கடைசியாக ‘கீற்று' இணையத்தளம்.
இணையத்தளத்தை நான் பாவிக்கத் தொடங்கிய ஆரம்பகாலக் கட்டத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக இத்தளத்தை நம்பினேன். இணையத் தளங்களில் கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்திக்கு எதிரானதாகவும், மாற்று அரசியலையும், மாற்று சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ளும் தளமாகவும் கீற்று விளங்கியது அந்தக் காலம்.
ஆனால் ஒரு கட்டத்தில் மாற்று சிந்தனையாளர்களுக்கு இடையே கூட பிரிவினை ஏற்படுத்தி குளிர்காய கீற்று முயல்கிறதோ என்றுகூட எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. குறிப்பாக ஆதவன் தீட்சண்யா தொடர்பான பிரச்சினையை சொல்லலாம். வேண்டுமென்றே தீட்சண்யாவின் ஆளுமைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கீற்று செயல்படுகிறது என்றே அப்போது எண்ணினேன். அதன் தொடர்ச்சியாக ஆதவன் பங்கேற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மீதான காழ்ப்பும் கூட கீற்றுக்கு ஏற்பட்டிருப்பது இப்போதுதான் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
கடந்த வாரம் எனக்கு தோழர் ஒருவரிடமிருந்து வந்த மின்னஞ்சல் கீழே :
எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை
தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:
இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8
(எழும்பூர் மியூசியம் எதிரில்)
நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி
பங்கேற்பாளர்கள் :
அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின் மலர், நிர்மலா கொற்றவை.
எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.
தொடர்புக்கு :
கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20
பேசி : 94441 20582
----------------------------------------------------------------------------------------------
*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்கான அறிவிப்பினை கீற்றுத்தளமும் இன்று வெளியிட்டிருக்கிறது. எப்படி என்று கீழே பாருங்கள்! சுட்டி : http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5509:2010-04-12-02-50-45&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268 (அனேகமாக இப்பதிவினை கண்டபிறகு கீற்று நிர்வாகம் அந்தப் பக்கத்தை அழித்துவிடலாம். ஆனாலும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டிருக்கிறது)
தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது நேரடித் தாக்குதல், போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வுகளாக கேரளாவில் - பாலியல் உரிமை தொடர்பாக கருத்து தெரிவித்த பால் சக்காரியாவின் மீது சிபிஎம் கட்சியினர் தாக்குதல் நடத்தியதும், லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்ததையும் பார்க்கலாம். கருத்து சுதந்திரம், பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்து மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்
கீற்று செய்திருக்கும் ஆபாசமான / அருவருப்பான வேலையை சிகப்பு எழுத்துகளில் நீங்கள் காணமுடியும். இதுவரை வெகுசன சாதீய ஊடகங்கள் எத்தகையை திருகுவேலையை செய்துவருகிறது என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தோமே அதே வேலையைதான் ‘கீற்று' போன்ற மாற்று ஊடகங்களும் செய்துவருகின்றன என்ற கொடுமையை எங்கே போய் சொல்வது? கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கே இன்னொரு பெரிய கொடுமை தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்ததாம்.
பால் சக்கரியா மீதான மார்க்சிஸ்டுகளின் தாக்குதலை கீற்று கண்டிப்பதாக இருந்தால் அதை வேறு வழியில் கண்டிக்கலாம். கட்டுரை எழுதலாம். சம்பந்தமேயில்லாமல் ஒரு நிகழ்வின் அழைப்பை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது.
மேற்கண்ட நிகழ்வில் மார்க்சிஸ்ட் தோழர்களான ச.தமிழ்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் போன்றவர்கள் கலந்துகொள்ளும் நிலையில் கீற்று செய்திருக்கும் திருட்டுச் செயல் வெட்கக்கேடானது. கட்சிக்கும், அத்தோழர்களுக்கும் இடையேயான உறவை கெடுப்பது. கீற்று மீதான நம்பகத்தன்மையை என்னைப் போன்றோர் முற்றிலுமாக இழந்துவிடக் கூடிய அருவருப்பான செயல் இது. அறத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய செயலும் கூட.