கமான நடைமுறைக்கு வெளியேயும் அது சிந்திக்க வேண்டும்

மெட்ரோ வாட்டர், குடிநீர் வடிகால் வாரியம் போன்ற அமைப்புக்கள் தண்ணீரைப் பாக் செய்து குறைந்த விலையில் விற்பதைப் பற்றி யோசிக்கலாம். வெளி மார்க்கெட்டில் இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்கும் தண்ணீரை அரசு பத்து, பனிரெண்டு ரூபாய்க்கு தருமேயானால் மக்கள் அதை வரவேற்கவே செய்வார்கள் ஆவின் பால் போல, அரசு வீடுதோறும் இந்த பாக்கேஜ்ட் வாட்டரை விற்க முன்வந்தால் அது மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பது மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்களை, கார்ப்ரேட் அரசர்களை, ஒரு கட்டுப்பாட்டில் வைக்கும்.

முடிச்சூர் கிராம ஊராட்சி தானே ஒரு சுத்திகரிப்பு ஆலையை நிறுவி, நீரை சுத்திகரித்து தன் ஊர் மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் வழங்குகிறது. தமிழ்நாடு அரசே ஒவ்வொரு ஊராட்சிக்கும் நிதி ஒதுக்கி மற்ற ஊராட்சிகளிலும் இதை மிகச்சுலபமாக செய்ய முடியும்.

தடையின்றிச் சாராயம் கிடைக்கச் செய்ய முடியும் போது தரமான தண்ணீர் தரமுடியாதா?


எக்ஸ்ட்ரா மேட்டர்  1 :

ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலின் உள்ளடக்கச் செலவு...
மூடி : 25 பைசா
பாட்டில் : ரூ 1.50 முதல் ரூ. 2.50
நீர் சுத்திகரிப்பு : 10 பைசா முதல் 25 பைசா
லேபிள் : 15 பைசா முதல் 50 பைசா
அட்டைப்பெட்டி : 50 பைசா
போக்குவரத்து : 10 பைசா முதல் 25 பைசா
மற்றவை : 25 பைசா

மொத்தச் செலவு : ரூ.2.85 முதல் 4.25 வரை
(லேபர், மார்க்கெட்டிங் செலவுகள் மற்றும் வரி தவிர்த்து)

சந்தையில் நாம் வாங்குவது : ரூ. 10 முதல்

(Source : Centre for Science and Environment தரும் தகவல்களிலிருந்து பல்வேறு இடங்களில் திரட்டியது. இது தோராயமான தொகை. இடத்துக்கு இடம் பல்வேறு காரணங்களால் ஓரளவுக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ வேறுபடலாம்)


எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :

சுத்திகரிக்கப்பட்ட கேன் தண்ணீர் பாதுகாப்பானதா? பொதுநல மருத்துவர் டாக்டர் ஜே.பாரத்

சில நிறுவனங்கள் நீரை சுத்தப்படுத்துவதற்கு கெமிக்கல்களை பயன்படுத்துகிறார்கள். நீரை சுத்திகரித்த பிறகு இவற்றை முறையாக நீக்குவதில்லை. இதுபோன்ற நீரை தொடர்ந்து பயன்படுத்தினால் இந்த வேதிப் பொருட்கள் உடலிலேயே படிந்து சிறுநீரக மற்றும் நரம்புகள் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தவிர, வைரஸ், பாக்டீரியா, ஸ்போர்ஸ் ( நுண்ணுயிரிகள் அவற்றிற்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் தங்களைச் சுற்றி ஒரு ஒரு கூட்டை (spores) ஏற்படுத்தி அதனுள் இருந்து கொள்ளும். சாதகமான சூழ்ல் இருந்தால் அதை உடைத்துக் கொண்டு வெளியில் வரும்). போன்ற நுண்ணுயிரிகள் முறையாக நீக்கப்பட்டுள்ளதா என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. இதனால் தொற்று நோய்கள் பாதிப்பும் வரலாம்.

ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து வரப்படும் தரமான நிறுவனங்கள் விற்பனை செய்யும் நீரை பயன்படுத்தலாம். 100 சதவீதம் பாதுகாப்பான நீர் என்றால் அது பாதுகாப்பான நிலையில் இருக்கும் போர்வெல் நீர்தான். மழை நீர் பூமிக்கடியில் செல்ல செல்ல அதில் உள்ள எல்லா கிருமிகளும் அழிந்து சுத்தமான நீராகிவிடும். நிலத்தடி நீர் மாசடையாமல் இருந்தால அதைவிட பாதுகாப்பான நீர் நாம் பயன்படுத்த வேறு எதுவும் இல்லை. கேன் தண்ணீரை கொதி வைத்து பயன்படுத்தினால் நல்லதா டாக்டர் என்று கேட்பார்கள். நாம் அதிகபட்சமாக 100 டிகிரிதான் கொதிக்க வைக்க முடியும். 150 டிகிரி கொதிநிலையிலும் உயிர் வாழும் நுண்ணுயிரிகள் நீரில் உண்டு.

(நன்றி : புதிய தலைமுறை)

20 மே, 2013

யார் அந்த முகேஷ்?


உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீடு ஒன்று. இந்தியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் நூற்றுக்கு எழுபத்தாறு படங்களில் புகையிலை பயன்பாடு இடம்பெறுகிறது. நம் நாட்டில் புகைப்பழக்கத்துக்கு பலியாகும் குழந்தைகளில் ஐம்பத்தி இரண்டு சதவிகிதம் பேர், திரைப்படங்களின் தாக்கத்தாலேயே அதை பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். இந்திய சுகாதார அமைச்சகத்துக்கு பெரும் தலைவலியாகி விட்ட பிரச்சினை இது.

2005ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார். நடிக, நடிகையர் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டுமென்று, அமைச்சரவைக் கூட்டங்களில் போராடத் தொடங்கினார். “ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை கோடி பேர், இந்திப் படங்களை மட்டும் பார்க்கிறார்கள். புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்கும் பட்சத்தில், பல லட்சம் பேர் இப்பாழும் பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க முடியும்” என்று வலியுறுத்தினார். புகைக்காட்சிகளுக்கு அரசு தடை விதிக்க முடிவெடுத்ததை அடுத்து, திரையுலகம் பொங்கியெழுந்தது. ஒரு பாத்திரம் புகை பிடிப்பதையோ, குடிப்பதையோ காட்டுவது காட்சிகளின் நம்பகத்தன்மைக்காகதானே தவிர, அப்பழக்கத்தை பார்வையாளர்களுக்கு ‘ஃபேண்டஸி’ ஆக்கிக்காட்டும் நோக்கத்துடன் அல்ல என்று வாதாடினார்கள். வேண்டுமானால் அம்மாதிரி காட்சிகள் வரும்போது எச்சரிக்கையாக ‘புகைப்பிடிக்கும் பழக்கம் உடல்நலத்துக்கு தீங்கானது’ என்கிற பிரச்சார வாசகத்தை இடம்பெறச் செய்கிறோம். படத்தின் ஆரம்பத்திலும், இறுதியிலும் புகைக்கு எதிரான வாசகங்களை ‘ஸ்லைட்’ ஆக காட்டுகிறோம் என்று பேச்சுவார்த்தை நடத்த தொடங்கினார்கள்.
                                                 end
சுகாதாரத்துறை அமைச்சகம் தடை விதித்தாலும் கூட படங்களில் புகை பிடிக்கும், குடிக்கும் காட்சிகள் வராமலில்லை. புகையிலை தயாரிப்பு நிறுவனங்களின் பின்னணி லாபி அத்தகைய செல்வாக்கு கொண்டதாக இருக்கிறது. தடை என்று அறிவித்து விட்டார்களே தவிர, அதை முழுமையாக கண்காணிக்க ஓர் ஏற்பாட்டை அரசு செய்யவில்லை. ஊழல்மயப்பட்ட நம் அரசு சாதனங்களுடைய மெகா சைஸ் ஓட்டைகளை அடைக்காமல், உருப்படியாக கொலை கூட செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம்.

சில சினிமாக்காரர்களும், புகை நிறுவனங்களும் கடுமையாக எதிர்த்தாலும் கூட எதிர்பாராவிதமாக நம் மக்களிடையே, இந்த தடை பெரும் வரவேற்பைப் பெற்றது. விவேக் ஓபராய், ஊர்மிளா மடோண்ட்கர் போன்ற கலைஞர்கள் புகைப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களை தாங்கள் நடிக்கும் படங்கள் வாயிலாக செய்ய முன்வந்தார்கள். இதுகுறித்த விழிப்புணர்வு துண்டுப்படங்களிலும் நடித்தார்கள் (சமீபத்தில் வெளியாகிய கோ, கோவா, கான் திரைப்படத்தில் சாயிஃப் அலிகான் படம் தொடங்குவதற்கு முன்பாக புகைப்பழக்கத்தின் தீமைகளை இரண்டு நிமிடங்களுக்கு உரையாற்றுகிறார்).

sabanaazmi
சபனா ஆஸ்மி போன்ற முற்போக்கு இயக்குனர்கள் இத்தடை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று வாதிட்டார்கள். “சினிமா என்பது வாழ்வை பிரதிபலிப்பது. நிஜவாழ்க்கையில் புகைப்பழக்கம் கொண்டவர்கள் இருக்கும் பட்சத்தில், அவர்கள் சினிமாவிலும் இடம்பெறுவதுதானே நியாயம். புகைப்பிடிப்பவரோ, குடிப்பவரோதான் கதைக்கு தேவையென்றால், அக்காட்சிகளை வேறு எப்படி எடுக்க முடியும்” என்று கேட்டார்கள். இவ்வளவு அக்கறை இருக்கும் அரசாங்கம், நாடு முழுக்க புகைப்பொருட்கள் தயாரிக்கவோ, விற்கவோ தடை விதிக்க வேண்டும். அதைவிட்டு சினிமாக்காரர்களை நோண்டிக்கொண்டிருக்கக் கூடாது என்கிற சினிமாக்காரர்களின் வாதத்திலும், நியாயம் இருக்கவே செய்கிறது. அரசின் தடையை எதிர்த்து சிலர் நீதிமன்றங்களுக்கும் சென்றார்கள்.  ஒரு வழக்கின் தீர்ப்பில் இத்தடை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்பதுமாதிரி டெல்லி உயர்நீதிமன்றமும் கருத்து தெரிவித்தது. இவ்வாறாக, நாளாக நாளாக நாட்டுமக்களின் நலன் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் முயற்சித்த முயற்சிகள் வலுவிழந்து விழலுக்கு இறைத்த நீரானது.


ஆனால் உலக சுகாதார நிறுவனம் வளரும் நாடுகளை தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டே இருந்தது. இந்தியாவில் ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து ஐநூறு பேர் புகையிலைப் பழக்கத்தால் மட்டுமே மரணமடைகிறார்கள். இருபத்தைந்து கோடி பேர் இந்தியாவில் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று அலாரம் அடித்துக்கொண்டே இருந்தது. தர்மசங்கடத்துக்கு உள்ளான அரசாங்கம் இம்முறை தடை என்றெல்லாம் முயற்சிக்காமல், சினிமாக்காரர்களுக்கு கொஞ்சம் தொந்தரவாவது கொடுக்கலாமா என்று யோசித்தது.
                               530x230 copy                                  
போன முறை போல இல்லாமல் இம்முறை சென்சார் போர்ட் வாயிலாக பிரச்சினையை அணுகியது. படத்தில் ஏதேனும் புகைப்பிடிக்கும், குடிக்கும் காட்சிகள் வரும் பட்சத்தில், அக்காட்சி ஏன் முக்கியம் என்று தயாரிப்பாளரோ, இயக்குனரோ விளக்கம் அளித்தாக வேண்டும் என்று கெடுபிடி விதிக்கப்பட்டது. சம்பந்தமேயில்லாமல் இம்மாதிரி காட்சிகள் இடம்பெற்றால் ‘யூ’ சான்றிதழ் வழங்கமுடியாது என்றும் தணிக்கைத்துறை எகிற, இம்முறை சினிமாக்காரர்கள் கொஞ்சம் அடக்கியே வாசிக்க ஆரம்பித்தார்கள். புகைபிடிக்கும் காட்சி இருந்தால், அதை சமப்படுத்தும் வகையில் படத்தின் தொடக்கத்திலும், இடைவேளையிலும் புகைக்கு எதிரான பிரச்சாரத்தை நுழைத்துவிடுகிறோம் என்று சென்சார் போர்டை தாஜா செய்தார்கள்.
                                              
இப்போது திரையரங்குகளில் படம் தொடங்கும்போதும், இடைவேளையின் போதும் ‘முகேஷ்’ தோன்றுவதன் வரலாறு இதுதான். இன்று பாரதப் பிரதமர் மன்மோகன்சிங்கை விட முகேஷ் இந்தியாவில் பிரபலம். ஏதேனும் சினிமா தியேட்டர்களில் இந்த விழிப்புணர்வு விளம்பரங்களை வெட்டி விட்டு படம் திரையிட்டால், அத்திரையரங்கின் ‘லைசென்ஸ்’ கூட திரும்பப்பெறப்படும்.

lungs
‘புகைப்பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கானது’ என்று கட்டைக்குரலில் தொடங்கும் தொடர் விளம்பரங்கள் தொந்தரவாக இருக்கிறது என்று ரசிகர்கள் பலர் கருதினாலும், நாடு முழுக்க இந்த முயற்சிக்கு நல்ல பலன் இருப்பதாகவே தகவல். இந்தியாவில் பதினாறு மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு, அந்தந்த மொழிப்படங்களின் தொடக்கத்திலும், இடைவேளையும் இவை ஒளிபரப்பப்படுகின்றன. சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் புகையிலைப் பழக்கம் கொண்டிருப்பவர்களில் அறுபத்தி மூன்று சதவிகிதம் பேர் இந்த விளம்பரங்களை முழுமையாக நினைவுபடுத்தி சொல்லும் அளவுக்கு பார்த்திருக்கிறார்கள். அவர்களில் எழுபத்தைந்து சதவிகிதம் பேர், இந்த விளம்பரத்தின் தாக்கத்தால் குற்றவுணர்வு கொண்டிருக்கிறார்கள். இப்பழக்கத்திலிருந்து விரைவில் விடுபடவேண்டுமென்று விரும்புவதாகவும் தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட புகையிலை எதிர்ப்பு விளம்பரத் தொடர்களில், அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக இது அமைந்திருக்கிறது.


இந்த விளம்பரப் படத்தின் நாயகன் முகேஷ் ஹரானே, மகாராஷ்டிராவின் புசாவல் என்கிற ஊரைச் சேர்ந்தவர். குட்கா பழக்கத்தால் இளம் வயதிலேயே வாய்புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக மும்பை டாடா மெமோரியல் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விழிப்புணர்வு விளம்பரப் படங்களுக்கு முழுமனதோடு ஒப்புதல் அளித்து நடித்தார் முகேஷ். படம் எடுக்கப்பட்டு சில ஆண்டுகளிலேயே சிகிச்சை பலனின்றி, அநியாயமாக இருபத்திநான்கே வயதில் மரணமும் அடைந்துவிட்டார்.

tobacco
பத்திரிகை, ரேடியோ, விளம்பரப் பலகைகள், டிவி என்று பல்வேறு வடிவங்களில் பல ஆண்டுகளாக வந்துக்கொண்டிருக்கும் முகேஷின் விளம்பரம் சமீபமாகதான் திரைப்படங்களிலும் இடம்பெறுகிறது. “மும்பை சாலை ஹோர்டிங்குகளில் முகேஷை பார்ப்பது கடுமையான மனவலியை ஏற்படுத்துகிறது” என்கிறார் அவரது தம்பி மங்கேஷ். ஆனாலும் இது முகேஷின் முடிவு என்பதால், அதை ஆட்சேபிக்க குடும்பத்தினர் விரும்பவில்லை. விளம்பரங்களில் முகேஷை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தாலும், இதற்காக காசு எதையும்கூட கோரவில்லை. “முகேஷின் நிலைமை வேறு யாருக்கும் வராமல் இருந்தாலே போதும்” என்கிறார் கூலித்தொழிலாளியான அவரது அப்பா சங்கர்ராவ்.


தன்னுடைய தம்பி மங்கேஷை அவுரங்காபாத்துக்கு அனுப்பி படிக்க வைத்தது முகேஷ்தான். தம்பியின் படிப்புக்காகவே கடுமையாக வேலை பார்த்து, காசு சம்பாதிக்க தொடங்கியிருந்தார். முகேஷின் இழப்பு பொருளாதாரரீதியாகவும், அந்த குடும்பத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. இறந்தும்கூட மற்றவர்களுக்கு பயன்படும் வாழ்க்கையைதான் வாழ்ந்திருக்கிறார் முகேஷ். ஆனால், அவரது குடும்பம்தான் பாவம்.
                                     end1
(நன்றி : cinemobita.com)