15 மே, 2009

மரியாதை!


முன்பெல்லாம் பரப்பரப்பாக படப்பிடிப்புகளில் இருந்த இயக்குனர் ஒருவர் வாய்ப்பில்லாமல் வீட்டில் உட்கார்ந்து மெகாசீரியல் பார்த்துக் கொண்டிருந்தாராம். சரி படம் இயக்கத்தான் வாய்ப்பில்லை, மெகாசீரியலாவது எடுக்கலாம் என்று தன்னுடைய பழைய படங்களை உல்டா அடித்து மெகா ஸ்க்ரிப்ட் ஒன்றை தயார் செய்தாராம். இந்த நேரத்தில் அரசியல்வாதியாகி விட்ட பழைய ஹீரோ ஒருவர் இயக்குனரிடம் தனக்கு கதை கேட்டாராம். தயாராக இருந்த மெகாசீரியல் ஸ்க்ரிப்ட்டை ஹீரோவிடம் கையளித்தாராம் இயக்குனர். அனேகமாக ‘மரியாதை’ படத்தின் பின்னணிக்கதை இதுவாக இருக்கக்கூடும்.

’வானத்தைப் போல’ படத்துக்குப் பிறகு விஜயகாந்துக்கும் சரி, இயக்குனர் விக்கிரமனுக்கும் சரி, சொல்லிக் கொள்ளும்படியாக சூப்பர் டூப்பர் ஹிட் எதுவுமில்லை. கிட்டத்தட்ட பத்துவருட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்தால்... ‘சூப்பர் டூப்பர் ஃப்ளாப்’

விஜயகாந்த், மீரா ஜாஸ்மினோடு டூயட் பாடுவதைப் பார்ப்பவர்கள் கயிற்றில் தொங்கிவிடலாமா என்று விபரீத முடிவெடுக்கக் கூடும். சீன் சுட அவனவன் ஹாலிவுட் படங்களை பார்க்கும் சூழலில்.. வானத்தைப் போல, பூவே உனக்காக என்று பழைய படங்களை டிவிடியில் திரும்ப திரும்ப பார்த்து சீன் பிடித்திருக்கிறார் விக்கிரமன். பூவே உனக்காக சங்கீதா கேரக்டர் மீரா ஜாஸ்மினுக்கு.

விஜய் ஆண்டனியின் இசை இந்த அளவுக்கு கேவலமாக இருந்ததில்லை. ‘டொய்ங்’கென்றெல்லாம் விக்கிரமனுக்கு அந்த காலத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் பின்னணி போட்டிருக்கலாம். இப்போதும் அதையே ஃபாலோ செய்து கழுத்தறுக்க வேண்டுமா? டிஸ்கோதேவுக்கு போகும் மீனாவை அவமானப்படுத்த கேப்டனும் அங்கே போகிறார். கேப்டனும் டிஸ்கோ ஆடி விடுவாரோ என்று அவனவன் பீதியில் உறைந்துப் போன நிலையில் காளையை அடக்கும் ராமராஜன் மாதிரி பாட்டு பாடுகிறார். இவர் பாடுவதைக் கேட்டு அவமானத்தில் மீனா உறைந்துப் போகிறாராம். படத்திலேயே ரொம்ப ரொம்ப யூத்ஃபுல்லாக இருந்த சீனே இதுதானென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

காமெடி என்ற பெயரில் ரமேஷ்கண்ணா செய்யும் கருமாந்திரங்கள் வாந்தியை வரவழைக்கின்றன. எப்போதுமே விக்ரமன் படங்களில் காமெடி மட்டம் தானென்றாலும் இவ்வளவு மொக்கையாக இருந்ததில்லை. கேப்டன் பஞ்ச் டயலாக் அடித்து பயமுறுத்தவில்லை என்றாலும் மற்றவர்கள் பயமுறுத்துகிறார்கள். ‘இப்போ எல்லார் வீட்டிலேயும் எம்.ஜி.ஆர் போட்டோ இருக்குறமாதிரி நாளைக்கு இவரோட போட்டோ இருக்கும்’

குட்டி குட்டி சீன்களில் முன்பெல்லாம் விக்கிரமனின் புத்திசாலித்தனம் தெரியும். அப்போதெல்லாம் புத்திசாலித்தனமாக தெரிந்தது இப்போது படுமுட்டாள் தனமாக தெரிகிறது. அம்பிகாவுக்கு சமையல் கற்றுத் தருவது, விஜயகாந்த் தங்கச்சிக்கு பாட்டு சொல்லித் தருவது என்று மீராஜாஸ்மின் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் படு அபத்தம். விஜயகாந்த் பி.எஸ்.சி (அக்ரி) படித்து சரியான வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர் என்று சிந்தித்த பாவத்தை காசிக்குப் போயும் விக்ரமனால் கழுவமுடியாது.

கொடுமைகளுக்கெல்லாம் கொடுமையாக க்ளைமேக்ஸ்! :-(

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் கூட இப்படம் சகித்துக் கொள்ளப் பட்டிருக்கும். இன்றைய பின்நவீனத்துவ தமிழ்ச்சூழலில் படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள், அடுத்த காட்சிக்கு வரிசையில் நிற்பவர்களை செருப்பால் அடித்து துரத்துகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக