18 ஏப்ரல், 2011

ஐந்து குட்டிக் கதைகள்!

மொத்தம் ஐந்து குட்டிக் கதைகள். இந்த ஐந்தையும் தனித்தனியாக வாசித்தால் தனித்தனி குட்டிக் கதைகளாகத் தெரியும். அதையே ஒன்றாகப் படித்தால் ஒரே கதையாகவும் விளங்கும்.



மாப்பிள்ளையும், பொண்ணும்!

"பொண்ணு உன் தங்கச்சி மவனுக்குதானே?"

"ம்ம்... சும்மா கொடுத்துடுவேனா? என் அண்ணன் புள்ளைக்கு அவ பொண்ணை தந்தாவணும். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறது தான் எங்க குடும்பத்து வழக்கம்"

“சொந்தத்துலே கொடுத்தா அதுகளுக்கு பொறக்குற புள்ளைகளுக்கு ஊனம் வரும்னு சொல்றாங்களே?

“சொல்றவங்க ஆயிரம் சொல்லட்டும். அதுக்கோசரம் உறவை வுட்டுத் தந்துட முடியுமா?

பிறந்து ஒரு நாள் கூட ஆகாத ‘பொண்ணுதூங்கிக் கொண்டிருந்தாள். அப்பா, அம்மாவோடு ஹாஸ்பிடலுக்கு வந்திருந்த ‘மாப்பிள்ளைகுச்சி மிட்டாய் சப்பிக் கொண்டிருந்தான்.


யாரைடி கட்டிப்பே?

"தோ.. குமாரு வந்துட்டான். இன்னொரு வாட்டி சத்தமா சொல்லு!"

"கொமாருமாமாவைத்தான் பெரியவளானா கல்யாணம் கட்டிப்பேன்!"

கொமாருமாமா வெட்கத்தோடும், வெறுப்போடும் அடிக்கத் துரத்தினான். அத்தைகள் பாதுகாப்பில் ஒளிந்துகொண்டவளை பிடிக்கவியலாத இயலாமையில் அழுதுகொண்டே, "நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்.. அதுமாதிரி பேசவேணாம்ணு சொல்லு!"

அவனது அழுகை சிரிப்பையும், குதூகலத்தையும் சொந்தங்களுக்கு தந்தது. திரும்ப கேட்டார்கள். "ஏய் நீ பெரியவளானா யாரைடி கட்டிப்பே?"

ம்.......இம்முறை அவள் யோசித்துக் கொண்டேயிருக்க...

அரண்டுபோன அவன் மனசுக்குள் கத்தினான். கொமாரு மாமாவைத் தான் கட்டிப்பேன்னு சொல்லுடி சனியனே!


கொருக்கலிக்கா, முந்திரிக்கா!

தென்னை ஓலைகளுக்கு இடையே பார்த்தபோது புத்தம் புதுசாய் தெரிந்தாள். ஓலை பின்னிக் கொண்டிருந்தான் முறைமாமன்.

முதன்முறையாய் அழகாய் தெரிந்தாள். கன்னங்கள் சிகப்பிட்டிருந்தது. போனவாரம் விளையாடும் போதுகூட, கொருக்கலிக்கா முந்திரிக்கா நிறைய நிறைய கொண்டுவா!ராகத்தில், கொமாரு மாமா கொமாரு மாமா என்னை கல்யாணம் கட்டிக்கோ! என்று பாடி, செமஅடி வாங்கினாள். பெண் உடனே பெரியவள் ஆகிவிடுகிறாள். ஆண் அப்படியேதான் இருக்கிறான். இப்போது அவள் கட்டிக்கச் சொல்லி கேட்கமாட்டாளா என்று ஏங்கினான்.

“மாமாமெல்லிசாக கூப்பிட்டாள்.

‘என்ன?

“என்னைக் கட்டிக்கிறியா மாமா?

 "போடி மூக்குச்சளி. உன்னை எவன் கட்டிப்பான்?"


செருப்பால அடிப்பேன்!

"ம்ம்ம்.. எவ்ளோ நேரம் சும்மா இருப்ப? ஏதாவது பேசேன்?"

"
என்ன பேசுறது?" சொல்லியாக வேண்டும் என்று தோன்றினாலும், எப்படி சொல்லுவது என்கிற தயக்கத்தில் இருந்தான்.

"
சும்மா ஏதாவது பேசேன்" அவளே தூண்டினாள்.

"
உங்கிட்டே திடீர்னு 'ஐ லவ் யூ' சொன்னா என்ன பண்ணுவே?" நூல்விட்டான்.

"
செருப்பால அடிப்பேன்" மிரண்டுப்போய் எழுந்து விட்டான்.

"சொன்னது என் அத்தைப்பையனாயிருந்தா செருப்படிக்குப் பதிலா கிஸ் அடிப்பேன்" சத்தமின்றி, முணுமுணுப்பாய் தலைகுனிந்து சொன்னாள்.

அத்தைப்பையனான அவனுக்கு கடற்காற்றின் சத்தத்தில் அவள் சொன்னது கேட்கவேயில்லை.


பஜாரியான தேவதை!

"நீ பார்க்க எப்படி இருப்பே?"

"
ஜோதிகா மாதிரி இருப்பேன்"

"
நானும் சூர்யா மாதிரி இருப்பேன்"

"
அப்படியா? ரொம்ப பொய் பேசுவியா?"

"
ஆமாம். சூர்யா மாதிரி இருப்பேன்னு சொன்னது பொய்"

"
அதானே பார்த்தேன்?"

"
சூர்யாவை விட சூப்பரா இருப்பேன்"

"
அட்றா.... அட்றா.... நேருல பார்க்கலேன்னு சொல்லிட்டு இஷ்டத்துக்கு அள்ளி விடறியா?"

"
நேர்ல வேணா பாப்போமே?"

"
பார்க்கலாம் சார். நேரா உங்க வீட்டுக்கு வாங்க"
“அய்யய்யோ பொண்டாட்டி. நீயாடி? இது என்ன புது நம்பர்?

“என் பிரெண்டோட நம்பர். முதல்லே வீட்டுக்கு வாடா. வெச்சுக்கறேன்

தேவதைகள் வானத்திலிருந்து குதிப்பதில்லை. மாமன்களுக்கு மகள்களாக பிறக்கிறார்கள். என்ன? கல்யாணம் கட்டிக் கொண்டதற்குப் பிறகுதான் பஜாரிகளாக மாறிவிடுகிறார்கள்.

(நன்றி : தினகரன் வசந்தம் 17-4-2011)

14 ஏப்ரல், 2011

சிலுக்கலூர்பேட்டை!


”சிலுக்கலூர்பேட்டை!”

பேரைக் கேட்டதுமே சும்மா கிர்ர்னுன்னு இருக்குல்லே?

முதன்முதலாக இப்பேட்டை குறித்த அறிதலை பகவதி என்ற தோழர் வாயிலாக அறிந்துகொண்டேன். அவர் ஒரு அச்சக முதலாளி. எங்களது டிசைனிங் சென்டருக்கு கஸ்டமராக வருவார். அச்சகத் தொழிலில் நேரம் காலமோ, ஓய்வோ கிடைப்பதரிது. ஆனால் இவரோ எப்போதுமே ப்ரெஷ்ஷாக இருப்பார். அவரது ப்ரெஷ்ஷுக்கான காரணத்தை ஒருமுறை கேட்டபோது அவர் சொன்ன பதில்...

”சிலுக்கலூர்பேட்டை!”

“அது எங்கே இருக்கு? அங்கே என்ன ஸ்பெஷல்?”

”ரோஜா, நக்மா ரேஞ்சு குஜிலிங்க கூட ரொம்ப சீப்பா ஐம்பது, நூறுக்கு கிடைக்கும்”

ஒருமுறை பீர் அடிக்க ஆகும் செலவு தான் அது என்பதால் ஆர்வம் கூடியது. என்னைவிட சேகருக்கும், சுரேஷுக்கும் சிலுக்கலூர்பேட்டை குறித்த செய்திகளை அறிந்துகொள்வதில் அதீத ஆர்வம் இருந்தது.

மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தியதில் சிலுக்கலூர்பேட்டை சூலூர்பேட்டையை விட பலவிஷயங்களில் விஸ்தாரமாணதும், வீரியமிக்கதும் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. இந்த ஊரில் நிறைய அஜால் குஜால் வீடுகள் உண்டாம். ஊருக்கு வரும் விருதினர்களை தலைதீபாவளிக்கு வரும் மாப்பிள்ளை மாதிரி வரவேற்று உபசரித்து, ‘திருப்தி’ படுத்தி அனுப்புவார்களாம். ஆயில் மசாஜ் தான் ஸ்பெஷலிலும் ஸ்பெஷல். மற்ற இடங்கள் மாதிரியின்றி இங்கே கோழிக்கறி அடித்து விருந்தும் உண்டாம். ஒரு ஆளுக்கு ஐநூறு தான் செலவாகும் என்றார்கள். இது வதந்தியா நிஜமா என்பதை உடனே முடிவுசெய்ய முடியவில்லை. சில வருடங்கள் கழித்து வெளிவந்த காட்ஃபாதர் படத்தில் இந்த விஷயத்தை கே.எஸ்.ரவிக்குமார் தொட்டிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது.

இந்த மேட்டர் தெரிந்ததுமே சேகரும், சுரேஷும் ரொம்ப இம்ப்ரஸ் ஆகிவிட்டார்கள். நானும் தான். சிலுக்கலூர்பேட்டை எங்கே இருக்கிறது என்று தென்னிந்திய மேப்பை வைத்து தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. அது விஜயவாடாவுக்கு பக்கத்தில் இருப்பதாக சேகர் விசாரித்து சொன்னார். கிராமமாகவும் இல்லாமல், நகரமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்குமாம். சென்னையிலிருந்து போய்வர இரண்டு, மூன்று நாள் ஆகிவிடும் என்றார்.

சேகருக்கு அஜால் குஜால் மேட்டரில் ஏற்கனவே கொஞ்சம் அனுபவம் இருந்தது. சுரேஷும், நானும் தான் ஞானஸ்தானம் பெறாதவர்கள். எனவே இயல்பாகவே எங்கள் இருவருக்கும் சிலுக்கலூர்பேட்டை மீது பிடிப்பு கொஞ்சம் அதிகமாக இருந்தது. சுரேஷுக்கு என்னைவிட ஆறு வயது அதிகம். சேகர் அவரைவிட இரண்டு வயது பெரியவர். நான் அப்போது தான் டீனேஜின் கடைசி ஏஜில் இருந்தேன்.

சிலுக்கலூர்பேட்டை விஜயத்துக்கு ஒரு பொங்கல் விடுமுறை குறிக்கப்பட்டது. என்ன ஒரு துரதிருஷ்டம் பாருங்கள். சுரேஷும், சேகரும் மட்டுமே போவதாக முடிவெடுக்கப்பட்டு பணிகள் தொடர்ந்தது. மூஞ்சியில்லாத முருகனுக்கு பலமுறை ‘ஞானஸ்தானம்’ நடந்திருந்ததாலும், பணநெருக்கடி காரணமாகவும் அவனால் ஜோதியில் ஐக்கியமாக முடியவில்லை. நொந்துப்போய் “என்னையும் ஆட்டையிலே சேர்த்துக்கங்கப்பா. நானென்ன பாவம் பண்ணேன்?” என்று கேட்டேன்.

“வயசுக்கு வராத பசங்க வர்ற இடமில்லை அது!” சேகர் கொஞ்சம் காட்டமாகவே சொன்னார். எனக்கு மீசை சாஸ்திரத்துக்கு கூட கொஞ்சமும் முளைக்காத அவலமான காலக்கட்டம் அது.

சமீபத்தில் ஜோதி தியேட்டரில் படம் பார்த்ததற்கான அத்தாட்சியாக நுழைவுச்சீட்டினை காண்பித்தேன். நான் வயசுக்கு வந்ததற்கான ஆதாரமாக அதை சேகர் எடுத்துக்கொள்வார் என்றும் நம்பினேன். அதுவுமில்லாமல் பொதுவாக வீக்கெண்டு பீர் பார்ட்டிகளின் ஸ்பான்ஸர் நானாகவும் இருந்ததால் என்னுடைய கோரிக்கையை உடனடியாக சேகராலும், சுரேஷாலும் நிராகரிக்க முடியவில்லை. என்னை அழைத்துக்கொண்டு செல்வதாக இருந்தால் பானு தியேட்டரில் ஒரு ஸ்பெஷல் ஷோ ஸ்பான்சர் செய்வதாகவும் வாக்குறுதி தந்தேன்.

இருவரும் கொஞ்சம் குழம்பிப் போனார்கள். என்னை அழைத்துக் கொண்டு செல்லும் முடிவு குறித்து ஆலோசனை செய்து இருநாட்களில் நல்ல செய்தி சொல்வதாக வாக்களித்தார்கள். அன்று மாலை அவர்களை பானு தியேட்டருக்கு அழைத்துச் சென்றேன். படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக போரூர் முருகன் ஒயின்ஸில் ஜலக்கிரீடையும் என் செலவிலேயே நடந்தது. ’பொங்கல் டைமில் அனேகமாக திருப்பதிக்கு போகவேண்டியிருக்கும், வெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டியிருக்கும், ரெண்டு மூணு நாள் வீட்டுக்கு வரமாட்டேன்’ என்று வீட்டில் முன்னெச்சரிக்கையாக நோட்டிஸும் கொடுத்து வைத்திருந்தேன்.

ரெண்டு நாள் கழித்து இப்போதைக்கு திட்டத்தை ஒத்திவைத்திருப்பதாக சேகர் சொன்னார். ஊரில் ஆயா சீரியஸ் என்பதால் எப்போது வேண்டுமானாலும் புட்டுக்கலாம் என்று அதற்கு பொருத்தமான ஒரு காரணத்தையும் அவர் சொன்னதால் அப்போதைக்கு எனது தீவிரம் சற்று தணிந்தது. ’ஆயாவுக்கு சீரியஸுன்னா என்ன பண்ணமுடியும்?’ என்று சுரேஷும் ஒதுங்கிவிட்டார்.

பொங்கல் இனிதே முடிந்தது. அலுவலகத்துக்கு வந்தபோது எனக்கு பெருத்த அதிர்ச்சி. சுரேஷும், சேகரும் ஏதோ ஒரு ஞானம் பெற்றிருப்பது போன்ற மலர்ச்சியோடு தெரிந்தார்கள். அவர்களது தலைக்குப் பின்னே தலா ஒரு ஒளிவட்டம் இருந்ததுபோல எனக்கு பிரமை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து வெட்கத்தோடு நமட்டுச் சிரிப்பும் சிரித்துக் கொண்டார்கள். எனக்கு வானமே தலைமீது இடிந்து விழுந்தது போல பெருத்த மனக்குழப்பம்.

உருட்டி, மிரட்டி, அழுது, புரண்டு, ஆர்ப்பாட்டம் செய்து கேட்டபோது உண்மையை ஒத்துக்கொண்டார்கள். தான் கன்னித்தன்மையை இழந்துவிட்டது குறித்து மகிழ்ச்சியோடு தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் சுரேஷ். ‘எவ்வளவோ பார்த்திருக்கேன். இதுமாதிரி எங்கேயும் பார்த்ததில்லை’ என்று சாவகாசமாக ஆனால் விரிவாக பேசினார் சேகர். விருந்து, மருதம் படிப்பது மாதிரியே இருந்தது. என்னை தந்திரமாக தள்ளிவிட்டு இருவரும் சென்று வந்தது குறித்து நினைத்தபோது கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது.

“நீங்க போய்ட்டு வந்ததுக்கு என்ன ஆதாரம்?” வக்கீல் மாதிரி கேட்டேன்.

சடக்கென்று பஸ் டிக்கெட், ரயில் டிக்கெட் என்று நிறைய ஆதாரங்களை சேகர் காட்டியதுமே ரொம்பவும் நொந்துவிட்டேன். எனக்கு மீசை நல்லா கத்தையா முளைச்சதுக்கப்புறம், பெரியவன் ஆனதுக்கு அப்புறமா தனியாவே சிலுக்கலூர்பேட்டை போயிட்டு வருவேன் என்று மனதுக்குள் வீரசபதம் செய்தேன். “நான் தரிசிக்க வேண்டிய தலம் என் தம்பி கருணாநிதி குடியிருக்கும் பாளையங்கோட்டை சிறைச்சாலை” என்று அண்ணா சொன்ன அதே தீவிரம் என்னுடைய சிலுக்கலூர்பேட்டை சபதத்தில் நிறைந்திருந்தது.

அன்று மட்டுமல்ல. அதையடுத்து சில மாதங்களுக்கு அவர்கள் இருவரும் சிலுக்கலூர்பேட்டை புராணமே பாடிக்கொண்டிருந்தார்கள். எனவே அவர்களுக்கு வீக்கெண்டு பார்ட்டி ஸ்பான்ஸர் தருவதை நிறுத்தினேன். பதிலுக்கு அவர்கள் எனக்கு பார்ட்டி தந்து, பார்ட்டியில் சிலுக்கலூர் அனுபவங்களை புட்டு புட்டு வைக்க பல இரவுகள் தூக்கமில்லாமல் எனக்கு கழிந்தது.

ப்போது கத்தையாக இல்லாவிட்டாலும் கண்ணுக்கு தெரிவது போல மீசையென்று சொல்லிக்கொள்ளும் அளவில் ஏதோ முளைத்துவிட்டது. பணம் ஒரு பிரச்சினையில்லை. பெரியவனாகவும் ஆகிவிட்டேன். ஆனால் இடையில் சந்திரபாபு நாயுடு அதிரடிவேட்டை ஆடி சிலுக்கலூர்பேட்டையை அயோத்தி ரேஞ்சுக்கு புனிதநகரம் ஆக்கிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அது அது அந்தந்த காலத்தில் நடந்து தொலைத்திருக்க வேண்டும். இப்போது அவலை நினைச்சு உரலை இடிச்ச கதை தான். வேறு என்னத்தைச் சொல்வது? :-(

இந்த இடைப்பட்ட வருடங்களில் சுரேஷும், சேகரும் என்ன ஆனார்கள் என்று விசாரித்துப் பார்த்ததில் தகவல்கள் மெச்சிக்கொள்ளத்தக்க வகையில் இல்லை. சுரேஷுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை. லே-அவுட் ஆர்ட்டிஸ்டாக இருந்த அவர் இப்போது தி.நகரில் ஒரு ஜவுளிக்கடையில் சேல்ஸ் சூபர்வைசராக வேலை பார்க்கிறாராம். சேகருக்கு காதல் திருமணம் முடிந்து விவாகரத்தும் ஆகிவிட்டதாம். எந்த வேலையிலும் நிலையாக நீடித்திருக்க முடியாமல் பலமுறை தற்கொலைக்கும் முயன்றாராம். அனேகமாக அவர் ஜிகாலோவாக கூட ஆகியிருக்கலாம்.

12 ஏப்ரல், 2011

பொன்னர் சங்கர்


கடைசியாக கலைஞருடைய ரசிகர்களின் இருபதாண்டுகால சோகம் நிறைவு பெறுகிறது. கடந்த இரு தசாப்தங்களாக கலைஞர் மொக்கையாக மட்டுமே வசனம் எழுதுவார் என்கிற தமிழ் சினிமா செண்டிமெண்டை தூள் தூளாக்கியிருக்கும் திரைப்படம் பொன்னர் சங்கர்.

ஆனாலும் கலைஞரின் அசலான நாவலும், பாத்திரங்களும் பாஸ்பரஸ் குண்டு போட்டு இயக்குனரால் சூறையாடப்பட்டிருக்கிறது என்பது சற்றே கவலையான விஷயம். குறிப்பாக ‘அருக்காணி’ பாத்திரம். படத்தில் ஏதோ ஒப்புக்குச் சப்பாணியாக வந்துபோகிறது. நாவலை வாசித்தவர்கள், படத்தைப் பார்த்தால் நிச்சயம் நொந்துவிடுவார்கள். அவ்வளவு அபாரமான கதைக்கு, எவ்வளவு மொன்னையான திரைக்கதை.

மகன் ஹீரோ என்பதால், அப்பாவான இயக்குனர் நிறைய ஹீரோயிஸ காட்சிகளை ஹாலிவுட்டிலிருந்து சுட்டு ‘பில்டப்’ கொடுப்பதற்கே முழு உழைப்பையும் செலவழித்திருக்கிறார். ஹீரோவுக்கு நடிக்க ஓரிரு காட்சிகளையாவது கொஞ்சம் வலிவாக, சிரத்தையெடுத்து அமைத்திருக்கலாம்.

ஆனாலும் எல்லா மைனஸ் பாயிண்டுகளையும் சுனாமியாக சுருட்டித் தள்ளுகிறது தயாரிப்புத் தரம். இவ்வளவு கலர்ஃபுல்லான படத்தை சமீபவருடங்களில் கண்டதாக நினைவேயில்லை. எல்லா காட்சியிலுமே குறைந்தது இருபது பேர் நிரம்பியிருக்கும் பிரம்மாண்டம். அட்டகாசமான ஆர்ட் டைரக்‌ஷன். தைரியமாக தமிழில் சரித்திரக் கதைகளை சிந்திக்கலாம் என்கிற நம்பிக்கையை இளம் இயக்குனர்களுக்கு விதைத்திருக்கிறார் தியாகராஜன்.

செக்கச் செவேலேன ஹாலிவுட் நடிகைகளைப் போல இரட்டை ஹீரோயின்கள் எப்போதும் பாக்கெட் மற்றும் பெல்ட் போர்ஷனை தாராளமாக காட்டியவாறே அலைகிறார்கள். தப்பித்தவறி டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் நுழைந்துவிட்ட இளசுகளுக்கு பெரும் ஆறுதலான சமாச்சாரம் இதுதான்.

சரித்திரப் படத்துக்கு இளையராஜா இசை. வூடு கட்டி அடித்திருக்க வேண்டாமா? பாடல்கள் பரவாயில்லை. ஒரு டூயட் மட்டும் காதில் தேனாய் பாய்ந்தது. பின்னணி ஓவர் இரைச்சல்.

சமகால சமூகப்படம் இல்லை என்பதாலேயோ என்னமோ, கலைஞர் ரெக்கை கட்டி பறந்திருக்கிறார்.

வெண்தாடிக் கிழவர் ஒருவர் பேசும் வசனம், “என்னை அடையாளம் தெரியலையா? ஈரோட்டுக்குப் பக்கத்துலே இருக்குறதாலே ‘அவர்’னு நெனைச்சுக்கிட்டியா?”

“வளைபூட்டிய கரங்களால் வாளேந்தவும் முடியும்”

“ஆண்டவனுக்கு படைக்க வேண்டிய அமுதத்தை அர்ச்சகர் சுவைக்கலாமா?”

இப்படியாக நிறைய இடங்களில், பழைய கலைஞர் மீள்வருகை செய்திருப்பது தமிழ் சினிமாவுக்கு மகிழ்ச்சியான செய்தி.

கொங்கு மண்டலத்தையும், கொ.மு.க.வையும் ‘குஜால்’ செய்யும் விதமாக, தேர்தலுக்கு முன்பே படத்தை வெளியிட்டிருக்கிறார் கலைஞர். நிச்சயமாக பாதகமாக அமைந்துவிடாது என்பதே உடன்பிறப்புகளுக்கு மிகப்பெரிய ஆறுதல்.

இறுதிக் காட்சியில் உறையூர் சோழ அரசுக்கு, பொன்னிவள நாடு பணிந்துவிடாது என்று அமைக்கப்பட்ட காட்சியில், சோனியா காந்திக்கு மறைமுக செய்தியையும் தலைவர் சொல்லியிருக்கிறார். ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ எனும் திமுக கொள்கையை வாழைப்பழத்தில் ஊசியாக ஏற்றியிருக்கிறார். விடுங்க தலைவரே. அதுதான் அறுவத்தி மூணை அள்ளிக் கொடுத்திட்டீங்களே, அப்புறமென்ன பேச்சு?

பொன்னர் சங்கர் – கொள்கை முழக்கம்!

11 ஏப்ரல், 2011

திமுக வெற்றி உறுதி!

ஒரு வழியாக திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. அதிமுக மெஜாரிட்டி பிடிக்கும். ஸ்வீப் அடிக்கும் என்று மிரட்டிக் கொண்டிருந்த ஊடகங்கள் ஒருவழியாக தரையில் கால் பதித்திருக்கின்றன. ‘அதிமுக வரும், ஆனா வராது’ என்று சொல்லத் தொடங்கியிருக்கின்றன. போஸ்ட் போல் சர்வேயில் தங்களது தவறுகளை திருத்திக் கொண்டு திமுக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கிறது என புதுக்கணிப்பு சொல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் கணிப்புக்கு மிகக்கடுமையாக உழைத்தாக வேண்டும். கிட்டத்தட்ட மூன்றரைக் கோடி வாக்காளர்களின் மனநிலையை 5000 பேரின் கருத்துகளை வைத்து பொதுமைப்படுத்திவிட முடியாது. சாம்ப்ளிங் அளவு குறைந்தபட்சம் மூன்றரை லட்சமாகவாவது இருந்தால்தான் ஓரளவுக்காவது உண்மைநிலையை நெருங்க முடியும். ஆயினும் இந்த எண்ணிக்கையே கூட துல்லியமான முடிவுகளை தரப் போதுமானதல்ல. லென்ஸ் ஆன் நியூஸ் எனும் இணையத்தளம் 12 தொகுதிகளில் ‘சர்வே’ செய்து, அதிமுக தனித்தே 144 இடங்களை கைப்பற்றும் என்று கணித்த காமெடியை எல்லாம் லீசில் விட்டுவிடலாம்.

நக்கீரன் இதழின் கருத்துக் கணிப்புகள் ஓரளவுக்கு துல்லியமாகவே இருக்கிறது. 98ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திமுக-தமாகா கூட்டணி தோல்வியடையும் என்று நக்கீரன் சொன்னபோது யாரும் நம்பவேயில்லை. அதுபோலவே கடந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் திமுக-காங் கூட்டணி 28 இடங்களை பிடிக்கும் என்றபோதும் யாரும் நம்பவில்லை. இம்முறை நக்கீரனின் கணிப்பே கூட மகிழ்ச்சிகரமாக பொய்த்துப்போக வாய்ப்பிருக்கிறது. 140 தொகுதிகள் வரை திமுக கூட்டணி பெறும் என்று நக்கீரன் கணிப்பதாக தெரிகிறது.

தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் இன்றைய நிலையில் திமுக கூட்டணி 150 முதல் 160 இடங்கள் வரை வெற்றியடையும் என்பதாகவே நமக்கு தோன்றுகிறது.

ஜூனியர் விகடனின் நேற்றைய கணிப்பு திமுக கூட்டணிக்கு பெரிய மனதோடு, தாராளமாக 92 இடங்களை அளித்திருக்கிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜூ.வி. திமுக கூட்டணிக்கு 7 இடங்களை தந்திருந்தது. ஆனால் தேர்தல் முடிவில் திமுக கூட்டணி 28 இடங்களை கைப்பற்ற முடிந்தது. எனவே ஜூ.வி.யின் இப்போதைய கணிப்பை வைத்து கணக்கிட்டுப் பார்த்தால் திமுக கூட்டணி ஸ்வீப் அடித்தாலும் (180க்கும் மேல்) ஆச்சரியப்பட ஏதுமில்லை.

எனவே ‘மாற்றம், மாற்றம்’ என்று முழங்கிக் கொண்டிருப்பவர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது 2014 வரைக்குமாவது கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். வேண்டுமானால் உங்களுக்காக ‘பாண்டிச்சேரி’ தற்காலிக நிவாரணத்தை அளிக்கலாம்.
தேர்தல் கணிப்புகளை வெளியிட்ட சில ஊடகங்களில், விட்டுப்போன அல்லது வேண்டுமென்றே விட்டுவிட்ட, முக்கியமான சில விஷயங்கள் உண்டு.

ஒன்று. அரசு ஊழியர்களுக்கு அதிமுக மீது இருக்கும் அச்சம். தமிழகத்தில் சுமார் எட்டு லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்து, இவர்களது கட்டுப்பாட்டில் (அதாவது குடும்பம், நட்பு, சுற்றம்) தோராயமாக முப்பது லட்சம் வாக்குகள் இருக்கிறது.

இரண்டு. 21 லட்சம் குடும்பங்களுக்கு கான்க்ரீட் வீடு கட்டித்தரும் திட்டம். இத்திட்டத்தில் நடப்பாண்டில் மூன்று லட்சம் குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன. மீதி 18 லட்சம் குடும்பங்களுக்கு படிப்படியாக அடுத்த ஐந்தாண்டுகள் என்று திமுக அரசால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, டோக்கனும் வழங்கப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்தால் நிச்சயம் இத்திட்டம் அரோகராதான் என்று டோக்கன் வாங்கியவர்களுக்கு தெரியும். கிட்டத்தட்ட 60 லட்சம் வாக்குகள் இத்திட்டத்தில் சம்பந்தப்பட்டிருப்பதை எந்த ஊடகமும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

ஒரு ரூபாய் அரிசியில் தொடங்கி 108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிருக்கு திருமண உதவித்திட்டம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, கைம்பெண்கள் மற்றும் வயதானோர் உதவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பொருளாதார ரீதியில் கைகொடுத்தது, விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் என்று ஏராளமான நலத்திட்டங்களால் வாக்களிக்கவிருக்கும் ஒவ்வொரு வாக்காளரும் ஏதோ ஒருவகையில் நேரடியாகவே திமுக அரசால் இந்த ஆட்சிக் காலத்தில் பயன் பெற்றிருக்கிறார்கள். எனவே அதிமுக, தேமுதிக கட்சியினரைச் சேர்ந்தவர்கள் கூட திமுக கூட்டணிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாக யூகிக்கிறேன்.

நலத்திட்டங்கள் மட்டுமின்றி வளர்ச்சிப் பணிகளிலும் திமுக அரசு குறை வைக்கவில்லை. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மதுரை மற்றும் 3 நகரங்களில் கைத்தறி பூங்காக்கள், உலகத் தரம் வாய்ந்த நூலகம் சென்னையில், தலைமைச் செயலகம், சென்னைக்கு மெட்ரோ ரயில், தமிழகமெங்கும் பாலங்கங்கள், கான்க்ரீட் சாலைகள், புதிய அரசுக் கட்டிடங்கள், நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் என்று 95 சதவிகித தாலுகாக்கள் மற்றும் யூனியன்களில் ஏதேனும் ஒரு பெரிய கட்டமைப்பினை உருவாக்கியிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம், குடும்ப ஆதிக்கம், லொட்டு, லொசுக்குவெல்லாம் ஆட்சிக்கு எதிரான அலையை கிளப்ப போதுமானதல்ல. திமுகவுக்கு எதிரான விஷயங்கள் என்றால் மின்வெட்டு மற்றும் விலைவாசியாக மட்டுமே இருக்கக்கூடும். விஜய்-அஜித் ரசிகர்களின் எதிர்ப்பு திமுகவுக்கு அச்சுறுத்தல் என்றொரு மகா த்ராபையான காரணத்தை கூட ஒரு பத்திரிகை கண்டுபிடித்திருந்ததை வாசித்தேன். என்னத்தைச் சொல்ல?

திமுக இம்முறை வெல்லப்போவது அதிமுக கூட்டணியை மட்டுமல்ல. திமுகவுக்கு எதிராக அதிமுகவோடு கூட்டணி அமைத்திருக்கும் ஊடகங்கள் மற்றும் தேர்தல் கமிஷனையும் சேர்த்துதான்.

படித்தவர்கள் இம்முறை திமுகவை ஆதரிக்க மாட்டார்கள் என்றொரு கருத்தாக்கம் இருக்கிறது. நகர்ப்புறங்களில் திமுக வாஷ்-அவுட் என்றும் சொல்லி வருகிறார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சென்னையில் இருக்கும் 16 தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லப் போகிறது.

பூனை மட்டுமல்ல, யானை கண்ணை மூடிக்கொண்டாலும் கூட பூலோகம் இருண்டுவிடாது.

7 ஏப்ரல், 2011

லேடீஸ் ஸ்பெஷல் மார்னிங் சர்வீஸ்!

பொதுவாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்னவெல்லாம் செய்வார்கள்? வடை, முறுக்கு சுட்டு விற்பார்கள். பூச்சரம் தொடுத்து வியாபாரம் செய்வார்கள். மெஷின் வாங்கி அக்கம் பக்கத்து வீடுகளுக்கு துணி தைத்துக் கொடுப்பார்கள். இத்யாதி.. இத்யாதி.. இம்மாதிரி வங்கியில் கடன் பெற்று ஏராளமான சுயதொழில் செய்பவர்கள். யார் கையையும் எதிர்பாராமல், தங்கள் சொந்தக் காலில் நிற்க முயற்சிப்பவர்கள். அடுத்து?

முடிச்சூர் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பினர் மக்கள் பணியில் நேரடியாக இறங்கியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரில் தொடங்கி, போக்குவரத்து ஆணையர் வரை இவர்களை நோக்கி புகழ்மாலைகளை சூட்ட வைத்திருக்கிறார்கள்.

படப்பையில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் முடிச்சூர் பிரதான சாலை போக்குவரத்து நெரிசல் மிக்கது. குறிப்பாக லஷ்மி நகர் பேருந்து நிறுத்தம். ‘பீக் அவர்ஸ்’ என்று வழங்கப்படும் அலுவலகம் கிளம்பும் நேரத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் இங்கிருக்கும் பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்துகிறார்கள். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், கூலித்தொழிலாளிகள், பள்ளி மாணவ மாணவிகள், சிறு வியாபாரிகள் என்று பல வகையினரும் இவர்களில் அடங்குவார்கள்.

கூட்டம் குவியும் இடத்தில் நெரிசல் ஏற்படுவது சகஜம்தான். நெரிசலின் விளைவு விபத்து. சாலையை பள்ளிச் செல்லும் குழந்தைகள் அவசரமாக கடக்க நேரிட, வேகமாக வரும் இருசக்கர, நாற்சக்கர வாகனங்களில் மோதி இரத்தக் காயம். ஒரு சில உயிரிழப்பும் ஏற்பட்டதுண்டு.

அருகில் ஒரு சிறிய காவல் உதவி மையம் உண்டு. போக்குவரத்தினை கட்டுப்படுத்த இரண்டு போலிஸார் உண்டு. எனினும் கூட கூட்டமாக வரும் பேருந்துகளில் மொத்தமாக போய் ஏறும் மக்களை கட்டுப்படுத்த அவர்கள் போதாது. பேருந்து வர நேரம் ஆக, ஆக முந்திச் செல்லும் ஆவலில் கூட்டம் நடுச்சாலைக்கு வந்துவிடுவதும் உண்டு.

முடிச்சூர் பஞ்சாயத்தின் கிராமச்சபை கூட்டங்களில் இந்தப் பிரச்சினை அப்பகுதி மக்களால் எழுப்பப்பட்டது. இவ்வாறான பிரச்சினை நகர்ப்புறங்களில் ஏற்படும்போது அங்கே கூடுதல் காவலர்களை காவல்துறை நியமிக்கும். புறநகர் விளிம்பில் இருக்கும் லஷ்மி நகருக்கு கூடுதல் காவலர்களை நியமிக்குமளவுக்கு காவல்துறைக்கு வசதியில்லை.

அங்கிருக்கும் மகளிர் கூட்டமைப்புத் தலைவி நிர்மலா பாஸ்கரன் காவல்துறையோடு கைகோர்க்க முன்வந்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த மகளிர், காலை வேளைகளில் போக்குவரத்தினை ஒழுங்குப் படுத்திட தயார் என்று அறிவித்தார்.

குங்குமம், தீபம், வசந்தம், அதிர்ஷ்டம், ரோஜா, விடியல் ஆகிய சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிர் ஒன்றுசேர்ந்து ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு பேர் சீருடையில் வந்து பணியாற்றுவது என்று முடிவெடுத்தார்கள். தங்களுக்குள் பேசி ‘ஷிப்ட்’ முறையில் வந்து ஒழுங்கு செய்கிறார்கள்.

கடந்த ஆறு மாதங்களாக, ஒரு நாள் கூட இடைவிடாது பணியாற்றி வருகிறார்கள். விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் வரமாட்டார்கள் என்பதால், அந்த நாட்களில் மட்டும் இவர்களும் விடுப்பு எடுத்துக் கொள்கிறார்கள். சரியாக காலையில் ஆறு மணிக்கு லஷ்மிநகர் சந்திப்புக்கு வந்துவிடுகிறார்கள். பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் குறையும் வரை இருக்கிறார்கள். சாலையை பத்திரமாக கடக்க குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உதவுகிறார்கள். பேருந்து வந்தவுடன் கூட்டத்தில் இடித்துக் கொண்டு ஏறாமல், வரிசையாக ஒருவர் பின் ஒருவராக ஏற உதவுகிறார்கள். பேருந்து நிறுத்தம் அருகே ஒரு வெள்ளைக்கோடு போட்டு, அந்த கோட்டினை தாண்டி யாரும் சாலைக்கு வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். போக்குவரத்து காவலருக்கும் உதவுகிறார்கள். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம். ஒன்பதரை மணிக்கு கிளம்பி விடுகிறார்கள்.

இல்லத்தரசிகளுக்கு இந்த காலை நேரம் முக்கியமானது. கணவரை பணிக்கும், குழந்தைகளை பள்ளிக்கும் தயார் செய்யும் பரபரப்பான நேரம். அந்த நேரத்தை தியாகம் செய்து, இந்தப் பணிக்கு எப்படி வருகிறார்கள்?

“ஆறு மணிக்கு எழுந்துக்குறவங்க, ஒரு ரெண்டு மணி நேரம் முன்னாடியே எழுந்துக்கிறது பெரிய சிரமமெல்லாம் இல்லைங்க. எங்க குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பி வெச்சிட்டு, பத்திரமா போய் சேருவாங்களான்னு வயித்துலே நெருப்பை கட்டிக்கிட்டு இருக்குறதுக்கு, இம்மாதிரியான ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை நாங்களே செய்திருக்கிறோம்கிறது எங்களுக்கு திருப்தியா இருக்கு” என்கிறார் புவனேஸ்வரி. இவர் குங்குமம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்தவர்.

காவல்துறை இவர்களது சேவையை அங்கீகரிக்கும் வண்ணம், இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் மகளிருக்கு காவல்துறை நண்பர்கள் (Police friends) என்று அடையாள அட்டை வழங்கியிருக்கிறது. எப்போதோ தட சோதனைக்கு வந்த போக்குவரத்து ஆணையர் மு.இராசாராம், இவர்களது பணிகளை பாராட்டி, தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார். அவர் மூலமாக மாவட்ட ஆட்சியர் வரை இவர்களது புகழ் இப்போது பரவியிருக்கிறது.

நாம் விசாரித்தவரை தமிழக அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இதுபோன்ற சேவையில் வேறெங்கும் ஈடுபடுவதாக தெரியவில்லை. அவ்வகையில் முடிச்சூர் இந்த விஷயத்துக்கும் முன்னோடிதான்.

(நன்றி : புதிய தலைமுறை)