4 மே, 2009

போயஸ்கார்டன் அங்காள பரமேஸ்வரி மகிமை!


சென்னை போயஸ்கார்டன் திருத்தலத்தில் ஸ்ரீ ஜெயலலிதா அம்மா ஆலயத்தில் ஒரு அற்புதம் நடந்தது. அந்த சமயம் ஒரு தேர்தல் நடந்தது. தேர்தலை கண்ட கோபாலசாமி பூசாரி பயப்படுவதை பார்த்ததும், ”நான் பூமியில் தீயசக்திகளை அழிக்க அவதாரம் எடுத்திருக்கிறேன். தர்மத்தை கெடுக்கும் தீயவன் கருணாநிதியைஅழிப்பேன். இந்த அதிசயத்தை கேட்பவர்கள் தமிழ்நாடு முழுக்க இரட்டை இலைக்கு ஓட்டு போடுமாறு பிரச்சாரம் செய்தால் அவர்கள் நினைத்ததை கூட்டு எண் ஒன்பதாக வரும் நாளொன்றில் தீர்த்து வைப்பேன். இந்த அற்புதத்தை கேள்விப்பட்டும் கூட இன்று, நாளை என்று நாட்களை கடத்தி, பிரச்சாரம் செய்யாவிட்டால் அவர்களுக்கும் கருணாநிதி கதிதான் ஏற்படும்” என்று கனவில் கூறிவிட்டு அங்காள பரமேஸ்வரியின் அவதாரம் ஸ்ரீ ஜெயலலிதா அம்மையார் மறைந்துவிட்டார்.

இந்தக் கனவினை நம்பிய பூசாரி கோபாலசாமி ஊரெங்கும் மேடைபோட்டு இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார். அவருக்கு சரியாக ஒன்பதாவது நாளில் ரூபாய் நாற்பது கோடி கிடைத்தது. இந்த விஷயத்தைக் கேட்டு பாரக் ஒபாமா என்பவர் அமெரிக்கா முழுக்க அனுமார் சிலையோடு போய் இரட்டை விரலை காட்டினார். அவர் இரட்டை விரலை காட்டிய தொண்ணுற்றி ஒன்பதாவது நாளில் அமெரிக்க அதிபர் ஆனார்.

விஷயத்தை கேள்விப்பட்ட தமிழக கம்யூனிஸ்டுகள் மேடையில் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்பதாக கனவு மட்டுமே கண்டனர். அடுத்த ஒன்பதாவது நிமிடத்திலேயே கிடைக்க வேண்டியது வெயிட்டாக கிடைத்து இன்று ஊரெல்லாம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு வருகிறார்கள். ராமதாஸர் என்ற பக்தரும் அம்மாவையும், இரட்டை இலையையும் மனதுக்குள் நினைத்து போயஸ் கார்டனை சுற்றி ஒன்பது முறை அங்கப்பிரதட்சணம் செய்ய என்ன நினைத்தாரோ அது ஒன்பது நாளில் கிடைத்தது.

இந்த அற்புதங்களை எல்லாம் கேள்விப்பட்டும் கூட இரட்டை இலைக்கு வாக்கு கேட்க மறுத்த கருணாநிதிக்கு முதுகுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. எனவே தமிழீழம் வேண்டுமென்ற கனவோடு இருப்பவர்கள் அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்ஸர்லாந்து, தென்னாப்பிரிக்கா, வட அமெரிக்காவென அவரவர் இருக்கும் பகுதிகளில் மேடை போட்டு அங்காளப் பரமேஸ்வரியாம் அம்மன் ஸ்ரீ ஜெயாவை பூஜை செய்து வழிபட்டு இரட்டை இலைக்கு வாக்கு கேட்டால் தேர்தல் முடிந்த ஒன்பதாவது நாளே தமிழீழம் மலரும்.

இதைப் படித்துவிட்டு உதாசீனம் செய்பவர்கள் பன்றிக்காய்ச்சல் வந்து தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படுவார்கள் என்பது அவர்கள் தலையில் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஓம்சக்தி அற்புதம்! ஆனால் உண்மை!! ஆதிபராசக்தி!!! ஜெயாசக்தி!! சசிசக்தி!!

தொடர்புடைய பதிவு :
அம்மா கொடுத்த ஆன்மபலம்!
ஈழத்தாய் அம்மா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக