12 மார்ச், 2010

ஓட்டம்தான் மூச்சு!


ஒரு மாரத்தான் ஓட்டக்காரருக்கு என்ன தேவை? புரோட்டின், சமவிகிதத்தில் கார்போ-ஹைட்ரேட், விட்டமின் இவையெல்லாம் அதிகளவில் இருக்கும் உணவுப்பொருட்கள், உடல் ஊட்டத்துக்கு தேவையான மருந்துகள் இதெல்லாம் அவசியம் என்பீர்கள். ஐம்பத்து மூன்று வயதான ராஜம் கோபிக்கு துரதிருஷ்டவசமாக இதெல்லாம் கிடைக்கவில்லை.

“இட்லி, சாப்பாடு, ரொட்டி, ஆம்லெட், அப்பளம் - இவைதான் என் ஓட்டத்துக்கு ஊட்டம். என்னிடம் இருக்கும் பணத்துக்கு அதிகபட்சமாக இவற்றைதான் என்னால் வாங்கமுடியும்” என்கிறார்.

சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் ராஜமுக்கு ஆர்வம் அதிகம். ஒன்பதாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டி விட்டார். துப்புரவுப் பணியாளராக கொச்சியில் பணிபுரிந்திருக்கிறார். இடையில் திருமணமும் ஆனது. கணவர் கோபி, அரசுப் பேருந்து நிலையம் ஒன்றில் சுமை தூக்குபவர். பொருளாதாரக் காரணங்களுக்காக அவ்வப்போது இடம்பெயர நேரிட்டது. மகன், மகள் என்று இரண்டு குழந்தைகள்.

திடீரென ஒரு நாள் ராஜமுக்கு மீண்டும் தடகளப் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பொதுவாக இந்தியக் கணவர்கள் தங்கள் இல்லத்தரசிகளின் இல்லம் தாண்டிய ஆர்வங்களை ஊக்குவிப்பதில்லை. கோபி ஒரு விதிவிலக்கு. கோட்டயத்தில் நடைபெற்ற மூத்தோருக்கான ஒரு போட்டியில் பங்குகொண்டு ராஜம் குறிப்பிடத்தக்க அளவில் சாதித்தார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளிலும், நடைப்போட்டியிலும் தங்கம் வென்றார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயானபிறகும் ராஜம் விளையாட்டுத் துறையில் மீண்டும் நுழைந்து வெற்றி கண்டதற்குப் பின்னால் அவரது கணவர் மட்டுமே இல்லை. இன்னொருவரும் உண்டு. ராஜமுக்கு பயிற்சியளித்த கோச் ஏ.ராமச்சந்திரன். இவர் திரிச்சூர் போலிஸ் அகாடமியில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர்.

இதெல்லாம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம். அதன்பின் நடந்தது வரலாறு. ராஜம்கோபியின் ஓட்டத்தை காலத்தால் கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. இப்போது கிட்டத்தட்ட 80 பதக்கங்கள் அவரது வசம். தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் வென்ற 40 பதக்கங்களும் அவற்றுள் அடக்கம்.

கடந்த 2008ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த மூத்தவர்களுக்கான ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவின் சார்பில் இரண்டு தங்கப்பதக்கம் மற்றும் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை இவர். கடந்த ஆண்டு நடந்த 22வது மலேசிய மூத்தோர் தடகளப் போட்டியில் நான்கு தங்கம். கடந்த 2000ஆம் ஆண்டின்போது பெங்களூரில் உலக மூத்தோர் தடகளப்போட்டி நடந்தபோது, 5 கி.மீ நடைப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, மூத்தோர் தடகளப்போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியராய் தன் பெயரை பதிவு செய்துகொண்டார்.

2007ஆம் ஆண்டு இத்தாலியில் மூத்தோர் உலக தடகளப்போட்டி நடந்தபோது, இவர் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், துரதிருஷ்டவசமாக விசா பிரச்சினைகளால் இவரால் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டது. இதுபோலவே 2005ல் இங்கிலாந்திலும், 2006ல் ஆஸ்திரேலியாவிலும் நடந்த சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டிகளில் பொருளாதாரம் காரணமாக இவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

போதுமான ஊட்டச்சத்துகளோடு கூடிய உணவு கிடைக்காவிட்டாலும், இன்றும் பத்தாயிரம் மற்றும் ஐயாயிரம் மீட்டர் ஓட்டம், பத்தாயிரம் மீட்டர் நடை, நானூறு மீட்டர் தடைதாண்டிய ஓட்டம் மற்றும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள தேவையான உடல் தகுதிகளோடு இருக்கிறார்.

பொதுவாக தடகள வீராங்கனைகள் ஐம்பது வயதிற்குள்ளாக ஓய்வு பெற்று தங்கள் வாழ்க்கையை வாழதான் விரும்புவார்கள். பேரன், பேத்தியோடு நேரத்தை செலவிடுவார்கள். ராஜம் கோபியோ தன்னுடைய வாழ்க்கையே இப்போதுதான் தொடங்கியிருப்பதாக பெருமிதப்படுகிறார். “என் ஒரு நாள் உணவை உட்கொள்ள நான் மறந்தாலும் மறப்பேனே தவிர, ஓட்டப்பயிற்சியை ஒருநாளும் மறந்ததில்லை” என்று சிரிக்கிறார். மலையாளம் சரளமாகப் பேசும் இவருக்கு இந்தியும், ஆங்கிலமும் கொஞ்சம் கொஞ்சம் வருகிறது.

என்னதான் பதக்கங்களும், பெருமையுமாக குவிந்தாலும் ராஜம்கோபியின் பொருளாதார நிலைமை ஒன்றும் பெரியதாக மேம்பட்டு விடவில்லை. அவரது கணவர் இப்போது வேலை எதுவும் இல்லாமல் இருக்கிறார். மகன் ஆட்டோ ஓட்டுகிறார். மகளை ஒரு கார்பெண்டருக்கு கட்டி கொடுத்திருக்கிறார். தற்போது கொச்சியின் தல்வால்க்கர் மைதானத்தில் ராஜமும் பயிற்சியாளராகப் பணிபுரிகிறார். வருமானம் போதாமல் லேப் ஒன்றிலும் துப்புரவுப் பணிகளுக்குப் போகிறார். “நான் சம்பாதிக்கும் பணம் என் குடும்பத்துக்கு போதவில்லை என்பது நிஜம்தான்!” என்று வருத்தப்படுகிறார்.

துப்புரவு பணியாளர் பணிக்கு கேரள அரசின் முதல்வரிடமும், விளையாட்டுத் துறை அமைச்சரிடமும் விண்ணப்பித்திருக்கிறார். பல்வேறு விண்ணப்பங்களை அளித்தும் பலன் ஒன்றுமில்லையாம். இத்தனைக்கும் ‘2008ஆம் ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனை’ விருதினை கேரள மூத்தோர் விளையாட்டு அமைப்பிடம் இருந்து பெற்றவர் ராஜம்கோபி.

ஐம்பத்தி இரண்டு வயதானாலும் பயிற்சியில் இவர் எந்தக் குறையும் வைப்பதில்லை. தினமும் ஒருமணி நேர ஓட்டப் பயிற்சி. இதுமட்டுமன்றி வாரம் ஒருமுறை தொடர்ச்சியாக பதினைந்து கிலோ மீட்டர் ஓட்டம். “ஓடிக்கொண்டிருக்கும் போதே என் மூச்சு நின்றுவிட வேண்டும்!” என்பதுதான் ராஜம்கோபியின் இறுதிவிருப்பமாம்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

ராஜம் கோபியின் டயட் ரகசியம்!

காலை 6.30 - 8.30 :
ஓட்டப் பயிற்சியின் போது தண்ணீர் மட்டும்

காலை 8.45 :
ஒரு கப் தேனீர்

காலை 10.45 :
பால் மற்றும் இரண்டு கப் ஓட்ஸ்
இரண்டு இட்லி அல்லது ஒரு வாழைப்பழம் அல்லது ஒரு முட்டை

பிற்பகல் 12.30 :
சாம்பார் சாதம், ஏதாவது ஒரு காய்கறியுடன்.

மாலை 4.00 :
டிக்காஷன் காஃபி, நான்கு மேரி பிஸ்கட்டுகளுடன்
அல்லது இரண்டு சிறிய தோசை

மாலை 6.00 :
ஒரு கப் பூஸ்ட் (சுடுதண்ணீர் கலந்தது)

இரவு 8.30 :
சாம்பார் சாதம், ஒரு ஆம்லெட்

இரவு 11.30 :
ஒரு ஆப்பிள் மற்றும் கைநிறைய திராட்சைப்பழம்

(நன்றி : புதிய தலைமுறை)

11 மார்ச், 2010

வச்ச குறி தப்பாது!


’தில்லுதுர’ என்ற மொக்கையான சீண்டல் விளம்பரத் தொடரின் தொல்லை இப்போதுதான் முடிந்திருக்கிறது. அடுத்தது ஆரம்பித்து விட்டார்கள். வெச்சகுறி தப்பாதாம்.

அதிருக்கட்டும். அதென்ன சீண்டல் விளம்பரம்?

‘சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ நூலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது :

சீண்டல் விளம்பரங்களை (Teaser ads) நீங்கள் அதிகம் கண்டிருக்க முடியும். இங்கே சீண்டுதல் என்பது மக்களை சீண்டுவதாக பொருள்படும். ஒரு விளம்பரத்தை கண்டதுமே தலையும் புரியாமல், வாலும் புரியாமல் அந்த விளம்பரத்தை தந்த நிறுவனம் எது, விற்க விரும்பும் பொருள் எது என்று தெரியாமல் நீங்கள் குழம்பினால் அதுதான் சீண்டல் விளம்பரம்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ என்ற கேள்வியை எங்கு பார்த்தாலும் கேட்டுக் கொண்டிருந்தார்கள் இல்லையா? அதுதான் சீண்டல் விளம்பரம். சீண்டல் விளம்பரங்கள் எந்த பொருளையும் உடனடியாக விற்றுத் தராது, எந்த நிறுவனத்தையும் பற்றி உடனே மக்களை பேசவைக்காது. ஆனாலும் சீண்டலை மக்கள் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட மாட்டார்கள். சீண்டல் விளம்பரங்கள் மூலமாக நிறுவனத்தின் பிராண்டை மக்கள் மத்தியில் வெகுவாக பரவலாக்க முடியும்.


ஓக்கே, கமிங் பேக் டூ த பாயிண்ட்.

‘வச்ச குறி தப்பாது’ யாரை குறிவைத்து விளம்பரப் படுத்தப் படுகிறது என்று கடந்த ஒருவாரமாய் பல்வேறு வேண்டுகோள்களை ஏற்று ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இந்த விளம்பரத்துக்கான மீடியம் மூன்று வகைகளாக இருக்கிறது. 1) போஸ்டர், 2) பத்திரிகை விளம்பரம், 3) டிவி விளம்பரம்.

சினிமா சுவரொட்டிகளுக்கு நடுவில் வச்ச கண்ணு வாங்காமல் பார்த்தால்தான் இந்த போஸ்டர்களை காணமுடிகிறது. பொதுவாக அரசியல் போஸ்டர்களும், ஏனைய அடாசுகளும் ஒட்டப்படும் இடங்களில் காணமுடிவதில்லை. எனவே சினிமா போஸ்டர் ஒட்டும் ஆட்களே இதையும் ஒட்டுகிறார்கள் என்று கண்டுகொள்ளலாம்.

பத்திரிகை விளம்பரங்களிலும் விண்ணை தாண்டி வருவாயாவுக்கு கீழேயும், தம்பிக்கு இந்த ஊருக்கு மேலேயும் நம் வச்சகுறி இடம்பெறுகிறது. டிவி விளம்பரம் என்று பார்த்தால் விஜய் டிவியில் மட்டும் கவுபாய் இசையோடு ஒளிபரப்பாகிறது.

விசிபிலிட்டி மற்றும் டார்கெட் ஆடியன்ஸ் அடிப்படையில் பார்த்தோமானால் இது சினிமா விளம்பரமென்று அதிநிச்சயமாக சொல்லலாம். அப்படி மட்டும் இல்லையெனில் விளம்பரத்தை தரும் விளம்பர ஏஜென்ஸியின் கிரியேட்டிவ் டைரக்டர்கள் அதிபுத்திசாலிகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

விளம்பரத்துக்கு பயன்படுத்தியிருக்கும் எலிமெண்ட்ஸை வைத்துப் பார்த்தோமானால் இது ‘இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்’ படத்துக்கான விளம்பரங்களாக இருக்கக்கூடும் என்று கணிக்க முடிகிறது. பொதுவாக சினிமாவுக்கு இதுபோல சீண்டல் விளம்பரங்கள் சரியாக எடுபடுவதில்லை. ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம். விதிவிலக்குக்கு உதாரணம் : ‘ஜெயம்’ படம் வெளியானபோது செய்யப்பட்ட சாதாரணமான போஸ்டர் கேம்பைன்.

என் விளம்பர அனுபவத்தில் உணர்வது என்னவென்றால் புராடக்டுக்கு டீசர் வேலைக்கு ஆகாது. சர்வீஸுக்கு தான் இந்த உத்தியை பயன்படுத்தலாம். புராடக்ட்டை டமாலென்று காட்சிக்கு வைத்து சிறப்பம்சங்களை வரிவரியாக அடுக்குவதே இந்திய மனோபாவத்துக்கு வேலைக்கு ஆகும்.

சினிமா என்பது ஒரு புராடக்ட். சர்வீஸ் அல்ல. ’இரும்புக்கோட்டை முரட்டு’ படத்தைப் பொறுத்தவரை குழந்தைகளை டார்கெட் செய்து அடித்தால் மட்டுமே வெச்சகுறி தப்பாமல் வசூலை அள்ளலாம். கோடைவிடுமுறை ரிலீஸ் என்பது அருமையான வாய்ப்பு. ஆனால் இதுபோல சீண்டலாக மாற்றி மாற்றி அடிப்பது என்பது இலக்கில்லாத வெத்து அடியாக மட்டுமே இருக்கும்.

சிம்புதேவன் ‘இம்சை அரசன்’ விளம்பரங்களில் டக்கர் அடி அடித்திருந்தார். குழந்தைகளை சரியாக டார்கெட் செய்து அடிக்கப்பட்ட சரியான அடி அது. அதே பாணியையே இப்படத்துக்கும் தொடர்ந்திருக்கலாம். இப்பொழுதே கவுபாய் எலிமெண்ட்ஸை (தொப்பி, பொம்மை துப்பாக்கி போன்றவை) விற்பனைக்கு வைத்து அல்லது குழந்தைகளுக்கு பரிசுகளாக கொடுத்து படத்துக்கு ஹைப்பை ஏற்றமுடியும்.

இவ்வளவு நாளாக இறைக்கப்பட்டது விழலுக்கு இறைத்த நீர் என்றே நினைக்கிறேன்.

தொடர்புடைய பழையப் பதிவு ஒன்று இங்கே!

10 மார்ச், 2010

ராமர் பாலம்!

இரண்டு வருடங்களுக்கு முன்பாக எழுதிய பதிவிது. சேதுசமுத்திரத் திட்டம் அப்போதெல்லாம் ஊடகங்களில் பற்றியெறிந்துக் கொண்டிருந்தது. இப்போது அதைப் பற்றி பேச்சு மூச்சே காணோம். ஒருவேளை நிஜமாகவே அங்கு ராமர்பாலம் இருந்ததை மத்திய அரசு கண்டுபிடித்து விட்டதா என்று தெரியவில்லை! :-(

என்ன கொடுமை சார் இது?

இந்தச் செய்தியை படித்ததிலிருந்தே மனசு சரியில்லை. முல்லாக்களும், அண்டோமேனியா தலைமையிலான கிறிஸ்தவ மிஷனரிகளும் நம் புண்ணிய பூமியை சுடுகாடாக்கி விடுவார்களோ என்ற கவலை மேலிடுகிறது.

அம்மாவின் புண்ணியத்தால் ஹைகோர்ட்டில் நம் மகளிர் அணியினரின் சிறப்புத்தரிசனம் பெற்றவர் சுப்பிரமணியசாமி. அதன் மூலமாக அவருக்கு ஞானம் கிடைத்தது. ஹிந்துக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் சுப்பிரமணியசாமி மூலமாக தீர்த்து வைப்பது அம்மாவின் வாடிக்கை. அம்மாவின் நம்பிக்கைக்குரிய சாணக்கியர் சோ ராமசாமிக்கு ரொம்பவும் நெருங்கியவர் இந்த சுப்பிரமணியசாமி. ராமபிரான் பாலம் குறித்து அவர் தொடுத்த வழக்கு ஒன்றினை கொத்துபரோட்டா போட்டிருக்கிறார்கள் உச்சநீதிமன்றத்தில்.

முன்பெல்லாம் நமக்கு சோதனை என்றால் உச்சநீதிமன்றத்துக்கு தான் ஓடி நல்ல தீர்ப்பு பெறுவோம். திம்மிக்கள் வயிறு பொறுமுவார்கள். இப்போதெல்லாம் உச்சநீதிமன்றத்தை கூட நம்பமுடியவில்லை. இராமர் பாலம் கட்டியதற்கு ஆதாரமெல்லாம் கேட்கிறார்கள். ஆதாரமாக தான் ஹிந்துக்கள் போற்றும் இராமாயணம் இருக்கிறதே? சன் டிவியில் ஞாயிறு தோறும் இராமாயணம் போடுகிறார்களே? இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்? இவற்றுக்கெல்லாம் மேலாக இராமர் பாலம் இருந்தது உண்மை என்று அம்மாவே சொல்லியிருக்கிறாரே? துக்ளக்கில் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறதே?

இராமேஸ்வரம் போனால் கடலில் பிரம்மாண்டமாக இராமர் பாலம் தெரியும். அதன் வழியாக நாம் இலங்கைக்கு கூட போகலாம் என்பது தமிழ்நாட்டின் சிறுபிள்ளைக்கும் தெரியும். திம்மிக்கள் சூழ்ச்சி செய்து டி.ஆர்.பாலு மூலமாக அந்த பாலத்தை கடலில் அமுக்கி வைத்திருக்கிறார்கள். ரவுடி திம்மி கூட்டம் அந்த பாலத்தை சேதப்படுத்த முயற்சித்தால் அவர்களை 295வது பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சுப்பிரமணிசாமி கோர்ட்டில் கேட்டிருக்கிறார். அது வழிபாட்டுத்தலமா? அங்கே யாராவது வழிபடுகிறார்களா? அப்படி ஒரு பாலம் இருக்கிறதா? என்று நீதிபதிகள் கேள்வி கேட்கிறார்களாம். ராமர் பாலத்தை நம்பும் எண்பது கோடி ஹிந்துக்களை முட்டாள் என்று நினைக்கிறதா உச்சநீதிமன்றம்?

இனியும் ராமர்பாலம் இருக்கிறதா என்று உச்சநீதிமன்றம் கேட்டால், அந்த பாலத்தை கட்டிய அணிலை சாட்சிக்கூண்டில் நிறுத்தி சாட்சி சொல்லவைக்க எண்பது கோடி ஹிந்துக்களும் தயாராக இருக்க வேண்டும். இதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய நாம் தயாராக இருப்போம்.

இராமர் பாலம் கட்டப்பட்டபோது எடுத்த வண்ணப்படம். அணில் அப்போது வேலையில் பிஸியாக இருந்ததால் படத்தில் இல்லை.

5 மார்ச், 2010

Univercell Chennai Blogger meet!


www.indiblogger.in பற்றி தமிழ்பதிவர்களுக்கு பெரிய அறிமுகம் கிடையாது. இந்திய மொழிகளில் எழுதிவரும் வலைப்பதிவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு இணையத்தளம்.

இத்தளத்தின் மூலமாக அவ்வப்போது வலைப்பதிவர் தொடர்பான சந்திப்புகளும், நிகழ்ச்சிகளும் நடந்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் வரும் 20ஆம் தேதி ஒரு சந்திப்பு ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் சென்டரில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்படிருக்கிறது. தமிழ் வலைப்பதிவர்களும் பங்கேற்கலாம். ஏற்கனவே சில பிரபல(!) வலைப்பதிவர்கள் இச்சந்திப்பில் பங்கேற்க தங்கள் பெயரை பதிவு செய்திருப்பதை சம்பந்தப்பட்ட பக்கத்தில் அறியமுடிகிறது.

என்று & எங்கே?

சனிக்கிழமை, மார்ச் 20, 2010 பிற்பகல் 2.30 மணி. நிகழ்ச்சி முடியும் நேரம் மாலை 6 மணி.

இடம் : ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் சென்டர்
120, சர். தியாகராயா சாலை,
தி. நகர், சென்னை - 600 017.
(ஜி.ஆர்.டி. கிராண்ட் டேஸ்க்கு அடுத்து)

மேலதிக விவரங்களுக்கு : 45018949 என்ற தொலைபேசி எண்ணில் indiblogger அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

சந்திப்புக்கு வர விரும்புபவர்கள் இந்தப் பக்கத்தில் சென்று உடனடியாக தங்களது பெயரை பதிவு செய்யவும். அதிகபட்சம் 150 பேர் மட்டுமே கலந்துகொள்ளக் கூடிய நிகழ்ச்சி என்பதால் முதலில் பதிபவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும்.

பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஓசியில் எதையாவது வழங்குவார்கள் என்பதால், நம் தமிழ் பண்பாட்டுக்கிணங்க தமிழ் வலைப்பதிவர்கள் முண்டியடிக்கும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். நிகழ்ச்சியை வழங்குபவர்கள் : யுனிவர்செல், சென்னை.

எந்திரன்!












இந்தப் படத்தோட ஹீரோவுக்கு அறுவது வயசுன்னா சொன்னா ஹாலிவுட்லே கூட நம்பமாட்டாங்க இல்லை?