5 ஜூலை, 2014

அடுத்த பின்லேடன்!

“அப்புறம் உங்களை எல்லாம் நிச்சயமாக நியூயார்க்கில் வந்து சந்திக்கிறேன்”

நீண்டகாலம் சிறைபட்டு கைதியாக இருந்து வெளியில் வந்து சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் நாளில் யாருமே உணர்ச்சிவசப்பட்டுதான் இருப்பார்கள். எதுவுமே பேசமாட்டார்கள். ஆனால் இந்த வார்த்தைகளை அமெரிக்க அதிகாரிகளை நோக்கி அபுதுவா சொல்லும்போது அவர் முகம் இறுகியிருந்தது. கண்களில் கொலைவெறி இருந்தது.

முப்பத்தி நான்கு வயதில் அமெரிக்க இராணுவ அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர், அடுத்த நான்கு ஆண்டுகளை ஈராக்கின் பக்கா கண்காணிப்பு முகாமில் கைதியாக கழித்தார். கண்காணிப்பு காலத்தில் அல்லாவே என்று அமைதியாக கிடந்த இவர் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக எல்லாம் இருக்கக்கூடியவர் அல்ல என்று அதிகாரிகள் அவர்களாகவே முடிவெடுத்தார்கள்.

சிறைகாலத்தில் அபுதுவா எந்த வம்புதும்புக்கும் சம்பந்தமில்லாதவராகவே தெரிந்தார் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். ஏதோ ஒரு மசூதியில் கிளெர்க் ஆக பணியாற்றியதாகவும், துப்பாக்கியையும் வெடிகுண்டையும் சினிமாவில் மட்டுமே பார்த்திருப்பதாகவும் கற்பூரம் ஏற்றி அடிக்காத குறையாக சத்தியம் செய்தார். சந்தேகத்தின் பேரில் அமெரிக்காவின் வதைமுகாம்களில் கண்காணிப்புக்கு உட்பட்டு காரணமே இல்லாமல் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதுமாதிரி அப்பாவிகளில் ஒருவர்தான் அபுதுவாவும் என்று அதிகாரிகள் கருதினார்கள்.

2009ல் தாங்களே ரிலீஸ் செய்த அபுதுவாவின் தலைக்கு, அடுத்த இரண்டு ஆண்டில் பத்து மில்லியன் டாலரை (தோராயமாக அறுபது கோடி ரூபாய்) விலையாக அறிவிப்போம் என்று அமெரிக்கா கனவிலும் நினைத்ததில்லை. அமெரிக்க அரசின் இந்த சிறப்புப் பரிசுத் திட்டத்தில் அபுதுவாவைவிட ஒரே ஒருவர்தான் விலை விஷயத்தில் லீடிங்கில் இருக்கிறார். அவர் அல்குவைதாவின் தற்போதைய தலைவர் அய்மன் அல்-ஸவாரி. விரைவில் அல்-ஸவாரியை முந்தி, நெம்பர் ஒன் இடத்தை அபுதுவா பெறக்கூடும் என்று கருதப்படுகிறது. அன்று சொன்னமாதிரி நிஜமாகவே அபுதுவா நியூயார்க்குக்கே வந்துவிடுவாரே என்று அமெரிக்கா அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஒரு மாதமாக ஈராக்கின் பல நகரங்களை பின்லேடன் ஆதரவுப்படைகள் கைப்பற்றி வருவதாக செய்தித்தாள்களில் படித்து வருகிறீர்கள் இல்லையா, அந்த அமைப்பின் தலைவர்தான் இந்த அபுதுவா.

யார் இவர்?

அமெரிக்க இராணுவ ஆவணங்களின்படி ஈராக்கின் சமாரா நகரில் 1971ல் பிறந்தவர் என்று நம்பப்படுகிறது. இப்ராஹிம் அவ்வாத் இப்ராஹிம் அலி அல் பத்ரி அல் சமாரி என்பது முழுப்பெயர். அபுபக்கர் அல் பாக்தாதி என்றே ஊடகங்கள் இவரை எழுதுகின்றன. இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் இடையே பிரபலமான டாக்டர் இப்ராகிம் என்கிற பெயர் இவரைதான் சுட்டுகிறது என்கிறார்கள். மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கும் பெயர் அபுதுவா.

2003ல் ஈராக்கில் அமெரிக்க ஊடுருவல் நிகழ்ந்தபோது மிகச்சிறிய அளவிலான சில போராளிக் குழுக்களை அபுதுவா தலைமையேற்று நடத்தியதாக சொல்கிறார்கள். அல்குவைதாவின் ஈராக் கிளையான ஐ.எஸ்.ஐ. (இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக்) அமைப்பிலும் அவர் கவுன்சில் உறுப்பினராக இருந்ததாக தகவல். 2009ல் அமெரிக்க கண்காணிப்பு முகாமில் இருந்து விடுதலை ஆனவருக்கு சில மாதங்களிலேயே அதிர்ஷ்டம் அடித்தது. ஐ.எஸ்.ஐ. தலைவர் அபு ஓமர் அல் பாக்தாதி திடீரென்று கொல்லப்பட, அவருடைய இடம் இவருக்கு 2010 மே மாதம் கிடைத்தது. அதன்பிறகு ஈராக்கில் நடந்துவரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் இவரே காரணமாக இருக்கிறார். 2011ல் அல்குவைதா தலைவர் பின்லேடன் அமெரிக்காவால் கொல்லப்பட்டபோது, அதற்காக தகுந்த முறையில் பழிவாங்கப்படும் என்றும் அமெரிக்காவை ஓர் அறிக்கை மூலம் எச்சரித்தார் அபுதுவா.

அல்குவைதாவோடு முரண்பாடு

2013 ஏப்ரலில் சிரியாவில் உள்நாட்டு கலவரம் வெடித்தபோது, அதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அபுதுவா முடிவெடுத்தார். ஐ.எஸ்.ஐ. அமைப்பை கொஞ்சம் விரிவுபடுத்தி சிரியாவையும் சேர்த்து ஐ.எஸ்.ஐ.எஸ் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் சிரியா) என்று அமைப்பின் பெயரை மாற்றி, சிரியாவின் கலகத்தில் தானும் ஈடுபட்டார். தன்னுடைய சிறிய இராணுவத்துக்கு தலைமையேற்று போரிட்டு சிரியாவின் பல நகரங்களை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். அபுதுவாவின் இந்த தான் தோன்றித்தனமான போக்கை அல்குவைதா தலைமை ரசிக்கவில்லை. ஈராக்கோடு உங்கள் வேலைகளை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று எச்சரித்தபோது, இனிமேல் தாங்கள் அல்குவைதாவின் கட்டுப்பாட்டில் இல்லாத சுதந்திர இஸ்லாமிய அமைப்பு என்று அபுதுவா அறிவித்து விட்டார்.

மாயாவி ஷேக்

அபுதுவா மதக்கல்வியில் பி.எச்.டி. முடித்தவர் என்று சொல்லப்படுகிறது. பல்வேறு இடங்களுக்கு சென்று மதப்பிரச்சாரத்தையும், தீவிரவாத வெறியை ஊட்டுவதிலும் தன் வாழ்நாளை செலவழிக்கிறார். உலகளவிலான ஜிகாதி அறிவுஜீவிகளின் மத்தியில் இவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. பின்லேடன் மரணத்துக்கு பிறகு அல்குவைதா மீதிருந்த நம்பிக்கை இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களிடையே குறைந்துவரும் நிலையில், அவர்களின் கலங்கரை விளக்கமாக அபுதுவா உருவெடுத்திருக்கிறார். குறிப்பாக ஈராக்கில் அடுத்தடுத்து சிறைகள் மீது திடீர் தாக்குதல்களை நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை விடுதலை செய்த இவரது நடவடிக்கைக்கு சன்னி இஸ்லாம் வகுப்பினரிடையே நல்ல வரவேற்பு.

அல்குவைதாவின் செயல்பாடுகளுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் செயல்பாடுகளுக்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு. வீடியோ டேப்புகள் மூலமாக தங்கள் நடவடிக்கைகளை உலகறியச் செய்வது அல்குவைதா பாணி. ஐ.எஸ்.ஐ.எஸ்.சுக்கு அம்மாதிரி விளம்பரங்கள் மீது நம்பிக்கை இல்லை. உயிருக்கு அஞ்சாத சுமார் ஏழாயிரம் போராளிகள் அபுதுவாவின் கட்டளைக்காக எப்போதும் காத்திருக்கிறார்கள். தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது கண்கள் மட்டுமே தெரியும் வண்ணம் ஒரு முகமூடி அணிந்திருப்பாராம் அபுதுவா. அதனாலேயே இவரை ‘மாயாவி ஷேக்’ என்று ஜிகாதிகள் அழைக்கிறார்கள். அமெரிக்க கண்காணிப்பு முகாமில் இருந்தபோது எடுத்த ஓரிரண்டு போட்டோக்கள் மட்டும்தான் இவரை அடையாளப்படுத்தி அறிந்துகொள்ள இருக்கும் ஒரே ஆதாரம்.

நோக்கம் என்ன?

இஸ்லாமியர்களின் எல்லை என்றொரு கனவு அபுதுவாவுக்கு உண்டு. ஐரோப்பாவில் ஸ்பெயினின் வடக்கு எல்லையில் துவங்கி, வட ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா முழுக்க ஒரே இஸ்லாமிய குடையின் கீழ் அமையவேண்டும் என்று விரும்புகிறார் (ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கனவு வரைபடத்தை காண்க). இஸ்லாமிய ஆளுகைக்குள் இருக்கும் பிரதேசங்களை ஷரியத் சட்டம்தான் ஆளவேண்டுமாம். இந்த லட்சியத்துக்கு முதல் படியாகதான் சிரியா, ஈராக் இரண்டு நாடுகளையும் கைப்பற்றி ஒரே ஆளுகைக்குள் கொண்டுவர வேண்டுமென்று சமீபமாக போராடி வருகிறார்கள். சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் இவர்களது பங்கு கணிசமாக இருந்தது. ஈராக்கிலும் பல்வேறு சிறுநகரங்களை வென்று பாக்தாத்தை நெருங்கி விட்டார்கள்.

முதற்கட்ட வெற்றியை ருசித்தபின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் விரிவுப்படுத்தப்படுமாம். இந்தியா முழுக்க இஸ்லாமிய தேசம் என்று அபுதுவாவின் ஆதரவாளர்கள் நம்புவதால், முளையிலேயே ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமக்கு மிகப்பெரும் தலைவலியாக வளர்ந்து நிற்கப்போவது இவர்கள்தான்.

நிதி நிலவரம் எப்படி?

கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் நிதி திரட்டியதாக அமெரிக்கா சந்தேகப்படுகிறது. அல்குவைதாவுக்கு முன்பு நிதி கொடுத்துக் கொண்டிருந்த புரவலர்கள் பலரும் இப்போது புதிய செல்லப்பிள்ளையான அபுதுவாவையும் வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவுமின்றி தாங்கள் கைப்பற்றும் நகரங்களில் இருக்கும் செல்வங்களை அப்படியே சூறையாடும் பழங்கால இராணுவபாணியை இவ்வமைப்பு பின்பற்றுகிறது. சமீபத்தில் ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றியபோது, அங்கிருந்த வங்கியை சூறையாடியதின் மூலமாக மட்டுமே சுமார் நானூறு மில்லியன் டாலரை கொள்ளையடித்திருக்கிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு இப்போது இரண்டு பில்லியன் டாலர் சொத்துமதிப்பு இருக்கலாம் என்றொரு கணக்கீடு.

இன்றைய நிலையில் உலகின் மிக ஆபத்தான மனிதராக அபுதுவாவை மேற்கத்திய ஊடகங்கள் விமர்சிக்கின்றன. இதுவரை உலகம் கண்டிராத வகையில் வீரமும், அறிவும் ஒருங்கே அமைந்திருக்கும் தீவிரவாத தலைவர், மிகக்குறுகிய காலத்திலேயே அற்புதங்களை நிகழ்த்த வல்லவர் என்பதால் அமெரிக்கா முள்ளின் மீது விழுந்த சேலையை எடுக்கும் கவனத்தில் இவரை கையாள நினைக்கிறது.

கடைசி செய்தி :

‘இஸ்லாமிய தேசம்’ உருவானது!

சிரியா மற்றும் ஈராக்கில் இதுவரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றி இருக்கும் பகுதிகளை தனிநாடாக அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. இந்த நாட்டுக்கு ‘இஸ்லாமிய தேசம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதற்கு கலிபாவாக (மன்னராக) அபுதுவா இருப்பார் என்று அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இனி ஐ.எஸ்.ஐ.எஸ். என்கிற பெயரில் தாங்கள் இயங்கப்போவதில்லை, தங்களுடைய அமைப்பையே ‘இஸ்லாமிய தேசம்’ என்கிற பெயரில்தான் நடத்தப்போகிறோம் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

(நன்றி : புதிய தலைமுறை)

6 கருத்துகள்:

  1. கொஞ்சம் செய்தி; நிறைய கற்பனை. சம்பந்தமே இல்லாமல் இந்தியாவை அச்சுறுத்துகிறார். இப்போதெல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்தது போல் எழுதுவது ஃபேஷன் போல.

    பதிலளிநீக்கு
  2. Normally I don't know read anything like this, once the news in spotlight then I get it, but it is kind of new inside info. Thanks

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா11:46 AM, ஜூலை 07, 2014

    //இதுவரை உலகம் கண்டிராத வகையில் வீரமும், அறிவும் ஒருங்கே அமைந்திருக்கும் தீவிரவாத தலைவர், மிகக்குறுகிய காலத்திலேயே அற்புதங்களை நிகழ்த்த வல்லவர் என்பதால்// Yuvakrishna Admiring him? What will the common-man Muslim feel? Someone should save the world (I know the blogger does not believe in God)

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா1:53 PM, ஜூலை 07, 2014

    திரு அனீஸ் :
    // கொஞ்சம் செய்தி; நிறைய கற்பனை. சம்பந்தமே இல்லாமல் இந்தியாவை அச்சுறுத்துகிறார். இப்போதெல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்தது போல் எழுதுவது ஃபேஷன் போல// இது கற்பனை இல்லை. சுமார் பதினைந்து நாடுகளை எச்சரிக்கும் அறிக்கை வெளியிட்டார்: அவற்றில் இஸ்ரேலுடன் இந்தியா பெயரும் உள்ளது. இங்கு காபிர்கள் மெஜாரிடியாக இருப்பது துரதிர்ஷ்டம்!

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா2:25 AM, ஜூலை 08, 2014

    within 20 years india will come under caliphate. Abudiva will be the caliph. At that time people like Anees will not say that it is fashion.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா1:45 PM, ஜூலை 21, 2014

    Yuvakrishna has not responded to my comment on his "admiration" for Baghdadi. Is admiring terrorists/extremists nothing but being "secular"?

    பதிலளிநீக்கு