3 ஜூலை, 2018

சொரணை இருக்கிறதா நமக்கு?

முன்பொரு காலம் இருந்தது.

நல்ல வெயிலில் நடந்துக் கொண்டிருக்கும் நடைபயணிகள், யார் வீட்டின் முன்பு நின்று தாகத்துக்கு தண்ணீர் கேட்டாலும், செம்பு நிறைய மகிழ்ச்சியோடு கொடுப்பார்கள். டீக்கடைகளில் தொடங்கி சினிமா தியேட்டர்கள் வரை இலவசமாக தண்ணீர் கிடைக்கும். தனியொரு மனிதனின் தாகத்துக்கு யாரிடம் தண்ணீர் கேட்டாலும் கிடைக்கும்.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு முதல் விருந்தோம்பலே சில்லென்ற தண்ணீர்தான். அதன் பிறகுதான் சவுகரிய விசாரிப்பு எல்லாம்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகள் இளைப்பாறவும் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை கட்டி, தண்ணீர் நிரப்பி வைத்த காலமும் இருந்தது.

தாகத்துக்கு தண்ணீர் கொடுப்பது பெரும் புண்ணியமாக கருதப்பட்ட தலைமுறைகளின் தொடர்ச்சி நாம்.

ஆனால் –

இன்று?

யார் வீட்டுக்காவது போனால், “தண்ணீ குடிக்கறீங்களா?” என்று சம்மதம் கேட்டுவிட்டுதான் கொடுக்கிறார்கள். யாரைச் சொல்லியும் குற்றமில்லை. எல்லோரும் குடிநீரை காசு கொடுத்துதானே வாங்குகிறோம்?

இன்றைய தேதியில் நமக்குத் தெரிந்து எங்குமே தண்ணீர் இலவசமில்லை. தாகமெடுத்தால், காசு கொடுத்து பாக்கெட் வாட்டர் அல்லது வாட்டர் பாட்டில் வாங்கிக் குடித்துக் கொள்ள வேண்டியதுதான்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ வாட்டர் போன்ற அரசு அமைப்புகள் மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை செய்துவருகின்றன. இதற்காக சொற்ப அளவிலான குடிநீர் வரியையும் நாம் செலுத்தி வருகிறோம். லாரி மூலமாகவோ அல்லது குழாய்கள் மூலமாகவோ சப்ளை செய்யப்படும் இந்த குடிநீரை அப்படியே பயன்படுத்த முடிவதில்லை. காய்ச்சிக் குடிக்கலாம். அல்லது RO முறையில் சுத்திகரித்து குடிக்க வேண்டும். அதற்காக ஒரு இயந்திரத்தை காசு செலவு செய்து வாங்க வேண்டும்.

அரசு, குடிமக்களுக்கு கொடுத்துக் கோண்டிருக்கும் இந்த அடிப்படை உரிமைகூட தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது என்பதுதான் லேட்டஸ்ட் பகீர்.

ஆம்.

கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் உரிமையை தாங்கள் பெற்றிருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் என்கிற நிறுவனம், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி பெருமையோடு அறிவித்திருக்கிறது.

சுமார் பதினாறு லட்சம் மக்களுக்கு அடுத்த இருபத்தாறு ஆண்டுகளுக்கு வழங்கக்கூடிய ஒப்பந்தத்தை 400 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 3,150 கோடி ரூபாய்) பணத்துக்கு பெற்றிருப்பதாக அந்த நிறுவனம் பெருமையோடு சொல்கிறது.

குடிநீர் சப்ளையை தனியாருக்கு தாரை வார்ப்பது இது இந்தியாவில் முதன்முறை அல்ல. ஏற்கனவே டெல்லி, பெங்களூர், கொல்கத்தா போன்ற மாநகரங்களிலும் இதே போன்ற ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

ஏற்கனவே, நாம் நெடுஞ்சாலைகளை இழந்துவிட்டோம். இந்தச் சாலைகளில் பயணிக்க சுங்கம் செலுத்துவதை போல, இனி கோவைவாசிகள் குடிநீருக்கும் தனியார் நிறுவனம் வரையறுக்கும் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதற்கட்டம்தான் கோவை. அடுத்தடுத்து சென்னை, சேலம், மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களின் குடிநீர் சப்ளையையும் தனியார் நிறுவனங்கள் கைப்பற்றி, கொள்ளை லாபம் சம்பாதிக்க திட்டமிடப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.

தண்ணீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. பாதுகாக்கப்பட்ட குடிநீரை தன் குடிமக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை.

ஆனால் –

உலக வங்கியோ, தண்ணீரை தனியார் மயமாக்கச் சொல்லி வற்புறுத்தி வருகிறது. உலக வங்கியின் தலைவராக இருந்த ஜேம்ஸ் வோல்பென்ஸான் என்பவர், “இலவசமாகவோ, குறைந்த காசுக்கோ தண்ணீரை வழங்குவது என்பது பூமியின் வளங்களை சுரண்டுவதற்கு காரணமாகிறது. அதுபோல தண்ணீரை கொடுக்கும்போது, மக்கள் அதன் மதிப்பை அறியாமல் வீணாக்குகிறார்கள்” என்று சொன்னார்.

என்னவோ, இயற்கை வளங்களை அரசுகள் அப்படியே பாதுகாக்க விரும்புவதாகவும், மக்கள்தான் வளங்களை சுரண்டுகிறார்கள் என்பதைப் போன்றும் அவர் உதிர்த்த இந்த முத்துகள், அப்போதே உலகம் முழுக்க கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது.

பொலிவியா நாட்டின் நான்காவது பெரிய நகரமான கோசம்பம்பாவில் இதுபோல தண்ணீர் வழங்கும் உரிமை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டபோது மக்கள் திரண்டு பெரியளவில் 1999-2000 ஆண்டுகளில் போராட்டம் நடத்தினார்கள். தண்ணீர் மற்றும் வாழ்வியல் பாதுகாப்பு அமைப்பு என்கிற இயக்கத்தை நிறுவி, பல்லாயிரக் கணக்கானோர் அரசுக்கு எதிராக வீதிகளில் திரண்டார்கள்.

அந்த திட்டத்தில் முதலீடு செய்திருந்த அந்நிய நிறுவனங்கள், பொலிவியா அரசின் துணை கொண்டு போராட்டங்களை முடக்க கடுமையாக முயற்சித்தனர். சுமார் 90 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களை ஒடுக்க அரச வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சில மரணங்களும் ஏற்பட்டன.

கடைசியாக பொலிவிய மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களின் காரணமாக அரசு, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், உலகவங்கி என்று அனைவரும் மக்கள் முன்பாக மண்டியிட வேண்டி வந்தது. பொலிவிய மக்களின் தண்ணீருக்கான இந்த போர், 2010ஆம் ஆண்டு ‘Even the Rain’ என்கிற பெயரில் ஸ்பானிஷ் மொழியில் திரைப்படமாகவே வந்தது.

இன்று குடிநீர், தனியாரின் கட்டுப்பாட்டுக்கு போகிறது என்றால், நாளை விவசாய பயன்பாடுகளுக்கான தண்ணீரையும் அவர்கள் கட்டுப்படுத்த முனைவார்கள். ஒவ்வொரு அணையையும் ஏதோ ஓர் அந்நிய நிறுவனம் பல்லாயிரம் கோடிகளை கொட்டி வாங்கும். லட்சக்கணக்கான கோடிகளை அறுவடை செய்யும். இது நவீன காலனி ஆதிக்கத்துக்கு அடிகோலும். நம் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் தண்ணீரை வாங்கி பயன்படுத்த பர்சனல் லோன் போடவேண்டிய அவலமும் வரலாம்.

பொலிவிய மக்களுக்கு இருந்த சொரணை, நமக்கும் இருக்கிறதா?

(நன்றி : குங்குமம்)

19 ஜூன், 2018

யானை டாக்டர்!

‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்கிற சிறப்பு யானைக்குதான் உண்டு. கற்கால காலக்கட்டங்களில் மனிதனுக்கு சினேகமான காட்டுவிலங்காக யானைதான் இருந்திருக்கிறது. தரையில் வாழும் உயிரினங்களில் primateகளுக்கு (கொரில்லா, சிம்பன்ஸி, மனிதனெல்லாம் இந்த வகைதான்) அடுத்தபடியாக யானைக்குதான் அறிவு அதிகம். கருவிகளை பயன்படுத்தக்கூடிய ஆற்றலும், அறிவும் மனிதர்களைத் தவிர்த்து யானைக்குதான் உண்டு.

மனிதர்களைப் போலவே சமூகமாக வாழக்கூடிய நாகரிகம், ஆதிக்காலத்திலிருந்தே யானைகளுக்கு உண்டு. ஒருவேளை தாய்வழி சமூகம் என்கிற வாழ்க்கைமுறையை மனிதர்கள், யானைகளிடமிருந்து கற்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆண் யானைகள், பருவம் எய்தக்கூடிய வயது வரை தாயோடுதான் காணப்படும். பெண் யானைகள் கடைசி வரை தாய், சகோதரி, மகள் என்று கூட்டுக் குடும்பமாகவே வசிக்கின்றன.

ஈடு இணையில்லாத இந்த விலங்கினத்தை மனிதர்கள் படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல. மனிதனோடு சினேகமாக இருக்கக்கூடிய விலங்கு என்பதால், அதை அல்லக்கை மாதிரி மனிதன் பயன்படுத்துகிறான். கடினமான வேலைகளை யானையின் தும்பிக்கை மேல் பாரமாக போடுகிறான். ஆசியாவில் மட்டுமே சுமார் 15,000 யானைகள் இதுபோல மனிதர்களின் வேலைக்காரனாக பணிபுரிவதாக ஒரு கணக்கீடு சொல்கிறது.

யானைகளை கொண்டே யானைகளின் வசிப்பிடமான காடுகளை அழித்து, மனிதர்களுக்கான குடியிருப்புகளாக மாற்றியிருக்கிறோம். வரலாறு நெடுக போர்களில் பயன்படுத்தி பலியிட்டிருக்கிறோம். Zooக்களில் காட்சிப் பொருளாக காட்டுகிறோம். சர்க்கஸ்களில் வித்தை செய்ய விடுகிறோம். கோயில்களில் கட்டிப் போட்டு, அதன் சுதந்திரத்தைப் பறிக்கிறோம்.

ஆற்றலில் நம்மைவிட பெரிய விலங்கு. எனினும் சுபாவத்தில் கொஞ்சம் நட்பாக பழகுகிறது என்பதால் மனிதக்குலம் யானையிடம் எடுத்துக் கொள்ளும் அட்வாண்டேஜ் கொஞ்சநஞ்சமா?

1930ல் தொடங்கி 1940க்குள் ஒரு பத்தாண்டில் மட்டுமே ஒட்டுமொத்த யானைகளின் எண்ணிக்கையை வேட்டையாடி பாதியாக குறைத்த கொடூரமான சாதனைக்கு சொந்தக்காரர்கள் நாம். வீரத்தை வெளிப்படுத்துகிறோம் என்கிற பெயரில் அப்பாவி யானைகளை தேடித்தேடி கொன்றிருக்கிறோம். அவற்றின் தந்தங்களை வெட்டி வீடுகளில் ஃபர்னிச்சர்களுக்கு பயன்படுத்தியிருக்கிறோம்.

சமீபமாகதான் யானை குறித்த இரக்கவுணர்ச்சி நமக்கெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. அவை பாதுகாக்கப்பட வேண்டிய இனம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. காலம் கடந்தாவது இந்த ஞானம் நமக்குப் பிறந்ததே என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

இப்போது யானைகளுக்கு பிரச்னை என்றால், சுற்றுச்சூழலாளர்கள் கை கோர்த்து அவற்றுக்கு உதவுகிறார்கள். அரசும்கூட சரணாலயங்களில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமெல்லாம் நடத்துகிறது.

இந்த சூழலுக்கு வித்திட்டவர் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்ற டாக்டர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி. 1929ல் பிறந்து 2002 வரை வாழ்ந்த இந்த கால்நடை மருத்துவர், தன்னுடைய வாழ்நாள் மொத்தத்தையுமே யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதிலேயே செலவழித்திருக்கிறார். முதுமலை தெப்பக்காடு யானை முகாம் இவருடைய சிந்தனையில் உதித்த திட்டம்தான்.

சர்வதேச இதழ்களில் இடம்பெற்ற இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், யானைகளின் இருத்தலியல் குறித்த அவசியத்தை எடுத்துரைத்து உலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியது. விலங்கியல் மருத்துவ உலகம் இவரை செல்லமாக டாக்டர் கே என்றழைக்க, மக்கள் தாமாக முன்வந்து ‘யானை டாக்டர்’ என்கிற பட்டத்தை வழங்கினர்.

கிணறுகளில் விழுவது, நோயுற்று காடுகளில் கிடக்கும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதன் பொருட்டு மயக்க ஊசி பயன்படுத்தும் முறையை கால்நடை மருத்துவத் துறையில் முதன்முதலாகப் பயன்படுத்தியவர் இவர்தான். மர்மமான முறையில் மரணிக்கும் யானைகளுக்கும் மனிதர்களுக்கு செய்வதைப் போலவே போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். யானைகளுக்கு எப்படி போஸ்ட்மார்ட்டம் செய்வது என்பதை நேரடியாக செய்தும் காட்டினார். இதன் பிறகே தந்தங்களுக்காக யானைகளை கொல்லும் கடத்தல்காரர்கள், சட்டத்தின் பிடியில் சிக்க ஆரம்பித்தார்கள். கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளை எப்படி பராமரிக்க வேண்டும், அதற்கான கண்காணிப்பு முறைமைகளை அரசு எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதற்கெல்லாம் வழிகாட்டு முறைகளை உருவாக்கியவர் இந்த யானை டாக்டர்தான்.

“யானைகள் இவர் பேசுவதை புரிந்துக் கொள்கின்றன. இவர் பேச்சுக்கு கட்டுப்படுகின்றன” என்று இன்று சர்வதேசப் புகழ் பெற்றிருக்கும் விலங்கியல் நிபுணரான இயான் டக்ளஸ் ஹாமில்டன் நேரடியாக கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் இன்று தோராயமாக 28,000 யானைகள் வசிக்கின்றன. இவற்றில் மூவாயிரத்துக்கும் சற்று குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில் இருக்கின்றன. நம்மூர் யானை டாக்டர் மட்டும் இல்லையென்றால், இந்த எண்ணிக்கை பத்தில் ஒரு பங்காக இருந்திருந்தாலே அதிசயம்தான்.

இவர் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ என்கிற சிறுகதை லட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்து சிலிர்ப்படைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று, யானை குறித்த எந்தவொரு செய்தியை நீங்கள் செய்தித்தாள்களில் வாசித்தாலும், உங்களோடு மானசீகமாக அமர்ந்து புன்னகைத்துக் கொண்டிருப்பார் யானை டாக்டர். உற்று நோக்குங்கள். இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போதுகூட உங்கள் எதிரில்தான் இருக்கிறார் டாக்டர் கே.

(நன்றி : குங்குமம்)

2 ஜூன், 2018

அலிபாபா!

அம்மாவை பளாரென்று அறைந்தார் அப்பா.

அதிர்ந்தான் அலிபாபா.

முதன்முறையாக அம்மாவை அப்பா அடிப்பதை இப்போதுதான் பார்க்கிறான்.

அவனைப் பொறுத்தவரை அப்பாதான் உலகிலேயே மிகவும் நல்லவர். வாத்யாரின் வெறிபிடித்த ரசிகர். தலைவரின் உயிரினும் மேலான உடன்பிறப்பு.

அவனுக்கு தெரிந்து அந்த ஊரிலேயே, ஏன் உலகத்திலேயே அலிபாபா என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது அவனுக்குதான்.

வைப்பதற்கு பெயரா இல்லை?

திராவிட இயக்கப் பெயர்தான் வைக்க வேண்டுமென்றால் உதயசூரியனில் தொடங்கி குணசேகரன் வரை எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன.

அலிபாபாவின் துரதிருஷ்டம் என்னவென்றால் -

அப்பாவுக்கு மிகவும் பிடித்த படம் வாத்யாரின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.

1956 ஏப்ரல் 14-ஆம் தேதி அப்பா பிறந்த அன்றுதான் அலிபாபாவாக வாத்யார் நடித்த அந்தப் படம் ரிலீஸ் ஆனதாம்.

நியாயமாகப் பார்த்தால் தாத்தா, அப்பாவுக்குதான் அலிபாபா என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும்.

என்ன செய்வது?

தாத்தா பழுத்த காங்கிரஸ்காரர்.

அப்பாவுக்கு ஜவகர் என்று தேசியத்தனமாக பெயரை வைத்துவிட்டார்.

அப்பாவோ திராவிட எழுச்சியில் வளர்ந்தவர்.

பத்து வயதிலேயே இந்தி அரக்கிக்கு எதிராக தார்ச்சட்டி ஏந்தியவர். அதனால் தாத்தாவிடம் தடியடியும் வாங்கியவர். தாத்தா, அப்பாவுக்கு வெறும் அப்பா மட்டுமல்ல. தமிழ் சமூகத்துக்கு போலிஸ்காரரும்கூட.

தாத்தா பணிபுரிந்த காவல்நிலையத்தின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்திருக்கிறது. அதை இந்தி என்று தவறுதலாக எண்ணிய ஹைஸ்கூல் மாணவர்கள் சிலர் தார் கொண்டு காவல்நிலையப் பலகையை அழித்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஆரம்பப்பள்ளி அப்பாவும் இருந்திருக்கிறார்.

அவ்வகையில் அவர் இந்தி எதிர்ப்புப் போராளியாகவும் அறியப்படுகிறார்.

‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தை அப்பா ஐம்பது தடவைக்கு மேல் பார்த்திருக்கிறாராம்.

சிறுவயதில் தன்னை அலிபாபாவாகவே நினைத்துக் கொண்டு பல்லாவரம் குன்றில் போய் ஏதாவது குகையிருக்கிறதா என்று தேடுவதே அவரது வழக்கமாம்.

அந்த எழவெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

அவனுக்கு ஏன்தான் அலிபாபா என்று பெயர் வைத்து தொலைத்தாரோ தெரியவில்லை.

இத்தனைக்கும் அலிபாபா பிறந்தபோது வாத்யார்தான் ஆட்சியில் இருந்தார்.

தலைவரை பிரிந்து வாத்யார் தனிக்கட்சி ஆரம்பித்தபோது, தீவிர ரசிகராக இருந்தும் வாத்யாரோடு போகாமல் தலைவரின் கட்சியிலேயே விசுவாசமாக இருந்தவர் அப்பா.

எதிர்க்கட்சியாக மாறிவிட்டாலும் வாத்யார் மீதான ரசிப்புத்தன்மை மட்டும் அவருக்குள் அப்படியே தங்கிவிட்டது.

பள்ளியில் சேர்க்கும்போது அலிபாபா என்று சொன்னபோது, ஒருமுறைக்கு இருமுறை கேட்டு, அதுதான் நிஜப்பெயரா என்று உறுதிப்படுத்திக் கொண்டார்களாம்.

தனக்கு தன்னுடைய அப்பா நியாயமாக சூட்டியிருக்க வேண்டிய இந்தப் பெயரை சூட்டாத காரணத்தால், தன்னுடைய மகனுக்கு சூட்டி அழகு பார்த்திருப்பதாக பெருமையாக சொல்லியிருக்கிறார்.

“முஸ்லீமா?” என்று கேட்டிருக்கிறார்கள்.

“எனக்கு சாதியுமில்லை. மதமுமில்லை. நாத்திகன். கழகத்தைச் சார்ந்தவன்” என்று அப்பா பகுத்தறிவு எக்காளமிட்டிருக்கிறார்.

“உங்களுக்கு மதமில்லை சரி. எப்படியோ போகட்டும். பள்ளி வழக்கப்படி பையனுக்கு ஏதாவது சாதி, மதம் போட்டே தீரவேண்டும்” என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார் தலைமையாசிரியர். அனேகமாக அவர் காங்கிரஸ் அனுதாபியாக இருந்திருக்க வேண்டும்.

வேறு வழியில்லாமல் வேண்டாவெறுப்பாக ‘இந்து’ என்று போட்டுக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறார் அப்பா.

அலிபாபா என்கிற பெயரின் காரணமாக அலிபாபா சந்தித்துவரும் துயரங்கள் எண்ணிலடங்கா.

சக பள்ளி மாணவர்கள் பெயரை சுருக்கமாக முதல் இரண்டு எழுத்துகளில் அழைத்து கேலியாக சிரிப்பதுண்டு.

பெயர் ‘அ’வில் ஆரம்பிப்பதால் வருகைப் பதிவேட்டில் முதல் பெயரே அலிபாபாதான்.

அப்போதுதான் வயசுக்கு வந்த சிறுமி தோற்றத்தில் வெடவெடவென்று ஒல்லியாக சிகப்பாக இருக்கும் ஒண்ணாங்கிளாஸ் காஞ்சனா டீச்சர், ‘அலிபாபா’ என்று கீச்சுக்குரலில் அழைக்கும்போதெல்லாம் வகுப்பறையே கொல்லென்று சிரிக்கும்.

இந்த ‘கொல்’ அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் பள்ளிப் பருவம் முழுவதிலும் நிழல்போல இடைவிடாமல் தொடர்ந்தது என்பதுதான் கொடுமை.

அப்படிப்பட்ட அலிபாபாதான் ஆறு வயசாக இருந்தபோது, இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அதிர்ச்சியடைந்தான்.

ஏனெனில் –

அம்மாவை பளாரென்று அறைந்தார் அப்பா.

அப்போது அவனுக்கு வயசு ஆறுதான்.

வாத்யார் ரசிகர் என்கிற முறையில் ‘தாய்க்கு பின் தாரம்’ என்கிற கொள்கையில் உறுதியோடு இருப்பவர் அப்பா.

அம்மாவை நோக்கி அதிர்ந்து ஒரு வார்த்தைகூட பேசமாட்டார்.

எல்லா அப்பாக்களும் அவரவர் மனைவியை ‘போடீ வாடீ’ என்று அழைக்கும்போது, இவர் ‘டீ’ போட்டு பேசியதுகூட இல்லை.

வாத்யார், தன்னுடைய நாயகிகளுக்கு சினிமாவில் எத்தகைய மரியாதை கொடுத்து நடித்தாரோ, அதை அப்படியே வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் அப்பா.

அம்மாவை தவிர மற்ற பெண்களை சகோதரி என்றுதான் அழைப்பார்.

அத்தை மற்றும் மாமன் மகள்களைகூட சகோதரி என்று அழைக்குமளவுக்கு வாத்யார்தனமான உயர்ந்த பண்பு கொண்டவர்.

அப்படிப்பட்ட அவரா அம்மாவை அறைந்தார்?

அப்பாவுக்கு இவ்வளவு கோபம்கூட வருமா?

அன்று காலை அலிபாபா வசித்துவந்த கிராமமான மடிப்பாக்கமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.

தலைவர் வருகிறார்.

மடிப்பாக்கம் கிராம கிளைக்கழகச் செயலராக இருந்தவர் மோ.அமரசிகாமணி.

ஒருவகையில் தலைவரின் துணைவியாருக்கு உறவுமுறையில் தம்பி.

அரசுப்பணியில் இருந்தவரான அமரசிகாமணி, தன்னுடைய துணைவியார் வள்ளி பெயரில் அரசியலில் இயங்கிக் கொண்டிருந்தார்.

அடுத்து வரவிருந்த உள்ளாட்சித் தேர்தலில் தன்னுடைய மனைவியை பஞ்சாயத்துத் தலைவராக்கி அழகு பார்க்க உறுதி பூண்டிருந்தார்.

தமிழகத்தை ஆண்டுக் கொண்டிருந்த வாத்யாருக்கு உள்ளாட்சி என்றாலே அலர்ஜி. தேர்தலை நடத்தாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார்.

சர்வ அதிகாரத்தோடு நாட்டை ஆள தான் இருக்க, ஊரை மட்டும் ஆள பஞ்சாயத்துத் தலைவர் வேறு தனியாக எதற்கு என்கிற எண்ணம் ஒருபுறம்.

அப்படி ஒருவேளை தேர்தல் நடந்து, அதில் எதிர்க்கட்சியான கழகம் கணிசமாக வெற்றி பெற்றுவிட்டால் தன்னுடைய பிம்பம் தகர்ந்துவிடுமே என்கிற தயக்கமும் வாத்யாருக்கு இருந்தது.

இருப்பினும் பல்வேறு தளங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை காப்பாற்றியே தீரவேண்டும் என்கிற நெருக்குதல் அரசுக்கு கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

இத்தகைய நிலையில்தான் அமரசிகாமணி, தன்னுடைய மனைவியை பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் நிறுத்துவதற்காக தன்னுடைய செல்வாக்கை கழகத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அதன் ஒரு பகுதியே, இல்லத் திறப்பு விழா.

மோ.அமரசிகாமணி புதியதாக கட்டியிருந்த இல்லத்தை திறந்துவைக்க தலைவர் ஒப்புதல் கொடுத்திருந்தார்.

தலைவரை வரவேற்க வழியெங்கும் வாழைமரங்கள் கட்டியிருந்தன. இருவண்ண கொடி பறக்காத மரங்களே ஊரில் இல்லை. சுவரெங்கும் தலைவரை வரவேற்று வாசகங்கள் வரையப்பட்டிருந்தன.

அவரை வரவேற்பதாக உள்ளூர் கட்சிக்காரர்கள் மட்டுமின்றி, மாவட்ட அளவிலான கழக நிர்வாகிகளும் குவிந்திருந்தனர்.

அலிபாபா, அப்பாவின் தோள்மீது அமர்ந்திருந்தான். அருகில் ஆரத்தித் தட்டை ஏந்தியவாறு அம்மா.

கூட்டத்தை கிழித்துக் கொண்டு வெள்ளைநிற அம்பாஸடர் கார், தேர் மாதிரி ஊர்ந்து வந்தது.

பத்தாயிரம் வாலா பட்டாசுக்கு திரி கொளுத்தப்பட்டது.

‘டாக்டர் கலைஞர் வாழ்க’, ‘முத்தமிழறிஞர் வாழ்க’ கோஷம் விண்ணை முட்டியது.

புது இல்லத்தின் முன்பாக கார் நின்றது.

ஓட்டுநருக்கு அருகாமையில் இருந்த இருக்கையில் இருந்து உற்சாகமாக தமிழ் இறங்கியது. கூடியிருந்த கூட்டத்தை நோக்கி கையை விரித்து உதயசூரியன் சின்னத்தை காட்டியது.

தொண்டர்களின் ஆர்வம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது. ‘டாக்டர் கலைஞர்’ என்று அப்பா, அடித்தொண்டையிலிருந்து ஒலியெழுப்ப, உச்சஸ்தாயியில் ‘வாழ்க’ கோஷம் எதிரொலித்தது.

மாடியிலிருந்து தலைவர் மீது மலர்கள் வீசப்பட்டன.

மோ.அமரசிகாமணி, தலைவருக்கு ஆளுயர மாலை போட்டார்.

அம்மாவும், கட்சிக்காரர் வீட்டுப் பெண்கள் சிலரும் ஆரத்தியெடுத்து தலைவருக்கு திருஷ்டி கழித்தார்கள்.

தலைவர், ரிப்பன் வெட்டி வீட்டுக்குள் வலதுகால் எடுத்து வைத்தார்.

ஹாலில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் தலைவருக்கு மட்டும் இருக்கை. முன்பிருந்த ஒலிப்பெருக்கியில், “என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே…” என்று கரகரத்த குரலில் அவர் பேசத் தொடங்க, கரவொலியில் இல்லம் அதிர்ந்தது. “…ஆகவே, நிதி மிகுந்தோர் பொற்குவை தாரீர். நாம் புது இல்லத்துக்குள் புகுந்திருக்கிறோம். அராஜக ஆட்சியை, அதர்மத்தின் பேரில் நடக்கும் ஆட்சியை இல்லத்துக்கு அனுப்ப சூளுரை ஏற்போம்” என்று அவர் முடிக்கும்வரை அலிபாபா கைத்தட்டிக் கொண்டே இருந்தான்.

தலைவரை நேரில் கண்ட மகிழ்ச்சியோடு அவர்கள் இல்லம் திரும்பினார்கள்.

“தலைவர் எப்படி தகதகன்னு உதயசூரியன் மாதிரி இருக்காரு பார்த்தியா?” சைக்கிள் மிதிக்கும்போது அப்பா, அம்மாவிடம் சொன்னார்.

“நல்லா செவப்பாதான் இருக்காரு. ஆனா, எம்.ஜி.ஆரு இவரைவிட கலரு” அம்மா சொன்னதும், அப்பா மவுனமானார்.

அந்த மவுனம் அவருக்குள் எரிமலையாய் குமுறி, வீட்டுக்குள் நுழைந்ததுமே வெடித்தது.

“எந்தலைவன் என்ன கூத்தாடியா, எப்பவும் மேக்கப் போட்டுக்கிட்டு திரிய… காட்டுலேயும், மேட்டுலேயும் அலையுற பாட்டாளிகளோட தலைவண்டி…” என்று பெருங்குரலெடுத்து கத்தியவாறேதான் சட்டென்று எதிர்பாராத கணத்தில் அம்மாவின் கன்னத்தில் அறைந்தார்.

- எப்போதோ எழுதத் தொடங்கி, பாதியிலேயே முக்கிக் கொண்டிருக்கும் நாவலில் ஓர் அத்தியாயம்...

10 மே, 2018

இதுவா பேச்சு சுதந்திரம்?

பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரையாட முடிகிறது. சமீபத்தில் இதில் இருக்கும் வீடியோ சாட்டிங் வசதியில் மோடி, தன்னுடைய கட்சியினரிடம், “கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வரம்பு மீறி பேசாதீர்கள்” என்று வருத்தத்தோடு கண்டிப்பு காட்டியிருக்கிறார்.

“நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அள்ளித் தெளிக்கும் தான்தோன்றித்தனமான கருத்துகளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது” என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் 8 வயது குழந்தை, பாஜக தொடர்புடைய சிலரால் கசக்கியெறியப்பட்டதில் தொடங்கி பல்வேறு பிரச்னைகளிலும் பாஜகவினர் நாடு முழுக்க தெரிவித்து வரும் கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன.

தமிழக அளவில் பார்க்கப் போனால் பாஜகவின் முக்கியத் தலைவர்களான ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் சமீபகாலமாக தெரிவித்து வரும் சிறுபிள்ளைத்தனமான கருத்துகளும்கூட, அக்கட்சியின் மாநிலத் தலைமைக்கு கடுமையான தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவின் தமிழ் மாநிலச் செயலர் தமிழிசை சவுந்தரராஜன் இதற்கெல்லாம் தினமும் மன்னிப்பு கேட்பதற்கே அவருக்கு நேரம் சரியாகப் போகிறது.

“திரிபுரா மாநிலத்தில் ரஷ்யத் தலைவர் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதை போல தமிழகத்திலும் தந்தை பெரியார் சிலைகள் உடைக்கப்படும்” என்று ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார். மாநிலத்தில் வன்முறையை தூண்டும் வகையில் அவர் இட்டிருந்த இந்த கருத்து கட்சிகள் தாண்டி கடுமையான கண்டனங்களை பாஜகவுக்கு சம்பாதித்துக் கொடுத்தது. இதையடுத்து, அது தன்னுடைய கருத்து அல்ல.. தன்னுடைய ‘அட்மின்’ தனக்குத் தெரியாமல் பதிவிட்ட கருத்து என்றுகூறி சமாளித்தார்.

இந்த சர்ச்சையின் வீச்சு அடங்குவதற்குள்ளாகவே எதிர்க்கட்சி பெண் தலைவர் ஒருவர் குறித்து மிகவும் கீழ்த்தரமான, ஆபாசமான கருத்து ஒன்றை உதிர்த்து பல்வேறு தரப்பினர்களின் கண்டனங்களை பெற்று வருகிறார். பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டதாலேயே பெண் ஒருவரின் பிறப்பை சிறுமைப்படுத்தும் ராஜாவின் மனப்போக்குக்கு பாஜகவினர் மத்தியிலேயேகூட கடுமையான அதிருப்தியும், எதிர்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. முதல் சம்பவத்திலேயே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அவர் தொடர்ந்து இம்மாதிரி சர்ச்சைக்குரிய வகையில் பேசி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவாரா என்று வேதனையோடு கேட்கிறார்கள் பாஜக ஆதரவாளர்கள்.

ராஜாவின் மீது நடவடிக்கை எதுவுமில்லை என்பதாலேயோ என்னவோ, எஸ்.வி.சேகரும் தன் பங்குக்கு பாஜகவின் இமேஜை காலி செய்யும் திருப்பணியில் இறங்கியிருக்கிறார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவர் மிகவும் ஆபாசமாக தெரிவித்திருந்த கருத்து, நாடு முழுக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவெங்கும் இருந்து பத்திரிகையாளர் சங்கங்கள் எஸ்.வி.சேகரின் இந்த ஆபாசமான எண்ணத்துக்கு வன்மையான கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், அவருக்கு எதிராக போராடிய தமிழகப் பத்திரிகையாளர்களை கைது செய்து, அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான பிரிவுகளில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

தரக்குறைவான நடவடிக்கையில் ஈடுபட்டவரை விட்டுவிட்டு எங்கள் மீது வழக்கா என்று பத்திரிகையாளர்கள் நியாயம் கேட்கவே, இப்போது பதிலுக்கு எஸ்.வி.சேகர் மீதும் சில பிரிவுகளில் வழக்கு போட்டிருக்கிறார்கள்.

பிரதமரின் பேச்சையே அவரது கட்சியினர்கூட மதிக்காத நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. அப்படிப்பட்டவர்கள் மீது கட்சியேகூட ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19, குடிமக்களுக்கு தந்திருக்கும் 6 உரிமைகளில் கருத்துச் சுதந்திரமும் ஒன்று. கருத்துச் சுதந்திரம் என்றால், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதல்ல. அதற்குரிய சில வரையறைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவதூறாகப் பேசுதல், நாகரிகமில்லாத கருத்துகளை பொதுவெளியில் முன்வைத்தல் போன்றவை சட்டத்தை மீறக்கூடிய செயல்கள், அவற்றுக்காக நடவடிக்கை எடுக்கலாம் என்பதுதான் சட்டம். மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கியத் தலைவர்களே அவற்றையெல்லாம் மீறக்கூடிய காட்சிகளைதான் தமிழகத்தில் இப்போது காண்கிறோம். அவற்றுக்கெல்லாம் ‘அட்மின் தவறு’, ‘வன்மையான கண்டனங்கள்’ என்றெல்லாம் அக்கட்சியின் மாநிலத் தலைமை சப்பைக்கட்டு கட்டுகிறதே தவிர, மக்கள் எதிர்ப்பார்க்கும் உரிய நடவடிக்கை யார் மீதும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கே முன்பே திருவள்ளுவர் மக்களுக்கான பேச்சு நாகரிகத்தை கற்பித்திருக்கிறார்.

மேலும் –

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

என்றும் ஒருவரது உள்ளத் தூய்மையை அவருடைய பேச்சுதான் வெளிப்படுத்தும் என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்த இரண்டு திருக்குறளையும் ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் ஆயிரம் தடவை ‘இம்போசிஷன்’ எழுதவேண்டும் என்கிற குறைந்தபட்ச நடவடிக்கையையாவது பிரதமர் மோடி எடுத்தால், அவர் கட்சியினரிடம் காட்டும் வாய்மை கண்டிப்புக்கு ஓர் அர்த்தமாவது இருக்கும்.

(நன்றி : குங்குமம்)

தேரா மன்னா! செப்புவது உடையேன்!!

மூன்று மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த அந்த கொடுமையான சம்பவம் நாட்டையே உலுக்கியது.

அட்டப்பாடி அருகே உணவுப் பொருட்கள் அடிக்கடி திருடு போனதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

உள்ளூர் காட்டின் அருகில் அரிசி மூட்டையோடு மது என்கிற இளைஞரை பார்த்ததுமே அவர்தான் அரிசி திருடர் என்று கருதி பொதுமக்கள் அடித்து நொறுக்கி விட்டனர்.

காவல்துறை வந்து பார்த்தபோது அந்த இளைஞர் அநியாயமாக உயிரிழந்துவிட்டார்.

சற்றே மனநிலை பாதித்திருந்த பழங்குடி இன இளைஞர் அவர். பொதுமக்களின் கேள்விகளுக்கு கோர்வையாக பதில் சொல்ல முடியாததால், அவரை திருடர் என்று கருதி காட்டுத்தனமாக அடித்திருக்கிறார்கள்.

கேரள முதல்வரையே மிகக்கடுமையாக பாதித்த சம்பவம் இது.

“நாகரிக சமுதாயத்தில் இப்படிப்பட்ட கொடுஞ்செயல்கள் எப்படி நடக்கிறது? கேரளாவுக்கே இந்தச் சம்பவம் இழுக்காகி விட்டதே?” என்று வேதனைப்பட்டார்.

மதுவை மக்கள் அடித்தது செல்போனில் வீடியோ காட்சியாக எடுக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதாலேயே பெரும் விவாதமாக எழுந்தது. தினமும் தவறாக கருதப்பட்டு பாதிப்புக்குள்ளாகும் மதுக்கள் எத்தனை எத்தனை பேரோ?

கடந்த வாரம் கூட ஒரே நாளில் இரண்டு செய்திகள்.

வேலூர் மாவட்டத்தில் ‘தீரன் : அதிகாரம் ஒன்று’ படத்தில் வருவதை போல வடமாநில குற்றப் பின்னணி கும்பல் ஒன்று ஊடுருவியிருப்பதாக வதந்தி பரவியது. போலீஸார் இதை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் ‘வாட்ஸப்’, ‘ஃபேஸ்புக்’ போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களே இப்படியொரு வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். அந்த கும்பல் நகை, பணம் திருடுவது மட்டுமின்றி வீட்டிலிருக்கும் குழந்தைகளையும் கடத்திக்கொண்டு போய்விடுவதாக கூடுதல் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் குடியாத்தம் பகுதியில் சுண்ணாம்புப் பேட்டை வழியாக முப்பது வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் நடந்துச் சென்றிருக்கிறார். அவரிடம் சிலர் பேச்சு கொடுத்துப் பார்த்திருக்கிறார்கள். தமிழ் புரியாததால் அவர் திருதிருவென முழிக்க தர்ம அடி போட்டிருக்கிறார்கள். போலிஸார் வந்து அவரை காப்பாற்றி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அடுத்த நாள் அதே வாலிபர் மீண்டும் பரசுராமன்பட்டி என்கிற பகுதியில் பொதுமக்களிடம் மாட்டியிருக்கிறார். “இவன் குழந்தை திருடன். கொள்ளை கும்பலை சார்ந்தவன்” என்று யாரோ கூக்குரலிட கூட்டம் சேர்ந்து மீண்டும் தர்ம அடி போட்டிருக்கிறது.

குடியாத்தம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிந்து மீண்டும் வந்து அவரை காப்பாற்றியிருக்கிறார்கள். படுகாயம் அடைந்த நிலையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் அந்த இளைஞர்.

வடமாநிலத்தில் இருந்து ரயிலில் வந்த அந்த இளைஞர் தவறுதலாக குடியாத்தத்தில் இறங்கி, டவுன் சுற்று வட்டாரத்தில் மொழி தெரியாமல் வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த தகவல் மட்டுமே போலீசுக்கு தெரிந்திருக்கிறது. அவர் பெயர் என்ன, ஊர் என்ன மனநலம் பாதிக்கப்பட்டவரா என்று வேறெந்த தகவலும் தெரியவில்லை.

இதை போலவே திருவள்ளூர் அருகே கொசவன்பாளையம் கிராமத்தில் ஒரு சம்பவம்.

நிஷாந்த் என்கிற சிறுவனுக்கு பிஸ்கட் கொடுத்து மூன்று பெண்கள் அழைத்ததாக தகவல். அந்த மூன்று பெண்களையும் பொதுமக்கள் துரத்த, அவர்களில் ஒருவர் மட்டும் மாட்டினார். கூடிவிட்ட கும்பல் என்ன ஏதுவென்று விசாரிப்பதற்கு முன்பு அடி போடுவதுதானே வழக்கம்?

அதேதான் இங்கேயும் நடந்திருக்கிறது. தகவலறிந்த போலீஸார் அந்தப் பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அடி கொடுத்த பொதுமக்கள், சுமார் 200 பேர் திடீரென மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

போலீஸ் விசாரித்ததில் அந்த பெண்ணின் பெயர் மாரியம்மாள். ஐம்பத்து இரண்டு வயதான அவர் கிராமங்களில் ஜோசியம் பார்ப்பது, சுருக்குப்பை விற்பது என்று பணி. அம்மாதிரி கொசவன்பாளையத்துக்கு வந்திருந்த போதுதான் ‘குழந்தை திருடி’ என்று பொதுமக்களாக கருதிக்கொண்டு அடித்திருக்கிறார்கள்.

சமீபகாலமாகவே பொதுமக்கள் மிகவும் கொந்தளிப்பான ஒரு மனநிலையில் இருப்பதாக தோன்றுகிறது. வன்முறை செய்ய வாய்ப்பு கிடைத்தால், விளைவுகளை பற்றி கவலைப்படாமல் களமிறங்கி விடுகிறார்கள். இவர்களது உள்ளத்தில் நஞ்சை விதைக்கும் வகையிலேயே சில கட்சியினரும், அமைப்புகளும்கூட செயல்படுகின்றனர்.

அர்த்தமற்ற போராட்டங்களும், அதைத் தொடர்ந்து நடக்கும் வன்முறை சம்பவங்களும் ‘ஹீரோயிஸம்’ என்று கட்டமைக்கப்படுகின்றன. சிறு அளவில் நடக்கக்கூடிய கும்பல் வன்முறைகள் கூட செல்போனில் வீடியோவாக எடுக்கப்பட்டு வாட்ஸப், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பகிரப்படுவதும், அவற்றை பல்லாயிரம் பேர் பார்ப்பதுமான போக்கு அதிகரித்து வருகிறது. சட்டத்தின் மீதான மரியாதையும், நியாயமாக இருக்க வேண்டிய குறைந்தபட்ச அச்சமும் அகன்று வருகிறது.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் சரிவர விசாரிக்காமல் கோவலனை திருடன் என்றுகூறி கொல்கிறான். கண்ணகியின் கோபம், மதுரையை எரித்தது. தமிழர் காப்பியம் விடுக்கும் இந்த எச்சரிக்கையை, நாம் என்றும் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும். அவசரப்படுபவர்களுக்கும், ஆத்திரப்படுபவர்களுக்கும் அழிவு மட்டுமே நிரந்தரம்.

(நன்றி : குங்குமம்)