14 நவம்பர், 2017

சிறுபத்திரிகைகளில் திரைவிமர்சனம் எழுதுவது எப்படி?

முன்குறிப்பு : ‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட கோலங்களுமே ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ படங்களில் காட்சிப்படுத்தப் படுகின்றன. மாறாக காட்சியையோ, கோலத்தையோ காணாத வயதுக்கு வாராதோர்தான் வயதுக்கு வந்தோருக்கான படங்களை காண்பதற்கான மனப்பாங்கு கொண்டவர்களாக அமைந்திருக்கிறார்கள்.

‘துண்டு நிச்சயம் உண்டு’ என்கிற முன்முடிவோடே பால்யத்தை ஒட்டிவாழும் பார்வையாளர்கள் இம்மாதிரி படங்களுக்கு அரங்கம் முன்பாக குழுமுகிறார்கள். மீசைக்கு கீழே சில அங்குல மயிர் இல்லாவிட்டாலும், இருக்கையை நிரப்ப ஆள்வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர்களும் திரையரங்கு பணியாளர்களால் அனுமதிக்கப்படுகிறார்கள்.
வயதுக்கு வந்தோருக்கு மட்டும் படங்கள், வயதுக்கு வாராதோருக்கு புரியக்கூடிய அளவிலான மேலோட்டமான பாணியில் எடுக்கப்பட்டாலும், முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கான திரட்சியான காட்சிகளோடு மேற்கத்தியப் பாணியை மேற்குத் தொடர்ச்சி மலை வாசனையோடு தருவது வாடிக்கை.

நிற்க.
அடிப்படையில் பாலியல் பசியை பேசினாலும், பருவப் பசிக்கு தீனி போட்டாலும் வயதுக்கு வந்தோருக்கான படங்கள் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமானது அல்ல என்பதே என் துணிபு.

சரி, விமர்சனத்துக்குள் நுழைவோம்.

* * *

நான்கு இளைஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிறது. அவனுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. இதுவே அவர்கள் இருவருக்குமான ஆண் x பெண் முரணை ஏற்படுத்துகிறது. தன்னுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்பது ஒருவகையில் அவனுக்கு மகிழ்வையும் தருகிறது. இரவு வேளைகளில் மது அருந்திவிட்டு, அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் இல்லம் திரும்புகிறான். இதனால் இரவில் அவன் செய்யவேண்டிய ‘வேலை’களை செய்ய முடியாமல் போகிறது.
புதியதாக மணம் ஆன ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான இந்த முரண் படம் நெடுக பாலியல் அங்கதச்சுவையோடு காட்சிப்படுத்தப் படுகிறது. இருவருக்குமான ஊடல் கூடலை நோக்கிச் செல்லாதவகையில் திரைக்கதை புதுமையான உத்தியில் இயக்குநர் சாஜனால் கையாளப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வயதுக்கு வாரா ரசிக மீன்குஞ்சுகளுக்கு தூண்டிலில் போடப்படும் மண்புழு.

* * *

காமப்பசி தீரா பேரிளம்பெண். எனினும், அவளது உடல் கட்டோடு குழலாட ஆடவென்று கச்சிதமாக இருக்கிறது. அவரது கணவன் அயல்நாட்டில் பொருள் ஈட்டுகிறான். இந்தப் பெண்ணுக்கு பக்கத்து இல்லத்தில் கட்டிளங்காளை ஒருவன் தினசரி உடற்பயிற்சி செய்வது வழக்கம். காம்பவுண்டு தாண்டி கட்டிளங்காளை. இங்கே காமப்பசி அடங்கா காரிகை.

அந்த பேரிளம்பெண்ணின் காமம் கலங்கரை விளக்க ஒளியாய் காளையை எட்டுகிறது. கண்கூசும் காமவொளியை தாங்கவொண்ணா துயரம் கொண்டவனாய், விளக்கை அணைக்க காம்பவுண்டு தாண்டி வருகிறான். அணைக்க வேண்டியது விளக்கையல்ல. விளக்கு ஏந்திய மங்கையை என்று உணர்கிறான்.
காமச்சுவையில் இருவரும் கரைபுரண்டு ஓடுகிறார்கள். சலிக்க சலிக்க காமம். விடிய விடிய ஹோமம். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்கிற மரபான பாலியல் செயல்பாடுகளில் மனதை வசம் இழக்கிறார்கள் இருவரும்.

இந்த காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் நேர்த்தியான ஒளியமைப்பும், படத்தொகுப்பாளரின் தாராள மனசும் பார்வையாளர்களுக்கு ஓர் ஐரோப்பிய திரைப்படத்தை காணும் அற்புத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

* * *
போதையிலே சுகம் காண்கிறான் மாணவன் ஒருவன். ஆரம்பத்தில் விளையாட்டாக பீர் என்கிற மதுபானத்தை சுவைக்கிறான். அதிலிருந்து சற்று முன்னேறி பிராந்தி, ரம் என்று ஐரோப்பிய பானங்களை பதம் பார்க்கிறான்.

ஒருக்கட்டத்தில் பானங்கள் பானகம் மாதிரி இனிக்கிறது. அவனது தேவை, மேலும் போதை மேலும் மயக்கம். கஞ்சா புகைக்கிறான். அந்த போதையும் போதாமல் பாலியல் தொழிலாளிகளை நாடுகிறான். போதைகளில் சிறந்தது போகம் என்று உணர்கிறான்.

* * *

மூன்று வெவ்வேறு கிளைகளாக விரிந்த இந்த சிறுகதையாடல்களை கடைசியாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனைக் காட்சியை நயமாக சேர்த்து பெருங்கதையாடலாக மாற்றுகிறார் இயக்குநர்.
* * *

முதல் கதையில் திருப்தியடையாத புதுமனைவி, கணவனின் நண்பர்களில் ஒருவனோடு கூடுகிறாள். இந்த காட்சி பார்வையாளனுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை தருவதோடு வயதுக்கு வராத பார்வையாளர்கள் எதிர்காலத்தில் வேலை செய்யாவிட்டால் என்னவாகும் என்கிற படிப்பினையை பெறக்கூடிய பாடத்தையும் வழங்குகிறது.

இரண்டாவது கதையில், பக்கத்துவீட்டு பாலகனோடு பந்து விளையாடும் பெண், அற்பமான பாலியல் தேவைக்காக அற்புதமான இல்வாழ்க்கையை இழப்பதாக கதையின் போக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவது கதையில் போதைக்கு பாதை தேடிய மாணவன், பாதை தவறி பல்லாவரத்தில் பாக்கு போட்டுக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவு.

* * *
‘மது, மங்கை, மயக்கம்’ என்கிற இந்த திரைப்படம், தணிக்கை சான்றிதழ் சுட்டுவதை போல வயதுக்கு வந்தோருக்கான பாலியல் படம் மட்டுமல்ல. பாலியலை மிகைபுனைவாக கருதும் பாலகர்களுக்கான படமும்தான். பெண்களிடம் என்ன இருக்கிறது என்று அறிய ஆர்வமாக முற்படும் ஆண்களுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. முதிர்ச்சியான பார்வையாளன் இம்மாதிரி படங்களில் அழகியல் பாடம் கற்பான். ஐரோப்பிய புது அலை திரைப்படங்கள், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில்உ லகம் முழுக்க செய்தது இதைதான். ஆட்டுமந்தை மூளை கொண்டவர்களோ ‘துண்டு’ போடசொல்லி அரங்கில் விசில் அடித்து கலாட்டா செய்வார்கள். யார் யாருக்கு எது வேண்டுமோ, அவரவருக்கு அது அது கிடைக்கும்.

பின்குறிப்பு : கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் வண்ணப் படங்கள், ‘மது மங்கை மயக்கம்’ படத்தில் இடம்பெற்றவை அல்ல. பல்வேறு பாலியல் பருவ திரைப்படங்களில் இருந்து வாசகர்களின் வசதிக்காக சேகரிக்கப்பட்டவை.

13 நவம்பர், 2017

நேருவின் ரோஜா

கணவரின் கைபிடித்து முதன்முதலாக புகுந்த வீட்டுக்குள் நுழைந்த கமலாவுக்கு படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. இதற்கு முன்பாக இவ்வளவு பெரிய வீட்டை பார்த்தது கூட இல்லை. நவநாகரிக தோற்றத்தில் இருந்த மாமியார் வீட்டாரை பார்த்ததுமே, எப்படித்தான் இங்கே காலத்துக்கும் வாழப்போகிறோமோ என்று அச்சப்பட்டார். பதினேழு வயது. முகத்தில் அப்பட்டமாக அச்சம். டெல்லியில் காஷ்மீரி பிராமண குடும்பத்தில் பிறந்தவர். ஆச்சாரமான நடுத்தரக் குடும்பம். நொடிக்கு நாலு முறை வெட்கப்படுவார். வாய்திறந்து ‘களுக்’கென்று பேசமாட்டார். ரொம்பவும் அமைதியான சுபாவம். பெரிய குடும்பத்தில் பெண் கேட்கிறார்கள் என்றதுமே எதையும் யோசிக்காமல் கன்னிகாதானம் செய்துவிட்டார் கமலாவின் அப்பா.

அலகாபாத்துக்கு வந்தபிறகுதான் தெரிந்தது, தான் வாழ்க்கைப்பட்டிருக்கும் குடும்பம் அரசக்குடும்பத்துக்கு நிகரான அந்தஸ்தோடு வாழ்கிறார்கள் என்று. ‘ஆனந்த பவன்’ என்கிற அந்த மாபெரும் மாளிகைக்குள் கவனமாக வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்தார் கமலா நேரு.

மேற்கத்திய நாகரிகத்தில் வாழும் கணவர். வீட்டில்கூட நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்க பார்க்க பற்றிக்கொண்டு வந்தது. கமலாவுக்கு ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில் பேசவராது. மனைவியையும், குடும்பத்தையும் விட நாடுதான் முக்கியம் நேருவுக்கு. எப்போது பார்த்தாலும் அரசியல், போராட்டம், பயணம். திருமணமாகி சில நாட்களிலேயே இமாலயத்துக்கு ‘டூர்’ போட்டார் நேரு. தேனிலவு அல்ல, தனியாகதான். பின்னர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் இச்சம்பவத்தை எழுதும்போது, “அப்போது கிட்டத்தட்ட கமலாவை நான் மறந்தேவிட்டேன்” என்று வேடிக்கையாக குறிப்பிடுகிறார் நேரு.

“எங்கள் மணவாழ்வில் நாங்கள் இருவரும் சேர்ந்திருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அரிதிலும் அரிதான அச்சந்திப்புகளுக்கு விலைமதிப்பே இல்லை” என்றும் நேரு சொல்கிறார்.

கமலாவின் ஒரே ஆறுதல் நாத்தனார் விஜயலஷ்மி பண்டிட்தான். நேருவுக்கு இணையான புத்திக்கூர்மையும், கல்வியறிவும் பெற்றிருந்தவர். தன்னுடைய அண்ணியை எப்படியாவது தேற்றிவிட வேண்டுமென்று விஜயலட்சுமி கடுமையாக முயற்சித்தார். அவரது உழைப்பு வீண் போகவில்லை. சீக்கிரமே மாமியார் வீட்டை புரிந்துக்கொண்டு, தன்னை புகுந்த வீட்டோடு இயல்பாக பொருத்திக்கொள்ள தொடங்கினார் கமலா. கல்யாணம் ஆன அடுத்த வருடமே நேருவை அச்சு அசலாக உரித்துக்கொண்டு அழகான மகள் பிறந்தாள். இந்திரா பிரியதர்ஷனி. இந்திராவுக்கு பிறகு பிறந்த மகன், ஒரு வாரத்திலேயே காலமாகிவிட்டான்.

கணவர் ஏன் எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டே இருக்கிறார் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த கமலாவுக்கு சுதந்திரப் போராட்டம், காங்கிரஸ் குறித்து பாடமெடுத்தார் விஜயலஷ்மி. இதையடுத்து நாட்டுக்காக கணவரோடு இணைந்து போராடுவது தன்னுடைய கடமை என்கிற முடிவுக்கு அவர் வந்தார்.

1921ல் நடந்த ஒத்துழையாமை இயக்கம் மூலமாக பொதுவாழ்வுக்கு வந்தார். அலகாபாத் நகர் மகளிரை ஒன்றிணைத்தார். அயல்நாட்டு பொருட்களையும், மதுவகைகளையும் விற்றுவந்த கடைகளுக்கு முன்பாக மறியல் செய்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் அவசியத்தை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்த நேரு திட்டமிட்டிருந்த நிலையில், அவரை வெள்ளையர் கைது செய்தனர்.

கணவர் திட்டமிட்டிருந்த கூட்டத்தை வெற்றிகரமாக கமலா கூட்டினார். அக்கூட்டத்தில் ஆற்றுவதற்காக நேரு தயார் செய்திருந்த உரையை கமலா வாசித்தார். அந்நிய ஆட்சிக்கு எதிராக போர் முழக்கம் புரிந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலவாசனையே இல்லாமல் ஆனந்தபவனுக்குள் கமலாவா இதுவென்று நேரு குடும்பத்துக்கே ஆச்சரியம்.

நேருவுக்கு இணையான அச்சுறுத்தல் அவரது மனைவி கமலாவாலும் தங்களுக்கு நேரலாம் என்று வெள்ளையர்கள் யூகித்தனர். ஏனெனில் கமலாவின் பின்னால் அலகாபாத் பெண்கள் மட்டுமல்லாமல், நாடு முழுக்கவிருந்த பெண்களும் அணிதிரள தயார் ஆனார்கள். அடுத்தடுத்து இருமுறை கமலா கைது ஆனார். தொடர்ச்சியான போராட்டங்கள், சிறைவாசமென்று அவரது உடல் சீர்குலைந்தது. ஏற்கனவே காசநோய் பிரச்சினை இருந்தது. சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக ஐரோப்பாவுக்கு மனைவியை அழைத்துச் சென்றார் நேரு. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என்று பல இடங்களுக்கும் மகள், மனைவியோடு சுற்றிக் கொண்டிருந்தார்.

இந்தியாவில் உப்பு சத்தியாக்கிரக போராட்டங்கள் உக்கிரம் பெற்ற நிலையில் குடும்பத்தோடு அப்போராட்டங்களில் கலந்துகொண்டார். நேரு, அவரது மனைவி, தங்கை என்று மொத்தமாக குடும்பத்தோடு சிறைவைக்கப் பட்டார்கள். சிறையில் மீண்டும் கமலாவின் உடல்நிலை படுமோசமானது. ஐரோப்பாவில் அவருக்கு சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் வெள்ளையர் அரசு கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தது.

சுவிட்சர்லாந்தில் கமலாவுக்கு சிகிச்சை தொடர்ந்தது. அவர் படுத்த படுக்கையானார். இந்தியாவில் நேருவின் சுதந்திரப் போராட்டம், சுவிட்சர்லாந்தில் கமலாநேரு உயிருக்குப் போராட்டமென்று குடும்பம் தத்தளித்தது.

இந்த அவலம் வெகுவிரைவிலேயே முடிவுக்கு வந்தது. கமலா நேரு 1936ல் தன்னுடைய 37வது வயதில் சுவிட்சர்லாந்தில் காலமானார். மனைவியின் நினைவாக தன்னுடைய உடையில், கமலாவுக்கு பிடித்த சிகப்பு ரோஜாவை செருகிக்கொள்ளத் தொடங்கினார் நேரு. இந்தப் பழக்கம் 1964ல் அவர் மரணிக்கும் வரை தொடர்ந்தது.

3 நவம்பர், 2017

தோகை விரி!

“இயற்கையை பழிக்காதேடா பாவி..” அப்பா அடிக்கடி சொல்வார்.

அடிவானம் கறுக்கும்போதே எங்களுக்கெல்லாம் அடிவயிற்றில் அச்சம் எழும். தூறல் விழ ஆரம்பித்தாலே ‘எழவெடுத்த மழை’ என்று இயல்பாக எங்கள் உதடுகள் உச்சரிக்கும். அப்பாவுக்கு கண்மூடித்தனமாக கோபம் வரும்.

நாங்கள் மழையை வசைபாடும்போதெல்லாம், அவர்தான் மழைக்கு வக்காலத்து வாங்குவார்.

“பழிக்காம.. இந்த எழவெடுத்த மழையை பாராட்டவா சொல்றீங்க.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதே இயற்கைதான் நம்மை மொத்தமா குடும்பத்தோட பலிவாங்கப் பாத்துச்சி” என்பேன்.

அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டார்.

அந்தந்த பருவத்தில் வெயிலும், மழையில் இயற்கையின் இயல்பு. அதனால் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அதற்கு மனிதப்பிழைதான் காரணம் என்பது அவருடைய ஆணித்தரமான வாதம்.

அவர் சொல்வது அறிவியல்ரீதியாக சரிதான். நான் கற்ற கல்வி அவருடைய தர்க்கத்தை ஏற்றுக் கொள்கிறது.

ஆனால்-

கருமேகம் சூழ்ந்து வானம் இருட்ட ஆரம்பிக்கும்போதெல்லாம் என் வயிற்றுக்குள் சடுகுடு நடக்கிறது.

ஆமாம் சார்.

நான் வரதராஜபுரத்துக்காரன். எனக்கு அப்படிதான் இருக்கும்.

மழைத்தூறல் விழுந்ததுமே மகிழ்ச்சியில் பெண் மயில் தோகை விரிக்கும் என்பார்கள். எங்கள் வரதராஜபுரத்துக்காரர்களுக்கு ‘மழை’ என்கிற சொல் காதில் விழுந்தாலே முகம் பேயறைந்துவிடும்.

அப்பா மட்டும் விதிவிலக்கு. அவரைப் பற்றி அப்புறம் பார்ப்போம்.

மழையை யாராவது வெறுக்க முடியுமா என்று கேட்டீர்களேயானால், நீங்கள் புண்ணியவான். மழையை ரசிக்கும் மனசை உங்களுக்கு பரம்பொருள் அருளியிருக்கிறது.

மன்னித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிலேயே மழையை அதிகம் வெறுக்கும் மனிதர்களாக வரதராஜபுரத்துக்காரர்கள் சமீபத்தில் மாறிப்போனோம்.

ஏன் என்பதற்கு ஒரு சிறிய நினைவூட்டல்.

ஆண்டு 2015. தேடி டிசம்பர் ஒன்று. உங்களில் யாருக்காவது நினைவிருக்கிறதா?

ஒருவேளை அந்த தேதியில் நீங்கள் சென்னையில் இருந்திருந்தால், சாகும்வரை அந்நாளை மறந்திருக்க மாட்டீர்கள். நாங்களெல்லாம் அன்றைய ஊழித்தாண்டவத்தை நினைத்து நாள்தோறும் இன்றும் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறோம்.

பரவாயில்லை.

அந்த ஆண்டு நவம்பர் மாதமே வானத்தை யாரோ திட்டமிட்டு வாள் கொண்டு கிழித்திருப்பார்களோ என்று சந்தேகம் கொள்ளுமளவுக்கு வரலாறு காணாத மாமழை பொழிந்தது. மாலை ஆனாலே மழைதான். ஒட்டுமொத்த சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆறு, ஏரி, குளம், வாய்க்கால், குழியெல்லாம் தளும்பத் தளும்ப தண்ணீர்.

குடிக்கும் தண்ணீரைகூட காசு வாங்கி குடிக்கும் கூட்டம்தானே? அந்த மழையை சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றோம். அந்த ஆண்டு தீபாவளியை அவ்வளவு சிறப்பாக கொண்டாடினோம்.

மழை, செகண்ட் இன்னிங்ஸ் ஆடுமென்று யாருக்கு தெரியும்? டிசம்பர் முதல் நாளிலேயே பேயாட்டம் ஆடியது. போதுமான முன்னறிவிப்பு இல்லாமல் ஆட்சியாளர்கள் வேறு காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே பெரிய ஏரியான செம்பரம்பாக்கத்தை வேறு திறந்து விட்டார்கள். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் பிரளயமே நேர்ந்துவிட்டது.

ஒட்டுமொத்த ஊரும் நீரில் மிதந்தது. ஆடு மாடுகளோடு மனிதர்களும் அடையாற்றில் அடித்துக்கொண்டு போனார்கள். ஒரு வாரத்துக்கு மின்சாரம் இல்லை. லட்சக்கணக்கான குடும்பங்களின் அன்றாட அலுவல்கள் மொத்தமாக முடங்கி, அத்தனை பேரும் வீட்டுக்குள் அடைந்துக் கிடந்தார்கள். பாடுபட்ட சேர்த்த அத்தனையும் வெள்ளத்தில் அடித்துக் கொண்டுச் செல்வதை கண்டு மனம் நொந்தார்கள். வீட்டின் தரைத்தளம் முழுக்க நீரால் நிரம்ப, மொட்டை மாடிக்கு போய் மழையில் நனைந்தவாறே உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

தன்னார்வலர்களின் தொண்டு உள்ளத்தால்தான் மீண்டது சென்னை. அரசிடம் நியாயம் கேட்ட மக்களுக்கு, “நூற்றாண்டு கண்டிராத மழை. நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று பதில் சொன்னார்கள் ஆட்சியாளர்கள்.

எல்லா நிகழ்வுகளையும் நீங்களும் டிவியில் பார்த்திருப்பீர்கள். செய்தித்தாள்களில் வாசித்திருப்பீர்கள். இரண்டு மாடி கட்டிடங்கள் வரை மூழ்கிய நிலையில், மிதக்கும் நகரமான வெனிஸை போன்ற ஓர் ஊரை அப்போது அடிக்கடி டிவியில் காட்டிக்கொண்டே இருந்தார்கள். நினைவிருக்கிறதா?

மக்கள், குடும்பம் குடும்பமாக படகுகளில் அகதிகளாக வெளியேறிக் கொண்டே இருந்தார்களே. ஹெலிகாஃப்டர் வந்துதான் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்ற முடிந்ததே. தன்னார்வலர்களும், மீட்புப் படையினரும் பணிபுரிய மிகவும் சிரமப்பட்டார்களே. அந்த ஊர்தான் வரதராஜபுரம். நான் வசிக்கும் பகுதி.

தாம்பரத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம்தான். இயற்கை வனப்பு சூழ்ந்த பகுதி. கிணறு வெட்ட வேண்டாம். பள்ளம் தோண்டினாலே போதும். பத்தடியில் இளநீர் சுவையில் தெளிவான குடிநீர். சென்னை, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் என்று முக்கிய நகரங்களுக்கு மையத்தில் அமைந்திருக்கும் அழகான ஊர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இங்கே சல்லிசான விலைக்கு இரண்டு கிரவுண்டு நிலம் வாங்கிப் போட்டிருந்தார் அப்பா.

அண்ணனும், நானும் வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் வீடு கட்டினோம். பங்களா மாதிரி பெரிய வசதியான வீடு. அப்பாவுக்கு மழையை பிடிக்கும் என்பதால், வீட்டுக்குள்ளேயே மழை பெய்வதற்கு ஏதுவாக பழைய வீடுகள் பாணியில் வீட்டுக்கு நடுவே ஓர் அழகான முற்றம். வீட்டுக்கும் முன்பும் பின்புமாக பெரிய தோட்டம். நிறைய மரங்கள். அக்கம் பக்கம், சொந்தம் பந்தம், உற்றார் உறவினர் அத்தனை பேரும் மூக்குமேல் விரல்வைத்து ஆச்சரியப்படுமளவுக்கு அத்தனை அழகான வீடு. கூட்டுக் குடும்பமாய் அவ்வளவு சந்தோஷமாய் வாழ்ந்து வந்தோம்.

நாங்கள் கட்டியிருக்கும் வீடு கடல் மட்டத்துக்கு கீழே இருக்கிறது என்கிற புவியியல் உண்மையெல்லாம் அப்போது தெரியாது. ஒரு காலத்தில் இங்கே பிரும்மாண்டமான ஏரி இருந்தது. அந்த ஏரியின் நீர்ப்பாசனம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு உதவியது என்பதெல்லாம் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. அதையெல்லாம் யாராவது எடுத்துச் சொல்லியிருந்தாலும்கூட, வீடு கட்டும்போது எங்கள் தலையில் ஏறியிருக்காதுதான்.

2015ல் பெய்த மழைதான் இதையெல்லாம் நினைவுறுத்தியது.

அந்த டிசம்பர் ஒன்று நாள்ளிரவில் எங்கள் வீடே ஆற்றுக்கு மத்தியில் கட்டப்பட்டதை போன்று ஆனது. அழையா விருந்தாளியாக அடையாறு எங்கள் வரவேற்பறைக்குள் நுழைந்தது. குழந்தை குட்டிகளோடு மொட்டைமாடியில் குளிரில் விரைத்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு ஆறுதல்படுத்தகூட தெம்பில்லாமல் அச்சத்தோடு இருந்தோம். பசி மயக்கம் வேறு. யாராவது காப்பாற்ற வருவார்களா, உயிர் பிழைப்போமா என்கிற அச்சத்துடன் கழிந்த அந்த முழு இரவை எப்படிதான் அவ்வளவு சுலபமாக மறக்க முடியும்?

உடுத்திய உடையை தவிர வேறொன்றும் எங்கள் கைவசமில்லை. ஒரே இரவில் எல்லாம் இருந்தும் ஏதுமற்றவர்களாகிப் போனோம். குழந்தைகள், பெண்களோடு ஒரு வார காலம் அகதிகளாக தாம்பரத்தில் ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டோம். சாப்பாட்டுக்கு வரிசையில் நின்று தட்டேந்தினோம். அப்போது என் தம்பி மனைவி பச்சை உடம்புக்காரி. குழந்தை பிறந்து பதினைந்து நாட்கள்தான் ஆகியிருக்கும். அப்போது நாங்கள் அடைந்த மன உளைச்சலை இப்போது வார்த்தைகளில் முழுமையாக விவரிக்க முடியுமா என்பதே சந்தேகம்தான்.

இப்போது சொல்லுங்கள்.

மழை பெய்தால், நாங்கள் மயில் மாதிரி தோகை விரித்து மகிழவா முடியும்?

ஆனால்-

அப்பா அப்படியேதான் இருக்கிறார்.

சொல்லப்போனால், மயிலைவிட மகிழ்ச்சி அவருக்குதான்.

என் வாழ்நாளில் அப்பா, மழைக்காக எங்கும் ஒதுங்கியதில்லை. குடைபிடித்து நடந்ததில்லை. ரெயின்கோட் அணிந்ததில்லை.

“மழைன்னா நனையனும். எங்க ஊருலே அப்படிதான். ஆடு, மாடெல்லாம் குடை பிடிச்சி பார்த்திருக்கியா? அதென்னவோ தெரியலை. இந்த மெட்ராசுலேதான் அவனவன் மழையிலே நனையுறதுன்னாலே அப்படி அலறுறான். நனைஞ்சா காய்ச்சல் வரும்னு சொல்றான். தண்ணீதான் உலகத்தோட ஜீவன். அதுலே நனைஞ்சு காய்ச்சல் வருதுன்னா, நீ உன் உடம்பை பார்த்துக்கற லட்சணம் அப்படி” ஒவ்வொரு மழையின் போதும் இதுமாதிரி ஒவ்வொரு வியாக்கியானம் பேசுவார்.

அப்பாவுக்கு தர்மபுரி பக்கமாக மழையே பார்க்காத ஏதோ ஒரு வறண்ட ஊராம். அவருக்கு பத்து வயது இருக்கும்போது மிகப்பெரிய பஞ்சம் வந்ததாம். சுற்றுவட்டார மொத்தப் பகுதியுமே பாலைவனமாகி, பஞ்சம் பிழைக்க குடும்பம் குடும்பமாக இடம்பெயர்ந்தார்களாம். தன்னுடைய பால்ய வயது உறவுகளையும், நட்புகளையும் பிரிந்ததற்கு மழை பொய்த்ததே காரணம் என்பார். அதற்காக வெயிலையும் அவர் திட்டியதில்லை.

அப்படி இப்படி எப்படியோ படித்து சென்னைக்கு வந்தார். அரசு வேலையில் இணைந்தார். தன்னுடைய வேரை இங்கே உறுதியாக நிலைப்படுத்திக் கொண்டார்.

அக்னி வெயில் முடிந்தாலே போதும். அடிக்கடி அம்மாவிடம், “அடிவானம் கறுக்குற மாதிரியில்லே. இந்த வருஷம் சீக்கிரமே மழை வரப்போகுது” என்பார். மழை வர தாமதமானால் அவருக்கு இரத்த அழுத்தம் எகிறிவிடும். கடற்கரைக்கு போய் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போதுதான் அவரால் சமநிலைக்கு வரமுடியும். அவருடைய பழைய விஜய் சூப்பர் ஸ்கூட்டரின் ஸ்டெப்னியில் ‘மாமழை போற்றுதும்’ என்று பெயிண்டால் எழுதி வைத்திருப்பார். அப்படிப்பட்ட மழை வெறியர்.

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் கல்யாணம் ஆனதே ஐப்பசி மாதம்தான். அடைமழையில்தான் தாலி கட்டினார். முப்பத்து முக்கோடி தேவர்களும் மழையால் அட்சதை இட்டு எங்களை ஆசிர்வதித்தார்கள் என்று அடிக்கடி கல்யாணப் பெருமை பேசுவார்.

அவருக்கு ஐப்பசியில் முகூர்த்தம் அமைந்துவிட்டது என்கிற ஒரே காரணத்தால் எங்கள் வீட்டில் அத்தனை பேருக்கும் ஐப்பசியில்தான் கல்யாணம் என்பதில் பிடிவாதமாக இருந்து சாதித்தார்.

அப்பாவுடைய மழைக்காதலை அம்மா, திருமணமான சில காலத்திலேயே புரிந்து, அவருடைய அலட்டல்களை சகித்துக் கொண்டார். எங்களுக்குதான் கடுப்பு. “ஏம்பா, சிவாஜி மாதிரி ஓவர் ஆக்டிங் பண்றே..?” என்று நக்கலடிப்போம்.

சிறுவயதில் நாங்கள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருப்போம். மழை பெய்தால், “லீவு போட்டுட்டு மழையை ரசிங்கடா” என்பார். அப்போதெல்லாம் அப்பாவே லீவு போடச் சொல்கிறார் என்று மகிழ்ச்சியாகதான் இருந்தது.

ஆனால்-

முக்கியமான தேர்வுகள் வந்தபோதெல்லாம் கூட மழையென்றால், “எக்ஸாமெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். வர வர மழையை பார்க்கிறதே அபூர்வமாயிக்கிட்டிருக்கு. அதை ரசிக்காம படிப்பு என்ன வேண்டிக் கிடக்கு?” என்று அவர் கேட்டபோது எங்களுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.

அக்காவுக்கு காலேஜில் கடைசிநாள் தேர்வு. அன்று திடீரென கோடைமழை. அக்காவை, தேர்வெழுதப் போகக்கூடாது என்று சொல்லி அப்பா ஒரே அடம். இவர் வேற மாதிரி அப்பா என்பதை நாங்கள் உணர்ந்துதான் இருந்தோம். மழை பொழிந்தால் ‘மவுன ராகம்’ ரேவதி, ‘ஓஹோ.. மேகம் வந்ததே’ என்று ஆடிப்பாடினால் ரசிக்கலாம். பூர்ணம் விசுவநாதன் ஆடினால் சகிக்குமா?

எங்கள் அப்பா அப்படிதான் ஆடிக்கொண்டிருந்தார்.

நாங்கள் எல்லாம் காலேஜ், ஆபிஸ் என்று செட்டில் ஆகி, ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் அல்லல் பட்டுக் கொண்டிருந்தோம். அப்போதும்கூட மழை வந்தால் குடும்பமாக உட்கார்ந்து கும்மியடித்து கொண்டாட வேண்டும் என்கிற அப்பாவின் அன்புக்கட்டளை எங்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியது. “இதே ரோதனையாப் போச்சிப்பா” என்று சலித்துக்கொண்டே அவரை கடந்துச் செல்வோம்.

அப்பா டிவியில் செய்திகள் மட்டும்தான் பார்ப்பார். குறிப்பாக செய்திகளின் இறுதியில் இடம்பெறும் வானிலை தகவல்கள். செய்தித்தாளிலும்கூட மழை பற்றிய தகவல்களைதான் தேடி வாசிப்பார். நம்மூர் மழை மட்டுமல்ல. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் பொழிந்த மழை பற்றியெல்லாம் அப்டேட்டாக இருப்பார். நுங்கம்பாக்கம் வானிலைமைய இயக்குநர் ரமணனுக்கு மனதளவில் ரசிகர் மன்றமே வைத்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அப்பா ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்ததுமே சொன்னார்.

“நானும், உங்கம்மாவும் மேகாலயாவுக்கு டூர் போகப் போறோம்”

எங்களுக்கு நினைவு தெரிந்ததில் இருந்து அவர்கள் இருவரும் வெளியூருக்கு எங்கேயும் போனதாக நினைவே இல்லை. எப்போதும் அப்பாவுக்கு ஆபிஸ், அம்மாவுக்கு வீட்டு வேலையென்றே எங்களுக்காக தங்கள் இளமைக்காலம் மொத்தத்தையும் தொலைத்தவர்கள்.

ஆச்சரியமாக கேட்டேன். “நீங்க டூர் போறது நல்ல விஷயம்பா. ஆனா, காசி ராமேஸ்வரம்னு சொன்னாகூட ஓக்கே. அதென்ன மேகாலயா?”

“அங்கேதாண்டா சிரபூஞ்சி இருக்கு. உலகத்துலே அதிகம் மழை பொழிகிற ஊர். மனுஷனா பொறந்த ஒவ்வொருத்தனும் தரிசிக்க வேண்டிய புண்ணியஸ்தலமே அதுதாண்டா”

இதற்கும் மேல் அவரைப் பற்றி என்னதான் சொல்ல? அந்த கொடூரமான டிசம்பர் மழைக்கு பிறகும்கூட மழைமீதான நேசம் அவருக்கு எள்ளளவும் குறையவில்லை என்பதுதான் எங்களுக்கு அதிர்ச்சி. மாறாக நாங்களெல்லாம் மழையை தெலுங்கு சினிமா வில்லனை மாதிரி வெறுக்க ஆரம்பித்து விட்டோம்.

அந்த மழையோடு சரி.

அதன்பிறகு எங்களுடைய வேண்டுதலை ஏற்றோ என்னவோ வருணபகவான், நீண்ட விடுமுறைக்கு போய்விட்டார். அதற்கு அடுத்த ஆண்டு வந்த வார்தா பெரும்புயலிலும்கூட காற்றுதான் கோரத்தாண்டவம் ஆடி லட்சக்கணக்கான மரங்களை பலி கொண்டதே தவிர்த்து, மழையோ வெள்ளமோ இல்லாமல் நாங்கள் மீண்டும் தண்ணிக்கு சிங்கி அடிக்க ஆரம்பித்தோம்.

அப்பாதான் தவிக்க ஆரம்பித்தார். பால்கனியில் ஈஸிசேரில் அமர்ந்துக் கொண்டு அடிவானத்தை பார்த்துக்கொண்டே இருப்பார். கையை நெற்றி மீது வைத்து கண்சுருக்கிப் பார்த்து, “வானம் இருட்டற மாதிரி இல்லே?” என்பார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. சாயங்காலம் சூரியன் மறையுறப்போ எப்பவுமே கருப்பு மேகம்தான் இருக்கும்” என்று சொன்னால் முகம் வாடி அப்படியே உட்கார்ந்து விடுவார்.

திடீரென இரவில் எழுந்து தோட்டத்துக்கு வருவார். இப்படி அப்படியுமாக மெதுவாக தளர்ந்த நடை போடுவார். யாராவது யதேச்சையாக எழுந்து அவரைப் பார்த்துக் கேட்டால், “லேசா ஈரக்காத்து அடிக்குது. மண்வாடையும் வீசுது. அனேகமா காஞ்சிவரத்துக்கு அந்தப் பக்கம் மழைன்னு நெனைக்கிறேன்” என்பார்.

அய்யோடா என்றிருக்கும்.

ஒருமுறை அம்மா என்னிடம் சொன்னார். “ப்ளீஸ்டா. அப்பாவை கோச்சுக்காதீங்க. நீங்கள்லாம் மழையை தொல்லையா பார்க்குறீங்க. அவருக்கு அதுதான் எப்பவும் கனவு. சின்ன வயசுலே மழை இல்லாததாலே சொந்த மண்ணை பிரிஞ்ச மனுசண்டா”

அப்பாவை அம்மா புரிந்துக் கொண்ட மாதிரி நாங்கள் இருவரையுமே புரிந்துக் கொண்டுதான் இருந்தோம். இருந்தாலும் பதில் சொன்னேன்.

“அம்மா, தாம்பரத்துலே அனாதைங்க மாதிரி நம்ம குடும்பம் தவிச்ச அந்த வாரத்தை நினைச்சுப் பாரு. புதுசா பொறந்த உன் பேத்தியை வெச்சுக்கிட்டு நீ எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு. எல்லாம் இந்த மழையாலேதானே?”

“நம்ம நியாயம் நமக்கு. அவரு நியாயம் அவருக்கு” அப்பாவை விட்டுக் கொடுக்காமல்தான் அம்மா சொன்னார்.

மழையை நாம் நேசித்தாலும் சரி. வெறுத்தாலும் சரி. எவ்வித பாகுபாடு பார்க்காமல் எல்லோருக்கும் பொதுவாகதான் பெய்கிறது மழை. பருவம் தப்புவதும் அப்படிதான். இயற்கையின் புதிர் விளையாட்டுக்கு அற்பப் பிறவிகளான மனிதர்களிடம்தான் விடை ஏது?

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே வரலாறு காணாத வெயிலில் வாடினோம். “மழை பெய்ஞ்சித் தொலைக்கக் கூடாதா?” என்று வரதராஜபுரத்து ஆட்களே ஏங்குமளவுக்கு அப்படியொரு அசுர வெயில்.

அப்பா மட்டும் குஷியானார். “இப்படி வெயில் காட்டு காட்டுன்னு காட்டிச்சின்னா, அந்த வருஷம் கண்டிப்பா அடைமழை நிச்சயம். 1967லே இப்படிதான் ஆச்சு. அப்போ அடிச்ச புயல்லே ஒரு கப்பலு, மெரீனா பீச்சுலே கரை ஒதுங்கி மாசக்கணக்குலே கிடந்துச்சி. நாங்கள்லாம் ஆதம்பாக்கத்துலே இருந்து நடந்தே போயி பார்த்தோம்”

தேவுடா. அப்பா இப்போது வெயிலையும் ரசிக்க ஆரம்பித்து விட்டாரா? ஒவ்வொரு வருட மழைக்கும் அவரிடம் ஒவ்வொரு கதை உண்டு. அவரது அனுபவ ஞானம் கொண்டு, இந்தாண்டு பெருமழை நிச்சயம் என்று கணித்தார்.

போனமாதம் காலையில் கடுமையான வெயிலில் கார் ஓட்டிக் கொண்டிருந்தேன். அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நேரம் தப்பி செம டென்ஷன். நந்தனம் சிக்னலில் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடையாததால் பேரணி மாதிரி டிராஃபிக் ஜாம்.

திடீரென செல்போன் கிணுகிணுத்தது. மனைவி calling. நேரம் கெட்ட நேரத்தில் அவரிடமிருந்து போன் வராது. ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே தொடர்பு கொள்வார்.

ஸ்பீக்கரை போட்டு “ஹலோ..” சொன்னேன்.

“மாமாவுக்கு திடீர்னு நெஞ்சுவலிங்க. இந்து மிஷன் ஆஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க”

பதில்கூட சொல்லாமல் போனை கட் செய்தேன். வண்டியை ‘யூ டர்ன்’ எடுக்கவே அரை மணி நேரம் ஆகிவிட்டது. என் அவசரம் மற்றவர்களுக்கு எப்படி தெரியும். நான் தாம்பரம் போய் சேர்ந்தபோது எல்லாமே முடிந்துவிட்டது.

அப்பா, சில நாட்களாகவே சோர்வாகதான் தெரிந்தார். சர்க்கரை, இரத்த அழுத்தம் என்றெல்லாம் அவருக்கு உடல்ரீதியாக பிரச்சினைகள் இருந்தாலும் இவ்வளவு சீக்கிரமாக விடைபெற்றுக் கொள்வார் என்று யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.

அம்மா, அழக்கூட மறந்து உறைந்துப் போயிருந்தார். ஐம்பது ஆண்டுகால தாம்பத்யம் அவருக்கு எவ்வளவோ நல்ல நினைவுகளை பரிசளித்துவிட்டுதான் சென்றிருக்கிறது. அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என்று குடும்பமே கதறிக் கொண்டிருக்க எனக்கு மட்டும் ஏனோ அழுகையே வரவில்லை.

அப்பாவுக்கு இறுதியஞ்சலி செலுத்த வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாமே அவரை மழையோடு தொடர்பு படுத்திதான் நினைவு கூர்ந்தார்கள்.

“மழைன்னா மனுஷனுக்கு அவ்வளவு உசுரு”

“மழை பெய்யுறப்போ எல்லாம் உங்கப்பாதாம்பா நினைவுக்கு வருவாரு”

அப்பாவை வெறித்து பார்த்துக்கொண்டே இருந்தன். கொஞ்சம் நேரம் ஒதுக்கி தினமும் அவரோடு இன்னும் கொஞ்சம் நெருங்கி பேசிப்பழகி இருக்கலாமோ என்று தோன்றியது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எங்களோடு மழையில் அவர் போட்ட ஆட்டமெல்லாம் நினைவுக்கு வந்தது. அவர் கடைசிவரை அப்படியேதான் இருந்தார். நாங்கள்தான் வளர்ந்ததும் மழையிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டோம்.

சுட்டெரிக்கும் வெயிலில்தான் அப்பா இறுதி யாத்திரை சென்றார். எந்த வெயிலால் சொந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்தாரோ, அதே வெயில்தான் கடைசிவரை அவரோடு வந்துக்கொண்டே இருந்தது.

இடுகாட்டில் நடக்க வேண்டிய சடங்கெல்லாம் நடந்து முடிந்தது. அண்ணன் கொள்ளி வைக்கப் போகிறான். மூடியிருந்த விறகு விலக்கி, அப்பாவின் முகத்தை இறுதியாக பார்க்கிறேன். விபூதி பூசியிருந்த அவரது நெற்றியின் மீது சட்டென்று ஒரு பொட்டு ஈரம். வானத்தைப் பார்த்தேன். இருள் மேகம் எங்கள் தலைக்கு மேலே கூடியிருந்தது. குளிரான பெரிய மழைத்துளிகள் சடசடவென்று கொட்டியது. நான் முதன்முதலாக பெருங்குரலெடுத்து வெடித்து அழ ஆரம்பித்தேன்.

(நன்றி : தினகரன் தீபாவளிமலர்)
ஓவியம் : ஸ்யாம்

16 ஆகஸ்ட், 2017

படம் வரைந்து பாகம் குறித்தலும் படமெடுத்து பாடம் நடத்துதலும்!

முன்குறிப்பு : ‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. என் பால்ய அனுபவங்களில் இருந்து வந்தடைந்திருக்கும் தரிசனம் இது.

வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட கோலங்களுமே ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ படங்களில் காட்சிப்படுத்தப் படுகின்றன. மாறாக காட்சியையோ, கோலத்தையோ காணாத வயதுக்கு வாராதோர்தான் வயதுக்கு வந்தோருக்கான படங்களை காண்பதற்கான மனப்பாங்கு கொண்டவர்களாக அமைந்திருக்கிறார்கள். காணவேண்டிய தேவையும் அவர்களுக்கே இயல்பாய் ஏற்படுகிறது.

‘துண்டு நிச்சயம் உண்டு’ என்கிற முன்முடிவோடே பால்யத்தை ஒட்டிவாழும் பார்வையாளர்கள் இம்மாதிரி படங்களுக்கு அரங்கம் முன்பாக ஆவலோடு குழுமுகிறார்கள். மீசைக்கு கீழே சில அங்குல மயிர் இல்லாவிட்டாலும், இருக்கையை நிரப்ப ஆள்வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர்களும் சட்டத்துக்கு விரோதமாக திரையரங்கு பணியாளர்களால் உள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

வயதுக்கு வந்தோருக்கு மட்டும் படங்கள், வயதுக்கு வாராதோருக்கு புரியக்கூடிய அளவிலான மேலோட்டமான பாணியில் எடுக்கப்பட்டாலும், முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கான திரட்சியான காட்சிகளோடு மேற்கத்தியப் பாணி திரைப்படமாக்கலை மேற்குத் தொடர்ச்சி மலை வாசனையோடு தருவது வாடிக்கை.

நிற்க.

அடிப்படையில் பாலியல் பசியை பேசினாலும், பருவப் பசிக்கு தீனி போட்டாலும் வயதுக்கு வந்தோருக்கான படங்கள் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமானது அல்ல என்பதே என் துணிபு.

சரி, விமர்சனத்துக்குள் நுழைவோம்.

* * *

நான்கு இளைஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிறது. அவனுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. இதுவே அவர்கள் இருவருக்குமான ஆண் x பெண் முரணை ஏற்படுத்துகிறது.

தன்னுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்பது ஒருவகையில் அவனுக்கு மகிழ்வையும் தருகிறது. இரவு வேளைகளில் மது அருந்திவிட்டு, அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் இல்லம் திரும்புகிறான். இதனால் இரவில் அவன் செய்யவேண்டிய  அடிப்படை வேலைகளை செய்ய முடியாமல் போகிறது.

புதியதாக மணம் ஆன ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான இந்த அகசிக்கல் பாலியல் அங்கதச்சுவையோடு நீலமாக காட்சிப்படுத்தப் படுகிறது. இருவருக்குமான ஊடல் கூடலை நோக்கிச் செல்லாதவகையில் திரைக்கதை புதுமையான உத்தியில் இயக்குநர் சாஜனால் கையாளப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வயதுக்கு வாரா ரசிக மீன்குஞ்சுகளுக்கு தூண்டிலில் போடப்படும் மண்புழு.

* * *

வனப்பு வாரியிறைக்கப்பட்ட பேரிளம்பெண். அவளது உடல் கட்டோடு குழலாட ஆடவென்று கச்சிதமாக இருக்கிறது. கணவன் அயல்நாட்டில் பொருள் ஈட்டுகிறான்.  இப்பெண்ணுக்கு பக்கத்து இல்லத்தில் வசிக்கக்கூடிய கட்டிளங்காளை ஒருவன் தினசரி அதிகாலை உடற்பயிற்சி செய்வது வழக்கம். காம்பவுண்டு தாண்டி கட்டிளங்காளை. இங்கே காமப்பசி அடங்கா காரிகை.

அந்த பேரிளம்பெண்ணின் காமம் கலங்கரை விளக்க ஒளியாய் காளையை எட்டுகிறது. கண்கூசும் காமவொளியை தாங்கவொண்ணா துயரம் கொண்டவனாய், விளக்கை அணைக்க காம்பவுண்டு தாண்டி வருகிறான். அணைக்க வேண்டியது விளக்கையல்ல. விளக்கு ஏந்திய மங்கையை என்று உணர்கிறான்.

காமச்சுவையில் இருவரும் கரைபுரண்டு ஓடுகிறார்கள். சலிக்க சலிக்க காமம். விடிய விடிய ஹோமம். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்கிற மரபான பாலியல் செயல்பாடுகளில் மனதை வசம் இழக்கிறார்கள் இருவரும்.

இந்த காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் நேர்த்தியான ஒளியமைப்பும், படத்தொகுப்பாளரின் தாராள மனசும் பார்வையாளர்களுக்கு ஓர் ஐரோப்பிய திரைப்படத்தை காணும் அற்புத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

* * *

போதையிலே சுகம் காண்கிறான் மாணவன் ஒருவன். ஆரம்பத்தில் விளையாட்டாக பீர் என்கிற மதுபானத்தை சுவைக்கிறான். அதிலிருந்து சற்று முன்னேறி பிராந்தி, ரம் என்று ஐரோப்பிய பானங்களை பதம் பார்க்கிறான்.

ஒருக்கட்டத்தில் பானங்கள்  பானகம் மாதிரி இனிக்கிறது. அவனது தேவை, மேலும் போதை மேலும் மயக்கம். கஞ்சா புகைக்கிறான். அந்த போதையும் போதாமல் பாலியல் தொழிலாளிகளை நாடுகிறான். போதைகளில் சிறந்தது போகம் என்று உணர்கிறான்.

* * *

மூன்று வெவ்வேறு கிளைகளாக விரிந்த இந்த சிறுகதையாடல்களை கடைசியாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனைக் காட்சியை நயமாக சேர்த்து பெருங்கதையாடலாக மாற்றுகிறார் இயக்குநர் சாஜன். அவரை எவ்வளவு விரித்துப் பாராட்டினாலும் தகும்.

முதல் கதையில் திருப்தியடையாத புதுமனைவி, கணவனின் நண்பர்களில் ஒருவனோடு கூடுகிறாள். இந்த காட்சி பார்வையாளனுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை தருவதோடு வயதுக்கு வராத பார்வையாளர்கள் எதிர்காலத்தில் வேலை செய்யாவிட்டால் என்னவாகும் என்கிற படிப்பினையை பெறக்கூடிய பாடத்தையும் வழங்குகிறது.

இரண்டாவது கதையில், பக்கத்துவீட்டு பாலகனோடு பந்து விளையாடும் பெண், அற்பமான பாலியல் தேவைக்காக அற்புதமான இல்வாழ்க்கையை இழப்பதாக கதையின் போக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவது கதையில் போதைக்கு பாதை தேடிய மாணவன், பாதை தவறி பல்லாவரத்தில் பாக்கு போட்டுக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவு.

* * *

‘மது, மங்கை, மயக்கம்’ என்கிற இத்திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் சுட்டுவதை போல வயதுக்கு வந்தோருக்கான பாலியல் படம் மட்டுமல்ல. பாலியலை மிகைபுனைவாக கருதும் பாலகர்களுக்கான படமும்தான். எதிர்பாலினத்தவரான பெண்களிடம் என்ன இருக்கிறது என்று அறிய ஆர்வமாக முற்படும் ஆண்களுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. ஆண்களிடம் என்ன இருக்கிறது என்பதே ஆண்களுக்கு தெரியாத நம் சமகால சூழலில், ஆண் பெண் இருவரிடமும் என்னென்ன இருக்கிறது என்று படம் வரைந்து பாகம் குறிக்க முற்பட்ட இயக்குநரின் முயற்சி துணிச்சலான முயற்சி.

முதிர்ச்சியான பார்வையாளன் இம்மாதிரி படங்களில் அழகியல் பாடம் கற்பான். ஐரோப்பிய புது அலை திரைப்படங்களில் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் உலகம் முழுக்க செய்தது இதைதான். ஆட்டுமந்தை மூளை கொண்டவர்களோ ‘துண்டு’ போடசொல்லி அரங்கில் விசில் அடித்து கலாட்டா செய்வார்கள். யார் யாருக்கு எது வேண்டுமோ, அவரவருக்கு அது அது கிட்டட்டும்.

5 ஆகஸ்ட், 2017

சிவாஜி சிலை

ஜூலை 21, 2006.

அந்நாள் வரை ‘பிக்பாக்கெட்’ என்பது புனைவு என்று கருதிக் கொண்டிருந்தேன்.

சிறுவயதிலிருந்தே வெறித்தனமான எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதால் சிவாஜியை கொஞ்சம்கூட பிடிக்காது. சிவாஜி படங்கள் பார்ப்பதை புறக்கணிப்பது மட்டுமில்லாமல், சிவாஜிக்கு ரசிகர் என்று யாராவது தெரிந்தால் அவர்களையும் புறக்கணிக்குமளவுக்கு வெறித்தனம்.

அந்த பைத்தியம் தெளிந்தது ஜூலை 2001ல்.

அப்போது தி.நகரில் பாகிரதி அம்மாள் தெருவில் இருந்த ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தினமும் போக் ரோடு வழியாக சிவாஜி வீட்டை கடந்துதான் என்னுடைய டிவிஎஸ் சேம்ப் பயணிக்கும்.

ஆற்காடு சாலையை கடக்கும்போது ஆட்டோமேடிக்காக கன்னத்தில் போட்டுக் கொள்வேன். அந்த சாலையில்தான் எம்.ஜி.ஆர் வாழ்ந்தார். அவருடைய நினைவில்லம் அமைந்திருக்கிறது. இப்போதும் எங்கேயாவது எம்.ஜி.ஆர் படத்தையோ, சிலையையோ காணும்போது ஆட்டோமேடிக்காக கைகள் கன்னத்தில் போட்டுக் கொள்கின்றன. அதே நேரம் சிவாஜி வீட்டை ஒரு வெறுப்போடுதான் கடப்பேன். அங்கே கூடியிருக்கும் ரசிகர்கள் மெண்டல்கள் மாதிரிதான் எனக்கு தோன்றுவார்கள்.

சிவாஜி மறைந்த அன்று அந்த சாலையை கடக்கும்போதுதான் அனிச்சையாக கண்கள் கலங்கின. அன்று முழுக்க சிவாஜி பாடல்களை கேட்டு, அவர் குறித்த செய்தித் தொகுப்புகளை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருந்த ஒரு மகத்தான மேதையை இதுநாள் வரை அவமதித்துக் கொண்டிருந்திருக்கிறோமே என்று தோன்றியது. அதன் பிறகே தொடர்ச்சியாக சிவாஜி நடித்த படங்களை பார்த்து அவருடைய தன்னிகரற்ற மேதமையை உணர்ந்தேன்.

ஸ்டாப்.

சிவாஜி மறைந்ததில் தொடங்கி அவருக்கு மணிமண்டபம், சிலை என்று கோரிக்கைகள் அரசுக்கு தமிழர்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஏதேதோ காரணங்களால் சிவாஜி மீது அசூயை கொண்டிருந்த ஜெயலலிதா, அவற்றை கண்டுகொள்ளவே இல்லை.

தான் ஆட்சிக்கு வரும்போது சிவாஜிக்கு சிலை வைக்கப்படுமென்று கலைஞர் உறுதியளித்தார்.

சொன்னதை செய்பவர் ஆயிற்றே. 2006ல் ஆட்சிக்கு வந்ததுமே ஆளுநர் உரையில் சிவாஜி சிலையை அறிவித்தார். கடற்கரை சாலை ஐஜி அலுவலகத்துக்கு எதிரே சிவாஜிக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கினார். பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்ட சிலை போலவே  கம்பீரமான வெண்கலசிலையும் சிற்பி நாகப்பாவால் செய்யப்பட்டது.

ஜூலை 21 அன்றுதான் சிவாஜி சிலை திறப்புவிழா. திடீரென்று யாரோ அல்லக்கைகள், அதிமுக தூண்டுதலால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சிலை திறப்புவிழாவுக்கு தடைவாங்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ‘தடையை உடைப்போம்’ என்று கர்ஜித்தார் கலைஞர். உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் போராடி, ஒருவழியாக மாலை மூன்று மணியளவில் அத்தனை பிரச்சினைகளையும் கட்டுக்கு கொண்டுவந்தார்கள்.

தமிழ் திரையுலகமே திரண்டு வந்து கலந்துகொள்ள போகிறது. திடீர் சிவாஜி ரசிகனாகிவிட்ட நான் அன்று காலையிலிருந்தே ஒருமாதிரி நெகிழ்வான நிலையில் இருந்தேன். விழாவுக்கு போயே ஆகவேண்டும். முதல் நாளே சிவாஜி சிலையை தரிசித்தே ஆகவேண்டும் என்று மனசு அடித்துக் கொண்டது. மனசுக்குள் நிரந்தரமாக சம்மணம் போட்டு அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் ரசிகன் மட்டும் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான்.

மாலை நெருங்க நெருங்க மனசு தாங்கவில்லை. இப்போது மயிலாப்பூரில்தான் அலுவலகம். அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விழா. ஹீரோஹோண்டாவை முறுக்கி கடற்கரைக்கு விட்டேன்.

மணல்பரப்புக்கு அந்தப் பக்கம் கடலலை. சாலையில் மனித அலை. நான் இருந்த இடத்தில் இருந்து மேடை சுமார் அரை கி.மீ. தூரத்தில் இருந்தது. அதற்கு மேல் ஒரு இன்ச் கூட முன்னேற முடியாத அளவுக்கு நெரிசல்.

ரஜினிகாந்த் பேசிக்கொண்டிருக்கிறார்.

“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே கடற்கரை சாலையில் இரண்டு இளைஞர்கள் நடந்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு இளைஞன் சொல்கிறான். ‘நண்பா, இதே சாலையில் எனக்கு சிலை வைக்குமளவுக்கு முன்னேற வேண்டும்’

அடுத்த இளைஞன் சொல்கிறான். ‘உனக்கு சிலை அமைக்கக்கூடிய அதிகாரத்தை நான் எட்ட வேண்டும்’

சிலையாக விரும்பியவர் சிவாஜி. சிலை அமைத்தவர் கலைஞர்”

திரண்டிருந்தவர்களின் கரவொலி கடலொலியை மிஞ்சியது. எனக்கு பின்னே ஒருவன் கூட்டத்தில் இடித்துக் கொண்டே இருந்தான். திரும்பி முறைக்க, “சாரி பாஸ்” என்றான். அவனை விட்டு விலகி இன்னும் சற்று முன்னேறினேன்.

ஏதோ குறைவது போல தோன்ற சட்டென்று பேண்ட் பின்பாக்கெட்டை தொட்டுப் பார்த்தபோதுதான் ‘பர்ஸை காணோம்’ என்று தெரிந்தது. இடித்துக் கொண்டிருந்தவன் உருவிவிட்டிருக்கிறான். இருபத்தைந்தாயிரம் பேர் கூடியிருந்த அந்த கூட்டத்தில் அவனை எங்கே தேடுவது, அவனது முகம்கூட நினைவில் இல்லை. பர்ஸில் நாலு கிரெடிட் கார்ட், ரெண்டு டெபிட் கார்ட், கொஞ்சம் பணம் இருந்தது.

இதற்கிடையே விழா முடிந்து விஐபிகள் கிளம்பத் தொடங்கினர். கூட்டம் அப்படியே வரிசை கட்டி சிலையை தரிசித்துவிட்டு கலையத் தொடங்கியது. இரவு 9.30 மணியளவில்தான் என்னால் நடிகர் திலகத்தை அருகே தரிசிக்க முடிந்தது. சிலர் கையிலேயே கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டிக் கொண்டிருந்தார்கள். கோயில் கொடிமரத்தின் முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுவது மாதிரி நிறைய பேர் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு நெடுஞ்சாண்கிடையை போட்டுவிட்டு,  ஹீரோ ஹோண்டோ எங்கிருக்கிறது என்று தேடத் தொடங்கினேன். நல்லவேளை வண்டியை எவனும் லவட்டவில்லை.