3 மே, 2010

வானில் மர்ம வெளிச்சம்!

நேற்று இரவு பத்து மணிக்கு மேல் சென்னையின் சில பகுதிகளில் (மடிப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி இத்யாதி) வானில் ஒரு வித்தியாசமான வெளிச்சம் தெரிவதாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஃப்ளாஷ் நியூஸ் வெளியாகியது. அவசர அவசரமாக சென்று வானைப் பார்த்தபோது நிலவொளியைத் தவிர வேறு ஒளி எதையும் என்னால் காணமுடியவில்லை.

இப்படி ஒரு ஒளியை தாங்கள் காணவில்லை. எனவே கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்று அறிவியலாளர்கள் கைவிரித்துவிட்டதாகவும் இன்று காலை செய்தித்தாள்களில் காண நேர்ந்தது. சென்ற வாரம் ஸ்டீபன் ஹாக்கிங் வேறு வேற்றுக்கிரக வாசிகள் நிச்சயமாக இருக்கிறார்கள் என்று சொல்லி உலகம் முழுக்க பரபரப்பாகியிருக்கிறது. ஒருவேளை வித்தியாசமான விண்கலம் ஏதாவது கும்மியடித்திருக்கலாமோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

சிறுவயதில் இதுபோல ஏராளமான ஒளிகளை மடிப்பாக்கத்துக்கு தென்மேற்கு திசையில் கண்டு வியந்திருக்கிறேன். அது கொள்ளிவாய்ப் பிசாசின் வேலை என்று அறிவியலாளர் எவரிடமும் உறுதிசெய்யாமல் நானே பல இரவுகள் முடிவு கட்டி அஞ்சி நடுங்கியிருக்கிறேன்.

மேடவாக்கம் பகுதியில் யூகலிப்டஸ் காடொன்று முன்பு இருந்தது. இப்போதும் சின்னாபின்னப்படுத்தப்பட்டு ஓரளவுக்கு காடு என்று சொல்லிக் கொள்ளும் வகையில் (காயிதேமில்லத் காலேஜூக்கு பின்புறம்) இருக்கிறது. அக்காடு பெரும்பாலும் பாலியல் தொடர்பான கசமுசாக்களுக்கு சமூகவிரோதிகளால் பயன்படுத்தப் பட்டதாக சொல்வார்கள். அக்கால இளைஞர்களுக்கு தண்ணியடிக்கவும், காதலர்களுக்கு சுதந்திரமாகப் பேசி பழகவும் வாகாக இருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது குமுதா 'செட்' ஆனால், அங்கேதான் அழைத்துச் செல்வதாக திட்டமிட்டிருந்தேன் என்பது இங்கே தேவையில்லாத இடைச்செருகல்.

அந்த காட்டினையொட்டி சமவெளிப் பகுதி ஒன்றும், கரடுமுரடான குன்று ஒன்றும் இன்றும் உண்டு. அங்கே ராணுவப்பயிற்சி அவ்வப்போது நடக்கும். இரவுகளில் ராணுவ சமிக்ஞைகள் குறித்த பயிற்சி வீரர்களுக்கு வழங்கப்படும்போது, வித்தியாசமான வண்ணங்களில் வானவேடிக்கை நிகழ்த்தப்படும். வண்ண வண்ணப் புகைகள் வானில் வட்டமிடும். இதைத்தான் தூரத்தில் இருந்து பார்த்து கொள்ளிவாய்ப் பிசாசின் சேட்டை என்று நினைத்திருக்கிறேன்.

இப்போது அங்கே ராணுவப்பயிற்சி நடக்கிறதா என்று தெரியவில்லை. கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை பயல்கள் பகலில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பது மட்டும் தெரியும். இதைப்போன்ற ஏதோ பட்டாசுப்புகை நேற்று வானில் வட்டமிட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். அனேகமாக தென்னாப்பிரிக்காவை இந்தியா வென்ற மகிழ்ச்சியில் ஏதோ ஒரு கிரிக்கெட் ரசிகர் விட்ட வான வேடிக்கையாக அந்த 'மர்ம' வெளிச்சம் இருந்திருக்கலாம் என்று யூகிக்கத் தோன்றுகிறது.

‘தி ஹிண்டு'வுக்கு லெட்டர் போடும் மாமா யாரோ ஒருவர், மின்வெட்டால் காற்றுவாங்க மொட்டை மாடிக்குப் போகும்போது இந்த ‘மர்ம' வெளிச்சத்தை கண்டு அஞ்சி, சன் நியூஸுக்கு தகவல் கொடுத்திருக்கலாம். ஆனாலும் மடிப்பாக்கத்துக்கும், மயிலாப்பூருக்கும் அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் இருக்கும் தூரம் இருக்கிறது. இருவேறு பகுதிகளில் ஒரே வெளிச்சம் எப்படி தெரிந்திருக்கும் என்ற கேள்வியை பகுத்தறிவு தட்டி எழுப்புகிறது. அப்படியெனில் இடையில் இருக்கும் வேளச்சேரி, தரமணி, அடையாறு பகுதிகளிலும் இந்த ‘மர்ம' வெளிச்சம் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் லாஜிக்.

சரி, லூசில் விடுங்கள். மர்மமான விஷயங்கள் எப்போதுமே மர்மமாக இருப்பதுதான் மர்மத்துக்கான குறைந்தபட்ச அளவுகோல்.

சுறா!

படத்தில் ஒரு காட்சி...

சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்க, பாம் ஸ்குவாட்டை சேர்ந்த ஒரு காவலர் ஒரு சூட்கேஸை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். சுற்றியிருப்போர் முகத்தில் பரபரப்பும் பதட்டமும்.

சூட்கேஸை திறந்து பார்த்தவர் அதிர்ச்சியோடு முகத்தைப் பிதுக்க,

“பாம் இருக்கா?” ஒரு காவல்துறை அதிகாரி

“பணம் இருக்கா?” அமைச்சர்

“மயிறுதான் சார் இருக்கு!” சூட்கேஸைத் திறந்தவர்.

ஒட்டுமொத்த படமும் சூட்கேஸுக்குள் இருந்த சமாச்சாரம் மாதிரிதான் இருக்கிறது.

பாடல்கள் மட்டும் ஆறுதல். ஓபனிங் பாடலில் விஜய் அணிந்துவந்த ஃப்ளோரசண்ட் ப்ளூ கலர் சட்டை அருமை. சரவணா ஸ்டோர்ஸில் இதே கலர் சட்டை கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்து வாங்க வேண்டும்.

30 ஏப்ரல், 2010

அன்ன கரீனா - அனைவரும் வருக!

ஒரு தொடர் நிகழ்வு தொடர்ச்சியாக சிறப்பாக நடைபெற அதன் அமைப்பாளர்கள் மட்டுமே காரணமாகி விட முடியாது. அந்நிகழ்வு யாருக்காக நிகழ்த்தப்படுகிறதோ அவர்களின் பங்கேற்பும், ஆர்வமும் மட்டுமே வெற்றியை தேடித்தர முடியும். அவ்வகையில் 'உரையாடல்' அமைப்பு, நியூ ஹாரிசன் மீடியா பத்ரியோடு இணைந்து நடத்திவரும் உலகப்பட திரையிடல் வெற்றிகரமாக ஓராண்டை வரும் மாதத்தோடு நிறைவுசெய்வதை பங்கேற்பாளர்களின் வெற்றியாக நாம் கொண்டாடலாம்.

இந்த வெற்றி எப்படி சாத்தியப்பட்டது என்பதை பைத்தியக்காரன் பதிவு போட்டு விளக்கியிருக்கிறார்.

முதல்வருட நிறைவு கொண்டாட்டத்தை முன்வைக்கும் விதமாக உங்கள் சிந்தனைகளை ஒட்டுமொத்தமாக டவுசர் அவிழ்க்கும் (இட் மீன்ஸ் கட்டவிழ்த்தல்) திரைப்படம் ஒன்றினை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் உரையாடல் அமைப்பாளர்கள். லியோ தால்ஸ்தாய் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதிய நாவல் பலமுறை படமாக்கப்பட்டிருக்கிறது. உரையாடல் அமைப்பு திரையிடப்போகும் படமோ அரதப்பழசானது. 1935 கிறிஸ்துமஸுக்கு வெளியானது. நெஞ்சில் மாஞ்சா சோறு இருப்பவர்கள் வரும் ஞாயிறு அன்று திரையிடலுக்கு வரலாம். படம் பார்த்து தாவூ தீருபவர்களுக்கு உரையாடல் அமைப்பு சோடா வாங்கித்தர தயாராக இருக்கிறது.


படத்தின் பெயர்: Anna Karenina (1935)
Director: Clarence Brown
Actors: Greta Garbo (Anna Karenina), Fredric March (Vronsky)
Language: English
பட நேரம் : 95 min
நாள் : மே 2ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : சரியாக மாலை 6 மணி
இடம் : கிழக்கு பதிப்பகம், எல்டாம்ஸ் ரோடு, சென்னை

அனைவரும் வருக...

29 ஏப்ரல், 2010

அஜால் குஜால் டிவி!

ஜோதியில் இப்போதெல்லாம் ‘பிட்டு' படங்கள் போடுவதில்லையே என்று நாம் ஏங்கிக் கொண்டிருக்க, கனடா அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டது. உலகின் முதல் நேக்ட் நியூஸ் (அம்மணக்கட்டை செய்திகள் - செய்திவாசிப்பாளர்கள் 0% உடை அணிந்திருப்பார்கள்) சேனலை உலகத்துக்கு அர்ப்பணித்த நாடு. அடுத்ததாக முழுக்க முழுக்க அஜால்-குஜால் மேட்டருக்காகவே ஒரு டிவி சேனலையும் ரசிகர்களுக்கு தாரைவார்க்கப் போகிறதாம்.

வரும் அக்டோபர் மாதம் முதல் விண்ணிலிருந்து ‘பிட்டு' மண்ணுக்கு ஒளி-ஒலிபரப்பாகும். குஜாலுக்கு மொழி ஒரு தடையில்லை. எனினும் முதற்கட்டமாக கனாடாவில் வாழும் பிரெஞ்சு பேசும் க்யூபிக் மக்களுக்காக பிரெஞ்சு மொழியில் தனது ஒளிபரப்பை துவக்குகிறது வேனஸ்ஸா டிவி. அடுத்த ஆண்டிலிருந்து ஆங்கிலமும். ”பிரெஞ்சோ, ஆங்கிலமோ. குருமா ருசியா இருந்தா சரிதான்” என்று நாக்கை சப்பு கொட்டுகிறார் அந்த ஊரில் வசிக்கும் ஒரு உண்மை பிரெஞ்சுக்காரன்.

ஹை-டெபனிஷனில் வேனஸ்ஸா டிவியின் ஒளிபரப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் பலரும் கண்களை அகல விரித்துக் கொண்டு பெருத்த எதிர்ப்பார்ப்புகளோடு தயாராக இருக்கிறார்கள். நாடகங்கள், ஆவணப் படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களாக நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. செக்ஸ் டிவியில் ரியாலிட்டி ஷோக்கள் என்று கேள்விப்பட்டதிலிருந்து பரபரப்புடன் கூடிய சூடு கோக்குமாக்காக க்யூபிக் வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கிறது.

”இவ்வளவும் ஓசியா?” என்று ஓசியில் ஒட்டடை அடித்துக் கொள்ளும் ஆர்வத்தோடு டொரண்டோவை சேர்ந்த கஞ்சன் ஜங்கா என்பவர் எழுப்பியிருக்கும் கேள்விக்கு, “இல்லை. மாதத்துக்கு பதினைந்து டாலர்” என்று ஆப்பு அடித்திருக்கிறது டிவி நிர்வாகம்.

நாட்டின் முதல் அஜால் குஜால் தொலைக்காட்சிக்கு க்ரீன் சிக்னல் காட்டிவிட்டாலும், வயிற்றில் கொஞ்சம் நெருப்பை கட்டிக்கொண்டே நடப்பவற்றை கவனத்தோடு பார்த்து வருகிறது Canadian Radio-Television and Telecommunications Commission. ”வன்முறையை காமிக்க கூடாது. அப்புறம் செக்ஸை ரீஜண்டா காமிக்கோணும்னு கண்டிஷன் போட்டிருக்கோம்” என்கிறார் அந்நிறுவனத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர். ஆயினும் இவரும் வரப்போகும் டிவி நிகழ்ச்சிகளை காணப்போவதில் பணிதாண்டிய ஆர்வத்தில் இருப்பதை அவரது உற்சாகத் துள்ளலின் மூலமாக அறியமுடிகிறது.

நிகழ்ச்சிகளுக்கான காண்டெண்ட் எங்கிருந்து பெறப்போகிறார்கள் என்பதில்தான் சிக்கல் நீடிக்கிறது. இருபது சதவிகிதம் லோக்கல் ஆட்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தே தீரவேண்டுமாம். மீதியிருக்கும் எண்பது சதவிகிதத்தை கலிஃபோர்னியா அஜால் குஜால் இண்டஸ்ட்ரியான சாண் பெர்ணாண்டோ பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து இறக்குமதி செய்ய நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. அந்த பள்ளத்தாக்குதான் அமெரிக்காவின் பலான பொழுதுபோக்குத் தேவையை ஈடு செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை அமெரிக்க பலான சேனல்களை கேபிள் டிவி மூலமாக பார்த்து ரசித்து வந்த கனடிய ஜொள்ளர்கள் அக்டோபருக்காக வயது வித்தியாசமில்லாமல் தவமிருக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நம்ம ஊருக்கு இதெல்லாம் எந்த காலத்தில் கிடைக்குமோவென்று ஷகிலா, ரேஷ்மா மற்றும் மரியா ரசிகர்மன்ற கண்மணிகள் வாயில் விரலை சப்பிக் கொண்டு ஏங்கிக் கிடக்க வேண்டியதுதான்!

டீச்சரம்மா!

சிறுவயதில் வீட்டில் டீச்சர் விளையாட்டு விளையாடியிருப்பீர்கள். பசங்க எப்பவுமே பசங்கதான். முதலில் பிறந்துவிட்ட காரணத்தால் அக்காக்கள்தான் இந்த விளையாட்டில் எப்பவுமே டீச்சர். பத்து, பண்ணிரெண்டு வயசு அக்காக்கள் கையில் குச்சியோடு பாடம் நடத்த, மருண்ட மான்களை போல முழித்துக் கொண்டிருந்த அனுபவம் அனைவருக்குமே உண்டு.

பீகாரின் உள்ளடங்கிய கிராமமான குசும்பாராவில், ஒரு மாமரத்துக்கு அடியில் இதுபோன்ற காட்சி இப்போது தினமும் நடந்து வருகிறது. நான்கு முதல் பத்து வயதுக்குட்பட்ட ஐம்பது குழந்தைகள் மரத்தடியில் குழுமியிருக்க பண்ணிரெண்டு வயது டீச்சரம்மா பாரதிகுமாரி வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நம் டீச்சர் விளையாட்டுக்கும், பாரதியின் வகுப்புக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு. இவர் நிஜமாகவே வகுப்பெடுக்கிறார். விளையாட்டல்ல. இவரிடம் கல்வி கற்ற குழந்தைகள் இப்போது ஏ, பி, சி எழுதுகிறார்கள். இந்தியில் சரளமாக வாக்கியங்களை எழுதுகிறார்கள். பாரதியின் வகுப்பு மட்டும் இல்லையென்றால், இந்தியாவின் கல்வி அறிவற்றவர்களின் பட்டியலில் இந்த ஐம்பது குழந்தைகளும் எதிர்காலத்தில் இடம்பெறுவார்கள்.

யார் இந்த பாரதி?

பண்ணிரெண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு ரயில்நிலைய வாசலில் அனாதரவாக விடப்பட்டிருந்த ஒரு பெண் குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார் விவசாயக்கூலித் தொழிலாளியான ராம்பதி. இவரது கிராமமான குசும்பரா பீகாரிலிருந்து 87 மைல் தொலைவில் இருக்கிறது. பெரும்பாலான குடும்பங்கள் தலித் குடும்பங்கள்.

மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்கு பெற்ற பகுதி இது. கடந்த நான்கு மாதங்களில் மட்டுமே இங்கே முப்பதுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் இதர அரசு கட்டடங்கள் அரசுக்கும், போராளிகளுக்கும் இடையே நடைபெறும் மோதலில் சிதைக்கப்பட்டிருக்கின்றன என்றால் பாருங்களேன்.

பள்ளிக்கு கட்டிடம் இல்லை. பள்ளியை நடத்த அலுவலர்களுக்கும், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோரும் அச்சப்படும் கலவர சூழல். ராம்பதியின் வளர்ப்பு மகள் பாரதிகுமாரி இப்படியான ஒரு சூழலில்தான் டீச்சர் ஆகிறார்.

பால்ய விவாகம் அங்கே சகஜம். எனவே பெண்கள் படிக்க அனுமதிக்கப்படுவதில்லை. ராம்பதி கொஞ்சம் முற்போக்கு எண்ணம் கொண்டவர். தன்னுடைய மகள் படித்து டீச்சர் வேலைக்கு போகவேண்டும் என்ற ஆவல் கொண்டவர். எனவே மகள் எவ்வளவு படிக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அவ்வளவு படிக்கட்டும் என்று பெருந்தன்மை காட்டுகிறார். பாரதிகுமாரியால் ஊருக்கே கல்வி கிடைக்கிறது என்பதில் அவருக்கு பெருமையும் கூட.

குசும்பாராவில் இருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கும் அகோதிகோலா என்ற ஊர்ப்பள்ளியில் பாரதி படிக்கிறார். பத்து மணியில் இருந்து மூன்று மணி வரை பள்ளி. பள்ளியில் தான் கற்றதை மற்றவருக்கும் சொல்லிக் கொடுப்பதை மனமுவந்து விரும்பியே செய்கிறார். பாரதி என்ற பெயருக்கான குணமே இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.

எதிர்காலத்தில் பாரதிகுமாரி என்னவாக விரும்புகிறார், வேறென்ன? டீச்சர் ஆகத்தான் விரும்புகிறாராம்.

மாவோயிஸ்டுகள் பூமியிலிருந்து ஒரு மாணவியின் குரல் கல்விக்காக ஓங்கி ஒலிப்பது பொருத்தமானதுதான் இல்லையா?