22 அக்டோபர், 2010

வீம்புக்காரத் தமிழர்!

1980களில் தமிழகம் முழுக்கவே கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. கோடைக்காலத்தில் கிணறுகளில் தண்ணீர் சுரப்பதற்கான சுவடுகளே தெரியாது. அவர் ஒரு கடப்பாரை, ஒரு கூடை, ஒரு கயிறு இதை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு குழி வெட்டத் தொடங்கினார். உண்மையில் தானே ஒரு ஆழமான கிணறு தோண்டி தன் வீட்டுக்குத் தேவையான நீர்த்தேவையை பூர்த்தி செய்வது அவரது திட்டம். விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர், அவரே அவர் வீட்டில் கிணறு தோண்டிக் கொண்டிருக்கிறார் என்று கேட்டால் மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா?

மூன்று அடிக்கு மூன்று அடி குழி ஆரம்பத்தில் ரெடி. கேட்டவர்களிடம் தென்னம்பிள்ளைக்கான குழி என்றார். குழியின் அளவு பெரியதாகி பள்ளமாய் தோன்றியது. இப்போது கேட்டவர்களிடம் கழிப்பறைக்கான குழி என்றார். இன்னும் பள்ளம் பெரியதாகி, ஓரளவுக்கு கிணறு போன்ற தோற்றம் கிடைக்க அவரால் உண்மையை மறைக்க இயலவில்லை. "நானே சொந்தமாய் கிணறு வெட்டுகிறேன்" என்று சொன்னபோது, அக்கம் பக்கம் சிரித்தது. வேலையற்ற வேலை என்று தலையில் அடித்துக் கொண்டது.

அவரோ விடாமல் தோண்டி, தோண்டி ஒருநாள் இலக்கை அடைந்தார். ஊரெல்லாம் வற்றிக் கிடக்க, அவர் தோண்டிய கிணற்றில் மட்டும் நீர் சுரந்துக் கொண்டே இருந்தது. கேலி பேசியவர்கள் குடத்தை எடுத்துக் கொண்டுவந்து நீர் பிடித்துச் சென்றார்கள்.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் இவரை வீம்புக்கார மனுஷன் என்கிறார்கள். வீம்புக்கு வேறு சில பெயர்களும் தமிழில் உண்டு. தன்னம்பிக்கை. விடாமுயற்சி. சுறுசுறுப்பு.

அந்த மனிதர் பொள்ளாச்சி நசன். தமிழ்க்கனல் என்ற பெயரில் இலக்கிய வட்டாரங்களில் பிரபலம். "எந்த வேலையையும் என்னால் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கவே நான் கிணறு தோண்டினேன். அது நிச்சயமாக வெட்டி வீம்பு அல்ல. செய்யும் வேலையை நெஞ்சில் நிறுத்தி, தொடர்ச்சியாக எதைப்பற்றியும் கவலைப்படாமல், சோர்ந்துவிடாது இலக்கை அடையும் வரை இயங்கிக்கொண்டே இருந்தால் வெற்றி என்பதைத் தவிர வேறென்ன கிடைக்கும்?" என்கிறார் நசன். இப்போது 58 வயதாகிறது. 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆசிரியப்பணியை செம்மையாக செய்து, கடந்தாண்டு அந்தப் பணியில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றிருக்கிறார். தமிழார்வலரான இவருடைய தமிழ்ப்பணிகள் தொடர்கிறது.

இவருடைய உண்மையான பெயர் நடேசன். பெயரில் "டே" இருப்பது அவருக்கு மரியாதைக் குறைவாக பட்டதால், அதை நீக்கிவிட்டும் 'வெறும்' நசன் ஆகிவிட்டார். "பின்னே நாமளே நம்மை 'டேய்' போட்டு கூப்பிடறதை அனுமதிக்கமுடியுமா?" என்கிறார் வீம்புடன். மன்னிக்கவும், தன்னம்பிக்கையுடன். நசன் என்ற இந்தப் பெயர் சுயமரியாதை கொண்டது மட்டுமல்ல. தனித்துவமும் பிரபலமும் கூட கொண்டிருக்கிறது. 'நசன், பின்கோடு - 642 006' என்று அஞ்சலட்டையில் முகவரி எழுதி அனுப்பினாலே அவருக்கு சென்று சேர்ந்து விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்?

கிணறு வெட்டுவது, பெயரில் 'டே'யை நீக்கியது என்றில்லாமல், இன்னும் ஏராளமான 'இண்டரெஸ்டிங்' விஷயங்கள் பொள்ளாச்சி நசனிடம் உண்டு.

1985ல் விடுதலைப்பறவை என்ற பெயரில் ஒரு சிறுபத்திரிகையை நடத்தினார். கவிதை, துணுக்கு, குறிப்பு என்று பல்சுவையான விஷயங்களை அவரே எழுதுவார். உருட்டச்சு இயந்திரம் ஒன்றினை (கிட்டத்தட்ட ஜெராக்ஸ் மாதிரி – ஆனால் ஜெராக்ஸ் அல்ல) அவரே உருவாக்கி, அதில் 100 பிரதிகள் அச்சடித்து கிடைத்த முகவரிக்கெல்லாம் தபாலில் அனுப்பி வைப்பார். இதுமாதிரி மொத்தம் 34 இதழ்கள் மாதந்தோறும் உருட்டி, உருட்டி ஊருக்கெல்லாம் அனுப்பி வைத்திருக்கிறார். விடுதலைப் பறவையில் தனக்கு வாசிக்க கிடைத்த சிற்றிதழ்களை எல்லாம் பட்டியலிட்டு அறிமுகப்படுத்துவார்.

இதைக்கண்ட நண்பர்கள் சிலர், அவரவருக்கு தெரிந்த சிற்றிதழ்களை இவருக்கு அறிமுகப்படுத்த, சிற்றிதழ்களை அறிமுகப்படுத்தவென்றே ஒரு பத்திரிகை தொடங்கினாலென்ன என்றொரு 'ஐடியா' இவருக்கு தோன்றியது. ஆரம்பித்து விட்டது அடுத்த திட்டம். இம்முறை உருட்டச்சுப் பத்திரிகையாக இல்லாமல், நேரடியாக அச்சுப் பத்திரிகையாக மலர்ந்தது 'சிற்றிதழ் செய்தி'. முதல் இரண்டு இதழ்கள் அச்சகம் ஒன்றில் அச்சடிக்கப்பட்டது.

மூன்றாவது இதழிலிருந்து இவரே ஒரு அச்சகம் தொடங்கி அச்சிட ஆரம்பித்தார். வழக்கம்போல முதலாளியும் இவரே. தொழிலாளியும் இவரே. அச்சகம் என்றால் பெரிய பிரிண்டிங் பிரஸ் என்று நினைத்து விடாதீர்கள். ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்பது மாதிரி, கையால் சுற்றும் 'டிரெடில்' மிஷின் ஒன்று. 20 கிலோ அலுமினிய அச்சு எழுத்துகள். 5 கிலோ தலைப்பு எழுத்துகள். அச்சுக்கோர்க்க பழகி இவரே ஒவ்வொரு எழுத்தாக எடுத்து கோர்த்து, பிழை திருத்தி, இயந்திரத்தில் ஏற்றி ஃபார்ம் தயாரிப்பார்.

மிஷினை கையால் சுற்றிவிட யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு, தாளை வைத்து அச்சாக்கி எடுப்பார். சிற்றிதழ் செய்தி என்பது சிற்றிதழ்களின் தொடர்புக்காகவும், இணைப்பிற்காகவும் வெளிவந்த இதழ். ஆரம்பத்தில் இருமாத இதழாக வந்தது. பின்னர் இலக்கிய அபிமானிகளிடம் பெரியளவிலான வரவேற்பினைத் இதுபெற்ற போதிலும் நசனால் தொடர்ந்து நடத்த இயலவில்லை. ஏனெனில் ஒவ்வொரு இதழைத் தயாரிக்கவும் அச்சுக்கோர்த்து, பிழைத்திருத்தி, எழுத்துகளைப் பிரித்துப் போட்டு வேலை பார்த்ததால் அவரது கண்பார்வை மங்கத் தொடங்கியது. கண்ணாடி நிரந்தரம் ஆனது.

மொத்தம் 34 இதழ்கள் சிற்றிதழ்ச் செய்தி வந்திருக்கிறது. அவற்றில் கடைசி சில இதழ்கள் கணினியில் அச்சுக்கோர்க்கப்பட்டு, ஆஃப்செட் முறையில் அச்சானவை. அந்த வேலையையும் சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர் வாங்கி நசனே வடிவமைத்துச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைப்பட்ட காலத்தில் நிறைய சிற்றிதழ்கள் இவருடைய சேகரிப்பில் சேர்ந்ததால் அவற்றை தமிழகம் முழுக்க ஆங்காங்கே கண்காட்சிகளாக வைத்து இலக்கிய ஆர்வலர்களை கவர்ந்தார். மொத்தம் 15 இடங்களில் கண்காட்சி நடத்தப்பட்டிருக்கிறது. மதுரைப் பல்கலைக் கழகத்தில் கண்காட்சி வைத்தபோது, சில தமிழ்சார்ந்த அறிவுஜீவிகள் 'விலங்கியல் படித்தவருக்கு தமிழில் என்ன வேலை?' என்று விசனப்பட, நம்மாளுக்கு மீண்டும் 'ரோஷம்' பொத்துக்கொண்டு வந்தது. உடனே தமிழ்முதுகலை படித்து, இரண்டே ஆண்டுகளில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.

1999 வரை சிற்றிதழ்ச் செய்தி இதழ் வெளிவந்தது. இக்காலக் கட்டம் வரை சுமார் 2700 வகையான சிற்றிதழ்கள் நசனின் சேகரிப்புக்கு கிடைத்தது. 1985க்குப் பிறகுவந்த கிட்டத்தட்டஎல்லா தமிழ்ச் சிற்றிதழ்களும் இன்று பொள்ளாச்சி நசனிடம் இருக்கிறது.

தமிழ்த்தேசிய சிந்தனையாளரான தோழர் தியாகு சென்னையில் ஒரு தாய்த்தமிழ்ப் பள்ளி தொடங்கினார். அந்தப் பள்ளியின் ஆசிரியர்களோடு பழகக்கூடிய வாய்ப்பு நசனுக்கு கிடைத்தது. தாய்மொழிக் கல்வியில் அடிப்படைக் கல்வியை கற்பது ஒரு மாணவனின் அறிவுக் கண்ணுக்கு திறவுகோலாக இருக்குமென்று உணர்ந்தார். திருப்பூர், பல்லடம், கோபியென எங்கெல்லாம் தாய்த்தமிழ்ப் பள்ளி இயங்குகிறதோ அங்கெல்லாம் சென்று எப்படி நடத்தப்படுகிறது என்று ஆராய்ந்தார். வழக்கம்போல இவரே ஒரு தாய்த்தமிழ்ப் பள்ளியை சூளேசுவரன் பட்டியில் தொடங்கி இன்றும் நடத்தி வருகிறார். சுமார் 140 குழந்தைகள் படிக்கிறார்கள்.

சோதனைமுறையில் இப்பள்ளியில் புதுமையான கற்பித்தல் முறை ஒன்றினை நடத்தி பெரும் வெற்றியும் கண்டார். வெறும் 32 அட்டைகளில் சில பாடங்களை உருவாக்கினார். இவற்றை மட்டுமே படிக்கும் மாணவர்கள், வெறும் மூன்றே மாதங்களில் தமிழ்ச் செய்தித்தாளை படிக்குமளவுக்கு தமிழில் தேறிவிடுகிறார்கள். இந்த கற்பித்தல் முறை கோவை மாவட்டம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு நல்ல வெற்றியும் கண்டது. தமிழே அறியாத ஒருவரும் மூன்று மாதங்களில் தமிழைப் படிக்கக்கூடிய அளவுக்கு இந்த பாடங்களை எளிமையாக, நுணுக்கமாக அமைத்திருக்கிறார் நசன்.

தன்னுடைய பல்லாண்டுகால சிற்றிதழ் சேகரிப்புகளையும், எளியவழித் தமிழ்க் கற்பித்தலையும் சொந்தமாக தமிழம்.நெட் (thamizham.net) என்ற இணையத் தளத்தை தொடங்கி அதில் மொத்தமாக பதிவேற்றி இருக்கிறார். இந்த இணையத்தளத்தில் ஆங்கிலவழி தமிழ் கற்பித்தலுக்கான இணைப்பு இருக்கிறது. 35 பாடங்களில் தமிழைக் கற்றுக் கொள்ளலாம். இவை தொடக்க நிலைப் பாடங்கள். மேற்கொண்டு தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அதற்கும் சி.டி. வடிவிலான பாடங்கள், படவடிவக் கோப்புகள், அட்டைகள் என்று நிறைய உருவாக்கி வைத்திருக்கிறார். இணையம், சி.டி. போன்றவற்றை அவை தொடர்பான எச்.டி.எம்.எல் போன்ற கணினி தொழில்நுட்பங்களை கற்று, வழக்கம்போல நசனே உருவாக்கியிருக்கிறார் என்பதை நாம் குறிப்பிடாமலேயே நீங்கள் இன்னேரம் யூகித்து விட்டிருப்பீர்கள்.

"என்னுடைய இளமைக்காலம் உணவுக்காக ஏங்கிய காலம். பெருங்காய மூட்டை சுமந்து என்னுடைய அப்பா எங்களை காப்பாற்றினார். 74ல் பட்டம் முடித்த எனக்கு 80ல்தான் வேலை கிடைத்தது. 25 ஆண்டுகள் முழுமையான ஆசிரிய வாழ்வை வாழ்ந்திருக்கிறேன். நல்ல மாணவர்களை கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுக்கும் நிறைவு வேறு எந்தப் பணியிலுமே கிடைக்காது. நம் மாணவர்கள் நம்மை விடவும் சிறப்பாகவும், திறமையாகவும் இயங்குவது கொடுக்கும் நெகிழ்வுத்தன்மை வேறெங்கு கிடைக்கும். பணியிலிருந்து கிடைத்திருப்பது வயதுரீதியிலான ஓய்வு. என்னுடைய தமிழுக்கு ஏது ஓய்வு? அது தொடந்துகொண்டேயிருக்கும்" என்று நெகிழ்ச்சியாக முடிக்கிறார் நசன்.

என்றாவது, எங்காவது வீராப்பான ஒரு தமிழரை நீங்கள் காணக்கூடும். உற்றுப் பாருங்கள். ஒருவேளை அவர் பொள்ளாச்சி நசனாகவும் இருக்கக்கூடும்.

(நன்றி : புதிய தலைமுறை)

20 அக்டோபர், 2010

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!

1996ல் வை.கோபால்சாமியை விளாத்திக்குளம் தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் கே.ரவிசங்கர். எம்.எல்.ஏ., ஆனபோது இவரது வயது 27 மட்டுமே. வைகோவை வென்றதால் திமுகவின் எதிர்கால நம்பிக்கை அரசியல்வாதியாக தென்மாவட்டங்களில் பார்க்கப்பட்டார். இவரைமாதிரி 'சிறுசு'களை களமிறக்கி 'பெருசு'களை வீழ்த்துவது என்பது திமுகவுக்கு புதியதல்ல.

1991ல் தென்சென்னை தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் டாக்டர் ஸ்ரீதரன். இவர் யாரென்று தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல. அதிமுகவினருக்கே அப்போது தெரியாது. 90ஆம் ஆண்டு லாரி விபத்தொன்றில் ஜெயலலிதா படுகாயம் அடைந்தபோது, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் என்று தொகுதி அதிமுக புள்ளிகள் கிசுகிசுத்துக் கொள்வார்கள். எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் பலம் பொருந்திய டி.ஆர்.பாலு. ராஜீவ் படுகொலை அலையால் எதிர்பாராவிதமாக ஸ்ரீதரன் எம்.பி. ஆனார். பாலு, தென்சென்னையில் ஒருமுறை தோற்றவர் என்று சொன்னால் இன்று யாருமே நம்பக்கூட மாட்டார்கள்.

ஓவர்நைட் ஸ்டார்களான இருவரும் பிற்பாடு என்ன ஆனார்கள்?

ரவிசங்கருக்கு 2001ல் மீண்டும் போட்டியிட கழகம் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. அதே தேர்தலில் திமுகவும் ஆட்சியை இழந்தது. 2002ஆம் ஆண்டு ரவிசங்கர் அ.தி.மு.கவில் சேர்ந்தார். ஓரிரு வருடங்கள் கழித்து இலங்கைக்கு போதை மருந்து கடத்தியதாக கூறி காபிபோசா சட்டத்தில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் பல லட்ச ரூபாய் மோசடி வழக்கிலும் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே போலிஸ் காவலில் இருந்து தப்பி, கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். நேற்று ரவிசங்கர் ஒரு கொள்ளைக் குற்றத்துக்காக சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஸ்ரீதரன் எம்.பி.யாக பெரியளவில் சோபிக்கவில்லை. கட்சிக்காரர்களோடும் 'டச்சிங்கில்' இல்லை. இன்றைய பதர்சயீத் மாதிரி அன்றைய ஸ்ரீதரனை சொல்லலாம். பிற்பாடு ஒருநாள் அவர் சிங்கப்பூரிலிருந்து திருட்டுத்தனமாக ஹார்ட் டிஸ்க் கடத்தியதாக சொல்லி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். கொஞ்சநாள் சுப்பிரமணியசாமியோடு சேர்ந்து ஜனதாக் கட்சிக் கூட்டங்களில் தலைகாட்டினார். இன்று எங்கிருக்கிறாரோ தெரியவில்லை.

பதவியிலிருக்கும்போது வாழ்ந்த படோடபமான வாழ்வை பதவியிழந்த பிறகும் தொடர வேண்டியதாகிறது. இருக்கும்போதே இருப்பை பெருக்கிக் கொண்டவர்கள், இல்லாதபோதும் சமாளித்துக் கொள்கிறார்கள். ஏமாளிகளாய் வாழ்ந்தவர்கள், பதவியிறங்கியபிறகு திருடர்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும் மாறித் தொலைக்க வேண்டியிருக்கிறது. அரசியலை ஊழியமாகக் கொண்டவன் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ, வல்லவனாகவோ வாழ்வது சூழலைப் பொறுத்தது.

சினிமா நட்சத்திரங்களின் வாழ்வு மாதிரிதான் அரசியல்வாதிகளின் வாழ்க்கையும். வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

அ முதல் ஃ வரை இலவசமாய் இணையத்தில்..

தமிழ் இலக்கண நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறிநூல்கள், கவிதை-உரைநடை நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் என்று பல்வேறு பிரிவுகளில் சுமார் 400 புத்தகங்களை வாங்கினால் உங்களுக்கு எவ்வளவு செலவு ஆகும்? புத்தக அலமாரி தாங்குமா? சொந்தமாக வாங்க முடியவில்லை என்றாலும் நூலகத்துக்கு சென்று படித்தால், இவ்வளவற்றையும் படிக்க எவ்வளவு காலம் ஆகும்?

கவலையே வேண்டாம். இத்தனையும் உங்களுக்கு இலவசம். உங்கள் புத்தக அலமாரியில் இவற்றுக்கு இடஒதுக்கீடும் வேண்டாம். நூலகத்துக்கு பாதம் தேய நடக்கவும் வேண்டாம். உட்கார்ந்த இடத்திலிருந்தே உங்கள் கணினியில் இணைய இணைப்பை சொடுக்கினால் போதும். அத்தனையும் உங்கள் மவுஸின் கட்டுப்பாட்டில்.

அதிசயமாக இருக்கிறதா? தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலகத்தை இணையத்தில் திறந்தோமானால் இன்னும் நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கிடக்கின்றன. இந்நூலகம் மொத்தம் பல்வேறு செயல்பாடுகளை கொண்டு தனித்துவத்தோடு இயங்கி வருகிறது.

தமிழ் இலக்கண நூல்களில் தொல்காப்பியத்தில் தொடங்கி புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம் என்று அறுவகை இலக்கணம் வரை தமிழின் ஆதார இலக்கணநூல்கள் 20 தொகுக்கப்பட்டிருக்கின்றன. சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. திருக்குறள், நாலடியார் தொடங்கி அத்தனை பதிணென்கீழ்க்கணக்கு நூல்களும் நூலகத்தில் உண்டு.

சிலப்பதிகாரத்தில் தொடங்கி தமிழின் முக்கிய காப்பியங்கள் அனைத்தும் இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. இவை மட்டுமன்றி சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறிநூல்கள், சித்தர்பாடல்கள் என்று திகட்ட திகட்ட தமிழமுதம் வாரி வாரி வழங்கப்படுகிறது.

சங்க இலக்கியங்கள் ரோமன் வரிவடிவத்திலும் தனியாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு அகராதிகள் தளத்தில் உண்டு. தமிழ் கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) பத்து தொகுதிகள் கிடைக்கிறது. பல்வேறு துறைகளிலும் புழக்கத்தில் இருக்கும் புதிய கலைச்சொற்களை தொகுத்து கொடுக்கிறார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் தொகுத்த சுவடிகளை, சுவடிக் காட்சியகமாக கண்முண்ணே விரிகிறது. சுவடிகளை இணையத்தில் விளக்கங்களோடு வாசிக்கலாம்.

இவை மட்டுமல்லாது, பண்பாட்டுக் காட்சியகம் ஒன்றும் சிறப்பாக இங்கே இயங்குகிறது. இதில் திருத்தலங்கள், திருவிழாக்கள், கலைகள், வரலாற்றுச் சின்னங்கள், விளையாட்டுகள் என்று தமிழருக்கான பாரம்பரியப் பெருமைகள் அனைத்துமே ஒலி-ஒளி காட்சிகளாக சேகரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் குறித்தோ அல்லது தமிழர் குறித்தோ மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலகம், போதும் போதுமென்று சொல்லக்கூடிய அளவுக்கு தகவல்களை அள்ளி வழங்குகிறது.

ஒருமுறை இந்நூலகத்துக்குள் நுழைந்துவிட்டால் தமிழ் நம்மை ஈர்த்து இங்கேயே உட்கார வைத்துவிடும். இந்நூலகத்தில் இருக்கும் நூல்களை ஒருங்குறியில் (Unicode) மாற்றிவரும் பணிகள் நடந்துவருவதால், சில நூல்களை வாசிக்க எழுத்துரு தேவைப்படும். எனவே முதன்முதலாக நூலகத்துக்குள் நுழையும்போது, தேவைப்படும் எழுத்துருவை உங்கள் கணினியில் நிறுவிவிடுவது நல்லது.

இதுவரை ஏறக்குறைய இரண்டு லட்சம் வருகைகளை பெற்றுள்ள இந்த நூலகத்துக்கு நீங்களும்தான் போய்ப் பாருங்களேன்.

இணைய முகவரி : http://www.tamilvu.org/library/libindex.htm

(நன்றி : புதிய தலைமுறை)

19 அக்டோபர், 2010

குட்டிக்கதை!

ஜனவரி 30. தீண்டாமை எதிர்ப்பு தினம்.

அந்தக் கல்லூரியில் 'பெல்' அடிக்கப்படுகிறது. அடித்தவுடனேயே மாணவர்கள் அவரவர் வகுப்பறையில் எழுந்து நின்று தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வகுப்பறையே எழுந்து நின்று உரக்க உறுதிமொழி எடுக்க, அந்த மாணவன் மட்டும் நக்கலாக உட்கார்ந்திருக்கிறான். அவனைக் கண்ட பேராசிரியருக்கு கோபம். நேரடியாக மாணவனை முறைத்துக் கொள்ளவும் பயம் அல்லது தயக்கம். ஏனெனில் அம்மாணவன் வேறொரு பேராசிரியரால் அரசியல்மயப் படுத்தப்பட்டு வருபவன். இவருடைய கோபம் முழுக்க இப்போது அந்தப் பேராசிரியரின் மீது திரும்பியது.

நேராகப் பேராசிரியரிடம் சென்றாவர், "சார் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் உங்களாலேதான் கெட்டுப் போறாங்க. பாருங்க அந்தப் பையன் தீண்டாமை எதிர்ப்பு தினமும் அதுமுமா என்ன காரியம் பண்ணி வெச்சிருக்கான்?" பொரிந்துத் தள்ளினார்.

பேராசிரியர் அமைதியோடு, "பையனை கூப்பிட்டு விசாரிக்கிறேன்!" என்று அவரை சமாதானப்படுத்துகிறார்.

மாணவனை அழைத்துக் கேட்டார். "ஏன் அப்படி செஞ்சே?"

"என்னா சார் அநியாயமா இருக்கு? நான் எதுக்கு தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கணும். நான் யார் மேலே தீண்டாமையை கடைப்பிடிச்சேன். ஒரு தலித் என்பதால் என் மேல்தான் மத்தவனுங்க தீண்டாமையை பிரயோகிப்பானுங்க. அப்படியிருக்கையில் உறுதிமொழி எடுக்கச் சொல்லுறது என்னை கிண்டல் பண்ணுற மாதிரி இல்லை இருக்கு?"

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிஜமாகவே நடந்த சம்பவம் இது. மாணவன் : தை.கந்தசாமி. பேராசிரியர் : அ.மார்க்ஸ்

நேற்று 'அ.மார்க்ஸ் - சில மதிப்பீடுகள்' நூல் வெளியீட்டின் போது, அ.மார்க்ஸ் மேடையில் சொன்னது. மிக நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நிறைந்ததாக அம்மேடை இருந்தது.

அ. மார்க்ஸ் கலைஞர் மாதிரி. அவருடைய எதிரிகள் மட்டுமல்ல. நண்பர்களும் அவரோடு பல விஷயங்களில் முரண்படுகிறார்கள். ஆயினும் தமிழ் அறிவுச்சூழலில் கடந்த முப்பதாண்டுகளாக தொடர்ச்சியாக ஓய்வின்றி உழைத்து வரும் ஒரு சிலரில் அவரும் ஒருவர். தை.கந்தசாமி மாதிரி அவரால் அரசியல்மயப்படுத்தப்பட்டு வெளிப்பட்டவர்கள் குறைந்தது ஆயிரம் பேராவது இருப்பார்கள். இஸ்லாமியர் குறித்த இந்தியப் பொதுப்புத்தியில் இருந்து நான் வெளிவர பேராசிரியர் அ.மார்க்ஸின் எழுத்துகளே முக்கியக் காரணம்.

மணிவிழா காணும் பேராசிரியருக்கு வாழ்த்துகள்.

18 அக்டோபர், 2010

இரண்டு கற்பழிப்பு செய்திகள்!

சமீபத்தில் வாசிக்கக் கிடைத்த இரண்டு கற்பழிப்பு செய்திகள் :-


ஒன்று :

ஜிம்பாப்வே நாட்டில் நடந்த சம்பவம் இது. புலவாயோ பஸ் ஸ்டேண்டில் 26 வயதான போலிஸ்காரர் ஒருவர் பஸ்ஸுக்காக நின்றிருந்தார். அப்போது ஒரு கார் அந்த வழியாக வந்தது. காருக்குள் மூன்று பெண்கள் இருந்திருக்கிறார்கள். லிப்ட் தருவதாக சொல்லி போலிஸ்காரரை ஏற்றிச் சென்றிருக்கிறார்கள்.

காருக்குள் போலிஸ்காரர் திடீரென மயக்கமாகியிருக்கிறார். அனேகமாக அப்பெண்கள் மயக்க மருந்து பயன்படுத்தியிருக்க வேண்டும். மயக்கம் தெளியும்போது மூன்று பெண்களும் அவரை பாலியல் வன்புணர்வு செய்வதை அரைமயக்க நிலையில் உணர்ந்திருக்கிறார். 'வேலை' முடிந்தபிறகு அவரை காரை விட்டு தூக்கி எறிந்திருக்கிறார்கள். அவரது மொபைல் போனும், பர்ஸூம் அப்பெண்களால் களவாடப் பட்டிருக்கிறது.

இச்சம்பவத்துக்கு முன்பாகவும் ஹராரே, மாஸ்லிங்கோ ஆகிய இடங்களில் இதைப்போன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாக ஜிம்பாப்வே நாட்டு காவல்துறை அறிவித்திருக்கிறது. கடந்த 11 மாதங்களில் ஜிம்பாப்வேயில் மட்டும் 6 ஆண்கள் இதுபோன்ற சம்பவங்களில் கற்பிழந்ததாக தெரிகிறது. சில இடங்களில் துப்பாக்கி முனையில் வற்புறுத்தி கற்பழிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.


இரண்டு :

நவிமும்பையில் நடந்த சம்பவம் இது. சனிக்கிழமை இரவு ஒரு பள்ளி வளாகத்தில் ஆயுதபூஜை கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது. அப்போது 30 வயதான பெங்காலி பக்தை ஒருவர் உடல்நலம் குன்றி மயக்கமுற்றிருக்கிறார்.

அருகிலிருந்த மருத்துவமனையான லோட்டஸ் ஆஸ்பிட்டலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதிகாலை 2 மணியிலிருந்து 5 மணிக்குள்ளாக அங்கிருந்த ட்யூட்டி டாக்டர் விஷால் (வயது 26) என்பவரால் அரைமயக்க நிலையில் இருந்தபோது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர், கத்தக்கூட திராணியின்றி இருந்த நிலையில் வலுக்கட்டாய உறவுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இத்தனைக்கும் அதே மருத்துவமனையில் அப்பெண்ணின் கணவரும் வேறு அறையில் இருந்திருக்கிறார்.


இந்த இரு சம்பவங்களின் அடிப்படையில், கருத்து கந்தசாமி ஆகி நாம் கருத்து எதையும் சொல்லப்போவதில்லை. இச்செய்திகளை வாசித்தபின்பு நீங்களே தேவையான கருத்துகளை சிந்தித்து விடுவீர்கள். ஆனால் முந்தைய சம்பவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அகலிகை காலத்திலிருந்து நம் பாரதம் கொஞ்சம் கூட முன்னேறவேயில்லை என்ற வேதனையை மட்டும் பகிர்ந்து கொள்கிறோம்.