14 நவம்பர், 2015

சுப்பாண்டியின் சாகசங்கள்!


சுப்பாண்டியை உங்களுக்கு தெரியுமென்றால் நீங்கள் ‘பூந்தளிர்’ வாசகராக இருக்கக்கூடும். உங்கள் வயது முப்பத்தைந்தை தாண்டிவிட்டது என்று அர்த்தம். இல்லையேல் நீங்கள் ‘டிங்கிள்’ வெறியர். ரைட்?

சுப்பாண்டி ஒரு தெனாலிராமன். அல்லது தெனாலிராமன்தான் சுப்பாண்டி. வெடவெடவென்று ‘காதலன்’, ‘இந்து’ காலத்து பிரபுதேவா தோற்றம். கோமுட்டி தலை. காந்தி காது. இந்திராகாந்தி மூக்கு. ராஜாஜி முகவாய். என்று ஆளே ஒரு தினுசாகதான் இருப்பான். சுப்பாண்டி ஒரு வேலைக்காரன். ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள். முதலாளி ஏவிவிடும் வேலைகளை ஏடாகூடமாக செய்வான் என்பதுதான் அவன் கதைகளில் இருக்கும் முரண்.

இந்திய காமிக்ஸ் உலகம் எட்டியிருக்கும் அதிகபட்ச உயரங்களில் சுப்பாண்டிக்கும் கணிசமான இடம் உண்டு. சுப்பாண்டியின் தாய்வீடு தமிழ்நாடு என்பதுதான் தமிழராக நாம் பெருமைகொள்ள வேண்டிய விஷயம். ஆனால், நிலபிரபுத்துவத்துவ மேலாதிக்கத்தின் வெறியாட்டம்தான் சுப்பாண்டி கதைகள் என்பதை இதுவரை எந்த கம்யூனிஸ்டும் கண்டுபிடிக்காததால் ‘டிங்கிள்’ முப்பத்தி இரண்டு ஆண்டுகளாக சுப்பாண்டியை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

‘டிங்கிள்’ வாசிப்பவர்களுக்கு பழக்கமான விஷயம்தான். டிங்கிள் பதிப்பகமே வெளியிடும் காமிக்ஸ் கதைகள் தவிர்த்து, வாசகர் படைப்புக்கும் அவ்விதழில் முக்கியத்துவம் உண்டு. வாசகர்கள் எழுதியனுப்பும் கதைகளுக்கும் சின்சியராக ஓவியம் வரைந்து வெளியிட்டு கவுரவப்படுத்துவார்கள்.

அம்மாதிரி 1983ஆம் ஆண்டு ஜனவரி இதழில் திருச்சியைச் சேர்ந்த வாசகர் பி.வரதராஜன் என்பவர் எழுதி அனுப்பிய மூன்று கதைகளின் அடிப்படையில்தான் சுப்பாண்டி பிறந்தான். அந்த வரதராஜன் தற்போது சென்னையில் வசிப்பதாக டிங்கிள் குறிப்பிடுகிறது.

இந்த சுப்பாண்டியை உருவாக்குவதற்கு வரதராஜனுக்கு அனேகமாக ‘பதினாறு வயதினிலே’ சப்பாணி இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன். சிறுவயதில் சுப்பாண்டியை வாசிக்கும்போதெல்லாம் எனக்கு பின்னணி இசையாக ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடல் ஒலித்துக் கொண்டே இருப்பதை போன்ற பிரமை இருக்கும்.

சுப்பாண்டியின் கதைகளை வாசிக்கும்போது வெடிச்சிரிப்பு எல்லாம் ஏற்படாது. ஆனால், நினைத்து நினைத்து புன்னகைக்கக்கூடிய ‘சரக்கு’ நிச்சயமாக இருக்கும். சரியாக சொல்லப்போனால் கிரேஸி மோகன் பாணி அதிரடி ஜோக் அல்ல, யூகிசேது டைப் புத்திசாலித்தனமான காமெடி.

பல மேடைப்பேச்சுகளிலும், பட்டிமன்றங்களிலும் சுப்பாண்டியின் ஜோக்குகளை பேச்சாளர்கள் தங்கள் பாணியில் பேசுவதை கேட்டிருக்கிறேன். Source material சுப்பாண்டிதான் என்று எனக்கு தெளிவாகத் தெரியும். ஒரு பிரபலமான பெண் பேச்சாளர் ஒரு மேடையில் பேசும்போது சொன்ன ஒரு தெனாலிராமன் கதை, தெனாலிராமன் கதையே கிடையாது. அது சுப்பாண்டியின் கதை. சுப்பாண்டியை தெனாலியாக்கி சொன்னார். ஆனால், பேச்சாளர்களிடம் போய் சண்டையா போட முடியும்?

Imitation is the best form of praising என்று விளம்பரத்துறை பாடம் எடுக்கும்போது சொல்லுவார்கள். ஒரு நல்ல படைப்பு என்பது நம்மை inspire செய்து, நாமறியாமலேயே அதை வேறெங்கோ imitate செய்ய வைக்கும். அம்மாதிரியான inspirationதான் அந்த படைப்பாளிக்கு செய்யப்படும் மரியாதைகளிலேயே தலைசிறந்தது.

எதையோ சொல்லவந்து, எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்.

விஷயம் என்னவென்றால் முப்பதாண்டுகளுக்கும் மேலாக வந்துகொண்டிருக்கும் சுப்பாண்டியின் சாகசங்களை விசேஷத் தொகுப்புகளாக வெளியிட ‘டிங்கிள்’ முடிவெடுத்திருக்கிறது. அதுவும் நம் தமிழிலேயே வெளிவருகிறது என்பதுதான் நமக்கான விசேஷம்.

முதல் இதழ் வெளிவந்து கடைகளில் கிடைக்கிறது. விலை ரூ.80. முழு வண்ணத்தில் தரமான தாளில் அச்சிடப்பட்டிருக்கிறது. அட்டை பளபள கிளாஸி லேமினேஷனில் பளிச்சிடுகிறது. திரும்பவும் இதெல்லாம் ரீபிரிண்ட் ஆக வாய்ப்பேயில்லை என்பதால் கிடைக்கும்போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளுக்காக சுப்பாண்டியை சேகரியுங்கள்.
வழக்கமாக டிங்கிள் கிடைக்கும் கடைகளில் ‘சுப்பாண்டியின் சாகசங்கள்’ கிடைக்கும். சென்னையில் எங்கு கிடைக்கிறது என்று தெரியாவிட்டால் மயிலாப்பூர் லஸ் கார்னர் நேரு நியூஸ் மார்ட்டில் வாங்கிக் கொள்ளலாம்.

ஹேப்பி ரீடிங் ஃப்ரண்ட்ஸ்!

12 நவம்பர், 2015

வேதாளம்


10 அக்டோபர், 2015

துக்ளக் பிறந்த கதை!

‘சம்பவாமி யுகே யுகே’ நாடகம் நடக்கிறது.

நாடகத்தின் இடைவேளையில் திடீரென முதல்வர் காமராஜர் அரங்குக்கு வருகிறார். அவரை சோ அழைக்கவில்லை. நாடகம் நடத்திய சபா, சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.

நாடகத்தைப் பாராட்டி ஜெமினி கணேசன் மேடையில் பேசுகிறார். “அருமையான இந்த நாடகத்தை மேடையேற்ற அரசு அதிகாரிகள் லைசென்ஸ் மறுத்ததாக சோ சொல்கிறார்” என்று ஜெமினி பேச, காமராஜருக்கு ‘கெதக்’கென்று ஆனது. (அப்போதெல்லாம் ரேடியோ வைத்திருக்கவே லைசென்சு வேண்டும்).

சோவிடம் விவரம் கேட்கிறார். மத்திய மாநில அரசுகளை விமர்சித்து சில வசனங்கள் நாடகத்தில் இடம் பெற்றிருந்ததாகவும், ஸ்க்ரிப்டை வாசித்த அரசு அதிகாரிகள் லைசென்ஸ் வழங்க மறுத்ததாகவும் சொன்னார். இதையடுத்து காமராஜருக்கும், சோவுக்கும் விவாதம் வலுக்கிறது.

“பொறுப்பில்லாமே கண்டதையும் எழுதினா எவன் லைசென்சு கொடுப்பாண்ணேன்?”

“இப்போ கொடுத்திருக்கீங்களே? மேடை ஏத்திட்டேனே? அப்படின்னா யார் பொறுப்பில்லாதவா?”

“வண்டி ஓட்ட லைசென்சு கொடுக்கிறதுங்கிறது, உங்களுக்கு ஓட்டத் தெரியும்னுதான். அந்த வண்டியை எடுத்துட்டுப் போய் எவன் மேலேயோ மோதி விபரீதம் ஆயிடிச்சின்னா அதுக்கு லைசென்ஸ் கொடுத்தவனா பொறுப்பு?”

“எனக்கு ஓட்டத் தெரியுமா தெரியாதான்னு நீங்களே இருந்து பார்த்திருந்தாதானே தெரியும். பாதியிலே வந்துட்டு இப்படி பேசுறது சரியா?”

இதைத் தொடர்ந்து காமராஜர் கோபமாக கிளம்புகிறார். நாடகத்தை நடத்தும் சபாவினருக்கு தர்மசங்கடம். நாடகம் பார்க்க வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி. நாட்டின் முதல்வரையே ஒரு சின்னப்பையன் எதிர்த்து, மரியாதை இல்லாமல் பேசுவதா என்று. அதே நேரம், இந்த சம்பவம்தான் சோவை துணிச்சல் மிக்கவராகவும், கறாரான அரசியல் விமர்சகராகவும் பிரபலப்படுத்தியது.

சோவின் தந்தையார் காமராஜர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தவர். எனவே, காமராஜரிடம் மன்னிப்பு கேட்காமல் வீட்டுக்கு வந்தால் சேர்க்க மாட்டேன் என்று கூறிவிட்டார். சோ, பணிபுரிந்த அலுவலகமான டி.டி.கே.வும் இதேரீதியான நிபந்தனையை விதித்திருந்தது.

பிற்பாடு காமராஜரை பார்த்து தன்னிலை விளக்கம் சொல்ல சோ முயற்சிக்கிறார்.

“அதெல்லாம் எதுக்குங்குறேன்? அப்படி இல்லைன்னா நீங்க சோவே இல்லைங்கறேன்” என்று தன் பெருந்தன்மையை காமராஜர் காண்பித்தார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு ‘சோ பேசுகிறார்’ என்று தமிழகத்தில் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பரபரப்பான பேச்சாளராகிறார். அவ்வகையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை பேசவேண்டியிருக்கிறது.

பார்ப்பனீயச் சிந்தனைகளின் மொத்த உருவம் சோ. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களிடமோ அப்போது திராவிட சுயமரியாதை இயக்கக் கருத்துகள் நாடி, நரம்பெல்லாம் ஓடிக்கொண்டிருந்தன.

சோ பேசப்பேச மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பு. எழுந்து ஒருமையில் கோஷமிடத் தொடங்கினார்கள்.

“இப்படியெல்லாம் மேடையிலே பேச உனக்கு வெட்கமா இல்லையாடா?” என்று ஒரு மாணவர் சூடாக கேட்டார்.

“பேசுறது என்னடா... தைரியமா எழுதக்கூட செய்வேன்” என்று பதிலடி கொடுத்தார் சோ.

“நீ எழுதுனா எந்த பத்திரிகை பிரசுரிப்பான்? எவன் படிப்பான்?” மாணவர்களின் பதிலடி.

“எவனும் பிரசுரிக்கலேன்னா நானே பத்திரிகை ஆரம்பிச்சி எழுதறேன். எவனும் படிக்கலேன்னா நானே அதை படிச்சிக்கறேன்”

அடுத்த சில நாட்களில் ‘தி ஹிந்து’ பத்திரிகையில், “நான் பத்திரிகை தொடங்கலாமா?” என்றொரு விளம்பரத்தை தமிழிலேயே கொடுத்தார். அதுதான் அந்த ஆங்கில நாளிதழில் வெளிவந்த முதல் தமிழ் விளம்பரம் என்கிறார்கள். அந்த விளம்பரத்தை கண்டு பத்தாயிரம் பேர் ‘தொடங்குங்கள்’ என்று சோவுக்கு கடிதம் எழுதினார்களாம் (அதென்ன ‘பத்தாயிரம்’ கணக்கு என்று தெரியாது. ‘முகம்மது பின் துக்ளக்’ படத்துக்கு சென்சார் பிரச்சினை வந்தபோதும் ‘பத்தாயிரம்’ பேர் தந்தி அனுப்பியதாக சொல்வார்).

ஆனால்-

பத்திரிகை நடத்துமளவுக்கு தனக்கு பொருளாதார பலமில்லை என்று சோ தயங்கிக் கொண்டிருந்தபோது, விகடன் நிறுவனம் அவரை தொடர்பு கொண்டு தங்கள் brandக்கு தொடர்பில்லாத வகையில், ஆனால் பின்னணியில் இருந்து ‘துக்ளக்’ தொடங்க உதவியிருக்கிறார்கள்.

‘ஆறு மாதத்தில் தொடங்கிவிடலாம்’ என்று விகடன் சொன்னபோது, “முடியாது. பதினைந்தே நாளில் ‘துக்ளக்’ வந்தாக வேண்டும். இல்லையேல் பத்திரிகையே வேண்டாம்” என்றாராம் சோ. 

1970, ஜனவரி 14 அன்று ‘துக்ளக்’ முதல் இதழ் வெளிவந்தது.

எண்பதுகளின் இறுதியில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழுக்காக சோவை எஸ்.எஸ்.சந்திரன் எடுத்த பேட்டியில் இந்த விவரங்கள் விரிவாக உள்ளன.

ஆனால்-

சோ இதே கதையை வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார். அல்லது எழுதியிருக்கிறார். ‘அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’ தொடரில் நண்பர்களிடம் கட்டிய ஐந்து ரூபாய் பெட்டுக்காக தொடங்கப்பட்ட பத்திரிகை ‘துக்ளக்’ என்று சொல்லியிருப்பார். தொடர்ச்சியாக வாசிக்காததால் ‘குமுதம்’ தொடரில் என்னவென்று எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. நூலாக வெளிவந்த பின்தான் வாசிக்க வேண்டும்.

7 அக்டோபர், 2015

நேரு குடும்பத்தின் நயன்தாரா

மோடி அரசின் செயல்பாடுகளை கண்டித்து தான் பெற்ற சாகித்திய அகாதெமி விருதினை திருப்பியளிப்பதன் மூலம் இப்போது ஊடகங்களின் மஞ்சள் வெளிச்சத்துக்கு வந்திருப்பவர் எழுத்தாளர் நயன்தாரா சாஹல். இவரைக் குறித்த இந்த அறிமுகக் கட்டுரை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘தினகரன் வசந்தம்’ இதழில் வெளியானது.
நயன்தாராவின் கதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் இந்திய உயர்வர்க்கத்தின் ஆண்களும், பெண்களும்தான். அவரால் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்து மனிதர்களையோ, ஏழைகளையோ, சாதிய பாகுபாடுகளால் ஒடுக்கப்பட்டவர்களையோ கதைகளாக்க முடியவில்லை. ஏனெனில் அவர்களோடு அவர் பழகியதே இல்லை. இதை அவர் மீதான விமர்சனமாக நிறைய விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால், இந்திய அரசியல் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளையும், தன்மைகளையும் இவரளவுக்கு நேர்மையாக எழுத்தில் முன்வைத்தவர் வேறு யாருமில்லை.

“நான் ஒரு நாவலாசிரியர் மட்டுமல்ல. அரசியல் செய்திகளை எழுதக்கூடிய பத்திரிகையாளரும் கூட. நான் திட்டமிட்டு அரசியல் பின்னணியை எழுத்தில் கொண்டு வருவதில்லை. நான் வாழ்வில் சந்தித்த மனிதர்களும், சம்பவங்களும் அரசியல் தொடர்பானவை மட்டுமே. அவற்றை மட்டுமே எனக்கு எழுதத் தெரிந்திருக்கிறது” என்று தன் எழுத்துகளை குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறார் நயன்தாரா சாஹல்.

இந்தியாவின் நெம்பர் ஒன் அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு இவருடைய தாய்மாமன். ஐக்கிய நாடுகள் சபைக்கு சுதந்திர இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட முதல் தூதரான விஜயலஷ்மி பண்டிட்தான் அம்மா. இந்திராகாந்திக்கு அத்தை மகள். பிறந்து வளர்ந்ததெல்லாம் அலகாபாத்தில் இருக்கும் நேருவின் பாரம்பரிய பரம்பரை வீடான ஆனந்தபவனத்தில்தான். இவரது எழுத்துகளில் அரசியலும், வரலாறும் கலந்திருப்பதில் ஆச்சரியமென்ன?

அப்பா ரஞ்சித் சீத்தாராம் பண்டிட் அந்த காலத்தில் பிரபலமான வக்கீல். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வரலாற்றுக் காவியமான ராஜதரங்கிணியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இவர்தான். நேரு குடும்பம் ஆயிற்றே. அடிக்கடி சுதந்திரப் போராட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை செல்ல வேண்டியிருக்கும். அம்மாதிரி சிறைப்பட்டிருந்த ஒரு நேரத்தில் திடீரென மரணமடைந்தார். அப்போது நயன்தாராவுக்கு வயது பதினேழுதான். ஒரு அக்காவும், ஒரு தங்கையும் இருந்தார்கள். நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய பத்து, பதினைந்து ஆண்டுகள் நேரு குடும்பத்துக்கு சோதனையானவை. கிட்டத்தட்ட எல்லோருமே சிறைக்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக போய்விட்டு வருவார்கள். எனவே குழந்தைகளாக இருந்தவர்கள் அவர்களாகவே வளர்ந்தார்கள். பள்ளி, கல்லூரி படிப்பெல்லாம் வெளியூர்களில்தான்.

மேற்கத்திய பாணி குடும்ப வாழ்க்கையை பின்பற்றும் நேரு குடும்பத்தில் பிறந்ததால் நுனிநாக்கு ஆங்கிலமும், ஐரோப்பிய நடை உடை பாவனைகளுமாக ஸ்டைலாக வலம் வந்தார் நயன்தாரா. இந்திய சமூக மரபில் பெண்கள் பலியாடுகளாய் வளர்க்கப்படுவதை வெறுத்தார். பெண்களுக்கான தனித்த அடையாளத்தை தர ஆண்கள் மறுப்பதாய் நினைத்தார். அவருடைய இளமைக் காலத்தில் ஐரோப்பாவில் தொடங்கிய பெண்ணிய சிந்தனை போக்கு இவருக்குள் ஆழமாக ஊடுருவியது. இதனாலேயே என்னவோ திருமண வாழ்க்கை தடுமாற்றம் கண்டது. இரண்டு விவாகரத்துகளுக்கு பிறகு மூன்றாவதாக அந்தகால ஐ.சி.எஸ் (இன்றைய ஐ.ஏ.எஸ் மாதிரி) அதிகாரியான மங்கத்ராயை மணந்தபிறகுதான் வாழ்க்கை சமநிலைக்கு வந்தது.

அரசியல் மட்டத்தில் இவருக்கும், இவருடைய தாயாருக்கும் இருந்த செல்வாக்கை சொந்த மாமன் மகளான இந்திராகாந்தி பிரதமர் ஆனதும் அடித்து நொறுக்கினார். இத்தாலிக்கான இந்திய தூதராக நயன்தாரா நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பதவியேற்பதற்கு முன்பாகவே அந்த ஆணையை திரும்பப் பெற்றார் புதியதாக பதவிக்கு வந்திருந்த இந்திராகாந்தி. இவ்வாறாக நேருவின் தங்கை குடும்பம் இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு முடிவுக்கு வந்தது. இந்திராவின் அதிரடி வளர்ச்சியை உண்மையில் யாருமே யூகிக்க முடியவில்லை. நேருவின் மரணத்துக்குப் பிறகு அதிரடியாய் மிகக்குறுகிய காலத்தில் காங்கிரஸையும், இந்தியாவையும் அவர் கைப்பற்றிய கதையை பிற்பாடு ‘இந்திராகாந்தி, எமர்ஜென்ஸ் அண்ட் ஸ்டைல்’, என்று என்று நூலாய் எழுதினார். தன் மாமன் மகளை எட்ட நின்று பார்வையாளராய் ஆச்சரியமாய் அவர் பார்த்த அனுபவங்கள்தான் அந்த நூல். இதையே கொஞ்சம் பிற்பாடு புனைவு பாணியில் ‘இந்திராகாந்தி : ஹெர் ரோட் டூ பவர்’ என்று நாவலாகவும் எழுதி வெளியிட்டார். இந்திரா முதன்முதலாக ஆட்சியை இழந்த நேரத்தில் முதல் நூல் வெளிவந்தது. நாவல் வெளிவரும்போது மீண்டும் அவர் ஆட்சியை கைப்பற்றியிருந்தார். எனவே இரண்டு நூல்களும் எத்தகைய பரபரப்பை அந்த காலத்தில் ஏற்படுத்தியிருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

அரசியலும் வரலாறும்தான் ஆர்வம் என்றாலும் புனைவு மீது அலாதி ப்ரியம் கொண்டவர் நயன்தாரா. தன் குடும்பத்தின் சிறை நினைவுகளை ‘ப்ரிஸன் அண்ட் சாக்லேட் கேக்’ என்று 1954ல் அவர் எழுதிய நினைவலைகள், ஆங்கில இலக்கிய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக அவருக்கு அரசியல் அலசல் கட்டுரைகளையும், நூல்களையும் எழுததான் வாய்ப்புகள் நிறைய கிடைத்தது. ஒரு கட்டத்தில் இந்த நான்ஃபிக்‌ஷன் உலகில் இருந்து வெளிவரவேண்டும் என்கிற வேட்கையோடு தொடர்ச்சியாக நாவல்கள் எழுத ஆரம்பித்தார். இந்திய மேல்தட்டு வர்க்கம் குறித்த சித்திரம் மிக துல்லியமாக இவரது கதைகளில் இடம்பெற்றது. உலகளவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பெண் எழுத்தாளர்களுக்கே சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவர்களில் நயன்தாராவும் ஒருவர்.

இவரது எழுத்துகளில் சம்பவங்களும், பாத்திரங்களும் வேண்டுமானால் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் அந்த வர்க்கத்திலும் கூட பெண்கள் மீதான ஒடுக்குமுறை இருப்பதை துணிச்சலாக விமர்சித்தார். பெண்களுக்கான சுதந்திரம் குறித்த உரிமைக்குரலை தொடர்ச்சியாக பதிவு செய்து வந்திருக்கிறார். கடைசியாக அவர் எழுதிய நாவலில் கூட இந்திய பெண்கள் எப்படி உன்னதமான உயரத்தை எட்டக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது என்கிற விவாதமே பிரதானமாக இருந்திருக்கிறது. எட்டு நாவல்கள், ஏராளமான சிறுகதைகள் (இவை தொகுப்பாக வந்ததாக தெரியவில்லை), அரசியல் விமர்சன கட்டுரைகள் உள்ளிட்ட அபுனைவு நூல்கள் ஒன்பது என்கிற எண்ணிக்கைகளில் இவரது எழுத்துகள் நூலாக அச்சாகியிருக்கின்றன.

அரசியலில் இருந்து திட்டமிடப்பட்டு இவர் வெளியேற்றப் பட்டிருந்தாலும் இந்தியாவின் பல உயரங்களை இவர் தொடமுடிந்திருக்கிறது. 1972ல் இருந்து 75 வரை சாகித்ய அகாதெமியின் (ஆங்கில இலக்கியப் பிரிவு) ஆலோசகராக பதவி வகித்தார். இந்திய ரேடியோ மற்றும் டிவிக்கான வர்கீஸ் கமிட்டியின் உறுப்பினராக 77-78 ஆண்டுகளில் இருந்தார். ஐக்கிய நாடுகள் பொதுசபையின் இந்திய பிரதிநிதியாக செயல்பட்டிருக்கிறார். குடிமக்கள் உரிமைகளுக்கான யூனியன் அமைப்பில் துணைத்தலைவராக பணிபுரிந்திருக்கிறார்.

1985ல் இங்கிலாந்தின் புனைவுக்கான சிங்க்லேர் விருது, 1986ல் சாகித்திய அகாதெமி, 1987ல் காமன்வெல்த் எழுத்தாளர்களுக்கான விருது என்று தேசிய, சர்வதேச விருதுகள் ஏராளம் இவரது வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கிறது. அமெரிக்காவின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸிலும் இவரது இருபதுக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

எண்பத்தேழு வயதாகும் நயன்தாரா சாஹல், தற்போது டெஹ்ராடூனில் வசிக்கிறார். பெண்ணியம், அடிப்படைவாதம், இனவாதம் முதலியவற்றை காரசாரமாக விமர்சித்து எழுதும் பத்திரிகையாளரும், ஆவணப்பட இயக்குனரும், மனித உரிமைப் போராளியுமான கீதா சாஹல் இவருடைய மகள்தான்.
இந்த கட்டுரை, சூரியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ரைட்டர்ஸ் உலா’ நூலின் ஓர் அத்தியாயமாகவும் இடம்பெற்றிருக்கிறது.

24 செப்டம்பர், 2015

அசந்துட்டாங்க ஆங்கிலேயனுங்க

தமிழ் திரையுலகின் வரலாற்று சாதனையாளரான தேவருக்கும் ஆங்கிலத்துக்கும் எட்டாம் பொருத்தம். இருந்தாலும் வாழ்வின் கடைசிநாள் வரை அம்மொழியோடு விடாது மல்லு கட்டிக் கொண்டிருந்த பயில்வான் தேவர். தமிழிலும், இந்தியிலும்தான் படங்கள் தயாரித்தார் என்றாலும் ஆங்கிலப் படங்கள் மீதுதான் அவருக்கு அத்தனை மோகம். 1930களில் தொடங்கி 70கள் வரை வந்த முக்கியமான ஆங்கிலப் படங்கள் அத்தனையையுமே தேவர் பார்த்து ரசித்திருக்கிறார். சில ஹாலிவுட் படங்களின் கருவை எடுத்துக்கொண்டு, தமிழில் புதுசாக தன்னுடைய கதை இலாகாவை கதை தயார் செய்யச் சொல்லி படமும் எடுத்திருக்கிறார்.

---

சென்னைக்கு வந்து சினிமா தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆரம்பக் காலம். கம்பெனிக்காக வங்கி அக்கவுண்டு ஓபன் செய்திருந்தார். தமிழ் சினிமாவின் புரொடியூஸர் அல்லவா? தமிழில் கையெழுத்து போட்டால் கெத்தாக இருக்காது என்று ஆங்கிலத்தில் கையெழுத்து போட பழகிவந்தார்.

‘செக்’ புத்தகத்தில் அவர் போடும் கையெழுத்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒருமுறை அவசரப் பணத்தேவைக்காக ஒரு செக் கிழித்து எழுதி பையனிடம் கொடுத்து அனுப்பினார். வங்கியில் கையெழுத்து வேறு மாதிரியாக இருக்கிறது என்று திருப்பி அனுப்பினார்கள்.

தேவரே நேரடியாகப் போய் கையெழுத்து போட்டார். ஒத்துக் கொள்ளவில்லை. “என் காசை வெச்சுக்கிட்டு எனக்கு கொடுக்க மாட்டேங்கறீங்களேடா. பாவிகளா!” என்று பயங்கர கலாட்டா செய்தவர், கடுப்பில் தன்னுடைய வங்கி அக்கவுண்டையே குளோஸ் செய்து மொத்தப் பணத்தையும் எடுத்துவிட்டார். அதில் தொடங்கி அவருக்கு வங்கி, செக் போன்ற விஷயங்கள் என்றாலே அலர்ஜி.

கோடம்பாக்கமோ மும்பையோ... தேவர், யாருக்கு அட்வான்ஸ் கொடுப்பதாக இருந்தாலும் கத்தையாக மடியில் கட்டிய பணத்தைதான் எடுத்துக் கொடுப்பார். செக் கொடுப்பதில்லை என்பதின் பின்னணிக் காரணம் இதுதான்.

---

படப்பிடிப்பில் நடிக நடிகையர் ‘டிமிக்கி’ கொடுத்தால் தேவர், வில்லனாக மாறிவிடுவார். ஆனால்- அவரிடம் அனுமதி கேட்டு லீவு வாங்கினால், வள்ளலாக வாரி வழங்குவார்.

சரோஜாதேவிக்கு மறுநாள் அவசரவேலைகள் இருந்தன. தயங்கித் தயங்கி தேவரிடம் கேட்டார். “அண்ணே! கொஞ்சம் வீட்டு வேலைகள் இருக்கு. நாளைக்கி நான் இல்லாம ஷூட்டிங் அட்ஜஸ்ட் பண்ணிக்கறீங்களா?”

தேவருக்கு அப்போதுதான் அட்வைஸ் செய்திருந்தார்கள். யாராவது தமிழில் பேசினாலும் ஆங்கிலத்திலேயே பதில் சொல்லுங்கள். மொழி வசமாகும் என்று.

தேவர், பளீரென்று சொன்னதைக் கேட்டு சரோஜாதேவிக்கு மயக்கமே வந்துவிட்டது.

“ஓக்கே. டும்மார்ரோ ஐ வில் மேரேஜ் யூ”

அதாவது ‘மேனேஜ்’ செய்துக் கொள்கிறாராம்.

---

எழுபதுகளின் தொடக்கத்தில் இந்தியில் அவர்தான் ‘ஹாட்’ பீஸ். இருபது ஆண்டுகள் கழித்து அவரது மகளும் பாலிவுட்டில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்தார். அந்த நடிகைக்கு கட்டுமஸ்தாக இருக்கும் தேவரின் மீது ஒரு கண். மனுஷனும் அப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் பணத்தை ‘தண்ணீ’யாக அள்ளி எறிவார். இவரை மடக்கிப் போட்டால் ஈஸியாக தமிழ் திரையுலகில் நுழைந்துவிடலாம், எம்.ஜி.ஆருக்கு ஜோடி சேரலாம் என்று கணக்கு போட்டார் அந்த நடிகை. தேவர், அந்த நடிகையை வைத்து பிரும்மாண்டமான ஒரு இந்திப்படத்தை அப்போது தயாரித்துக் கொண்டிருந்தார்.

படப்பிடிப்பில் வேண்டுமென்றே தேவரை உரசுவது, தொட்டுத் தொட்டுப் பேசுவது என்று காஜூ ஏற்றிக் கொண்டிருந்தார். ஏகபத்தினி விரதனான தேவர், ஒரு முறை டென்ஷன் ஆகி கத்தினார்.

“சீ. டோண்ட் டச் ஐ. முருகன் ஒன்லி டூ வைஃப். மீ டச் ஒன்லி மை வைஃப்”

தேவரின் தமிழ் கற்பு ஒழுக்கத்தை வியந்தவாறே, அந்த நடிகை அதற்குப் பிறகு அவருக்கு தொல்லை கொடுக்கவில்லை.

---

‘நீதிக்குப் பின் பாசம்’ படப்பிடிப்பு. வெள்ளைக்காரர்கள் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தேவரின் யூனிட்டும் தேவர் மாதிரியேதான். ஆங்கிலம் என்றால் அலர்ஜி. எனவே, வெள்ளைக்காரர்கள் ஏதாவது கேட்டுவிட்டு, அதற்கு பதில் சொல்ல முடியாமல் மானபங்கம் ஆகிவிடுமோ என்று அஞ்சிக்கொண்டே வேலை பார்க்கிறார்கள்.

படப்பிடிப்பு இடைவேளையில் திடீர் திருப்பம். அந்த வெள்ளைக்காரர்களோடு தேவர் ஜோவியலாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார். அவர்களும் தேவருக்கு சல்யூட் வைத்து, கைகுலுக்கி பாராட்டிவிட்டு, டாட்டா காண்பித்துவிட்டுச் செல்கிறார்கள்.

தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆர் இந்த அதிசயத்தைப் பார்த்து அசந்துக் கொண்டிருந்தார்.

அருகில் வந்த தேவரிடம் எம்.ஜி.ஆர் கேட்டார்.

“மொதலாளி, அவங்களோட என்ன பேசிக்கிட்டிருந்தீங்க?”

“படம் பத்தி சில தகவல்கள் கேட்டானுங்க முருகா. சொன்னேன்”

“என்ன கேட்டாங்க, நீங்க என்ன சொன்னீங்க?”

“படத்தோட கதையை கேட்டாங்க. தலைப்பை சொன்னேன். கதை புரிஞ்சிடுச்சி, நல்லாருக்கு. சூப்பருன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க”

“அவங்களுக்கு தமிழ் தெரியாதே? இங்கிலீஷ்லேயா சொன்னீங்க?”

“ஆமாம். ‘தி ஜட்ஜ் பேக் ஆஃப் லவ்’ அப்படின்னேன். அசந்துட்டானுங்க ஆங்கிலேயனுங்க”

அனேகமாக அன்று புரட்சித்தலைவருக்கு காய்ச்சல் வந்திருக்க வேண்டும்.