14 ஆகஸ்ட், 2018

ஞாயிறு போற்றுதும்

தலைவர்கள் பிறப்பதில்லை. காலம்தான் அவர்களை உருவாக்குகிறது. ஒரு சமூகத்தின் சூழலும், தேவையுமே தங்களில் ஒருவரைத் தலைவராக  உயர்த்துகிறது. குடிமையியலின் இந்தக் கோட்பாட்டை உடைத்தெறிந்து தலைவராக உருவெடுத்தவர் டாக்டர் கலைஞர். பிறக்கும்போதே அவர்  தலைவர்தான். தலைவருக்குரிய தலைமைப் பண்புகள் அவரிடம் இளம் பிராயத்திலேயே காணப்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபோது  கலைஞரின் வயது 25. அடுத்த இருபதாண்டுகளில் இளைஞர்கள் நிறைந்த இந்த இயக்கத்தை அவர்தான் தலைமையேற்று, அரைநூற்றாண்டுக்  காலத்துக்கு நடத்தப் போகிறார் என்று யாராவது ஜோசியம் சொல்லியிருந்தால் கலைஞரே கூட நம்பியிருக்க மாட்டார்.

ஜோசியத்தில் அவருக்கு நம்பிக்கையில்லை என்பது வேறு விஷயம். உலகிலேயே வேறெங்கும் காமுடியாத அதிசயமாக, எழுபது ஆண்டுகளாக ஒரு  பிராந்திய இயக்கம் மக்கள் செல்வாக்கில் வலிமை யானதாக, இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ஏற்றங்களிலும், கொள்கை  முடிவுகளிலும் பங்களிக்கக்கூடியதாக இருக்கிறதென்றால், அதில் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் கால கலைஞரின் தலைமையின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.கடந்த நூற்றாண்டின் மத்தியில் ஏராளமான சாமானியர்கள் தலைவர்களாக உயர்ந்திருக்கிறார்கள் என்றாலும்,  கலைஞர் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்.

அவர் நிரம்பப் படித்த பட்டதாரி அல்ல. அவரை தலைவராக உயர்த்தக்கூடிய பெரும் எண்ணிக்கை மிகுந்த சமூகப் பின்னணியும் கொண்டவரல்ல.  சினிமாவில் ஜொலித்து, அதன் மூலம் மக்கள் அபிமானத்தைப் பெற்றவரும் அல்ல. அரசியல் / சமூக செயற்பாட்டாளராக அவர் பெற்றிருந்த  புகழைத்தான், தான் பொருள் ஈட்ட பயன்படுத்திய சினிமாவுக்கும் பயன்படுத்தினாரே தவிர, சினிமா புகழ் அவருடைய முன்னேற்றத்துக்கான  மூலதனமாக எப்போதும் இருந்ததில்லை. மேலும், சினிமாவை, தான் ஏற்றுக் கொண்ட இயக்கத்தை வலுப்படுத்தவும், இயக்கத்தின் கொள்கைகளைப்  பிரசாரம் செய்யவும் வலிமையான ஊடகமாகத்தான் கையாண்டார்.

செயல் மட்டுமே அவரது அத்தனை வளர்ச்சிகளுக்கும் காரணம். பலனை எதிர்பாராது, ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக அல்லும் பகலும் உழைத்துக்  கொண்டிருப்பது மட்டுமே அவர் அறிந்த ஒரே முன்னேற்ற யுக்தி. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு கலைஞரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தோமானால்,  உழைப்பு மட்டுமே அவரை மகத்தான ஓர் இயக்கத்தின் தலைவராகவும், மாநிலத்தை ஆளும் முதல்வராகவும், நாட்டின் பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய உயரிய பொறுப்பு களுக்கும் உயர்த்தியது என்பதை உணரலாம்.அவருடைய தீந்தமிழ் எழுத்தாற்றலும், பேச்சாற்றலும், லட்சக்கணக்கான  தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் அமைப்பாற்றலும் அவருடைய உழைப்புக்கு உதவும் ஆயுதங்களே தவிர.. அவை மட்டுமே அவருடைய  மகத்தான சாதனைகளுக்குக் காரணமல்ல. எனவேதான், ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்று தன்னுடைய கல்லறை வாசகத்தை அவரே எழுதினார்.

துள்ளித் திரிந்ததொரு காலம்

திருவாரூர் நகரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் திருக்குவளை என்கிறகிராமத்தில்தான், எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் கலைஞர்  1924, ஜூன் 3-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் முத்துவேலர். தாயார் அஞ்சுகம் அம்மாள்.முத்துவேலர் பழுத்த ஆத்திகர். நெற்றியில் திருநீறு  இல்லாமல் அவரைக் காணவே முடியாது. அந்த கிராம மக்களுக்கு ஏற்படும் சிறிய உடல்நலக் குறைவுகளையெல்லாம் மந்திரித்தே குணப்படுத்துவார்  என்பார்கள். தந்தையைப் போலவேதான் தனயனும் சிறுவயதில் இருந்தார். திருநீறுக்கு மத்தியில் அழகாக குங்குமப்பொட்டு வைத்து காட்சியளிப்பார்  குழந்தை கலைஞர். கோயிலிலிருந்து ரிஷப வாகனம் உலா வருவதைக் கண்ட கலைஞர், அதுபோன்ற ஒரு வாகனத்தைச் செய்து தன் நண்பர்களைக்
கூட்டிவைத்து  வீட்டிலேயே உற்சவம் நடத்துவார்.

திருக்குவளை சிவன் கோயில், திருக்குளம், முனீசுவரன் கோயில், அய்யனார் கோயில் இங்கெல்லாம் நடைபெறும் உற்சவங்கள் மற்றும் விழாக்கள்  கலைஞரை உற்சாகப்படுத்தும். கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் சிறுவர் கலைஞருக்கு ஆர்வமிருந்தது.முத்துவேலருக்கு  தன்னுடைய ஒரே மகன், கலை மற்றும் கல்வியில் கரைசேர வேண்டுமென்ற பெரும் விருப்பம் இருந்தது.  கலைஞர், திருக்குவளையில் இருந்து ஐந்து  கி.மீ. தூரம் நடந்து பேருந்து ஏறி திருவாரூருக்குச் சென்று அங்கிருந்த உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்க வேண்டியிருந்தது. மகனுடைய  சிரமங்களைக் கருத்தில் கொண்டுதான் குடும்பத்தையே திருவாரூருக்கு இடம்பெயர வைத்தார் முத்துவேலர். கல்வியோடு இசை பயிலும்  ஏற்பாட்டையும் முத்துவேலர் செய்தார்.

சமத்துவச் சிந்தனை பிறந்தது

கலைஞருக்கு இசையில் பெரும் ஈடுபாடு உண்டு. எனினும், இசை பயில மறுத்து, தந்தையாரையே எதிர்த்து போராட்டம் நடத்தினார். அதற்குக்  காரணம், அக்காலத்தில் இசைக்கலைஞர்கள் மேடையில் மேலாடை அணியக்கூடாது, இடுப்பைச் சுற்றி துண்டு கட்டிக் கொண்டிருக்க வேண்டும்,  காலில் செருப்பு அணியக்கூடாது என்கிற சம்பிரதாயங்கள் இருந்தன. ஏனெனில், இசையை ரசிப்பவர்கள் பெரும் பண்ணையார்களாக விளங்கினார்கள்.  ‘கலைஞர் என்போர் பண்ணையார்களுக்கு அடிமைகள் அல்ல, எல்லோரும் சமம்’ என்கிற சமத்துவ எண்ணம் கலைஞருக்குப் பிறந்ததாலேயே, துண்டு  கட்டிக் கொண்டு, மேலாடையின்றி, காலில் செருப்பு அணியாமல் கச்சேரி செய்யும் வழக்கம் இந்த கருணாநிதிக்குக் கிடையாது என்றுகூறி இசை பயில  மறுத்தார். ‘தான் அடிமை அல்ல’ என்று தந்தையாரிடம் வாதிட்டார்.

திருவாரூர் பள்ளியில் அவருக்குக் கிடைத்த சமூகச் சிந்தனைகளும், கேள்வியின்றி மரபை ஏற்றுக்கொள்ளும் வழக்கத்தை எதிர்க்கக்கூடிய  மனப்பான்மையை அவருக்குத் தோற்றுவித்தது. தந்தை பெரியார் அப்போது பேசிக்கொண்டிருந்த சமூகக் கருத்துகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டார்.  திராவிட இயக்கக் கவிஞரான பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பேச்சுகளும் அவருக்குள் கனலை மூட்டிக் கொண்டிருந்தன.திருவாரூரில் ஒரு முறை  ஆவேசமாக பட்டுக்கோட்டை அழகிரி பேசிக்கொண்டிருந்தார். காசநோயாளியான அவர் பேச்சுக்கு இடையே திடீரென மயங்கி விழுந்தார். கூட்டத்தின்  மத்தியில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவனான கலைஞர், “நோயாளியான நீங்கள், இவ்வளவு சிரமப்படலாமா?” என்று கண்ணீரோடு  கேட்டார்.அதற்கு அழகிரி, “என் நோயைவிட இந்த நாட்டைப் பீடித்திருக்கும் நோய் கடுமையானது. அதைச் சரிப்படுத்தத்தான் நாம் உழைக்க  வேண்டும்...” என்று பதிலளித்தார். கலைஞர், தன்னை முழுமையாக சமூகத்துக்கு ஒப்புக்கொடுக்க, அழகிரி அன்று கொடுத்த பதில்தான் பிரதான  காரணம்.

கம்யூனிஸமும், கலைஞரும்

மாணவப் பருவத்தில் தன் சக மாணவர்களோடு இணைந்து ‘மாணவர் மன்றம்’ உருவாக்கி, சமுதாய விழிப்புணர்ச்சி விவாதங்களை அடிக்கடி நடத்திக்  கொண்டிருப்பார் கலைஞர். தங்களுடைய எண்ணங்களை வெளியிட ஏடு ஒன்று தேவை என்பதை உணர்ந்து, ‘மாணவ நேசன்’ என்கிற கையெழுத்துப்  பத்திரிகையை கலைஞர் தொடங்கினார். ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டு உலகெங்கும் கம்யூனிஸத் தாக்கம் உருவாகி வந்த காலம் அது. இந்திய  கம்யூனிஸ்டு இயக்கம், மாணவர்களை ஒருங்கிணைத்து ‘மாணவ சம்மேளனம்’ என்கிற இயக்கத்தைக் கட்டமைத்துக் கொண்டிருந்தது.திருவாரூரில்  மாணவர்களின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த கலைஞரை அந்த அமைப்புக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் வெற்றி பெற்றனர். மாணவ சம்மேளத்தினர்  ‘தமிழ் வாழ்க’ கோஷத்தோடு, ‘இந்தி வளர்க’ என்றும் கோஷம் எழுப்பியது கலைஞருக்கு கருத்து மாறுபாட்டை ஏற்படுத்தியது.

எனவே, திருவாரூர் மாணவ சம்மேளனத்தைக் கலைத்துவிட்டு, ‘தமிழ் மாணவர் மன்றம்’ என்கிற புதிய அமைப்பினை உருவாக்கினார். இந்த புதிய  அமைப்பு, பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியது. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளிலிருந்து  தொடக்க காலத்திலேயே விலகி நின்றாலும் அவருக்குள் பொதுவுடைமைச் சிந்தனை இருந்துகொண்டேதான் இருந்தது. எனவேதான்,  பின்னாளில்  ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்’ என்று கலைஞர் பகிரங்கமாகவே அறிவித்தார்.

முரசொலி

‘தமிழ் மாணவர் மன்றம்’, திருவாரூரில் நிகழ்த்திய பல்வேறு நிகழ்வுகளுக்கு அன்பழகன், மதியழகன் போன்ற அந்தக்கால மாணவர் தலைவர்களை  அழைத்துப் பேசச் செய்தார் கலைஞர். இதற்கான செலவு களுக்கு வீட்டில் இருந்து சங்கிலி, வெள்ளிக் கிண்ணம் போன்றவற்றை வீட்டாருக்குத்  தெரியாமல் அடகு வைப்பார். இந்தித் திணிப்பை எதிர்க்க பெரியார், மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக் கொண்டு இந்தி எதிர்ப்பு  ஊர்வலங்களில் கலைஞர் தீவிரமாகப் பங்கு பெற்றார். ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த தன்னுடைய பள்ளி ஆசிரியரிடமே இந்தி  எதிர்ப்புக் கொடியைத் திணித்து, தன் எதிர்ப்பை வலிமையாகப் பறைசாற்றினார். மறுநாள் இந்தி வகுப்பில், இந்தி படிக்க மாட்டேன் என்று சொல்லி  அதே ஆசிரியரிடம் அறையும் வாங்கினார்.

இந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார், மணவை திருமலைச்சாமி, மூவலூர் ராமாமிருதம் அம்மையார், பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா  உள்ளிட்டோரின் இந்தி எதிர்ப்புப் பேச்சுகள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்த சமூக  உணர்வலையில் நீந்திக் கரையேறியவர்களில் தலையானவர் கலைஞர். இந்தி எதிர்ப்பு மட்டுமின்றி, மக்களிடையே நிலவி வந்த மூடநம்பிக்கைகள்,  சமூக ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றைப் பற்றி மேடைகளில் அருமையான தமிழ்நடையில் பேசத் தொடங்கினார். தான் நடத்திய கையெழுத்துப்  பிரதியில் எழுதினார்.“ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலேதேரோட்டம் ஏன் உனக்கு தியாகராசா?”என்று திருவாரூர் தேரோட்டத்தை  நோக்கிய கேள்வியோடு கூடிய புகழ் பெற்ற வாசகத்தை கலைஞர் எழுதியது அப்போதுதான்.

‘திராவிட நாடு’ இதழுக்கு அவர் எழுதிய ‘இளமைப் பலி’ என்கிற கட்டுரையின் காரணமாக அறிஞர் அண்ணா இவரது தமிழாற்றலை உணர்ந்தார்.  எனினும், பள்ளி மாணவன் முழுமையாகத் தன்னை இயக்கப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு, படிப்பை கோட்டைவிடுவதை அண்ணா  விரும்பவில்லை. அதனால்தான் தொடர்ந்து கலைஞர் அனுப்பிய கட்டுரைகளை அவர், ‘திராவிட நாடு’ இதழில் வெளியிடவில்லை. எனவே, தன் எழுத்துக்கென்றே பிரத்யேகமான ஊடகம் தேவை என்பதை உணர்ந்த கலைஞர், ‘முரசொலி’ என்கிற பெயரில், தான் நடத்தி வந்த ‘மாணவ  நேசன்’ கையெழுத்துப் பத்திரிகையைத் துண்டுப் பிரசுரமாக, மாத இதழாக மாற்றினார். ஒருங்கிணைந்த தஞ்சை முழுக்க கருணாநிதி என்கிற பெயர்  பிரபலமாக, ‘முரசொலி’யே முதல் காரணம்.

ஈரோட்டு குருகுலம்

பாண்டிச்சேரியில் திராவிடர் கழக மாநாடு ஒன்று நடந்தது. இதில் குழப்பம் விளைவிக்க ஏராளமானோர் காத்திருந்தார்கள். பாரதிதாசனோடு சாலையில்  நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கலைஞர் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் பாரதிதாசன் தப்பிக்க, கலைஞரின் கதி என்னஆனது என்றே யாருக்கும் தெரியவில்லை. ‘கலைஞரைக் காணோம்’ என்றதுமே பெரியார் இடிந்து போனார். விடியற்காலையில் இஸ்லாமியரைப்  போன்று தலையில் குல்லா, கைலி மாறுவேடத்தில் கலைஞர் வந்து சேர்ந்தபோது கண்ணீரோடு அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார் பெரியார்.  தாக்குதலில் கலைஞருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தன் கையாலேயே மருந்திட்டார் பெரியார். அப்போதே கலைஞரை, ‘குடியரசு’ இதழின் உதவி  ஆசிரியராக பணிக்கு சேர்த்துக் கொண்டு ஈரோட்டுக்கு அழைத்துச் சென்றார். ‘குடியரசு’ பத்திரிகையில் பெரியாரின் நேரடிப் பார்வையில்  பணிபுரிந்தபோதுதான் பல்வேறு தலைவர்களுடனான அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அவருடைய எழுத்தாற்றலை தமிழகம் உணர, சினிமாவில்  வசனம் எழுதக்கூடிய வாய்ப்பும் கலைஞருக்குக் கிடைத்தது. பெரியாரும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

கலையுலகில் கலைஞர்

‘ராஜகுமாரி’, கலைஞருக்கான ராஜபாட்டையை சினிமா உலகில் ஏற்படுத்தியது. தொடர்ந்து ‘மருதநாட்டு இளவரசி’, ‘மந்திரிகுமாரி’ என்று பயணித்த  அவரது சினிமாப்பயணம் ‘பராசக்தி’யில் உச்சத்தை எட்டியது. 1947ல் ‘ராஜகுமாரி’ மூலமாக சினிமாவுக்கு வந்த கலைஞர், 2011ல் ‘பொன்னர் சங்கர்’  வரை 64 ஆண்டுகளில் எண்ணற்ற படங்களில் எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று தன்னுடைய அபரிமிதமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். சினிமா  மட்டுமின்றி ‘மந்திரி குமாரி’, ‘தூக்குமேடை’என்று அவரது நாடகங்களும் பிரபலம். சினிமா, நாடகம் மட்டுமின்றி கவிதை, கடிதங்கள், சிறுகதைகள்,  நாவல்கள் என்றும் அவரது பன்முக பங்களிப்புகள் தமிழ் பேசும் பேருலகுக்குக் கிடைத்தன. ‘குறளோவியம்’, ‘சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பியப் பூங்கா’, ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘ரோமாபுரி பாண்டியன்’, ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட  நூல்களை தொடர்ச்சியாக எழுதி யிருக்கிறார். அயராத அரசியல் பணிகளுக்கு இடையே கலை, இலக்கியம்தான் தன்னை ஓய்வெடுக்க வைக்கிறது  என்று அந்த கடுமையான உழைப்பையும் ‘ஓய்வு’ என்று குறிப்பிடுகிறார் கலைஞர்.

சட்டமன்றத்தில் கலைஞர்

திராவிடர் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியபோது அறிஞர் அண்ணாவின் தளகர்த்தர்களில் ஒருவராகத் தன்னை  அடையாளப் படுத்திக் கொண்டார் கலைஞர். 1953ல் திமுக அறிவித்திருந்த மும்முனைப் போராட்டம், கலைஞரின் போர்க்குணத்தை தமிழகத்துக்குப்  பறைசாற்றியது. மும்முனைப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடந்த கல்லக்குடி போராட்டத்தில் ரயில் தண்ட வாளத்தில் தலைவைத்துப் படுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் கலைஞர். இளைஞர்கள் அவர் பின்னால் திரள, இந்தப் போராட்டமே முதல் காரணம்.1957ல் முதன் முறையாக  திமுக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது திருச்சி மாவட்டம் குளித்தலையில் போட்டியிட்டு வென்றார் கலைஞர். அந்தத் தேர்தலில் 112  தொகுதிகளில் போட்டியிட்ட திமுகவுக்கு சுயேச்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போல வெவ்வேறு சின்னங்கள்தான் வழங்கப்பட்டன.  கலைஞருக்கு அப்போதே கிடைத்த சுயேச்சை சின்னம்தான் ‘உதயசூரியன்’. பின்னர் திமுக அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகும், அதே  சின்னத்தில்தான் இன்றுவரை போட்டியிடுகிறது. 1957ல் குளித்தலை, 1962ல் தஞ்சாவூர், 1967 மற்றும் 1971ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991ல் துமுகம், 1996, 2001 மற்றும் 2006ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016ல் திருவாரூர் என்று அறுபது ஆண்டு களுக்கும் மேலாக தமிழக சட்டமன்றத்தில்  உறுப்பினராக மகத்தான ஜனநாயகப் பங்களிப்பைத் தந்திருக்கிறார் கலைஞர். இந்தியாவிலேயே வேறு எவரும் இவ்வளவு நீண்டகால மக்கள் மன்ற  சேவையைச் செய்ததில்லை.

முதல்வர் கலைஞர்

1967ல் திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்கு கழகத்தின் பொருளாளராக இருந்த கலைஞரின் புயல்வேகப் பணிகள் பெரும் காரணமாக இருந்தன.  அறிஞர் அண்ணாவே கூட, “தம்பி, உனக்கு ‘நிதி’ என்று தந்தையும் தாயும் சும்மாவா பெயரிட்டார்கள்?” என்று விளையாட்டாக அவரைப் புகழ்ந்தார்.பத்து  லட்சம் தேர்தல் நிதியென்று நிர்ணயித்து, பதினோரு லட்சமாக சேர்த்துத் தந்த பொருளாளர் என்றால் சும்மாவா?ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டில்  உடல்நலக்குறைவு காரணமாக அறிஞர் அண்ணா திடீரென மறைவுற்றார். அப்போது முன்னணித் தலைவர்களையும் தாண்டி இயக்கத்தை நடத்தக்கூடிய  வலிமை கொண்டவராக கலைஞரை கட்சியினர் தேர்வு செய்து, அவரை முதல்வராகவும் ஆக்கினார்கள். நாற்பத்திஐந்து வயதிலேயே முதல்வராகி  கலைஞர், தமிழகத்துக்குச் செய்த சாதனைகள் அளப்பரியவை.

சாதனை நாயகன்

போக்குவரத்தை தேசிய மயமாக்கியது, அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், குடிநீர் வடிகால் வாரியம், குடிசை மாற்று வாரியம், கண் சிகிச்சை  முகாம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம், கைரிக்‌ஷா ஒழிப்பு, இந்தியாவிலேயே முதன் முறையாக காவல்துறை ஆணையம், பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு தனித்துறை, விவசாயக் கல்லூரி, அரசு ஊழியர்கள் குடும்ப நலத் திட்டம், நிலவிற்பனை வரையறை, சிட்கோ மற்றும்  சிப்காட் தொழிற்பேட்டைகள், இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஆசியாவிலேயே முதன்முறையாக கால்நடை  மற்றும் விலங்குகள் பல்கலைக்கழகம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம், விதவைப் பெண்களுக்கு  மறுமண உதவித்திட்டம், பெண்கள் சுய உதவிக்குழு, கிராமந்தோறும் கான்கிரீட் சாலைகள், இந்தியாவின் தெற்கு எல்லையாக திருவள்ளுவர் சிலை,  தமிழுக்கு செம்மொழி மாநாடு, எல்லோருக்கும் கலர் டிவி, பல்கலைக்கழகங்கள்... என்று ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட கலைஞரின் எண்ணிலடங்கா  மக்கள் சேவைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தபோதும் சரி, அவரது இதயம் தமிழர்களுக்காகவே துடித்துக் கொண்டிருந்தது. ஒரு  தெருவுக்கோ, மேம்பாலத்துக்கோ பெயர் வைப்பதிலும்கூட அவருக்கு கட்சி மற்றும் மாநில நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கம்  இயல்பாகவே இருந்தது.கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக கலைஞரின் பெயர் இடம்பெறாத செய்தித்தாள்களே தமிழகத்தில் இல்லை எனலாம்.  இனி, தமிழக வரலாற்றை எழுதும் எவருமே கலைஞரின் பெயரைத் தவிர்க்கவே முடியாது என்பதுதான் அவரது சாதனைகளுக்கெல்லாம் மகுடம்.

(நன்றி : குங்குமம்)

9 ஆகஸ்ட், 2018

திரும்பிப் பார்க்காதே! முன்னால் பார்!!

சீனாவில் ஹூஹான் என்றொரு நகரம். இங்கே சீற்றத்துக்கு பேர் போன மஞ்சளாறு சுழித்துக்கொண்டு ஓடும். நம்மூரில் ஜல்லிக்கட்டு போல, ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஆற்றில் இளைஞர்கள் குதித்து ஆற்றின் போக்கை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவது வீர மரபாக அங்கே பின்பற்றப்பட்டு வருகிறது.ஜூலை 16, 1966.சீன மக்கள் குடியரசின் தலைவர் மாவோ, ஹூஹான் நகருக்கு வருகை தந்தார். அந்த எதிர்நீச்சல் திருவிழாவைத் தொடங்கி வைத்தவர், திடீரென தானும் ஆற்றில் குதித்தார். சீறிக்கொண்டு வந்த நீரோட்டத்தில் மாவோவும் எதிர்நீச்சல் போட ஆரம்பிக்க, வேறு வழியின்றி அவரது பாதுகாவலர்களும் நீரில் குதித்து, கரையேறச் சொல்லி அவரை வற்புறுத்தினார்கள்.ஆனால், மாவோவோ, மற்ற சீன இளைஞர்களுக்குப் போட்டியாக சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு நீந்தினார். அப்போது அவரது வயது 73 என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுக்க மாவோவின் இந்த எதிர்நீச்சல் பிரபலமானது. இந்த சாதனையை தன் அரசியலுக்கும் அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. அப்போது அவர்மீது சுமத்தப்பட்டிருந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த சாதனை எதிர்நீச்சலின் காரணமாகத் தவிடு பொடியானது. கடுமையான அரசியல் நெருக்கடி நேரத்தில் எல்லாம் ‘நீச்சல்’தான் மாவோவைக் கரையேற்றியது. “சிறுவயதிலேயே என்னுடைய அப்பா எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தார். நீந்தும்போதுதான் எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு காணக்கூடிய சிந்தனைகள் எனக்கு ஏற்படுகிறது...” என்றார் மாவோ.

அவருடைய புரட்சிகர சிந்தனைகளில் பெரும் பகுதி, அவருடைய நீச்சலின்போது தோன்றியவையே. மாவோவின் இறுதிக் காலத்தில், “மாவோவின் அத்தியாயம் முடிந்தது. இனி அவரால் நடக்கக்கூட முடியாது...” என்று மேற்கத்திய ஊடகங்கள் எழுதிக் கொண்டிருந்தன.எழுந்து நடமாடியதோடு மட்டுமின்றி, அதே மஞ்சளாற்றை இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திக் கடந்து சீன மக்களுக்கு தன்னுடைய மன வலிமையைப் பறைசாற்றினார் மாவோ. 82 வயதில் இத்தகைய அரிய சாதனையைச் செய்தார்!உலகின் மகத்தான தலைவர்கள் அனைவருக்குமே இந்த ‘Never Ever Give Up’ என்கிற மனோபாவம் இருக்கும். எத்தகைய நெருக்கடியும் தங்களைச் சாய்த்து

விடாமல், வெற்றி தோல்வியைக் கருத்தில் கொள்ளாமல் எதிர்த்து நின்று போராடுவார்கள்.
மாவோவைப் போன்ற ஓர் எதிர்நீச்சல் நாயகன், நம்மூரிலும் உண்டு. மாவோவின் புகழ்பெற்ற அந்த 1966 நீச்சலுக்கு, முப்பதாண்டுகள் முன்னதாகவே தன்னுடைய டீன் ஏஜில் இப்படியொரு நீச்சல் சாதனை நிகழ்த்தியவர், வேறு யாருமல்ல,திமுக தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக வாழும் கலைஞர், காலம் முழுக்கவே ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஓயாமல் போராடிக் கொண்டிருப்பவர். அவருக்கு பிரியமான கலை, இலக்கியப் பணிகளில் அவரை முழுமையாக ஈடுபடவைக்க இடம் கொடுக்காமல், அரசியல் மற்றும் சமூகப் பணிகள் அவரது அசுர உழைப்பை கோரிக்கொண்டேதான் இருக்கின்றன.

ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் 100 சதவிகித உழைப்பை மக்களுக்குக் கொடுக்கிறார் என்றால், எதிர்க்கட்சி வரிசையில் அமரும் போதெல்லாம் 200 சதவிகித உழைப்பைக் கொடுத்தாக வேண்டிய நெருக்கடியை தனக்குத் தானே அவர் ஏற்படுத்திக் கொள்வார். தூங்கும்போதும் கூட அவரது மூளை கட்சி நலனையும், மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளையும்தான் சிந்தித்துக் கொண்டிருக்கும்.

 கலைஞரை நோக்கி ஒரு முறை அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் கேட்டார்.‘ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகளாக உழைத்துக்கொண்டே இருக்கிறீர்களே, இவற்றையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் மனசை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய பணிகளில் ஈடுபடலாமே என்று எப்போதுமே தோன்றியதில்லையா?’அந்தப் பத்திரிகையாளருக்கு கலைஞர் சொன்ன பதில்தான், அவருடைய சிறுவயது எதிர்நீச்சல் கதை.

“பள்ளிப் பருவத்தில், நானும் என்னுடைய உயிர்த் தோழனுமான தென்னனும் எப்போதும் திருவாரூரின் மிகப்பெரிய கோயில் குளமான கமலாலயத்தில் நீந்திக் களித்துக் கொண்டிருப்போம்.ஒரு நாள் இருவருக்கும் அந்தக் குளத்தின் மைய மண்டபத்துக்கு நீந்திச்செல்ல வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. கோயில் குளங்களிலேயே மிகப்பெரியது கமலாலயம்தான். நீந்திக் கடக்க முடியுமா என்கிற சந்தேகம் இருந்தாலும், இருவரும் ஒரு வேகத்தில் நீந்த ஆரம்பித்து விட்டோம்.பாதி தூரத்துக்கும் மேலாக நீந்திவிட்டோம். இருவருக்கும் மூச்சு இரைக்கிறது. தென்னன், பயந்துப் போனான். நானும்தான். ‘திரும்பிவிடலாம் கருணாநிதி’ என்றான்.

மனசுக்குள் அச்சமிருந்தாலும், தென்னனுக்கு தைரியம் அளிக்கும் விதமாக நான் சொன்னேன். ‘தென்னா, இதுவரை முக்கால் பங்கு நீந்திவிட்டோம். மையத்துக்குச் செல்வதென்றால் இன்னும் கால் பங்குதான். திரும்புவதென்றால் இன்னும் அதிக தூரம் நீந்த வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ ஓர் இலக்கை நிர்ணயித்து விட்டோம். அதை எட்டுவோம், வா’ என்று அழைத்தேன்.அதன்படியே மைய மண்டபத்தை அடைந்தோம். சில நிமிடங்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் உற்சாகமாகக் கரைநோக்கி நீந்த ஆரம்பித்தோம். எங்கள் இலக்கை எட்டிய மகிழ்ச்சியின் காரணமாக, திரும்ப வரும்போது எங்களுக்கு அலுப்பே இல்லை.

அன்றைய சிறுவன் கருணாநிதிக்கு இருந்த அதே போர்க்குணம், இன்றும் எனக்கு இருக்கிறது. முன் வைத்த காலை நான் என்றுமே பின் வைக்க விரும்புவதில்லை. அரசியல் துறையை விரும்பித்தான் தேர்ந்தெடுத்தேன்.எல்லாப் பாதையிலுமே குளிர் சோலையும் இருக்கும், சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டு பயந்து திரும்புபவன் குளிர் சோலையின் இன்பத்தை எட்டுவதே இல்லை...” என்று சொன்னார் கலைஞர்.

கலைஞரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய அடிப்படைப் பண்பு இதுதான்.

“திரும்பிப் பார்க்காதே! முன்னால் பார்!!”
(நன்றி : குங்குமம்)

16 ஜூலை, 2018

உலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்!

“பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்றும் உயரதிகாரிகள் அணுவகுப்பை பார்வையிட்டபோது, ஏகப்பட்ட தொப்பைகளை கண்ட அதிர்ச்சியில் இத்தகைய கண்டிப்பினை அவர் காட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சட்டென்று வாசித்தால் சிரிக்கக்கூடத் தோன்றும். என்னவோ போலீஸ்காரர்களுக்கு மட்டுமே தொப்பை இருப்பதாக நமக்கெல்லாம் எண்ணம். சாலையில் நடக்கும்போது தொப்பையோடு (பெண்களையும் சேர்த்துதான்) நடக்கமுடியாமல் நடந்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் என்று சும்மா கணக்கெடுத்துப் பாருங்களேன். அதற்காக ரொம்ப உற்றுப் பார்த்து பட்டவர்த்தனமாக மாட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் கணக்கெடுப்புக்காகதான் பார்க்கிறீர்கள் என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்?

இந்த கணக்கெடுப்பில் அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். குறிப்பாக திருமணத்துக்குப் பிறகும் தொப்பை வாய்க்காதவர்கள் பாக்கியவான்கள். தொப்பைக்கு சாதி, மதம், வர்க்கம், ஆண் பெண் வேறுபாடு என்றெல்லாம் எதுவுமில்லை. அப்படியிருக்க போலிஸ்காரர்களை மட்டும் தனித்து, தொப்பைக்காக குற்றம் சாட்ட வேண்டிய அவசியம் ஏதுமில்லைதானே?

போலீஸ்காரர்களுக்கு தொப்பையிருந்தால் குற்றவாளிகளை ஓடிப்பிடிக்க முடியாது என்றுதான் அதிகபட்சமாக காரணம் சொல்ல முடியும். ஒரு போலீஸ்காரர், ‘சிங்கம்’ சூர்யா மாதிரி ரன்னிங் ரேஸ் ஓடி குற்றவாளியை பிடித்த காட்சியை நீங்கள் வாழ்வில் என்றாவது கண்டதுண்டா? அப்படி கண்டிருப்பவர் லட்சத்தில் ஒருவராகதான் இருக்க முடியும்

எனவே, ‘தொப்பை’ என்பதை மட்டுமே ஒரு காவலரின் பணிக்கு தகுதியிழப்பாக கருத முடியாது.

ஆனால் –

‘தொப்பை’யோடு இருப்பது என்பது ஆரோக்கியத்துக்கு கேடு. அது போலீஸ்காரர்களுக்கு மட்டுமல்ல. போலியோவுக்கு சொட்டுமருந்து கொடுப்பவருக்கும்கூட பொருந்தும்.

என்னவோ, உலகிலேயே இந்தியப் போலீஸுக்குதான் தொப்பை இருப்பதை போல நாமெல்லாம் கிண்டல் செய்துக் கொண்டிருக்கிறோம். இது சர்வதேசப் பிரச்சினை சாமி.

உலகின் பழைய மற்றும் மிகப்பெரிய காவல்துறைகளில் ஒன்றாக கூறப்படும் நியூயார்க் காவல்துறையேகூட தொப்பைப் பிரச்சினையால் நொந்து நூடுல்ஸ் ஆகிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நியூயார்க் காவல்துறையில் பணிபுரியும் ஜோஸ் வேகாஸ் என்கிற அதிகாரி, தன் துறையின் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்து, அதற்காக மாதாந்திர நிவாரணம் கோரியது அமெரிக்கா முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக 80 கிலோ எடையுடன் சிக்கென்று பணிக்கு சேர்ந்த ஜோஸ், இருபது ஆண்டுகால காவல்துறை சேவையால் தற்போது 180 கிலோ எடையுடன் பூதாகரமாக மாறியிருக்கிறார். மெகா தொப்பையுடன் காட்சியளிக்கும் அவர், இந்த தொப்பைக்கு காரணம், இந்தப் பணியில் கிடைக்கக்கூடிய அழுத்தமே (stress) தவிர, தன்னுடைய உணவுப்பழக்கமல்ல என்று ஆதாரங்களோடு வாதிடுகிறார்.

காவல்துறையில் இருக்கும்போது உடல்ரீதியான சேதாரம் ஏற்பட்டால் (disability) அதற்காக மாதாந்திர நிவாரணமாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுவது நியூயார்க் காவல்துறையில் வழக்கம். பணியால்தான் தனக்கு தொப்பை விழுந்தது, எனவே தொப்பையின் சைஸுக்கு தகுந்த நிவாரணம் வழங்கவேண்டும் என்பதே ஜோஸின் வாதம்.

உடல் தகுதியை வைத்தே ஒருவரை வேலைக்கு சேர்க்கும் போலீஸ் அகாடமிகள், வேலைக்கு சேர்ந்த பின்னர் அவர்களது உடல்ரீதியான தகுதிகளை வருடாந்திர அடிப்படையில் சோதனை செய்யாத போக்கு, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் இருக்கிறது. மாறாக ஃபயர் சர்வீஸ் போன்ற ஆபத்துக்கால உதவிச் சேவை துறைகளில் பணிபுரிபவர்களின் உடல் தகுதி மட்டும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்படுகிறது. ஏதேனும் உடல்ரீதியான குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தால், அதை மருத்துவரீதியாகவும் மனரீதியாகவும் எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

லண்டன் காவல்துறையில் வேலைக்கு சேர்ந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும் அடிக்கடி உடல் தகுதி சோதனைகள் நடத்தப்படுகின்றன. அந்த சோதனையில் தகுதி பெறாதவர்கள், மீண்டும் உடல் தகுதி பெறுவதற்கான அவகாசமும் வழங்கப்படுகிறது. அந்த அவகாசத்தில் உடல் தகுதி பெறாதவர்கள் காவல்துறையின் அலுவல்ரீதியான (clerical jobs) மற்றப் பணிகளுக்கு மாற்றம் செய்யப்படுகிறார்கள்.

சரி, மற்ற நாட்டுக் கதைகளையெல்லாம் விடுங்கள்.

இந்தியர்கள் ஏன் தொப்பை வளர்ப்பதில் உலகசாதனைக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்?

* நம்முடைய முன்னோர் நமக்கு சொத்து, பத்துகளை மட்டும் சேர்த்து வைக்கவில்லை. தொப்பை வளத்தையும் சேர்த்துவிட்டே வைகுண்டத்துக்கோ, சிவபாதத்துக்கோ சென்றிருக்கிறார்கள். எனவே, மரபியல் அடிப்படையிலேயே நமக்கு தொப்பை வளரவேண்டும் என்பது நம்முடைய ஜீன்களில், நாம் கருவானபோதே எழுதப்பட்டு விடுகிற விதி.

* நம்முடைய உணவுமுறை பெரும்பாலும் கார்போஹைட்ரேட் சார்ந்ததாக இருக்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் உணவு என்பது 70 முதல் 75 சதவிகிதம் கார்போஹைட்ரேட் அடங்கியவை. வாலிப வயதில் செரித்து விடுகிறது. நடுத்தர வயதை எட்டும்போது கூடுதலாக உடலுக்குள் செலுத்தப்படும் கார்போஹைட்ரேட் செரிமானம் ஆனது போக மீதி கொழுப்பாக மாறி, தொப்பையை பம்மென்று பலூன் ஆக்குகிறது.

* மேற்கண்ட காரணங்கள் தவிர்த்து மது, புகை மாதிரி லாகிரி வஸ்துகளும் கூட தொப்பைக்குக் காரணம்.

* முறையான உடற்பயிற்சியோ, போதுமான உடலுழைப்போ இல்லாத வாழ்க்கை முறைதான் பெரும்பான்மையான மக்களுக்கு வாய்க்கிறது.

உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு மாதிரியான பிரச்சினைகள் பெரும்பாலும் தொப்பையர்களுக்கே அதிகம் வருகிறது. போலீஸ்காரர்கள் மட்டுமல்ல. நாம் அனைவருமே ‘தொப்பையை ஒழிப்போம்’ என்கிற இயக்கத்தை தொடங்கவேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம் என்பதே உண்மை.

(நன்றி : குங்குமம்)

14 ஜூலை, 2018

சொர்க்கம் எங்கே இருக்கிறது?

“இங்கு யாருமே மரணிப்பதில்லை. ‘மரணம்’ என்று உலகம் சொல்லும் நிகழ்வுக்கு பின்னர் ‘மரணித்தவர்கள்’ என்று சொல்லப்படுபவர்கள் மிகச்சிறந்த இடத்தை அடைகிறார்கள்”

சட்டென்று வாசித்தால் ஏதோ உயரிய தத்துவம் மாதிரி தெரியும்.

டெல்லியில் 11 பேர் கொண்ட குடும்பம் செய்துக் கொண்ட கூட்டுத் தற்கொலைக்கு காரணமாக எழுதிவைத்த கடிதத்தில் காணப்படும் வரிகள் இவை.

‘முக்தி’ அடைய, ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள் கூட்டமாக தற்கொலை செய்துக் கொள்வது என்பது புதிதல்ல.

ஜிம் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க சாமியாரை நம்பி 900க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் 1978ல் நடந்து அமெரிக்காவையே சோகத்தில் ஆழ்த்தியது. ‘மக்கள் ஆலயம்’ என்கிற அமைப்பை நிறுவி, ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரை நம்பி பல நூறு அமெரிக்கர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டனர். இவர்களுக்காக கயானா என்கிற நாட்டில் ஜோன்ஸ் டவுன் என்கிற ஊரையே நிர்மாணித்தார் ஜோன்ஸ்.

தொடர்ச்சியாக ஜோன்ஸ் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் அமெரிக்கா இவர் மீது விசாரணையை முடுக்கி விட்டது.

இனி தப்பிக்கவே இயலாது என்கிற நிலையில், ‘சொர்க்கத்துக்கு போவோம்’ என்று ஜோன்ஸ் டவுனில் வசித்துக் கொண்டிருந்த தன் பக்தர்களை அழைத்துக் கொண்டு கூட்டாக தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக் கொண்ட 909 பேரில் 304 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானோர் சயனைடு விஷம் அருந்தியும், துப்பாக்கியால் தங்களை தாங்களே சுட்டுக் கொண்டும் ‘சொர்க்கத்துக்கு’ போனார்கள். கைக்குழந்தைகளுக்கு கூட ஃபீடிங் பாட்டிலில் பாலில் சயனைடு கலந்து புகட்டப்பட்டது என்பதுதான் கொடுமை.

உலகையே உலுக்கிய கூட்டுத் தற்கொலை சம்பவம் அது. ஒரு தனி மனிதர் தனக்கு தனிப்பட்டு முறையில் ஏற்பட்ட நெருக்கடிக்காக, ஆன்மீகத்தைப் பயன்படுத்தி பல நூறு மக்களையும் தற்கொலை செய்ய வைத்தது அமெரிக்காவையே அதிரவைத்தது.

அதே அமெரிக்காவில் 1997ல் ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ என்கிற அமைப்பு சார்பாக 39 பேர் கூட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சோகமும் நடந்தது.

மாசடைந்த உலகம் சுத்திகரிக்கப்படப் போகிறது. அப்போது இங்கிருப்பவர்கள் மரணிப்பார்கள். இந்த மரணத்தில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ உறுப்பினர்களுக்குக் கிடைக்கும். வேறு உலகில் இருந்து (அதாவது சொர்க்கத்தில் இருந்து) விண்வெளிக் கலம் வரும். அதில் ஏறிச்சென்று வாழ்வதற்காக ‘தற்கொலை’ செய்துக் கொள்ள வேண்டும் என்கிற பைத்தியக்காரத்தனமான நம்பிக்கையில் கூட்டாக மரணித்த கும்பல் அது.

‘உடல் என்பது ஆத்மா பயணிக்கும் வாகனம். இந்த வாகனத்தை விட்டு வேறு வாகனத்தை ஓட்டப் போகிறோம்’ என்றெல்லாம் தன்னுடைய பக்தர்களுக்கு மூளைச்சலவை செய்திருந்தார் ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ அமைப்பை நடத்திவந்த மார்ஷல் ஆப்பிள்வொயிட் என்கிற சாமியார்.

கொடுமை என்னவென்றால், அந்த கூட்டுத் தற்கொலை நடந்து இருபது ஆண்டுகள் கழித்து இன்னமும் கூட ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ இயங்கிக் கொண்டிருக்கிறது. விண்வெளிக் கலம் வரும், அதில் ஏறி மனித உடல் என்கிற வாகனத்தை விட்டு விட்டு வேறு வாகனத்தில் பயணிக்கலாம் என்று நம்பக்கூடிய பைத்தியக்காரர்கள் இன்னமும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெப்சைட் எல்லாம் கூட இருக்கிறது.

மனிதன், நாகரிகமடைந்த காலக்கட்டத்தில் சமுதாயமாக சேர்ந்து வாழ சில வரையறைகளை உருவாக்கிக் கொண்டான். அதில் ஒன்றுதான் மதம். அந்த மதத்தை வலுப்படுத்த சில சித்தாந்தங்களை உருவாக்கினான். மதக்கருத்துகள் ஒரு மனிதனின் வாழ்வியல் தொடர்பான எல்லா சந்தேகங்களையும் போக்கும் என்றெல்லாம் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு வந்தன.

மரணமே கூடாது என்பது மனிதனின் பேராசை. ஆனால், இயற்கை அதற்கு அனுமதிப்பதில்லை. எனவேதான் மரணத்துக்குப் பின்னான வாழ்வு என்று கனவு காண ஆரம்பித்தான்.

இந்த கனவுக்கு தீர்வாக ஏறக்குறைய எல்லா மதங்களுமே ‘சொர்க்கம்’ என்கிற கற்பனை உலகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. சில மதங்கள், மரணித்தாலும் மறுபிறப்பு உண்டு என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தின.

தானே உருவாக்கிய சொர்க்கத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி வைத்திருக்கிறான் மனிதன். அந்த சொர்க்கத்தில்தான் கடவுளர்களும், தேவதைகளும் வாழ்கிறார்கள். நல்லவர்கள் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்றெல்லாம் ‘கதை’ கட்டப்பட்டது.

அப்படியென்றால் தீயவர்கள்?

அவர்களுக்கென்று ‘நரகம்’ என்கிற சொர்க்கத்துக்கு நேரெதிரான ஓர் உலகத்தை கற்பனையால் சிருஷ்டித்தான்.

மரணத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களுக்கு சொர்க்கம் இருக்கிறது என்கிற நம்பிக்கை ஒரு காலத்தில் தேவைப்பட்டிருக்கலாம். சமூகத்தின் கட்டுப்பாடு, வரையறையை உடைக்கும் குற்றவாளிகளுக்கு நரகம் என்கிற அச்சம் காட்டப்பட்டிருக்கலாம்.

அதெல்லாம் அந்தந்த காலக்கட்டத்தின் தேவை. அப்போது மக்களை கட்டுப்படுத்தி முறையாக வாழவைக்கவே மந்திரங்களும், ஸ்லோகங்களும் உருவாக்கப்பட்டன.

உலகம், இன்று அறிவியல் மயமாகி விட்டது. நாம் வாழக்கூடிய பூமி என்பது உருண்டை என்பதை கலிலீயோ ஆணித்தரமாக நிறுவி நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த உலகம் இயங்கக்கூடிய சூரிய மண்டலம், பிரபஞ்சம் என்பதைப் பற்றியெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துருவாக்கங்களை அறிவியல் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது.

மற்ற கிரகங்களை தொலைநோக்கி மூலமாக ஆய்வு செய்ய முடிகிறது. சில கிரகங்களுக்கு விண்வெளிக் கலங்களை நேரடியாகவே அனுப்ப முடிகிறது. பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கு மனிதர்களே சென்று பார்த்துவிட்டு வந்து விட்டார்கள்.

சொர்க்கமோ, நரகமோ இதுவரை கண்டுப் பிடிக்கப்படவில்லை. இனிமேல் கண்டுப் பிடிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறும் இதுவரை தெரியவில்லை.

மனிதன் என்பவன் பல கோடி உயிரணுக்களால் ஆனவன். அவன் பிறப்பதற்கு முன் அவனுடைய இடம் என்பது இந்த உலகில் எப்படி வெற்றிடமோ, அவனுடைய மரணத்துக்குப் பிறகும் அதே வெற்றிடம்தான். சில நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவனுடைய நினைவு மட்டும் சில காலத்துக்கு வாழும். சில வியத்தகு சாதனைகளை தன் வாழ்வில் நிகழ்த்தியவர்கள் மட்டும் சற்று கூடுதல் காலத்துக்கு மக்களால் நினைவுகூரப்படுவார்கள்.

இதுதான் யதார்த்தம்.

பிறப்பை போலவே மரணமும் வெறும் சம்பவம் மட்டுமே. பிறப்புக்கும், இறப்புக்குமான இடையில் நாம் வாழ்வது மட்டுமே வாழ்க்கை. அதற்கு முன்போ, பின்போ வெறும் சூனியம் மட்டுமே.

நம்முடைய ஆத்மா வாழும், அது சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அவரவர் வாழ்வியல் பண்புகளின் அடிப்படையில் போய் சேரும் என்பதெல்லாம் வடிகட்டிய மூடநம்பிக்கை.

சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்றோ, கடவுளை காட்டுகிறேன் என்றோ எவரேனும் உங்களிடம் சொன்னால், அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். குருவாக்கி, ஆசிரம் கட்டி, சூடமேற்றி வழிபடுவதெல்லாம் அர்த்தமற்ற நேர விரயம்.

அறிவியல்தான் கடவுள். அது ஆதாரத்தோடு எதை சொல்கிறதோ, அதை நம்புவதே அறிவுடைமை.

(நன்றி : குங்குமம்)

3 ஜூலை, 2018

சொரணை இருக்கிறதா நமக்கு?

முன்பொரு காலம் இருந்தது.

நல்ல வெயிலில் நடந்துக் கொண்டிருக்கும் நடைபயணிகள், யார் வீட்டின் முன்பு நின்று தாகத்துக்கு தண்ணீர் கேட்டாலும், செம்பு நிறைய மகிழ்ச்சியோடு கொடுப்பார்கள். டீக்கடைகளில் தொடங்கி சினிமா தியேட்டர்கள் வரை இலவசமாக தண்ணீர் கிடைக்கும். தனியொரு மனிதனின் தாகத்துக்கு யாரிடம் தண்ணீர் கேட்டாலும் கிடைக்கும்.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு முதல் விருந்தோம்பலே சில்லென்ற தண்ணீர்தான். அதன் பிறகுதான் சவுகரிய விசாரிப்பு எல்லாம்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகள் இளைப்பாறவும் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை கட்டி, தண்ணீர் நிரப்பி வைத்த காலமும் இருந்தது.

தாகத்துக்கு தண்ணீர் கொடுப்பது பெரும் புண்ணியமாக கருதப்பட்ட தலைமுறைகளின் தொடர்ச்சி நாம்.

ஆனால் –

இன்று?

யார் வீட்டுக்காவது போனால், “தண்ணீ குடிக்கறீங்களா?” என்று சம்மதம் கேட்டுவிட்டுதான் கொடுக்கிறார்கள். யாரைச் சொல்லியும் குற்றமில்லை. எல்லோரும் குடிநீரை காசு கொடுத்துதானே வாங்குகிறோம்?

இன்றைய தேதியில் நமக்குத் தெரிந்து எங்குமே தண்ணீர் இலவசமில்லை. தாகமெடுத்தால், காசு கொடுத்து பாக்கெட் வாட்டர் அல்லது வாட்டர் பாட்டில் வாங்கிக் குடித்துக் கொள்ள வேண்டியதுதான்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ வாட்டர் போன்ற அரசு அமைப்புகள் மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை செய்துவருகின்றன. இதற்காக சொற்ப அளவிலான குடிநீர் வரியையும் நாம் செலுத்தி வருகிறோம். லாரி மூலமாகவோ அல்லது குழாய்கள் மூலமாகவோ சப்ளை செய்யப்படும் இந்த குடிநீரை அப்படியே பயன்படுத்த முடிவதில்லை. காய்ச்சிக் குடிக்கலாம். அல்லது RO முறையில் சுத்திகரித்து குடிக்க வேண்டும். அதற்காக ஒரு இயந்திரத்தை காசு செலவு செய்து வாங்க வேண்டும்.

அரசு, குடிமக்களுக்கு கொடுத்துக் கோண்டிருக்கும் இந்த அடிப்படை உரிமைகூட தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது என்பதுதான் லேட்டஸ்ட் பகீர்.

ஆம்.

கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் உரிமையை தாங்கள் பெற்றிருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் என்கிற நிறுவனம், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி பெருமையோடு அறிவித்திருக்கிறது.

சுமார் பதினாறு லட்சம் மக்களுக்கு அடுத்த இருபத்தாறு ஆண்டுகளுக்கு வழங்கக்கூடிய ஒப்பந்தத்தை 400 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 3,150 கோடி ரூபாய்) பணத்துக்கு பெற்றிருப்பதாக அந்த நிறுவனம் பெருமையோடு சொல்கிறது.

குடிநீர் சப்ளையை தனியாருக்கு தாரை வார்ப்பது இது இந்தியாவில் முதன்முறை அல்ல. ஏற்கனவே டெல்லி, பெங்களூர், கொல்கத்தா போன்ற மாநகரங்களிலும் இதே போன்ற ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

ஏற்கனவே, நாம் நெடுஞ்சாலைகளை இழந்துவிட்டோம். இந்தச் சாலைகளில் பயணிக்க சுங்கம் செலுத்துவதை போல, இனி கோவைவாசிகள் குடிநீருக்கும் தனியார் நிறுவனம் வரையறுக்கும் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதற்கட்டம்தான் கோவை. அடுத்தடுத்து சென்னை, சேலம், மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களின் குடிநீர் சப்ளையையும் தனியார் நிறுவனங்கள் கைப்பற்றி, கொள்ளை லாபம் சம்பாதிக்க திட்டமிடப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.

தண்ணீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. பாதுகாக்கப்பட்ட குடிநீரை தன் குடிமக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை.

ஆனால் –

உலக வங்கியோ, தண்ணீரை தனியார் மயமாக்கச் சொல்லி வற்புறுத்தி வருகிறது. உலக வங்கியின் தலைவராக இருந்த ஜேம்ஸ் வோல்பென்ஸான் என்பவர், “இலவசமாகவோ, குறைந்த காசுக்கோ தண்ணீரை வழங்குவது என்பது பூமியின் வளங்களை சுரண்டுவதற்கு காரணமாகிறது. அதுபோல தண்ணீரை கொடுக்கும்போது, மக்கள் அதன் மதிப்பை அறியாமல் வீணாக்குகிறார்கள்” என்று சொன்னார்.

என்னவோ, இயற்கை வளங்களை அரசுகள் அப்படியே பாதுகாக்க விரும்புவதாகவும், மக்கள்தான் வளங்களை சுரண்டுகிறார்கள் என்பதைப் போன்றும் அவர் உதிர்த்த இந்த முத்துகள், அப்போதே உலகம் முழுக்க கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது.

பொலிவியா நாட்டின் நான்காவது பெரிய நகரமான கோசம்பம்பாவில் இதுபோல தண்ணீர் வழங்கும் உரிமை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டபோது மக்கள் திரண்டு பெரியளவில் 1999-2000 ஆண்டுகளில் போராட்டம் நடத்தினார்கள். தண்ணீர் மற்றும் வாழ்வியல் பாதுகாப்பு அமைப்பு என்கிற இயக்கத்தை நிறுவி, பல்லாயிரக் கணக்கானோர் அரசுக்கு எதிராக வீதிகளில் திரண்டார்கள்.

அந்த திட்டத்தில் முதலீடு செய்திருந்த அந்நிய நிறுவனங்கள், பொலிவியா அரசின் துணை கொண்டு போராட்டங்களை முடக்க கடுமையாக முயற்சித்தனர். சுமார் 90 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களை ஒடுக்க அரச வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சில மரணங்களும் ஏற்பட்டன.

கடைசியாக பொலிவிய மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களின் காரணமாக அரசு, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், உலகவங்கி என்று அனைவரும் மக்கள் முன்பாக மண்டியிட வேண்டி வந்தது. பொலிவிய மக்களின் தண்ணீருக்கான இந்த போர், 2010ஆம் ஆண்டு ‘Even the Rain’ என்கிற பெயரில் ஸ்பானிஷ் மொழியில் திரைப்படமாகவே வந்தது.

இன்று குடிநீர், தனியாரின் கட்டுப்பாட்டுக்கு போகிறது என்றால், நாளை விவசாய பயன்பாடுகளுக்கான தண்ணீரையும் அவர்கள் கட்டுப்படுத்த முனைவார்கள். ஒவ்வொரு அணையையும் ஏதோ ஓர் அந்நிய நிறுவனம் பல்லாயிரம் கோடிகளை கொட்டி வாங்கும். லட்சக்கணக்கான கோடிகளை அறுவடை செய்யும். இது நவீன காலனி ஆதிக்கத்துக்கு அடிகோலும். நம் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் தண்ணீரை வாங்கி பயன்படுத்த பர்சனல் லோன் போடவேண்டிய அவலமும் வரலாம்.

பொலிவிய மக்களுக்கு இருந்த சொரணை, நமக்கும் இருக்கிறதா?

(நன்றி : குங்குமம்)