1 ஜூலை, 2015

டிஜிட்டல் நார்சிஸம்

புராதன கிரேக்க கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் நார்சிசஸ். தண்ணீரில் தெரியும் தனது பிரதிபலிப்பையே காதலிப்பான் என்பது மாதிரி கேரக்டர் ஸ்கெட்ச். இவனை முன்வைத்துதான் சிக்மண்ட் ப்ராய்ட் ‘நார்சிஸம்’ என்கிற உளவியல் கோட்பாட்டினை முன்வைக்கிறார்.

வெட்கமே இல்லாமல் எதிலும் தன்னையே முன்னிலைப்படுத்தி பேசுவதும், சிந்திப்பதுமான நிலையை ‘நார்சிஸம்’ என்கிற மனரீதியான பிரச்சினையாக சொல்கிறார்கள் மனநிலை ஆய்வாளர்கள்.

சுற்றி வளைத்துச் சொல்வானேன். எப்போது பார்த்தாலும் உங்கள் ஸ்மார்ட்போனில் செல்ஃபீ எடுத்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்து, எத்தனை லைக்கு, என்னென்ன கமெண்டு என்று வெட்டியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறீர்களா?

நீங்கள் ஒரு நார்சிஸ்டாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கூகிளில் இமேஜஸ் தேடினால் சமீபமாக செல்ஃபீ படங்கள்தான் அதிகம் தட்டுப்படுகின்றன. செல்ஃபீ என்றால் தன்னைத்தானே படமெடுத்துக் கொள்வது என்றெல்லாம் ஏ, பி, சி, டி-யில் இருந்து உங்களுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியமில்லைதானே?

சாமானியர்கள் பிரபலங்கள் வித்தியாசமில்லாமல் எல்லோரும் தங்களை தாங்களே படம் எடுத்துக் கொண்டு, பெருமையாக அதை மற்றவர்களிடம் பகிரும் போக்கினை ‘டிஜிட்டல் நார்சிஸம்’ என்று புதுப்பெயர் சூட்டி அழைக்கிறார்கள். ‘ஸ்ட்’-டில் முடித்தால் ஏதோ கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட் மாதிரி கவுரவமாக இருந்துத் தொலைக்கிறது. இந்த டிஜிட்டல் நார்சிஸ்ட்டுகளை டிஜிட்டல் பைத்தியங்கள் என்று அழைப்பதே முறை.

தொண்ணூறுகள் வரை ஊடகங்கள் ஏதோ தேவலோகத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருப்பதான தோற்றம் மக்களுக்கு இருந்தது. ஊடகங்களில் இடம்பெறும் பிரபலங்கள், சாமானியர்களால் அணுக முடியாத தேவதூதர்களாக இருந்தார்கள்.

தொலைக்காட்சித் துறையின் வளர்ச்சி காரணமாக புதிய சிந்தனைகளுக்கான, வடிவங்களுக்கான தேவை பெருகியது. தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பாக ஆணியடித்து செட்டில் ஆகிவிட்டவர்களுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் நுகர்வுப் பசியெடுத்துக் கொண்டே இருந்தது. அவர்களை திருப்திபடுத்த ரியாலிட்டி ஷோக்கள் அறிமுகப்படுத்தப் பட்டன.

தேவதூதர்கள் பூமிக்கு வந்து தரையில் கால்பதித்து சாமானியர்களோடு பேசினார்கள். சாமானியர்களுக்கும், பிரபலங்களுக்குமான இடைவெளி குறைந்தது. ஒரு பிரபலத்தை பற்றி, அந்த பிரபலத்துக்கே தெரியாத செய்திகளை எல்லாம் சாமானியன் தெரிந்து வைத்துக் கொண்டான். அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களின் நீட்சியாக இணையம், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மில்லெனியம் ஆண்டுகளில் மகத்தான ஊடகமாக உருவெடுக்கிறது.
மரபு ஊடகங்களை முறையான பயிற்சி பெற்ற ஊடகவியலாளர்கள்தான் நடத்த முடியும். மாறாக நவீன ஊடகமான இணையம் பெரும்பாலும் சாமானியர்களை சார்ந்திருக்கிறது. ஈமெயிலில் தொடங்கி சமூகவலைத்தளங்கள் வரை அவர்களது ஆதிக்கம்தான். இணைய ஊடகத்தில் இயங்க விரும்பும் பிரபலங்கள், சாமானியர்களை தாஜா செய்துதான் தங்களை புரமோட் செய்துக்கொள்ள முடிகிறது. லைக்குகள் மற்றும் ரீட்விட்டுகளின் எண்ணிக்கைதான் அந்த பிரபலத்தின் பிரபல அளவை அளவிட உதவுகிறது.

இதற்கிடையே செல்போன் என்கிற தகவல் தொடர்பு சாதனம் வருகிறது. ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள என்கிற நிலை மாறி இது கேமிராவாகவும் செயல்படுகிறது. போட்டோ எடுப்பது மட்டுமின்றி இதில் வீடியோவும் எடுக்கலாம். செல்போனும், இணையமும் இணைந்த புள்ளிதான் முக்கியமானது.

தான் எடுத்த போட்டோவையோ, வீடியோவையே ஃபேஸ்புக்கில் பதிந்து அதை உலகின் அடுத்த மூலையில் இருப்பவனுக்கும் காட்ட முடிகிறது என்கிற ‘அதிகாரம்’ சாமானியனுக்கு கிடைக்கிறது. தானும் பிரபலம்தான் என்கிற எண்ணம் அவனுக்குள் இப்போது வேரூன்றுகிறது.

குஷ்பூவே ட்விட்டரில் தனக்கு நன்றி சொல்லிவிட்டார் என்று பக்கத்து வீட்டுக்காரனை கேவலமாக பார்க்க ஆரம்பிக்கிறான். “கலைஞரும், நானும் ஃபேஸ்புக்குலே ப்ரெண்ட்ஸ், தெரியுமா?” என்று பெருமை பேச ஆரம்பிக்கிறான்.

கருத்துக் களங்களும், வலைப்பூக்களும், சமூக வலைத்தளங்களுமாக இணையமெங்கும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஓராயிரம் வாசல்களில் கன்னாபின்னாவென்று நுழைந்து விளையாடுகிறான். நூறு லைக்கும், முப்பது கமெண்டும் பெற்றுவிட்ட பிறகு அவனாகவே ‘கெத்து’ என்று நினைத்துக் கொள்கிறான்.

‘நான்’, ‘என்’, ‘எனக்கு’, ‘என்னுடைய’, ‘என் வீடு’, ‘என் அறை’, ‘என் பைக்’ ‘என் கார்’ என்று பர்ஸ்ட் பர்சனிலேயே பேச ஆரம்பிக்கிறான். எந்நேரமும் தன்னை தானே படமெடுத்து ஃபேஸ்புக்கில் போடுகிறான். ‘நைஸ்’, ‘பியூட்டிஃபுல்’ ‘ஹேண்ட்ஸம்’ ‘அழகு’ கமெண்டுகளுக்காக ஒற்றைக்காலில் தவம் கிடக்கிறான்.

போதுமான வாசிப்போ, புரிதலோ இன்றி தத்துவங்கள் பேச ஆரம்பிக்கிறான். உலகின் சர்வ பிரச்சினைகளுக்கும் தன் சிந்தனைகளில் தீர்வு(!) காண்கிறான். ‘நான் என்ன சொல்கிறேன் என்றால்...’ ‘இந்தப் பிரச்சினையை நான் எப்படி பார்க்கிறேன் என்றால்...’ ‘குப்பையாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை நான் எடுத்திருந்தேன் என்றால்...’ ‘ என்று அவனது ஈகோ, நார்சிஸத்தின் உச்சத்தை எட்டுகிறது.
வேண்டுதல் மாதிரி இவனை ஏற்றிவிடவே நூறு பைத்தியங்களாவது இணையத்தில் திரிகின்றன. ‘சாட்டையடி சகோதரி’ ‘பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள் நண்பா’, ‘அருமையான சிந்தனை, ஆழ்ந்த கருத்து’ மாதிரி ஓராயிரம் ஒன்லைனர் புகழாரங்களை ஒரு வேர்ட் ஃபைலில் சேமித்து வைத்துக் கொண்டு, ஆங்காங்கே ஆணி மாதிரி காபி & பேஸ்ட் அடித்துவிட்டுச் செல்வார்கள்.

இவர்களுக்கு என்ன லாபம்?

மொய் மாதிரிதான். பதிலுக்கு இவனுடைய நார்சிஸ ஸ்டேட்டஸ்களுக்கு அவர்கள் வந்து லைக் போட்டு, ‘பிரித்து மேய்ந்துவிட்டீர்கள்’ கமெண்டு போட வேண்டாமா?

இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் லாகின் செய்து சந்தோஷமாக மேய முடிந்தால், சந்தேகமே இல்லை. சத்தியமாக நாம் மெண்டல்தான்.

நாம் வாழும் உலகமே மாபெரும் மூடர்கூடமோ என்கிற சந்தேகத்தை இணையம் ஏற்படுத்துகிறது.

(நன்றி : தினகரன் வசந்தம்)

29 ஜூன், 2015

விருது கேட்டு விசித்திர வழக்கு

இன்று சென்னையில் பிரசித்தி பெற்ற அந்த விருது விழா நடக்கிறது. யாருக்கு விருது, எந்தப் படம் சிறந்த படமென்று நாமினேட் ஆனவர்கள் நகம் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்-

கன்னட இயக்குனர் தயாள் பத்மநாபன் மட்டும் வயிறு எரிந்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் அவர் இயக்கிய ‘ஹக்கட கோனே’ (கயிறுக்கு முடிவு) திரைப்படம் முதன்முதலாக திரையிடப்பட்டது. அதையடுத்து சர்வதேச அளவிலும் பல திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு பாராட்டப்பட்டது. கன்னட ஊடகங்களும் கடந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படம் என்று ஒட்டுமொத்தமாக ஒரே குரலில் பாராட்டுப் பத்திரம் வாசித்தன.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் மேடையேறிய நாடகம் ஒன்றினை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட படம். மரணத் தண்டனை கைதி ஒருவனின் கடைசி நாட்கள்தான் கதை. தன்னுடைய இந்த நிலைமைக்கு யாரெல்லாம் காரணம் என்று நினைக்கிறானோ, அவர்களிடமெல்லாம் சில கேள்விகளை முன்வைக்கிறான். தன்னை இப்படி ஆக்கியது சமூகம்தான் எனும்போது தனக்கு மட்டும் ஏன் தண்டனை என்கிற வினாவுக்கு விடை தேட முயலுகிறான். தனக்கு மரணத் தண்டனை சரியென்றால், தான் செய்த கொலையும் சரிதான் என்று வாதிடுகிறான். இப்படியாக சிந்திக்கத் தூண்டும் காட்சிகள், வசனங்கள் வழியாக நகர்கிறது படம். நீதி என்பது குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை தருவதா அல்லது அவர்களை சீர்த்திருத்துவதா என்கிற விவாதத்தை வலுவாக முன்வைக்கிறது ‘ஹக்கட கோனே’.

துரதிருஷ்டவசமாக இன்று நடைபெறும் விருதுவிழாவின் இறுதிச் சுற்றுக்கு இப்படம் நடுவர்களால் பரிந்துரைக்கப்பட வில்லை. ‘திருஷ்யம்’, ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ரங்காச்சாரி’, ‘உக்ரம்’, ‘உளிடவாரு கண்டதே’ ஆகிய படங்கள்தான் தேர்வாகி இருக்கின்றன. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட எந்த பிரிவுகளிலுமே தன் படத்துக்கு இடமில்லை என்றதும் கொதித்துப் போனார் இயக்குனர் தயாள் பத்மநாபன். உலகமே பாராட்டும் படத்துக்கு உள்ளூரில் அவமானமா என்று சீறினார்.

தயாள், நம் விழுப்புரத்து ஆள்தான். சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்து, மிக ஏழ்மையான நிலையில் வளர்ந்து இந்த நிலைக்கு வந்தவர். ‘மர்ம தேசம்’ நாகாவிடம் சினிமா கற்றவர். கன்னட சினிமாவுக்கு இடம்பெயர்ந்து கதாசிரியரானார். இயக்குனர், தயாரிப்பாளர் என்று படிப்படியான வளர்ச்சி. சுயமரியாதையை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்கிற கொள்கை உடையவர்.

எனவேதான், கோர்ட்டுக்குப் போயிருக்கிறார். “என் படத்தை நீதிமன்றமே பார்க்கட்டும். விருதுக்கு பரிந்துரைக்கப்படக்கூட தகுதியில்லாத படமா என்று நீதிபதிகள் தீர்ப்பு சொல்லட்டும்” என்று கிளம்பியிருக்கிறார். எத்தனையோ வழக்குகளை சந்தித்த நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு விசித்திரமானது. ஏனெனில் இதுவரை யாருமே, ஒரு தனியார் வழங்கும் விருதில் நீதிமன்றத்தை தலையிட சொல்லி வழக்கு போட்டதில்லை.

தமிழ் சினிமாவில் ஊடகங்கள் தங்கள் படங்களை நியாயமாக விமர்சிக்கவில்லை என்று ‘கற்றது தமிழ்’ ராம், தங்கர்பச்சான் போன்றவர்கள் பொங்கியிருக்கிறார்கள். ஒரு தனியார் விருது வழங்கும் விழாவில், தன் படத்தின் பாடல் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று அந்த விழா மேடையிலேயே கூட ராம் பொரிந்துத் தள்ளியிருக்கிறார்.

ஆனால்-

யாருமே இம்மாதிரி பிரச்சினைகளுக்காக இதுவரை நீதிமன்றத்தை நாடியதில்லை. ஒருவேளை தயாள் பத்மநாபனுக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்தால், அவார்டு கொடுப்பவர்களின் கதி இனி அதோகதிதான்.

கடந்த 26-6-15 அன்று தினகரன் இணைப்பிதழான ‘வெள்ளி மலர்’ இதழில் நாம் எழுதியிருந்த சிறு கட்டுரை இது.

விருதுகளுக்காக ஒரு இயக்குனர் கோர்ட் படி ஏறினார் என்பது ஊடகங்களுக்கு அல்வா மாதிரி மேட்டர். ஏன் இந்த செய்தி தீயாக பரவவில்லை என்று தெரியவில்லை (எனக்குத் தெரியும், ஆனால் வெளிப்படையாக சொல்ல மாட்டேன்). எது எப்படியோ, குறைந்தது நாம் மட்டுமாவது ‘நியூஸ் வேல்யூ’ அறிந்து, அம்பலம் ஏற்றிவிட்டோம்.
இயக்குனர் தயாள் பத்மநாபன், இச்செய்தியை தினகரனில் வாசித்துவிட்டு வெள்ளிமலர் ஆசிரியர் குழுவினரிடம் தொலைபேசியில் பேசினார். தன்னுடைய தன்மான உணர்வை, தாய்மொழியில் வெளிவரும் ஒரு பத்திரிகை அங்கீகரித்தது குறித்த நெகிழ்ச்சி அவரது குரலில் தெரிந்தது.

அந்த செய்தியின் ‘ஃபாலோ-அப் நியூஸ்’ என்னவென்றும் போனில் தெரிவித்துவிட்டு, ஆதாரமாக சில கோர்ட்டு ஆவணங்களை மின்னஞ்சல் செய்திருக்கிறார்.

விஷயம் என்னவென்றால், இந்த விசித்திரமான வழக்கில் வெற்றி இயக்குனருக்கே.

பெங்களூர் சிவில் கோர்ட்டு (CCH-32), 24-06-2015 அன்று கொடுத்திருக்கும் தீர்ப்பில் ‘ஹக்கட கோனே’ திரைப்படத்தை சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் ஆகிய நான்கு பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது.

அனேகமாக, உலக அளவிலேயே இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்திருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கக்கூடும். இந்த தீர்ப்பு திரையுலகில் இயங்கும் படைப்பாளிகளுக்கு, எதிர்காலத்தில் உதவக்கூடும். விமர்சனம் செய்யும் / விருது வழங்கும் ஊடகங்களும், நிறுவனங்களும் இனி கூடுதல் கவனத்தோடு இயங்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால்-

26ந்தேதி மாலை சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில், கோர்ட்டின் ஆணை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது.

தயாள் பத்மநாபன் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. Our fingers crossed!

25 ஜூன், 2015

நிலவை முத்தமிடு

சீனு, கல்லூரிப் படிப்பின் கடைசி ஆண்டில் இருக்கிறான். அம்மா, அப்பா, அக்கா என கச்சிதமான குடும்பம்.

அப்பா, எழுபதுகளின் ஜாக்கிரதை உணர்வுகளோடே வாழ்க்கையை எதிர்கொள்கிறவர். பாட்டனும், பூட்டனும் சும்மாவா சொல்லியிருப்பான். எல்லாத்துக்கும் ஓர் அர்த்தம் இருக்கும் என்று ஏற்கனவே விதிக்கப்பட்ட டெம்ப்ளேட் வாழ்க்கையை நிதானமாக வாழ்ந்து முடிக்க நினைக்கும் அந்த காலத்து ஆள். மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்.

சீனுவோ, உலகமயமாக்கலின் விளைவு. நாலு ரவுண்டு ஆடினால், ஜோக்கர் நிச்சயம் வந்துவிடும். ரிஸ்க்கே எடுக்காமல், வருமுன் காப்போம் என்று வழவழா கொழகொழாவென்று வாழ்வதில் அர்த்தமில்லை என்று நினைப்பவன். கல்லூரி நாடக விழாவில் தொடர்ச்சியாக இரண்டு முறை முதல் பரிசினை வென்ற படைப்பாளி. மூன்றாவது முறையும் கோப்பையை வென்றுவிட்டால், நிரந்தரமாக அவனிடமே கோப்பை இருக்கும்.

அப்பாவுக்கு படிப்பு தவிர்த்த மகனின் மற்ற செயல்பாடுகளில் ஒப்புதல் இல்லை. எனவே, தன்னுடைய நாடக ஆர்வத்தை அப்பாவிடமிருந்து மறைக்கிறான் சீனு.

தான் பெற்ற மகன், தான் விரும்பும் வகையில்தான் வளரவேண்டும் என்று நினைக்கிறார் அப்பா. ஏனெனில் அவர், அவருடைய அப்பா விரும்பிய வகையில்தான் வளர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தனக்கு தனித்துவம் இருக்கிறது என்று நம்புகிறான் சீனு. அப்பாவின் நிழலில் ஆடு மாதிரி பாதுகாப்பாக வளர்ந்து கல்யாணம் கட்டி, குழந்தை பெற்று தானும் அதே அப்பா மாதிரி வாழ்வதை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கலைத்துறைதான் தன்னுடைய வாழ்வின் அர்த்தமென்று கருதுகிறான்.

வென்றது சீனுவா, அவனுடைய அப்பாவா என்பதுதான் கதை.
1995ஆம் ஆண்டு ‘பாக்யா’ வார இதழில் தொடராக பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ‘நிலவை முத்தமிடு’.

வர்ணனைகள் எதுவுமின்றி வெறும் வசனங்களால் மட்டுமே இருநூறு பக்கங்களுக்கும் மேலான முழுநாவலும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் இந்த வடிவில் வேறு ஏதேனும் நாவல் எழுதப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால்- வெறும் வசனங்களால் மட்டுமே தமிழில் எழுதப்பட்ட முதல் தொடர்கதை இதுதானென்று பட்டுக்கோட்டை பிரபாகர் முன்னுரையில் சொல்கிறார்.

வர்ணனைகள் இல்லாத இழப்பை வசனங்களில் புத்திசாலித்தனமாக ஈடுகட்டியிருக்கிறார் பட்டுக்கோட்டை. எனினும் அதற்காக திரும்பத் திரும்ப பாத்திரங்களின் பெயர்கள் எல்லா வசனங்களிலும் இடம்பெறுவது வாசிக்க கொஞ்சம் இடையூறாக இருக்கிறது. சீனுவின் நண்பன் அத்தியாய ஆரம்பத்தில் ‘சீனு’ என்று பெயர் சொல்லி அழைப்பது ஓக்கே. ஆனால், அவன் ஒவ்வொரு முறை இவனிடம் பேசும்போதும் “டேய் சீனு” “இங்க பார்றா சீனு” “என்னடா சொல்றே சீனு” என்று திரும்பத் திரும்பப் போடும் சீன் கொஞ்சம் தொல்லைதான். ஆனால்- இதைத் தவிர்த்திருந்தாலும் வர்ணனைகள் இல்லாத நாவலில், சில இடங்களில் வாசகனுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வாசகனுக்கு வலிக்கக்கூடாது என்கிற அக்கறையில் தன்னுடைய எழுத்துவன்மையை மிகவும் அடக்கி வாசித்திருக்கிறார் பிரபாகர்.

நாவலின் முடிவு, அபாரம். அனுபவமும் மண்ணை கவ்வுகிறது. துணிச்சலான இளமைத்துடிப்பும் வெற்றிவாய்ப்பை இழக்கிறது. நம்பிக்கைக்கான கீற்று நட்சத்திர ஒளியாய் தென்பட, அவர்களது பயணம் தொடர்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய இளைஞர்களையும், அவர்களது பெற்றோரையும் பற்றிய கதை. இந்த கால ஃபேஸ்புக் தலைமுறை, இக்கதையை வாசித்தால், “வீட்டுலே காலேஜிலே எல்லாம் இப்படிதான் பக்கம் பக்கமாவா வசனம் பேசுவாங்க?” என்று நம்பாமலேயே போகலாம்.

ஆனால்-

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படிதான் தமிழ் சமூகம் இருந்தது. வாயைத் திறந்தாலேயே எவனும் மூடமாட்டான். சிவாஜிக்கு ஆரூர்தாஸ் எழுதிய வசனங்கள் மாதிரி பக்கம் பக்கமாக பேசி தீர்த்த தலைமுறை அது. எல்லா வீடுகளுமே எப்போதும் சத்தமாகதான் இருக்கும். தாகம் எடுத்தால், “தண்ணி கொண்டு வா” என்று மணிரத்னம் படம் மாதிரி சுருக்கமாக கேட்டுத் தொலைக்க மாட்டார்கள். “தவிச்ச வாய்க்கு தண்ணி” என்று ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்கு உவமானம், எடுத்துக்காட்டு, அழகியல் என்று மொழியின் எல்லா எழவு சாத்தியங்களையும் பயன்படுத்திவிட்டு, கடைசியாக “கொஞ்சம் தண்ணி கொடேன், தாகமா இருக்கு” என்று முடிப்பார்கள்.

என் அப்பாவெல்லாம் அப்படிதான் பேசுவார். “படிச்சித் தொலையேண்டா” என்று சிம்பிளாக சொல்ல மாட்டார். “காமராஜர் படிச்சதில்லை, கலைஞர் படிச்சதில்லை, எம்.ஜி.ஆர் படிச்சதில்லை. ஆனா நாவலரும், பேராசிரியரும்...” என்று ஆரம்பித்து அவரது அரசியல் வரலாற்று சமூக அறிவினை எல்லாம் கொட்டி பத்து நிமிடங்களுக்கு தாலியறுத்து, “ஒழுங்காப் படிச்சி உருப்படுடா” என்று முடிப்பார். கிரிக்கெட் பேட்டை எடுத்து அப்படியே வழுக்கை மண்டையில் நாலு போடு போடலாமா என்று வெறிவரும்.

அப்பாவாவது பரவாயில்லை. அம்மா இன்னும் மோசம். பேச ஆரம்பித்தால், துலாபாரம் சாரதா மாதிரி குடும்பக் கஷ்டம், சரீரக் கஷ்டம், பெண்ணியம், லஷ்மி தொடர்கதை என்றெல்லாம் காண்டெக்ஸ்ட்டே இல்லாமல் நான்ஸ்டாப்பாக பேசிக்கொண்டே இருப்பார். இப்போது மெகாசீரியல்களில் ஏன் பெண்கள் பக்கம் பக்கமாக பேசுகிறார்கள் என்றால், மெகாசீரியல் எழுதும் எழுத்தாளர்கள் எண்பதுகள்/தொண்ணுறுகள் தலைமுறை. நல்லவேளையாக இந்த சீரியலையெல்லாம் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருப்பதால், இப்போதைய பெண்கள் இப்படி பேசி புருஷன்களை/மகன்களை சாகடிப்பதில்லை.
அனேகமாக, பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத்துதான் தன் எதிர்காலம் என்று முடிவெடுத்தபோது, அவரது அப்பா நூறு, நூற்றி ஐம்பது பக்கங்களுக்கு வசனம் பேசியிருப்பார் என்று கருதமுடிகிறது.

‘நிலவை முத்தமிடு’ என்னுடைய டீனேஜ் வயதுகளை நினைவுறுத்துகிறது. அப்பாவோடு நான் போட்ட சண்டைகள், அம்மாவை டபாய்த்த சமயங்கள் எல்லாம் அப்படியே மாண்டேஜ் ஷாட்டுகளாக வந்து போகிறது.

இந்த நாவலின் கருமையம்தான் ‘இந்தியன்’ திரைப்படம் என்று தோன்றுகிறது. ஷங்கர் காப்பி அடித்தார் என்றெல்லாம் குற்றம் சாட்டவில்லை. பட்டுக்கோட்டையாரும், ஷங்கரும் ஒரே தலைமுறையினர்தானே? எனவே ஒரே மாதிரியாக சிந்தித்திருக்கலாம். அப்பா-மகன் முரண் என்கிற மைக்ரோ ஸ்டோரி மீது தேசத்தை உறிஞ்சும் ஊழல் என்று மேக்ரோ பிரச்சினையை பெயிண்ட் அடித்ததுதானே ‘இந்தியன்’ கதை. இந்த நாவலில் வரும் அகிலா எனும் அக்கா கேரக்டரை, ‘இந்தியன்’ படத்தில் வரும் கஸ்தூரியோடு அப்படியே பொருத்த முடிகிறது.

எனினும்-

‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தின் ஒன்லைன் சத்தியமாக இதிலிருந்துதான் உருவப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. ‘பொம்மரிலு’ பாஸ்கர் நிச்சயமாக இந்த கதையை வாசித்திருப்பார் என்றே நம்புகிறேன்.

நாவலின் நடுவில் நாடகம் போடுவது பற்றி டிஸ்கஷன் செய்யும்போது வரும் ஒரு குட்டிக்கதை, அப்படியே ‘நீ வருவாய் என’ (99 தானே, இந்த நாவல் 95) படத்தின் ஒன்லைனராக இருப்பது இன்னுமொரு ஆச்சரியம்.

இதெல்லாம் யதேச்சையாகவும் நடந்திருக்கலாம். ஆனால் தோழர்களே, தமிழில் சமகால இலக்கியம் என்று நம்பப்படும் கதைகளை எல்லாம் சினிமாவாக்கினால் படுதோல்விதான். மாறாக இதுபோன்ற வெகுஜனக் கதைகளில் இருந்து எடுக்கப்படும் கரு, மக்கள் மத்தியில் நன்றாக எடுபடும். மேலே நான் ஒப்பிட்டிருக்கும் மூன்று படங்களுமே சூப்பர்ஹிட் படங்கள் என்பதை கவனியுங்கள். இலக்கியம், சாதாரண மக்களின் வாழ்க்கையிலிருந்து எவ்வளவு அந்நியப்பட்டு நிற்கிறது?

நூல் : நிலவை முத்தமிடு
எழுதியவர் : பட்டுக்கோட்டை பிரபாகர்
பக்கங்கள் : 228
வெளியீடு : பூம்புகார் பதிப்பகம்
விலை : ரூ.45

22 ஜூன், 2015

நாளைய தீர்ப்பு முதல் புலி வரை!

அந்த கட்டவுட்டை பார்த்ததுமே எல்லாருக்கும் உடனடியாக பூஸ்ட் அடித்ததுமாதிரி ‘தன்னம்பிக்கை’ ஏற்பட்டது என்று சொன்னால் மிகையில்லை.

“இவனெல்லாம் ஹீரோ ஆயிட்டான். நாம ஆக முடியாதா?”

முப்பது அடி உயரத்துக்கு ஒல்லியான விஜய்யின் கட்டவுட். கீழே ‘அனைத்திந்திய விஜய் ரசிகர் மன்றம்’ என்று எழுதப்பட்டிருந்ததை கண்டவர்கள் காண்டு ஆனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அறிமுகப் படத்திலேயே ‘அனைத்திந்திய ரசிகர் மன்றம்’ ட்ரெண்டினை கொண்டுவந்தவர் விஜய்தான். இன்று, ரஜத் (‘இயக்குனர்’ படத்தின் ஹீரோ கம் இயக்குனர் கம் ஒளிப்பதிவாளர், படத்தில் எட்டு ஹீரோயினாம்) என்பவருக்கு ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்றால், 1992லேயே விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ.சி. செய்த அடாவடியான அமர்க்களங்கள்தான் காரணம். படம் வெளியான அரங்கங்கள் முழுக்க ‘ஸ்டார்’ டிசைனால் அலங்கரித்திருந்தார்கள். அப்போதெல்லாம் ரஜினிக்கு மட்டும்தான் ஸ்டார் அலங்காரம் (அவர் சூப்பர் ஸ்டார் இல்லையா?) என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது.

எக்சர்சைஸ் செய்து ஆர்ம்ஸ் காட்டி அறிமுகமாகும் விஜய்யை திரையில் பார்த்த அத்தனை பேரும் கை கொட்டி சிரித்தார்கள். ஒரு வகையில் பார்க்கப் போனால் வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷூக்கும், பவர்ஸ்டார் சீனிவாசனுக்கும் முன்னோடி இளையதளபதி விஜய்தான்.

அமெரிக்காவில் ஆக்டிங் படித்துவிட்டு வந்திருக்கிறார் மாதிரி பில்டப்புகள் எடுபடவில்லை. ‘நாளைய தீர்ப்பு’ அட்டர் ப்ளாஃப். விஜய்யின் அறிமுகம் கேலிக்குரியதாக ஆகிப்போனது.

கன்னி முயற்சியே படுதோல்வி எனும்போது, கொஞ்சம் ‘கேப்’ விட்டுதான் ஆடுவார்கள். ஆனால், விடாமுயற்சிக்கு பேர் போன எஸ்.ஏ.சி., எப்படியாவது மகனை தேற்ற விஜயகாந்திடம் சரணடைந்தார். ஏனெனில் தமிழ் சினிமாவில் அப்போதெல்லாம் தோல்வியடைந்தவர்களின் வேடந்தாங்கல் கேப்டன்தான். விஜயகாந்துக்கு திரையுலகில் அடையாளம் பெற்றுத் தந்தவர் எஸ்.ஏ.சி. அந்த நன்றிக் கடனுக்காக ‘செந்தூரப் பாண்டி’ தயார் ஆனது (பிற்பாடு இதே மாதிரி சூரியாவுக்கும் வாழ்வு கொடுக்க, கேப்டன் ‘பெரியண்ணா’ நடித்தார். ஆனால், அப்போது கேப்டனுக்கே வாழ்வு இல்லை என்பதால், அது backfire ஆகிவிட்டது).

‘செந்தூரப் பாண்டி’, ஆஹா ஓஹோவென்று சொல்ல முடியாவிட்டாலும் ‘ஹிட்’ ஆனது. யுவராணியோடு, விஜய்யின் கெமிஸ்ட்ரி கவர்ச்சியாக ‘கபடி’ ஆடியதில் பிக்கப் ஆனது. இந்த பாயிண்டை அப்படியே பிக்கப் செய்து, ‘ரசிகன்’ ஆக்கினார் எஸ்.ஏ.சி.

‘ரசிகன்’ படப்பிடிப்பில் இருந்தபோது, ஏதோ ஒரு சினிமா பத்திரிகையில் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர் ஒருவரின் பேட்டியை வாசித்திருந்தேன். அநேகமாக எஸ்.பி.ராஜ்குமார் என நினைவு. ‘இளைய தளபதி’ என்கிற வார்த்தையை முதன்முதலாக கேட்டது அப்போதுதான். ஸ்டண்ட் காட்சிகளில் எல்லாம் டூப் போடாமலேயே, இளைய தளபதி எப்படி ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார் என்பது அந்த பேட்டியில் விரிவாக பதிவாகி இருந்தது.

செந்தூரப் பாண்டியின் மூலமாக பட்டி தொட்டியெங்கும் அறிமுகமாகியிருந்த விஜய்க்கு, ‘ரசிகன்’ ஓபனிங் பெரிய சவாலாக எல்லாம் இல்லை. ஸ்யூர் ஹிட் ஸ்க்ரிப்ட். வைல்டான செக்ஸ். ஸ்ட்ராங்கான காமெடி. லேசான செண்டிமெண்ட். ‘பம்பாய் குட்டி, சுக்கா ரொட்டி’ பாட்டுக்கு தமிழ்நாடே டேன்ஸ் ஆடியது. விஜயின் புயல்வேக நடன அசைவுகளே அவரது தனித்துவமானது. ‘ஆட்டோ ராணி ஹாரனை கொஞ்சம் நானும் அமுக்கட்டுமா?’ பாடலில் ‘ஹாரனுக்கு’ சென்ஸாரில் தடா போட அதுவே பரபரப்பாகி படத்துக்கும் விளம்பரமாக அமைந்தது. சங்கவி, ஸ்ரீவித்யா, விஜயகுமார், மனோரமா, கவுண்டமணி, செந்தில், ‘மடிப்பு அம்சா’ விசித்ரா என்று பிரபலமான நட்சத்திரப் பட்டாளத்தை எப்படி ஒரே படத்தில் கட்டி மேய்ப்பது என எஸ்.ஏ.சி. பாடமே எடுத்திருந்தார்.

விஜய்யின் முகத்தை மோசமாக எழுதிய குமுதத்தின் விமர்சனத்தை எல்லாம் தவிடுபொடியாக்கி ‘ரசிகன்’ வெள்ளிவிழா கொண்டாடியதால், விஜய்க்கு ஏகப்பட்ட கிராக்கி. தன் மகனை மாஸ் ஹீரோவாக வடிவமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ரசிகன் டைப் ஸ்க்ரிப்டுகளையே தேர்ந்தெடுத்தார் எஸ்.ஏ.சி. ‘தேவா’, ‘விஷ்ணு’ போன்ற படங்கள் வசூலில் குறைவைக்கவில்லை.

ரசிகனில் ‘பம்பாய் குட்டி’ பாடலை விஜய்யே பாடியிருந்தார். பாடல் ஓடும்போது ‘இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்’ என்று உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக வித்தியாசமாக ஒரு டைட்டில் போட்டார் எஸ்.ஏ.சி.

பின்னணிப் பாடகராகவும் விஜய் (அவருடைய தாய்மாமா எஸ்.என்.சுரேந்தர், அவரும் சில படங்களில் விஜய்க்கு பின்னணி பாடியிருக்கிறார், அம்மாவும் நல்ல பாடகி) நிலைபெற்றுவிட, அடுத்தடுத்த படங்களில் விஜய்யையே பாடவைக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டினர். நல்ல குரல்வளம், நளினமான நடன அசைவுகள், காமெடி என்று வழக்கமான நடிப்பை தாண்டிய ப்ளஸ் பாயிண்டுகள் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் இமேஜை பெற்றுக் கொடுத்தது.

இதே காலக்கட்டத்தில் விஜய்க்கு போட்டி நடிகர்கள் என்றால் அரவிந்த்சாமி, பிரபுதேவா, பிரசாந்த் போன்றவர்கள்தான். அஜித்தெல்லாம் அப்போது ஆட்டையிலேயே இல்லை. யாருமே எதிர்ப்பார்க்காமல் சட்டென்று பிக்கப் ஆன ஆல்டைம் வொண்டர் அஜித். அப்போதிருந்த விஜய்யின் சகப்போட்டியாளர்களுக்கு அவ்வளவு சமர்த்து போதாது என்பதும் அவரது அதிரடிப் பாய்ச்சலுக்கு உதவியது.

மசாலா ரூட்டிலேயே போய்க்கொண்டிருந்த விஜய்க்கு காதல் படங்களிலும் நடித்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏனெனில் பிரசாந்தும், சில குட்டி நடிகர்களும் இந்த ஏரியாவில் ரவுண்டு கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அம்மாதிரி அவர் தேர்ந்தெடுத்த சில ஸ்க்ரிப்டுகள் ‘ராஜாவின் பார்வையிலே’ (அஜித்துக்கு துக்கடா வேடம்), ‘சந்திரலேகா’, ‘பூவே உனக்காக’, ‘வசந்தவாசல்’, ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ போன்றவை.

இதில் ‘பூவே உனக்காக’ யாருமே எதிர்பாராத அதிரிபுதிரியான ஹிட் (இயக்குனர் விக்ரமனுக்கும் இது ரீபர்த்). நல்ல இயக்குனரிடம் மாட்டினால், விஜய்யும் நல்ல நடிகர்தான் என்பது புரிந்தது. இந்தப் படத்தில் நடிக்கும்போது போதிய ஆர்வம் காட்டாமல் ஏனோதானாவென்றுதான் விஜய் நடித்தார். இதன் வெற்றியிலும் அவருக்கு ஏகத்துக்கும் சந்தேகமிருந்தது. மாஸ் ஹீரோவான தனக்கு க்ளாஸ் சரிப்படாது என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.

ஆனால்-

அந்த ‘பூவே உனக்காக’தான் விஜய்யின் நடிப்புலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்த விஜய்யின் டெம்ப்ளேட் படமான ‘மாண்புமிகு மாணவன்’ (எஸ்.ஏ.சி. இயக்கம்) படுதோல்வி அடைந்தது. இனிமேல் விவரமான ஸ்க்ரிப்டுகளைதான் ஓக்கே செய்ய வேண்டும் என்று விஜய் முடிவெடுத்து விட்டதால், இயக்குனரான எஸ்.ஏ.சி.யின் திரையுலக வாழ்க்கையே ஆட்டம் கண்டது குறிப்பிடத்தக்கது. விஜய், கதையை நம்பி நடித்த ‘லவ் டுடே’வும் ஹிட்.

வசந்தின் ‘நேருக்கு நேர்’ பெரிய ஹிட் இல்லையென்றாலும், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் குறித்த அறிவினை விஜய் அறிந்துக்கொள்ள உதவியது. ‘காதலுக்கு மரியாதை’ தமிழ் திரையுலகில் தவிர்க்கவே முடியாத நடிகர் என்கிற அந்தஸ்தை அவருக்கு பெற்றுத் தந்தது.

அதன் பிறகு அவர் தேர்ந்தெடுத்து நடித்த இரண்டு ஸ்க்ரிப்டுகள் வெற்றி (நினைத்தேன் வந்தாய், பிரியமுடன்). அவருக்காக அப்பா ஓக்கே செய்திருந்த ‘நிலாவே வா’ படுதோல்வி அடைந்ததோடு, கே.டி.குஞ்சுமோன் என்கிற தயாரிப்பாளரை நிரந்தர வனவாசத்துக்கும் அனுப்பியது (இந்த அட்டர் ஃப்ளாபுக்கு பிறகு விஜய்யை வைத்து உடனடியாக இன்னொரு  அட்டர் ஃப்ளாபையும் தயாரித்தார் குஞ்சுமோன், ‘என்றென்றும் காதல்’).

‘துள்ளாத மனமும் துள்ளும்’ சூப்பர்ஹிட் படத்துக்கு பிறகு, விஜய் எதை தொட்டாலும் தோல்வி என்கிற நிலை ஏற்பட்டது. திரையுலகில் எல்லா பெரிய நடிகர்களுமே கடந்து வரவேண்டிய சோதனைக்காலம் இது. இத்தனைக்கும் ‘மின்சார கண்ணா’, ‘கண்ணுக்குள் நிலவு’ போன்ற படங்கள் கமர்ஷியலாகவும் ஹிட் ஆகக்கூடிய அம்சங்களை கொண்டிருந்தும் தோல்வி அடைந்தன. அப்பாவின் இயக்குனர் அந்தஸ்தை தக்கவைப்பதற்காக அவர் நடித்துக் கொடுத்த ‘நெஞ்சினிலே’, எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றியது.

எஸ்.ஜே.சூர்யாவின் முதல் படம் வாலி. அஜித்தின் இடத்தை தமிழில் நிரந்தரமாக்கிய திரைப்படம். அடுத்து, விஜய்க்கு சூப்பர்ஹிட் படம் வேண்டும் என்கிற வெறியில் ‘குஷி’யை இழைத்து இழைத்து இயக்கினார். சில தோல்விகளை அடுத்தடுத்து பெற்றிருந்த விஜய், இந்த படத்தில் “என்னை மட்டுமல்ல, என் இமேஜை கூட உன்னால அசைக்க முடியாது” என்று அஜித்துக்கு பஞ்ச் கொடுத்துப்பேச, படம் பற்றிக் கொண்டது.

குஷியை அடுத்தே விஜய் – அஜித் மோதல் திரையில் சுறுசுறுப்பானது. ஒரு கட்டத்தில் இந்த ஆடுபுலி ஆட்டம் வெறுத்துவிட, அஜித்தே தன்னை போட்டியில் இருந்து கழற்றிக் கொண்டு தன் பாதை தனிப்பாதை என்று போய்விட்டார். விஜய் இன்னமும் பொத்தாம் பொதுவாக வானத்தைப் பார்த்து பஞ்ச் அடித்துக் கொண்டிருக்கிறார்.

‘குஷி’யின் மெகாவெற்றியை தொடர்ந்து ‘பிரியமானவளே’, ‘ஃபிரண்ட்ஸ்’ என்று ஹாட்ரிக் வெள்ளிவிழா கொண்டாடினார் விஜய்.

ஆனால்-

விஜய்க்கு ஒரு ராசி. ஓராண்டு முழுக்க வெற்றி என்றால், அடுத்த ஆண்டு முழுக்க படுதோல்வி காண்பார். மீண்டும் ஒரே ஒரு வரலாற்று வெற்றியை எட்டி, அத்தனை தோல்வியின் சுவடுகளையும் துடைப்பார். இந்த தோல்வி காலத்தில் அவர் நடித்த நல்ல படங்களும் கூட ஓடாது என்பது என்னமாதிரியான டிசைன் தெரியவில்லை (‘வசீகரா’ இன்றும் டிவியில் பெருவாரியாக ரசிக்கப்படும் படம், ஆனால் விஜய்யின் வனவாச காலத்தில் வெளியாகி தோல்வி அடைந்தது).

2003 தீபாவளிக்கு வெளியான திருமலை அவருக்கு திருப்புமுனை. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ‘போக்கிரி’ வரை வெற்றிமழையிலேயே விஜய் நனைந்துக் கொண்டிருந்தார் (இடையில் ‘மதுர’, ‘ஆதி’யெல்லாம் திருஷ்டிபடிகாரங்கள்).

‘போக்கிரி’யின் வரலாற்று வெற்றிக்குப் பிறகு அடுத்த நான்காண்டுகள் சிரமதசை. இந்த காலக்கட்டத்திலும் கூட ஓரளவுக்கு தேறக்கூடிய படங்களான ‘வேட்டைக்காரன்’, ‘காவலன்’ போன்றவை போதுமான வெற்றியை ருசிக்க முடியவில்லை. ‘வேலாயுதம்’ வந்துதான் மீண்டும் இளையதளபதியின் ஆட்சி.

‘நண்பன்’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’யென்று சமீபவருடங்கள் ஆரோக்கியமாக தெரிந்தாலும் ‘தலைவா’, ‘ஜில்லா’வென்று அவ்வப்போது அவர் சறுக்கவும் தவறவில்லை.

சிம்புதேவன் இயக்கத்தில் புலி, அட்லி இயக்கத்தில் ஒரு படம், மீண்டும் பிரபுதேவாவுடன் இணைகிறார் என்று கிராப் உயர்ந்துக் கொண்டிருப்பது மாதிரிதான் தெரிகிறது.

எனினும் விஜய்யின் எந்த படத்தையுமே நிச்சயவெற்றி என்று உறுதியாக நம்ப முடியாத நிலை நீடிப்பதுதான் அவரது ஆகப்பெரிய பலவீனம். கிட்டத்தட்ட இதே நிலைதான் அவரது நேரெதிர் போட்டியாளரான அஜீத்துக்கும் என்றாலும், அஜித்தின் தோல்விப் படங்கள் வணிகரீதியாக பெரும் நஷ்டத்தை தருவதில்லை. ஓரளவுக்கு சமாளித்துக் கொண்டு, அடுத்து விட்டதைப் பார்த்துக் கொள்ளலாம் என்பது மாதிரி இருக்கிறது. ஆனால் விஜய்யின் ஒரு படம் தோல்வியுற்றால், அந்த செயினில் வரும் அத்தனை ஆட்களுமே தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டியதுதான் என்பது நிலை. எனவேதான் அஜித்தைவிட விஜய்யின் படங்களுடைய வெற்றி, தோல்வியை இண்டஸ்ட்ரி முக்கியமானதாக கருதுகிறது.

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் என்று தலைமுறைகளாய் தொடரும் வரிசையில் கிட்டத்தட்ட அஜித், ரஜினியின் இமேஜை நெருங்கிவிட்டார். ஆனால் இன்னமும் விஜய்யால் அடுத்த கமல் என்கிற இலக்கில் பாதி தூரத்தை கூட கடக்க முடியவில்லை. (இங்கே ரஜினி-கமல் என்று இதை ஆளுமைரீதியாக லிட்டரலாக எடுத்துக் கொள்ளக்கூடாது, அந்த brand positionஐ சுலபமாக சுட்டிக் காட்டவே இந்த பெயர்கள்)

ரஜினி ஆவது கமல் ஆவதை விட ரொம்ப ஈஸிதான் என்றாலும்கூட-

மிகத் திறமையான கலைஞரான விஜய், இருபத்து மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக திரைத்துறையில் பணியாற்றுகிறார். இன்னமும் அவருக்கு இயக்கம் மாதிரியான நடிப்பு தவிர்த்த மற்ற தொழில்நுணுக்கங்களில் ஆர்வம் ஏற்பட்டிருப்பதாக கூட அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை. இத்தனைக்கும் அவரது அப்பாவே வெற்றிகரமான இயக்குனர்தான். ஆனால், அஜித்தோ சரண் போன்ற இயக்குனர்களிடம் பணியாற்றி இயக்கத்தின் அரிச்சுவடியை முறையாக கற்கிறார்.

கமலஹாசன் தன்னுடைய நாற்பதாவது வயதில் ‘மகாநதி’ செய்துக் கொண்டிருந்தார். விஜய்யோ ‘புலி’யில் நடித்துக் கொண்டிருக்கிறார். நாற்பதுக்குள் கமலஹாசன் பெற்ற விருதுகளும், செய்த சாதனைகளும் யாராலும் ஈடு செய்ய முடியாததுதான் என்றாலும், அவருடைய இடத்தை நிரப்பவேண்டிய இடத்தில் இருப்பவர், அதில் பாதியாவது செய்து முடித்திருக்க வேண்டாமா? அஜித்துக்கு நடக்கத்தான் வரும், நடிக்க வராது. நன்கு நடிக்கத் தெரிந்த விஜய் இன்னமுமா ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’யென்று பஞ்ச் டயலாக் அடித்துக் கொண்டிருப்பது?

திரையுலகில் தோல்விகள் சகஜம்தான். சில ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது அந்த தோல்விகள் கவுரவமான தோல்விகளாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு கமல்ஹாசன், 1991ல் பெற்ற ‘குணா’ தோல்வி. அதை அவரால் பெருமையாக திரும்பிப் பார்க்க முடியும். ‘அன்பே சிவம்’, ‘ஹேராம்’ என்று கம்பீரமான தோல்விகளை படைக்கவே பிறந்தவர் அவர். இன்றைய ‘உத்தம வில்லன்’ கூட இருபது ஆண்டுகளுக்கு பிறகு கமலின் புகழை பறைசாற்றுவதாகவே இருக்கும்.

விஜய்யின் தோல்விகள் அத்தகைய தன்மை கொண்டவையா? ‘தலைவா’ மாதிரி வெற்றிக்காக முயற்சித்து, அடையக்கூடிய தோல்விகள் அசிங்கமானவைதானே?

மாஸ் படங்கள் நடித்து வசூலை வாரிக்குவிக்க அஜித் போதும். முன்பு ரஜினி இருந்தார். ஆனானப்பட்ட ரஜினியே இப்போது கோச்சடையான், லிங்காவென்று அடுத்தடுத்து அதிர்ச்சி கண்டு, தன்னை தானே மறுபரிசீலனை செய்துக்கொள்ள முன்வந்திருக்கிறார்.

திரையுலகில் எத்தனை படங்கள் வெற்றிப் படங்கள் என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அப்படி பார்த்தால் சிவாஜியை இன்னேரம் நாம் முற்றிலுமாக மறந்திருக்க வேண்டும். எண்பதுக்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் – சிவாஜியின் படங்களை நினைவுகூறி எண்ணச் சொன்னால், பத்து படங்களுக்கு மேல் எம்.ஜி.ஆரின் படங்கள் தேறினால் யதேஷ்டம். ஆனால், சிவாஜியின் படங்களுக்கு நம்முடைய இரு கை, கால் விரல்களை இருமுறை எண்ணிய பிறகும் போதாது.

விஜய், சிவாஜி – கமல் வரிசையில் பொசிஸன் ஆகவேண்டிய நடிகர். திரைக்கு வெளியே உருவாகும் இமேஜ் அஜித்தை காப்பாற்றும். விஜய்யோ திரையில் உழைத்துதான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.

இன்று நாற்பதாவது பிறந்தநாள் காணும் விஜய், அடுத்த ஐந்தாண்டில்...

· ஒரு படமாவது இயக்கியிருக்க வேண்டும்.

· அவர் நடிப்பில் வெளிவந்த ஒரு படமாவது, நடிப்புக்காக தேசிய விருதுக்கு மோதியிருக்க வேண்டும்.

· தான் நடிக்காமல், இயக்காமல் (தனுஷ், ஷங்கர் மாதிரி) இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘காக்கா முட்டை’ மாதிரி பேசப்படக்கூடிய இரண்டு மூன்று படங்களையாவது தயாரித்திருக்க வேண்டும்.

வரலாற்றில் வாழவிரும்பினால் விஜய் இவற்றை பரிசீலிக்கலாம். வசூல்தான் டார்கெட், விசில்தான் லட்சியமென்றால் வழக்கமாக ஆடும் கபடியையே யூ கண்டினியூ விஜய்!

9 ஜூன், 2015

வசூல் வேட்டை @ காக்கா முட்டை

‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் இறுதிக் காட்சி கம்யூனிஸ்டுகளுக்கும், ஏழைப் பங்காளர்களுக்கும், ஃபேஸ்புக் புரட்சியாளர்களுக்கும் கடுமையான கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம். பீட்ஸா கடையின் ஓனரான பாபு ஆண்டனி மிக தந்திரமாக பிரச்சினையை முடித்துக் கொண்டது முதலாளித்துவ பயங்கரவாதத்தின் தன்மைக்கு ஒரு துண்டு பீட்ஸாவாக எடுத்துக் காட்டப்பட்டிருப்பதாக நினைக்கலாம்.

மக்கள் தொடர்புத்துறையில் crisis management என்றொரு கூறு உண்டு. ஒரு நிறுவனம் பல்வேறு வகையிலான இழப்புகளை சந்திக்கும். பொதுமக்களிடம் ஒரு நிறுவனம் தன்னுடைய நல்ல பெயரை (goodwill) இழப்பது என்பது அந்நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய சவால். அப்போது அந்நிறுவனத்தின் மக்கள் தொடர்பாளர்கள் அந்த crisisஐ எப்படி handle செய்யப் போகிறார்கள் என்பதே crisis management.

‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் க்ளைமேக்ஸில் சம்பந்தப்பட்ட சிறுவர்களுக்கு சிம்புவுக்கு இணையான மரியாதை கொடுத்து, பீட்ஸா ஊட்டும் காட்சிக்கு தியேட்டரில் நல்ல சிரிப்பலை. உண்மையில் இதுபோன்ற பிரச்சினையில் ஒரு நிறுவனம் மாட்டிக் கொண்டால், இதைவிட சிறப்பான தீர்வு வேறெதுவுமில்லை. அனேகமாக இயக்குனர் மணிகண்டன் விளம்பர நிறுவனம் எதிலாவது பணியாற்றி இருப்பார். அதனால்தான் அவருக்கு இந்த நடைமுறையை இவ்வளவு துல்லியமாக காட்சியாக்க முடிந்திருக்கிறது.

சில பேர் இந்த காட்சி டிராமாவாக மாறிவிட்டதாக இணையத்தில் விமர்சிக்கிறார்கள். என்னுடைய பத்தாண்டு விளம்பரத்துறை அனுபவத்தில் மூன்றாண்டுகள் முழுக்க முழுக்க public relations நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். இப்படிப்பட்ட சிக்கலில் இருக்கும் பீட்ஸா கடை, இதைத்தவிர வேறெந்த முறையிலும் இந்த பிரச்சினையை கையாளாது. நாற்பத்தி ஐந்து ரூபாய்க்கு ‘மக்கள் பீட்ஸா’ ஐடியாவெல்லாம் பக்காவான PR activity.

எம்.எல்.ஏ.விடம் போவது, போலிஸுக்கு காசு கட்டி சரி செய்ய நினைப்பது, மீடியாக்கள் அச்சூழலை எப்படி கையாளக்கூடும் போன்ற சித்தரிப்புகள்தான் உண்மையில் dramatise செய்யப்பட்டிருக்கிறது. பாபு ஆண்டனி கேரக்டரின் வில்லத்தன்மைக்கு -அதாவது முதலாளித் தன்மைக்கு- கூடுதல் அழுத்தம் சேர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அவை சேர்க்கப்பட்டிருக்கலாம்.

Crisis management தொடர்பாக உள்ளூர், அயல்நாடுகளின் கேஸ் ஸ்டடிகளை பலநூறு கணக்கில் படித்திருக்கிறேன். Coca cola நிறுவனம் எதிர்கொண்ட சிக்கல்களை அவர்கள் தீர்த்துவைத்த முறையெல்லாம் படுசுவாரஸ்யமாக இருக்கும்.

ஆனால், கூடங்குளம் அணுவுலை பிரச்சினையை, நியூக்ளியர் ஃபவர் கார்ப்பரேஷன் ஆஃப் இண்டியா லிமிடெட் நிறுவனம் எப்படி கையாண்டது என்பதுதான் இதுவரை இந்திய அளவில் நானறிந்த crisis managementகளிலேயே மிகச்சிறந்தது. மிக சரியான விளம்பர நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, கச்சிதமான வழிமுறைகள் வாயிலாக இதுவரை கண்டிராத மாபெரும் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தார்கள். என்னென்ன செய்தார்கள், யார் யாரை குறிவைத்து எப்படி எப்படி வீழ்த்தினார்கள் என்று விலாவரியாக விளக்க ஆரம்பித்தால் ஏகப்பட்ட சேகுவேராக்களின் முகங்களில் அப்பிக்கொண்டிருக்கும் நீலச்சாயம் வெளுக்கும். ’காக்கா முட்டை’ படத்தில் வரும் ரமேஷ் திலக், அவரது அல்லக்கையான பன்னிமூஞ்சி வாயனெல்லாம் யாரை சித்தரித்து என்று நினைக்கிறீர்கள். நாமறிந்த பிரபலமான போராளிகளைதான் அவை குறியீடாக சொல்கின்றன.

‘காக்கா முட்டை’ திரைப்படம் எதையும் எதிர்ப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ எனக்கு தோன்றவில்லை. இது இது இப்படி இப்படி இருக்கிறது என்று பிரச்சினைகளை தொட்டுக் காட்டுகிறதே தவிர, ஏழைகள் மீதான பச்சாதாபத்தை ஏற்படுத்தவோ, புரட்சி பேசவோ அதன் இயக்குனர் முயலவில்லை.

ஆனால்-

படம் பார்த்தவர்களுக்கு குற்றவுணர்ச்சி தோன்றுகிறது. காக்கா முட்டைகளுக்கு பரிதாபப்படும் இவர்களில் ஒருவர் கூட, வாழ்க்கையில் இதுவரை ஒரே ஒரு காக்கா முட்டைக்கு பீட்ஸா என்ன.. பன்னும் டீயும் கூட வாங்கித்தராதவர்களாகவே இருப்பார்கள். உண்மையைச் சொன்னால் ஜீரணிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். உண்மையில் நமக்கு (அதாவது நடுத்தர வர்க்கத்து மொக்கைகளுக்கு) ஏழைகள் மீது பரிதாபமெல்லாம் எதுவுமில்லை. ‘காக்கா முட்டை’ மாதிரி சந்தர்ப்பங்களில், அவர்களுக்காக நெகிழ்வதெல்லாம் சும்மா நடிப்புதான். படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் முதலாளி பாபு ஆண்டனிக்கும், படம் பார்த்துவிட்டு ஃபேஸ்புக்கில் ஏழ்மையை கடைபரப்பி ஸ்டேட்டஸ் போட்டு லைக்கு அள்ளுபவர்களுக்கு வித்தியாசமெல்லாம் பெரிதாக எதுவுமில்லை. நாமும் பீட்ஸா கடை ஓனராக இருந்தால் இப்படிதான் நடந்துக் கொள்வோம்.

இந்த நடுத்தர வர்க்கத்தின் குற்றவுணர்ச்சியை மிகச் சரியாக அறுவடை செய்வதாலேயேதான் ஏழைகளை பற்றி பேசும் ஏழைப்படம் வசூலில் கோடி, கோடியாக கொட்டி குவிக்கிறது. முன்னூறு ரூபாய்க்கு பீட்ஸா வாங்கி சாப்பிட முடியாத நிலையில் இருப்பவர்கள் என்று இப்படம் சுட்டிக்காட்டும் விளிம்புநிலை காக்கா முட்டைகள் அண்ணாசாலை நெடுக வானுயர்ந்த கட்டிடங்களுக்கு பின்னால் அமைந்திருக்கும் சேரிகளில் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தங்களைப்பற்றி எடுக்கப்பட்ட இந்த படத்தைக் காண தேவியிலும், சத்யமிலும் நூற்றி இருபது ரூபாய் செலவு செய்கிறார்கள். ஒவ்வொரு திரையரங்கிலும் பத்து ரூபாய் டிக்கெட் குறைந்தது பத்து சதவிகிதம் தரப்பட வேண்டும் என்கிற விதியை காக்கா முட்டைக்கு மட்டுமாவது திரைத்துறையினர் கறாராக கடைப்பிடித்திருக்கலாம்.

ஏழ்மையை நல்ல பிசினஸாக மாற்ற முடியும் என்கிற சூத்திரத்தை காக்கா முட்டை கற்றுத் தந்திருக்கிறது. முன்பு, ‘வழக்கு எண் பதினெட்டு’க்கு இந்த விஷயத்தில் சுமாரான வெற்றிதான். விளிம்பு நிலைக் கதைகளை கையில் வைத்துக்கொண்டு அடுத்த ஓராண்டுக்கு வரிசை கட்டி படங்கள் வரப்போகின்றன. படம் பார்த்துவிட்டு உச்சு கொட்டவும், ஃபேஸ்புக்கில் ‘சாட்டையடி சகோதரி’ சமூக ஸ்டேட்டஸ்கள் போடவும் நிறைய சந்தர்ப்பங்கள் நமக்கு கிடைக்கும். அடுத்து கொஞ்ச காலத்துக்கு கார்ப்பரேட் நிறுவன பணியாளர்கள் CSR ஆக்ட்டிவிட்டிகளில் கூடுதல் முனைப்பாக ஈடுபடுவார்கள்.