ஒவ்வொரு புதுவருடமும் மகிழ்ச்சி நிறைந்ததாக பிறக்கிறது அல்லது அவ்வாறு பிறப்பதாக நாம் கற்பிதமாகவாவது செய்துக் கொள்கிறோம். குறைந்தபட்சம் மகிழ்ச்சியாக இருப்பதாக ஒவ்வொருவரும் பாவனையாவது செய்கிறோம். மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் தவிர வேறெதற்கும் புத்தாண்டில் இடம்தர நாம் தயாரில்லை.
ஜனவரி முதல் நாளன்று கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு, கவலை தோய்ந்த முகத்தோடு எவரையும் கண்டதாக எனக்கு இதுவரை நினைவில்லை. ஆனால் கடந்த ஆண்டு பிறந்தபோது நான் இப்படித்தான் இருந்தேன். தலைமேல் இடிவிழுந்த சோகம் எனக்கு இருந்தது. முன்னதாக 2008 டிசம்பரில் பணியை ராஜினாமா செய்திருந்தேன், 31ந்தேதி வரை மட்டுமே வேலையில் இருந்தேன். 2009 ஜனவரி ஒன்று முதல் நான் வேலையில்லாத பட்டயதாரி.
நிச்சயமற்ற எதிர்காலம். உற்சாகத்தோடு வளைய வருவதை போல மற்றவர்களிடம் நடித்துக் கொண்டிருந்தேன். ‘விளம்பர உலகம்’ புத்தகம் வெளியான நேரமது. காட்ஃபாதர் பாரா வேறு நம்பிக்கை தருபவனாக என்னை குறிப்பிட்டிருந்தார். அவருக்கு என் மீது இருந்த நம்பிக்கை கூட என்மீது எனக்கே இல்லை.
முன்னதாக கடந்த இரண்டு வருடங்களில் வீட்டில் மருத்துவத்துக்கு பெரிய தொகை (‘எல்’களில்) செலவழித்திருந்தேன். சேமிப்பு முற்றிலும் கரைந்த நிலை. ஒன்பதாயிரம் ரூபாய் பர்சனல் லோன் மாதாமாதம் கட்ட வேண்டும். அரிசி, மளிகை வகையறாக்களுக்கு இறுக்கிப் பிடித்தாலும் குறைந்தபட்சம் நாலு ரூபாய் தேவை. பெட்ரோல், இத்யாதி உள்ளிட்ட என் செலவுகள் இரண்டு ஆவது வேண்டும். ஒன்றாம் தேதி ஆனால் பதினைந்து ரூபாய் கையில் இல்லாவிட்டால் செத்தேன். நல்லவேளையாக சொந்தவீடு என்பதால் வாடகைப்பிரச்சினை இல்லை.
2009, ஜனவரி ஒன்று. மீண்டும் பிறக்கிறேன். கண்விழித்து பார்க்கிறேன். உலகம் புதியதாக, கூடுதல் மொக்கைகள் நிறைந்ததாக தெரிகிறது. ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தேன். என்ன நடந்தாலும் அழுது வடியக்கூடாது. சுயகழிவிரக்கம் மட்டும் வந்துவிடவே கூடாது.
ஆறுதல் தர கவுதம் சார் இருந்தார். நான் ராஜினாமா செய்தேன் இல்லையா? அந்த நிறுவனத்தில் ஒரு பிரிவுக்கு தலைவராக பணியாற்றியவர். பத்திரிகையாளர். கிடைத்த வேலைகள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பார். அவருக்கு கட்டுப்படி ஆகிறது என்றால் போஸ்டர் ஒட்டவும் தயங்கமாட்டார். கல்லாக இருந்தால் கூட சிற்பம் செதுக்கிவிடலாம். நான் வெறும் களிமண். என்னை அழகான பொம்மையாக உருவாக்கியவர்.
பிப்ரவரியில் இருந்து அவரோடு பணி. ஒரு எட்டுக்கு எட்டு அறையில் நான் மட்டுமே பணியாளன். கிடைத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். கவிதை எழுதினேன். கானா எழுதினேன். கிசுகிசு எழுதினேன். பாராளுமன்றத் தேர்தலின் போது ஒரு கட்சிக்கு (எனக்கு எதிர்க்கட்சி) வேலைபார்த்தேன், அந்தக் கட்சியின் சாதனைகள் என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினேன். அறுபது சதவிகிதம் எழுத்துப்பணி. நாற்பது சதவிகிதம் எல்லாப் பணிகளும். என்னுடைய குறைந்தபட்சத் தேவையான ‘பதினைந்து’க்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கவுதம் சார் பார்த்துக் கொண்டார்.
இடையில் கிழக்குக்காக இன்னொரு புத்தகத்தையும் செதுக்கி, செதுக்கி எழுதிக் கொண்டிருந்தேன். ‘விஜயகாந்த்!’
விஜயகாந்த் தேர்தலில் வென்று ஜனங்களை வாழவைப்பாரோ இல்லையோ தெரியாது. என்னை வாழவைத்துவிட்டார். என்னுடைய கட்சி சார்பு தெரிந்திருந்தும், நம்பிக்கையோடு கிழக்கு கொடுத்த அசைண்மெண்ட் அது. அப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் புன்முறுவலோடு வாசகன் படித்தாக வேண்டும் என்று எனக்கு நானே ஒரு எல்லையை தீர்மானித்துக் கொண்டேன். அதுவரை எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு பாணியை உடைத்தாக வேண்டும். கிடைத்த ரெஃபரென்ஸ் எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டு, பட்டுக்கோட்டை பிரபாகர் பாணியில் நாவலாக நூலை எழுதினேன்.
அந்நூல் ஒரு நாவல். சோகங்களும், சாதனைகளுமாக மிக சீரியஸாக எழுதவேண்டிய விஜயகாந்தின் வாழ்க்கையை துள்ளலும், கும்மாளமுமாக எழுதினேன். பதிப்பகம் வெளியிடுமா என்று தெரியவில்லை. புனைவுகளில் அவர்களுக்கு பெரிய ஆர்வமில்லை. புனைவு மாதிரி வரலாறு. என்ன செய்வார்களோ என்று நினைத்தேன்.
நானே எதிர்பாராவிதமாக அந்நூலை கிழக்கு கொண்டாடியது. அட்டகாசமான அட்டைப்படத்தோடு வெளிவந்த ‘விஜயகாந்த்’தான் என்னுடைய விசிட்டிங் கார்ட். பேரரசு பாணியில் கமர்ஷியலாக தொடர்ந்து எழுதலாம் என்று நம்பிக்கை கொடுத்த புத்தகம். முதல் புத்தகம் ஜஸ்ட் பாஸ் என்றால், விஜயகாந்த் எனக்கு சூப்பர்ஹிட். அதுவரை எழுத்து என்றால் வார்த்தை, வீரியம், லொட்டு, லொசுக்கு என்று தடுமாறிக் கொண்டிருந்தவனுக்கு ஃபார்முலா பிடிபட்டது. ‘நீ இலக்கியம் எதையும் படைக்க வேண்டியதில்லை. இப்போதைக்கு அத்துறை பிழைத்துப் போகட்டும். அறுபது வயசுக்கு மேலே பார்த்துக் கொள்ளலாம்’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
மே மாதம் இறுதியில் தமிழ்மொழி பிறந்தாள். 2009ன் ஆரம்ப மாதங்கள் தந்த சோர்வும், சோம்பலும், நிச்சயமின்மையும் மறைந்து நிஜமான மகிழ்ச்சி மனதுக்குள் பூக்கத் தொடங்கியது.
குமுதம் ரிப்போர்ட்டரில் தொடர் எழுதும் வாய்ப்பு கிடைத்தது, நன்றி விஜயகாந்த். ஓரளவுக்கு பொருளாதாரப் பிரச்சினைகளை சமாளிக்க முடிந்தது. ஜூலை மாதம் வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கியது. முழுநேரப் பத்திரிகையாளனாகி விட்டேன். நிச்சயமான எதிர்காலம். நிறைவான வருமானம்.
அடுத்த ஐந்து மாதங்களாக மூச்சுவிட நேரமின்றி வேலை. உழைப்புக்கு ஏற்ற பலனை கைமேல் உணரமுடிகிறது. குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த சைபர்கிரைம் புத்தகமாக கிழக்கு வெளியீடாக வெளிவந்திருக்கிறது. வாழ்க்கையின் மோசமான ஆண்டாக துவங்கிய 2009, ஆண்டிறுதியில் ஆசுவாசம் வழங்கியிருக்கிறது.
இவ்வருடத்தின் ஒவ்வொரு நொடியும் எனக்கு தோள்கொடுத்த நட்பான அதிஷாவை அடுத்த ஆறு ஜென்மங்களிலும் கூட மறக்க முடியாது. சோர்வுறும்போதெல்லாம் ‘வருதப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, என்னிடம் வாருங்கள்!' என்று மத்தேயு.. மன்னிக்கவும் பாரா சொல்கிறார். அப்புறமென்ன கவலை?
2010 புத்தாண்டை மகிழ்ச்சிகரமாக வரவேற்க எனக்கு இப்போது ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!