19 ஜனவரி, 2018

வாசிப்பு குறைகிறதா?

ஆமாம் என்கிறார்கள் அறிவுஜீவிகள் பலரும். குறிப்பாக இலக்கியவாதிகள்.

இவர்களிடம் புள்ளிவிவரம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. விளக்கமாக கேட்டால், ‘அந்தக் காலத்தில் நாங்கள்லாம்…’ என்று நீட்டி முழக்குகிறார்கள்.

ஆனால் –

இந்தியாவில் அச்சுப் பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று சொல்கிறது Indian readership survey.

“இப்போல்லாம் யாரு சார் புக்கு படிக்கிறா? என் பையனுக்கு தமிழே படிக்கத் தெரிய மாட்டேங்குது. எப்பவும் நெட்டுலேதான் இருக்கான்” என்றெல்லாம் ஜல்லியடிக்காமல், கொஞ்சம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை வாசியுங்கள்.

Readership Studies Research Council of India (RSCI) மற்றும் Media Research Users Council (MRUC) ஆகிய இரு நிறுவனங்களும்தான் IRS கணக்கீடுகளை வெளியிடுகின்றன. 2014க்கு பிறகு 2017ல் மூன்று ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வெளியிட்டிருக்கின்றன.

2017ஆம் ஆண்டு கணக்கீடுகளின் அடிப்படையில் புதிய பதிப்பு நிறுவனங்களின் அலை வலுவாக வீசுவது தெரியவந்திருக்கிறது.

கடந்த மூன்றாண்டுகளில் மட்டுமே பதினோரு கோடி புதிய வாசகர்கள் (நகர்ப் புறங்களில் 4 கோடி, கிராமப் புறங்களில் 7 கோடி), இந்திய நாளிதழ்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்கிறது IRS 2017. அடுத்த மூன்றாண்டுகளில் 40 சதவிகித அளவுக்கு இந்த வளர்ச்சி இன்னமும் விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்றும் கணிக்கிறார்கள்.

நகர்ப்புறங்களில் அச்சுப் பத்திரிகைகளை வாசிப்பவர் எண்ணிக்கை உயர்வது இயல்புதான். எனினும், தற்போதைய வாசிப்புப் புரட்சிக்கு சொந்தக்காரர்கள் இந்திய கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இந்திய கிராமப்புறங்களில் பரவலாக கல்வியறிவு கிடைத்து வருவதால், அச்சுப் பத்திரிகைகளுக்கு கணிசமான வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது.

சராசரியாக இந்தியாவில் நாளிதழ்கள் 105 கோடி பேர்களால் வாசிக்கப்படுகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் தமிழின் வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் 44%.

தமிழில் இப்போது ‘தினத்தந்தி’, ‘தினகரன்’, ‘தினமலர்’ ஆகிய மூன்று நாளிதழ்கள் மட்டுமே (ஆங்கிலம் தவிர்த்த டாப்-10 பட்டியலில் இவை மூன்றுதான் இடம்பெற்றிருக்கின்றன) சுமார் 4 கோடியே 69 லட்சம் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.

நாளிதழ் தவிர்த்து இதழ்களைப் பொறுத்தவரை கடந்த மூன்றாண்டுகளில் வாசிப்பு எண்ணிக்கை அப்படியே இரு மடங்காகி இருக்கிறது. 2014ல் 4 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை, இப்போது 2017ல் 7 கோடியே 80 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

பிராந்திய மொழி இதழ்களைப் பொறுத்தவரை இந்திய அளவில் 2017 டாப்-10 பட்டியலில் ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் என்று மூன்று இதழ்கள் பெருவாரியான வாசகர் எண்ணிக்கை அடிப்படையில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த மூன்று இதழ்களுக்கும் சேர்த்து தோராயமாக 72 லட்சம் வாசகர்கள் இருக்கிறார்கள். தமிழ் தவிர்த்து மலையாளம் மற்றும் வங்காள இதழ்கள் மட்டுமே முதல் பத்து இடத்தில் இருக்கின்றன.

தமிழில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை கொண்ட இதழ்களாக ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’, ‘குங்குமம்’, ‘புதிய தலைமுறை’, ‘அவள் விகடன்’ ஆகியவை விளங்குகின்றன.

இணையத்தின் தாக்கம்?

இந்தியாவைப் பொறுத்தவரை இப்போதைக்கு இணையத்தைக் கண்டு அச்சுப் பத்திரிகைகள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

இணையம், ரேடியோ என்கிற ஊடகத்தோடுதான் இப்போது வரை மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது.

இணையத்தின் வளர்ச்சி, சினிமாத்துறையைதான் பெருமளவில் பாதித்திருக்கிறது (இந்த பாதிப்பிலும்கூட ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் சினிமாத்துறை வியத்தகு அளவுக்கு – வணிக அடிப்படையில் - வளர்ந்திருக்கிறது).

சென்னை புத்தகக் காட்சியில் வழக்கமான விற்பனை இல்லை. இலக்கிய நூல்கள் விற்கவில்லை என்றெல்லாம் பின்னூட்டம் போடாதீர்கள். மேற்கண்ட புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, இவர்களில் எவ்வளவு சதவிகித வாசகர்களை இலக்கியம் பக்கம் தள்ளிக் கொண்டு வரலாமென்று திட்டம் தீட்டி செயல்படுத்தினால் கணிசமான முன்னேற்றம் நிச்சயம். அதற்கு ஊடகத்துறையை தொடர்ச்சியாக கவனித்துவரும் நல்ல media expertகளின் ஆலோசனைகள் அவசியம். என்னிடம் யாராவது பரிந்துரை கேட்டால் வெயிட்டாக ஃபீஸ் கேட்பேன் என்று எச்சரிக்கிறேன்.

18 ஜனவரி, 2018

முதலிரவே போய் வா!

எண்பதுகளின் இறுதியில் ராஜ் வீடியோ விஷனுக்கு போட்டியாக வீடியோ கேசட் துறையில் பெரும் போட்டியாளராக விளங்கியவர்கள் ஏக்நாத் வீடியோஸ்.

வீடியோ கேசட் துறையை சேர்ந்தவர்களும் (இப்போது சேட்டிலைட் சேனல்கள் செய்வது மாதிரி) நிறைய content தேவைக்காக சினிமாவில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள்.

ஏக்நாத் வீடியோஸ், ஒரு கன்னடப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிட பிரமாதமாக மார்க்கெட்டிங் செய்தார்கள். அந்த படம்தான் ‘முதலிரவே வா வா’

எண்பதுகளின் இறுதியில் இந்தப் படத்துக்காக மஜாவான ஹோர்டிங் ஒன்றை பிரும்மாண்டமாக மவுண்ட்ரோடில் வைத்திருந்தார்கள். மீசை வளராத அந்த வயதில் படத்தின் டைட்டிலும், மஜாவான ஸ்டில்களும் குறுகுறுப்பை ஏற்படுத்தியது இயல்புதான். படமும் ஓரளவுக்கு பரபரப்பாகவே ஓடியது. ஆனால், அந்தப் படத்துக்கு அழைத்துச் செல்லுமாறு அப்பாவை கேட்க முடியாது.

பிற்பாடு மீசையெல்லாம் லேசாக முளைத்த காலத்தில் ‘முதலிரவே வா வா’ பார்த்தபோது, அப்படியொன்றும் ‘எதிர்ப்பார்த்த அளவு’ பிரமாதமில்லை என்று தோன்றியது. மாப்பிள்ளைக்கு ‘முதலிரவு’க்கு ‘முடியலை’ என்பதுதான் சப்ஜெக்ட். ஏன் ‘முடியலை’ என்பதற்கு பின் ஒரு கிளுகிளுப்பான சதி. பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு வெற்றிகரமாக ‘முடிவது’தான் கிளைமேக்ஸ். டயலாக்கெல்லாம் டைரக்ட் மீனிங்.

அந்தப் படத்தின் ஹீரோ நம்மூர் நாகேஷ் மாதிரி வெடவெடவென்று இருக்கும் காசிநாத். அப்போதிலிருந்தே கன்னட சினிமா ஒரு விஷயத்தில் ஆச்சரியத்தை அள்ளித் தரும். ஹீரோவெல்லாம் ரொம்ப சுமாராக இருக்க, இந்திரலோகத்து சுந்தரிகள் கணக்கான ஹீரோயின்கள் எப்படி அவர்களை விரட்டி விரட்டி ரொமான்ஸ் செய்கிறார்கள் என்பதுதான் இன்றுவரை புரியாத புதிர்.

இட்ஸ் ஓக்கே.

அடிப்படையில் இயக்குநரான காசிநாத், பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக ஒருக்கட்டத்தில் அவரே ஹீரோவாகி விட்டார். கன்னடத்து பாக்யராஜ் என்பார்கள். பெரும்பாலும் சில்மிஷமான சப்ஜெக்டுகளைதான் கையில் எடுத்துக் கொள்வார். சினிமாவில் மட்டுமல்ல, எல்லா ஏரியாவிலுமே Yes, sex always sells.

காசிநாத், இந்த ஏரியாவில் கில்லி. எண்பதுகளின் இந்திய நகர்ப்புற இளைஞர்களுக்கு sex கொஞ்சம் ‘இலைமறை காய்மறை’யாய்தான் கிடைத்தது. அந்த பாலியல் வறட்சியை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப தன்னுடைய படங்களுக்கு knot பிடிப்பார். ‘அனுபவா’ என்றொரு படம், காசிநாத்தின் இயக்கம் மற்றும் நடிப்பில் வந்திருக்கிறது. எப்போதோ யூட்யூப்பில் பார்த்தேன். செம மஜாவாக இருக்கும். இவருடைய படங்கள் சிலவற்றை ரீமேக்கி தமிழில் பாண்டியராஜன் போன்றவர்கள் (உதா : ‘ஜாடிக்கேத்த மூடி’) இங்கே ஹிட்டடித்திருக்கிறார்கள். உபேந்திரா உள்ளிட்ட இன்றைய கன்னட சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள், காசிநாத்தின் சிஷ்யர்கள்தான்.

கன்னட சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்த சகலகலா வல்லவன் காசிநாத், இன்று காலமாகி விட்டார். சுலபத்தில் இட்டு நிரப்பமுடியாத ஆளுமை அவர். கன்னட சினிமாவுக்கு நிஜமாகவே பேரிழப்புதான்.

16 ஜனவரி, 2018

பத்து வயசானா பங்காளி

பாவலரை பிரிந்துவிட்டு எழுபதுகளின் தொடக்கத்தில் சென்னைக்கு பிழைப்பு தேடிவந்த பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் ‘பாவலர் பிரதர்ஸ்’ என்கிற பெயரில்தான் இயங்கிக் கொண்டிருந்தார்கள் (இவர்களை பிரிந்த பாவலர் அதன் பிறகு மிகக்குறுகிய காலமே உயிரோடு இருந்தார்).

‘அன்னக்கிளி’யில் இருந்துதான் இளையராஜா என்கிற பெயரில் செயல்படத் தொடங்கினார்கள். லண்டன் டிரினிட்டி பள்ளியில் முறையாக இசை தேர்ந்தவர் என்பதால் ராஜாவின் பெயரில் செயல்படுவதில் பாஸ்கருக்கும், கங்கை அமரனுக்கும் ஆட்சேபணை எதுவுமில்லை.

ஒவ்வொருவரும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு அவரவர் பிழைப்பை தனித்தனியாக பார்த்தாலும் மதிய உணவு மட்டும் ஒன்றாகதான் உண்பார்கள். தொண்ணூறுகளின் தொடக்கம் வரை, ராஜாவின் பிரசாத் தியேட்டர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில்தான் சகோதரர் மூவரும் மதியம் சந்திப்பார்கள். அவரவருக்கு அவரவர் வீட்டில் இருந்து சாப்பாடு வந்துவிடும்.

தனியாக இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று கங்கை அமரன் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்தாலும் அண்ணன் ராஜாவுக்கு மேனேஜராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

பாஸ்கரும், அமரனும் சுத்த அசைவம். ராஜா சைவம். எனவே கொஞ்சம் இடைவெளி விட்டு ராஜா அமைதியாக சாப்பிடுவார். அமரன், லொடலொடவென்று பேசிக்கொண்டே இருப்பார். மற்ற இருவரும் இவர் பேச்சை கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.

‘தர்மதுரை’ படத்துக்கு ராஜா இசையமைத்துக் கொண்டிருந்தார். வேறொரு வேலையில் இருந்த அமரனுக்கு போன். “டேய், ரஜினி படத்துக்கு பாட்டெழுதணும். மதியம் வர்றப்போ எழுதிக் கொடுத்துடு”

மதியம் பிரசாத்துக்கு அமரன் வந்து சேர்ந்தபோது ரெக்கார்டிங் தியேட்டர் வாசலில் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு பாஸ்கர் உட்கார்ந்திருந்தார். அவருடைய மற்றும் அமரனுடைய சாப்பாட்டு பைகள் வெளியே வைக்கப்பட்டிருந்தன.

கோபத்துடன் உள்ளே நுழைந்தார் அமரன். “டேய், ட்யூன் தெரியுமில்லே. சாப்பிட்டுட்டு உடனே பாட்டை எழுதிக் கொடுத்திடு” என்றார் ராஜா.

“அதிருக்கட்டும். எங்க சாப்பாட்டுப் பையை யாரு வெளியே வெச்சது?”

“நான்தான் வைக்க சொன்னேன். நான் சைவம். நீங்க அசைவம். செட் ஆகாது. தனியா சாப்பிடுங்கன்னு உங்க அண்ணிதான் சொல்லிச்சி”

கொதித்துப் போன அமரன் விருட்டென்று வெளியே வந்தார். மனம் நொந்துப் போயிருந்த பாஸ்கர், சாப்பிடாமலேயே கிளம்பிவிட்டார். அமரனும் பசியோடு விறுவிறுவென்று பாட்டு எழுதத் தொடங்கினார்.

பொதுவாக இளையராஜா பாடல்களுக்கு அவரே பல்லவியை எழுதி வைத்திருப்பார்.

அமரன் எழுதவேண்டிய பாடலுக்கு பல்லவி.

“ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்”

விடுவிடுவென அமரன் பாட்டை தொடர ஆரம்பித்தார்.

“நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்
மாறும் இந்த வேஷம்”

சரணத்தில் அண்ணனை விளாச ஆரம்பித்தார்.

“ஒண்ணுக்கொண்ணு ஆதரவு
உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ள பேதம் இல்ல
பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொன்னு பொருள் போகும் வரும்
அன்பு மட்டும் போவதில்லை
தேடும் பணம் ஓடிவிடும்
தெய்வம் விட்டுப் போவதில்லை
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்
இன்னும் மயக்கமா?”

பாட்டு எழுதிய பேப்பரை தூக்கி இளையராஜாவின் மேஜை மீது போட்டார்.

“இதான் பாட்டு. புடிச்சிருந்தா வெச்சிக்கோ. இல்லைன்னா தூக்கிப்போடு” என்று சொல்லிவிட்டு முகத்தைகூட ஏறெடுத்துப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தார். எப்படியும் அந்தப் பாடலை ராஜா, ரெக்கார்டு செய்யமாட்டார் என்பது அமரனின் நம்பிக்கை.

ஆனால்-

அந்த பாட்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் பதிவு செய்யப்பட்டது. படத்தின் சிச்சுவேஷனுக்கு பொருத்தமான பாட்டு என்பதால், தன்னை குறிவைத்து எழுதப்பட்ட பஞ்ச்லைன்களை அனுமதித்தார் இளையராஜா.

ராஜா மட்டும் சளைத்தவரா?

பஞ்சு அருணாச்சலம் எழுதவேண்டிய அடுத்த பாட்டுக்கு பல்லவி எழுதுகிறார்.

“அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி”

இந்த கதையெல்லாம் ரஜினிக்கு தெரியாது. ‘தர்மதுரை’ படத்தில் பாடல்கள் மிகவும் பவர்ஃபுல்லாக அமைந்ததில் அவருக்கு சந்தோஷம். ஒருமுறை கங்கை அமரனை சந்தித்தபோது, “நம்ம படத்துலே பாட்டெல்லாம் ரொம்ப பிரமாதமா அமைஞ்சுடுச்சி” என்று சொல்லியிருக்கிறார். பதிலுக்கு அமரன், இந்த வரலாற்றை எடுத்துரைக்க, தன்னுடைய படத்தில் பணியாற்றும்போது சகோதரர்களுக்குள் இப்படியொரு பிளவு ஏற்பட்டு விட்டதே என்று பெரிதும் மனம் வருந்தினாராம்.

கலைஞர்களின் கோபதாபங்கள்கூட கலையாகதான் வெளிப்படும்.

3 ஜனவரி, 2018

ரஜினி – காலாவதியான கவர்ச்சி!

“முதல் படத்துலேயே சிகரெட்டு புடிச்சிக்கிட்டு பொறுக்கி மாதிரி வந்தான். அப்போ இவனெல்லாம் இவ்ளோ பெரிய ஆளா வருவான்னு நெனைக்கவே இல்லை” - ‘ராஜாதி ராஜா’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோது, ‘அபூர்வ ராகங்கள்’ பற்றி என்னுடைய பெரியம்மா சொன்னது இது.

“அப்புறம் எப்படி பெரிம்மா, இவ்ளோ பெரிய ஸ்டார் ஆனாரு?”

“அப்போவெல்லாம் சிவப்பா இருந்தாதான் ஹீரோ. குப்பை பொறுக்குற கேரக்டருலே நடிச்சாகூட நல்லா மேக்கப் போட்டுக்கிட்டு ஹீரோ சிவப்பாதான் இருக்கணும். முதல் தடவையா ரஜினிதான் கேரக்டருக்கு ஏத்த தோற்றத்துலே கருப்பா, களையா இருந்தான். ‘மூன்று முடிச்சு’, ‘பதினாறு வயதினிலே’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘முள்ளும் மலரும்’ படத்துலே எல்லாம் அந்தந்த கேரக்டருக்கு ஏத்தமாதிரி ரஜினி இருப்பான். கிராமத்துப் படத்துலே நடிச்சாகூட கமல், அய்யிரு பையன்தான். ஆனா, ரஜினி அப்படியே நம்மளை மாதிரியே இருந்ததாலே ஜனங்களுக்கு பிடிச்சிப் போச்சு. அதேமாதிரிதான் விஜயகாந்தும்”

ரஜினி, திரையுலகுக்கு அறிமுகமான சூழல் இங்கே குறிப்பிடத்தக்கது. அறுபது வயதை கடந்துவிட்ட எம்.ஜி.ஆர், கட்சி ஆரம்பித்து அரசியலில் மும்முரமாகி விட்டார். அவரைவிட இரண்டு, மூன்று வயது குறைவான காதல் மன்னன் ஜெமினி கணேசன், வண்ணமயமாகிவிட்ட தமிழ் சினிமாவில் தன் முகத்தை குளோஸப்பில்கூட காட்டமுடியாத அளவுக்கு கிழடு தட்டிவிட்டார். இளமையிலேயே முதுமையாக தோற்றமளித்த சிவாஜியும் ஐம்பது வயதை கடந்து நிஜமாகவே முதுமையை எட்டிவிட்டார்.

போட்டியே இல்லாமல் சிவக்குமார்தான் கோலோச்சிக் கொண்டிருந்தார். பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறார், நன்கு நடனமும் ஆடத்தெரிகிறது, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்கிற கோதாவில் கமல்ஹாசன் வளரத் தொடங்கியிருந்தார். திரையுலகில் எப்போதுமே இருதுருவ ஆதிக்கம் நிலவ வேண்டும் என்கிற மனோபாவம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, இண்டஸ்ட்ரியில் இருப்பவர்களுக்கும் உண்டு. சமூகரீதியாக பார்க்கப் போனாலும் திராவிட ஆட்சி தொடரும் தமிழகத்தில், ஒரு பார்ப்பனரை தலைமீது தூக்கி வைத்து கொண்டாட சமூகம் தயாரில்லை. அதனடிப்படையில் போட்டியே இல்லாமல் கமலுக்கு எதிராக நிலைநிறுத்தப்படுகிறார் ரஜினி.

1975ல் திரையுலகுக்கு அறிமுகமான ரஜினிகாந்த், ‘பில்லா’, ‘முரட்டுக்காளை’ என்று நட்சத்திரமாக உருவெடுக்க ஐந்தாண்டு காலம் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். சுமாரான தோற்றத்தோடு ‘அழகான’ ஹீரோக்களோடு போட்டி போட, தன்னுடைய யதார்த்த நடிப்பையே ஆயுதமாக்கி மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக ரஜினிக்கு அமைந்த கேரக்டர்கள், அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறது. அவர் முழுநீள ஹீரோவாக உருவெடுப்பதற்கே 25 படங்களும், மூன்று ஆண்டுகளும் முழுமையாக தேவைப்பட்டிருக்கிறது.

கைவிட்டு பைக் ஓட்டுவதும், சிகரெட்டை தூக்கிப் போட்டுப் பிடிப்பதும் பெரும் ஃபேண்டஸியாக கருதிய அந்தகால இளைஞர் கூட்டம் ரஜினியை முரட்டுத்தனமாக கொண்டாடியதில் ஆச்சரியமேதுமில்லை.

தன்னுடைய நூறாவது படம் வரைக்கும் பரிசோதனை முயற்சிகளில் தீவிரமாக இறங்காமல், வணிகரீதியாக தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வதில் கமல்ஹாசன் மும்முரமாக இருந்தார்.

ஆனால் -

ரஜினியோ மிக துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று கலைரீதியான படைப்பாக சினிமாவை கருதக்கூடிய இயக்குநர்களிடம் பணிபுரிவதை விரும்பினார்.

1980ல் ‘முரட்டுக்காளை’யில் ரஜினிக்கு கிடைத்த மகத்தான வெற்றிதான் அவருடைய மாற்று சினிமா முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது. வெற்றியின் ருசி கொடுத்த போதையால் அடுத்தடுத்த பிரும்மாண்ட வணிக வெற்றிகளை நோக்கி ஓடத்தொடங்கினார். இடையிடையே ‘கை கொடுக்கும் கை’, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ மாதிரி ஆசைக்கு ஏதோ சோதனை செய்து தோல்வியுற்றார்.

‘முரட்டுக்காளை’ மாதிரியே பிரும்மாண்டமான வெற்றியை ‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமல் எட்டினார்.

ஆனால் –

இந்த வெற்றியை கண்டு அவர் பயப்படத் தொடங்கினார். நாலு ஃபைட்டு, ஆறு பாட்டு என்று தன்னை தமிழ் திரையுலகம் முடக்கிவிடுமோ என்று பதறினார்.

இந்த இருவேறு வெற்றிகள்தான் அடுத்த சில பத்தாண்டுகள் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றின.

வெற்றி மேல் வெற்றி என்கிற இலக்கை நோக்கி ரஜினியும், தமிழ் சினிமாவில் அதுவரை யாரும் செய்யாதவை என்கிற பரிசோதனை முயற்சிகளில் கமல்ஹாசனும் ஈடுபடத் தொடங்கினார்கள்.

1985ல் ரஜினிக்கு நூறாவது படம் அமைந்தது. தன்னை அறிமுகம் செய்த பாலச்சந்தர்தான் தன்னுடைய நூறாவது படத்தை இயக்க வேண்டும் என்று ரஜினி விரும்பினார். எனினும், அந்தப் படம் ‘தண்ணி, சிகரெட்’ மாதிரி லாகிரி வஸ்துகளுக்கு ஆட்பட்ட ரஜினி படமாக இல்லாமல், வேறொரு ரஜினியை – அதாவது ஆன்மீக ரஜினி – காட்டக்கூடியதாக, தன்னுடைய இஷ்டதெய்வமான ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ பெருமையை தமிழர்களுக்கு எடுத்துச் சொல்வதாக இருக்க வேண்டுமென்று நினைத்தார்.

ரேஸ் குதிரையாக முதலிடத்தில் ஓடி லட்சம் லட்சமாக கொட்டிக் கொண்டிருக்கும் குதிரையை பூட்டி சாமி தேர் இழுத்தால் வேலைக்கு ஆகாது என்று பாலச்சந்தர் மறுத்தார். எனினும் ரஜினிக்காக படத்தை தயாரிக்க முன்வந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘ஸ்ரீராகவேந்திரர்’ படுதோல்வி. நியாயமாக பார்க்கப் போனால், ஆன்மீகம் தனக்கு வேலைக்கு ஆகாது என்பதை ரஜினி அன்றே உணர்ந்திருக்க வேண்டும்.

ரஜினியை ஸ்டைல் மன்னன் ரஜினியாக பார்க்கதான் ரசிகர்கள் விரும்பினார்களே தவிர, அவரிடமிருந்து பொழுதுபோக்கைதான் எதிர்ப்பார்த்தார்களே தவிர வேறொன்றுமில்லை.

உதாரணத்துக்கு 1987 தீபாவளியை சொல்லலாம்.

கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தை சிறப்புக் காட்சியாக ரஜினி பார்க்கிறார்.

“இந்த தீபாவளி கமலோட தீபாவளி. தமிழில் யாருமே பண்ணாத சாதனையை ‘நாயகன்’ மூலமா செஞ்சிருக்காரு. ரொம்ப சாதாரணமான நம்மோட ‘மனிதன்’ எடுபடாது” என்று வெளிப்படையாகவே ‘மனிதன்’ இயக்கிய எஸ்.பி.முத்துராமனிடமும், தயாரித்த ஏ.வி.எம்.சரவணனிடமும் சொல்லியிருக்கிறார்.

“அது கமல் படம். இது ரஜினி படம். நீங்க வேணும்னா பாருங்க. ரெண்டுமே நல்லா ஓடும்” என்று சமாதானப்படுத்தி இருக்கிறார் எஸ்.பி.முத்துராமன். ரஜினிக்கு சமாதானமாகவில்லை.

ஆனால் –

எஸ்.பி.முத்துராமன் சொன்னதுதான் நடந்தது.

கமல்ஹாசனை அறிவுஜீவியாக, பரிசோதனைகளுக்கு தயாரான எலியாகவே ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். கமல்ஹாசனின் படம் ஏதாவது சாதாரண பொழுதுபோக்கு படமாக வந்தால், அவருடைய வெறித்தனமான ரசிகர்களேகூட ‘ஒரு தடவை பார்க்கலாம்’ என்று உதட்டை பிதுக்க ஆரம்பித்தார்கள். இதனாலேயே படத்துக்கு படம் ஏதாவது வித்தியாசம் என்று முயற்சித்து மண்டையை பிய்த்துக் கொண்டார் கமல். முன்பாக எவ்வளவோ ஜிமிக்ஸெல்லாம் காட்டி தலைசிறந்த பொழுதுபோக்குப் படமாக அவர் உருவாக நினைத்த ‘விக்ரம்’ கதை இப்படிதான் கந்தலானது.

ரஜினி, ரஜினியாகவே தோன்றினால் போதும். அவர் ஏதாவது முயற்சித்தால்தான் ரசிகர்களுக்கு சோதனை. பீரியட் ஃபிலிமாக அவர் பிரும்மாண்ட செலவில் முயற்சித்த சொந்தப் படமான ‘மாவீரன்’ படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையே தொண்ணூறுகளில் தொடர்ந்தது.

ரஜினியின் ஒவ்வொரு படமும் முந்தையப் படத்தின் வசூல்சாதனையை முறியடித்து வந்தன. கமல் கிட்டத்தட்ட கருத்து கந்தசாமியாகவே ஆகிவிட்டார் (இருவருக்கும் ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால், இதுவே பொதுவான நிலையாக இருந்தது)

அதாவது –

ரஜினியை மாஸ் மன்னனாகவும், கமலை ஒப்பீனியன் மேக்கர் என்கிற அளவிலும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இதற்கிடையே எம்.ஜி.ஆரின் மறைவு, ரஜினிக்கு ‘தலைவர்’ ஆகும் கெத்தை கொடுத்தது. அவருடைய படங்களில் சோ-வின் உதவியோடு அரசியல் பஞ்ச் வசனங்கள் இடம்பெறத் தொடங்கின.

‘அண்ணாமலை’யில் தொடங்கியது ரஜினிக்கு அரசியல் பஞ்சாயத்து. தொடக்கத்திலிருந்தே ஏனோ ரஜினியை ஜெயலலிதாவுக்கு பிடிக்காது. அவரை மட்டம் தட்டும் விதமாகவே நடந்துக் கொண்டு வந்திருக்கிறார். ‘நதியை தேடி வந்த கடல்’, ‘பில்லா’ படங்களில் ஹீரோ (நம்ம ரஜினிதான்) கருப்பாக இருக்கிறார் என்று நடிக்கவே மறுத்தவர் ஜெயலலிதா.

அப்படிப்பட்டவர் ஆட்சி அதிகாரத்துக்கே வந்த நிலையில், நண்டு சிண்டுகளால் ‘தலைவர்’ என்று அழைக்கப்படும் ரஜினியை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

வசூலில் ரஜினியின் மாஸ்டர்பீஸாக ‘பாட்ஷா’ அமைந்தது. தமிழ் சினிமாவிலேயே அதிக முறை நுழைவு டிக்கெட் கிழிக்கப்பட்ட படம் என்கிற பெருமையை சிவாஜியின் ‘திரிசூலம்’ பெற்றிருந்தது. அந்த சாதனையை கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ முறியடித்தது. இரண்டு படங்களின் சாதனையையும் நொறுக்கி, இன்றுவரையிலான மகத்தான சாதனையை ‘பாட்ஷா’வில் செய்தார் ரஜினி.

‘அன்று; தளபதி. நேற்று; மன்னன். நாளை?’ என்று ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்ட ஜெயலலிதா கடுப்பானார். அதற்கு ஏற்ப ‘பாட்ஷா’ வெற்றிவிழாவில் மயில்தோகையால் மெல்ல ஜெ. தலைமையிலான அரசை ரஜினி விமர்சிக்க, முட்டிக் கொண்டது. ‘முத்து’ படத்தில், “நான் பாட்டுக்கு என் வழியில் போயிக்கிட்டிருக்கேன். எதுக்கு தடங்கல் பண்ணுறீங்க” என்று வசனம் வைத்து ஜெ.வை சீண்டினார்.

அடுத்து 1996ல் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் நேரடியாகவே ஜெ.வுக்கு எதிராக போர்முழக்கம் செய்தார் ரஜினி. அரசியலில் குதித்து அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக ஆட்சியைப் பிடிப்பார் என்று யூகங்கள் வந்துக் கொண்டிருந்த நிலையில், அந்த சூழலை சுக்குநூறாக உடைத்தார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ். வேறு வழியின்றி சோ ஆலோசனையுடன் திமுக கூட்டணியை ஆதரித்து, ஜெ.வை பழிதீர்த்துக் கொண்டார்.

ரஜினி படமென்றால் வெள்ளிவிழா என்கிற நிலையை தாண்டி ‘முத்து’, ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’ படங்கள் 250 நாட்கள் ஓடி வைரவிழா கண்டன. இதைவிட பெரிய வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்கிற சுமை அழுத்த, குழப்பத்தில் சினிமாவில் நடிப்பதையே சில ஆண்டுகள் தவிர்த்தார் ரஜினி.

2001ல் மீண்டும் ஜெ. ஆட்சி.

இம்முறை அரசியல் கருத்துகளோடு சுடச்சுட களமிறங்க திட்டமிட்டார் ரஜினி. இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறாரே ஆன்மீக அரசியல், அதையே கருத்தாக்கி ‘பாபா’ எடுத்தார்.

படுதோல்விதான் பரிசு. தன்னுடைய நூறாவது படமான ‘ஸ்ரீராகவேந்திரா’வை விடவும் கசப்பான அனுபவத்தை ‘பாபா’வில் பெற்றார்.

‘என்னோட சூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் அவ்வளவுதானா?’ என்று ரஜினி புலம்புமளவுக்கான தோல்வி.

ரஜினியிடம் மக்கள் எதிர்ப்பார்ப்பது பொழுதுபோக்கே தவிர, அரசியலோ சமூகக் கருத்துகளோ கிடையாது என்பதை ஆணித்தரமாக ‘பாபா’வுக்கு நேர்ந்த கதி நிரூபித்தது. ஏனெனில் ரஜினியைவிட டீக்கடை பெஞ்சுகளில் ‘தினத்தந்தி’ வாசிக்கும் சாமானியனுக்கே அரசியல் அதிகம் தெரியும். சமூகத்தைப் பற்றிய புரிதலும் அதிகம்.

அரசியல் கருத்துகளால் கீழே விழுந்த குதிரையான ரஜினி, மீண்டும் தன்னுடைய பொழுதுபோக்கு சேணத்தை தட்டிப் போட்டு ‘சந்திரமுகி’யில் வரலாற்று வெற்றியை எட்டினார். அடுத்து ஏவிஎம்மின் ‘சிவாஜி’, ஷங்கரின் ‘எந்திரன்’ படங்களில் வசூல் சாதனை புரிந்தார்.

‘படையப்பா’ வரையில் ரஜினி நடித்தாலே வெற்றி என்கிற நிலைதான் இருந்தது. அப்போது அவருக்கு இருந்த கவர்ச்சி அப்படி. ஐம்பது வயதை கடந்தும் அவர் ஹீரோவாக நடிக்கும் நிலையில் ரஜினிக்காக படம் ஓடும் என்கிற நிலை மாறி, ரஜினி நடித்த படம் நன்றாக இருந்தால் மட்டுமே ஓடும் என்கிற சூழல்தான் இப்போது நிலவுகிறது. ‘பாபா’, ‘குசேலன்’, ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ என்று அடுத்தடுத்த தோல்விகளும், ‘கபாலி’ போன்ற ஆவரேஜ்களும் நியாயமாக ரஜினிக்கு நிலைமையை விளங்கப்படுத்தியிருக்க வேண்டும்.

அதாவது ரஜினியின் கவர்ச்சி காலாவதியாகி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகப்போகிறது. சினிமாவிலேயே படுதோல்வி அடைந்த ‘பாபா’ கருத்துகளோடு 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு ‘2.0’, ‘காலா’ படங்களை ஓடவைப்பதற்கான அவருடைய வழக்கமான விளம்பர யுக்தியா அல்லது நிஜமாகவே ஒருமுறை ஆழத்தில் கால்விட்டு பார்ப்போமா என்கிற அசட்டுத் துணிச்சலா என்பது இன்னும் ஓரிரு ஆண்டுகளிலேயே தெரிந்துவிடும்.

30 டிசம்பர், 2017

தாம்பூலம் முதல் திருமணம் வரை

மகிழ்ச்சி.

ஒவ்வொரு திருமணத்தின் நோக்கமும் இதுதான்.

உங்களுக்கு திருமணமாகி இருந்தால் திருமண ஆல்பத்தை உடனே புரட்டிப் பாருங்கள். இல்லையேல் உங்கள் பெற்றோருடைய, சகோதர சகோதரிகளுடைய, நண்பர்களுடைய ஆல்பத்தை பாருங்கள். போட்டோக்களில் இடம்பெற்றிருக்கும் மணமக்கள் மட்டுமல்ல. சுற்றமும், நட்பும் கூட முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமேதான் சுமந்திருக்கும். எல்லோரும் மகிழ்ந்திருக்கும் ஒரே இடம் திருமணக்கூடம்.

பெண் பார்ப்பதில் தொடங்கி, சாந்தி முகூர்த்தம் வரை சம்பந்தப்பட்ட மணமக்கள் இருவருமே தங்கள் வாழ்வில் கடக்கும் ஒவ்வொரு நொடியையும் வாழ்க்கை முழுக்க மலரும் நினைவுகளாக மனதில் கல்வெட்டாக பதிந்து வைத்துக் கொள்கிறார்கள்.

கெட்டிமேளம் முழங்க மணமகன் தாலி கட்டும்போது, அட்சதை போடும் அத்தனை பேருமே, “இந்த மணமக்கள் நீடூழி வாழவேண்டும்” என்று மனமார வாழ்த்துகிறார்கள். பிள்ளையையும், பெண்ணையும் பெற்ற பெற்றோர் பெரிய மனப்பாரத்தை இறக்கி வைத்ததாக நிம்மதி கொள்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது செகண்ட் இன்னிங்ஸ். புதிய உறவுகள், புதிய குடும்பம், புதிய வீடு என்று எல்லாமே புதுச்சூழல். எனவேதான் திருமணத்தை ‘The big day’ என்கிறார்கள்.

இருமனம் இணைவது மட்டுமல்ல திருமணம். இச்சொல்லுக்கு ‘ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையிலான வாழ்க்கை ஒப்பந்தம்’ என்று ஒருவரியில் அர்த்தம் புரிந்துக் கொள்ளலாம். ஆனால், அது மட்டும்தானா திருமணம்? இந்த வார்த்தையை வெறும் சடங்காக மட்டும் சுருக்கி கூற இயலாது. ஒரு புதிய குடும்பத்தின் தொடக்கத்தை, தலைமுறைகளின் தொடர்ச்சியை சடங்கு என்று சுருக்கி சங்கடப்படுத்திவிட முடியுமா என்ன?

மேற்கத்திய நாடுகளில், இரு தனி நபர்களுக்கு இடையேயான குறைந்தபட்ச செயல்திட்டங்களோடு கூடிய ஒப்பந்தம் என்று திருமணத்தைக் கூறலாம். நம்முடைய மரபில் இரண்டு குடும்பங்களின் இணைப்பாக இது பாரம்பரியமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இரு குடும்பம், அவரவருடைய தொடர்புடைய குடுங்பங்கள், நண்பர்கள் என்று இரு சமூகத்தின் உறவுப்பாலம் அல்லவா. திருமணம் என்பது நம் சமூகப் பாரம்பரியத்தில் ஆண்டாண்டு காலமாக அறுபடாத தொடர்சங்கிலி.

வரலாறாக திருமணத்தை வரையறுப்பது கொஞ்சம் கடினம். காடுகளில் வசித்து வந்த மனிதன், நாடுகளில் விவசாயம் செய்து, நிலங்களை உழுது நாகரிகமாக தொடங்கிய காலத்தில் தத்தம் உடைமைகளை பாதுகாக்கவும், முறையான சமூக அமைப்பின் அங்கமாக விளங்கவும் உருவாக்கிய ஏற்பாடே திருமணம்.

பண்டைய இந்தியாவில் எட்டு விதமான திருமண பந்தங்கள் இருந்ததாக வரலாறு சொல்கிறது. பிரம்ம விவாகம், தெய்வ விவாகம், அர்ஷ விவாகம், பிரஜபாத்யா விவாகம், காந்தர்வ விவாகம், அசுர விவாகம், ராட்சஸ விவாகம், பைசாஸ விவாகம். இதில் கடைசி நான்கு திருமணங்கள்தான் சாமானிய மக்களின் திருமணங்கள். முந்தைய நான்கும் வேற லெவல்.

காலப்போக்கில் மக்கள் ஏற்றுக்கொண்ட சமூக சீர்த்திருத்தங்களின் காரணமாக அந்த பழம்பெரும் முறைகள் பல்வேறு காரணங்களால் இன்று நடைமுறையில் இல்லை. இன்று நாட்டில் பெரும்பாலான திருமணங்கள் arranged marriages என்று சொல்லப்படும் வகையிலானவை. இத்திருமணங்களுக்கு சமூகம், வர்க்கம், குடும்பம் மூன்றும் முதன்மையான காரணிகள். யாருக்கு யார் ஜோடி என்பதை குடும்பப் பெரியவர்கள் நிச்சயிக்கிறார்கள். இப்போது தனக்கு பிடித்த பெண், பையன் என்று மணமக்களே தங்கள் துணையை விரும்பி, பெற்றோரிடம் சொல்லி திருமணம் செய்துக் கொள்ளுமளவுக்கு மாற்றம் உருவாகி வருகிறது. அடுத்தபடியாக நாகரிக வளர்ச்சியின் காரணமாக சாதி, மதம் பாராத காதல் திருமணங்களும் பெருமளவில் நடந்து வருகின்றன. காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்க மாற்றம். பிரெஞ்சுப் பொண்ணுக்கு மதுரைப் பையன் மாப்பிள்ளை என்கிற அளவில் சர்வதேச அளவில் ஜோடி தேட ஆரம்பித்திருக்கிறோம்.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தொழிற்புரட்சி, மேற்கத்திய நாகரிக பரவல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்று பல்வேறு சூழல்கள் இந்திய சமூகத்தை தாக்கப்படுத்தி இருந்தாலும், திருமணம் மட்டுமே அதன் அடிப்படை நோக்கம் மற்றும் வழிமுறைகளில் இருந்து பெரிய அளவில் தடம் புரளவில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பால்யவிவாகங்கள் நடந்ததுண்டு. இந்து திருமணச் சட்டம் 1955ன் படி பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் திருமண வயதாக கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு சட்டம், மக்களிடையே பெரிய மனமாற்றத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது என்றால், அது திருமண விஷயத்தில்தான்.

பொதுவாக நம்மூரில் நாள் நட்சத்திரம் பார்த்து திருமணத்துக்கு தேதி குறிக்கிறார்கள். திருமணத்துக்கு முன்பு இரு குடும்பமும், புதிய உறவின் அச்சாரமாக தாம்பூலம் மாற்றிக் கொள்கிறார்கள். திருமணம் அன்று மணமகனும், மணமகளும் சுற்றத்தையும், நட்பையும் சாட்சியாக வைத்து ஒரு கோயிலிலோ அல்லது கல்யாண மண்டபத்திலோ அமர்கிறார்கள். வேதமந்திரங்களை அந்தணர் ஓதுகிறார். பின்னணி இசையாக மங்கள வாத்தியம். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விருந்தோம்பல். நிகழ்வின் உச்சமாக மூன்று முடிச்சுப் போட்டு மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுகிறார். மணமகளின் கையை மணமகன் பிடித்து இருவரும் அக்னியை சுற்றி தங்கள் திருமணத்தை உறுதி செய்கிறார்கள். பின்னர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சகஜமாக வேண்டுமென்று சில விளையாட்டுகளை சுற்றம் மகிழ விளியாடுகிறார்கள். திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள், மணமக்களுக்கு பரிசளிக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாக பொதுவான திருமண வழிமுறை இதுதான். சடங்குகள் மட்டும் சமூகத்துக்கு சமூகம், மதத்துக்கு மதம் சற்றே மாறுபடலாம்.

இந்தியாவில் இந்து மதம் தவிர்த்து இஸ்லாமியர், கிறிஸ்துவர், சிந்தி, பார்ஸி, சீக்கியர், பவுத்தம், ஜெயின் மற்றும் யூதர்கள் என்று பல்வேறு மதத்தினர், அவரவர் மத சம்பிரதாயப்படி திருமணங்களை செய்கிறார்கள். தாலிக்கு பதில் மோதிரம், மந்திரத்துக்கு பதில் புனிதநூல் ஓதுதல் மாதிரி வேறுபாடுகளை தவிர்த்துப் பார்த்தால், ‘திருமணம்’ என்பதன் நோக்கம் நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய அடிப்படையிலேயே ஒன்றுதான்.

தரகரிடம் தேடச்சொல்லி, தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்று நாலு இடத்தில் சொல்லிவைத்து பெண் தேடிய காலம் மட்டும் மாறியிருக்கிறது. இன்று இண்டர்நெட்டிலேயே பெண் தேடுகிறார்கள். வீடியோ சாட்டிங்கில் பெண் பார்க்கிறார்கள். மற்ற விஷயங்களை போனில் பேசிக்கொள்கிறார்கள். பஜ்ஜி, சொஜ்ஜி செலவு மிச்சம் என்றாலும், ஏகத்துக்கும் பட்ஜெட்டை எகிறவைக்கும் வேறு புதிய செலவினங்கள் உருவாகியிருக்கின்றன. பையனின், பெண்ணின் தகுதியாக படிப்பு, பாட்டு பாடுவது, நாட்டியம் ஆடுவது எல்லாம் காலாவதியாகி விட்டது. மருத்துவத்தகுதி சான்றிதழ் வாங்கி பொருத்தம் பார்க்குமளவுக்கு விழிப்புணர்வு பெறத் தொடங்கியிருக்கிறோம்.

அதெல்லாம் தனி.

ஆனால்-

கஷ்டப்பட்டு உழைத்து வாழ்நாளெல்லாம் சேமிக்கும் அத்தனை பணத்தையும் தன் மகளின் கல்யாணத்துக்குதான் என்று சொல்லும் தகப்பன்மார்கள் எத்தனை பேரை பார்த்திருக்கிறோம். நல்லபடியாக தன்னுடைய மகள் புகுந்தவீட்டில் செட்டில் ஆகவேண்டுமே என்கிற தாயின் அடிவயிற்று நெருப்பு பரிதவிப்பு நமக்கும் தெரியும்தானே? கல்யாண வீடுகளில் பாருங்கள். வியர்வை வழிய அங்கும் இங்குமாக டென்ஷனாக அல்லாடிக் கொண்டிருப்பவன் பெண்ணின் சகோதரனாகதான் இருப்பான்.

பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டு பெண் பார்ப்பது. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து கையை நனைத்து உறவை உறுதி செய்வது. பரிசம் போட்டு நிச்சயத்தாம்பூலம். கல்யாணத்துக்கு மண்டபம் பார்ப்பது. பெண்ணுக்கு முகூர்த்தப்புடவை எடுப்பது. விருந்துக்கு சுவையாக சமைக்கக்கூடிய சமையல்காரரை தேடுவது. திருமணம் செய்விக்கும் புரோகிதரை புக் செய்வது. ரிசப்ஷனுக்கு நல்ல லைட் மியூசிக் ட்ரூப்பை கண்டு பிடிப்பது. திருமண அழைப்பிதழுக்கு நல்ல டிசைன் செலக்ட் செய்வது. மேடைக்கு பூ அலங்காரம். விருந்தினர்கள் மனம் கோணாமல் உபசரிப்பு. இன்னும் எராளமான விஷயங்கள். இவை எல்லாவற்றுக்கும் லட்சக்கணக்கில் பணம்... யோசித்துக் கொண்டே போனால் ‘கல்யாணம் பண்ணிப் பார்’ என்று சும்மாவா சொன்னார்கள் நம் பெரியவர்கள்?

நம் நண்பர் ஒருவர் டீனேஜில் இருந்தபோது அவருடைய ஒண்ணுவிட்ட அண்ணனுக்கு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில் ரெட்டை ஜடை, பாவாடைச் சட்டையோடு ஒரு பத்து வயது பெண் சுற்றிக் கொண்டிருந்தாள். மணமகளின் ஒண்ணுவிட்ட தங்கச்சியாம். பத்து ஆண்டுகளுக்கு பிறகு லைஃபில் செட்டில் ஆகிவிட்ட நம் நண்பருக்கு பெண் பார்த்தார்கள். அந்த ரெட்டை ஜடை, பாவாடைச் சட்டையே புடவை கட்டி வந்து அமர்கிறார். இருவரும் இப்போது தம்பதி சமேதரராக அந்த ஒண்ணுவிட்ட அண்ணனுக்கும், ஒண்ணுவிட்ட அக்காவுக்கும் நடந்த கல்யாண வீடியோவை அவ்வப்போது போட்டுப் பார்த்து சந்தோஷமாக ஒருவருக்கு ஒருவர் கிண்டல் அடித்துக் கொள்கிறார்கள். திருமணம், இதுபோன்ற மலரும் நினைவுகளோடு சம்பந்தப்பட்டது.

“நம்ம வாசுதேவன் கல்யாணத்துலே போட்டாங்க பாருடா சாப்பாடு. அதுதான் சாப்பாடு” என்பது மாதிரி டயலாக்குகளை அடிக்கடி கேட்கலாம். வாசுதேவனுக்கு கல்யாணம் ஆகி இருபத்தைந்து ஆண்டுகள் கழித்தும்கூட.

“நம்ம வரலட்சுமி புள்ளை கல்யாணத்துலே குறுக்கும், நெடுக்குமா நெட்டையா சிகப்பா ஒட்டறைக்குச்சி மாதிரி நடந்துக்கிட்டிருந்தாளே ஒரு பொண்ணு. நம்ம விஜயாவோட சின்ன மாமனார் பெண்ணாம். நம்ம சரவணனுக்கு கேட்டுப் பார்க்கலாமா? இவனும் ஒல்லியா, அமிதாப் பச்சன் உயரத்துலேதானே இருக்கான்?” ஒரு கல்யாணத்தால் இன்னொரு கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது.

இம்மாதிரி sidelight விஷயங்கள் ஏராளம்.

இவை அத்தனையையும்தான் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’ நூல்.

அலுவல் தொடர்பான சந்திப்பு ஒன்றில்தான் திடீரென திருமணம் பற்றி பேச்சு வந்தது.

எங்கள் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர் அவர்கள், அவர் பார்த்த பல்வேறு சமூகத் திருமணங்களை பற்றி சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டிருந்தார். சடங்குகள், சம்பிரதாயம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரேதான் சொன்னார்.

“இதை ஒரு தொடராவே செய்யலாம். ஏன்னா, இப்போ பல சடங்குகள் அர்த்தம் இழந்துப் போச்சி. அர்த்தமுள்ள சடங்குகளுக்கு அர்த்தம் என்னன்னு இப்போதைய தலைமுறைக்கு தெரியலை”

அந்த காலக்கட்டத்தில் திருமணம் குறித்த பல்வேறு தரப்பிலான கருத்துகள் சமூகவலைத் தளங்களில் அலசப்பட்டுக் கொண்டிருந்தது. திருமணம் என்கிற முறையே தவறு என்பது மாதிரியான விவாதங்களும் நடந்துக் கொண்டிருந்தன. அந்த விவாதத்தில் நாம் கலந்துக் கொள்ள வேண்டாம்.

ஆனால்-

‘திருமணம்’ என்கிற நிகழ்வுக்கும், அதன் தொடர்பிலான சடங்குகளுக்கும் நம்முடைய மரபில் அர்த்தத்தை தேடுவோம் என்று முடிவெடுத்தோம்.

அப்படிதான் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’ தொடரை ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழுக்கு எழுதத் தொடங்கினேன். தொடரை ஆரம்பிப்பதற்கு முன்பு ஏகத்துக்கும் உதறல் இருந்தது. ஏதேனும் தவறுதலாக எழுதிவிட்டால் அந்தந்த சமூகத்து மக்களிடம் சமாதானம் சொல்ல வேண்டுமே என்கிற தயக்கமும் இருந்தது.

எனினும், அறிவிப்பு வெளியிட்ட பிறகு தமிழ் சமூகத்துப் பெரியவர்களே என்னை வழிநடத்தத் தொடங்கினார்கள். தேவைப்பட்ட குறிப்புகளையும், நூல்களையும் அவர்களே அனுப்பி வைத்தார்கள். எப்போதும் சந்தேகம் கேட்டாலும், தெளிவான விளக்கங்களை தர அவர்கள் யாரும் தயங்கியதே இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்ல ஆசைதான். எனினும், இந்த பெயர்ப்பட்டியலே தனிநூலாக போய்விடக்கூடிய அளவுக்கு நீளமான பட்டியல் என்பதால் தவிர்க்கிறேன். நூலில் குற்றம் குறை ஏதேனும் இருந்தால் அது எனது. சொல்லப்பட்டிருக்கும் நிறைவான விஷயங்கள் அத்தனைக்கும் நம் சமூகப் பெரியோரே காரணம்.

இப்போது நூலாக வெளியாகியிருக்கும் அந்த தொடரில் சில சமூகங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், அதே சடங்குகள் வேறொரு சமூகத் திருமணங்களில் கடைப்பிடிக்கப்படக் கூடியதாக இருக்கும். சமூகத்தின் பெயரை மற்றும் மாற்றி ஏற்கனவே சொன்னதையே திரும்பச் சொல்லுவதை தவிர்க்கவே அந்த விடுபடலே தவிர வேறெந்த நோக்கமுமில்லை. அதுபோலவே, தனித்துவமான சடங்குகள் இல்லாமலேயே மிகவும் எளிமையான முறையில் திருமண பந்தத்தை உறுதி செய்யக்கூடிய சமூகங்களும் உண்டு. ஒட்டுமொத்தமாக இந்த நூலை வாசிக்கையில், திருமணம் என்கிற ஆயிரங்காலத்து பயிர் எப்படி வளர்க்கப்படுகிறது, அதற்கு உரமாக எதுவெல்லாம் அமைகிறது என்கிற பறவைப்பார்வை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

என்னுடைய ஆரம்பக்கட்ட உதறலை போக்கியவர் ‘குங்குமம்’ வார இதழின் ஆசிரியர் கே.என்.சிவராமன். தொடரை ஆரம்பிக்கும்போது அவர்தான் ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழின் ஆசிரியராக இருந்தார். ‘ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, சர்ச்சை வரும் என்று தெரிந்தாலோ, அதை எழுதவே எழுதாதே’ என்று அறிவுறுத்தியிருந்தார். நல்லபடியாக எவ்வித சர்ச்சைக்கும் இடமின்றி இந்தத் தொடரை நிறைவு செய்ததற்கு அந்த அறிவுரையே காரணம்.

என்னுடைய பத்திரிகையுலக வாழ்வில் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’யை மறக்கவே முடியாது. இத்தொடர் தொடங்கும்போது ‘வசந்தம்’ இதழின் மூத்த துணையாசிரியராக இருந்தேன். தொடரின் இறுதி அத்தியாயத்தை எழுதும்போது அவ்விதழுக்கு ஆசிரியர் பொறுப்புக்கு பதவி உயர்த்தப்பட்டிருந்தேன். அவ்வகையில் இந்த ‘திருமணம்’, என் வாழ்வின் சகல சவுபாக்கியங்களையும் உறுதிச் செய்திருக்கிறது.

நூல் : தாம்பூலம் முதல் திருமணம் வரை
எழுதியவர் : யுவகிருஷ்ணா
விலை : ரூ.190
பக்கங்கள் : 255
வெளியீடு : சூரியன் பதிப்பகம்,
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-600004.
தொ.பே 044-2209191 Extn 2115. கைபேசி : 7299027361