25 மே, 2009

இளையராஜா!


வால்மீகி படவிழாவில் இளையராஜா பேசியதை கேட்டு எனக்கும் முதலில் அதிர்ச்சியாக இருந்தது. யாரையும் இவ்வளவு விட்டேத்தியாக மேடையில் அவர் பேசியதாக நினைவில்லை. சில மேடைகளில் சூடாகியிருக்கிறார். ஆனாலும் தனிப்பட்ட முறையில் பெயரையெல்லாம் சொல்லித் திட்டியதில்லை.

மிஷ்கினைப் பற்றி பெரிய அபிப்பிராயம் எதுவும் எனக்கு கிடையாது. அவரது முதல் படம் மற்றவர்கள் சொல்லுமளவுக்கு ஆஹா, ஓஹோவென்றெல்லாம் எனக்கு படவில்லை. ’வாளமீனுக்கும்’ பாட்டால் தப்பித்தது. இரண்டாவது படமும் சுமார்தான். ஆனாலும் அவரது பேட்டிகளைப் பார்த்தால் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் மாதிரி பேசுவார்.

கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் யோகியாக மாறிவிட்ட இளையராஜா அவர் மீது கோபப்பட என்னதான் காரணம் இருக்கமுடியும்?

மிஷ்கினின் நந்தலாலா படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படம் பற்றி பேசும்போதெல்லாம் இளையராஜாவைப் பற்றி தவறாமல் சொல்லிவந்தார் மிஷ்கின். சிலநாட்களாக இளையராஜாவின் பெயரை அவர் உச்சரிக்காதது போல தெரிந்தது. ஏதோ புகைச்சல் என்று அப்போதே யூகிக்க முடிந்தது. விசாரித்துப் பார்த்தால் இளையராஜாவை வற்புறுத்தி ஐந்து பாடல்கள் கேட்டு வாங்கியவர் படத்தில் இரண்டு பாடல்களை மட்டுமே பயன்படுத்திக் கொண்டதாக சொல்கிறார்கள். அதுகூட இயக்குனரின் சுதந்திரம்.

இருப்பினும் இளையராஜாவுக்கு தெரியாமலேயே ‘ஏலிலோ’ என்ற நரிக்குறவப் பாடல் ஒன்றினை படத்தில் மிஷ்கின் சேர்த்ததாக சொல்கிறார்கள். அதாவது அப்படத்தின் இசையமைப்பாளருக்கு தெரியாமலேயே ரெகார்டிங் ஸ்டுடியோவில் ஒரு சவுண்ட் என்ஜினியரின் உதவியோடு இப்பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டதாம். இப்படி ஒரு பாடல் படத்தில் இருப்பதையே அப்படத்தின் இசையமைப்பாளர் யாரோ சொல்லி கேள்விப்படுவது கொடுமைதானே?

‘வால்மீகி’ இசைமேடையில் மிஷ்கினை பார்த்ததுமே இளையராஜா பொங்கிவிட்டதின் பின்னணி இதுதான் என்று சினிமா நண்பர்கள் சொல்கிறார்கள்.

இளையராஜா இதுபோல தொழிற்முறை சர்ச்சைகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல. ‘அஞ்சலி’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவின் போது இளையராஜாவின் கால்களில் திரையுலக முக்கியஸ்தர்கள் விழுந்து ஆசிப்பெற்றார்களாம். அக்காலக் கட்டத்தில் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ராஜ்கிரண் போன்றோர் அம்மாவின் காலில் விழும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாதிரி இளையராஜாவைக் கண்டதுமே காலில் ‘தொப்பென்று’ விழுவது வழக்கம்.

அதே மேடையில் வீற்றிருந்த தமிழ் சினிமாவின் உச்சத்துக்கு அது உறுத்தியதாம். உச்சமும், இளையராஜாவும் அடுத்தப் படத்தில் இணைந்திருந்தார்கள். அப்படத்திலும் இளையராஜாவின் கொடி உச்சத்தின் புகழைவிடவும் அதிகமாக பறந்தது. தமிழின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இன்றளவும் பட்டியலிடப்படும் அப்படத்தின் இயக்கம், நடிப்பினையும் தாண்டி இளையராஜாவின் இசை சிரஞ்சீவியாக வாழுவதற்கு இன்றும் பி.பி.சி.யின் உலகளவில் பிரபலமான பாடல்கள் பட்டியலே சாட்சி. அதன்பின்னரே இளையராஜா குறிவைத்து முதுகில் குத்தப்பட்டதாக சொல்வார்கள்.

இளையராஜாவிடமும் குறை இருக்கிறது. அவரது கர்வம் மற்றவர்களிடமிருந்து அவரை தனிமைப்படுத்தியிருக்கிறது. மற்றவர்களுக்கும் கர்வம் உண்டு. ஆனால் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்லை. கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ நூலை நீங்கள் வாசித்திருக்கலாம். அந்நூலில் இளையராஜா குறித்த கவிஞரின் கருத்துகள் மிக முக்கியமானவை. அவற்றை இளையராஜா ஏற்றுக் கொள்கிறாரோ இல்லையோ, மற்றவர்கள் ஒப்புக்கொள்ளும் வண்ணம் எழுதியிருப்பார் கவிஞர்.

இளையராஜா தனது கர்வத்தையும், போராட்டக் குணத்தையும் காட்ட வேண்டிய நேரத்தில் காட்டாததே அவரது பின்னடைவுக்கு காரணமாக அமைந்தது என்பதையும் மறுக்கமுடியாது. திருவண்ணாமலை கோவில் கும்பாபிஷேக விவகாரம் இதற்கு நல்ல சாட்சி. தலித் மக்கள் இளையராஜாவை அம்பேத்கருக்கு இணையாக தங்கள் சுவரொட்டிகளில் வெளிப்படுத்தியப்போது, ‘சாதி அடையாளம் வேண்டாம்’ என்றுகூறி அதைத் தீவிரமாக எதிர்த்தவர் திருவண்ணாமலை கோவில் விவகாரத்தில் மவுனமாக அடங்கியது, அவர்மீதான இமேஜை உடைத்தது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ‘நவீன பார்ப்பனர்’ என்ற அவர்மீதான சொல்லடிகளுக்குப் பின்னால் நியாயமுண்டு என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

‘சிம்பொனி’ சர்ச்சை குறித்து இதுவரை இளையராஜாவிடம் இருந்து தெளிவான பதில் வந்ததே இல்லை. அவர் நிஜமாகவே சிம்பொனிக்கு இசையமைத்தாரா இல்லையா என்பதெல்லாம் பிரச்சினையே இல்லை. அவரது சிம்பொனியை கேட்டுதான் அவரை நேசிக்க வேண்டும் என்ற காரணமெல்லாம் தமிழனுக்கும் இல்லை.

இளையராஜாவின் இசை மட்டுமல்ல, அவரது கர்வத்தையும் சேர்த்தே அவரை ஏனோ எனக்குப் பிடித்திருக்கிறது!

22 மே, 2009

போலி!


"நான் ஒண்ணாவது படிக்கறப்பவே அவன் பிரச்சினை ஆரம்பிச்சிடிச்சி. நான் எந்த கலர் டிரஸ் போடுறனோ அதே கலர்லே அவனும் டிரஸ் பண்ணுவான். நான் எதுவெல்லாம் வாங்குறனோ அதுவெல்லாம் அவனும் அடம்பிடிச்சி வாங்குவான். என்னோட பக்கத்து வீட்டு பையன் என்கிறதாலே நான் என்னவெல்லாம் பண்ணுறேன்னு பாக்குறது அவனுக்கு ரொம்ப ஈஸி"

"இண்ட்ரெஸ்டிங்.. அப்புறம்?"

"ஒவ்வொரு விஷயத்துலேயும் என்னை இமிடேட் பண்ண ஆரம்பிச்சான். என்னை மாதிரியே தலை வாருவான். நான் எந்த கலர் ஸ்கூல் பேக் வெச்சிருக்கேனோ, அதே கலர் பேக் தான் அவனும் வெச்சிருப்பான். எங்க ரெண்டு பேரையும் ரெட்டையர்னே எல்லாரும் நினைக்க ஆரம்பிச்சாங்க"

"ஓஹோ"

"ஆச்சரியம் என்னன்னா என்னை அப்படியே காப்பியடிச்சதாலே என் லெவலுக்கு அவனுக்கும் இண்டலிஜென்ஸ் இருந்தது. டென்த் ஸ்டேண்டர்ட் வரைக்கும் நான் தான் க்ளாஸ் பர்ஸ்ட். அவன் செகண்ட்"

"ம்"

"டென்த் பைனல் எக்ஸாம்லே தான் முதல் தடவையா அவன்கிட்டே தோத்தேன். அவன் ஸ்கூல் பர்ஸ்ட். நான் செகண்ட். எனக்கு ரொம்பவும் கஷ்டமாயிடிச்சி!"

"ஏன்?"

"அவன் திருடினது என்னோட பர்சனாலிட்டியை மட்டும் இல்லே சார். அறிவு, உழைப்பு எல்லாத்தையும் திருடிட்டான். என்னோட பல வருஷ கடுமையான உழைப்பு மொத்தமா ஒரு போலிக்கு போயிடிச்சி"

"கூல்... கூல்... அப்புறம் என்ன ஆச்சி?"

"அப்புறம் ஹையர் செகண்டரிலே நான் எடுத்த க்ரூப்பையே தான் அவனும் எடுத்தான். மறுபடியும் காம்பெடிஷன்.. ஆனா இந்த முறை அவனை நான் ஜெயிக்க விடலே. அவன் அடுத்தது என்ன பண்ணுவான்னு எனக்கு தெரியும்கிறதாலே அவனுக்கு ஏத்தமாதிரி நான் காய் நகர்த்தினேன். +2லே நான் தான் டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட். அவன் ரொம்பவும் நொந்து போயிருப்பான்"

"வெரிகுட்"

"கொடுமை என்னன்னா நான் சேர்ந்த காலேஜிலேயே.. அதுவும் என் க்ளாஸ்லேயே சனியன் மறுபடியும் வந்து சேர்ந்தான்"

"அடக்கடவுளே?"

"அவனாலே பர்சனலா ரொம்பவும் அபெக்ட் ஆனது இங்கே தான் சார்!"

"ஏன்? என்னாச்சி மறுபடியும்?"

"காலேஜ் கிரிக்கெட் டீமிலே சேருரதுக்கு ஏகப்பட்ட காம்பெடிஷன். ஸ்பின் பவுலரான அவன் என்னைப் போலவே ஸ்பீட் போட்டு பிராக்டிஸ் பண்ணான். பேட்டிங்கும் என்னை அப்படியே இமிடேட் பண்ணனுதுனால ஓரளவுக்கு சுமாரா ஆடுவான். செலக்சன் அன்னிக்கு எனக்கு லைட்டா பீவர் இருந்ததால அவன் நல்லா பெர்பார்ம் பண்ணி டீமுலே செலக்ட் ஆயிட்டான். நான் ரிஜக்ட் ஆயிட்டேன்"

"என்ன கொடுமை சார் இது?"

"ஆமாங்க.. அதுக்கப்புறமா தான் ரொம்ப பர்சனலா எனக்கு பிரச்சினை கொடுக்க ஆரம்பிச்சான். நான் லவ் பண்ண பொண்ணையே அவனும் லவ் பண்ணான். ஆனா எனக்கு ஒருநாள் முன்னாடியே அவகிட்டே காதலை சொல்லி பிக்கப் பண்ணிட்டான். அவனுடைய உருவம், செயல், நடவடிக்கை எல்லாத்திலேயும் என்னோட பாதிப்பு உண்டு. நியாயமா பாத்தா அவ என்னைத்தானே லவ் பண்ணியிருக்கணும்?"

"கேட்குறதுக்கே பரிதாபமா இருக்குங்க"

"காலேஜ் முடிஞ்சது. அடுத்ததா வேலைக்கு அப்ளை பண்ணிக்கிட்டிருந்தோம். நான் எந்த கம்பெனியெல்லாம் அப்ளை பண்ணேனோ அங்கவெல்லாம் அவனும் அப்ளை பண்ணான். நான் அட்டெண்ட் பண்ண இண்டர்வ்யூ எல்லாம் அவனும் அட்டெண்ட் பண்ணான். துரதிர்ஷ்டவசமா ரெண்டு பேரும் ஒரே கம்பெனியிலே செலக்ட் ஆனோம்"

"என்னங்க இது? உங்க நிழல் மாதிரி இருந்திருக்காரே"

"அட. ஆமாங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம் ஆச்சி. கொழந்தை கூட ஒரே நாள்ல பொறந்ததுன்னா பாத்துக்குங்களேன்"

"!!!!!!"

"அதுக்கப்புறம் தான் ஆகக்கூடாதது எல்லாம் நடந்துடிச்சி. நீங்களே விரிவா பேப்பர்ல படிச்சிருப்பீங்க. டிவியில பாத்துருப்பீங்க. என் வாழ்க்கை சிரிப்பா சிரிச்சிடுச்சி..." மெலிதான கேவலுடன் சொன்னேன்.

"ராகவ். ப்ளீஸ்... ப்ளீஸ்... கண்ட்ரோல் யுவர்செல்ப். ஆக்சுவலா உங்க ப்ராப்ளம் என்னன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. பேசிக்கலா நீங்க ரொம்ப நல்லவர். உங்க போலி கெட்டவர். ஆனா என்ன ஆச்சின்னா உங்களை இமிட்டேட் பண்ணதுனால அவர் பக்காவா ரொம்ப நல்லவரா ஆயிட்டார். அன்பார்ச்சுனேட்லி ஒரு கட்டத்துலே வெறுத்துப் போயி நீங்க அவர் உங்களை இமிடேட் பண்ணக்கூடாதுன்னு உங்களோட ரெகுலர் ஆட்டிட்யூடை மாத்திக்க ஆரம்பிச்சீங்க. சோ, அந்த கட்டத்துலே நீங்க கெட்டவனா மாறிட்டீங்க. ஆச்சரியமான விஷயம் என்னன்னா உங்க போலி நீங்க கெட்டவனா மாறினதுக்கப்புறமா உங்களை இமிடேட் பண்ணுறதை நிறுத்திட்டார். அவர் உண்மையாவே நல்லவனா மாறிட்டார். நல்லா வாழ்ந்துக்கிட்டிருக்கார். நீங்க இப்படி மாறிட்டீங்க... ஓகே நாளையிலேர்ந்து ட்ரீட்மெண்டை ஆரம்பிச்சுடலாம்" என்று சொல்லி "பாய்ஸ்" என்று குரல் கொடுத்தார் டாக்டர் குமார்.

கைகள் கட்டப்பட்ட நிலையிலிருந்த என்னை செல்லில் அடைக்க வீல்சேரில் தள்ளிக் கொண்டு போனார்கள் சிப்பந்திகள். ஏன் கைகள் கட்டப்பட்டிருந்தன என்று கேட்கிறீர்களா? பின்னே? ஒரு தீவிர சைக்கோவின் கைகளை கட்டிவைக்காமல் கொஞ்சவா செய்வார்கள்?

15 மே, 2009

மரியாதை!


முன்பெல்லாம் பரப்பரப்பாக படப்பிடிப்புகளில் இருந்த இயக்குனர் ஒருவர் வாய்ப்பில்லாமல் வீட்டில் உட்கார்ந்து மெகாசீரியல் பார்த்துக் கொண்டிருந்தாராம். சரி படம் இயக்கத்தான் வாய்ப்பில்லை, மெகாசீரியலாவது எடுக்கலாம் என்று தன்னுடைய பழைய படங்களை உல்டா அடித்து மெகா ஸ்க்ரிப்ட் ஒன்றை தயார் செய்தாராம். இந்த நேரத்தில் அரசியல்வாதியாகி விட்ட பழைய ஹீரோ ஒருவர் இயக்குனரிடம் தனக்கு கதை கேட்டாராம். தயாராக இருந்த மெகாசீரியல் ஸ்க்ரிப்ட்டை ஹீரோவிடம் கையளித்தாராம் இயக்குனர். அனேகமாக ‘மரியாதை’ படத்தின் பின்னணிக்கதை இதுவாக இருக்கக்கூடும்.

’வானத்தைப் போல’ படத்துக்குப் பிறகு விஜயகாந்துக்கும் சரி, இயக்குனர் விக்கிரமனுக்கும் சரி, சொல்லிக் கொள்ளும்படியாக சூப்பர் டூப்பர் ஹிட் எதுவுமில்லை. கிட்டத்தட்ட பத்துவருட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்தால்... ‘சூப்பர் டூப்பர் ஃப்ளாப்’

விஜயகாந்த், மீரா ஜாஸ்மினோடு டூயட் பாடுவதைப் பார்ப்பவர்கள் கயிற்றில் தொங்கிவிடலாமா என்று விபரீத முடிவெடுக்கக் கூடும். சீன் சுட அவனவன் ஹாலிவுட் படங்களை பார்க்கும் சூழலில்.. வானத்தைப் போல, பூவே உனக்காக என்று பழைய படங்களை டிவிடியில் திரும்ப திரும்ப பார்த்து சீன் பிடித்திருக்கிறார் விக்கிரமன். பூவே உனக்காக சங்கீதா கேரக்டர் மீரா ஜாஸ்மினுக்கு.

விஜய் ஆண்டனியின் இசை இந்த அளவுக்கு கேவலமாக இருந்ததில்லை. ‘டொய்ங்’கென்றெல்லாம் விக்கிரமனுக்கு அந்த காலத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் பின்னணி போட்டிருக்கலாம். இப்போதும் அதையே ஃபாலோ செய்து கழுத்தறுக்க வேண்டுமா? டிஸ்கோதேவுக்கு போகும் மீனாவை அவமானப்படுத்த கேப்டனும் அங்கே போகிறார். கேப்டனும் டிஸ்கோ ஆடி விடுவாரோ என்று அவனவன் பீதியில் உறைந்துப் போன நிலையில் காளையை அடக்கும் ராமராஜன் மாதிரி பாட்டு பாடுகிறார். இவர் பாடுவதைக் கேட்டு அவமானத்தில் மீனா உறைந்துப் போகிறாராம். படத்திலேயே ரொம்ப ரொம்ப யூத்ஃபுல்லாக இருந்த சீனே இதுதானென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

காமெடி என்ற பெயரில் ரமேஷ்கண்ணா செய்யும் கருமாந்திரங்கள் வாந்தியை வரவழைக்கின்றன. எப்போதுமே விக்ரமன் படங்களில் காமெடி மட்டம் தானென்றாலும் இவ்வளவு மொக்கையாக இருந்ததில்லை. கேப்டன் பஞ்ச் டயலாக் அடித்து பயமுறுத்தவில்லை என்றாலும் மற்றவர்கள் பயமுறுத்துகிறார்கள். ‘இப்போ எல்லார் வீட்டிலேயும் எம்.ஜி.ஆர் போட்டோ இருக்குறமாதிரி நாளைக்கு இவரோட போட்டோ இருக்கும்’

குட்டி குட்டி சீன்களில் முன்பெல்லாம் விக்கிரமனின் புத்திசாலித்தனம் தெரியும். அப்போதெல்லாம் புத்திசாலித்தனமாக தெரிந்தது இப்போது படுமுட்டாள் தனமாக தெரிகிறது. அம்பிகாவுக்கு சமையல் கற்றுத் தருவது, விஜயகாந்த் தங்கச்சிக்கு பாட்டு சொல்லித் தருவது என்று மீராஜாஸ்மின் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் படு அபத்தம். விஜயகாந்த் பி.எஸ்.சி (அக்ரி) படித்து சரியான வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர் என்று சிந்தித்த பாவத்தை காசிக்குப் போயும் விக்ரமனால் கழுவமுடியாது.

கொடுமைகளுக்கெல்லாம் கொடுமையாக க்ளைமேக்ஸ்! :-(

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் கூட இப்படம் சகித்துக் கொள்ளப் பட்டிருக்கும். இன்றைய பின்நவீனத்துவ தமிழ்ச்சூழலில் படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள், அடுத்த காட்சிக்கு வரிசையில் நிற்பவர்களை செருப்பால் அடித்து துரத்துகிறார்கள்.

ராஜாதிராஜா!


ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினால் ஐநூறு ரூபாய்க்கு படம் காட்டுகிறார்கள். டைட்டிலுக்கு கீழே ‘லோ க்ளாஸ் கிங்’ என்று போடுகிறார்கள். நிஜமாகவே குப்பத்துராஜா தான் இந்த ராஜாதிராஜா. இருபது வருடங்களுக்கு முன்னால் ரஜினிக்கு ராஜசேகர் எழுதிய ஸ்க்ரிப்ட் மாதிரியே இருக்கிறது.

மூன்று அண்ணன்களை டாக்டர், வக்கீல், போலிஸ் என்று படிக்க வைக்கிறார் தம்பி லாரன்ஸ். வில்லி சைதை சைலஜாவிடம் சோரம் போய் சமுதாய விரோதிகளாக மாறிவிட்ட அண்ணன்களை பழிக்கு பழி வாங்குவதுதான் கதை. இளைய தளபதி விஜய் நடித்திருந்தால் ஒருவருட ஓட்டம் நிச்சயம். ஹீரோவுக்கு அவ்வளவு மாஸ். ஆக்சனில் அவ்வளவு ஃபோர்ஸ். இந்தளவுக்கு சூடான ஓபனிங் சீன் சமீபத்தில் பார்த்ததில்லை. ஓபனிங்கே இண்டர்வெல் பிளாக்கில் தொடங்குகிறது. அதன்பிறகு கரம் மசாலா பிளாஷ்பேக். ஆங்காங்கே லைட்டாக அடிக்கும் இரட்டைவசன நெடி. தியேட்டரில் விசில் அடங்க நெடுநேரமாகிறது.

லாரன்ஸ் ரஜினியை இமிடேட்டுகிறார். சக்தி சிதம்பரம் பழைய ரஜினிபடங்களை தூசிதட்டி ஸ்க்ரிப்ட் ரெடி செய்திருக்கிறார். படிக்காதவன், நல்லவனுக்கு நல்லவன், தளபதி, மிஸ்டர் பாரத் என்று பல படங்களில் ஞாபகம் பல சீன்களில் வருகிறது. கருணாஸ் இசையில் பேக்கிரவுண்ட் மியூசிக் குட். குத்துப்பாடல்கள் வெரி வெரி குட். மசாலாவுக்கு உரப்பு சேர்க்க அண்ணன் விஜய டி.ஆர். ஒரு பாட்டு பாடியிருப்பது கூடுதல் சிறப்பு.

ஒன்றுக்கு மூன்று ஹீரோயின்கள். எடைகுறைந்த மும்தாஜ் அழகான வில்லி. மெயின் ஹீரோயின் கிரண்ரத்தோட் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. வசனகர்த்தாவே வசனத்தில் சொல்லிவிடுகிறார். ’கிரண் ஒரு பஞ்சரான ட்யூப்பாம். மும்தாஜ் நல்லா காத்தடிச்ச டன்லப் டயராம்’

முதல்பாதியில் மீனாட்சி ஆட்சி. கருப்புசாமி குத்தகைதாரரில் குத்துவிளக்காய் வந்தவர் இப்படத்தில் குத்து குத்துவென குத்தியிருக்கிறார். அழகான லகான் கோழி. அதுவும் 90% உரிச்ச கோழி. இவரது தொப்புளுக்கு மட்டும் சிறப்பு மேக்கப் போட்டிருக்கிறார்கள் போலும். அல்லது ஏதேனும் கிராபிக்ஸா என்று தெரியவில்லை. அழகான தொப்புள். ஹாலிவுட் தரம்.

இரண்டாவது பாதியில் காம்னா வருகிறார். நர்ஸாக வருபவர் தொப்புளுக்கு கீழே நாலேமுக்கால் இஞ்ச் வரைக்கும் தான் உடையணிந்து வருகிறார். இவரது ஓப்பனிங் அபாரம் என்பதால் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். ஆனாலும் அதற்கும் மேலே எதுவும் காட்டாமல் ஒரு குத்துப்பாட்டோடு இயக்குனர் இவரது கேரக்டரை முடித்து வைத்துவிடுவதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

படத்தில் ஹீரோயின், வில்லியென்று ஆளாளுக்கு மாராப்பு விஷயத்தில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டதால் கேமிராமேன் புகுந்து விளையாடியிருக்கிறார். ஏகப்பட்ட ஐட்டங்களை இறக்குமதி செய்திருப்பதில் இயக்குனரின் சாமர்த்தியம் மிளிர்கிறது. படத்துக்குப் பாடல் எழுதியிருப்பவர் மசாலா கிங் பேரரசு. ‘கத்தரிக்கா கத்தரிக்கா காம்பு நீண்ட கத்தரிக்கா’ என்ற இலக்கிய கவித்துவம் மிக்கப் பாடல் மூலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் தன் பெயரை பொன்னெழுத்துக்களால் பொறித்து விட்டார் பேரரசு.

படத்தின் முதல் பாதியில் நிறைய ப்ளஸ். இரண்டாவது பாதியில் நிறைய மைனஸ். குறைந்தது 300 காட்சிகளாவது இருப்பதே இப்படத்தின் பலமும், பலகீனமும். ஆனாலும் இந்த லோ கிளாஸ் கிங் வசூலிலும் கிங்காக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். தெலுங்கில் லாரன்ஸுக்கு நல்ல அறிமுகம் உண்டு என்பதால் அங்கேயும் டப்பினால் டப்பு அள்ளலாம்.

ராஜாதிராஜா - மீனாட்சியின் தொப்புளுக்கு ஜே!

11 மே, 2009

பிரச்சாரம் - யாரு பெஸ்ட்?


தேர்தலில் வாக்குகளை கவருவதில் பிரச்சாரத்துக்கு பிரதான இடமுண்டு. திமுகவின் பிரச்சாரம் பொதுவாக நடுத்தர வர்க்கத்தை குறிவைத்தே நடத்தப்படும். எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் அடித்தட்டு மக்களை அடிப்படையாக கொண்டு பிரச்சாரத்தை நடத்தினார். அடித்தட்டு மக்களுக்கான பிரச்சாரம் தான் எடுபடும் என்பதை தன்னுடைய அறுபதாண்டுக்கால அரசியல் அனுபவத்தில் கடந்த 2006 தேர்தலில் தான் கலைஞர் உணர்ந்தார்.

சிறுவயதில் டி.ராஜேந்தரின் பிரச்சாரத்தை கண்டு அதிசயித்திருக்கிறேன். மேடையில் பேசும்போது விரல் சொடுக்கி பேக்கிரவுண்டு மியூசிக் தந்து ‘லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம்.. டண்டனக்கா’ என்று பாடுவார். கூட்டம் சொக்கிப்போய் நிற்கும். தீப்பொறி, வண்ணை தேவகி, வெற்றிகொண்டான் வகையறாக்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு லாயக்கில்லை. இதே லிஸ்டில் வைகோவையும் சேர்த்துக் கொள்ளலாம். லோக்கல் பாலிடிக்ஸ் பேசாமல் உலக அரசியலும், ஈழப்போராட்டமும் பேசி பிரச்சாரம் செய்வதில் அர்த்தமேயில்லை. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகளின் பிரச்சாரம் இதனால் தான் எப்போதும் விழலுக்கு இறைத்த நீராகிறது. இந்திய கம்யூனிஸ்டாவது விவசாயிகள் பிரச்சினை பற்றிப் பேசுகிறது.

கூட்டங்கள் தவிர்த்துப் பார்த்தால் சுவர் விளம்பரங்கள், பிளெக்ஸ் பேனர்கள் போன்றவை சின்னங்களை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தும் பிரச்சார சாதனங்கள். தேர்தல் கமிஷனின் கெடுபிடியெல்லாம் நகர எல்லைகளோடு முடிந்துவிடுகிறது. தாம்பரத்தை தாண்டினால் எல்லா வருமே ஏதோ ஒரு கட்சி வண்ணத்தை தாங்கித்தான் ஆகவேண்டியிருக்கிறது.

ஜெ. பிரச்சாரமே செய்யவேண்டியதில்லை. அவர் வந்து நின்றாலே போதும். இம்முறை ஜெ.வின் பிரச்சாரம் புதுமையானது. டெல்லி தலைவர்கள் பாணியில் பிரச்சாரம் செய்திருக்கிறார். இது தமிழ்நாட்டுக்கு புதியது. ஒவ்வொரு தொகுதியில் ஒரு பிரச்சார மாநாடு. தெருத்தெருவாக வேனில் போய் பேசவில்லை. ஹெலிகாப்டரில் பதவிசாக இறங்கி குவிக்கப்பட்ட பிரம்மாண்ட கூட்டத்தைப் பார்த்து ’தனி ஈழம்’ என்று முழங்கினார். போயஸ் கார்டனிலிருந்து ஆவடிக்குப் போகக்கூட, மீனம்பாக்கம் போய் ஹெலிகாஃப்டரில் பயணித்த அம்மான்னா அம்மாதான். ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டமும் ஒரு மாநிலமாநாட்டுக்கு சமம். இதுபோன்ற கூட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பு குறைவு. அக்கட்சி சார்பான ஊடகங்கள் இதை எப்படி பூஸ்ட் செய்து காண்பிக்கிறது என்பது முக்கியம். ஜெயாடிவி அதை சரியாகவே செய்திருக்கிறது. ஆனால் எத்தனை பேர் ஜெயாடிவியை பார்த்திருப்பார்கள்? என்ற கேள்வியை புறந்தள்ளிவிட முடியாது.

கலைஞரின் பிரச்சாரம் மிகக்குறைந்த அளவே இருந்த தேர்தல் இது. திருச்சியில் நல்லக் கூட்டம். சென்னை தீவுத்திடலில் கூடிய கூட்டம் தேசியமுன்னணிக்கு 89ல் கூடிய கூட்டத்தை நினைவுப்படுத்தியது. ஈழவிவகாரத்தில் கலைஞர் மீது திமுக உடன்பிறப்புகளே கடுங்கோபத்தில் இருந்தார்கள். உண்ணாவிரதம், அப்போலோவில் படுத்துக்கொண்டே உரை என்று அடுத்தடுத்து கலைஞர் போட்ட போடு மக்களை கன்வின்ஸ் செய்ததோ இல்லையோ, திமுக உடன்பிறப்புகளை கன்வின்ஸ் செய்திருக்கிறது. என்ன ஆனாலும் சரி. கலைஞர் இருக்கும் வரை உதயசூரியனுக்கே கண்ணை மூடிக்கொண்டு ஓட்டை போட்டுவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு பல உடன்பிறப்புகள் வந்திருக்கிறார்கள்.

திமுகவின் பிரச்சாரம் தளபதி ஸ்டாலினையே இம்முறை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. சில காலம் முன்பு உடல்நலம் குன்றியிருந்த தளபதி தாங்குவாரா? என்ற கேள்வி திமுகவினருக்கு இருந்தது. கிட்டத்தட்ட 85 சதவிகித தமிழ்நாட்டை வேனிலேயே சுற்றி வந்து ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரத்துக்கும் மேலாக தினமும் பிரச்சாரம் செய்து திமுகவின் அடுத்தத் தலைவர் என்ற இமேஜை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் தளபதி. இதுவரை இவர் பாமக தலைவர் மருத்துவர் அய்யாவை இந்த தேர்தலில் சீண்டிய அளவுக்கு முன்னெப்போதும் சீண்டியதில்லை. ‘அரசியல் வியாபாரி’ என்று தளபதி விமர்சித்தது என்னைப் போன்ற திமுகவில் இருக்கும் அய்யா அனுதாபிகளுக்கு கொஞ்சம் அதிருப்தியாக தானிருக்கிறது. ஆனாலும் மக்கள் ரசித்து கைத்தட்டுகிறார்களே? என்ன செய்வது?

தளபதியை விட மிக அதிகமாக இத்தேர்தலில் உழைத்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இம்முறையும் இருபத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தூரத்தை எம்.ஜி.ஆரின் பிரச்சார வேனிலேயே பயணித்து சிங்கிள் சிங்கமாய் முரசுக்கு வாக்கு கேட்டு வந்தார். கடந்த முறை தினமலர், விகடன் போன்ற ஊடகங்கள் கைகொடுத்தது. இம்முறை ஊடகங்களின் ஆதரவு பெரியளவில் அவருக்கு இல்லாவிட்டாலும் ஒவ்வொரு ஊருக்கும் நேரில் சென்று வாக்கு கேட்ட அவரது பண்பு அவருக்கு கைகொடுக்கலாம்.

மருத்துவர் அய்யாவின் பிரச்சாரம் இந்த முறை கொஞ்சம் டல் தான். அவருக்கு வயதாகிறது இல்லையா? சின்ன அய்யாவை களமிறக்கியிருக்கிறார். “கொல்லைப்புற வழியா ஏன் வந்தேன்னு உன் தங்கச்சியை கேளு. முப்பது வருஷமா உன் மாமாவைக் கேட்டியா?” என்று தயாநிதி ரேஞ்சில் ஸ்டாலினை ஒத்தைக்கு ஒத்தை அழைத்தது சூப்பர். ஆனாலும் தமிழ்நாடு முழுக்கச் செல்லாமல் குறிப்பிட்ட தொகுதிகளிலில் மட்டும் லைட்டாக உடலை வருத்திக் கொள்ளாமல் பிரச்சாரம் செய்தார். எப்போதுமே கிராமங்களில் திண்ணை பிரச்சாரம் செய்யும் பா.ம.க. இம்முறை மேடைப்பிரச்சாரங்களிலே அதிகக் கவனம் செலுத்தியதாகத் தெரிகிறது.

காங்கிரஸின் பிரச்சாரத்தைப் பற்றி என்ன எழுதுவது? சூரியன் உச்சிக்கு வந்ததுமே பிரச்சாரத்தை முடிச்சுக்கலாமா? என்பார்கள். டெல்லியிலிருந்து யாராவது தலைவர் வந்தால் உடல்நோகாமல் ஒரு கூட்டத்தை நடத்திவிட்டு போதுமென்ற மனதோடு திருப்தியடைந்து விடுவார்கள். கூட்டணிக்கட்சிகள் இல்லாவிட்டால் காங்கிரஸ் பிரச்சார மேட்டரிலும் ஜீரோதான். திருமாவின் பிரச்சார வீச்சு இம்முறை ரொம்பவும் குறைவு. காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

சீமான் - பாரதிராஜா கூட்டம் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என் பார்வையில் இந்த கூட்டம் ஒரு பெரிய காமெடியன்கள் கூட்டமாகவே தெரிகிறது. காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரம் என்று இவர்கள் நடத்திய கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் தொண்ணூறு சதவிகிதம் அதிமுக கூட்டணித் தொண்டர்கள். மீதி பேர் சினிமாக்காரர்களை வேடிக்கை பார்க்க வந்தவர்கள். இவர்கள் பிரச்சாரம் செய்யாமலேயே காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியடையும் நிலையில் தான் இருக்கிறார்கள். தோற்றதும், எங்களால் தான் தோற்றார்கள் என்று மார்தட்டிக் கொள்ளப் போகிறார்கள்.

பிரச்சாரம் என்ற அடிப்படையில் பார்க்கப் போனால் இந்த முறை அம்மா தான் லீடிங். ஆனால் இத்தேர்தலில் மேடை மற்றும் தெருப்பிரச்சாரத்தைவிட முக்கியமான நவீன பிரச்சார மேட்டர் ஒன்றிருக்கிறது. அரசல் புரசலாக கேள்விப்படுவதில் ஒரு வாக்குக்கு ரூ.200/- என்று தொகுதி தொகுதியாக கட்சிப்பேதமில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. எந்தக் கட்சி முழுமையாக இந்த மேட்டரில் கவரேஜ் செய்கிறதோ அக்கட்சிக்கே ’பிரச்சார’ அனுகூலம் அதிகம். தோராயமாக பத்து லட்சம் வாக்காளர்களை கொண்ட ஒரு தொகுதியில் 100% பிரச்சாரத்தை ஒரு கட்சி முடித்துவிட்டதாக கேள்விப்பட்டதில் மயக்கமே வந்துவிட்டது. அதிகாரப்பூர்வமாக நேற்று மாலையோடு மற்ற பிரச்சாரங்கள் முடிந்துவிட்டாலும் தேர்தல் நாளான நாளை மாலை வரைக்கும் கூட இந்த நவீனப்பிரச்சாரம் நடந்து கொண்டுதானிருக்கும்.