19 ஜனவரி, 2012

புத்தகக் காட்சி - நடந்தது என்ன?

புயலடித்து மண்ணை புண்ணாக்கிவிட்டதால், புது வருடத்துக்கு புண்ணியத்தலமான புதுச்சேரிக்கு போகமுடியாத புராண சோகத்தில், புதிய தலைமைச் செயலகம் என்று சொல்லப்பட்ட புது மருத்துவமனைக்கு பின்புறமாக புதுசாக திறக்கப்பட்ட புட்மாலில் புறாக்கறி சாப்பிட்டுவிட்டு புது புல்லட்டில் புர்ரென்று புயல்வேகத்தில் புதுப்பேட்டை வழியாக சேத்துப்பட்டுக்கு போய் சேர்ந்தோம். இந்த ஒரு வாக்கியத்தில் ‘ஏனிந்த ‘பு’லவெறிடி?’ என்று கேட்டால், இது புத்தகச் சந்தையைப் பற்றிய புத்தி... மன்னிக்கவும் பத்தி. ’பு’னாவுக்கு ‘பு’னா போட்டு பேசினால் ஒருமாதிரியாக இலக்கியப் பிரதிக்கான அந்தஸ்து கிடைத்துவிடுகிறது.

மந்தை மந்தையாக மக்கள் நுழைந்துக் கொண்டிருந்த சந்தையின் வாயிலில் கந்தை கந்தையாய் புத்தகங்களை போட்டு ஃப்ளாட்ஃபார வியாபாரம் விந்தையாய் நடந்துக் கொண்டிருந்தது. “இங்கிட்டு வாங்கினா பத்துரூவா. உள்ளே போய் வாங்கினா நூறு ரூவா” என்று மிரட்டியே நடைபாதை வியாபாரிகள் கல்லாவை ஃபுல்லாக்கினார்கள். பெரிய பதிப்பகங்களின் இலக்கியப் புத்தகங்கள் கருக்குலையாமல், புது மெருகோடு அச்சு மை வாசனையோடு கிடைத்தது. நேராக அச்சகத்திலிருந்து பழைய பேப்பர்காரனுக்கு பார்சல் பண்ணிவிடுவார்கள் போலிருக்கிறது.

தமிழக சபாநாயகர் தலைமைதாங்கி துவக்கி வைத்தார். சட்டசபையில் சத்தமும், சபையுமாக தலைவலியால் சோர்ந்துப் போனவருக்கு, எதை சொன்னாலும் விசில் அடிக்கும் கூட்டம் எதிரில் இருந்ததைக் கண்டு ஏகத்துக்கும் குஷி. சென்னை புத்தகக் காட்சியின் நிரந்தர சிறப்புப் பேச்சாளரும், நாடறிந்த இலக்கியவாதியுமான நல்லி குப்புசாமி செட்டியார் வழக்கமான டெம்ப்ளேட் உரையை இவ்வருடமும் வாசித்தார். “ஜெயக்குமார் சாருக்கும் எனக்குமான முதல் சந்திப்பு எப்படி நடந்ததுன்னா...” ரீதியில் பேச்சு போய்க்கொண்டிருக்க, ‘கொட்டாவி’ விட்டவாறே பிரும்மாண்ட அரங்கத்துக்குள் கூட்டம் நுழைந்தது. நாதஸ்வரமும், திருமதி செல்வமும் இல்லங்களை ஆளும் நம் சமகாலத்திலும் நம்பிக்கையோடு லட்சக்கணக்கான புத்தகங்களை மொத்தமாக இங்கே கொண்டு வந்து குவித்து வைத்திருக்கும் தமிழ் பதிப்பாளர்களுக்கு தன்னம்பிக்கைக்கான நோபல் பரிசு வழங்கலாம்.

புத்தகச் சந்தைக்குள் நுழைய நுழைவுக் கட்டணம் ரூ.5 மட்டுமே. ஆனால் இருசக்கர வாகனத்துக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.10 (உயிருள்ள மனிதனுக்கு 5, அஃறிணையான பைக்குக்கு 10 என்று இதை நீங்கள் தத்துவர்த்தமாகவும் விரித்து சிந்திக்கலாம்). இதைத்தான் சுண்டக்கா காலணா, சுமைக்கூலி எட்டணா என்பார்கள். பார்க்கிங் காண்ட்ராக்ட் எடுத்தவருக்கு டாஸ்மாக் வசூல்தான்.

நம் மக்களும் சும்மா இல்லை. கார் போட்டுக் கொண்டு, குடும்பத்தின் நண்டு, சுண்டுகளை எல்லாம் அழைத்துக் கொண்டு, ரோட்டையெல்லாம் டிராஃபிக் ஜாம் ஆக்கிக் கொண்டு, சந்தையில் கும்பலாக நடைபாதையை அடைத்துக் கொண்டு, லிச்சி ஜூஸ் குடித்து, மிளகாய் பஜ்ஜியும், அசோகா அல்வாவையும் வெட்டு வெட்டென்று வெட்டிவிட்டு.. கடைசியில் நூறு ரூபாய்க்கு ‘சமைப்பது எப்படி?’யும், ‘ரங்கோலி’யும் வாங்கிச் சென்றார்கள். கண்காட்சி என்கிற வார்த்தையைப் பார்த்ததுமே ஏதோ ‘வித்தை’ காட்டப் போகிறார்கள் என்கிற ஆர்வத்தோடு குவிந்துவிடுகிறார்கள். “இங்கன ஒண்ணுமே பார்க்குற மாதிரி இல்லியேப்பா!” என்றொரு டீனேஜ் இளசு தன் அப்பாவிடம் சலித்துக் கொண்ட ஸ்டால் சாகித்திய அகாதெமியுடையது. “நாங்கள்லாம் நாலஞ்சி பேரா சேர்ந்து, விஜய் பாட்டை சவுண்டா போட்டு டேன்ஸ் ஆடி காமிச்சாதான் எங்க ஸ்டாலுக்கு கூட்டம் வரும் போலிருக்கு!” என்று ஒரு தீவிர இலக்கியப் பதிப்பாளர் நம்மிடம் குறைபட்டுக் கொண்டார்.

இந்த வேடிக்கைக் காட்சி ஆர்வலர்களுக்கு சற்றும் குறையாதது இலக்கியப் புத்தக வெறியர்களின் அடாவடி. கூட்டத்தில் நாலு பேரை இடித்து, மிதித்துத் தள்ளி, கண்களில் இலக்கியவெறியும், மூளைக்குள் கொலைவெறியும் சரிசமமாக தாண்டவமாட, இராணுவ அராஜகத்தோடு முன்னேறி, “மொராக்கிய எழுத்தாளர் மெரகேஜ் முராகுஷ் அல்-மஜ்ரிப் அல் அவ்ஸாத்-தோட தமிழ் மொழிப்பெயர்ப்பு இங்கே கிடைக்குமா?” என்று கேட்டு ஸ்டாலில் இருக்கும் விற்பனையாளர்களை தாலியறுத்தார்கள். “இங்கே இரும்புக்கை மாயாவியோட முத்து காமிக்ஸ் தாங்க விற்கிறோம். எங்களுக்கு வேறெதுவும் தப்பு தண்டா தெரியாதுங்க” என்று இன்ஸ்பெக்டர் ஐயாவிடம் பவ்யமாக பதில் சொல்லும் விசாரணைக் கைதியாக ஸ்டால்காரர்கள் பதிலளிக்க வேண்டியிருந்தது. இலக்கியவெறி முத்திப்போன கவிஞர்கள் ஒருவரையொருவர் விரல்கடித்து விளையாடும் விரல்கடி இலக்கியமும் இவ்வருடத்தின் ஸ்பெஷல் அட்ராக்‌ஷன்.

சிலருக்கு இலக்கிய வெறியோடு, குடிவெறியும் சேர்ந்து விட்டதால் கிழிந்தது சேத்துப்பட்டு. இம்மாதிரி குடிவெறியர்களுக்கு சைட் டிஷ்ஷாக வெளியே காரம் தூக்கலான மசாலா வேர்க்கடலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் கவனித்த குடிவெறியர் ஒருவர் காதல்பொங்க வாங்கிச்சென்ற புத்தகம் ‘குடி’யின்றி அமையாது உலகு.

இம்மாதிரி மற்ற எல்லா வெறிகளையும் விட தலைசிறந்த கொடூர வெறி எழுத்துவெறி. கண்காட்சிக்கு வருபவர்களில் பாதி பேர் எழுத்தாளராகவோ/கவிஞராகவோ இருந்துத் தொலைத்தார்கள். ஓரமாக சிவனே என்று தலையில் துண்டுப்போட்டு நடந்துச் செல்பவர்களை கையைப் பிடித்து இழுத்து, “ஆளப்பிறந்தவன்னு ஒரு சூப்பர் த்ரில்லர் நாவல் சார். சல்லிசு விலையிலே கொடுக்குறோம்” என்று கையில் ஏதோ புக்கை திணித்து ரவுசு விட்டார்கள். புத்தகத்தை திணித்தவர்தான் பின்னட்டையில் சிரித்துக் கொண்டிருக்கும் ஆளப் பிறந்தவனின் எழுத்தாளராக இருப்பார். திணிக்கப்பட்ட புத்தகத்தைக் கையில் வாங்கி பலியாடாக திருதிருவென முழித்துக் கொண்டிருந்தவர் பதில்பேச வாய்ப்பே கொடுக்காமல், புத்தகத்தின் கதையை வாயாலேயே மொத்தமாகவே சொல்லிவிடுவார் எழுத்தாளர். கடைசியில் பலியாடு, “சார்! நான் எலெக்ட்ரீஷியனுங்க... நூத்தி பத்தாம் நம்பர் ஸ்டாலிலேயே ஏதோ பீஸ் போயிடிச்சாம்.. சரிபண்ண வந்தேன்” என்று ஹீனமான குரலில் வாக்குமூலம் கொடுக்கும் வரை எழுத்தாளரின் விற்பனைவெறி வூடு கட்டி ஊழித்தாண்டவமாடியது.

கவிதைத் தொகுப்புகளை வாங்காமல் நகர்ந்தோமானால், அங்கேயே மாறுவேடத்தில் அமர்ந்துக் கொண்டு நம்மை சி.ஐ.டி.யாய் கண்காணித்துக் கொண்டிருக்கும் சம்பந்தப்பட்ட கவிஞர்கள் கவிதையிலேயே சாபம்விடத் தொடங்கினார்கள். “ஏய் மனிதா (அடுத்தவரி) உனக்கு (அடுத்தவரி) புத்தகக்காட்சி (அடுத்தவரி) ஒரு கேடா? (கேள்விக்குறி)” என்று இன்ஸ்டண்டாக அறச்சீற்றக் கவிதை பாடிவிடுகிறார்கள். இந்தக் கருமாந்திரக் கவிதையும் அடுத்த புத்தகக் காட்சியில் ஏதோ ஒரு தொகுப்பில் இடம்பெற்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

இந்த எழுத்தாளர்களும், கவிஞர்களும் ஏதோ ஒரு பிளாக்கோ, ட்விட்டர் அல்லது ஃபேஸ்புக் அக்கவுண்டோ வைத்திருக்கிறார்கள். தினம் தினம் தங்கள் புத்தகங்களுக்கு வரும் ‘செட்டப்’ விமர்சனங்களையும், புத்தகம் எந்த ஸ்டாலில் கிடைக்கும், அந்த ஸ்டாலுக்கு எந்த வழியில் போவது என்றெல்லாம் மொக்கைப் பதிவு போட்டே இனப்படுகொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். தெரிந்த, தெரியாத எல்லோருடைய மெயில் முகவரிகளையும் டேட்டாபேஸாக கலெக்ட் செய்து, ‘உங்களுக்கு பர்சனல் லோன் வேணுமா சார்?’ பாணியில் ‘பரபரப்பாக பல லட்சம் காப்பிகள் விற்பனை ஆன என் புத்தகத்தை வாங்கிவிட்டீர்களா? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று மெயில் அனுப்பி டார்ச்சர் செய்கிறார்கள். இணையத்தில் இயங்கும் பலரும் இந்த குபீர்/திடீர் எழுத்தாளக் கவிஞர் பெருமக்களுக்கு பயந்து புத்தகக் காட்சி சீஸனில் சந்நியாஸம் வாங்கிக் கொண்டு எங்காவது தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

துரதிருஷ்டவசமாக இவ்வாண்டிலிருந்து திடீர் மொழியார்வலர்களுக்கு இலக்கிய ஆர்வமும் தூண்டப்பட்டு விட்டது. இதனால் நாளொரு போராட்டமும், பொழுதொரு புரட்சியுமாக புத்தகக்காட்சி அரங்கில் அரசியல் கலகக் கோஷமும் ஆங்காங்கே கேட்டது. இம்மாதிரி கலகங்களால் தங்கள் மவுசின் பவுசு போய்விடுமோ என்று பயந்துவிட்ட, லேட்டஸ்ட் புரட்சியாளர்களான சில சுமார் பிரபலங்கள் அவ்வப்போது அதிரடி விசிட் அடித்து வைக்க, ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ ரேஞ்சில் அவரது ‘அல்லக்ஸ்’ பாண்டியன்கள் பேக்கிரவுண்டில் பின்பாட்டு பாட.. இதுமாதிரி ஏகப்பட்ட தீப்பொறி திருமுகங்களால் அனல் பறந்தது புத்தகக் காட்சியில்...

தலக்காணி சைஸில் நாவல் எழுதினால்தான் விருது என்று பாராளுமன்றத்தில் ஏதாவது சட்டம் போட்டுவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை. ஆயிரத்துக்கும் குறையாத பக்கங்களில் ஆங்காங்கே ஸ்டார் எழுத்தாளர்களின் நாவல்கள் வாசகர்களை பயமுறுத்திக் கொண்டிருந்தன. ஒரு ஸ்டாலில் சம்பந்தப்பட்ட புக்கையே தலைக்கு வைத்து தூங்கிக் கொண்டிருந்தார் பதிப்பாளர் ஒருவர். கடந்த ஆண்டில் விருது வாங்கிய இம்மாதிரியான தலக்காணி நூல் ஒன்றினை வாசகர் ஒருவர் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென புத்தகம் கைநழுவி அவரது காலில் விழுந்து கால் உடைந்து, அவர் கவலைக்கு இடமாகிவிட.. பெரும் களேபரம் ஆனது. இவ்வருடம் புதியதாக வந்த இன்னொரு தலக்காணி சைஸ் புத்தகத்தை வாங்கிய வாசகர் ஒருவர் தனது கார் டிக்கியில் வைத்து எடுத்துச் செல்ல, கார் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாரம் தாங்காமல், குடைசாய்ந்து கவிழ்ந்துவிட வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலால் சென்னையே ஸ்தம்பித்தது. நிலைமை இவ்வாறிருக்க நோபல் பரிசு பெறவிருக்கும் தமிழின் நெ.1 எழுத்தாளர் என்று அவரது ரசிகர்களால் புளகாங்கிதப்பட்டு சிலாகிக்கப்படும் இந்திய ஞான மரபு எழுத்தாளர் ஒருவர் நாலாயிரத்து சொச்சத்து பக்கத்தில் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருப்பதாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. அடுத்தாண்டு சந்தைக்கு இப்புத்தகம் வந்துவிடுமென கிசுகிசுக்கப்படும் நிலையில், கண்டெய்னர் லாரியை வாடகைக்கு கொண்டுவந்துதான் இப்புத்தகத்தை வீட்டுக்குக் கொண்டுச்செல்ல நேரிடுமோ என்று எதிர்காலத்தை நினைத்து பீதியடைந்துப் போயிருக்கிறார்கள் வாசகர்கள்.

வருடா வருடம் புத்தகக் காட்சிக்கு நேரில் வந்து தனது வாசகர்களுக்கு திருப்பள்ளியெழுச்சி நடத்தி தரிசனம் தரும் அல்டிமேட் ரைட்டர் ஒருவர் இவ்வருடம், புத்தகக்காட்சியில் கக்கூஸ் சரியில்லை என்று புறக்கணித்திருக்கிறார். இதனால் கொதித்துப் போன அவரது வாசகர்கள் சிலர் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட.. தமிழ்நாட்டில் பெரும் கலாச்சாரக் கலவரம் மூண்டுவிடுமோ என மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து எழுத்தாளரோடு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் முடிவில் புத்தகக் காட்சிக்கு எழுத்தாளர் வருகை தரும்போது, அவருக்கு மட்டும் ஏசி குளிர்காற்று வீசும் வண்ணமும், அவருக்கென பிரத்யேகமாக ஐந்து நட்சத்திர விடுதி வசதியிலான கக்கூசும் ஏற்பாடு செய்வதாக மத்திய, மாநில அரசுகள் ஒப்புக்கொண்டன. இதையடுத்து அல்டிமேட் ரைட்டர் இரண்டு நாட்களுக்கு மட்டும் வாசகர்களுக்கு தரிசனம் தர ஒப்புக் கொண்டார்.

இன்னொரு உச்ச எழுத்தாளரோ வருடாவருடம் தன்னுடைய உச்ச இயக்குன நண்பர் சாரோடு பந்தாவாக வலம் வருவது வழக்கம். எழுத்தாளரைப் பார்க்க வருகிறார்களோ, இல்லையோ இயக்குன சாரைப் பார்க்க கூட்டம் கும்மும். துரதிருஷ்டவசமாக அந்த உச்ச இயக்குனர் சார் ஏதோ படவிவாதத்தில் பிஸியாகிவிட, தனியாகச் சென்றால் ‘ஜிலோ’வென ஈயடிக்குமே, இமேஜ் என்னாவது என்கிற தர்மசங்கடத்தில் புத்தகக்காட்சிக்கு வரவே இல்லை உச்சம்.

இம்மாதிரி நிறைய கூத்துக்கள் குரூப்பு சேர்ந்து கும்மாளமாக கும்மியடித்தாலும் ‘புத்தகக் காட்சி’ தனக்கே தனக்கேயான தணிக்குணத்தோடு வாசகக் கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பொன்னியின் செல்வனை இன்னும் தேடி வருகிறான் இளம் வாசகன். ஆராய்ச்சி நூல்களையும், அபுனைவு நூல்களையும், கிளாசிக்குகளை தேடித்தேடி வாசிக்கும் தீவிர வாசகர்கள் எந்தவித ஆரவாரமுமின்றி தங்களுக்குத் தேவையானதை அள்ளிச் செல்கிறார்கள். சிறுபதிப்பாளர்கள் மூச்சுவிட முடிகிறது. எவ்வளவு ஆடம்பரங்கள், அலங்காரங்கள் அலட்டிக் கொண்டிருந்தாலும் சந்தேகமேயில்லாமல் இது வாசகர்களின்/பதிப்பாளர்களின் திருவிழா. தொல்லைக்காட்சிகளும், மொக்கைச் சினிமாக்களும் அழித்துக் கொண்டிருக்கும் தமிழ் வாசக மனப்பரப்பை மீண்டும் விழிப்படையச் செய்யும் முயற்சி என்பதால் அறிவுலகம் மட்டுமல்ல, அனைவருமே கொண்டாடவேண்டிய நம் விழா.

18 ஜனவரி, 2012

வன்முறைக்கு பலியாகிறதா வாலிபம்?

அந்த பேருந்துக்குள் இருந்து திடீரென்று திமுதிமுவென்று இறங்கியவர்களின் கைகளில் உருட்டுக்கட்டை, கத்தி மாதிரியான ஆயுதங்கள் இருந்தது. கீழே நின்றிருந்தவர்களை ஓட ஓட விரட்டி தாக்க அந்த வளாகம் முழுக்க இரத்தக்களரி. இருவருக்கு மோசமான காயம்.

ஒரு இருபது பேர் உருட்டுக்கட்டை மாதிரியான ஆயுதங்களோடு அந்த இளைஞனை துரத்திச் செல்கிறார்கள். துரத்துபவர்கள் கையில் கிடைத்த கற்களையும் வீசிக்கொண்டே துரத்துவதால், கண்களில் பீதியோடு உயிர்பிழைக்க ஓடுகிறான். இனியும் ஓடமுடியாது என்ற நிலையில் வழியில் இருந்த ஆற்றில் குதிக்க, மறுநாள் அவனது உடல் போலிஸாரால் கண்டெடுக்கப் படுகிறது.

இந்த இரண்டு சம்பவங்களுமே ஏதோ தெலுங்கு டப்பிங் படத்தில் இடம்பெற்ற காட்சியல்ல. தலைநகர் சென்னையில் அரசுக் கல்லூரி வளாகங்களில் நடைபெற்றவை. தாக்கியவர்களும், தாக்கப்பட்டவர்களும் மாணவர்களே. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த மாணவர்களுக்கான மோதல் காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டு தமிழகமே அதிர்ந்தது நினைவிருக்கலாம்.

அடிக்கடி செய்தித்தாள்களில் இடம்பெறும் இதுபோன்ற செய்திகளால் அரசுக் கல்லூரி மாணவர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்கிற சித்திரம் சாதாரண பொதுஜனத்துக்கு ஏற்பட்டு விட்டது.

உண்மையிலேயே என்னதான் நடக்கிறது... மாணவ சமுதாயம் வன்முறை வெறியாட்டங்களுக்கு சிக்கி பலியாகிக் கொண்டிருக்கிறதா.. பின்னணியில் ஏதேனும் சுயநல சக்திகள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? மதம், சாதி, அரசியல் என்று வேறு ஏதேனும் பிரிவினைக் காரணிகள் இம்மாதிரி வன்முறைகளுக்கு காரணமா? கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவர்களிடம் பெருகிவரும் வன்முறைக் கலாச்சாரம் – குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் – மிக மோசமான எல்லைக்குச் சென்றுக் கொண்டிருக்கிறது. இப்பிரச்சினை குறித்து ‘புதிய தலைமுறை’ களத்தில் இறங்கி அரசுக் கல்லூரிகளில் விசாரணை மேற்கொண்டது. தனியார் கல்லூரிகளிலும் வன்முறை உண்டு. ஆனால் அது வேறு மாதிரியானது. தனியார் கல்லூரிகளில் இன்னமும் முழுமையாக ஒழிக்கப்பட முடியாத ராக்கிங் பிரச்சினை, அரசுக் கல்லூரிகளில் சுத்தமாக இல்லவே இல்லை என்பதும் நம் விசாரணையில் தெரியவந்தது.

“நமது மாணவர்கள் சொக்கத் தங்கங்கள். கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் காலத்தில் களிமண் மாதிரிதான் இருப்பார்கள். அவர்களை நல்ல முறையில் வடிவமைக்க வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு இருக்கிறது. குறிப்பாக கல்லூரிக்கும், அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. அவர்கள் செல்லும் பாதையை அவர்களது வாழ்க்கைச் சூழல்தான் முடிவெடுக்கிறது. மாணவ சமூகம் வன்முறைப் பாதைக்குச் செல்கிறது என்றால், வெறுமனே அவர்களை நோக்கி குற்றம் சாட்டிவிட்டு நாமெல்லாம் தப்பிக்க நினைப்பது அயோக்கியத்தனம். மாணவர்களிடையே வன்முறை என்பது சமூகம் உற்பத்திச் செய்த சாத்தான்” என்கிறார் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர்.

பேராசிரியரின் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான். அரசுக் கல்லூரிகளில் பயிலவரும் மாணவர்களில் பெரும்பாலானோர் கீழ்மட்ட நிலையில் இருந்து வருகிறார்கள். காட்டில் வளரும் செடிகளை ஒத்தவர்களாக பெற்றோர்களால் பாதுகாக்க, பரமாரிக்கப்படாத நிலையில் இருக்கிறார்கள். நிறைய பேர் முதல் தலைமுறையாக பட்டப்படிப்புக்கு வருகிறார்கள். கூலி வேலை செய்யும் பெற்றோருக்கு இவர்கள் என்ன படிக்கிறார்கள், கல்லூரிக்கு ஒழுங்காக செல்கிறார்களா என்றெல்லாம் கணிக்கவோ, கண்காணிக்கவோ இயலவில்லை.

சிறுவயதிலேயே அப்பாவை இழந்து, வீட்டுவேலை செய்யும் அம்மாவால் படிக்கவைக்கப்படும் இளைஞர்களும் அதிகம். Broken families என்று சொல்லப்படும் பெற்றோரின் கருத்துவேறுபாட்டால் சிதறிய குடும்பங்களில் இருந்து படிக்க வருபவர்கள், பெற்றோரே இல்லாமல் உறவினர்கள் உதவியோடு படிக்கும் மாணவர்கள் என்று ஒவ்வொரு கல்லூரியிலும் கண்ணீர்க் கதைகள் ஏராளம்.

உதாரணத்துக்கு மகேஷை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எடுத்துக் கொள்வோம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டார். இவரையும் சேர்த்து மூன்று குழந்தைகள். தாய் தனது பொறுப்பை துறந்துவிட்ட எங்கோ சென்றுவிட, மூவரும் சென்னையில் உறவினர் வீட்டில் தங்கிப் படிக்கிறார்கள். உறவினரும் ஏழ்மையானவர்தான். தங்களது உணவுக்கும், கல்விக்கும் இவர்களே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இரவு வேளைகளில் சில தொழிற்சாலைகளில் பணியாற்றி, பகலில் கல்லூரிக்குச் செல்கிறார் மகேஷ்.

“இம்மாதிரி மாணவர்களை தகப்பனாக நின்று வழிநடத்த வேண்டிய பொறுப்பு அவர்களது ஆசிரியர்களுக்குதான் இருக்கிறது” என்கிறார் நம்மிடம் பேசிய பேராசிரியர். கண்காணிப்பு இல்லாததாலும், வறுமைச் சூழலும் இவர்களை எந்த குறுக்கு வழிக்கு வேண்டுமானாலும் திருப்பக்கூடும் என்பது அவரது அச்சம்.

பேராசிரியரின் அச்சத்துக்கு ஏற்ப ஆசிரியர்-மாணவர் உறவின் நெருக்கம் குறைந்து வருகிறது. வகுப்பில் பாடம் எடுப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிடுவதாக சில ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். ஆசிரியத் தொழிலை வருமானத்துக்காக எடுத்துக் கொள்பவர்களும் பெருகிவருகிறார்கள். வகுப்பறை தாண்டிய மாணவர்களின் செயல்பாடுகளை இவர்கள் கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு ஆசிரியர்கள் மீது வைக்கப்படுகிறது. பெற்றோர்களால் கவனிக்கப்படாத மாணவர்களை ஆசிரியர்கள் கவனித்துக் கொண்டாலே பெருமளவில் இப்பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

நாம் விசாரித்ததில் மாணவர்களுக்கிடையே விரோதம் ஏற்பட ‘பஸ் ரூட் கலாச்சாரம்’ முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது. மிகச்சமீபத்தில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமாக இதைதான் காவல்துறையும் சுட்டிக் காட்டியிருக்கிறது. சென்னையின் அம்பத்தூர், பாடி, அயனாவரம் ஆகிய தடங்களில் இருந்து வரும் 27-எச், 27-பி ஆகிய பேருந்துகளில் வந்த மாணவர்கள் ஒரு குழுவாகவும், ராயபுரம், காசிமேடு, சுங்கச்சாவடி ஆகிய தடங்களில் இருந்து வரும் 6-டி பேருந்தில் வரும் மாணவர்கள் மற்றொரு குழுவாகவும் உருவெடுத்திருக்கிறார்கள். கல்லூரித் தேர்தலின் போது இந்த இரு தட மாணவர்களுக்குள்ளும் சிறு சிறு உரசல்கள் ஏற்பட, நீறுபூத்த நெருப்பாக இருதரப்பினரின் நெஞ்சிலும் வன்முறை பற்றியெரியத் தொடங்கியது. இதன் உச்சமாகதான் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு கல்லூரி வளாகத்திலேயே ஆயுதங்களோடு மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பஸ்ரூட் கலாச்சாரம் என்பது வாழையடி வாழையாக தொடர்கிறது. சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை உருவாக்குவது என்பது இக்கலாச்சாரத்தின் முக்கிய அங்கம். பகுதிவாரியாக இம்மாதிரி உருவாகும் குழுக்கள், மற்ற பகுதி குழுக்களோடு கேலி கிண்டலில் ஈடுபடுவது முற்றிப்போய்தான் வன்முறையில் இறங்குகிறார்கள். சென்னையில் பிரசித்தி பெற்ற ‘பஸ் டே’ கலவரங்கள் உருவாவது இம்மாதிரிதான். தொடக்கத்தில் மாணவர்களுக்கும், பேருந்து ஓட்டுனர் நடத்துனருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்திய ‘பஸ் டே’ இன்று வன்முறை கலாச்சாரமாக உருவெடுத்து, தடை செய்யப்பட்டிருக்கிறது.

பஸ்ரூட் கலாச்சாரம் மாதிரியே மாணவர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் இன்னொரு கலாச்சாரம் ஹாஸ்டல் கலாச்சாரம். வெளியூர்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் ஒரு தரப்பாகவும், நகரங்களில் வீடுகளில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் இன்னொரு தரப்பாகவும் பிரிகிறார்கள். படுமோசமாக பராமரிக்கப்படும் ஹாஸ்டல்களில் இருந்து வரும் மாணவர்கள், வீட்டு மாணவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகிறார்கள். இதனால் ஏற்படும் உரசல்களும் பெரும் சண்டையாக மாறுகிறது.

“இம்மாதிரி மோதல்களை பொறுக்கித்தனம், ரவுடித்தனமாக மக்கள் பார்க்கிறார்கள். இது சமூகத்தின் பிரதிபலிப்புதான். சமூகம் எப்படி இயங்குகிறதோ, அம்மாதிரிதான் மாணவர்களும் இயங்குவார்கள். இப்போதுதான் திடீரென இம்மாதிரி நடப்பதாக கருதுவது சரியல்ல. எல்லா தலைமுறையிலுமே வாலிபக் குறும்புகள் உண்டு. அரசியலற்றப் போக்கு திட்டமிட்டு உருவாக்கப் படுவதால் சமூகப் பிரச்சினைகளுக்காக போராட வேண்டிய மாணவர் இனம் இம்மாதிரி, வெட்டிச் சண்டைகளில் சக்தியை வீணடிக்கிறார்கள்” என்று கவலைப்படுகிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் (RSYF) மாநில அமைப்பாளர் கணேசன். ஊடகங்கள் (குறிப்பாக சினிமா), அரசியல்வாதிகள், அரசு திட்டமிட்டு இம்மாதிரியான ‘விட்டேத்தி கலாச்சாரத்தை’ உருவாக்குகிறார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். தனியார் மய ஊக்குவிப்பிற்காக அரசுக் கல்லூரிகளை தரமிழக்க செய்ய வைக்கும் ஒரு முயற்சியின் விளைவாகவே மாணவர்களிடம் வன்முறை பெருகுகிறது என்கிறார் இவர்.

சமீபத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு சிக்கிய ஒரு மாணவனிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை. சினிமாக்களில் காட்டப்படும் கல்லூரி மாணவன் பைக் வைத்திருக்கிறான். நல்ல ஆடை ஆணிகிறான். நகைகள் அணிந்திருக்கிறான். அம்மாதிரி நானும் வாழ நினைத்தேன் என்கிறான். கடந்த ஆண்டு வெளியான சினிமாப்படம் ஒன்றில் காதலியோடு புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குச் செல்ல கதாநாயகன் திருட்டில் ஈடுபடுவது போன்ற காட்சி இருந்தது. அந்தக் காட்சி இம்மாணவனைப் பாதித்து, அதேமாதிரியான வழிமுறையில் இறங்கினான் என்பதுதான் இங்கே அதிர்ச்சியான விஷயம். கடந்த ஆண்டிலேயே அதிகமாக வசூலித்ததாக சொல்லப்படும் திரைப்படம் ஒன்றும்கூட கொள்ளையையும், வன்முறையையும் தவறல்ல என்று போதிக்கிறது. சினிமா நாயகர்களை தங்கள் ரோல்மாடலாக எடுத்துக் கொள்ளும் இளைஞர்களின் மனதை இது பாதிப்பது இயல்பாக நடக்கக்கூடியதுதான். தன்னைத்தானே ஹீரோ என்று நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு மாணவனும், தன்னைப் பாதித்த சினிமா ஹீரோவின் பாத்திரமாகவே மாறிவிடுகிறான்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாணவர்களை கூட்டம் சேர்த்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்வதும், அவர்களை கல்வி சார்ந்த நோக்கத்தில் இருந்து தடம் மாற செய்கிறது. சில காலம் முன்பாக தென்மாவட்டம் ஒன்றில் நடந்த அரசியல் கட்சி மாநாடு ஒன்றுக்கு சென்னையின் அரசுக்கல்லூரி ஒவ்வொன்றிலிருந்தும் குறைந்தபட்சம் ஐநூறு மாணவர்களை அழைத்து வந்தாகவேண்டும் என்கிற வாய்மொழி உத்தரவு அக்கட்சியின் மாணவர் அணிக்கு விடப்பட்டிருந்ததாம். இவ்வகையில் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் மாணவர்கள், ஏதேனும் பிரச்சினைகளின் போது, “நான் யாரோட ஆளுன்னு தெரியுமில்லே?” என்று எதிர்த்தரப்பை பயமுறுத்துவது சகஜமாகிவிட்டது. ஒருக்கட்டத்தில் ஏதேனும் உள்ளூர் அரசியல் தலைக்கு அடியாள் மாதிரி செயல்படக்கூடியவனாகவும் அம்மாணவன் மாறிவிடுகிறான்.

இம்மாதிரி சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அப்பாவி மாணவர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு கல்லூரிக்கும் ஐம்பது முதல் அதிகபட்சமாக நூறு மாணவர்கள் வரை மட்டுமே அடாத செயல்களில் ஈடுபடுபவர்கள். ஆசிரியர்களும், நிர்வாகமும் இவர்களை சுலபமாக அடையாளம் கண்டுகொள்கிறது. பேசிப்பேசியே இவர்களை சரியாக கொண்டுவந்துவிடலாம் என்றாலும் கூட, காவல்துறையிடம் பொறுப்பை தள்ளிவிட்டுவிடுகிறார்கள். இப்பிரச்சினையை காவல்துறையோ ‘க்ரைம்’ என்கிற வகையில் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. காவல்துறை கல்லூரிக்குள் நுழைகிறது என்றாலே மாணவர்களுக்கு வெறி ஏற்படுகிறது. சமீபத்தில் ஒரு கல்லூரியில் நடந்த மாணவர்கள் – நிர்வாகம் ஆலோசனைக் கூட்டத்தில், “நீங்கள் எங்களை என்ன வேணும்னாலும் திட்டுங்க, என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்க. ஆனா போலிஸு மட்டும் உள்ளே வந்துடக்கூடாது” என்று ஆவேசமாக கல்லூரி முதல்வரை நோக்கி குரலெழுப்பினான் ஒரு மாணவன். போலிஸுக்கு அடிக்க மட்டுமே தெரியும் என்பது மாணவர்களின் வாதம்.

“பஸ் ரூட் மாதிரி தனித்தனி குழுவாக ஒன்றுபடும் மாணவர்களின் ஒற்றுமையை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்திக் கொள்ள நாம் திட்டமிட வேண்டும்” என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ராஜ்குமார்.

மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் விட மதுதான் மாணவர்களின் முதன்மையாக பிரச்சினையாக மாறியிருக்கிறது. மிக சுலபமாக ஒவ்வொரு மாணவனுக்கும் மது கிடைக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் பெருகிவிட்டதால் மாணவப் பருவத்திலேயே பலரும் மதுவுக்கு அடிமையாகிவிடக் கூடிய வாய்ப்பிருக்கிறது. குடிபோதைக்கு அடிமையாகிறவர்கள் எதற்கும் பயனில்லாமல் வன்முறை பாதைக்கு செல்வது தவிர்க்க இயலாததாக மாறிவிட்டது. குடிக்க காசு கிடைக்காத மாணவர்கள் வீடுகளில் சண்டை போடத் தொடங்கி, தெருச்சண்டை வரைக்கும் தயாராகி விடுகிறார்கள். வாராவாரம் தன்னுடைய பணக்கார நண்பன் ஒருவனின் வீட்டுத் தோட்டத்தில் தோட்டவேலை செய்யும் சென்னை மாணவன் ஒருவன், அதில் கிடைக்கும் கூலியை டாஸ்மாக்குக்கு தாரை வார்க்கிறான் என்பதைக் கண்டபோது கிடைத்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

ஓடும் பஸ்ஸின் மீது ஏறி நிற்கும் தைரியம் நம் யாருக்குமில்லை. அம்மாதிரி நிற்கும் மாணவனின் தைரியத்தை சரியான பாதையில் திருப்பிக் கொள்ள முடியாதது சமூகத்தின் குற்றம்தானே தவிர, மாணவ சமூகத்தின் குற்றமல்ல. மாணவக் கலாச்சாரம் இங்கே சரியான முறையில் வளர்த்தெடுக்கப்படவில்லை. இந்த கடமை கல்வியாளர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இருக்கிறது.

அறுபதுகளில் இந்தித் திணிப்புக்கு எதிராக மட்டுமல்ல. சமச்சீர்க் கல்வி, முல்லைப்பெரியாறு, ஈழம் என்று சமகாலப் பிரச்சினைகளிலும் நம் மாணவர்கள் நியாயமான முறையில் போராடியிருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே பிளவினை உண்டாக்கும் சக்திகளை அடையாளங்கண்டு வன்முறைப் போக்கினை தவிர்க்க வேண்டுமே தவிர, மாணவர்களை கிரிமினல்களாய் நடத்தும் போக்கு நிச்சயம் ஆதரிக்கத்தக்கதல்ல.

அரசியல் என்பது கெட்டவார்த்தை என்பதாக மாணவர்களுக்கு போதிக்கப்பட்டு, அவர்களது அறிவு திட்டமிட்டு மழுங்கடிக்கப்படுகிறது. மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டுமா வேண்டாமா என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அரசியல் பேசும் சுதந்திரம் கல்லூரி மேடைகளில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிலவும் ஜனநாயகம் அங்கே எல்லா மாணவர்களையும் மேடையேற்றி நாட்டின் எல்லாப் பிரச்சினைகளையும் அக்குவேறு ஆணிவேறாக அலசும் திறனை ஏற்படுத்தியிருக்கிறது. அதுபோன்ற சூழல் நம் கல்லூரி வளாகங்களிலும் மலரவேண்டும்.

கோஷ்டி சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வன்முறையாளர்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து போராடிதான் புராதனப் பிரசித்திப் பெற்ற பச்சையப்பன் கல்லூரியின் இடங்களை, மெட்ரோ ரயில் திட்டத்திடமிருந்து மீட்டெடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள்தான் இருள்சூழ்ந்த சமகாலத்தில் நமக்குத் தெரியும் நம்பிக்கை ஒளிக்கீற்று.


சில தீர்வுகள் :

1. அரசு கல்லூரிச் சூழல் கல்வி கற்க ஏதுவாக இருப்பதில்லை. ஆசிரியர்களே கூட பயன்படுத்த முடியாத மோசமான கழிப்பிடங்களை சென்னையின் மூன்று கல்லூரிகளில் கண்டோம். கல்லூரிகளிலேயே இந்த நிலைமைதான் என்றால் மாணவர்கள் தங்கும் விடுதிகளின் நிலைமை படுமோசம். மாணவர்கள் வாழ்வதற்கான, கல்வி கற்பதற்கான நிம்மதியான சூழலை ஏற்படுத்தியாக வேண்டும்.

2. பாடத்திட்டங்களில் மாற்றம் அவசியம். கடைசி ஒரு மாதம் படித்தாலே தேறிவிடலாம் என்கிற நிலை இருப்பதால், தன் கல்லூரிப் பருவத்தை ஜாலியாக வாழ்ந்துமுடிக்க முடிவெடுக்கிறான் மாணவன். ஆண்டு முழுக்க கல்வியில் கவனம் செலுத்தக்கூடிய பாடத்திட்டத்தை உருவாக்குவதில் கல்வியாளர்கள் முனைப்பு காட்ட வேண்டும்.

3. வருகைப் பதிவேடு அட்ஜஸ்ட் செய்வது என்கிற மோசமான கலாச்சாரம் ஒன்று அரசுக் கல்லூரிகளில் இருக்கிறது. தனியார் கல்லூரிகளைப் போன்று யாரும் திருத்தமுடியாத ஆன்லைன் அட்டெண்டன்ஸ் உருவாக்கிட வேண்டும்.

4. நூலகங்களை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் பெயருக்கு ஒரு நூலகமும், நூலகரும் இருக்கிறார்கள். மாணவப் பருவத்தில் வாசிப்பு பண்படுத்தும் என்பதால் போதுமான நூலகர்களை நியமனம் செய்து, நிறைய நூல்களும், அவற்றை வாசிக்க ஏதுவான சூழலையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

5. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது பெற்றோர் தங்களது மகனது வகுப்பு ஆசிரியரை சந்திக்க வேண்டும். இதன்மூலமாக கல்லூரியில் மகனது நடவடிக்கைகளை பெற்றோரும், கல்லூரி தாண்டிய அளவில் தன் மாணவனது நடவடிக்கைகளை வகுப்பாசிரியரும் அறிந்துக்கொள்ள முடியும்.

6. மாணவர்கள் ஒவ்வொருவரின் திறமையும் தனித்தனியாக கண்டறியப்பட்டு, அவர்களது விருப்பமான துறையில் வளர்வதற்கு ஏதுவான ஏற்பாடுகளை செய்யவேண்டும். இசை, ஓவியம் போன்ற கலைத்துறைகளில் ஆர்வமிருப்பவர்கள் அத்துறையில் பயிற்சிபெறவும், தங்கள் திறமையை வெளிக்காட்டவும் களம் அமைக்கப்பட வேண்டும். அதுபோலவே விளையாட்டு வீரர்களையும் சரியாக அடையாளம் கண்டறிந்து வளர்த்தெடுக்க வேண்டும்.

7. ஒவ்வொரு கல்லூரியிலும் என்.சி.சி. சிறப்பாக செயல்பட்டாலேயே பல ‘அடாத’ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்.

(நன்றி : புதிய தலைமுறை)

16 ஜனவரி, 2012

நடுநிசி அழகிகள்!

போன மாசத்தில் ஒரு நாள் அதிகாலை ஏழேமுக்கால் மணிக்கு, லுங்கி கட்டிக்கொண்டு லைட்டான மேக்கப்பில் சத்யன் டீ ஸ்டால் வாசலில் இருந்த பொட்டீக்கடையில் குமுதம் வாங்கப் போயிருந்தேன். ஒரு கிங்ஸ் வாங்கி வாயில் பொருத்தினேன். காலைக்கடனுக்கான உந்துதலுக்கு சிகரெட்தான் ஒரே கதி. தினத்தந்தியைப் புரட்டிக் கொண்டிருந்த அண்ணாச்சி பப்ளிக் கக்கூசில் க்யூவுக்கு நிற்கும் அவசரத்தோடு சொன்னார்.
“தம்பி.. ஒரு நிமிஷம் நில்லுய்யா! மேட்டர் கேள்விப்பட்டியா?” - அண்ணாச்சி சரியான சரக்கு வண்டி. முந்தைய நைட்டு அடித்த ஓல்டு மாங்க் கப்பு கப்பென்று அசுகந்தமாய் தேநீர்க்கடை முழுக்க பரவியது. டீ குடித்துக் கொண்டிருந்த சிலர் வாந்தி வரும் முகபாவத்தை காட்டினார்கள்.
“சொல்லுங்கண்ணே!” தனியார் டிவி ஒன்றுக்கு செல்போன் டவர் பிரச்சினைக்கு போட்டோவோடு பேட்டி கொடுத்ததிலிருந்து  (அந்தப் பேட்டியால் வேறு பிரயோசனமில்லை. இன்னும் ஏகப்பட்ட டவர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் தொடர்ந்து நிறுவப்படுகிறது என்பது வேறு விஷயம்) எங்கள் ஊரில் நிஜமாகவே நான் ஒரு செலிபிரிட்டி. எந்த பொதுப்பிரச்சினையாக இருந்தாலும் ட்ராபிக் ராமசாமியிடம் சொல்லுவது போல சிலபேர் என்னிடம் சொல்கிறார்கள். அண்ணாச்சியும் இப்போது அப்படித்தான் ஏதோ ஒரு மேட்டரை ஆரம்பிக்கிறார்.
“நம்ம ஊரு ரொம்ப கெட்டுப்போச்சி தம்பி. நட்டநடு நைட்டுலே என்னென்னவோ அசிங்கமெல்லாம் நடக்குது.. சொல்லவே ஆபாசமா இருக்குது” காதல் பட தண்டபாணி தோற்றத்தில் இருந்த அண்ணாச்சி, வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னபோதும், அந்த காட்சி காண சகிக்கக்கூடியதாக இல்லை.
இருப்பினும், ஆஹா. ’மேட்டர்’ நழுவி டீயில் விழுதே. டி.வி.யில் இன்னொரு பேட்டிக்கு சான்ஸு இருக்கே நமக்கு.
“என்னாச்சுண்ணே!”
“நம்ப குளம் வத்திப் போச்சுல்லே. வத்திப் போனது இந்த பொறுக்கி பயலுவளுக்கும், மொள்ளமாறிப் பயலுவளுக்கும் நல்லா வசதியாப் போச்சி”
எங்கள் ஊர் பேருந்து நிலையத்துக்கு அருகில் குளம் என்ற பெயரில் ஒரு மட்டமான குட்டை உண்டு. சோழர் காலத்தில் ஈஸ்வரர் கோயில் குளமாக இருந்தது மட்டுமே அக்குளத்துக்கு எஞ்சி நிற்கும் பழம் பெருமை. குளத்தைச் சுற்றி குடியிருப்புகள் ஏற்பட்டு, கழிவுகள் அசால்ட்டாக குளத்துக்கு திருப்பி விடப்படுவதால் அது குளமா இல்லை கூவமா என்று குடியிருப்புச் சங்கங்களால் பட்டிமன்றம் வருடாவருடம் நடத்தப்பட்டு வருகிறது.
பல ஏக்கர் பரப்பளவு வாய்ந்தது என்பதால், அதை ஆட்டை போட்டு துட்டாக்கிவிடலாம் என்ற ஆசை லோக்கல் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. எனவே தற்காலிகமாக குப்பை கொட்டி குப்பை மேடாக்கி மடக்கிப் போடும் திட்டத்தோடு இருக்கிறார்கள். மழைக்காலங்களில் மட்டும் மழைநீர் தூய்மையாக பொழிந்து, குளத்தில் தேங்கி ஓரிருநாட்களில் முன்பை விட மோசமாக அசுத்தமாகிவிடும்.
அக்டோபர் தொடங்கி ஏப்ரல் வரை கருமையான நீர் குளத்தை அலங்கரிக்கும். எருமைகளுக்கு இக்காலக்கட்டம் கொண்டாட்டமானது. பச்சையான ஆகாயத்தாமரை இலைகளை கருப்பாக எங்காவது பார்த்திருக்கிறீர்களா? எங்கள் ஊர்க்குளத்தில் மழைக்காலத்தில் பார்க்கலாம். இப்படிப்பட்ட கொடூரக்குளத்தை நம்பியும் விறால் மீன்கள் வளருகிறது என்பது இயற்கைக்கே சவால் விடும் அதிசயம். மீன்பாடி வண்டியில் மூட்டை மூட்டையாக பிடித்துக் கொண்டு போய் லம்பாக சம்பாதிக்கிறார்கள் எங்கள் ஊர் பார்ட் டைம் மீனவர்கள்.
ஊரிலிருக்கும் தன்னிகரில்லா தெருநாய்களின் வேடந்தாங்கலும் இந்த குளமே. நாள் முழுக்க தெருக்களில் போவோர் வருவோரை கடித்து வைத்துவிட்டு (நாய் ஊசி போடும் டாக்டர் செல்வமணியே தன் பினாமியான நர்ஸை வைத்து இந்நாய்களை வளர்ப்பதாக ஒரு தகவல்), இரவுகளில் ‘இன்னபிற’ மேட்டர்களுக்காக நாய்கள் மாநாடு இங்கே தினமும் நடக்கும்.
இத்தகைய வரலாற்று, சமகாலச் சிறப்புகள் வாய்தத குளத்தைப் பற்றிதான் நம்ம அண்ணாச்சி என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
105 டிகிரி வெயிலில் சாக்கடைநீரும் கூட வற்றிப்போக, குப்பைமேடான குளத்துக்கு இடையில் கான்க்ரீட் கொட்டி பசங்க சில பேர் போனமாசம் கிரிக்கெட் பிட்ச் அமைத்து விளையாடி வருகிறார்கள். உண்மையிலேயே நல்ல பசங்க. அந்தப் பசங்களைதான் இவர் பொறுக்கிப் பசங்க என்கிறாரோ என்று சந்தேகம் வந்தது.
மேலும் சரக்கு வண்டி அண்ணாச்சி தொடர்ந்தார்.
“நேத்து நைட்டு சுமாரா பண்ணிரண்டரை, ஒரு மணி இருக்கும். நாய்ங்க ரொம்ப மோசமா ஊளையிட்டிக்கிட்டிருந்திச்சி. திடீர்னு எல்லாமே சைலண்ட் ஆயிட்டதாலே தூக்கம் களைஞ்சிப்போயி வெளியே வந்தேன்”
இந்த நாய்கள் ஊளையிடல் பற்றி கொஞ்சமாவது இடைசெருகியே ஆகவேண்டும். குளிர்காலமான கார்த்திகை மாதத்தில் துணைதேட ஊளையிடுகின்றன. இரவுகளிலும் அனல் வீசும் மே, ஜூன் மாதங்களில் ஊளையிட காரணமேயில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். தின்ற குப்பை ஜீரணமாகாமல் ஊளையிடுகின்றன என்பது என்னுடைய அறிவியல் கண்டுப்பிடிப்பு.
கடையை விட்டு பேசிக்கொண்டே வெளிவந்தோம். வெளியே வந்த அண்ணாச்சி கண்டினியூகிறார்.
“அதுக்கு முன்னாடி லைட்டா ஆட்டோ சத்தம் ‘டுபுக்கு டுபுக்கு’ன்னு கேட்டுச்சி. குளத்துக்கு நடுவுலே பசங்க கிரிக்கெட் ஆட பிச்சி போட்டிருக்கானுங்க இல்லே. அங்கன ஒரு ஷேர் ஆட்டோ நின்னுட்டு இருந்திச்சி. நாலு தடிப்பயலுக எறங்கி பிஸ்கட் பாக்கெட்டை பிரிச்சி நாய்ங்களுக்கு போட்டு சைலண்டு ஆக்கிட்டிருந்தானுங்க” மேட்டர் சூடுபிடித்தது.
“ம்.. ஒருவேளை தண்ணியடிக்க வந்திருப்பானுங்களோ” - ‘உம்’ கொட்டுவதற்குப் பதிலாக சும்மா அண்ணாச்சியை தூண்டிவிட்டேன்.
“அப்படி வந்திருந்தானுங்கன்னா நானும் போயி ஒரு பெக் அடிச்சிருக்க மாட்டேனா? பின்னாடியே ஒரு பொண்ணு எறங்கிச்சிப்பா. ஃபுல் மேக்கப்பு. இருட்டுலே கூட நல்லா முகம் தெரிஞ்சது. ஒரு மாதிரி பொண்ணுதான். அப்புறமென்ன நடக்கக்கூடாத அசிங்கமெல்லாம் நடந்தது. எல்லா கருமத்தையும் தூரமா ஒளிஞ்சி நின்னு பார்த்தேன்” – இத்தனை வயசானாலும் அண்ணாச்சிக்கு அறிவே இல்லை. பிட்டுப்படம் பார்ப்பது போல இதையெல்லாம் ஆர்வத்தோடு பார்த்துத் தொலைத்திருக்கிறார்.
“நெஜமாவா அண்ணாச்சி? நம்ம ஊருப்பசங்க பொண்ணு மேட்டர்லே எல்லாம் இவ்ளோ மோசமில்லையே? யாராவது வெளியூரு ஆளுங்களா இருக்கும்”
“அட நீ ஒண்ணு. அந்தப் பசங்க நம்ம ரூட்லே ஆட்டோ ஓட்டுற பசங்கதான். முகத்தைப் பார்த்தா எனக்கு தெரியாதா என்ன?”
“அப்புறம் என்னாச்சி?”
“தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு கடைசி வீட்டு கதவைத் தட்டி அந்த அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு போயி நியாயம் கேட்டேன்” - அண்ணாச்சி குறிப்பிடும் கடைசி வீட்டம்மா கிட்டத்தட்ட சொர்ணாக்கா மாதிரி இருப்பார். அவர் வீட்டு கதவைத்தட்டி கூப்பிடதான் அண்ணாச்சிக்கு தைரியம் தேவைப்பட்டதே தவிர, பொறுக்கிப்பசங்களிடம் போயி நியாயம் கேட்க தேவையான தில்லு அவரிடமே இருந்தது.
“நல்ல வேளை செஞ்சீங்க!”
“அடப்போப்பா. அவனுங்க அந்தம்மாவை நாங்க இன்னா உன் கைய புடிச்சா இழுத்தோம்னு சொல்லி பிரச்சினை பண்ணிட்டானுங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை. இந்தப் பிரச்சினை நமக்கு தினம் தினம் தொடரும் போலிருக்கு” என்றார்.
“கவலைப்படாதீங்க அண்ணாச்சி. தலைவரு கிட்டே சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். இல்லேன்னா போலிஸுக்கு போவலாம்” என்றேன். தலைவர் என்றால் பஞ்சாயத்துத் தலைவர். அவர்தான் எங்க ஊரு நாட்டாமை. பார்ப்பதற்கு நட்சத்திர ஆமை மாதிரி இருப்பார்.
 ண்ணாச்சி சொன்னதை கேட்டதிலிருந்து ஒரு க்யூர்யாஸிட்டி (தமிழ்லே மிகச்சரியான வார்த்தை குறுகுறுப்பா?) ஏற்பட்டது. கையும், காண்டமுமாக பசங்களை சம்பந்தப்பட்ட குஜிலியோடு பிடிக்க வேண்டுமென்று. சில வழக்கமான அலுவலகப் பணிகள் சுமையைக் கூட்ட அப்போதைக்கு இதை மறந்துப்போனேன்.
ஆனாலும் பராபரியாக குளத்துக்குள் இரவுகளில் நடக்கும் கும்மாங்குத்து பற்றி தினமும் நிறைய செய்திகள் வந்துக் கொண்டிருந்தன. குட்டையில் எஞ்சியிருக்கும் தண்ணீரில் குஜிலியோடு பசங்க ஜலக்கிரீடை செய்வதாகவும், காலையில் போய் பார்த்தால் நிறைய நிரோத்து (எந்த பிராண்டாக இருந்தாலும் நம்ம ஆளுகளுக்கு அது நிரோத் தான்) விழுந்து கிடப்பதாகவும், சரக்கு பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடப்பதாகவும் ஆளாளுக்கு தெருவில் பேசிக் கொண்டிருந்தார்கள். இதுமாதிரி ஏதாவது விஷயம் சொல்பவர்களிடம் ‘நியூஸ் சோர்ஸ்’ என்னவென்று கேட்டபோது, எல்லோருமே அண்ணாச்சியையே கைகாட்டினார்கள்.
போனவாரத்தில் ஒருநாள் முரளியை துணைக்கு அழைத்துக் கொண்டேன். முரளி என்னுடைய பாடிகார்ட்-கம்-நண்பன். பாடிகார்ட் என்று ஒரு கெத்துக்கு சொன்னாலும் அவனுடைய பாடி கோழி பாடி. ஆனாலும் வாய் உதாரில் பெரிய ரவுடி போல பில்டப் கொடுக்கக்கூடிய சாமர்த்தியம் கொண்டவன். ஏற்கனவே இதே குளத்தில் நள்ளிரவில் பேய்கள் குளிப்பதாக பரவிய மர்ம வதந்தியை அவனுடைய உதவியால் கட்டுடைத்து, ஊருக்கு பகுத்தறிவு சேவை செய்த புண்ணியம் நமக்குண்டு.
இரவுகளில் யாரோ தண்ணீரை மொண்டு மொண்டு குளிப்பது போல சத்தம் வந்தது உண்மைதான். முரளியின் உதவியோடு புலன்விசாரணை செய்ததில் வெறிநாய்கள் வெறிதீர குளத்தில் உருண்டு, புரண்டு விளையாடியதால் ஏற்பட்ட சத்தம் அது என்பதை போதிய தரவுகளோடு பொதுமக்களுக்கு நிரூபித்தேன்.
அன்று இரவு பதினோரு, பதினொன்றரை மணியளவில் மனிதன் க்ளைமேக்ஸ் ரஜினி கணக்காக காஸ்ட்யூம்ஸ், கேன்வாஸ் ஷூ எல்லாம் அணிந்தேன். அச்சந்தர்ப்பத்துக்கு பொருத்தமில்லாத பாலுமகேந்திரா பாணி தொப்பி ஒன்றும் ஸ்டைலுக்கு அணிந்துகொண்டேன். இடையில் ஒரு பாதுகாப்புக்காக காய்கறி வெட்டும் கத்தி ஒன்றை இடுப்பில் மறைத்து வைத்துக் கொண்டேன். அப்பாவின் அந்தக்காலத்து பெரிய டார்ச்சையும் எடுத்துக் கொண்டேன். முரளிக்கு வழக்கமாக நான் கொடுக்கும் சிக்னலை கொடுத்தேன். ஏதோ ஆந்தை அலறுகிறது என்று நினைத்து புரண்டு படுத்திருக்கிறான் அந்த மூதேவி. இவனுகளை வைத்துக்கொண்டு புல்லு கூட புடுங்கமுடியாது என்று புலம்பியபடியே கதவைத்தட்டி எழுப்பி அழைத்துச் சென்றேன்.
நக்சல்பாரிகளுக்காக ஆதரவாக களமிறங்கும் பழங்குடியினர் கெட்டப்பில் அவன் இருந்தான். மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் மருதுபாண்டி, வெள்ளைத்துரை மாதிரி கட்டம் போட்ட ப்ளூ லுங்கி கட்டிக்கொண்டு, வெற்றுடம்பில் சிகப்பு பார்டர் போட்ட கருப்பு பெட்ஷீட் போர்த்தியிருந்தான். விருமாண்டி பசுபதி மாதிரி நெற்றியில் அடர்த்தியான விபூதிப்பட்டை வேறு. பட்டைக்கு நடுவில் பெரிய குங்குமப்பொட்டு. கையில் ஒரு டெர்ரர் லுக்குக்காக கோல் ஒன்றும் வைத்திருந்தான். அவனைப் பார்க்க எனக்கே கொஞ்சம் பயமாகதான் இருந்தது.
குளத்தை நெருங்கும்போது தூரத்தில் சிகரெட் நெருப்பு இரண்டு மூன்று தெரிந்தது. அவர்களிடம் போய் என்ன பேசப்போகிறோம் என்ற திட்டம் எதுவுமில்லை என்றாலும், ஏதோ ஒரு ஆர்வத்தில், அசட்டுத் துணிச்சலில் இருவரும் பயணித்தோம். அதாவது பூனைநடை நடந்தோம். ஏற்கனவே இதே மாதிரி விவகாரத்தை (குஜிலி மேட்டர் அல்ல, வெறும் தண்ணி மேட்டர்) போலிஸ் ப்ரெண்ட்ஸ் துணையோடு சுமூகமாக தீர்த்துவைத்த அனுபவமும் எங்களுக்குண்டு.
அருகில் நெருங்கியபோது கசமுசா சத்தம் எழுந்தது. நான்கைந்து பயல்கள் அவசரமாக எழுந்து நின்றார்கள். ஆட்டோ எதையும் காணவில்லை. இரண்டு மூன்று பைக்குகள் மட்டுமே.
“அட நம்ம அண்ணண்டா” - நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது பிறந்த பயல் ஒருத்தன் ஒரு கையில் பீர்பாட்டிலோடும், மறுகையில் சிகரெட்டோடுமாக சொன்னான்.
முரளி குரல் கொடுத்தான். “ஏண்டா ஊடுங்க இருக்குற எடத்துலே இதுமாதிரி குட்சிட்டு கும்மாளம் போட்டா வெளங்குமா? உங்க அப்பன் ஆயியெல்லாம் கேக்க மாட்டாங்களாடா?”
“இல்லேண்ணா. இன்னிக்கு மட்டும்தான். ஊர்லே இருந்து ப்ரெண்ட்ஸ் வந்திருந்தாங்க. பார்ட்டி கொடுக்கறோம். நீயும் கொஞ்சம் சாப்பிடுண்ணா” - தாகமாக இருந்தாலும், சின்ன பயல்களிடம் வாங்கி குடிக்க மனசு ஒப்பவில்லை. வாழ்த்து(?) சொல்லிவிட்டு நடையைக் கட்டினோம்.
இதெல்லாம் சரக்கு அண்ணாச்சி கிளப்பிவிட்ட வதந்தியாகதான் இருக்க வேண்டும். ஆனாலும் சாட்சிக்கு கடைசி வீட்டு அம்மாவை வேறு அலிபியாக சேர்த்திருக்கிறாரே என்று குழப்பமாக இருந்தது. கடைசி வீட்டு அம்மாவும் கூட அவ்வப்போது சரக்கு சாப்பிடுவதை ஹாபியாக கொண்டிருக்கிறார் என்பதால் அவரது சாட்சியும் நம்புவதற்கில்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
 ன்று காலை பைக்கில் வந்துக்கொண்டிருந்தேன்.
தெருமுனை சர்ச் அருகில் சரக்கு அண்ணாச்சி கை காட்டி வண்டியை நிறுத்தினார்.

“ஹேப்பி நியூ இயர் அண்ணாச்சி!”
“அத வுடுப்பா. விஷயம் தெரியுமா? நேத்து நைட்டு அந்த ஷேர் ஆட்டோ பசங்களுக்கும் அந்தப் பொண்ணுக்கும் துட்டு மேட்டருலே செம தகராறு. ஒரே சத்தம். அக்கம் பக்கம் யாரும் தூங்க முடியல”
“இல்லியே அண்ணாச்சி. வெசாரிச்சி பார்த்ததுலே எப்பனாச்சுக்கும் சில பசங்க தண்ணி அடிக்கிறானுங்க. மத்த கலாட்டா ஏதுமில்லைன்னு சொல்றாங்களே?”
“அப்ப நானென்ன பொய்யா சொல்றேன். வேணும்னா கடைசி வூட்டு அம்மாவை கேட்டுப் பாறேன்! நேத்து அவங்களும்தான் பாத்தாங்க!”
ஷேர் ஆட்டோ அழகி குழப்பம் மறுபடியும் மனசை ஆக்கிரமிக்கிறது.
(நன்றி : சூரிய கதிர் - பொங்கல் 2012 இதழ்)

14 ஜனவரி, 2012

பிசினஸ்மேன்

தொண்ணூத்தி மூன்றிலோ, நான்கிலோ டங்கலின் காட் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும்போது சொன்னார்கள். இனிமேல் இந்தியாவில் பணம் மழையாக கொட்டப் போகிறது. ஏழைகளை அருங்காட்சியகத்தில்தான் பார்க்கமுடியுமென. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தோமானால் அந்த கூற்றில் பாதி மெய்யாகியிருக்கிறது. இந்தியாவில் பணம் மழையாக கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஏழைகள் மறைந்துவிடவில்லை. மாறாக சாமர்த்தியம் இருப்பவன் எழுநூறு தலைமுறைக்கும் சொத்து சேர்த்துக் கொள்ளலாம், சாமர்த்தியமற்றவன் தூக்கு போட்டு சாகலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. இச்சூழலை மிகச்சரியாக பிரதிபலித்து கடந்த ஆண்டு தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் மங்காத்தா. இவ்வாண்டு தெலுங்கில் பிசினஸ்மேன்.

பிசினஸ்மேனுக்கு சரி/தவறு இரண்டுக்குமே அர்த்தம் தெரியாது. வாழத்தேவையான எதையும் செய்யலாம் என்பதே அவன் வேதம். இந்த நாட்டில் ஏராளமாக பணம் இருக்கிறது. அதை அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள். கார்ப்பரேட்கள் கொள்ளை அடிக்கிறார்கள். ரவுடிகளும் ஏன் கொஞ்சம் அடித்துக்கொள்ளக் கூடாது? காலத்துக்கும் எவன் எவனுக்கோ அடியாளாக வேலைபார்த்து அஞ்சுக்கும், பத்துக்கும் அல்லாட அவனுக்கென்ன தலையெழுத்தா? ரவுடியிஸத்தை கார்ப்பரேட் ஸ்டைலில் நாடு முழுக்க கிளை அமைத்து விரிவுபடுத்துவதுதான் பிசினஸ்மேனின் பிசினஸ். கேட்கவே டெர்ரராக இருக்கும் இக்கதை முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவைப் படம் என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் சிரமமாகதானிருக்கும். ‘தடி எடுப்பவன் தான் தண்டல்காரனாக முடியும்’ என்பதோடு, நீயும் தடியெடு, இல்லாவிட்டால் தண்டம் கட்டு என்கிற படுமோசமான மேசெஜ் தான் படத்தின் ஒன்லைன்.

மூன்று மாதத்துக்கு முன்புதான் ஒரு ’தூக்குடு’ என்றொரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறார் மகேஷ்பாபு. அந்த எனர்ஜி லெவல் கொஞ்சமும் குறையாமல் அடுத்தப் படத்திலும் அதே பிக்கப்போடு வேலைபார்த்து, முந்தைய ஹிட்டை மிஞ்சும் இன்னொரு ஹிட்டடிக்க இந்தியாவிலேயே இன்று வேறு நடிகர் இல்லை. முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை திரை முழுக்க பிரின்ஸ் ராஜ்யம்தான். ஆக்டிங், ஆக்‌ஷன், டேன்ஸ், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் என்று எல்லாப் பக்கமும் சிக்ஸர் அடிக்கும் மாஸ் ஹீரோ அனேகமாக இன்று இவர் ஒருவர்தான். தன்னை முழுக்க இயக்குனரிடம் ஒப்புக் கொடுத்துவிடுவதால், பூரிஜெகன்நாத் மாதிரி மாஸ் டைரக்டர்கள் கமர்சியலில் ‘எதை’ வேண்டுமானாலும் பரிசோதித்து பார்த்துக் கொள்ள முடிகிறது. தெலுங்குப் படங்கள் இன்று கமர்ஷியலில் தொட்டிருக்கும் உச்சம் மிகக்குறுகிய காலத்தில் நிகழ்ந்திருக்கும் சாதனை.

காஜல் அகர்வால் நாட்டுக்கட்டையாக இல்லாமல் இருந்தாலும், கைக்கு வாட்டமான அடக்கமான சைஸில் இருக்கிறார். பெரிய முண்டக்கண்களை தவிர்த்து செக்ஸியான அம்சங்கள் ஏதும் சொல்லிக் கொள்ளும்படி இவரிடம் இல்லை. ஆனாலும் லிப்-லாக்குக்கென்றே அவரது உதடுகள் உருவானவையோ என்னவோ தெரியவில்லை. உலகின் மிக கவர்ச்சிகரமான உதடுகள் கொண்டவர்களை பட்டியலிட்டால், காஜலை மிஸ் செய்யவே முடியாது. வெட்கப்பட்டுக் கொண்டே லிப்-டூ-லிப் அடித்தார் மகேஷ்பாபு என்று படித்தேன். படத்தில் பார்க்கும்போது அப்படி தெரியவில்லை. ஸ்ட்ராங் டீப் கிஸ்.

ஹீரோ-டைரக்டரின் போக்கிரி காம்பினேஷன் பிரசித்தி பெற்றது என்பதால், கிட்டத்தட்ட அதே பாணி ஸ்க்ரீன்ப்ளே, டைரக்‌ஷன். பரபரவென்று ஓடும் திரைக்கதையில் ஒரு காட்சியை கூட மிஸ் செய்யமுடியவில்லை. படம் முழுக்க விரவியிருக்கும் ‘பஞ்ச்’களுக்கு விசிலடித்து விசிலடித்தே தம்மு தீருகிறது.

யோசித்துப் பார்த்தால் உருப்படியாக ஒன்றுமே இல்லாத படம். ஆனால் ஏதோ ஒரு விஷயம் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டுகிறது. பூரிஜெகன்நாத்தின் மேஜிக்கே இதுதான்.

அழிக்கப் பிறந்தவன் - சில விமர்சனங்கள்

இளமை ததும்பும் சுவாரசியமான எழுத்து நடையால், இணையத்தில் வசீகரித்து வரும் இவரது 'அழிக்கப்பிறந்தவன்' என்ற நாவலை, புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பும் பதிவர்களிடம் பார்க்க முடிகிறது. 'திருட்டு விசிடி'யை மையமாகக் கொண்ட விறுவிறு கதை, 'படுவேகமான த்ரில்லர் வகையறா' நாவல் என சக பதிவர்கள் சான்று கொடுத்து வருகின்றனர்.


- விகடன்.காம்


--------------------------------------------------


புத்தகத்தை படிக்கும்போது என்னை மிகவும் ஈர்த்த விஷயம் பர்மாபஜாரைப் பற்றியும், அங்கு நிகழும் வியாபாரத்தைப் பற்றியும் விரவிக் கிடக்கும் தகவல்கள். க்ரே மார்க்கெட்டின் டான் வாப்பா, மீன் பிடித்தல், மருந்து வியாபாரம், போலிஸ் விசாரணை என்று சென்னையின் மறுபக்கத்தை நுணுக்கமாக விவரித்த விதம் மிக அருமை


- நல்லவன்



--------------------------------------------------


கதையின் நடை நம்மை உள்ளிழுத்துக்கொள்ள பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. விலைமாது வரும் காட்சிகளிலும் அத்துமீறாமல் அடுத்த காட்சிக்குத்தாவும் சந்தர்ப்பங்களில் கதையின் போக்கில் நம்மை கவனப்படுத்தி விளையாடுகிறார் யுவா. மிகச் சாதாரணமான வார்த்தைகள். சம்பவங்களின் அனாயாசமான வேகம்.! ஏதோ ஒரு இடத்தில் இது உண்மையிலேயே நடந்துகொண்டிருக்கிறதோ என்று எண்ணவைக்கும் காட்சிக்கோர்வைகள் என நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ் நாவலைப் படித்த உணர்வு எழுந்தது.


- சுரேகா


--------------------------------------------------

சுஜாதா நாவலின் போதுதான் இந்த அவஸ்தைகளை அனுபவித்திருக்கிறேன். அதன் பிறகு யுவகிருஷ்ணாவின் நாவலைப் படித்த பிறகுதான் அந்த அவஸ்தையை மீண்டும் அனுபவித்தேன். இந்த நாவலை திரைக்கதையாக அமைத்தால், "மங்காத்தா" போல் நல்ல வெற்றி படமாக அமையும் வாய்ப்பு இருக்கிறது.


--------------------------------------------------

விறுவிறுப்பான மசாலா படத்தைப் பார்த்த திருப்தி. பரபரவென போயிற்று.


--------------------------------------------------

ஹாலிவுட் இயக்குனர்களான மார்ட்டின் ஸ்கார்சீஸ், கை ரிட்சி, படங்களில் பார்ப்பது போல ஒரு இருள்/நிழல் உலகத்தை நம் கண் முன்னே மிகத் துல்லியமாகக கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றார். ஒருவரின் நிழலில் இன்னொருவர் உருவாவதும்... வளர்ந்தபின் வளர்த்தவர் மேலேயே பாய்வதும் ஆகிய நிழல் உலகின் 'Survival of the Fittest ' கொள்கைகளை மிக சிறப்பாகவே சொல்லியிருக்கின்றார்.


--------------------------------------------------

பர்மா பஜாரின் திருட்டு VCD தொழிலுக்கு பின்னால் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் இந்த கதை சிறந்த திரைக்கதையாகவும் இருப்பது தனி சிறப்பு. இயக்குனர் ஷங்கரையும் அவரது நண்பன் படத்தையும் மையமாக வைத்து கதை சொன்ன விதம் அருமை. ஷங்கரே கூட இதை படமாக எடுக்க களம் உள்ள நாவல்.


--------------------------------------------------

ஒரு ஒண்ணரை முதல் இரண்டு மணி நேரத்திரைப்படத்துக்கான களம் மற்றும் பாத்திரங்கள் கச்சிதமாய் இருக்கும் இந்நாவலை டீட்டெயிலிங்கில் பிராமதப்படுத்தும் ஒரு நல்ல இயக்குநரும் (கே.வி.ஆனந்த் போல), ஒரு நல்ல குழுவும் சேர்ந்தால் என்றேனும் ஒருநாள் முழுநீளத்திரைப்படமாக பட்டையைக் கிளப்பக்கூடும். 


--------------------------------------------------

சென்னை பர்மா பஜார் தான் கதைக்களம். அங்கே நடக்கும் தொழில், அங்கே நிகழும் சம்பவங்கள், தாதாக்கள், ஒருவரை ஒருவர் முந்தும் தன்மை, திருட்டு வி.சி.டி இவற்றை மையமாக கொண்டு கதை செல்கின்றது. விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லை. தொடர் கொலைகள் அதை யார் செய்தார்கள் என்ற கேள்வியுடன் பயணிக்கின்றது. படு வேகம். விவரணைகள் கதைக்குள் ஒன்ற செய்கின்றது. டீடெய்லிங் தான் ஆச்சரியப்பட வைக்கின்றது, எல்லா தகவல்களையும் விரல்நுனியில் வைத்துள்ளார். 


--------------------------------------------------

 Get the book ,you can not keep it down without completing. As reader I want to enhance the experience of the book. AZHIKKAP PIRANDHAVAN MAPIA : CLICK HERE!


- முத்துவேல் சிவராமன்
--------------------------------------------------

கொஞ்சமும் ஏமாற்றாத த்ரில்லர். நடை அமர்க்களம். விறுவிறுப்பான அக்மார்க் லோக்கல் மசாலா.

- நரேன்

--------------------------------------------------

செம விறுவிறுப்பான திரில்லர் நாவல்..! ஏக் தம்மில் இரவோடு இரவாகப் படித்து முடித்தேன். அவசியம் படியுங்கள். நிச்சயமாக உங்களுக்கும் பிடிக்கும்.

- உண்மைத் தமிழன்

--------------------------------------------------

 கதை விறுவிறுப்பாக இருக்கிறது.. ஃபில்டர் & டுபாக்கோ பர்ஃபெக்ட்லி மேட்சுடு சிகரெட்டைப்போல...

- மணிஜி

--------------------------------------------------

சினிமா பின்னணியில் அமைந்த தடதடக்கும் கிரைம் த்ரில்லர். காரம் கொஞ்சம் தூக்கலான அருமையான மசாலாப் படம் பார்த்த உணர்வு.


--------------------------------------------------

செம்ம சேஸிங் த்ரில்லர்.. கே.வி ஆனந்த் தோத்தாரு போங்க. சேஸிங் கண்ணுக்குள்ள விரியுது


--------------------------------------------------

ஜெட் வேகம். ஒரிரு லாஜிக் ஓட்டைகளும் படிக்கும் போது தெரியவில்லை, படித்து முடித்த பின்னர்தான் தோன்றுகிறது. அத்தனை வேகம்.


--------------------------------------------------

‘அழிக்கப் பிறந்தவன்’ - சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் விற்பனைக்கு கிடைக்கும். தொடர்பு எண் : 9940446650.
விலை ரூ.50/- மட்டுமே. பக்கங்கள் : 96.
ஆன்லைனில் வாங்க...