21 மே, 2010

நினைவஞ்சலிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!

உங்கள் நினைவஞ்சலிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்காக வருந்துகிறோம். இப்போதைய சூழலில் எங்கள் வலி, நம்பிக்கை இரண்டுமே உங்கள் இரங்கலை எதிர்த்து நிற்கின்றன. எங்களுக்கு வழங்கப்பட்டதும் மறுக்கப்பட்டதுமான, எங்களுக்கு தேவைப்படுவதும், தேவைப்படாததுமான உஙகளின் இரங்கல் செய்திகளை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில் நடந்தவற்றையோ, நடக்கவிருப்பவற்றையோ அவை எதுவும் செய்யப்போவதில்லை.

எங்களின் இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் விளக்கவல்ல ஆற்றல் இரஙகலுக்குக் கிடையாததால், ‘நினைவஞ்சலி’ என்ற சொல் எங்களுக்கு அதிர்ச்சியை ஊட்டுகிறது.

வெளிச்சத்தில் நாங்கள் எங்கள் இல்லஙக்ளை விட்டு வெளியேறினோம்; இருளில் எங்கள் இல்லங்களிலிருந்து மறைந்து போனோம்; வாழ்க்கைப் பாதை மாறுமென்ற நம்பிக்கையில் எங்கள் குடும்பங்களை விட்டு தூர வெளியேறி ஆயுதங்களை நோக்கி நடந்தோம்; தற்போது பூமியில் நாங்களே கண்டறிய முடியாத இடங்களுக்குள் எங்கள் உடல்கள் நுழைந்ததால் வெடித்துச் சிதறி துகள் துகளாய் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறோம். இங்கே நாங்கள் செத்துக்கொண்டும், உயிரோடும் இருப்பதால் உஙகள் தொண்டைக்குழிக்குள் பேயாக சிக்கிக்கொண்டு வெளிப்படாமலிருக்கும் உஙகள் இரங்கல் வார்த்தைகளுக்குப் பின்னும் நாங்கள் வாழ்வோம்.

விரும்பியும் விரும்பாமலும் அடுத்தவர்களின் போர்களில் நாங்களும் இணைந்தோம்; நாங்கள் செல்ல வேண்டிய பாதை மிக அருகிலிருந்த போதும் அடுத்தவர்களின் பாதையில் முன்னேறி நடந்தோம்; நாங்கள் உதிரிகளாய் இருந்தோம்; முக்கியமானவர்களாய் இருந்தோம்; நாஙகள் நண்பர்களாய் இருந்தோம்; பகைவர்களாய் இருந்தோம்; நாஙகள் பிரச்சினைக்குரியவர்களாய் இருந்தோம்; எண்ணிக்கையிலடஙகாதவர்களாய் இருந்தோம்; இச்சிறிய நாட்டில் நாங்கள் உங்களிடமிருந்து வெகுதொலைவாய் உணர்ந்தோம்; இச்சிறிய உலகில் நாங்கள் உங்களிடமிருந்து வெகுதொலைவாய் உணர்ந்தோம்; உங்கள் மக்கள் நாங்கள்; உங்கள் மக்களல்லாதவரும் நாங்கள்.

நீங்கள் எங்களை நினைவுகூர்வீர்கள் என்று உங்களுக்காக காத்திருக்க முடியாது

நாங்கள் அழிந்தோம்; வாழ்ந்தோம்; அழிவதற்கும் வாழ்வதற்கும் நாங்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள், அழிவதற்கும் வாழ்வதற்கும் அதிகமானோரும் நாங்கள். எங்களில் சிலருக்கு குறைவான பணமும், குறைவான உணவும் இருந்தது; எங்களுக்கு பிள்ளைகள் இருந்தனர்; விரும்பியும் விரும்பாமலும் எங்கள் பிள்ளைகளை இழந்தோம்; எங்கள் கரங்களிலிருந்து அவர்கள் கிழித்து எடுத்துச்செல்லப்பட்டார்கள்; அவர்கள் எங்களோடிருக்க நாங்கள் போராடினோம்; அவர்களைக் காப்பாற்ற எஙகளிடமிருந்து பிரித்து எறிந்தோம்; அவர்களை நோக்கிய துப்பாக்கிக் குண்டுகளை எங்கள் உடலில் தாங்கி அவர்களுக்கு முன்பாக மரித்துப்போக எண்ணி அவர்களை எங்களின் பிடிக்குள் வைத்திருந்தோம்.

எங்களில் சிலர் மரித்தோம்; ஆனால் எங்களில் சிலர் வாழ்ந்தோம்; வாழ்வதற்காக பிள்ளைகளிடம் போரிட்ட நினைவுகளும் எங்களுடன் வாழ்ந்தது. போர் எனப்படும் இந்த ரத்தவெள்ளத்திலிருந்து வெளியேறும் வேகத்தில் எங்கள் செவிகள் நிலத்தில் வீழ்ந்துவிட்டன. எனவே உங்கள் இரங்கலை நாங்கள் செவிமடுக்க முடியாது. எங்கள் இருத்தல் நிமித்தம், எங்கள் விழிகளையும் மூடிக்கொள்ள நேர்ந்ததால் உங்களுக்குள் என்னவிருக்கிறது என்பதயும் காண இயலவில்லை. பசியினாலும் கோபத்தாலும் எங்கள் வாயையும் மூடிக்கொண்டோம். எங்கள் குடும்பஙகளைப்பற்றி, நண்பர்களைப்பற்றி, தோழர்களைப்பற்றி, எங்களை வேட்டையாடிய, எங்களோடு ஓடிவந்த, எஙகளோடு மடிந்த தலைவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரிந்திருந்தது; தெரியாமலுமிருந்தது.

எல்லா திசைகளுக்கும் நாங்கள் முகங்கொடுத்தோம். எங்களில் சிலர் வாழ்ந்தோம். இன்னும் நாங்கள் இருக்கிறோம். உங்கள் நினைவஞ்சலிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு வருந்துகிறோம்.

ஆங்கில மூலம் - வி.வி.கணேசநாதன்

தமிழில் : தோழர் கவின் மலர்

(20-05-2010 அன்று சென்னையில் நடந்த பானுபாரதியின் ‘பிறத்தியாள்' கவிதைத்தொகுப்பு வெளியீட்டில் வாசிக்கப்பட்டது)

கோலிவுட் கோடைமழை!

ஆச்சரியமான விஷயம். கோலிவுட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று ஐந்து படங்கள் வெளியாவதாக சொல்கிறார்கள். இப்போதெல்லாம் தீபாவளிக்கே கூட மூன்று அல்லது நான்கு படங்கள் வருவதே பெரிய விஷயமாகிவிட்டது. 87 தீபாவளி நினைவுக்கு வருகிறது. பத்தொன்பது படங்கள். ம்.. அதெல்லாம் அந்த காலம்!

கடந்த ஒரு மாதமாகவே புதுப்படங்கள் நிறைய வந்தாலும், வசூல் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதே உண்மை. இப்போது ஓடிக்கொண்டிருக்கும் படங்களில் கடந்தவாரம் அதிகபட்ச வசூலை ஈட்டிக் கொண்டிருப்பதே ‘சுறா’ தானென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பர்ஸ்ட் ரன் அடிப்படையில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் படங்கள் மொத்தம் எட்டு. சென்னையிலேயே அவற்றின் தற்போதைய வசூல் நிலவரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

அங்காடித்தெரு - ஏழுவார முடிவில் ஒண்ணேமுக்கால் கோடி. திரையரங்குகளில் நாற்பது சதவிகித இருக்கைகள் கூட நிரம்பாத நிலையில் வேறு வழியின்றி ஓட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா - பதினோரு வார முடிவில் ஐந்தேமுக்கால் கோடி. அனேகமாக இந்த வருடத்தின் முதல் சூப்பர்ஹிட் படம் இதுதான். ஓபனிங்கிலேயே மொத்தமாக அள்ளிவிட்டதால் அரங்குகள் காத்தாடிக் கொண்டிருக்கிறது. நூறாவது நாள் போஸ்டர் ஒட்டும் வரை ஓட்டியாக வேண்டிய கட்டாயத்தில் திரையரங்குகள்.

பையா - ஆறுவார முடிவில் ஐந்து கோடி. விதாவ-வுக்கு இணையான வசூல். இன்று 50வது நாள். ஐ.பி.எல். காய்ச்சலைத் தாண்டி வெற்றி கண்டது இப்படத்தின் சாதனை. இன்னமும் பாதி இருக்கைகள் நிறைவதால் ஓடிக் கொண்டிருக்கிறது.

கோரிப்பாளையம், குருசிஷ்யன் - ஒரு வார முடிவில் கால் கோடி கலெக்‌ஷன். இதற்கு மேல் செல்ஃப் எடுக்க வாய்ப்பில்லை.

குட்டிப்பிசாசு - ஒரு வார இறுதியில் முப்பது லட்சத்தை வசூல் தாண்டியிருக்கிறது. லோபட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இருமொழிப்படமான குட்டிப்பிசாசு இவ்வளவுதான் அதிகபட்சமாக வசூலிக்க முடியும்.

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் - ஒருவார முடிவில் அரைகோடியை வசூல் அனாயசமாக தாண்டியிருக்கிறது. ஆவரேஜ் தானென்றாலும் லாரன்ஸ் ஹீரோவாக நடித்தப் படத்துக்கு இது எதிர்பார்க்க முடியாத வசூல்தான். மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் ஒரு காட்சி, இரண்டு காட்சியாக வெளியிடப்பட்ட இப்படம் இரண்டாவது வாரத்தில் இருந்து காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு ஓட்டப்படுகிறது.

சுறா - இரண்டுவார முடிவில் இரண்டே முக்கால் கோடி. விஜய் மேஜிக். தென்சென்னையில் காத்தாடிக் கொண்டிருக்கும் இப்படம் வடசென்னையின் மகாராணி, ஐட்ரீம்ஸ்களில் வார இறுதியில் ஃபுல் ஆகிறது. இன்னும் கொஞ்சம் முக்கினால் அதிகபட்சமாக ஒன்று அல்லது ஒன்றரை ’சி’ பார்க்கலாம்.

இன்று வெளியாகும் படங்களில் கனகவேல் காக்க, மாஞ்சாவேலு ஆகியவற்றுக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஓபனிங் கிடைக்கக்கூடும். இப்படங்கள் சுமாராக இருந்தாலும் கூட ஹிட் அடிக்கலாம். கொல கொலயா முந்திரிக்கா, மகனே என் மருமகனே படங்களுக்கு எந்த கேரண்டியும் இல்லை. குற்றப்பிரிவு நன்றாக இருக்கும் பட்சத்தில் கருப்புக் குதிரையாக முன்னணிக்கு வரலாம்.

தீபாவளி, பொங்கல் ரிலீஸ் படங்கள் இப்போதெல்லாம் காலைவாரிவிட்டு விட்ட நிலையில் ஓரளவுக்கு வசூலை தந்துகொண்டிருந்த கோடை ரிலீஸும் இவ்வருடம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ‘சிங்கம்’ வரும்வரை எதுவும் பரபரப்பாக நடந்துவிட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

20 மே, 2010

மருத்துவம், மனிதகுலத்துக்கு மகத்துவம்!

பேசல் மிஷன் (Basel Mission) மருத்துவமனை. 1834ல் சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் நகரில் நிறுவப்பட்ட சேவை அமைப்பின் ஒரு கிளை. 1901ஆம் ஆண்டு வாக்கில் வடக்கு கர்நாடகப் பகுதிகளில் மிஷனரி அமைப்புகள் பரவலாகப் பணியாற்றியது. ஏனெனில் அப்போது அப்பகுதி மக்கள் பிளேக், மலேரியா போன்ற தொற்றுநோய்களால் கடுமையான உயிரிழப்பை சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

நிரந்தரமான மருத்துவ உதவி தேவைப்பட்ட அப்பகுதியில், பேட்கேரி என்ற ஊரில் 1902ஆம் ஆண்டு பேசல் மிஷன் அமைப்பினரால் இம்மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஏழை மக்களுக்கு தொடர்ச்சியான மருத்துவச் சேவையை வழங்கி வருகிறது. உள்ளூர் மக்களால் இன்றும் ‘ஜெர்மன் ஆஸ்பத்திரி’ என்றே அழைக்கப்படுகிறது. ஏனெனில் ஒரு காலக்கட்டத்தில் இங்கே பணிபுரிந்த பெரும்பாலான மருத்துவர்கள் ஜெர்மானியர்கள். மருத்துவமனையோடு ஒரு ஆதரவற்றோர் இல்லமும், போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விடுதியும் இயங்குகிறது.

1970 வரை இங்கு பணிபுரிந்த மருத்துவர்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள். மிஷனரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். ஒரு கட்டத்தில் ஐரோப்பாவிலிருந்து வந்துகொண்டிருந்த பொருளாதார உதவிகள் நாளடைவில் நின்றுவிட்டன. மருத்துவமனை தொடர்ச்சியாக இயங்க, சிரமப்பட்டது. 1970களின் இறுதியில் மூடக்கூடிய நிலையும் ஏற்பட்டது.

1980லிருந்து 85 வரை தொடர்ச்சியாக இங்கே பணிபுரிந்த இந்தியப் பெண் மருத்துவர் ஒருவரின் தன்னலமில்லாத உழைப்பால் மீண்டும் புத்துயிர் பெற்றது. இவர் பணிபுரிந்த காலக்கட்டத்தில் நிறைய மருத்துவர்கள் தங்கள் பங்களிப்பை இப்பகுதி மக்களுக்கு தர தாமாகவே முன்வந்தார்கள். முழுநேர மருத்துவர்களாக சிலரும், பகுதிநேர மருத்துவர்களாக பலரும் பணிக்கு வந்தார்கள்.

1980-83 வருடங்களில்தான் டாக்டர் சாலமன் செல்லையா இங்கே மருத்துவ அதிகாரியாக பணியாற்ற ஆரம்பித்தார். பின்னர் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவம் முடித்து 1986ல் மருத்துவ சூபரிண்டெண்ட் ஆக இங்கே மீண்டும் பணிக்கு சேர்ந்தார். சுற்றுப்பகுதிகளில் சுகாதாரக்கேட்டால் பரவும் நோய்கள், போதிய ஊட்டச்சத்து இல்லாமை, பாம்புக்கடி, தற்கொலை என்று கிராமப்புற மக்கள் இன்னமும் இறந்துகொண்டே இருந்தது அவருக்கு தாங்கமுடியாத வேதனையை தந்தது.

டாக்டர் சாலமன் தலைமையில் இளம் மருத்துவப்படை திரண்டது. மருத்துவமனையை தரம் உயர்த்தி மக்களுக்கு மகத்தான சேவையை வழங்கிட உறுதிபூண்டது.

உடனடியாக செய்யவேண்டிய பணிகளை பட்டியல் இட்டார்கள். அவசரச்சிகிச்சைப் பிரிவு அவசியம். எக்ஸ்ரே எடுக்கும் வசதி வேண்டும். நோயாளியின் இரத்தத்தை சுத்திகரிக்கக் கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டும். தங்கி சிகிச்சை பெற நோயாளிகளுக்கு படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும். அறுவைச் சிகிச்சைக்கான கூடம் தேவை. நவீன லேப், மருந்தகம் முக்கியம். நகர்ப்புற மக்களுக்கு என்னென்ன மருத்துவ வசதிகள் கிடைக்கிறதோ, அவை எல்லாவற்றையும் இங்கேயே ஏற்படுத்த வேண்டும்.

பட்டியலிட நன்றாகதானிருக்கிறது. கிராமப்புறத்தில் எல்லா வசதிகளோடும் ஒரு நவீன மருத்துவமனை. ஏற்படுத்த வேண்டுமே? எப்படி?

டாக்டர் சாலமன் கனவு கண்டார். கனவினை நனவாக்க இரவுபகலாக உழைத்தார். முப்பது வருடங்களாக இங்கேயே தங்கியிருக்கிறார். தன்னிடம் வரும் நோயாளிகளிடம் மிகக்குறைந்த கட்டணத்தையே வாங்கினார். சிறுதுளி, பெருவெள்ளம். ஒரு நாளைக்கு குறைந்தது 250 பேர் சிகிச்சைக்காக வர ஆரம்பிக்க, சொல்லிக் கொள்ளும்படி வருமானம் வந்தது. மருத்துவமனை வெளியே எந்த உதவியையும் பெறாமல் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ள ஆரம்பித்தது. நல்ல கனவு தன்னைத்தானே நனவாக்கிக் கொள்ளும்.

இன்று அம்மருத்துவமனையில் எல்லா வசதிகளும் இருக்கிறது. எப்படி இயங்குகிறது?

• சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சைப் பெற ரூ.25/- மட்டுமே கட்டணம். இருபது வருடங்களாக இது மட்டுமே கட்டணம்.

• மருத்துவர்கள் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக உழைக்கிறார்கள். தேவைப்படும் பட்சத்தில் இரவுப்பணியையும் சேர்த்து தொடருகிறார்கள்.

• அவசரச் சிகிச்சைப் பிரிவில் தங்கி சிகிச்சைப் பெற கட்டணம் ஒரு நாளைக்கு ரூ.100/- மட்டுமே பெறப்படுகிறது.

• மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் தங்கள் பணிகளை மட்டுமே பார்க்காமல் மற்றப் பணிகளையும் இழுத்துப் போட்டு செய்கிறார்கள். உதாரணமாக எக்ஸ்ரே எடுப்பவர், அவசரத்துக்கு கவுண்டரில் அமர்ந்து பணம் கூட வசூலிக்கிறார்.

• மருந்தகம் மற்றும் நவீன லேப் ஆகியவற்றின் மூலமாக வரும் வருமானத்தை வைத்து, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் குறைந்தக் கட்டண சிகிச்சை செலவை ஈடு கட்டுகிறார்கள்.

• குறைந்த கட்டணம்தான் நோயாளிகளிடம் பெறப்படுகிறது என்றாலும், மருத்துவமனையில் பணிபுரியும் எல்லோருக்கும் நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது.

நகர்ப்புற மருத்துவக் கூடங்களில் நல்ல வருமானம் வருகிறது. அதனால் நல்ல கட்டமைப்பை ஏற்படுத்த முடிகிறது. நகர்ப்புற மருத்துவமனைகள் நவீன வசதிகளோடு இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. பெசல் மருத்துவமனையைப் போல கிராமப்புறங்களில், குறைந்த கட்டணம் வாங்கி இயங்கும் ஒரு மருத்துவமனை நவீனமாக செயல்படுவதுதான் ஆச்சரியமானதும், பாராட்டத்தக்கதும் ஆகும். கலாமின் பாராட்டுகளைப் பெற டாக்டர் சாலமனும், அவரது குழுவினரும் இதனாலேயே தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.

மருத்துவம் என்பது சேவை. பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல. இதை உணர்ந்ததால் தான் இன்று டாக்டர் சாலமன் குன்றிலிட்ட விளக்காக பிரகாசிக்கிறார். ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் அவரை தினம் தினம் வாழ்த்திக் கொண்டாடுகிறார்கள்.

ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு டாக்டர் சாலமன் இன்று ஒரு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு மருத்துவமனை எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு மாதிரியாக பேசல் மருத்துவமனை தனது சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.

ரமணா.. ரமணா..

இவர் சினிமா ரமணா இல்லை. சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர். இவர் பொறுப்பேற்றபின், மழைக்காலங்களில் இவரது பெயர் வானொலியிலும், தூரதர்ஷனிலும் உச்சரிக்கப்படாத நாளே இல்லை எனலாம். மழையை மழை என்று சொல்லலாம். இனி ரமணா என்றும் சொல்லலாம்.

புயல் வருமா மழை வருமா என்று மிகத்துல்லியமாக கணித்துச் சொல்லக்கூடியவர். இவரது கணிப்பு எல்லாம் சயண்டிஃபிக்காக கரெக்ட்டுதான். ஆனால் இவருக்கும் புயல் மழைத் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் வருணபகவானுக்கும் ஏழாம் பொருத்தம். நம்மவரை ஏமாற்றி டகால்ட்டி காட்டுவதே வருணபகவானின் பொழைப்பாக போகிறது.

ரமணாவை ஏமாற்றுவதற்காகவே வங்கக்கடல் பகுதியில் கடுமையான மேகமூட்டத்தை வருணபகவான் அவ்வப்போது உருவாக்குவதுண்டு. அதைக்கண்டு உற்சாகமடைந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு இடைவிடாத மழை பொழியும் என்று ரமணா டிவியில் சொல்வார். உடனே ரமணாவுக்கு பழிப்பு காட்டும் விதமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு 108 டிகிரி வெய்யில் கொல்லு கொல்லுவென கொல்லும் விதமாக வெதரை வருணபகவான் மாற்றி வைத்து விடுவார். வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் கணிப்பு மாறுவதின் பின்னணி உண்மை இதுதான்.

வருணாவுக்கும், ரமணாவுக்கும் இது காலம் காலமாக நடந்து வரும் மரபுப்போர்.

இரண்டு நாட்களாக 'அழகிய லைலா' வங்கக் கடலோரமாக பிரேக் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்க, நம் ரமணாவை டிவியிலும், ரேடியோவிலும் காணலாம் என்று ஆவலோடு காத்திருந்த அவரது ரசிகர் மன்றத்தினருக்கு கடுமையான ஏமாற்றமும், மன உளைச்சலுமே பரிசாக கிடைத்தது. ரமணாவுக்கு பதிலாக ஒரு குழந்தை மழைச்செய்திகளை வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பாக சொல்லிக் கொண்டிருக்கிறார். குழந்தை என்றால் Child அல்ல. அந்த அதிகாரியின் பெயரே அதுதான்.

கத்தரி வெய்யில் சுட்டெரிக்க வேண்டிய இந்த மே மாதத்தில் அதிசயமாக கோடைமழை, லைலா பிராண்டிங்கில் வந்தது எப்படி என்று நாம் புலனாய்வு செய்து பார்த்ததில் அதிர்ச்சிகரமான பின்னணித் தகவல்கள் நிறைய கிடைத்திருக்கிறது.

மழைக்காலத்தில்தான் வருணா, ரமணாவைக் காய்ச்சிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால் கோடைக்காலத்திலும் தன்னுடைய திருவிளையாடலை காட்ட ஆரம்பித்திருக்கிறார். நல்ல வெயில் காலமாயிற்றே என்று ரமணன் அவர்கள் தன்னுடைய மகள் திருமணத்துக்கு நேற்று தேதி குறித்திருக்கிறார். இது பொறுக்கவில்லை அவரது பரமவைரியான வருணபகவானுக்கு.

விஸ்வாமித்ரனின் தவத்தை மேனகையை வைத்து கலைக்க இந்திரன் முற்பட்ட அதே டெக்னிக்கை வருணபகவான் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார். ரமணா இல்லத் திருமணத்தை சொதப்ப லைலாவை அனுப்பி வைத்திருக்கிறார். ரம்பா வந்தால் கூட அசந்துவிடாத மனஉறுதி கொண்ட நம் ரமணா தன்னுடைய வானிலை நுண்ணறிவை பயன்படுத்தி லைலாவை சென்னைக்கு வரவிடாமல் மசூலிப்பட்டணத்துக்கு துரத்தி அனுப்பி விட்டதாக தெரிகிறது.

லைலா மசூலிப்பட்டணத்துக்கு பயணப்பட்டாலும் தன்னுடைய சைடு எஃபெக்ட்டை நேற்று சென்னையில் காட்ட தவறவில்லை. இருப்பினும் கொட்டும் மழைக்கு இடையே ரமணா அவர்களின் மகள் திருமணம் வெற்றிகரமாக நல்லமுறையில் நடந்திருக்கிறது. வருணபகவானின் சதியும் அதிரடியாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. மாமனாரான வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரி ரமணன் அவர்களுக்கும், புதுமணத் தம்பதிகளுக்கும் நேற்றைய தினம் கொட்டும் மழையில் நனைந்து ஜல்ப்பு பிடித்தோர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகள்!

புலனாய்வு செய்திக்கு உதவி : தட்ஸ்தமிழ்.காம்

19 மே, 2010

மில்லியன் டாலர் வெப்சைட்!


அலெக்ஸ் ட்யூ என்றொரு இருபத்தோரு வயது இளைஞன் இங்கிலாந்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தான். தனது கல்வித்தேவைகளுக்காக கொஞ்சம் பணம் சம்பாதிக்க அவன் விரும்பினான். அவனிடம் ஒரே ஒரு வெப்சைட் மட்டுமே இருந்தது. ஒரு மில்லியன் டாலரை இந்த வெப்சைட்டை வைத்து சம்பாதிக்க முடியுமா? என்று திட்டம் தீட்டினான்.

என்னுடைய வெப்சைட்டில் இருக்கும் ஒவ்வொரு பிக்ஸெலையும் (அளவை குறிக்கும் கணினி தொடர்பான சொல்) விற்கப்போகிறேன். என்னிடம் பத்து லட்சம் பிக்ஸல் இருக்கிறது. ஒவ்வொரு பிக்ஸலும் ஒரு டாலர் என்று அறிவித்தான். குறைந்தபட்சமாக ஒருவர் 10 x 10 பிக்ஸல் அளவே வாங்கமுடியும் என்றும் அறிவித்தான். இந்த 10 x 10 பிக்ஸெல் அளவுக்கு ஒரு நிறுவனம் 100 டாலரை செலுத்தினால் அவனது வெப்சைட்டில் நிறுவனம் தங்கள் விளம்பரத்தை வெளியிட்டுக் கொள்ளலாம். அவ்விளம்பரம் ஐந்து ஆண்டுகளுக்கு வெப்சைட்டில் இடம்பெற்றிருக்கும். அவ்விளம்பரத்தின் மூலமாக நிச்சயமாக விளம்பரம் செய்த நிறுவனத்தின் இணையத்தளத்துக்கு நிறைய பார்வையாளர்கள் வருவார்கள் என்று வாக்குறுதி கொடுத்தான்.

பொதுவாக பார்க்கப் போனால் இப்படி ஒரு திட்டமே பைத்தியக்காரத்தனமான திட்டம் என்று நாம் சொல்லிவிடுவோம். அலெக்ஸின் நண்பர்கள் பலரும் கூட அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் எல்லோரின் எதிர்பார்ப்பும் தவிடுபொடியானது. ஒரு ஆண்டுக்குள்ளாகவே தன் வெப்சைட்டில் (http://www.milliondollarhomepage.com) இருந்த பத்து லட்சம் பிக்ஸல்களையும் அலெக்ஸால் விற்றுவிட முடிந்தது. அலெக்ஸின் தளத்தில் விளம்பரம் செய்தவர்கள் அத்தனை பேருமே ஒட்டுமொத்த குரலில் எங்களுக்கு இது உபயோகமான முதலீடு என்றார்கள்.

அலெக்ஸின் தளத்தில் டி.எஸ். லேபரட்டரீஸ் என்ற நிறுவனம் 800 பிக்ஸல்களை வாங்கியிருந்தது. “அலெக்ஸின் தளத்தில் எங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தியவுடனே எங்களது இணையத்தளத்துக்கு பல லட்சம் பார்வையாளர்கள் வந்தவண்ணம் இருந்தார்கள். எங்கள் நிறுவனத்தின் விற்பனை ஒருவாரத்துக்குள்ளாகவே நாற்பது முதல் ஐம்பது சதவிகிதம் வரை உயர்ந்தது. இன்றளவுக்கும் அதே விற்பனையை நாங்கள் தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் கூட பலபேர் அலெக்ஸின் தளம் மூலமாக எங்கள் இணையத்தளத்துக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள்” என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் கேலோ சொன்னார்.

அவரிடம் விளம்பரம் செய்தவர்கள் மட்டுமல்ல, உலகளவில் இருக்கும் பல மீடியாக்களும் அலெக்ஸின் இந்த புதுமையான முயற்சியை பாராட்டினார்கள். பல விளம்பர ஜாம்பவான்கள் எப்படி இந்த திட்டம் வெற்றியடைந்தது? உட்கார்ந்த இடத்திலிருந்தே பத்து லட்சம் டாலரை அந்த பையன் எப்படி சம்பாதித்தான்? என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரம் குறித்த எந்த பொதுவான நுணுக்கங்களும் தெரியாத அலெக்ஸ் ஜெயித்துக் காட்டியது இன்றைக்கும் கூட புதிராகவே இருக்கிறது.

அலெக்ஸ் செய்ததைப் போலவே, கிட்டத்தட்ட அதே முயற்சி ஒன்று தமிழ் வலைப்பதிவர்களுக்காக பிரத்யேககமாக நடந்து வருகிறது. கலையழகன் என்ற நண்பர் நடத்தும் http://minmini.com/ இணையத்தளம். ஒரு வகையில் இது ஒரு வித்தியாசமான தமிழ் வலைப்பதிவு திரட்டியாகவும் செயல்படும். 1111 பதிவர்களின் பதிவுகளை திரட்டும் முயற்சியில் மின்மினி களமிறங்கி இருப்பதாக தெரிகிறது. முதற்கட்டமாக 50 பிரபல(எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை) பதிவர்களின் பதிவுகள் இப்போதைக்கு அவர்களை கேட்காமலேயே இலவச அடிப்படையில் திரட்டப்படுகிறது. இன்னும் 51 பேர் தங்களுடைய புகைப்படமும் இடம்பெற இலவசமாக விண்ணப்பிக்கலாம் என்று நினைக்கிறேன். பின்னர் பத்துக்கு பத்து என்ற அடிப்படையில் 100 பிக்ஸல் அடங்கிய ஒரு பெட்டிக்கு ஒரு டாலர் என்று வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மின்மினியில் ஏன் இணைய வேண்டும் என்ற கேள்விக்கு என்னிடம் தெளிவான பதில் ஏதுமில்லை. கேபிள் சங்கர் போல குறுகிய காலத்தில் பத்து லட்சம் ஹிட்ஸ்களை விரைவில் பெற விரும்பும் வலைப்பதிவர்களுக்கு இத்தளத்தை பரிந்துரைக்கிறேன். இதனால் வலைப்பதிவர்களுக்கு ஹிட்ஸ் தவிர்த்து வேறு எந்த பெரிய பலனையும் எதிர்ப்பார்த்து விட முடியாது என்று நினைக்கிறேன். வணிக நிறுவனங்கள் ஏதேனும் வலைப்பதிவு நடத்தினால் மின்மினி மூலமாக வணிகத்தை ஓரளவு வளரவைக்கலாம். எனினும் தமிழில் வலைப்பதிவர்களை வைத்து வித்தியாசமான விளையாட்டு ஆட வந்திருக்கும் நண்பர் கலையழகன் அவர்களை பாராட்டுகிறேன்.

மேலதிக தகவல்களைப் பெற http://minminicom.wordpress.com/ என்ற தளத்தை பாவிக்கலாம்.