23 பிப்ரவரி, 2010

தியாகம் மீதான வெறுப்பு!


சில நாட்களாக தியாகங்கள், தியாகிகள் மீதான பற்றோ, பிரமிப்போ கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பயமேற்பட்டு இப்போது வெறுக்கும் நிலைக்கு வந்திருக்கிறேன். ‘தன்னலமில்லாத பொதுநலம் பயனில்லாதது’ என்று கவுதம்சார் அடிக்கடி சொல்லுவார். அந்த கூற்றின் மீது ஆரம்பத்தில் எனக்கு பெரிய மதிப்பு இருந்ததில்லை. இப்போது இதுதான் யதார்த்தம் என்பதாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

2007ஆம் ஆண்டு தமிழ்செல்வன் மறைந்தபோது, ”இனத்துக்காக உயிரிழந்தாரே? வாழ்ந்தால் இவரைப்போல வாழவேண்டும்!” என்று உருகியதுண்டு. 2009ன் தொடக்கத்தில் முத்துக்குமாரின் தியாகத்தை அடுத்து, தியாகங்களை கண்டு அஞ்சத் தொடங்கினேன். வரலாறு நெடுகிலும் தியாகிகளும், தியாகங்களும் போற்றப்படுகிறார்கள். ஆயினும் பெரும்பாலும் தியாகத்துக்குப் பிறகான அவர்களது குடும்பங்கள் என்ன ஆயின என்பது குறித்த குறிப்புகள் கிடைப்பதில்லை. கிடைக்கும் ஓரிரு குறிப்புகளும் கூட வேதனையானவையே.

உச்சபட்சமாக மே 19. அடுத்தடுத்து தமிழீழத் தேசியத் தலைவரின் குடும்பத்தார் குறித்து ஊடகங்களில் வந்த செய்திகள், அவரை தீவிரமாக எதிர்த்து வந்தவர்களுக்கும் கூட கலக்கத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

’போராட்டமே தவறு!’ என்ற முட்டாள்தனமான முடிவுக்கு நான் அவசரமாக வந்துவிடவில்லை. நம்பியிருந்த இனத்துக்கான, வர்க்கத்துக்கான, மனிதகுலத்துக்கான தியாகங்கள் அனைத்துமே போற்றத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால் மூன்றாவது மனிதராக பார்க்காமல், உயிர்த்தியாகம் செய்தவரின் குடும்பத்தாரின் பார்வையில் பார்த்தோமானால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது.

பொதுநலவாதிகள் ஊருக்கு நல்லவர்களாக இருந்தாலும், குடும்பத்துக்கு வில்லன்களாகவே அறியப்படுகிறார்கள். நல்ல அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர் யாரையாவது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அவரது மகனிடமோ, மகளிடமோ, மனைவியிடமோ பேசிப்பாருங்கள். அதிர்ச்சி அடைவீர்கள். மாணவப் பருவத்தில் இருந்து அரசியலில் ஈடுபட்டு நேர்மையான செயல்வீரராக வாழ்ந்த என் அப்பாவும் கூட குடும்பத்தில் சொல்லிக் கொள்ளும்படியான பெயர் எடுத்ததில்லை. நாட்டுக்கான கடமை வேறு, குடும்பத்துக்கான கடமை வேறு. இரண்டையும் உருப்படியாக செய்தவர்களுக்கு உதாரணம், கலைஞர் போன்றவர்கள்.

லேட்டஸ்ட் அதிர்ச்சி தோழர் உ.ரா.வரதராசன்.

1989 ஜனவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தல் நேரம் நினைவுக்கு வருகிறது. எனக்குத் தெரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உச்சபட்ச செல்வாக்கோடு இருந்த காலம் அது. தோழர் வரதராசன் வில்லிவாக்கம் தொகுதியின் வேட்பாளர். அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர். மார்க்சிஸ்ட் செயல்வீரர்கள் வில்லிவாக்கம் மட்டுமன்றி சென்னை முழுவதுமே சிகப்புக்கொடியோடு சைக்கிள் பேரணிகளை நடத்துவார்கள்.

அக்கட்சியில் இருந்த என்னுடைய உறவினர் ஒருவர் என்னையும் சைக்கிளில் அமரவைத்து அழைத்துப் போயிருக்கிறார். முடிவில் பிரச்சார பொதுக்கூட்டம். சேத்துப்பட்டுக்கு அந்தப் பக்கம் என்பதாக நினைவு. வரதராசனை அப்போது பார்த்திருக்கிறேன். அப்பாவோடு சென்ற கூட்டங்களில் திராவிடக் கட்சிகளின் வேட்பாளர்களையே அதுவரை பார்த்திருந்ததால், ஒரு கம்யூனிஸ்டு வேட்பாளர் எனக்கு வேறுமாதிரியாக தெரிந்தார். ‘வெற்றி வேட்பாளர்’ போன்ற அடைமொழிகளின்றி தோழர் என்றே அவரை பேசியவர்கள் அனைவரும் விளித்தனர். அந்த தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் பிரம்மாண்டமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற நிஜமான வெற்றி வேட்பாளர்.

கடந்த 18ஆம் தேதி மாலை நாளிதழ்களின் ’மார்க்சிஸ்ட் தலைவர் மாயம்’ என்ற போஸ்டரை கண்டபோது அவ்வளவு அதிர்ச்சி ஏற்படவில்லை. மாயமானவர் வரதராசன் என்று அறிந்தபோதுதான் இதயத்தைப் பிசைந்தது. குடும்ப வாழ்க்கையின் நெருக்குதல் காரணமாக தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறார் என்று வாசித்தபோது, இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தியாகங்களின் மீதான வெறுப்பு எனக்கு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஊன், உறக்கமின்றி, நேர்மையாக ஒரு கட்சிக்கு உழைத்திருக்கிறார். பெரும்பாலான மார்க்சிஸ்ட் தலைவர்களைப் போலவே ஊழலுக்கு ஒவ்வாதவர். அவரது நேர்மையை ஊரே போற்றுகிறது. என்ன பிரயோசனம்?

இன்று தினகரன் நாளிதழின் தலையங்கத்தை வாசித்தேன். இம்மாத துவக்கத்தில் தோழரின் மனைவி மாநிலக்குழுக்கு அளித்த புகாரின் பேரில், கொல்கத்தாவில் நடந்த மத்தியக்குழு கூட்டத்தில் வரதராசன் மீது விசாரணை நடந்திருக்கிறது. பெண் தொடர்பான குற்றச்சாட்டு என்பதால் கட்சியின் மத்தியக்குழு சீரியஸாகவே விசாரித்திருக்கிறது. எல்லா குற்றச்சாட்டுகளையும் வரதராசன் மறுத்திருக்கிறார். ஆனால் உறுப்பினர்கள் மத்தியில் ஓட்டெடுப்பு நடத்தி, ஒட்டுமொத்தமாக பொறுப்புகளில் இருந்து விடுத்தி, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள் என்று தலையங்கம் குறிப்பிடுகிறது.

மனைவியின் சந்தேகத்தால் கூட மன உறுதி குறையாத வரதராசன், விபரீத முடிவை எடுக்க கட்சிதான் காரணமாக இருந்திருக்கிறது. இத்தனை ஆண்டு உழைப்புக்கும், தியாகத்துக்கும் இதுதான் பரிசு. பாவத்தின் சம்பளமாக அல்ல, தியாகத்தின் சம்பளமாக அவருக்கு மரணம் வாய்த்திருக்கிறது. அவரை கட்சி கைவிட்டு விட்ட சூழலிலும் கூட கட்சியை விட்டுக்கொடுக்காத அவரது உயர்ந்த மனம், அவர் எழுதிய கடைசிக் கடிதங்களில் வெளிப்படுகிறது.

நீங்களே சொல்லுங்கள். தியாகத்தை வெறுக்காமல் போற்றவா முடியும்?

22 பிப்ரவரி, 2010

கற்றதும், பெற்றதும்!

அண்ணா மூன்றெழுத்து
எம்.ஜி.ஆர் மூன்றெழுத்து
திமுக மூன்றெழுத்து
சுஜாதா-வும் மூன்றெழுத்து



’அவரிடமிருந்து கற்றதும், பெற்றதும் எவ்வளவோ!’ என்று ஒருவார்த்தையில் புகழாரம் சூட்டலாம். க்ளிஷேவாக இருந்தாலும் உண்மையும் கூட. என்னுடைய ஹிஸ்டரி வாத்தியார் தண்டபாணியிடம் கற்றதும் கூட, இவரிடம் கற்றதில் பாதியளவுதான் இருக்கும். அவர்மீது சில காட்டமான விமர்சனங்கள் இருந்தாலும்கூட, அவர்தான் எனக்கு ஒரிஜினல் ‘வாத்தியார்’.

70களில் ஏதோ துண்டு துக்கடா கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்த கமல்ஹாசன் பெரிய ஹீரோவாக வருவார் என்று கணித்ததில் ஆகட்டும், எங்கோ மூலையில் முடங்கிக் கொண்டிருந்த மனுஷ்யபுத்திரனின் திறனை உலகுக்கு அறிவித்ததில் ஆகட்டும்.. வாத்தியாரின் தீர்க்கதரிசனம் என்றுமே ‘மிஸ்’ ஆனதில்லை.

‘பெண்களூர்’ என்று விளிப்பதாகட்டும், சமத்துவம் பேசும் ஹீரோயினிடம், “ஆம்பளைன்னா சட்டையோட மேல் பட்டன் ரெண்டை திறந்துவிட்டுப்பேன். நீ செய்வியா?” என்று டயலாக் எழுதிய நக்கலாகட்டும். வாத்தியார் வாத்தியார்தான்! ஆணாதிக்கமாக இருந்தாலும் ரசிக்கக்கூடிய ஆணாதிக்கம்.

எழுத்தில் கணேஷ்-வசந்தில் தொடங்கி, சினிமாவில் விக்ரம், இந்தியன் தாத்தாவென்று பயணித்து ரோபோவரை தொடர்ச்சியாக இயங்கிய ஃபேண்டஸி சிங்கம். ‘கண்ணேதிரே தோன்றினாள்’ படத்தின் பட்டாம்பூச்சி வசனம் நினைவிருக்கிறதா?

எழுத்து, சினிமாவென்று குறுகிவிடாமல் சமூகத்தில் பரவலாக பல தளங்களில் அறிமுகமான சகலகலா வல்லவன். அப்துல்கலாமுக்கு கல்லூரித் தோழர். மின்னணு வாக்கு இயந்திர முறையை நாட்டுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்.

ஸ்ரீரங்க நாயகன், ஸ்ரீரங்கநாதனோடு அடைக்கலமாகி, அதற்குள்ளாக இரண்டு வருடங்களாகிறதாம். இன்னும் அவர் எழுதிக்கொண்டே இருப்பதைப்போன்ற மாந்திரீக யதார்த்தம். அவரது வீச்சு அத்தகையது. மறைந்தும் மறையாமல் வாழ்பவர்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடம் நிச்சயம் இவருக்கு.

அவரிடம் கற்றதையும், பெற்றதையும் அசைப்போட ஒரு சிறிய கூட்டம். பிப்ரவரி 27, சனிக்கிழமை, மாலை 5.30 மணி. காந்தி சிலை அருகில். சென்னை மெரீனா கடற்கரை. நிகழ்வு அமைப்பு : ஐகாரஸ் பிரகாஷ், உருப்படாதது நாராயணன்.

பிரபல (இந்த சொல்லை சொல்லவே அஞ்சவேண்டியிருக்கிறது. மொக்கைகளும், மொன்னைகளும் கூட பிரபலமாக இருக்கிறார்கள்) எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள் மற்றும் ட்விட்டர்கள் சிறுந்திரளாக கலந்துகொள்கிறார்கள். யாவரும் வரலாம்.

20 பிப்ரவரி, 2010

சுவாரஸ்யமான வலைப்பூ!

ஏழு மலை, ஏழு கடல் தாண்டி கடைசியாக நிஜமாகவே சுவாரஸ்யமாக எழுதிக்கொண்டிருக்கும் வலைப்பதிவர் ஒருவரை கண்டுபிடித்துவிட்டேன்.

போதுமான ஹிட்டுகளோ, பின்னூட்டங்களோ, ஓட்டுகளோ விழவில்லை என்றாலும், எழுத்தில் நல்ல கன்சிஸ்டென்ஸி இவருக்கு இருக்கிறது!

http://ksurendran.wordpress.com

கீழே பார்க்கும் நட்சத்திரங்கள்!


‘ஏழு தலைமுறைக்கு சொத்து இருக்கு. படிப்பு எதுக்கு?’ என்று வசதி படைத்த மாணவர்களுக்கும், ‘சோத்துக்கே வழியில்லை, படிப்பு ஒரு கேடா?’ என்று ஏழை மாணவர்களுக்கும் அவரவர் நிலைக்கேற்ப கல்வியை பாதியில் கைவிட ஒருகாலத்தில் நியாயங்கள் கற்பிக்கப்பட்டன.

கல்வி கசந்த மாவட்டங்களாக பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அறியப்பட்ட மாவட்டங்கள் தருமபுரியிலும், கிருஷ்ணகிரியிலும் இந்நிலை அதிகமாக இருந்தது. இம்மாவட்டங்கள் கல்வி வளர்ச்சியில் பின்தங்கியதால் ஒட்டுமொத்தமாக எல்லாத்துறைகளிலும் பின்தங்க வேண்டிய நிலையும் ஒரு காலத்தில் இருந்தது. பள்ளிகளில் இருந்து படிப்பை பாதியில் விடும் மாணவர்களின் சதவிகிதம், அப்போது மிக அதிகம் இங்கே.

மாநில அரசுக்கு இந்த நிலை காரமாக உறைத்தது. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டன. மாவட்ட ஆட்சியர்களும், அரசு அதிகாரிகளும் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று களநிலைகளை ஆராயத் தொடங்கினர். பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண முயற்சித்தனர். ‘அனைவருக்கும் கல்வி’ இயக்கம் தன்னுடைய முழு ஆற்றலையும் இம்மாவட்டங்களில் செயல்படுத்தத் தொடங்கியது. யூனிசெஃப் நிறுவனம் கிட்டத்தட்ட இம்மாவட்டங்களை தத்தெடுத்துக் கொண்டது என்றே சொல்லலாம்.

பலதரப்பட்டவர்களின் முயற்சிகளுக்கு பலன் இல்லாமல் போகுமா? தர்மபுரியும், கிருஷ்ணகிரியும் இன்று கல்வி வளர்ச்சியில் அதிவேகமாக முன்னேறத் தொடங்கியிருக்கின்றன. ஏராளமான பொறியாளர்களையும், மருத்துவர்களையும் கடந்த பத்தாண்டுகளில் இம்மாவட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கின்றன.

இன்றைய நவீன உலகில் அதிசயங்கள் சகஜம். ஆனாலும் அதிசயங்களை நேரில் காணும் ஆவல் மட்டும் மனிதனுக்கு குறைவதேயில்லை. நடப்புக் காலத்தில் கல்வி விழிப்புணர்வு நடந்து கொண்டேயிருக்கும் இம்மாவட்டங்களில் ஏதேனும் ஒரு குக்கிராமப் பள்ளியை ‘திக்விஜயம்’ செய்து வாசகர்களுக்காக பார்வையிட ஆசைப்பட்டோம். பள்ளிகளின் பட்டியலில் இருந்து ஆசிரியர் நமக்கு தேர்ந்தெடுத்து தந்த பள்ளி ‘கொட்டுக்காரம்பட்டி நடுநிலைப்பள்ளி’.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்தில் இருக்கிறது கொட்டுக்காரம்பட்டி. திருவண்ணாமலையில் இருந்து இருபுறம் அடர்ந்த வனங்களும், தூரத்தில் தெரியும் நீலமலைகளுமான சாலையில் சுமார் 50 கிலோ மீட்டர் பயணம் செய்தால், பாம்பாறு அணைக்கட்டுக்கு முன்பாக இடப்பக்கம் ஒரு சிறிய சாலை செல்லும். ஒரே ஒரு நகரப்பேருந்து மட்டுமே அத்திபூத்தாற்போல வந்து, செல்லும் அச்சாலையில் மூன்று, நான்கு கிலோ மீட்டர் நடந்துச் சென்றால் கொட்டுக்காரம்பட்டி.

வழியெங்கும் செங்கல் சூளைகள். ‘ஒருகாலத்தில் இச்சூளைகளில் ஏராளமான குழந்தைகள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். பள்ளிக்கு அக்குழந்தைகளை திரும்ப அழைத்துவருவதே பெரும்பாடாக இருந்தது. இப்போது கிட்டத்தட்ட சூளைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற நிலையை எங்கள் மாவட்டத்தில் இருந்து விரட்டியடித்து விட்டோம், தலையை அடகுவைத்தாவது குழந்தைகளுக்கு கல்வியை வழங்கவேண்டும் என்ற விழிப்புணர்வு எங்கள் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது’ என்று கிராமவாசி ஒருவர் நமக்கு விளக்குகிறார்.

‘பளிச்’சென்று இருக்கிறது நடுநிலைப்பள்ளி. சுத்தமான மைதானம். பூந்தோட்டம். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரித்து குப்பைத் தொட்டிகள் வைத்திருக்கிறார்கள். வகுப்பறை, மைதானம், தண்ணீர், கழிவறை, சத்துணவு கண்காணித்தல் என்று பள்ளியின் பராமரிப்புப் பணிகளை மாணவர்கள் தாங்களே குழு அமைத்துச் செய்கிறார்கள்.

பள்ளியின் பசுமைப்படை தோட்டவேலையை கவனித்துக் கொள்கிறது. அவ்வப்போது ஊரின் சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளையும் சிரமேற்கொண்டு செய்கிறார்கள். பள்ளியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் உடல்நலம், சுகாதாரம் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்கிறது.

‘அனைவருக்கும் கல்வி’ திட்டம் மூலமாக வண்ண தொலைக்காட்சி மற்றும் மூன்று கணினிகள் கிடைத்திருக்கிறது. இணைய வசதி இல்லாததால், தலைமையாசிரியர் தன் சொந்தப்பணத்தில் ஒரு ‘டேட்டா கார்ட்’ மூலமாக இணைய வசதி செய்து கொடுத்திருக்கிறார். குக்கிராமத்தில் அமைந்திருக்கும் இந்தப் பள்ளிக்கு பிரத்யேகமாக ஒரு இணையத்தளம் நடத்தப்படுகிறது என்பது அடுத்த ஆச்சரியம். பள்ளியின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகள் http://pumskottukarampatti.blogspot.com என்ற இணையத்தளத்தில் அவ்வப்போது பதிவேற்றப்படுகிறது. கல்வித்துறை அதிகாரிகள் பலரும் அடிக்கடி ‘விசிட்’ செய்யும் முக்கியமான இணையத்தளம் இது. பள்ளியின் நடவடிக்கைகளை கண்காணிக்க அவர்களுக்கு இது உதவுகிறது.

நூற்றி இருபத்தி மூன்று மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். ஐந்து ஆசிரியர்கள். ஒரு ஆசிரியப்பணி காலியிடம். நாற்பத்தி இரண்டு வயது இளைஞரான ராஜேந்திரன் இப்பள்ளியின் தலைமையாசிரியர். தமிழிலக்கிய ஆர்வலரான இவருக்கு இலக்கிய உலகில் வேறு ஒரு பெயரும் உண்டு. கவி செங்குட்டுவன்.

“ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இங்கே தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றேன். புதராக மண்டிக்கிடந்த பள்ளியின் சூழலை மாற்றியமைப்பது எனக்கு சவாலாக இருந்தது. மாணவர்களின், ஊர்மக்களின் ஒத்துழைப்போடு என்னால் முடிந்த பணிகளை செய்தேன். அரசு அதிகாரிகளுக்கு மனுபோட்டு நல்ல வகுப்பறைகள் கட்டினேன்.

நம் பள்ளி என்ற உணர்வு ஒவ்வொரு மாணவனுக்கும் இருப்பதால், காலை எட்டரை மணிக்கே வந்து, பள்ளி தொடர்பான அனைத்துப் பணிகளையும் அவனே செய்ய ஆரம்பித்து விடுகிறான். ஆரம்பத்தில் வழிகாட்டியதோடு சரி. அவனவன் பொறுப்பை அவனே உணர்ந்து செம்மையாக செய்கிறான். மகிழ்ச்சியோடு வேடிக்கைப் பார்க்கிறேன்!” என்று தனக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுகளையும், மாணவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்.

எல்லா அரசு தலைமையாசிரியர்களைப் போல, இவரும் செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்விக்கு ஆதரவானவராக இருக்கிறார். “செயல்வழிக் கற்றலில் சிறப்பாக ஒருவன் செயல்பட்டுவிட்டால், படைப்பாற்றல் கல்வியில் எங்கோ போய்விடுவான். கல்வி கற்பது குறித்த ஆர்வம் மாணவர்களுக்கு இயல்பாகவே வந்துவிடும். அவனது கற்றல் ஆர்வத்தை அதன்பிறகு யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது” என்கிறார்.

யூனிசெப் நிறுவனம் சுகாதாரமான பள்ளிகளுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கி வருகிறது. அதிகபட்சமாக ஒரு பள்ளிக்கு பத்து நட்சத்திர அந்தஸ்து வழங்கப்படும். ஒரு அரசுப்பள்ளி நான்கு, ஐந்து புள்ளிகள் வாங்கினாலே சுகாதாரத்தில் ஓரளவு தன்னிறைவுப் பெற்ற பள்ளியாக எடுத்துக் கொள்ளலாம். கொட்டுக்காரம்பட்டி நடுநிலைப் பள்ளி கடந்த ஆண்டு பத்து நட்சத்திர அந்தஸ்தும், இவ்வாண்டு ஒன்பது நட்சத்திர அந்தஸ்தும் யூனிசெஃபிடம் இருந்து பெற்றிருக்கிறது. ஒரு கிராமப்புறப்பள்ளி எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு மாதிரியாக நாம் கொட்டுக்காரம்பட்டி நடுநிலைப்பள்ளியை எடுத்துக் கொள்ளலாம்.

இப்பகுதியில் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் கல்வி விழிப்புணர்வு குறித்து தலைமையாசிரியர் ராஜேந்திரனிடம் பேசினோம். “கல்வியைப் பொறுத்தவரை எங்கள் மாவட்டம் ஒரு காலத்தில் கேலியாக பார்க்கப்பட்டது உண்மைதான். அரசும், பல்வேறு அமைப்புகளும் இணைந்து இந்நிலையை இன்று மாற்றியிருக்கின்றன. கடந்த தலைமுறையில் கல்விகற்ற என்னைப் போன்றவர்களும் எங்கள் மாவட்டத்து கல்வி வளர்ச்சிக்கு கடுமையாகப் பாடுபட்டு வருகிறோம். உதாரணமாக நான் படித்த ஊத்தங்கரை அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நடந்த விஷயத்தை சொல்கிறேன். அப்பள்ளியின் பொன்விழா பரிசாக முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு நூலகம் (தனிக்கட்டுரையாக காண்க) அமைத்துத் தந்திருக்கிறோம். எங்களது அடுத்த தலைமுறை எங்களைவிட உயர்வான கல்விவளர்ச்சியைப் பெறவேண்டும் என்ற அக்கறையே இதற்குக் காரணம்!” என்கிறார்.

பொதுவாக நாம் கவனித்தவகையில் 1989-90 காலக்கட்டத்தில், பத்தொன்பது, இருபது வயதுகளில் ஆசிரியராக ஏராளமான இளைஞர்கள் பணிநியமனம் பெற்றிருக்கிறார்கள். போதிய அனுபவம் பெற்று தலைமையாசிரியர்களாகப் பதவியேற்ற பல பள்ளிகளில் இதுபோன்ற வரவேற்கத்தக்க மகிழ்ச்சியான மாற்றங்கள் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறார்கள். புதியதலைமுறையின் முதல் இதழிலேயே நாம் எழுதிய, புதுக்கோட்டை மாவட்டத்தின் புதுமைப்பள்ளியான மாங்குடி நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜோதிமணியும் கூட இளைஞர்தான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

புதிய தலைமுறை இளைஞர்கள், முற்போக்கான மாற்றங்களின் மூலமாக புரட்சியை படைக்கவல்லவர்கள் என்ற கூற்று அடுத்தடுத்து மெய்ப்பிக்கப்பட்டே வருகிறது. தமிழக பள்ளிகளில் இப்போது ஆசிரியப்பணிக்கு ஏராளமான காலியிடங்கள் இருப்பதாக, நாம் செல்லும் இடங்களிலெல்லாம் அறியமுடிகிறது. இருபதாண்டுகளுக்கு முன்பு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கியதைப் போல, இப்போதும் உடனடியாக அப்பணிகளுக்கு இளைஞர்களை அரசு நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கும் பட்சத்தில் அடுத்த இருபதாண்டுகளில் தமிழ்நாடு முழுக்க நூற்றுக்கணக்கான நட்சத்திரப் பள்ளிகளை நாம் பெற்றிருப்போம் என்பது உறுதி.

(நன்றி : புதிய தலைமுறை)