16 ஜூன், 2014

How old are you?

‘How old are you?’

மலையாளத்தில் மஞ்சுவாரியரின் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக கேரளாவெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம். நடுத்தர வயதை எட்டிவிட்ட மத்தியவர்க்க பெண் ஒருவர் கணவரின் வேலை, குழந்தையின் கல்வி காரணமாக அயர்லாந்துக்கு இடம்பெயர முயற்சிக்கிறார். அங்கே வேலை கிடைக்காவிட்டால் பொருளாதாரரீதியாக சமாளிக்க முடியாது. ஒவ்வொரு முறை வேலைக்கு முயற்சிக்கும்போதும் அவர் எதிர்கொள்ளும் கேள்வி இதுதான். ‘முப்பத்தியாறு’ என்று வயதை சொன்னதுமே எல்லா நேர்முகத் தேர்வுகளிலும் திருப்பி அனுப்பப்படுகிறார். இதனால் தன்னம்பிக்கை குலைந்து, மனவுளைச்சலுக்கு உள்ளாகி அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் படத்தின் கதை.

Life is stranger than cinema.
விஜயவாடாவில் பிறந்த பாலாமணிக்கு பதினாறு வயதில் திருமணம் ஆனது. அப்போது பத்தாம் வகுப்புதான் முடித்திருந்தார். மேற்கொண்டு படிக்க ஆசை. இருந்தாலும் இல்லற வாழ்க்கை அனுமதிக்கவில்லை. ஓய்வு நேரத்தில் டைப்ரைட்டிங் பழகத் தொடங்கினார். இதற்கிடையே ஒரு பெண், ஒரு ஆண் என்று இரண்டு குழந்தைகள் பிறந்துவிட இல்லற ஜோதியில் முற்றிலுமாக ஐக்கியமானார்.

கணவர் ராஜனுக்கு மத்திய அரசின் செய்தித்துறையில் ‘கிளார்க்’ பணி. அன்பானவர். அதிர்ந்துகூட பேசமாட்டார். சொற்ப வருமானம்தான். இருந்தாலும் உலகின் ஒட்டுமொத்த சந்தோஷங்களையும் அள்ளித்தந்தது வாழ்க்கை. குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது, கணவருக்கு ‘லஞ்ச்’ தயாரிப்பது என்று எல்லா குடும்பத் தலைவிகளையும் மாதிரியே பாலாமணியும் எப்போதும் பிஸி. வார இறுதிகள் சினிமா, டிராமா என்று மகிழ்ச்சியாக குடும்பத்தோடு கழிந்தது.

பெண் வளர்ந்து எம்.சி.ஏ., முடித்து நல்ல வேலையில் சேர்ந்தார். கல்யாணம் முடிந்தது. பையன் பி.டெக்., படித்துவிட்டு அயல்நாட்டில் எம்.பி.ஏ., படிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். கல்யாணக் கடன், பையனின் கல்விச்செலவு என்று ஏகத்துக்கும் பொருளாதாரம் நெருக்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ராஜன், ஹார்ட் அட்டாக்கில் காலம் ஆனார்.

முப்பத்தைந்து ஆண்டுகால மகிழ்ச்சியை ஒரே நாளில் தொலைத்தார் பாலாமணி. கணவரின் கண்கள் வழியாக உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென பார்வை பறிபோனது போல ஆனது. கணவர் வாங்கியிருந்த கடன்களின் சுமை வேறு தனியாக கழுத்தை நெறித்தது. ‘பென்ஷன்’ வரவும் தாமதமானது. பொருளாதாரம் மட்டுமல்ல. தன்னுடைய தனிப்பட்ட சோகத்தில் இருந்து மீளவும் அவருக்கு வாழ்க்கையில் செகண்ட் இன்னிங்ஸ் தேவைப்பட்டது. வேலைக்கு போகலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் நாற்பத்தி ஒன்பது வயது பெண்ணுக்கு யார் வேலை தருவார்?

நான்கு சுவர்களுக்கு நடுவில் முடங்கிப் போயிருந்தவர் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தார். பேனா எடுத்து எழுதத் தொடங்கினார்.

“அய்யா. நான் இப்போது விதவை. என்னுடைய கணவர் மத்திய அரசுப்பணியில் இருந்து திடீரென காலமாகி விட்டார். பொருளாதாரத்துக்காக மட்டுமல்ல. நான் மீளவும், மீதியிருக்கும் என்னுடைய வாழ்வை மகிழ்ச்சியாக கடத்தவும் எனக்கு உடனடியாக ஒரு வேலை தேவை. கருணை அடிப்படையில் கொடுத்து உதவுங்கள்”

ஒரு கடிதம் ஆந்திர அரசுக்கு. மற்றொன்று மத்திய அரசில் கணவர் பணிபுரிந்துவந்த அமைச்சகத்துக்கு. மூன்றாவது கடிதம் இந்திய ஜனாதிபதிக்கு. மனுக்கள் கிணற்றில் போட்ட கல்லானது. பட்ட காலிலேயே படும். கெட்ட குடியே கெடும். கணவரின் நினைவிலேயே சோகத்தோடு நாட்களை கழித்து வந்தவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு கையும், காலும் செயலிழந்தது.

அந்த நேரத்தில்தான் அந்த கடிதம் வந்தது. ஜனாதிபதி மாளிகை, பாலாமணிக்கு உதவுமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு பரிந்துரை செய்தது தொடர்பான அத்தாட்சிக் கடிதம். பாலாமணியின் உடலும், உள்ளமும் மீண்டும் சுறுசுறுப்பானது. வேலை தொடர்பாக விவரம் கேட்க டெல்லிக்கு அவரே கிளம்பினார். தெலுங்கு தவிர்த்து வேறு மொழிகள் எதுவும் அவருக்கு தெரியாது. மகளின் உதவியோடு டெல்லிக்கு வந்தவர் யார் யாரையோ பார்த்து, பேசி கருணை அடிப்படையில் வேலை வாங்கிவிட்டார். சென்னையில் பணிபுரிய வேண்டும். நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனின் பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோவில் வேலை.

வேலைக்கு சேருவதற்கு முன்பாக இன்னொரு பிரச்சினை. அவரது சாதி சான்றிதழ். மாநில அரசு கொடுத்திருந்த சான்றிதழ், மத்திய அரசின் அளவுகோல்களில் இல்லை. மீண்டும் அலைச்சல். இருந்தாலும் வேலை கிடைத்துவிட்டது என்கிற உணர்வில் சுறுசுறுப்பாக அலைந்து திரிந்து எல்லாவற்றையும் சரிசெய்தார்.

அண்டை மாநிலம். அந்நியச் சூழல். புது மொழி. பழக்கமற்ற பணி. பாலாமணி சோர்ந்துவிடவில்லை. அதுவரை பிள்ளைகளின் கம்ப்யூட்டரில் ‘கேம்’ ஆடிய அனுபவம் மட்டுமே அவருக்கு உண்டு. மிக விரைவாகவே வேலையை கற்றுக் கொண்டார். கூட பணிபுரிபவர்கள் எல்லாரும் வயதில் குறைந்தவர்கள். அதனால் என்ன, வேலையில் அவர்கள்தானே சீனியர்கள்? கவுரவம் பார்க்காமல் ஒவ்வொரு சந்தேகமாக கேட்டு தெளிந்துக் கொண்டார்.

வேலைக்கு சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. கணவர் வாங்கிய கடன்களை பெரும்பாலும் அடைத்துவிட்டார். இப்போது தமிழையும், ஆங்கிலத்தையும் நன்கு புரிந்துக் கொள்கிறார். கொச்சைத்தமிழில் பேசுகிறார். சென்னை கோடம்பாக்கத்தில் தனி வீடு எடுத்து தங்கியிருக்கிறார். பேரம் பேசி காய்கறி வாங்குகிறார். கணவரை இழந்த இரண்டு நாத்தனார்களும் அவ்வப்போது வருகிறார்கள். விடுப்பு நாட்களில் அவர்களோடு லூட்டி. விடுமுறையோடு கூடிய பயணப்படி (LTC) அப்ளை செய்து, அவர்களோடு ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா போய்விட்டு சமீபத்தில்தான் திரும்பினார். இது ‘சிங்கிள் விமன் ஏரியா’. கணவரை இழந்துவிட்டால் குழந்தைகளை சார்ந்துதான் ஒரு பெண் வாழவேண்டும் என்கிற சமூகவிதியை அனாயசமாக உடைத்தெறிந்து சாதித்திருக்கிறார் பாலாமணி.

“வாழ்க்கையை வண்ணமயமாக வாழவேண்டும் என்று எனக்கு ஆசை. என் கணவர் இருந்தபோது அப்படிதான் என்னை வாழவைத்தார். பளிச்சென்று அலங்கரித்துக் கொள்ள வேண்டும். ஊர் சுற்ற வேண்டும். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கணவரின் மரணத்துக்கு பிறகு திடீரென தடைபட்ட இந்த சுழற்சியை, இப்போது மீண்டும் பணி கிடைத்தபிறகு நானே தொடர்கிறேன்” என்கிறார்.
‘ஆண்ட்டி’ என்று சக ஊழியர்கள் யாரும் இவருக்கு சலுகைகள் எதுவும் தருவதில்லை. பணியில் தப்பு செய்தால், எல்லாரும் வாங்குவது மாதிரி இவரும் திட்டு வாங்குகிறார். இதுமாதிரி மற்றவர்கள் தன்னை இயல்பாக நடத்துவதைதான் பாலாமணியும் விரும்புகிறார்.

“செய்தித்துறையின் செல்லம் அவர். ஏதாவது அவரிடம் வேலை வாங்க வேண்டுமென்றால் ‘ஐஸ்க்ரீம்’ வாங்கிக் கொடுத்து தாஜா செய்வோம். ஐம்பது வயதில் பணிக்கு சேர்ந்தார் என்பதால், அந்த வயதுக்கேயுரிய சில பலகீனங்களும் அவருக்கு உண்டு. ஆனால், பெண்கள் மேம்பாட்டுக்காக பிரச்சாரம் செய்யும் நாங்களே வயதை காரணம் காட்டி ஒரு பெண்ணை நிராகரித்திருக்க முடியாது. மற்றவர்களை காட்டிலும் அரசுக்கு கூடுதலாக சமூகப் பொறுப்பு இருக்கிறதில்லையா?” என்கிறார் அவரது மேலதிகாரியான கீதா இளங்கோவன்.

ஓய்வெடுக்க வேண்டிய வயதில் ஒரு குடும்பத்தலைவி வேலைக்கு சேர்ந்து பணியாற்றுவது குறித்து விமர்சனமும் இருக்கிறது. இந்த வயதில் இவருக்கு மத்திய அரசு பணி கொடுத்திருப்பதால், வேலையில்லாத ஏதோ ஒரு இளைஞன் காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறான் என்றும் சிலர் விசனப்படுகிறார்கள்.

“அப்படியெல்லாம் தர்க்கம் பேசி எங்களை முடக்கிவிட முடியாது தம்பி. ஐம்பது வயதில் ஓர் ஆணுக்கு என்னவெல்லாம் இங்கு சாத்தியமோ, அதெல்லாம் பெண்ணுக்கும் சாத்தியம்தான். நான் வேலைக்கு வருவது என்பது வெறும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்லை. பல நூறு ஆண்டுகளாக சிறைபட்டிருக்கும் எங்கள் உரிமைகளை கேட்டு வெல்வது. இப்போது நான் பெற்றிருக்கும் சுதந்திரம் சாதாரணமானதல்ல. இது தனிப்பட்ட வெற்றியுமல்ல. என்னை பின்பற்றி ஏராளமானோர் வருவார்கள். காத்திருங்கள்” என்கிறார் பாலாமணி.

‘How old are you?’ திரைப்படத்தின் இறுதியில் ஜனாதிபதி தன்னுடைய மாளிகைக்கு அழைத்து தனிப்பட்ட முறையில் விருந்தளித்து மஞ்சுவாரியரை கவுரவிக்கும் அளவுக்கு சாதனை செய்திருப்பார். அன்று அவருக்கு பிறந்தநாளும் கூட. போனில் அழைத்து வாழ்த்து சொல்லும் தோழி கேட்பாள். “How old are you?”. மஞ்சுவாரியர் சொல்லும் பதில். “It doesn’t matter”.

பாலாமணியிடம் வயதை கேட்டாலும் அதையேதான் சொல்லுவார்.

(நன்றி : புதிய தலைமுறை)

9 ஜூன், 2014

கேளிக்கை கொள்ளையர்!

நாமே அறியாமல் நம்மை கொள்ளை அடிக்கிறார்கள். மெய்மறந்து திரையில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நம் பாக்கெட்டில் இருந்து பணம் உருவுகிறார்கள். ஐந்தோ பத்தோ அல்ல. வருடா வருடம் பல நூறு கோடி ரூபாய். யார் அப்பன் வீட்டு காசு?

‘கோச்சடையான் படத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் வரிவிலக்கின் பலன் மக்களுக்கு தரப்பட வேண்டும்’ என்று உயர்நீதிமன்ற உத்தரவு வந்தபோது நிறைய பேர் ஆச்சரியமாக அச்செய்தியை வாசித்தார்கள். சினிமாவில் வரிவிலக்கு என்பது மக்களுக்கான உரிமை என்பதையே முதன்முதலாக இப்போதுதான் அறிகிறார்கள். தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிக சில திரையரங்குகள் மட்டுமே அந்த உத்தரவினை ஏற்று கேளிக்கை வரி வசூலிக்காமல் கட்டணத்தை குறைத்தன.

சென்னையில் தேவி சினிப்ளக்ஸ் போன்ற அரங்குகளின் வழக்கமாக டிக்கெட் கட்டணம் ரூபாய் நூற்றி இருபது. ஆனால் கோச்சடையான் திரைப்படத்துக்கு எண்பத்தி நான்கு ரூபாய் முப்பது காசு மட்டுமே வசூலித்தார்கள். படம் பார்த்த ஒவ்வொரு ரசிகருக்கும் வரிவிலக்கின் காரணமாக முப்பத்தைந்து ரூபாய் எழுபது காசு லாபம். அப்படியெனில் கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களுக்கும் கூட முழுமையான டிக்கெட் கட்டணமாக நூற்றி இருபது ரூபாய்தானே கொடுத்துக் கொண்டிருந்தோம்? அந்த பணம் அரசின் கஜானாவுக்கும் போகவில்லை எனில், யார் எடுத்துச் சென்றார்கள். இப்போதும் கோச்சடையானை திரையிட்டிருக்கும் பெரும்பாலான திரையரங்குகள் கூட வரிவிலக்கின் பலனை மக்களுக்கு தராமல் முழுமையான கட்டணம் வசூலிக்கிறார்களே. இதையெல்லாம் யார்தான் தட்டி கேட்கப் போகிறார்கள்.

கேளிக்கைக்கு ஏன் வரி?

சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் வெள்ளையருக்கு எதிரான கூட்டங்கள் கலை கலாச்சார நிகழ்வுகளின் பெயரால் கூட்டப்பட்டன. நாடக அரங்குகளுக்கோ, சினிமா திரையரங்குகளுக்கோ கேளிக்கைக்கு வருவது மாதிரி மக்கள் வந்து சுதந்திரப் போருக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. போராட்டங்களுக்கு நிதி வசூல் செய்யப்பட்டது. இம்மாதிரியான கூட்டங்களை கட்டுப்படுத்தவே பிரிட்டிஷ் அரசாங்கம் ‘கேளிக்கை வரி’ முறையை அறிமுகப்படுத்தியது. கூட்டத்துக்கு வரக்கூடிய ஒவ்வொருவரும் தான் பார்க்க வேண்டிய நாடகம், சினிமா, நாட்டிய நிகழ்ச்சிக்கான கட்டணத்தோடு கூடுதலாக குறிப்பிட்ட சதவிகித பணத்தை அரசுக்கு பொழுதுபோக்கு வரியாக செலுத்த வேண்டும்.

வெள்ளையர் போன பிறகும் மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்கும் வண்ணமாக கேளிக்கைவரி வசூலிப்பதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே சேர்த்து விட்டார்கள்.

சினிமாக்களுக்கு மட்டுமின்றி தொலைக்காட்சி சேவைகள், விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு மையங்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் ஒரு மாநில அரசுக்கு கேளிக்கை வரி வருவாயாக கிடைக்கிறது. ஆனால் வருவாயில் பிரதானமான பங்கு சினிமாவில் இருந்தே கிடைக்கும்.

வரிவிலக்கு : யாருக்கு பலன் கிடைக்க வேண்டும்?

திரைப்படங்களுக்கு வரிவிலக்கு என்பது ஆடிக்கொரு முறை அமாவசைக்கு ஒருமுறை முன்பெல்லாம் நிகழும் அதிசயம். ஏதேனும் தேசத்தலைவர்கள் குறித்த படங்களுக்கோ அல்லது நல்ல செய்திகளை மக்களுக்கு தாங்கிவரும் பிரச்சாரப் படங்களுக்கோ மட்டும்தான் வரிவிலக்கு கிடைக்கும்.

அவ்வாறு வரிவிலக்கு கிடைத்த படங்களுக்கு திரையரங்கில் கட்டணம் வசூலிக்கும்போது முழுமையான டிக்கெட் கட்டணமாக இல்லாமல் வரியை கழித்துக்கொண்டது போக மீதி தொகையைதான் கவுண்டரில் வாங்குவார்கள். எனவே கேளிக்கை வரியை விலக்கினால் அதன் பலன் காசு கொடுத்து டிக்கெட் வாங்குபவருக்குதான் போய் சேரவேண்டும் என்பதே நடைமுறை.

வரிவிலக்கு எனும்போது யாருக்கு வரி விதிக்கப்படுகிறதோ, அவருக்குதான் விலக்கு என்பதே சரியான லாஜிக். ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் சினிமாவுக்கு கேளிக்கைக்கு வரிவிலக்கு கொடுத்தாலும், அதை படம் பார்ப்பவர்கள் செலுத்துகிறோம். வருமானமோ அரசின் கஜானாவுக்கும் வந்து சேருவதில்லை. இடையில் இருப்பவர்கள் தங்களுக்குள் அதை பிரித்துக் கொள்ளும் அநியாயம் பகிரங்கமாகவே கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் ஏன் தட்டிக் கேட்பதில்லை என்கிற கேள்விக்கான விடை ஊரறிந்த ரகசியம். நாம் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டுமா?

அரசியல் கேளிக்கை

முந்தைய திமுக அரசுதான் சினிமாக்காரர்களை ‘கூல்’ செய்வதற்காக தமிழ் வளர்ச்சி (!) என்கிற பெயரில் கேளிக்கை வரிவிலக்கு கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. தமிழில் தலைப்பு வைக்கப்படும் தமிழ்ப் படங்களுக்கு வரிவிலக்கு என்று வித்தியாசமாக தமிழை வளர்த்தார்கள். இதற்காக அன்றைய முதல்வருக்கு சினிமாக்காரர்கள் அவ்வப்போது பாராட்டுவிழாக்கள் நடத்தி அசரடித்தார்கள். அன்றைய தமிழக முதல்வரின் உறவினர்கள் ஏகப்பட்ட பேர் சினிமாத்துறையில் குதித்து, படத்தயாரிப்புகளில் ஈடுபட்டு கேளிக்கைவரி விலக்கின் பலன்களை அனுபவித்தார்கள் என்பதெல்லாம் வெளிப்படையாகவே நடந்ததுதான்.

ஆட்சி மாற்றம் நடந்தபிறகாவது இந்த கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அரசுக்கு முறையாக கேளிக்கைவரியாக கிடைக்கக்கூடிய முப்பது சதவிகிதத்தை முறையாக வசூலிப்பார்கள் என்று பார்த்தால், இவர்கள் வேறு மாதிரியாக முந்தைய ஆட்சியின் அதே மரபை தொடர்ந்தார்கள். அரசுக்கும் வருமானமில்லை. மக்களுக்கும் வரிவிலக்கினால் பிரயோசனமில்லை என்கிற போக்கே இன்னமும் தொடர்கிறது. அதிலும் இப்போதைய அரசு தங்களுக்கு வேண்டுபவர்களுக்கு வரிவிலக்கும், வேண்டாதவர்களுக்கு காரணமேயின்றி வரிவிலக்கு மறுப்பும் செய்து குழப்பங்கள் ஏற்படுத்துவதாக ஏராளமான புகார்கள் குவிகின்றன. இன்றைய முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தி ஜமாய்த்துவிட்டார்கள் அதே சினிமாக்காரர்கள்.

அரசுக்கு எவ்வளவு இழப்பு?

இந்த கேளிக்கை வரி விலக்கில் அரசுக்கு இதுவரை குறைந்தபட்சம் ஐநூறு கோடி ரூபாய்க்கும் மேலாக இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்க முடிகிறது. 2006ஆம் ஆண்டு இந்த முழு வரிவிலக்கு கலாச்சாரம் வந்தபிறகு 2007-08ஆம் ஆண்டுகளில் கேளிக்கைவரியாக சுமார் பதினாறு கோடி ரூபாய்தான் அரசுக்கு வருமானமாக வந்தது. முந்தைய ஆண்டுகளில் இது வருடத்துக்கு சராசரியாக எழுபத்தைந்து கோடி ரூபாய்க்கும் மேலாக இருந்து வந்தது. மற்ற மொழி படங்கள், டப்பிங் படங்கள் மூலமாக மட்டுமே கேளிக்கை வருவாய் வரிவசூல் என்று நிலைமை சுணங்கி விட்டது. தமிழ் படங்கள் ஒவ்வொன்றும் ஐம்பது கோடி வசூல், நூறு கோடி வசூல் என்று பெருமையாக பேசிக்கொள்கிறோம். அதன் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வருவாய் கிடைப்பதில்லை. அல்லது மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய சலுகையும் கிடைப்பதில்லை. சட்டப்பூர்வமாகவே மக்களின் பல கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

இது மட்டுமா?

கேளிக்கை வரி விலக்கில் மட்டுமல்ல. தியேட்டருக்கு வரும் ரசிகனிடமிருந்து எல்லாவகையிலும் ‘பிக்பாக்கெட்’ அடிக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.

அதிகபட்ச கட்டண விகிதத்தை அரசு நிர்ணயித்திருக்கிறது. எல்லா வசதிகளும் கொண்ட மல்ட்டிப்ளக்ஸ் அரங்குகளிலேயே கூட அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.120/-தான். ஆனால் ஏதேனும் பெரிய நட்சத்திரத்தின் புதுப்பட வெளியீட்டின்போது டப்பா தியேட்டர் கூட கவுண்டரிலேயே இருநூறு ரூபாய் என்று டிக்கெட்டை ப்ளாக்கில் விற்பது அனாயசமாக நடக்கிறது. இந்த அநியாயத்தை எல்லாம் தட்டி கேட்க வரும் அதிகாரிகளின் பறக்கும் படை, புதுப்படம் பார்த்துவிட்டு ‘லம்பாக’ திருப்தியாக கிளம்புகிறார்கள். ஆன்லைனிலேயே ரிசர்வேஷனிலேயே 200 ரூபாய் என்று வெளிப்படையாக டிக்கெட் ரேட்டை நிர்ணயிக்கும் விருகம்பாக்கம் தேவி கருமாரி மாதிரி தியேட்டரை இதுவரை ஒரு அரசு அதிகாரியாவது தட்டிக் கேட்டதுண்டா?

அடுத்து பார்க்கிங். ஒரு இரு சக்கரவாகனத்துக்கு அதிகபட்சமாக பத்து ரூபாயும், காருக்கு இருபத்தைந்து ரூபாய் வரையும் வாங்கலாம். வெயிலிலோ, மழையிலோ நம் வாகனத்தை எவ்விதத்திலும் காக்காத திறந்தவெளி பார்க்கிங்குக்கு இரண்டரை, மூன்று மணி நேரத்துக்கு இதுவே அதிகம். ஆனால் டூவீலர்களுக்கே முப்பது ரூபாய் கூட நிறைய அரங்குகளில் வசூலிக்க ஆரம்பித்து விட்டார்கள். மால்கள் எனப்படும் வணிக அரங்குகளில் இருக்கும் திரையரங்கங்களில் தனியாக பார்க்கிங் வசதி இல்லை. அங்கிருக்கும் பார்க்கிங்குகளில் ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு ரூபாய் (வாரயிறுதிகளில் டபுள் ரேட்) என்று கூறி நூறு, நூற்றி ஐம்பது என்று பட்டவர்த்தனமாகவே திருடுகிறார்கள். படம் பார்க்கவே நூற்றி இருபது ரூபாய் டிக்கெட்டுக்கு செலவழிக்கும் ஒருவன், அதே நூற்றி இருபது ரூபாயை வெறும் பார்க்கிங் கட்டணமாகவும் அழவேண்டியிருக்கிறது என்றால் இதற்கு பெயர் திருட்டு அல்லாமல் வேறென்ன?

அடுத்து இடைவேளைகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களில் கொள்ளை. அதிகபட்ச சில்லறை விலைக்கும், நாம் தியேட்டர் கேண்டீனில் வாங்கும் விலைக்கும் சம்பந்தமே இருக்காது. நகர்ப்புறங்களில் இருக்கும் தியேட்டர்களில் சும்மா மெல்லும் பாப்கார்னே எழுபத்தைந்து ரூபாய் எனும்போது, அவ்வளவு பணத்தை கொட்டியழுது தின்பவனுக்கு வயிறு எரியாதா? பத்து ரூபாய்க்கும், பதினைந்து ரூபாய்க்கும் வெளியே நாம் குடிக்க முடிகிற கூல்ட்ரிங்ஸ், தியேட்டர்களில் அறுபது ரூபாய், நூறு ரூபாய் என்று டோக்கன் போட்டு விற்கப்படுகிறது. இப்படி கொள்ளை அடிக்கத்தான் வெளியே இருந்து ஒரு முறுக்கையோ, சாக்லேட்டையோ கூட நாம் உள்ளே கொண்டுவந்து விடக்கூடாது என்று தியேட்டர் வாசலிலேயே நம்மை சோதித்து உள்ளே அனுப்புகிறார்கள். பெரும் மக்கள் கூடும் அரங்குகளில் தாகத்துக்கு தண்ணீர் கூட வைக்காமல், ‘பாட்டில் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று கொள்ளையடிக்கிறார்களே. இப்படி அநியாயமாக சம்பாதிக்கும் காசு சினிமாக்காரர்களுக்கு நிலைக்குமா என்று மக்கள் சாபமிடுவது நியாயமாகதான் தோன்றுகிறது. 3டி படமாக இருந்தால் கண்ணாடிக்கு முப்பது ரூபாய், நாற்பது ரூபாய் என்று தாந்தோன்றித்தனமாக வாடகை வாங்கி நம் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கிறார்கள்.

பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இன்றைய நிலையில் குறைந்தது ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு இல்லாமல் ஒரு குடும்பம் தியேட்டர் பக்கம் வந்துவிட முடியுமா என்ன? இப்படியாக தியேட்டருக்கு வரும் ஒவ்வொரு ரசிகனையும் ஒட்டு மொத்தமாக உருவி அனுப்பும் சினிமாக்காரர்கள் திருட்டு டிவிடியால்தான் தியேட்டருக்கு கூட்டம் வரவில்லை என்று புலம்புவதை விட மோசமான ஜோக் வேறெதாவது உண்டா?

என்னதான் தீர்வு?

அரசுதான் தீர்வு. அதிகாரிகள்தான் தீர்வு. தமிழ் வளர்ச்சி, சினிமாவை வளர்க்கிறோம் என்றெல்லாம் கூறிக்கொண்டு கேளிக்கை வரிவிலக்கினை அரசுகள் தொடர்ந்து வருவதே அபத்தமான நடவடிக்கை. சினிமாவை சினிமாக்காரர்கள் வளர்த்துக் கொள்ளட்டும். அரசுக்கு இதுதான் வேலையா? ஒருவேளை வரிவிலக்கினை தொடர்ந்து கொடுப்போம் என்றால் அது மக்களுக்கு பலன் தரும் விதத்தில்தான் இருக்க வேண்டும். மக்கள் பணத்தை தூக்கி சினிமாக்காரர்களுக்கு தர அரசுக்கு எந்த உரிமையுமில்லை.

மாநகராட்சிகளில், நகராட்சிகளில், பேரூராட்சிகளில், ஊராட்சிகளில் திரையரங்குகளுக்கு அதிகபட்ச கட்டணம், குறைந்தபட்ச கட்டணம் எவ்வளவு என்று வரையறை செய்து வெளிப்படையாக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். போலவே பார்க்கிங் கட்டணத்தையும் முறைபடுத்தி மக்களுக்கு அறிவிக்க வேண்டும். ரசிகர்களுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரமுடியாத மால்களில் இயங்கும் திரையரங்குகளின் லைசென்ஸை ரத்து செய்யவேண்டும்.

இதையெல்லாம் செய்யாவிட்டால் கேளிக்கைவரி விலக்கின் பலன் மக்களுக்கும் கிடைக்காமல், அரசுக்கும் கிடைக்காமல் எப்படி சினிமாக்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறதோ, அதுபோல சினிமாக்காரர்களின் உழைப்பும், பணமும் அசால்டாக திருட்டு டிவிடி வியாபாரிகளால் கொள்ளையடிக்கப்படும். மக்கள் மத்தியில் ராபின்ஹூட்டுகளாக திருட்டு டிவிடி ஏஜெண்டுகள் உருவாகியே தீருவார்கள். இதை தடுக்கவே முடியாது.

கேட்டால் கிடைக்கும்

“அரசு மூலமாகவோ, நீதிமன்றங்கள் மூலமாகவோ நீதி பெறுவதெல்லாம் அடுத்த கட்டம். விதிகளுக்கு மாறாக ஒரு விஷயம் நடந்தால், சம்பந்தப்பட்ட நுகர்வோர் உடனடியாக சம்பவ இடத்திலேயே அதை தட்டிக் கேட்டு நீதி பெறவேண்டும். ஓட்டலில் சாப்பிடப் போனால் தண்ணீர் இலவசமாக கொடுக்க வேண்டும். பாட்டில் வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் அங்கேயே பிரச்சினை செய்ய வேண்டும். தியேட்டர்களிலும் ஒவ்வொரு உரிமையையும் நாம் கேட்டுதான் வாங்க வேண்டும். கிடைக்காத பட்சத்தில் கூட இருப்பவர்களை சேர்த்துக்கொண்டு நியாயத்தை தட்டி கேட்க வேண்டும். எதையுமே கேட்டால் கிடைக்கும். கிடைக்காவிட்டால் மீண்டும் கேளுங்கள். கொடுக்காதவர்களை புறக்கணியுங்கள். மக்கள் பங்கேற்பில்லாமல் யாரால் என்னதான் செய்துவிட முடியும்?” என்று கேட்கிறார் இயக்குனர் கேபிள் சங்கர். இவர் ‘கேட்டால் கிடைக்கும்’ என்கிற ஆன்லைன் நுகர்வோர் உரிமை அமைப்பினை நடத்தி வருகிறார். சென்னை திரையரங்குகளில் ‘கேட்டால் கிடைக்கும்’ அமைப்பினர் பிரச்சினைகளை செய்து, சில நியாயமான உரிமைகளை கேட்டு வாங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கர் சொல்வது மாதிரி சினிமாக்காரர்களை கடைசியாக கேட்டுப் பார்ப்போம். கிடைத்தால் சரி. இல்லாவிட்டால் புறக்கணிப்போம். டிவியிலும் புதுப்படம் போட்த்தானே செய்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?

(நன்றி : புதிய தலைமுறை)

4 ஜூன், 2014

தமிழ் சினிமாவில் புரட்சி?

‘என்னமோ ஏதோ’ என்று பயந்துவிடாதீர்கள். இவ்வாண்டின் தொடக்கத்தில் இருந்து தமிழில் வெளியாகியிருக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை நான்கே மாதங்களில் செஞ்சுரி போட்டு விட்டது. வதவதவென வாராவாரம் வெள்ளிக்கிழமைக்கு ஆறு, எட்டு, பத்து என்கிற எண்ணிக்கைகளில் படங்கள் வெளியாவது புரட்சியா அல்லது வீழ்ச்சியா. தமிழ் சினிமாவில் ‘என்னமோ நடக்குது’ என்பது மட்டும் நிச்சயம்.

நூற்றி எட்டு

தமிழில் வருடத்துக்கு எத்தனை திரைப்படங்கள் வெளிவரும்?

நேரடி தமிழ்ப்படங்கள் தவிர்த்து இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என்று மற்ற மொழிகளில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களையும் சேர்த்து ஆண்டுக்கு நூற்றி முப்பதிலிருந்து நூற்றி ஐம்பது படங்கள் வரை வெளியிடப்படுகின்றன. இது கடந்த பத்து ஆண்டுகளின் சராசரி.

ஆனால் இந்த ஆண்டின் முதல் அரையாண்டிலேயே இந்த எண்ணிக்கையை தமிழ் சினிமா கடக்கப் போகிறது. ஜனவரி முதல் ஏப்ரல் வரை முதல் நான்கு மாதங்களில் மொத்தம் நூற்றி எட்டு புதிய படங்கள் அரங்குகளில் திரையிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் டப்பிங் படங்களை கழித்துவிட்டால் நேரடி தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கையே எண்பதை தொடுகிறது.

இந்த அசாத்தியமான எண்ணிக்கை தமிழ் சினிமா தொழில்ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதை காட்டுகிறதா அல்லது வீக்கத்தின் வெளிப்பாடா என்பதுதான் நம் முன் இருக்கும் கேள்வி.

இவ்வாண்டு வசூல்ரீதியாக வெற்றியடைந்த திரைப்படங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணுவதற்கு ஒரு கை மட்டுமே போதும். அதிலேயே கூட ஒன்றோ இரண்டோ விரல்கள் மிச்சமிருக்கக் கூடும்.

தொழில்நுட்பத்தின் பங்கு

திரைப்படங்கள் அதிகமாக தயாரிக்கப்படுவதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி பிரதானமான காரணமாக இருக்கிறது. முன்பு நெகட்டிவ் பிலிம்களில் படம் பிடிப்பது படத்தின் பட்ஜெட்டில் பெரிய இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. வெறும் நான்கு நிமிடம் படம் பிடிக்கவே தோராயமாக பிலிம் செலவு பதிமூன்றாயிரம் ரூபாய் ஆகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு பிரகாசமான லைட்டிங் வசதி ஏற்படுத்த வேண்டும். லைட்டுகள் வாடகை. அவற்றை இயக்க ஜெனரேட்டர் இயக்கி மின்சாரம். இதற்கெல்லாம் மிகப்பெரிய யூனிட்டே வேலை பார்க்கும். அவர்களுக்கு உணவு, சம்பளம், பேட்டா என்று பட்ஜெட் எல்லா வகையிலும் எகிறும். ரெட், 5டி போன்ற டிஜிட்டல் கேமிராக்கள் புழக்கத்துக்கு வந்தபிறகு இவ்வகையிலான பெரும் செலவு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது ஒரே ஒரு கேமிராமேனே மாபெரும் யூனிட்டுக்கு சமம்.

படப்பிடிப்பில் செய்யப்படும் தவறுகளை கூட பிற்பாடு எடிட்டிங்கிலேயே சரிசெய்துக்கொள்ளலாம். மீண்டும் படம் பிடிக்க வேண்டிய நிலை இல்லை. லைட்டிங் குறைபாடுகளை சீர் செய்யலாம். வண்ணங்களை நினைத்த மாதிரி மேம்படுத்தலாம். ப்ளூமேட் முறையில் வெளிநாட்டுக்கு போகாமலேயே உள்ளூரிலேயே காட்சிகளையும், பாடல்களையும் படம்பிடித்து, பின்னணியை மாற்றி வெளிநாட்டில் எடுத்த காட்சிகளை மாதிரிகூட அசலாக காட்டமுடியும். கிட்டத்தட்ட எல்லாமே சாத்தியம். தகவல் தொழில்நுட்ப புரட்சி ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்குமான இடைவெளியை பெருமளவில் குறைத்துவிட்டது.

“படப்பிடிப்புக்கான செலவு நிச்சயம் குறைந்திருக்கிறது. விரைவாகவும் படம் எடுக்க முடிகிறது. எனவே தயாரிக்கப்படும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதே நேரம் எங்கள் தொழிலின் தரமும் வெகுவாக குறைந்து வருவது கவலைப்படத்தக்க அம்சம். சினிமா தொழில்நுட்பம் தெரிந்த தகுதியான ஆட்களை வைத்துதான் வேலை பார்க்க வேண்டும். கேமிராவை ஆபரேட் செய்தாலே படம் எடுத்துவிட முடியுமென்ற தொழில்நுட்ப சாத்தியத்தால் கத்துக்குட்டிகள் ஏராளமானோர் படம் பிடிக்க வந்துவிடுகிறார்கள். செல்போனில் வீடியோ எடுப்பது மாதிரி எடுத்துத் தொலைக்கிறார்கள். இதனால் ஏகப்பட்ட எண்ணிக்கையில் மொக்கைப்படங்கள் வெளிவந்து படுதோல்வி அடைந்து இண்டஸ்ட்ரிக்கே பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எதிர்காலத்தில் இதனால் தொழில்நுட்பம் மீதே அவநம்பிக்கை வந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது” என்று அச்சப்படுகிறார் கேமிராமேன் விஜய் ஆம்ஸ்ட்ராங்.

திரையரங்குகளும் முழுக்க டிஜிட்டல் மயமாகி இருக்கின்றன. பிலிம் புரொஜெக்டர்களை நீக்கிவிட்டு, டிஜிட்டல் புரொஜெக்டர்களைதான் கிட்டத்தட்ட எல்லா தியேட்டர்களுமே பயன்படுத்துகின்றன. சாட்டிலைட் மூலமாகவோ, ஹார்ட் டிஸ்கில் சேமித்தோ திரையில் நமக்கு படம் காட்டுகிறார்கள். பிலிம் புரொஜெக்டர்கள் காலத்தில் வெளியாகும் ஒவ்வொரு பிரிண்டுக்கும் லட்சக்கணக்கில் செலவாகும். படம் ஓடாத காலக்கட்டத்திலும் அந்த பிரிண்டுகள் அழிந்துவிடாமல் சேமிக்க செலவழித்துக்கொண்டெ இருக்க வேண்டும். இப்போது அந்த செலவெல்லாம் மிக கணிசமாக குறைந்திருக்கிறது. டிஜிட்டல் முறையில் படத்தை திரையிடுவது உழைப்பு ரீதியில் சுலபமானதாகவும், செலவு ரீதியில் சிக்கனமானதாகவும் இருப்பதால் ஒரே திரையரங்கு வளாகத்தில் நிறைய திரைப்படங்களை ரிலீஸ் செய்ய முடிகிறது.

ஆனாலும் பெரிய நட்சத்திரங்கள் பங்குபெறும் படங்களின் பட்ஜெட் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் சிக்கனமாகவில்லை. வருடாவருடம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றை சரியாக இனங்கண்டு சரிசெய்ய வேண்டியது சினிமா சங்கங்களின், தொழில் ஆர்வலர்களின் கடமை.

பாராட்டுவதா பயப்படுவதா?

அரை நூற்றாண்டுக்கும் மேலாக சினிமாவை மட்டுமே தொழிலாக எடுத்துக் கொண்டவர்கள்தான் இத்துறையில் புழங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சமீபமாக வேறு துறையில் ஈடுபடுபவர்களும் பங்களிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ‘பார்ட் டைம்’ தொழிலாக சினிமாவையும் சேர்த்துக் கொள்கிறார்கள். லாபம் ஈட்டக்கூடிய, சம்பாதிப்பதற்கு தகுதியான தொழிற்துறையாக தமிழ் சினிமா வளர்ந்திருப்பதான நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவே இந்த போக்கை நாம் எடுத்துக் கொள்ளலாம். படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சில நாட்களுக்கு முன்பாக இதை குறிப்பிட்டு சினிமா விழா ஒன்றில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பேசினார்.

“நிறைய தொழில் அதிபர்கள் சினிமாவுக்கு வந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். டாக்டர், பைலட், சாஃப்ட்வேர் என்ஜினியர் என்று பல்வேறு துறைகளச் சார்ந்தவர்களும் சினிமாவுக்கு பங்களிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சமூகத்தில் சினிமாவை கேவலமாக நினைத்துக் கொண்டிருந்த காலம் மாறிவிட்டது.

ஆனால் படங்கள் சரியாக ஓடாததால் கடந்த சில மாதங்களில் மட்டுமே சுமார் இருநூறு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட இழப்பை தமிழ் சினிமா சந்தித்திருக்கிறது. தியேட்டர் வசூல் படுமோசம். வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் சினிமாக்களின் எண்ணிக்கை அச்சமூட்டுகிறது.

கடந்த ஆண்டு மட்டுமே நூற்றி எண்பது புதுமுகங்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேர் மேலே வந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை எல்லாம் பார்த்து பாராட்டுவதா அல்லது பயப்படுவதா என்றே எனக்கு தெரியவில்லை” என்று வேதனையோடு குறிப்பிட்டார் கேயார்.

சென்சார் சான்றிதழ் வாங்கியும் இன்னும் வெளியாகாத படங்களின் எண்ணிக்கை மட்டுமே நானூறை எட்டுகிறது. புற்றீசல் மாதிரி எண்ணிக்கையில் அதிகமாக படங்கள் வெளியாவதால் எந்தவொரு படத்துக்கும் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்க வகையில்லாமல் வசூல் பரவலாகி, அனைவருமே இழப்பை சந்திக்க நேர்கிறது. முன்பு வெள்ளிக்கிழமை இத்தனை படம்தான் வெளியாக வேண்டும், பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் நஷ்டத்தை சந்திக்க வழியில்லாத தேதிகளில் வெளியிடப்பட வேண்டும் என்றெல்லாம் தயாரிப்பாளர் சங்கம் படவெளியீடுகளை முறைப்படுத்த முனைந்தது. இப்போது யாருமே அந்த வழிமுறைகளை பின்பற்றுவதில்லை.

நிலைமை கொஞ்சம் மோசம்தான்

நவீனத் தொழில்நுட்பம், சமீபமாக இத்துறைக்கு கிடைத்துவரும் ஏராளமான மனிதவளம், தொழிலாக அங்கீகரித்து சினிமாவில் கொட்டப்படும் கோடிக்கணக்கான முதலீடு போன்ற அம்சங்கள்தான் திரைப்படங்களின் திடீர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு பிரதானமான காரணங்களாக இருக்கின்றன. இது ஆரோக்கியமான திசைக்கு தமிழ் சினிமாவை அழைத்துச் செல்லாமல், எதிர்திசையில் படுவேகமாக ஓடி அழித்துக் கொண்டிருக்கிறது என்கிற முரண்தான் வேதனையான விஷயம்.

வெள்ளிக்கிழமை காலையில் படம் வெளியிடப்படுகிறது. அன்று மாலையே வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்து ‘சக்சஸ் மீட்’ நடத்துகிறார்கள். அடுத்த இரண்டு நாட்களுக்கு எப்படி வெற்றியடைந்தோம் என்று படக்குழுவினர், பாரபட்சமின்றி எல்லா சேனல்களிலுமே பேட்டி கொடுக்கிறார்கள். திங்கள் காலை வரலாறு காணாத வெற்றியென்று போஸ்டர் ஒட்டுகிறார்கள். சினிமாக்காரர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா அல்லது மக்களை ஏமாற்றுகிறார்களா என்று புரியவில்லை.

திரைப்படத் தயாரிப்புக்கு செய்யப்படும் செலவுக்கு இணையாக விளம்பரங்களுக்கும் செலவு செய்கிறார்கள். சுமாரான அல்லது மோசமான படத்தை விளம்பரம் மூலமாக வெற்றியடையச் செய்ய முடியுமென்று நம்புகிறார்கள். விளம்பரக் கட்டுப்பாடு பற்றி முன்பு திரைத்துறையினர் பேசினார்கள். பத்திரிகைகளில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தார்கள். ஆனால் டிவி சேனல்களுக்கு வழங்கப்படும் வீண் விளம்பரங்கள் குறித்து யாருக்கும் அக்கறையில்லை. விளம்பரங்களை குறைத்துவிட்டால் ‘சேட்டிலைட் ரைட்ஸ்’ மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் குறைந்துவிடுமோவென்று அவர்களுக்கு அச்சம்.

திருட்டு டிவிடி, ஆன்லைன் பைரஸி மூலமாக தமிழகத்தில் ஒரு தியேட்டருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய வருவாய் ஐம்பது சதவிகிதம் வரை சமீபகாலமாக குறைந்துவிட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களில், ஒரு புதுப்படம் வெளிவந்து குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு பைரஸியால் வசூல் பாதிப்பு இல்லை என்கிற நிலைமையை அங்கிருக்கும் அரசாங்கங்களும், திரைப்படத்துறையும் உறுதிப்படுத்தி இருக்கின்றன.

இந்த வீடியோ பைரஸிக்கு எதிராக சமீபத்தில் எப்போதாவது திரைப்படச் சங்கங்கள் போராட்டம் நடத்தியிருக்கிறதா. ஒட்டுமொத்த சங்கங்களும் முதல்வரை சந்தித்து தங்கள் தொழிலுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சரிசெய்ய சொல்லி கோரிக்கை வைத்திருக்கிறார்களா. தொழிலின் அடிப்படையே ஆட்டம் கண்டுவிட்ட நிலையிலும் இன்னும் திரைத்துறையினர் ஏன் மெத்தனமாக இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு விடையே இல்லை.

தீர்வு உண்டா?

தீர்க்கப்படாத பிரச்சினைகள் உலகத்திலேயே இல்லை. திரைப்பட வெளியீட்டு முறைகளில் சில மாற்றங்களை கொண்டுவருவதின் மூலம், தமிழ் சினிமாவை லாபகரமான தொழிலாக மாற்றலாமென்று சினிமா கார்ப்பரேட் நிறுவனமான டிஸ்னி-யூடிவி மோஷன் பிக்சர்ஸின் தென்னக தலைமை அதிகாரியான கோ.தனஞ்செயன் கூறுகிறார்.

“டிஜிட்டல் புரட்சியால் படங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. பணம் முதலீடு செய்ய தயாராக இருக்கும் யார் வேண்டுமானாலும் இன்று தயாரிப்பாளர் ஆகிவிடலாம். எதையும் யாரும் தடுக்க முடியாது. ஆனால் முறைப்படுத்த முடியும்.

நம்முடைய மாநிலத்தில் திரையரங்குகள் குறைவு. அப்படிப்பட்ட நிலையில் பண்டிகை நாட்களில் மூன்று, மற்ற வாரங்களில் இரண்டு என்று பேசிவைத்து படங்களை வெளியிட்டால் எல்லாருமே லாபம் பார்க்க முடியும். அல்லது பெருமளவு நஷ்டத்தை தவிர்க்க முடியும்.

பெரிய நடிகர் நடித்த படம், பெரிய நிறுவனம் தயாரித்த படமென்று எல்லா தியேட்டர்களையும் அவர்களே வசப்படுத்துவதை மாற்ற வேண்டும். பெரிய பட்ஜெட் படங்கள் வெளியீட்டுக்கு அதிகபட்சம் முன்னூறு தியேட்டர், நடுத்தர படங்களுக்கு இருநூறு தியேட்டர், குறைந்த பட்ஜெட் படங்களுக்கு நூறு தியேட்டர் என்று ஒதுக்கீடு செய்யலாம். இம்மாதிரி கட்டுப்பாடுகள் கேரளாவில் உண்டு என்பதால் அவர்களது திரைத்துறை கொஞ்சம் லாபகரமாகவே நடக்கிறது என்பது நமக்கு நல்ல முன்னுதாரணம். சிறிய பட்ஜெட் படங்களுக்கு சிறியளவிலான முன்னூறு முதல் நானூறு சீட்டுகள் கொண்ட திரையரங்கங்களாக பார்த்து இடம் ஒதுக்க முன்னுரிமை தரவேண்டும்” என்று தன்னுடைய யோசனையை தீர்வாக முன்வைக்கிறார் தனஞ்செயன்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது, திரையரங்குகளுக்கு கூட்டம் குறைவாகதான் வருமென்று தெரிந்தும்கூட கோடைவிடுமுறையால் மக்கள் எப்படியும் தியேட்டருக்கு வருவார்கள் என்கிற குருட்டுத்தனமான சூதாட்ட நம்பிக்கையில் வரைமுறையின்றி இஷ்டத்துக்கும் படங்களை வெளியிட்டு வருகிறார்கள். ஏற்கனவே ஓரளவுக்கு வசூல் பார்த்துக் கொண்டிருந்த படங்களின் வசூலையும் சேர்த்து இவர்களே காலி செய்கிறார்கள். பெரிய நடிகர்களின் படங்கள் இல்லாத காலங்களில்தான் புதுமுகங்களின் படங்களையும், சிறிய பட்ஜெட் படங்களையும் வெளியிட முடிகிறது. நாங்கள் என்ன செய்வது என்று நியாயமான கேள்வியைதான் கேட்கிறார்கள். ஆனால் அதற்காக தானே தற்கொலை செய்துக் கொள்வதா?

தனஞ்செயன் முன்வைக்கும் தீர்வினை அனைத்துத் தரப்பும் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. ஏனெனில் இன்னும் தியேட்டர் கிடைக்காமல் நானூறு படங்கள், சென்சார் சான்றிதழை காட்டிக்கொண்டு வரிசை கட்டி நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காட்டாற்று வெள்ளத்தில் காட்டு மரங்களோடு சந்தன மரங்களும் அடித்துச் செல்லும் ஆபத்தை இது குறைக்கும். மோசமான படங்களால், நல்ல படங்களும் வெற்றிவாய்ப்பை இழப்பதை தடுத்து நிறுத்தக்கூடிய வாய்ப்பு நம்மிடமே இருக்கிறது.

ஒளி தெரிகிறதா?

சினிமாத் தொழிலின் அடுத்த வடிவம், எதிர்காலத்தில் செய்யவேண்டிய மாற்றங்கள் பற்றிய விவாதம், அத்தொழிலோடு அவ்வளவாக நேரடித் தொடர்பில்லாத மாற்று சினிமா ஆர்வலர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. சினிமாவை கலையாக முன்னெடுப்பதுதான் இவர்களது முதன்மைத் தெரிவு. திரைப்படங்களின் உள்ளடக்க ரீதியாகதான் இவர்களது அக்கறை இருக்கிறது. ஆனால் வணிகமாகவும் பார்க்கவேண்டிய கட்டாயம் திரைத்துறை சங்கங்களுக்கு உண்டு.

சமீபத்தில் கவிஞர் வைரமுத்து சினிமா விழா ஒன்றில் சினிமாவின் எதிர்காலம் குறித்து தன்னுடைய கருத்தை சொன்னார். “இந்த நூற்றாண்டின் இறுதியில் திரைத்துறையில் மாற்றம் வரும். அப்போது சினிமா திரையரங்குகளை தாண்டி நேரடியாக மக்களிடம் வரும். வினியோகஸ்தர்களின் தேவை தீர்ந்துவிடும். குறைந்த முதலீட்டில் நிறைய படங்கள் வரும். வீட்டுக்கு வீடு செய்தித்தாள் வீசி செல்லப்படுவதை போல, புதுப்பட டிவிடிக்கள் வீசப்படும். தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும். காலம் மாறும். கலை மேம்படும்”. கவிஞர் அல்லவா? அபாரமான கற்பனையில் இத்துறையின் எதிர்காலம் குறித்த சித்திரத்தை நம் மனதில் ஏற்றுகிறார்.

உண்மையில் இப்போதைக்கு தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை கணிப்பது என்பது யானையை தடவிப் பார்க்கும் பார்வையற்றோரின் நிலையாகவே அனைத்துத் தரப்புக்கும் இருக்கிறது. ஏதேனும் ஒரு வெளிச்சக்கீற்று தெரியாமலா போய்விடும்?



எக்ஸ்ட்ரா மேட்டர் :


தாதாவின் லொள்ளு

பெரிய நடிகர்களின் படங்களுக்காக தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விடுவதால், சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு காலம் காலமாகவே தமிழ் திரையுலகில் சொல்லப்பட்டு வருகிறது. சமீபகாலமாக பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்து மற்றவர்களின் படங்களின் வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்படுத்தி வருகிறார்கள். இது பற்றி முணுமுணுப்பு தொடர்ந்துக் கொண்டிருந்தாலும் பெரிய ஆட்களை பகைத்துக்கொள்ள விருப்பமின்றி யாரும் நேரடியாக வாய் திறப்பதில்லை. மன்சூர் அலிகானின் ‘லொள்ளு தாதா பராக் பராக்’ படம் வெளியிடப்பட முடியாமல் முடங்கிக் கிடந்தபோது ஆவேசமாக ஒரு விளம்பரம் வெளியிட்டார். “எல்லா திரையையும் நீங்களே எடுத்துக்கிட்டா, என் படத்தை என்ன கழிவறையிலும், கேண்டீனிலுமா ஓட்டுவேன்” என்கிற வாசகங்களோடு வெளிவந்த அந்த விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கார்ப்பரேட் சதி

கார்ப்பரேட் நிறுவனங்கள் சொந்தமாக படங்களை தயாரிப்பதோடு, மற்ற தயாரிப்பாளர்களின் படங்களையும் மொத்தமாக விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். தாங்கள் வெளியிடும் ஒரு திரைப்படம் படுதோல்வி அடைந்துவிட்டாலும், உடனடியாக தியேட்டரிலிருந்து அந்த படத்தை தூக்குவதில்லை. அவ்வாறு தூக்கினால் வேறு படம் வெளியாகி வெற்றி பெற்று தங்களது அடுத்த படவெளியீட்டுக்கு தியேட்டர் கிடைக்காதோ என்று அஞ்சி, நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை என்று தோல்விப்படத்தையே தொடர்ந்து ஓட்டுகிறார்கள். இதனாலேயே நல்ல தியேட்டர்கள் கிடைக்காமல், கிடைத்த தியேட்டரில் படத்தை வெளியிட்டு பலத்த நஷ்டத்துக்கு சிறு தயாரிப்பாளர்கள் ஆளாக வேண்டியிருக்கிறது.


பவர் ஸ்டார்களின் கூத்து

ஒருபக்கம் நிறைய படங்கள் வெளியாகி தொடர்ச்சியாக தோல்வி. இன்னொரு பக்கம் படங்கள் வெளியிட சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று இரண்டு நேரெதிர் பிரச்சினைகளுக்கு நடுவே அவ்வப்போது பவர் ஸ்டார் மாதிரி திடீர் ஆட்கள் தோன்றி ஒட்டுமொத்த சூழலையும் பகடிக்கு உள்ளாக்குகிறார்கள். படு கோராமையாக எடுக்கப்படும் ‘பவர் ஸ்டார்’ வகை படங்கள் ஆளே இல்லாத தியேட்டர்களில் அனாயசமாக நூறு நாள், இரு நாள் ஓட்டப்படுகிறது. பணத்தை தண்ணீராக செலவழித்து ஒருநாள் கூட உருப்படியாக ஓட வக்கில்லாத தங்கள் படங்களுக்கு நூறு நாள், இருநூறு நாள் போஸ்டர் ஒட்டி, வெற்றிவிழா கொண்டாடி சினிமா இண்டஸ்ட்ரியையே பகடிக்குள்ளாக்குகிறார்கள். முன்பு ஜே.கே.ரித்தீஷ், இப்போது பாஸ் என்று இந்த திடீர் சினிமாக்காரர்களால் கலகலத்துப் போயிருக்கிறது கோடம்பாக்கம்.


கோச்சடையான்


போனவாரம் வெளியாகியிருக்கும் கோச்சடையான் ஒரே காம்ப்ளக்ஸில் இருக்கும் அனைத்துத் தியேட்டர்களின் திரையையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. “கோடை விடுமுறையில்தான் கொஞ்சம் காசு பார்க்க முடியும் என்று நினைத்தால், இவர்களே எல்லா மெயின் தியேட்டர்களையும் பிடித்துக் கொண்டு அநியாயமாக சம்பாதிக்கிறார்கள்என்று புலம்பினார் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர் ஒருவர்.

(நன்றி : புதிய தலைமுறை)

3 ஜூன், 2014

இடியாப்பச்சிக்கல் கதைகள்

சுரேஷ்
ஆஞ்சநேயர் கோயிலில் வடைமாலை சாத்திவிட்டு வாசலுக்கு வந்து அமர்ந்தான் சுரேஷ். இம்மாதிரி தனிமையை அனுபவித்து எவ்வளவு நாள் ஆகிறது? கல்யாணமாகி நான்கு மாதங்கள்தான். கவிதா கர்ப்பம் என்று காலையில்தான் உறுதி ஆனது. இந்நேரத்தில் கண்காணாத வடநாட்டில் ஏதோ பாடாவதி பிராஞ்சுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் தண்டனையாக வந்திருந்தது. எட்டு ஆண்டுகளாக மாடு மாதிரி எவ்வளவு உழைத்தாலும் நன்றியே இல்லாமல் நடந்துகொள்ளும் எம்.டி. யை கொலைசெய்தால் என்ன? கோயிலில் வரக்கூடாத நினைப்புதான். ஆனால் வந்துவிட்டது.
செல்போன் அடித்தது. ‘sandhiya calling’. “சுரேஷ்! இதுக்குமேலே பொறுத்துக்க முடியாது. ஏதாவது பண்ணு”. சந்தியா சுரேஷின் காதலி. அவனுடைய எம்.டி. ராமமூர்த்தியின் மனைவியும் கூட.

சந்தியா
சுரேஷின் callஐ கட் செய்தாள். “ம்ஹூம். கல்யாணமே பண்ணிக்கிட்டிருக்கக் கூடாது” எப்போதோ நடந்த கல்யாணத்துக்கு இன்று வருத்தப்பட்டாள் சந்தியா. ராமமூர்த்தி நல்லவன்தான். அன்பானவன். நினைத்தே பார்க்கமுடியாத வசதியான வாழ்க்கையை கொடுத்திருக்கிறான். ஆனால் அவனை பார்க்கும்போதெல்லாம் மரவட்டையைப் பார்ப்பதுமாதிரி அருவருப்பாக இருக்கிறது. கட்டாயத்துக்கு அவனோடு குடும்பம் நடத்தி.. ச்சே.. என்ன பிழைப்பு இது? காதலித்தவனை கைபிடிக்க முடியாததைவிட பெரிய அவலம் பெண்ணுக்கு வேறென்ன இருக்க முடியும்?
நர்ஸ் அவள் சிந்தனைகளைக் கலைத்தாள். “பாஸிட்டிவ் வந்திருக்கு சந்தியா. யெஸ் யூ ஆர் பிரெக்ணண்ட். கங்க்ராட்ஸ்”
நொடிக்கு நொடி வெறுத்துக் கொண்டிருக்கும் கணவனின் வாரிசு அவளது வயிற்றில். அவளே கொஞ்சமும் எதிர்பாராத ட்விஸ்ட். முதன்முறையாக ராமமூர்த்தியின் மீது ஏனோ அவளுக்கு காதல் பிறந்தது.

ராமமூர்த்தி
‘அப்பாவாகப் போகிறாய்’ என்று எஸ்.எம்.எஸ். வந்ததிலிருந்தே தரைக்கு மேலே ரெண்டு அடி மேலேயே பறந்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்விலிருந்தான் ராமமூர்த்தி. அடுத்தவாரம் அவளுடைய பிறந்தநாள் வேறு. அசத்திவிட வேண்டும். ஈ.சி.ஆர். ரோடில் இழைத்து இழைத்து ஒரு வீடு கட்டியிருந்தான். அவளுக்கு தெரியாமலேயே அவளுக்காக கட்டியிருந்த இந்த ‘வசந்தமாளிகை’தான் பிறந்தநாள் பரிசு. அவளோடும், பிறக்கப்போகும் குழந்தையோடும் அம்மாளிகையில் வாழப்போகும் வாழ்க்கையை நினைத்தால் இப்போதே கஞ்சா அடித்தது மாதிரி நெஞ்சு படபடக்கிறது. ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ செல்போன் ரிங்டோனியது. சந்தியா. சனியன், இவள் வேறு. “ராமு, நீ அப்பாவாகப் போற”. அப்படியே ஷாக்கானான். காலையில் கவிதாவின் எஸ்.எம்.எஸ் தந்த மொத்த மகிழ்ச்சியும் அலையில் அடித்துக்கொண்டு போனமாதிரி இருந்தது.

கவிதா
“இதுக்காக என்னை குத்தம் சொல்றீயே? அவன் மட்டும் யோக்கியம்னு நெனைச்சியா?” காஃபிஷாப்பில் இருந்தார்கள் கவிதாவும், லதாவும்.
“சத்தம் போட்டு பேசாதடி. எல்லாரும் நம்பளையே பார்க்கிறாங்க” என்றாள் லதா. இவளும், அவளும் ஒண்ணாவதிலிருந்தே இணைபிரியாத் தோழிகள். உடல் இரண்டு. உயிர் ஒன்று என்பது மாதிரி.
“என்னோட மேரேஜ் லைஃப் ஸ்மூத்தா போய்க்கிட்டிருக்கிறது மாதிரிதான் எல்லாரும் நெனைச்சுக்கிட்டிருக்கீங்க. ஆக்சுவலா சுரேஷ் ஒரு சைக்கோ. டிசைன் டிசைனா என்னை கொடுமைப்படுத்தறான். கல்யாணத்துக்கு முன்னாடி சந்தியான்னு ஒருத்தியை லவ் பண்ணியிருக்கான். இன்னும் அந்த அஃபயர் கண்டினியூ ஆகிட்டிருக்கு. இதனாலே பாதிக்கப்பட்ட நானும், அவளோட ஹஸ்பெண்டும் யதேச்சையா சந்திச்சோம். ஒருத்தருக்கு ஒருத்தர் இயல்பா ஈர்த்துக்கிட்டோம். இதுலே என்ன தப்பு?” என்றாள் கவிதா.

லதா
கவிதாவின் துக்கம் இவ்வளவு நாட்களாக தெரியாமல் இருந்ததற்காக கடுமையாக வருந்தினாள் லதா. ‘பாவி மக. அவ்ளோ க்ளோஸா இருக்குற எங்கிட்டேயே மறைச்சுட்டாளே?’
கவிதாவை மகாராணியாய் வளர்த்தார் அவரது தந்தை. நல்ல வேலையில் இருக்கிறான் என்று சுரேஷுக்கு தன் சக்திக்கு மீறி ஆடம்பரமாய் திருமணம் செய்து அனுப்பினார். ஆனால் இந்த படுபாவி சுரேஷ் தாலி கட்டிவிட்டான் என்பதற்காக எவ்வளவு சித்திரவதைகளைதான் அவள் எதிர்கொள்வாள். கவிதாவுக்கு ராமமூர்த்திதான் கரெக்ட். எப்பாடு பட்டாவது இருவரையும் சேர்த்துவிட வேண்டும். குறுக்கிலிருப்பது சுரேஷும், ராமமூர்த்தியின் மனைவி சந்தியாவும்தான். கருமம், இருவருக்கும் கள்ளக்காதல் வேறு. இவர்கள் செத்தொழிந்தாலும் பரவாயில்லை. பூமிக்கு பாரம் குறையும். ரமேஷுக்கு போன் அடித்தாள். லதாவின் காதலன். அதேநேரம் ப்ரொபஷனல் கில்லரும் கூட.

ரமேஷ்
இதுவரை பணத்துக்காகதான் கொலைகளை செய்திருக்கிறான் ரமேஷ். முதன்முறையாக தன்னுடைய காதலிக்காக தனக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத இரண்டு பேரை கொல்லவேண்டும். லதா ரொம்ப பிடிவாதமாக இருக்கிறாள். இந்த வேலையை எடுத்துக் கொள்வதில் அவனுக்கு ஒப்புதல் இல்லை. பேசாமல் இந்த வேலையை கிருஷ்ணனிடம் ஒப்படைத்து விட்டால் என்ன?
கிருஷ்ணனை தேவி தியேட்டர் வாசலில் சந்தித்தான். “மச்சான். என்ன ஏதுன்னு கேட்காதே. ரெண்டு ஆட்டை அறுக்கணும். டீடெய்ல்ஸ் இந்த கவர்லே இருக்கு”
“வேற அசைன்மெண்டுக்கு ஒத்துக்கிட்டிருக்கேண்டா. வேணும்னா அதை நீ செஞ்சுடறியா? இதுவும் ரெண்டு ஆடுதான்”. பண்டமாற்று மாதிரி வேலையை மாற்றிக் கொண்டார்கள். கிருஷ்ணன் ஒரு கவரை கொடுத்தான். “உள்ளே போட்டோ, டீடெய்ல்ஸ் எல்லாமிருக்கு”

கிருஷ்ணன்
வெயிலில் பைக் ஓட்டிய களைப்பில் சோர்வாக வந்து சேர்ந்தான் கிருஷ்ணன். ஃபேன் ஸ்விட்சை போட்டான். கரெண்ட் கட். ரமேஷ் கொடுத்த கவரை பிரித்துப் பார்த்தான். இருபத்தைந்து வயது மதிப்புள்ள பெண்ணின் படம். சந்தியா என்று பெயர் எழுதியிருந்தது. அழகாக இருந்தாள். அதனாலென்ன? இதையெல்லாம் பார்த்தா ‘தொழில்’ நடத்திக் கொண்டிருக்கிறோம். அடுத்த படத்தை எடுத்தான். சுரேஷ். விழிகள் பிதுங்கி வெளியே விழுந்துவிடுமளவுக்கு அதிர்ச்சி. இவனை போய் ஏன் கொல்லவேண்டும்?
சுரேஷுக்கு போன் அடித்தான். ஸ்விச்ட் ஆஃப். ரமேஷுக்கு முயற்சித்தான். அதுவும் ஸ்விச்ட் ஆஃப்.. ரிங் போய்க்கொண்டே இருந்தது. உடனே செல்வியைப் போய் பார்க்க வேண்டும். தன்னைவிட சுரேஷை நன்றாகப் புரிந்தவள் அவள்தான். செல்வி கிருஷ்ணனுடைய தங்கை. சுரேஷ் அவனுடைய தம்பி.

செல்வி
செல்வி ஒரு பாசமலர். இரண்டு அண்ணன்கள். சிறுவயதிலேயே அம்மாவும், அப்பாவும் விபத்தில் காலமாகி விட்டார்கள். அனாதையாக மூன்று பேரும் நடுத்தெருவில் நின்றபோது, சமூகத்துக்கு அவர்கள் மீது எந்த இரக்கமுமில்லை. அவர்களாகவே வளர்ந்தார்கள். பெரியவன் கிருஷ்ணன் ‘நிழலான’ தொழில்களில் ஈடுபட்டான். சின்னவன் சுரேஷ் ஓரளவுக்குப் படித்து சொல்லிக் கொள்ளும்படியான வேலையில் சேர்ந்தான். கிருஷ்ணனின் சட்டத்துக்குப் புறம்பான வேலைகள் அவனை உறுத்தியது. விட்டுவிட்டு வந்துவிடும்படி சொல்லி, கிருஷ்ணன் கேட்காமல் கடைசியில் செல்வியையும், கிருஷ்ணனையும் விட்டு தனியாக பிரிந்துப் போய்விட்டான்.
அப்படிப்பட்ட சுரேஷை கொல்ல சொல்லி கிருஷ்ணனிடமே இப்போது வேலை வந்திருக்கிறது. கொல்லுமளவுக்கு யாருக்கு சுரேஷ் மீது வன்மம் இருக்கும்? அன்பு மூலமாகதான் சுரேஷை காப்பாற்ற வேண்டும்.

அன்புசெழியன்
அன்புசெழியன் காவல்துறை இன்ஸ்பெக்டர். செல்வியின் காதலன். அடிக்கடி கிருஷ்ணனை கைது செய்ய போகும்போது செல்வியைப் பார்த்து காதலாகி கசிந்துருகி விட்டான். கிரிமினலின் தங்கையாக இருந்தாலும் சேற்றில் மலர்ந்த செந்தாமரை. அவளுடைய அண்ணன் சுரேஷை கொல்ல சொல்லி அசைன்மெண்ட் எடுத்த ரமேஷை பிடித்து உதைத்தால்தான் பின்னணி வெளிவரும்.
கடைசியாக கிருஷ்ணனை சந்தித்த ரமேஷ் எங்குபோனான் என யாருக்குமே தெரியவில்லை. அவன் கொல்ல ஒப்புக்கொண்ட கவிதாவும், ராமமூர்த்தியும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அப்படியிருக்க ரமேஷின் கதி?
திடீரென ஸ்டேஷனுக்குள் நுழைந்த ஒருவன், முதுகில் சுமந்து வந்த பையில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு தலையை எடுத்து டேபிளில் வைத்தான். ரமேஷின் தலை. “எம் பேரு ரவிச்சந்திரன்” என்று அவன் பேசத்தொடங்கினான்

ரவிச்சந்திரன்
லதாவை உயிருக்கு உயிராக காதலித்தான் ரவிச்சந்திரன். காதல் என்றால் அம்பிகாபதி-அமராவதி ரேஞ்சுக்கு தெய்வீகக்காதல். எப்படியும் லதாவை கைபிடித்து விடலாம் என்று ரவி நம்பினான். ஏனெனில் லதாவின் உயிர்த்தோழி கவிதா வேறு யாருமல்ல. ரவியின் சொந்த தங்கைதான். கவிதா சொன்னால் லதா கேட்பாள் என்று அவளிடம் சிபாரிசுக்கு போனான். ஆனால் லதா, ரமேஷ் என்று ஒருவனை காதலிப்பதாக கவிதா சொல்ல, மனசு உடைந்தான். காதல் தோல்வி அவனை கொலைவெறியனாக மாற்றியது. தனக்கு கிடைக்காத லதா ரமேஷுக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைத்தான்.
அவனைக் கொல்ல இது மட்டுமே காரணமில்லை. இன்னொரு காரணம் சித்ரா. இவள் யாரென்றால்?

சித்ரா
ராமமூர்த்தியின் ஆபிஸ் ரிசப்ஷனிஸ்ட் சித்ரா. சுறுசுறுப்பானவள். இவள் இல்லாமல் ஆபிஸே இயங்காது. அலுவலகத்தில் பணிபுரியும் சுறுசுறுப்பான எக்ஸ்க்யூடிவ்வான சுரேஷை ஒருதலையாக காதலித்தாள். ஒருநாள் அவளது ரூமில் தூக்கில் தொங்கினாள். தற்கொலை என்று போலிஸ் கேஸை ஊற்றி மூடினாலும், அது திட்டமிடப்பட்ட கொலை என்று சித்ராவின் அப்பாவுக்கு தோன்றியது. அவர் விசாரித்துப் பார்த்ததில் தேசவிரோதமான அலுவலக ரகசியம் ஒன்று சித்ராவுக்கு தெரிந்ததாகவும், அது போலிஸுக்கு போவதற்கு முன்பாக அவளை கொல்ல கூலிப்படை அமைக்கப்பட்டதாகவும் கண்டுபிடித்தார். அவர் ஒரு வாத்தியார். தன்னுடைய விசுவாசமான முன்னாள் மாணவனிடம் இதை சொல்லி அழுதார். அந்த மாணவன்தான் ரவிச்சந்திரன். சித்ராவை கொன்ற கூலிப்படைத் தலைவன் வேறு யாருமல்ல. ரமேஷ்தான்.

ராகவன்
இதுவரை வந்த எந்த கேரக்டர்களோடும் தொடர்பில்லாத மனிதர். ஆனால் அந்த கேரக்டர்களை உருவாக்கியவரே இவர்தான். மெகாசீரியல் ரைட்டர். தாய்க்குலத்தின் பேராதரவோடு பரபரப்பாக ஓராண்டு காலமாக ஓடிக்கொண்டிருந்த ‘நிர்மலா’ மெகாசீரியலின் சில காட்சிகளைதான் இதுவரை நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஏனோ தெரியவில்லை. இன்னும் ஐந்து எபிசோடுகளோடு சீரியலை முடித்துக் கொள்ளுங்கள் என்று சேனல் உத்தரவிட்டு விட்டது. என்ன செய்யலாம் என்று சீத்தலைச் சாத்தனார் மாதிரி பேனாவை எடுத்து மண்டையில் குத்திக் கொண்டிருந்தார்.
காலிங் பெல் கிர்ரியது. கதவைத் திறந்தார்.
சுரேஷ், சந்தியா, ராமமூர்த்தி, கவிதா, லதா, ரமேஷ், கிருஷ்ணன், செல்வி, அன்புசெழியன், ரவிச்சந்திரன், சித்ரா (இவள்தான் செத்துட்டாளே?) ஆகியோர் கும்பலாக நின்றிருந்தார்கள்.


(நன்றி : தினமலர் வாரமலர்)