28 அக்டோபர், 2009

வசந்தத்தின் இடிமுழக்கம்

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!

“எங்கு பார்த்தாலும் ஊழல். ஊழலற்ற எதுவுமே இந்த நாட்டில் இல்லை. நாட்டையே சுரண்டி கொள்ளையடிக்க தான் எல்லோருமே விரும்புகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு தீர்வாக சுரண்டல்வாதிகள் சிலரையாவது பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்க விடவேண்டும். அப்போது தான் மற்றவர்களுக்கு அது பாடமாக இருக்கும்” உணர்ச்சிக் கொந்தளிப்போடு இந்த வார்த்தைகளை உச்சரித்தவர் ஒரு நக்சல்பாரி அல்ல. இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய காட்ஜு. ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்ட பீகாரைச் சேர்ந்த பிராஜ் பூஷன் பிரசாத் என்பவர் பெயில் கேட்ட வழக்கின்போது காட்ஜு சொன்ன வார்த்தைகள் இவை. தன்னையே ஒரு கணம் மறந்துவிட்டு நீதிபதி சொன்ன கருத்தாக கூட இருக்கலாம். ஆனால் இந்தக் கருத்து நியாயமானதா, இல்லையா என்பதை நம் ஒவ்வொருவர் மனச்சாட்சியையும் கேட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதியே உணர்ச்சிவசப்பட்டு சொன்ன இந்த கருத்தை தான் நக்சல்பாரிகள் சிரமேற்கொண்டு செய்து வருகின்றனர். மாவோயிஸ்டுகளின் ஜன் அதாலத் (மக்கள் நீதிமன்றங்கள்) வலியுறுத்துவதும் இதுபோன்ற தீர்ப்பை தான்.

மேற்கு வங்கத்தின் வடகிழக்கு முனையில் இருக்கும் மிகச்சிறிய கிராமம் நக்சல்பாரி. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கிறது. டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டம். ஆயிரக்கணக்கான இந்திய கிராமங்களைப் போலவே இங்கும் விவசாயிகளிடம் நிலப் பிரபுக்கள் சுரண்டி கொழுத்துக் கொண்டிருந்தார்கள். அடக்குமுறை கொடுமைகளை எதிர்த்து வாய் பேச இயலா ஊமைகளாக உழைப்பாளிகள் வாழ்ந்தார்கள்.

இரத்தத்தையும், தியாகத்தையும் தோய்த்தெடுத்து எழுதப்படும் செங்கொடியின் வீரவரலாறு தொடங்கியது இங்கேதான். ‘துப்பாக்கி முனையில் அரசியல் அதிகாரம் பிறக்கிறது' என்ற மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனைகளை உயர்த்திப் பிடித்து நக்சல்பாரி உழவர்களின் ஆயுதமேந்திய புரட்சி வெடித்தது. உழவர்கள் மட்டுமன்றி சிலிகுரி மாவட்டத்தின் தேயிலைத் தொழிலாளர்களும் இந்தப் புரட்சியின் போது வீறுகொண்டு எழுந்தார்கள்.

1967ஆம் ஆண்டு ‘கிராமப்புற புரட்சியின் மூலமாக அதிகாரத்தை கையகப்படுத்துதல்' எனும் கருத்தாக்கத்தை மையப்புள்ளியாக வைத்து சாரு மஜூம்தார் என்ற நாற்பத்தொன்பது வயது கம்யூனிஸ்ட்டு தலைவர் தன்னுடைய நண்பரான கானு சன்யால் என்பவரோடு இணைந்து நக்சல்பாரி இயக்கத்தை கட்டமைக்கிறார். நக்சல்பாரி கிராமத்தில் இந்த எழுச்சிக்கான விதை விதைக்கப்பட்டதால் இவர்கள் பிற்பாடு நக்சல்பாரிகள் என்று அழைக்கப்பட்டனர்.

அப்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெடித்த நக்சல்பாரிகளின் புரட்சி பல நிலைகளை தாண்டி நீறுபூத்த நெருப்பாக இன்று இந்திய மாநிலங்களில் கனன்று கொண்டிருக்கிறது. நக்சல்பாரிகளின் புரட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவினைக்கும் அடிகோலியது. மேற்கு வங்கத்தில் ஆண்டுகொண்டிருந்த கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு கம்யூனிஸ்டுகளை பிரதிநிதித்துவப் படுத்தாமல் மத்தியில் ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட புரட்சியாளர்கள் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார்கள். தங்கள் தரப்புக்கு ஆதரவு திரட்டினார்கள்.

“பெரும் நில முதலாளிகளிடமிருந்து நிலங்களை பிடுங்கி ஏழைகள் பங்கிட்டு கொள்ள வேண்டும். ஏழைகளே நேரடி நடவடிக்கைகளில் இறங்கி தங்களுக்கான நிலத்தை எடுத்துக் கொள்வார்கள்” என்று திடீரென சாரு மஜூம்தார் அறிவிக்க நாடே கலங்கிப் போனது. மேற்கு வங்காளத்தில் கூட்டணி ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தன் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவராக இருந்த ஒருவர் இதுபோன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களுக்கு சிக்கலை அளித்தாலும் தீவிர கம்யூனிஸ்டுகள் சாருவின் அறிவிப்பை வரவேற்றார்கள். நக்சல்பாரிகளின் எழுச்சி இந்திய மக்கள் புரட்சியை வெடிக்கச் செய்யும் என்று நம்பினார்கள். மேற்கு வங்காளத்தில் இளையதலைமுறையினர் பலர் சாருவை பின்பற்றிச் செல்ல தங்கள் குடும்பங்களை துறந்தார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போது பலமாக இருந்த உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பீகார், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த திடீர் புரட்சியாளர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இவர்கள் ஒன்றிணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான கலகக்காரர்களாக செயல்பட்டார்கள். கட்சியின் கொள்கைகளை விளக்க தேசப்ரதி, லிபரேஷன், லோக்யுத் ஆகிய பத்திரிகைகள் தொடங்கப்பட்டன.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆயுதமேந்திய கிராமக்குழுக்களை உருவாக்கினார்கள். நிலப்பிரபுக்களின் பட்டாக்களையும், அவர்களிடம் தாங்கள் அடகுவைத்திருந்த கடன்பத்திரங்களையும் கைப்பற்றி கொளுத்தினார்கள். ஜன் அதாலத் என்று அழைக்கப்படும் மக்கள் நீதிமன்றங்களை அமைத்து வர்க்க எதிரிகளை கூண்டிலேற்றி விசாரித்து கடுமையான தண்டனைகளை வழங்கினார்கள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த நிலப்பிரபுக்களுக்கு உச்சபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை மக்கள் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி சாரு மஜூம்தாரின் அறிவிப்பினை கொண்டாடியது. ‘வசந்தத்தின் இடிமுழுக்கம்' என்று பெயரிட்டு மகிழ்ந்தது. சீன கம்யூனிஸ்டுகள் கொண்டாடினாலும் அதை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) வரவேற்கவில்லை. நக்சல்பாரிகளை அடக்கும் முயற்சியில் அங்கே ஆளும் கம்யூனிஸ்ட்டு கட்சி அரசு இயந்திரத்தை பயன்படுத்தியது. நக்சல்பாரிகளை கண்டு ஆளும் கட்சிகள் “பயங்கரவாதம்” என்று குரலெழுப்பத் தொடங்கினார்கள். நக்சல்பாரிகளோ தாங்கள் நடத்துவது தங்களது உரிமைப்போர் என்று நியாயப்படுத்தினார்கள். அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் விவசாயிகளுக்கு சமமாக பங்கிடப்பட்டது. வயல்கள் தோறும் செங்கொடி பறந்தது.

(புரட்சி தொடர்ந்து மலரும்)

25 அக்டோபர், 2009

துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!


ரஷ்யாவில் 1917 அக்டோபரில் வெடித்த புரட்சி உலகளாவிய பொதுவுடைமை சிந்தனையாளர்களுக்கு ஊக்க மருந்தாக அமைந்தது. உடனடியான பாதிப்பு மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் இருந்தது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் துயர்நீக்க மார்க்சியப் பாதை தான் சிறந்தது என்று எண்ண தலைப்பட்ட சிந்தனையாளர்கள் கம்யூனிஸக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு கம்யூனிஸ்டு அமைப்புகளை 1920கள் வாக்கில் அமைக்கத் தொடங்கினார்கள். அப்போது இந்தியாவில் வெள்ளையர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

லெனினின் சிந்தனைகள் அடிப்படையிலான கம்யூனிஸ்டு கட்சி அமைப்பு முறை போல்ஷ்விஸம் என்று அழைக்கப்படும். போல்ஷ்விஸம் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்களை அன்றைய ஆட்சியாளர்களும் உணர்ந்திருந்தனர். கம்யூனிஸ்டு என்று தங்களை சொல்லிக் கொண்டவர்கள் வேட்டையாடப் பட்டனர். பொய் வழக்குகள் போடப்பட்டு சிறைகளில் தள்ளப்பட்டனர். பல நெருக்கடிகளை தாண்டியே பல்வேறு பொதுவுடைமை சிந்தனைக் குழுக்கள் இணைந்து கம்யூனிஸ்டு கட்சி ஏற்படுத்தப்பட்டது.

நாட்டில் அப்போதிருந்த முக்கியப் பிரச்சினை ஏகாதிபத்தியம். காங்கிரஸ் கட்சியோ ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிறுத்தி மும்முரமாக போராடிக் கொண்டிருக்க, கம்யூனிஸ்டு இயக்கங்கள் வர்க்க விடுதலைக்கு தீவிரமாக போராடின. ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு முன்னால் வர்க்க விடுதலை மக்களுக்கு பெரியதாக தோன்றவில்லை. விவசாய தொழிலாளர்களின் உரிமையை ஒருபுறம் வலியுறுத்தி, இன்னொரு புறம் தேசவிடுதலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்குமேயானால் காங்கிரஸ் இயக்கத்துக்கு கிடைத்த செல்வாக்கு ஒருவேளை அப்போதே கம்யூனிஸ்டுகளுக்கும் கிடைத்திருக்கக் கூடும். ஆங்கிலேய ஆட்சியாளர்களையும் முதலாளி வர்க்க எதிரிகள் என்ற அடிப்படையில் தான் கம்யூனிஸ்டுகள் எதிர்த்தார்களே தவிர அவர்கள் அந்நியர்கள் என்ற அடிப்படையில் தீவிரமாக எதிர்க்கவில்லை. எனவே தேச விடுதலையில் காங்கிரஸ் அளவுக்கான பங்கினை, செல்வாக்கினை கம்யூனிஸ்டுகள் பெற இயலாமல் போனது.

இரண்டாம் உலகப்போர் நடந்த நேரத்திலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் உள்ளியக்க கருத்து வேறுபாடுகள் தோன்றின. போர் எதிர்ப்பு நிலையை கம்யூனிஸ்டு இயக்கங்கள் மேற்கொண்டதால் பல தலைவர்கள் சிறைக்கு செல்ல வேண்டியதாகியது. ஹிட்லர் ரஷ்யா மீது போர் தொடுத்தபோது சிறைபடாமல் தலைமறைவாகியிருந்த கட்சியினர் சோவியத் யூனியனுக்கு உதவி செய்ய ஒரே வழி, தேசிய விடுதலைக்கு தீவிரமாக போராடுவதே என்றனர். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசிய விடுதலைப் போரால் ஆங்கிலேயே ஏகாதிபத்தியம் பலவீனமடையும், அது சோசலிஷ ரஷ்யாவுக்கு பிற்பாடு வலிமை சேர்க்கும் என்பது அவர்களது கணிப்பு.

ஆனால் சிறையிலிருந்த கம்யூனிஸ்டு தலைவர்களின் சிந்தனையோட்டம் வேறுமாதிரியாக இருந்தது. ஆங்கிலேயர்களின் போர் தயாரிப்புகளுக்கு முழுமூச்சான ஆதரவு தரவேண்டும் என்றும், வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நிறுத்திவிட வேண்டும் என்றும் சொன்னார்கள். இதற்கு பிரதியுபகாரமாக இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். உலகப்போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்தார்கள்.

இரண்டாம் உலகப்போரின் முடிவு உலக வரைப்படத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர் போர் முடிவில் பலவீனமாக காட்சியளித்தனர். இந்நேரத்தை பயன்படுத்திக் கொண்ட மக்கள் ஆயுதம் மூலமாக ஆங்காங்கே கலகம் செய்தனர். இச்சந்தர்ப்பத்தையும் இந்திய கம்யூனிஸ்டு இயக்கங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. கலகக்காரர்களை ஆங்கிலேயர்கள் காங்கிரசோடு கூட்டு அமைத்து காலி செய்தார்கள். திடீரென்று விழித்துக் கொண்ட கம்யூனிஸ்டுகள் தங்கள் தரப்பு தொழிலாளர்களை திரட்டி வேலை நிறுத்தம் செய்தது. மாணவர்களும், தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

தந்திரத்தில் கரைகண்ட வெள்ளையர்கள் காங்கிரஸிடம், முஸ்லீம் லீக்கிடமும் சரணடைந்தனர். விவகாரமான சுதந்திரமும், ஆங்கிலேயர்களை கொண்ட அரசியல் நிர்ணயசபையும் இந்தியர்கள் மீது திணிக்கப்பட்டது. ஏகாதிபத்திய நாடுக்களுக்கான பின்வாசல் எப்போதும் திறந்தே வைத்திருக்கும்படியான சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைத்தது. இப்போதும் கூட கம்யூனிஸ்டு இயக்கங்கள் காங்கிரஸை நம்பின. நேரு, காந்தி போன்ற காங்கிரஸின் முற்போக்கு சிந்தனை கொண்ட தலைவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று கோஷமிட்டனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின்னும் தொடர்ந்த தொழிலாளர் துயரத்தை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவதிப்பட்டனர்.

பி.டி.ரணவேதி என்ற கம்யூனிஸ்டு தலைவர் கலகக்காரரானார். தன்னைப் போன்ற தீவிர ஒத்த சிந்தனை கொண்டவர்களின் துணையோடு கட்சியின் தலைமையை கைப்பற்றினார். நேருவின் அரசு ஆங்கிலேயர்களின் கைப்பாவை அரசு என்று இந்த கலகக்கார கம்யூனிஸ்டுகள் அறிவித்தனர். வர்க்க சமரசத்திற்கு எதிரான புரட்சியை நடத்த வன்முறைப்பாதையையும் மேற்கொள்ள தயாராயினர். தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தமும், மக்களின் கிளர்ச்சியும் தான் தங்கள் பாதை என்றனர்.

இதே நேரத்தில் ஆந்திரப் பிரதேசம் தெலுங்கானாவில் வன்முறைப் போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. நிலமுதலாளிகளுக்கும் அவர்களது வன்கொடுமைகளுக்கும் எதிரான போராட்டம் தெலுங்கானா என்று சொல்லக்கூடிய பகுதிகளில் அங்கிருந்த பிரதேச கம்யூனிஸ்டுகளின் தலைமையில் நடந்து கொண்டிருந்தது. இங்கே போராடிக்கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள் சீனாவின் புரட்சியாளர் மாவோவின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருந்தவர்கள். எனவே இவர்கள் பி.டி.ரணவேதியின் போராட்டத்தை மாவோ கோட்பாடுகளின் அடிப்படையில் எதிர்த்தார்கள்.

நிலமுதலாளித்துவத்துக்கும், நகர்ப்புற முதலாளி வர்க்கத்துக்கும் எதிரான போராட்டங்கள் ஒரே சமயத்தில் நடந்தால், போராட்டங்களின் வீரியம் நீர்த்துப் போகும் என்பது தெலுங்கானா புரட்சியாளர்களின் கணிப்பு. அவர்களது மொழியில் சொல்வதானால் ஜனநாயகப் புரட்சியையும், சோஷலிசப் புரட்சியையும் ஒரே நேரத்தில் நடத்த இயலாது. கிராமப்புற ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் முறையான விவசாயத் திட்டத்தோடு இணைந்திருந்தால் மட்டுமே புரட்சியை வெடிக்கச் செய்யமுடியும் என்பது அவர்களது நிலைபாடாக இருந்தது. கிராமப்புறங்களில் ஏற்படும் புரட்சி நகரத்தை சுற்றி வளைத்து இறுதியில் கைப்பற்றும். ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியைக் காட்டிலும் சீனப்புரட்சியைப் போன்ற செயல்பாடு தான் இந்தியச்சூழலுக்கு தகுந்ததாக இருக்கும் என்றும் தெலுங்கானா போராளிகள் நினைத்தனர். இன்றைய நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு முன்னோடிகளாக தெலுங்கானா போராளிகளை குறிப்பிடலாம்.

பி.டி.ரணதிவே இந்த சிந்தனைகளை முற்றிலுமாக நிராகரித்தார். மாவோவை ஒரு போலி மருத்துவர் என்று காரமாக குற்றம் சாட்டினார். ஆயினும் 1950களின் ஆரம்பத்தில் தெலுங்கானா கிளர்ச்சியாளர்கள் ஆந்திராவில் மிகுந்த செல்வாக்கோடு காணப்பட்டனர். ஐதராபாத் இந்தியாவுக்குள் இணைந்தபோது அங்கே முற்றுகையிட்டிருந்த இந்திய ராணுவத்தின் மூலமாக தெலுங்கானா போராளிகளின் புரட்சி நசுக்கப்பட்டது.

கம்யூனிஸ்டு இயக்கங்களில் இன்று பிரபலமாக இருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் சரி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் சரி.. தெலுங்கானா போராட்டத்தை அரசியல் அதிகாரத்துக்கான போராட்டமாக ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். நிலமுதலாளிகளிடமிருந்து நிலங்களை கைப்பற்றி தக்கவைத்துக் கொள்ள நடந்த போராட்டம் தான் அது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சொல்கிறது. தெலுங்கானாவில் நடந்தது முழுக்க முழுக்க அராஜகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறது. ஆனால் தெலுங்கானா போராட்டத்தை ஆதரித்துப் பேசுபவர்களோ அப்போராட்டம் ‘ஆந்திராவில் மக்கள் ஆட்சி’ என்பதை முன்னிறுத்தி நடந்தப் போராட்டம் என்கிறார்கள்.

ரஷ்யாவிலும் ஸ்டாலினுக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்தவர்களால் கம்யூனிஸ்டு சித்தாந்தங்கள் அவரவர் வசதிக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டிருந்த நேரமது. “ஏற்கனவே இருக்கும் அரசமைப்பை புரட்சி மூலமாக தூக்கியெறிய வேண்டியதில்லை. முதலாளிகளோடு தொழிலாளி வர்க்கம் சமரசமாகி அதிகாரத்தை பங்கிடுவதின் மூலமாகவே தேசிய ஜனநாயக அரசை ஏற்படுத்த முடியும்” என்று ரஷ்யாவில் ஆட்சிபுரிந்த குருசேவ் தலைமையிலான கம்யூனிஸ்டுகள் கூறிவந்தனர். இது லெனின் – மாவோ உள்ளிட்டோரின் கோட்பாடுகளுக்கு நேரிடையானதாக இருந்தது.

இந்தியாவிலிருந்த கம்யூனிஸ்டு இயக்கமோ ‘ரஷ்யா சொன்னா சரி’ என்று தலையாட்டியது. இந்திய - சீன எல்லைப்போர் தொடங்கிய நேரமது. கட்சித்தலைமையோ சீனாவை ஆதரித்தால் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுவோமோ என்ற அச்சத்தில் சீன எதிர்ப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியது. கட்சியில் இருந்த தீவிர இடதுசாரி சிந்தனையாளர்கள் உட்கட்சி கிளர்ச்சி செய்து கட்சியை உடைத்தார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானது.

கிளர்ச்சி செய்து புதுக்கட்சியை உருவாக்கியிருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சமரச வழியிலான சோஷலிஸத்தை நோக்கிதான் பயணம் செய்தது. சரியாக சொல்ல வேண்டுமானால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வெற்றி என்பதை நோக்கிய பயணமாக இருந்தது. மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பலமானது. விவசாயிகள் - தொழிலாளர் போராட்டங்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கையோடு சேர்த்தே திட்டமிடப்பட்டது.

மார்க்சிஸ்டுகளின் திட்டங்களுக்கு நல்ல பலன் இருந்தது. 1967ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுசாரி முன்னணி மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் அதே கட்சியிலிருந்து தேர்தல் பாதைக்கு எதிரான மனோபாவம் கொண்ட புரட்சியாளர்களின் தலைமையில் நக்சல்பாரி புரட்சி ஆயுதமேந்தி நடந்தது. தங்கள் இயக்கத்தில் இதுநாள் இருந்தவர்களையே போலிஸை விட்டு கண்மூடித்தனமாக தாக்கி புரட்சியை நசுக்கியது மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு. இதன் மூலமாக பாட்டாளிகள் தலைமையிலான மக்கள் ஆட்சியை விட்டு விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிற்பதாக நக்சல்பாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

நக்சல்பாரிகளுக்கு இன்னொரு வேடிக்கையான பெயரும் தமிழகத்தில் உண்டு. தீ.கம்யூனிஸ்டுகள் என்று அவர்களை செய்தித்தாள்களில் எழுதுவார்கள். அதாவது தீவிர(வாதி) கம்யூனிஸ்டுகளாம். இந்த தீ.கம்யூனிஸ்டுகள் ‘நாடாளுமன்ற அரசியல் மூலமாகவோ, சமரச அரசியல் மூலமாகவோ அதிகாரத்தை கைப்பற்ற முடியாது’ என்று பிரகடனப்படுத்தி இயங்கி வருகிறார்கள்.

நக்சல்பாரி புரட்சியாளர்கள் இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிரிகளாக நான்கு விஷயங்களை குறிப்பிடுகிறார்கள். நிலமுதலாளித்துவம், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், அமெரிக்க ஏகாதிபத்தியம், குருசேவ் காலத்துக்கு பின்னரான ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் - இவை நான்குக்கும் எதிரான போராட்டங்களே உழைக்கும் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை ஏற்படுத்தும் என்பது நக்சல்பாரிகளின் நிலைப்பாடு.

சீனா மற்றும் வியட்நாமில் தோன்றிய மக்கள் போர் மூலமாகவே இந்திய உழைக்கும் மக்களுக்கான விடுதலையை ஏற்படுத்த இயலும். துப்பாக்கிக் குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்று முழக்கமிட்டார்கள். கிராமப்புறங்களில் நிலமுதலாளிகளை பலவீனமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். நிலப்பிரபுக்களை கொன்று குவிப்பதை ‘அழித்தொழிப்பு’ என்ற பெயரிலான கிளர்ச்சியாக குறிப்பிட்டார்கள். நகர்ப்புற இளைஞர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று விவசாயிகளை ‘அழித்தொழிப்பு’ பணிகளுக்கு தயார்படுத்தினார்கள்.

(புரட்சி மலரும்)

24 அக்டோபர், 2009

வாயாடிகளுக்கு சம்பளம்!


எப்போதும் வளவளவென்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பேசுவதற்கு யாராவது சம்பளம் வழங்கினால் மாட்டேன் என்றா சொல்வீர்கள். கொடுக்கிறார்களே? ரேடியோ நிறுவனங்களில் வாயாடிகளை தேடிப்பிடித்து ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறார்கள். பந்தயங்களில் குதிரை ஓட்டுபவர்கள் வெறும் ‘ஜாக்கி’. ரேடியோவில் நேயர்களை ஓட்டோ ஓட்டுவென்று ஓட்டுபவர்கள் ரேடியோ ஜாக்கி. சுருக்கமாக ஆர்.ஜே.

ஒரு காலத்தில் எல்லோருக்கும் துணைவனாக இருந்தது ரேடியோ. பாட்டு கேட்க, செய்தி கேட்க, நாடகம் கேட்க, ஒலிச்சித்திரம் கேட்கவென்று நிறைய ‘கேட்க’ சொல்லலாம். ஆனால் காட்சி ஊடகமான தொலைக்காட்சி வந்த புதிதில் ரேடியோவுக்கு இருந்த ‘மவுசு’ கொஞ்சம் குறைந்தது. தொலைக்காட்சி அளவுக்கு ரேடியோவில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

டிவி முன்பாகவே சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தால் மற்ற வேலைகள் கெட்டுவிடும். ஆனால் ரேடியோ கேட்டுக் கொண்டே கம்ப்யூட்டரில் வேலை பார்க்கலாம். சமையல் செய்யலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். வாகனம் ஓட்டலாம். சும்மாவும் இருக்கலாம். கலகலப்புக்கு ரேடியோ நிச்சய உத்தரவாதம்!

மீண்டும் எஃப்.எம். (பண்பலை) வானொலிகள் வந்ததோ இல்லையோ.. மறுபடியும் பழைய மவுசு ரேடியோவுக்கு கிடைத்துவிட்டது. ஜாக்கிகள் விதவிதமான நிகழ்ச்சிகளை தந்து மீண்டும் ரேடியோ மறுமலர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்கள். முன்பெல்லாம் அரசின் தகவல் தொடர்பு ஊடகங்களான ஓரிரு வானொலி நிலையங்கள் விரல்விட்டு எண்ணும் அளவிலான சேவைகளையே கொஞ்சம் ‘வறட்சியான மொழியில்’ வழங்கி வந்தன.

ஆனால் இப்போதோ சூரியன், ரேடியோ மிர்ச்சி, ரேடியோ ஒன், ஹலோ, ஆஹா, பிக் என்று தனியார் எப்.எம். சேவைகள் வரிசையாக படையெடுத்து தமிழர்களின் காதில் தேனையும், பாலையும் இருபத்து நான்கு மணி நேரமும் தொடர்ச்சியாக ஊற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களது ‘தமில்’ தான் தாங்கலை என்றாலும் தனியார் எப்.எம்.களின் வருகைக்கு பிறகு ஏராளமான வேலைவாய்ப்புகள்.. குறிப்பாக ரேடியோ ஜாக்கிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

ரேடியோ ஜாக்கிகள் என்றால் பொதுவாக பாடல் நிகழ்ச்சிகளை வழங்குபவர்கள் என்றே எல்லோரும் நினைக்கிறோம். இவர்கள் மட்டுமன்றி வேறு வேறு வித்தியாச நிகழ்ச்சிகளை வழங்குபவர்களையும் ரேடியோ ஜாக்கி என்றே அழைக்கலாம், தப்பில்லை. வீட்டு வரவேற்பறையில் நம்மோடு குலாவும் விருந்தினரைப் போன்ற உணர்வுகளை நிகழ்ச்சிகளின் மூலமாக தருபவர்கள் இவர்கள். முகம் காட்டாமலே நமக்கு நெருக்கமாகும் சுவாரஸ்யமான நட்புகள். ஒவ்வொரு வானொலி நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் இவர்களது பங்கு மிக முக்கியமானது. இவர்களுக்கு எல்லாம் இன்னமும் தமிழ்நாட்டில் ரசிகர்மன்றம் தொடங்கப்படாதது ஒன்றுதான் பாக்கி!

“எனக்குத் தெரிஞ்சு பத்தாவது படிச்சவங்கள்லேருந்து எம்.எஸ்.சி. படிச்சவங்க வரைக்கும் ரேடியோ ஜாக்கியா ஒர்க் பண்றாங்க. முறையான கல்வித்தகுதின்னு எதுவும் இந்தத் துறைக்கு அவசியமில்லை. குரல் இனிமையா இருக்கணும்னு சொல்ல மாட்டேன். ஆனா வசீகரமா இருக்கணும். மிமிக்ரி தெரிஞ்சா ரேடியோவில் ஜாக்கி ஆயிடலாம்னு ஒரு ‘மித்’ இருக்கு. அது தப்பு. சுவாரஸ்யமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிற திறமை, டைமிங் சென்ஸ் இதெல்லாம் தான் ரேடியோ ஜாக்கியா வரணும்னா முக்கியமான தகுதிகள்” என்கிறார் ரேடியோ ஒன் நிறுவனத்தில் நிகழ்ச்சிகளை வழங்கும் சுசித்ரா.

ரேடியோ ஜாக்கிகளுக்கு சமூகத்தில் கிடைக்கும் கூடுதல் கவனிப்புகள், சினிமா வாய்ப்புகள் போன்றவை அவரவர் தனிப்பட்ட திறமையைப் பொறுத்த விஷயம். வானொலியில் நிகழ்ச்சிகள் வழங்குவதால் மட்டுமே இவை கிடைத்துவிடாது என்பது சுசித்ராவின் கருத்து. இவர் மணிரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சினிமாவிலும் தொடர்ந்து பாடி வருகிறார்.

பிக் எப்.எம்.மில் பணிபுரியும் தீனாவும் பிரபலமான ரேடியோ ஜாக்கி. தற்போது ‘வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ரேடியோ மிர்ச்சியின் ஜாக்கியான சுஜாதா கமல்ஹாசனுடன் இரு படங்களில் உதவி இயக்கம், தயாரிப்பு, ஆடை வடிவமைப்பு போன்ற துறைகளில் பணிபுரிந்திருக்கிறார். ‘பாட்டுக்கு பாட்டு’ புகழ் அப்துல் ஹமீதைப் பற்றி அறிமுகப்படுத்தவே தேவையில்லை. இலங்கை வானொலியில் ’பாட்டுக்கு பாட்டு’ நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டிருந்தவர், இன்று அதே நிகழ்ச்சியை டிவியிலும், மேடைகளிலும் நடத்தி உலகத் தமிழர்களிடையே பிரபலமானவராக இருக்கிறார்.

நிகழ்ச்சிகளின் தன்மைக்கு ஏற்றவாறும், ஒவ்வொரு ரேடியோ ஸ்டேஷனுக்கு ஏற்றவாறும் இவர்களது பணிகளில் சின்ன சின்ன மாறுதல்கள் இருக்கும். பொதுவாக சில அடிப்படைத் தகுதிகளை மனதில் வைத்தே ஜாக்கிகளை ரேடியோ நிர்வாகம் தேர்ந்தெடுக்கிறது. தனியார் நிறுவனங்களில் முப்பத்தைந்து வயதுக்கு மிகாதவராக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். குரல்வளமும், பேச்சுத்திறமையும் அடிப்படைத் தகுதி என்பது உங்களுக்கே தெரியும். உச்சரிப்பு தெளிவானதாக இருக்க வேண்டியது அவசியம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களையே ரேடியோ ஜாக்கிகளும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகிறார்கள். எனவே மொழிப்புலமை கட்டாயம் இருந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. மொழிப்புலமை இருந்தால் அது கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும். பொழுதுபோக்கு துறைக்கு தேவையான எல்லாத் திறன்களும் ரேடியோ ஜாக்கிகளுக்கும் தேவை. ரேடியோ ஜாக்கிகளாக தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு பொதுவாக தேர்ந்தெடுத்த நிறுவனமே பயிற்சியையும் வழங்குகிறது.

பல்கலைக்கழகங்கள் சிலவற்றிலும், சில கல்வி நிறுவனங்களிலும் வழங்கப்படும் கம்யூனிகேஷன்ஸ் & பிராட்காஸ்டிங் கல்வியை கற்பவர்கள் சுலபமாக ரேடியோ ஜாக்கி ஆகிவிடலாம். சில தனியார் கல்வி நிறுவனங்கள் குறுகியகால சான்றிதழ் படிப்பையும் வழங்குகிறது. இது இரண்டுமாத சான்றிதழ் கோர்ஸிலிருந்து, ஒருவருட டிப்ளமோ கோர்ஸ் வரை வேறுபடுகிறது.

வருமானத்தைப் பொறுத்தவரை இத்தொழிலில் வரையறை ஏதும் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை. அவரவர் திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்றவகையில் பணம் கிடைக்கும். பயிற்சிக்காலத்திலேயே குறைந்தபட்சம் மாதத்துக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ஒரு நாளைக்கு ஓரிரு மணி நேரமே ரேடியோக்களில் இவர்களுக்கு வேலை இருக்கும். மீதி இருக்கும் நேரத்தில் டப்பிங், விளம்பரப் படங்களுக்கு குரல் கொடுப்பது உள்ளிட்ட வருவாயைத் தரக்கூடிய வேறு பணிகளையும் செய்யலாம். இல்லையேல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ரேடியோ அலுவலகத்திலேயே நிர்வாகம் மாதிரியான வேறு பணிகளையும் செய்து கூடுதல் வருவாய் பெறலாம்.

“இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து, விரிந்து வாழ்வதால் அவர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் வானொலிகள் தமிழ் சேவை தொடங்கி வருகின்றன. சாட்டிலைட் ரேடியோக்களும் தமிழ்சேவையை தொடங்கியிருக்கின்றன. அதுபோலவே இண்டர்நெட்டுகளில் இயங்கும் ரேடியோக்களும் பெருகிவருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் ரேடியோ ஜாக்கிகளுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. தகுதியும், திறமையும் இருப்பவர்களுக்கு இத்துறையில் நிச்சயம் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது” என்கிறார் வளைகுடாவில் இருந்து ஒலிபரப்பாகும் சக்தி எப்.எம்.மில் பணியாற்றிய ஆர்.நாகப்பன்! இவர் இண்டர்நெட் ரேடியோக்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!’ என்பது பழமொழி. வாய் மட்டும் போதாது. சில கூடுதல் தகுதிகளும் அதோடு இருந்தால் ரேடியோ ஜாக்கியாகி பிழைத்துக் கொள்ளலாம். பிழைப்போடு சேர்த்து புகழும், கூடுதல் கவனிப்புகளும் கிடைக்கப் போகிறது என்றால் கசக்கவா செய்யும்?

(நன்றி : புதிய தலைமுறை)

22 அக்டோபர், 2009

இரண்டு வெற்றிக்கதைகள்!


சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சக்கைப்போடு போட்ட மூன்றெழுத்து படம் அது. இயக்குனருக்கு அது முதல் படமல்ல என்றாலும், வாழ்க்கை கொடுத்த படம். தயாரித்தவரும் ஒரு பிரபல/பிரம்மாண்ட இயக்குனர். மதுரை மண் சார்ந்த படங்கள் தொடர்ச்சியாக வெளிவர அச்சாரம் போட்ட படமாகவும் அதைச் சொல்லலாம்.

ஆர்ப்பாட்டமின்றி வெளிவந்து அள்ள அள்ளப் பணத்தை கொட்டிய படம். பாடல்களும் சூப்பர்ஹிட். அறிமுக இசையமைப்பாளர் அடுத்தடுத்து தனிப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி காணாமல் போனார். படத்தின் கதை சூப்பர் என்பது ஏற்கனவே தெரிந்தது என்றாலும், பின்னணிக்கதை அதைவிட சூப்பர் என்று ஒரு உதவி இயக்குனரான நண்பரின் மூலம் தெரியவந்தது.

வடநாட்டுப் பெயர் கொண்டவர் அந்த தயாரிப்பாளர். கொசுவர்த்தி பெயர் கொண்ட படநிறுவனம் அவருடையது. மகனுக்காக ஒரு படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டார். அடுத்ததாக ஒரு படத்தை தன் நிறுவனத்தை வைத்தே தயாரித்தால், அப்பாவே மகனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கிறார் என்ற அவப்பெயர் வந்துவிடுமே என்று ஒரு பினாமி தயாரிப்பாளரை செட் செய்தார்.

ஒரு இயக்குனரை கூப்பிட்டு கதை கேட்டார். இளமை நாயகன் என்பதால், இளமைவாசனையும், மண்மணமும், க்ரீஸ் அழுக்கும் கொண்ட ஒரு அட்டகாசமான கதை இயக்குனரால் முன்மொழியப்பட்டது. இயக்குனர் நேரில் சந்தித்த ஒரு கேரக்டரின் கதை அது. ”ஆரம்பத்துலேயே என் பையன் அழுக்கா நடிச்சா சரிப்படாது. சப்ஜெக்ட் வேற ஆர்ட்ஃபிலிம் ரேஞ்சுக்கு இருக்குது. நல்ல சிட்டி/லவ் சப்ஜெக்டா ரெடி பண்ணுங்க!” என்று தயாரிப்பாளர் சொன்னதுமே, இயக்குனர் தற்காலிகமாக அக்காவியத்தை கைவிட்டார். இருப்பினும் பின்னர் அதே கதையை வேறு நடிகரை வைத்து எடுக்க தயாராக இருப்பதாகவும் தயாரிப்பாளர் உறுதிகூறி சமாதானப்படுத்தி இருக்கிறார்.

இந்த டிஸ்கஷன்கள் ஓடிக்கொண்டிருந்தபோது, முதல் பாராவில் இடம்பெற்ற இயக்குனரும் அந்த டீமில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இளமை நாயகனை வைத்து தித்திக்க தித்திக்க ஒரு படம் தயாரானது. ஓவர் செண்டிமெண்ட் உடம்புக்கு ஆகாது என்பதுபோல அந்தப்படமும் பப்படம் ஆகியது என்பது இங்கே தேவையில்லாத கதை. படம் போண்டியாகிவிட்டதால் இந்த இயக்குனருக்கு அடுத்தடுத்து டிமாண்ட் இல்லாமல் போய்விட்டது. எனவே காவியக்கதை அப்போதைக்கு அவரது மனதுக்குள் பாலூற்றி அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

இதற்கிடையே முதல் படத்தை படுதோல்வி படமாக எடுத்துவிட்டிருந்த முதல் பாரா இயக்குனர் அடுத்த வாய்ப்புக்காக வெறித்தனமாக அலைந்துகொண்டிருந்தார். மெகா ஸ்டாரை வைத்து முதல்படத்தை சூப்பர்ஹிட்டாக்கி, யாரும் எதிர்பாராவண்ணம் அடுத்தப் படத்தில் அமுல் பேபி நாயகனை ஆக்‌ஷன் ஹீரோவாக்கியிருந்த இயக்குனர் ஒருவர் படம் தயாரிக்கும் எண்ணத்தில் இருந்தார். இந்த இயக்குனர் நம் முதல் பாரா இயக்குனருக்கு வாய்ப்பளிக்கவும் தயாராக இருந்தார். காரணம் முதல் பாரா சொல்லியிருந்த காவியக்கதை. கொசுவர்த்தி தயாரிப்பாளரிடம் தித்தித்த இயக்குனர் சொன்ன அதே கதை. இடையில் என்ன ஆனதோ தெரியவில்லை. இயக்குனர் வேறு இயக்குனருக்கு வாய்ப்பளித்துவிட்டார்.

இந்த நேரத்தில் தான் பிரம்மாண்ட இயக்குனரும் படத்தயாரிப்பில் குதித்தார். முதல் பாரா அவரிடமும் இதே காவியக்கதையை சொல்ல புராஜக்ட்டுக்கு இக்னீஷியன் கொடுத்து ஸ்டார்ட் ஆனது. படமும் வெளிவந்து சக்கைப்போடு போட்டது எல்லோருக்கும் தெரிந்த கதை. இப்படத்தை ப்ரிவ்யூவின் போது பார்த்து கொசுவர்த்தி தயாரிப்பாளர் கடுமையான அதிர்ச்சியடைந்தாராம். விஷயம் பெரிதுபடுத்தப்படாமல் போவதற்கு உப்புமா இயக்குனருக்கு பெரியளவில் ஏதோ செட்டில்மெண்ட் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

* - * - * - * - * - * - * - * - *

இது இன்னொரு மசாலாக் கதை.

இந்த இயக்குனர் எடுத்த முதல் படம் வெளியானதே திருட்டு வீடியோ கேசட்டாகதான். அடுத்த வாய்ப்புக்கு அலைந்த நேரத்தில் விபத்து ஏற்பட்டு இயக்குனரின் எதிர்காலமே கேள்விக்குறியானது. எப்படியோ தட்டுத் தடுமாறி முன்னுக்கு வந்த அவர், இன்று தென்னிந்தியாவின் குறிப்பிடத்தக்க எண்டெர்டெயினர்களில் ஒருவர்.

நாலெழுத்து நடிகரை வைத்து இவரெடுத்த இரண்டெழுத்து படமொன்று வசூலில் பல சாதனைகளை புரிந்தது. நடிகருக்கு மட்டுமன்றி இயக்குனருக்கும் அப்படம் திரையுலகில் சிகப்புக் கம்பளத்தை விரித்தது. உண்மையில் இப்படத்தின் கதை, வசனம், லொட்டு, லொசுக்கெல்லாம் இன்னொரு நாலெழுத்து மசாலாவுடையதாம்.

படத்தின் உருவாக்கத்தின் போது கூட இருந்து இரவுபகலாக உழைத்தவர் பஞ்ச் டயலாக்குகளுக்கு பேர்போன அந்த நாலெழுத்து மசாலாவாம். படம் வெளியானபோது தியேட்டரில் பார்த்து, டைட்டிலில் தன் பெயர் இல்லையென்றதுமே நாலெழுத்து டென்ஷன் ஆகிவிட்டாராம். கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கும் மேலாக திறமையிருந்தும் திரையுலகில் சரியான வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்தவருக்கு அது பேரிடி.

வெறுத்துப் போன நாலெழுத்து, மீண்டும் அதே கதையை - கிராமத்தில் இருந்து சிட்டிக்கு வந்து ரவுடிகளை சுளுக்கெடுக்கும் கதை - வேறு ட்ரீட்மெண்டில், கொசுவர்த்தி தயாரிக்க, மூன்றெழுத்து நடிகரை வைத்து, ஆறெழுத்து படமாக எடுத்து சில்வர் ஜூப்ளி ஹிட் அடித்தார். அவருடைய இரண்டாவது படத்துக்கே ஃபார்ட்டி எல் வாங்கியதெல்லாம் தமிழ் திரையுலக வரலாற்றில் செதுக்கி வைக்கப்பட வேண்டிய சமாச்சாரங்கள்.

* - * - * - * - * - * - * - * - *

மேற்கண்ட இரு மேட்டர்களிலும் நம்பகத்தன்மை எவ்வளவு சதவிகிதம் இருக்கிறது என்பது எனக்கு திட்டவட்டமாக தெரியாது. ஆனாலும் இன்று கோடம்பாக்கத்தில் எங்காவது இரண்டு உதவி இயக்குனர்கள் சந்தித்துக் கொண்டால் பேசிக்கொள்ளும் கதைகள் இவைதான்.

திரையுலகில் சிலர் பெறும் வெற்றிக்கு, அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகமானது என்பது மட்டும் புரிகிறது. திரையுலகில் வெற்றிபெற விரும்புபவர்கள் முதலில் இழக்க வேண்டியது அவர்களது அடிப்படை அறமாக இருக்கிறது.

19 அக்டோபர், 2009

பத்தாவது தவறியவர், இன்று பி.எச்.டி. முனைவர்!


1989ஆம் ஆண்டில் ஒருநாள்.

“உன் பெயர் என்ன?” டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் அந்த இளைஞரிடம் கேட்கிறார்.

“பரசுராமன்”

“நல்ல பெயர்”

இப்படி சாதாரணமாகதான் சாமிநாதனிடம் அறிமுகமானார் பரசுராமன். இந்த சந்திப்பு அவரது வாழ்க்கையையே மாற்றி வரையப்போகிறது என்பது அப்போது அவருக்கு தெரியாது. சென்னை ஐஐடி கெமிக்கல் லேப் ஒன்றில் அசிஸ்டண்டாக பணியாற்றிக் கொண்டிருந்தார் பரசுராமன். ஐஐடிக்கு விசிட்டிங் புரொபஸராக வந்து சென்று கொண்டிருந்தார் சாமிநாதன்.

இன்று உலகமெங்கும் அறிவியலாளர்களால் கொண்டாடப்படும் எம்.எஸ்.சாமிநாதன் பவுண்டேஷன் தொடங்கப்பட்டபோது அதில் மூன்றே மூன்று பேர் மட்டுமே இருந்தார்கள். ஒருவர் நிறுவனர். நிறுவனருக்கு உதவியாக ஒரு அறிவியல் பேராசிரியர். இன்னொருவர் பரசுராமன்.

“டாக்டர் அழைத்ததுமே ஐ.ஐ.டி. வேலையை உதறிவிட்டு அவரிடம் உதவியாளராக வந்து சேர்ந்துவிட்டேன். சின்ன ஒரு அறைதான் அலுவலகம். முதல் ஐந்து மாதங்களுக்கு சம்பளமே கிடையாது. ஆறாவது மாதம் நான் பெற்ற முதல் சம்பளம் 850 ரூபாய். அதன்பிறகு சிறியதாக ஒரு அலுவலகம். வேலை நேரத்தில் ஊன், உறக்கம் எதுவுமே கிடையாது.

அந்த சம்பவம் நன்றாக நினைவிருக்கிறது. ஒரு நாள் டாக்டர் அழைத்தார். ‘எனக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வாப்பா’ என்றார். தோசை வாங்கிவரும்போது அலுவலகத்தில் அனைவருமே கிளம்பி விட்டிருந்தார்கள். டாக்டர் மட்டும் தனியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ‘சாப்பிடு. உனக்காகதான் வாங்கிட்டு வரச்சொன்னேன். இளைஞனா இருக்கே. மூணு வேளை ஒழுங்கா சாப்பிட வேணாமா? இனிமேல் நீ ஒழுங்கா சாப்பிடறியான்னு நான் கண்காணிப்பேன்’ என்றார்.

என் கண்கள் கலங்கிவிட்டது. என் பெற்றோரைத் தவிர்த்து என் மீது இவ்வளவு அக்கறை காட்டிய ஒருவரை அதுவரை நான் சந்தித்ததில்லை. என்னைப் பொறுத்தவரை அவர் கடவுளுக்கு நிகரானவர்!”

சாமிநாதனை சந்திக்கும்போது பரசுராமன் பத்தாம் வகுப்பினை கூட முடிக்காதவராக இருந்தார். இன்று சமூகவியலில் முதுகலைப்பட்டம் முடித்திருக்கிறார். சமூகவியலில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இளைஞர் மற்றும் மனிதவள மேம்பாடு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகிறார். ஐ.நா.வின் உலக இளைஞர்வள வங்கியின் இந்தியாவுக்கான தூதர் இவர். டாக்டர் சாமிநாதனுக்கு தனிச்செயலரும் இவரே.

குன்றத்தூருக்கு அருகில் இருக்கும் தண்டலம் கிராமத்தில் பள்ளிப்படிப்பை படித்தார். அப்போதெல்லாம் டியூஷன் பீஸ் ஒரு பாடத்துக்கு ஒரு ரூபாய் என்று ஆறு ரூபாய் மாதத்துக்கு கட்டவேண்டும். அதை கட்டக்கூடிய நிலை கூட இல்லாத வறுமைச்சூழல். பத்தாம் வகுப்பு தவறிய பிறகு ஐ.ஐ.டி.யில் பணிபுரிய வந்துவிட்டார். தனது சம்பளத்தில் ஒரு பகுதியை கல்விச்சேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு படிக்கும் காலத்திலேயே இருந்தது.

சிறுவயதில் தனக்கு கிடைக்காத டியூஷன் மற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவே கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். 87ஆம் ஆண்டு தான் வசித்த வேளச்சேரி பாரதியார் தெரு பகுதியில் அம்பேத்கர் பெயரில் ஒரு இரவு பாடசாலை அமைத்தார். இவரைப்போலவே ஆக்கப்பூர்வமாக சிந்தித்த அந்தோணி, மதிவாணன், ஜகதீசன், மைக்கேல், ரவி, ஞானப்பிரகாசன், எஸ்ரா என்று இளைஞர்கள் தோள் கொடுத்தார்கள். மாநகராட்சி இடமும் ஒதுக்கித் தந்தது. “இதெல்லாம் தேவையில்லாத வேலை. அந்த இடத்தை எனக்கு என் பெயருக்கு எழுதித் தந்துடு. காசு கொடுத்துடறேன்” என்று அப்பகுதியில் இருந்த பெரிய மனிதர் ஒருவர் முண்டாசு தட்டிக் கொண்டு வந்தார். அம்பேத்கர் பாடசாலையை காக்க இவர்கள் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.

பரசுராமனுக்கு இருந்த தன்னம்பிக்கையால் இரவு பாடசாலை வளர்ந்தது. ஆரம்பத்தில் இருபத்தைந்து குழந்தைகள் மட்டுமே கற்ற அந்தப் பாடசாலையில் இன்று நூற்றி இருபத்தைந்து பேர் பயில்கிறார்கள். இங்கு பயிலும் மாணவர்களும் பரசுராமனையும், அவரது நண்பர்களையும் போலவே சமூகச்சேவைகளுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். சமூக மாற்றத்துக்கான சிறுபொறியை வேளச்சேரி பாரதியார் தெருவில் நாம் கண்ணெதிரே காணமுடிகிறது.

அப்பகுதியில் சாலை சரியில்லை என்று இளைஞர்களை கூட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஒருமுறை மறியல் நடத்தினார் பரசுராமன். அப்போதிருந்த எக்ஸ்கியூடிவ் இன்ஜினியர் உடனடியாக ஒரு லாரியை அனுப்பி, சாலை அமைத்துக் கொடுத்ததோடு இல்லாமல், அவரது சொந்தச் செலவிலேயே அச்சாலைக்கு தெருவிளக்குகளும் அமைத்துக் கொடுத்தாராம். இளைஞர்களை பயன்படுத்த வேண்டிய முறையில் பயன்படுத்தி சமூகத்துக்கு அவசியமானவற்றை பெற்றுக் கொள்ளமுடியும் என்பது இவரின் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்பகுதி ரோட்டரி அமைப்புகளும் இவர்களது நோக்கங்களை புரிந்துகொண்டு, தேவையான விஷயங்களுக்கு நிதியுதவியும் செய்கிறார்கள்.

‘ஒரு பள்ளி திறக்கப்படும்போது, ஆயிரம் சிறைக்கதவுகள் மூடப்படுகிறது’ என்றார் அண்ணல் அம்பேத்கர். கல்விச்சாலைக்கு அவரது பெயரைவிட பொருத்தமான பெயர் வேறு என்ன கிடைத்துவிடும்? ‘கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை ஒரு குழந்தையின் கல்விக்கு செலுத்து!’ என்றும் சமூகத்துக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார் அம்பேத்கர். அம்பேத்கரை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட பரசுராமன் கல்வி மீது ஆர்வத்தை செலுத்தியது அதிசயம் ஒன்றுமில்லை.

“பத்தாவது வகுப்பில் தோல்வியடைந்த நான் இன்று முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன் என்றால் நிறைய பேர் நம்ப மறுக்கிறார்கள். சிறுவயதில் பி.எச்.டி. என்றால் என்னவென்று தெரியுமே தவிர, நான் அதை முடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. என்னுடைய தன்னம்பிக்கையும், பெற்றோர் ஆதரவும், டாக்டர் சாமிநாதன் அவர்களின் ஊக்கமும் என்னை மேன்மையான நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.

தயவுசெய்து நம்புங்கள். முடியாதது என்று உலகில் எதுவுமேயில்லை. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் என்னால் ஓரிரு வார்த்தைகள் கூட பேசமுடியாது. இன்று பதினோரு நாடுகளுக்கு போய்வந்திருக்கிறேன். பல சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறேன். என்னால் முடிவது உங்களாலும் முடியுமில்லையா?

என் வாழ்க்கை அனைவருக்கும் கற்றுத்தரும் முக்கியமான பாடம் ஒன்று உண்டு. பள்ளிக் கல்வி தடைபட்டால் வாழ்க்கை முடிந்துப் போய்விடுவதில்லை. கல்விகற்க திறந்தவெளி பல்கலைக்கழகம் மாதிரியான மாற்றுத் தளங்கள் நமக்கு ஏராளமாக இருக்கிறது.

ஒவ்வொருவரும் கல்விக்காக தனி நேரம் ஒதுக்கி கற்கவேண்டும். மாணவர்கள் என்றில்லை. எல்லோருமே தினமும் எதையாவது கற்றே ஆகவேண்டும் என்று இலக்கு வைத்து செயல்பட வேண்டும்.
நம் கல்விமுறையிலும் சில மாற்றங்கள் செய்யப்படுவது முக்கியம். இன்று இந்தியாவின் மக்கள் தொகையில் ஐம்பத்தி நான்கு சதவிகிதம் பேர் இளைஞர்கள். பள்ளியில் படிக்கும்போதே தொழிற்கல்வியும், வேளாண்மையும் தனிப்பாடமாக இருந்திருக்கும் பட்சத்தில் உலகமே கண்டிராத தொழிற்புரட்சியையும், வேளாண்புரட்சியையும் நாம் சாதித்திருக்க இயலும்.

இன்று சம்பாதிக்கும் இயந்திரங்களை உருவாக்கும் எண்ணம் பெற்றோரிடையே இருக்கிறது. அப்படியில்லாமல் சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட வேண்டும். அரசாங்கமும் ஒரு ஆண்டுக்கு இத்தனை லட்சம் பேர் என்று இலக்கு வைத்து விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும்.

நாம் வசிப்பது அறிவுநூற்றாண்டில். நம்முடைய நோக்கம் அறிவியலாளர்களை உருவாக்குவதாக இல்லாவிடில், உலக ஓட்டத்தில் நாம் பின் தங்கிவிடுவோம். ‘முடியும்’ என்ற நம்பிக்கை மட்டுமே நமக்குத் தேவை. மீண்டும் சொல்கிறேன். என்னால் முடிந்தது. உங்களாலும் நிச்சயம் முடியுமில்லையா?” என்கிறார் பரசுராமன்.

வெற்றி பெறுவதற்கான சூழல் எல்லோருக்கும் இயல்பிலேயே வாய்த்துவிடுவதில்லை. பரசுராமனைப் போல வலிய அச்சூழலை ஏற்படுத்திக் கொள்வதே, இலக்கினை உருவாக்கிக் கொள்வதே வெற்றிக்கான எளிய சூத்திரம்.

(நன்றி : புதிய தலைமுறை)