3 மே, 2009

வெய்யிலுக்கு ஜே!


சுட்டெரிக்கத் தொடங்கியிருக்கிறது வெய்யில். இன்று முதல் கத்திரி வேறு ஆரம்பமாம். தேர்தல் சூடு வேற சேர்ந்துக்கொள்ள பற்றியெறிந்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. அம்மா பிரச்சாரத்துக்கு காலை பத்து மணிக்கே ‘அகதிகளை’ பிடித்துக் கொண்டு வந்துவிடுகிறார்கள். கட்சிக்காரர்களின் பாதுகாப்பு முகாம் ராஜபக்‌ஷேவின் முகாம்களை விட கொடூரமானது.

பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறு அம்மாவின் இன்ஸ்ட்ரக்‌ஷன். சுட்டெரிக்கும் உச்சிவெயில் நேரத்தில் தான், அதாவது ஒரு மணிக்குப் பிறகு அம்மா ஏர்கூலர்களால் குளிர்விக்கப்பட்ட மேடையில் ஏறுகிறார். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் பாதுகாப்பு வளையத்துக்குள் மாட்டிக் கொண்டவர்களின் நிலை பரிதாபம். ஆண்கள் கூட ஓக்கே. இயற்கை உபாதை தொந்தரவுகளால் அவதிப்படும் பெண்களின் நிலைமைதான் பரிதாபம். சூடான பிரியாணிக்காகவும், ஐநூறு ரூபாய் பணத்துக்காகவும் தமிழினம் இங்கே தேர்தலுக்காக சித்திரவதைப் படுத்தப்படுகிறது. எது எதையோ பற்றியெல்லாம் விசித்திரமான வழிகாட்டுதல்களையும், உத்தரவுகளையும் போடும் தேர்தல் கமிஷன் இந்த மனிதவிரோதப் போக்குக்கு மணி கட்டினால் தேவலை.

நல்ல வெயிலில் மேடையேறி பின்வெயில் என சொல்லப்படும் மாலை நான்கு மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டரில் திரும்புவதற்கு அம்மா சொல்லும் காரணம் வினோதமானது. “என் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருக்கிறது. எனவே தான் ஹெலிகாப்டரில் பயணிக்கிறேன். பகலில் பிரச்சாரம் செய்கிறேன்”. அல்குவைதாவோ, தாலிபனோ அம்மாவின் உயிருக்கு நிச்சயம் குறிவைக்கப் போவதில்லை. பின்பு யார்?

முன்பெல்லாம் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருப்பார். இப்போது தான் தமிழீழத்தாய் ஆகிவிட்டாரே? அப்புறம் எப்படி இவர் உயிருக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படும்? இந்த மாதிரி லாஜிக்கலான கேள்வி கேட்டாலும் கூட திமுகவின் அடிவருடி, தமிழினத் துரோகி, இத்யாதி.. இத்யாதியென்று பின்னூட்டம் போட புலம்பெயர் போராளிகளும், நடுநிலை நாயகங்களும் தயாராக இருக்கிறார்கள் என்பதே மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சைக்கோக்கள் மாதிரி நாலுக்கு நாற்பது பதிவுகள் கலைஞரை இழிமொழியால் திட்டி இணையத்தில் பதிவிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தலைவர் பிரபாகரனா, இல்லை தலைவி ஜெயலலிதாவா என்று சந்தேகம் வருகிறது.

* - * - * - * - * - * - *

விஜயகாந்தின் பிரச்சார விளம்பரம் சன் தொலைக்காட்சியில் வெளியாகிறது. “முரசு சின்னத்துக்கு வாக்களியுங்கள்” என்று கட்டிவிட்ட தொண்டையில் கமறலாக பேசுகிறார். கடந்த தேர்தலில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றைய தேதியில் பிரச்சாரத்தில் கில்லி விஜயகாந்த் தான். ஹெலிகாப்டரில் ஜெ.வும், காரில் ஸ்டாலினும் இன்னமும் பாதி தமிழகத்தை கூட சுற்றிவர இயலாத நிலையில் தமிழகமெங்கும் பிரச்சாரத்தை வேனிலேயே கம்பீரமாக முடித்துவிட்டு ஓய்வு, ஒழிச்சல் இன்றி இரண்டு நாட்களாக சென்னையை சுற்றி வருகிறார். 70களிலும், 80களிலும் கலைஞரிடமிருந்த தேனிக்கு ஒப்பான உழைப்பை இன்றைய விஜயகாந்திடம் காணமுடிகிறது.

* - * - * - * - * - * - *

திமுகவின் பிரச்சாரம் இம்முறை தளபதி ஸ்டாலினையும், பேராசிரியரையுமே நம்பிக்கொண்டு இருக்கிறது. கலைஞரின் திருச்சி பிரச்சாரத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்திருக்கிறது. நேற்று மாலை சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்க வேண்டிய நிலையில் உடல்நலக் குறைவால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. முதன்முறையாக கலைஞரின் பிரச்சாரம் பிரதானமாக இல்லாத நிலையில் திமுக தேர்தலை சந்திக்கிறது. இந்த பேரிழப்பை திமுகவினரால் ஈடுகட்டவே இயலாது. கலைஞரை விட வயதானவராக இருந்தாலும் இம்முறை பேராசிரியர் சுறுசுறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். நல்லவேளையாக ஆற்காட்டார் சென்னையோடு முடங்கிவிட்டார்.

* - * - * - * - * - * - *

தேர்தல் என்றாலே வைகோ தான் நினைவுக்கு வருவார். இம்முறை ஏனோ தொகுதிக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறார். ’வெற்றி வாய்ப்பு வீக்’ என்ற தகவல் தான் அவரது மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை முடக்கிவிட்டது என்கிறார்கள். ’கை’ சின்னத்துக்கும் ஓட்டு கேட்க வேண்டுமே என்ற சங்கடத்தால் தான் திருமா கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் சிதம்பரமே கதி என்று கிடக்கிறாராம். முதன்முறையாக தேர்தல்களம் காணும் மனிதநேய மக்கள் கட்சியின் சுறுசுறுப்பு அபாரம். இதே வீரியத்தோடு தொடர்ந்து இருந்தால் 2011 சட்டசபைத் தேர்தலின் போது சில அதிர்வு அலைகளை இவர்கள் கிளப்ப முடியும்.

பா.ம.க. நிலைமைதான் படுமோசம். இந்த தேர்தல் பா.ம.க.வின் எதிர்காலத்துக்கு முக்கியமான ஒன்று. மூன்று தொகுதி தேறினாலேயே பெரிய விஷயம் போலிருக்கிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக பா.ம.க.வுக்கு ஆதரவு தந்துகொண்டிருந்த வன்னிய இனம் இம்முறையும் அதே ஆதரவைத் தருமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இந்த தேர்தலில் பெறும் வெற்றியை வைத்து தான் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடமோ, அதிமுகவிடமோ பா.ம.க வியாபாரம் பேசமுடியும்.

* - * - * - * - * - * - *

பெரியார் திராவிடர் கழகம் சென்னையில் திமுகவுக்கு எதிரான வன்முறையில் இறங்கியிருப்பது ஆச்சரியம். ஏரியாவுக்கு நாலு பேர் அந்த கழகத்தில் இருந்தாலே அது உலக அதிசயம். ஆளுங்கட்சியான திமுகவின் பிரச்சார அலுவலகத்தை அடித்து நொறுக்குமளவிற்கு இம்ப்ரூவ் ஆகியிருக்கிறார்கள் என்றால் பொருளாதார ரீதியாகவும், ’மற்ற’ ரீதியாகவும் ஈழத்தலைவியிடமிருந்து உதவி கிடைத்திருக்குமென்றே எடுத்துக் கொள்ளலாம். கடைசியில் இக்கழகம் ’அடியாள்’ ரேஞ்சுக்கு ஆகிப்போனது வருத்தமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக