26 மே, 2011

ஜிரோநிமா

சிறுவயதிலிருந்தே காமிக்ஸ்களை விரும்பி படிப்பது வழக்கம். ஜேம்ஸ்பாண்டு போன்ற நாகரிக நாயகர்கள் தோன்றும் ஐரோப்பிய கதைகளை விட டெக்ஸ்வில்லர், லக்கிலுக் போன்ற அமெரிக்க கவுபாய்களின் கதைகள் நமக்கு உவப்பானவை. அவ்வாறு காமிக்ஸ்களை வாசிக்கும்போது தான் செவ்விந்தியர் என்ற ஒரு இனம் இருந்ததே நமக்கு தெரியவந்தது.

நாம் வாசிக்கும் கதைகளில் 99.99% வெள்ளையர்கள் தங்கள் மதியூகத்தால் செவ்விந்தியர்களை வெல்வதே முடிவாக இருக்கும். வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட கதைகள் என்பதால் இயல்பாகவே அப்படி அமைந்துவிடுகிறதா, இல்லையென்றால் வரலாற்றைத் திரித்து கதைகளாக உருவாக்குகிறார்களா என்கிற கேள்வி எழும். 'ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்' என்கிற மனநோய் நமக்கு இருக்கிறதா தெரியவில்லை, அக்கதைகளில் வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட செவ்விந்தியர்கள் ஒரு கதையிலாவது வெல்லவேண்டும் என்றே சிறுவயதில் விரும்பியிருக்கிறேன். செவ்விந்தியர்களை வெறும் முரடர்களாகவும், மூளையில்லாத முட்டாள்களாகவும் கதை எழுதிய கதாசிரியனையும், கேலிச்சித்திரம் போல செவ்விந்தியர்களை வரையும் ஓவியனையும் மனதுக்குள் சபிப்பேன்.

அதே நேரத்தில் வெள்ளையர்களிடமிருந்த ஆயுதங்கள் பீரங்கி, துப்பாக்கி போன்றவையையும், செவ்விந்தியர்களிடமிருந்த கோடாரி, வில்-அம்பு போன்றவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒருவேளை அக்கதைகள் உண்மையாகவும் இருந்திருக்கலாம். ஓய்வாக இணையத்தில் அவ்வப்போது நாம் படித்த கதைகளில் வந்த செவ்விந்திய இனங்கள், வீரர்களின் பெயரை கூகிளில் தேடி வாசித்து பார்ப்பது வழக்கம்.

அவ்வாறாக இணையங்களில் தேடியபோது தான் பல புதிய விவரங்களை அறியமுடிந்தது. நாம் வாசித்த கதைகளில் வந்ததைப் போல வெள்ளையர்கள் மதியூகத்தாலும், வீரத்தாலும் செவ்விந்திய இனத்தை வீழ்த்திடவில்லை, கேவலமான தந்திரங்களை பயன்படுத்தி கோழைத்தனமான முறையிலேயே செவ்விந்திய கலாச்சாரத்தை அழித்தொழித்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. தங்கள் குடியேற்றத்தை விரிவுபடுத்திக்கொள்ள பயங்கர இனப்படுகொலைகளை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இன்றைய நிலையில் இருப்பதைப் போன்ற தகவல் தொடர்பு அப்போதிருந்தால் உலகம் அன்றே அமெரிக்காவை காறித்துப்பியிருக்கும்.

என்னதான் புத்திசாலிகளாக இருந்தாலும், நவீன ஆயுதங்களை தம் கைவசம் வைத்திருந்தாலும் வெள்ளையர்களுக்கு உள்ளுக்குள் இருந்த கோழைத்தனம் செவ்விந்தியர்களுக்கு எதிரான மகத்தான வீரவெற்றியை போர்முறையில் பெறும் வாய்ப்பை அளிக்கவில்லை. செவ்விந்தியர்கள் ஒரே இடத்தில் வசிக்கும் இனமல்ல, நாடோடி இனம். தங்கள் குடியிருப்பை காலநிலைக்கு ஏற்றவாறும், தங்கள் முக்கிய உணவான காட்டெருமைகள் வசிக்கும் காடுகளுக்கு அருகாக அமைவதைப் போல மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

அவ்வாறான குடியிருப்புகளில் ஆண்கள் வேட்டைக்கு செல்லும் நேரத்தில் கோழைகளான வெள்ளையர்கள் தாக்குதல் நடத்துவார்கள். குடியிருப்புகளில் வசிக்கும் பெண்கள், குழந்தைகளை கொன்று அந்த கூட்டத்தையே அழித்ததைப் போல தலைநகருக்கு தகவல் சொல்லுவார்கள். செவ்விந்தியர்கள் தனித்தனியான கூட்டமாக வாழ்ந்ததால் அவர்களால் வெள்ளையர்களுக்கு எதிரான ஒரு பெரிய போர்ப்படையை உருவாக்க இயலாமல் போய்விட்டது. பொதுவாக ஒரு செவ்விந்திய கூட்டம் அறுபது முதல் நூறு வீரர்கள் வரையே கொண்டிருக்கும். மாறாக வெள்ளையர்களோ தங்களது ஒரு படைப்பிரியில் ஐநூறு முதல் ஐயாயிரம் பேர் வரை வைத்திருப்பர்.

வெள்ளையர்களின் குடியேற்றத்துக்கு செவ்விந்தியர்கள் அதிக அளவில் எதிர்ப்பு தெரிவித்தது இருப்புப் பாதைகள் போடப்பட்டபோது தான். தங்களது மேய்ச்சல் நிலங்களை அழித்து வெள்ளையர் அதிக சத்தம் போடும் 'இரும்புக் குதிரையை' (ரயிலை செவ்விந்தியர் அவ்வாறு தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்) கொண்டு வந்ததை இவர்கள் விரும்பவில்லை. தொடர்ச்சியாக சிறுசிறு போர்க்குழுக்களாக வெள்ளையர்களின் நகரங்களை அவ்வப்போது தாக்கி சிறியளவில் வெற்றி பெற்று வந்துள்ளனர். போர் மூலமாக செவ்விந்தியர்களை அடக்க துப்புக்கெட்ட அமெரிக்க அரசாங்கம் அம்மை நோய் போன்ற தொற்றுநோய்களை செவ்விந்திய கிராமங்களில் 'மிஷினரிகள்' மூலமாக பரப்பி செவ்விந்திய இனத்தை அழித்தனர். வெள்ளையர்களுக்கு எதிரான போரில் இறந்த செவ்விந்தியர்களை காட்டிலும், மருத்துவவசதி கிடைக்காது தொற்றுநோயால் கிராமம், கிராமமாக இறந்த செவ்விந்தியர்களே அதிகம்.

ஆயினும் பல தடைகளை தாண்டி, சொந்தம், பந்தம், தோழமைகளை இழந்து வெள்ளையர் குடியேற்றத்துக்கு எதிராக போராடி வெள்ளையரின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய மாவீரர்கள் அவ்வப்போது செவ்விந்திய இனங்களில் தோன்றினார்கள். அவர்களில் ஒருவர் மாவீரன் ஜிரோநிமா. இன்றைக்கும் இந்தப் பெயரை கேட்டாலே அமெரிக்கர்களின் காதில் இன்னமும் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுகிறதாம்.

1829ல் பாரம்பரியமிக்க அபாச்சே இனத்தில் பிறந்த ஜிரோநிமாவின் இயற்பெயர் கோய்ல்த்லே. செவ்விந்தியர்களின் பெயர்களை உச்சரிக்க சிரமப்பட்ட வெள்ளையர்கள் அவர்களுக்கு தங்கள் வாயில் நுழையும் பெயர் வைத்து அழைப்பது வழக்கம். அவ்வழக்கத்தின் படியே கோய்ல்தே, ஜிரொநிமா ஆனார். எல்லா செவ்விந்தியர்களைப் போலவும் வேட்டை, மேய்ச்சல் போன்றவற்றில் கைதேர்ந்த ஜிரோநிமா செவ்விந்திய மருத்துவ முறையையும் கற்று மருத்துவர் ஆனார். திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகளை பெற்று வழக்கமான இல்லறத்தில் வாழ்ந்து வந்தார்.

1851ல் தன் முகாமை விட்டு சகாக்களோடு ஜிரோநிமா வேட்டைக்கு சென்றிருந்தார். அப்போது சுமார் நானூறு வீரர்களோடு வந்த ஸ்பானியப் படை அம்முகாமை தீக்கிரையாக்கி அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் ஆகியோரை ஈவிரக்கமின்றி இனப்படுகொலை செய்தது. அச்சம்பவத்தில் தன் மனைவியையும், மூன்று குழந்தைகளையும் இழந்த ஜிரோநிமா வெள்ளையர்களை வேரறுக்க உறுதி பூண்டார்.

பதினாறு தேர்ந்த வீரர்களை மட்டுமே தன் கைவசம் வைத்திருந்தவர் 1858ஆம் ஆண்டிலிருந்து மெக்ஸிகோ இராணுவ வீரர்கள் மீதும், மெக்ஸிகோ குடியிருப்புகள் மீதும், அதிரடி தாக்குதல் நடத்தத் தொடங்கினார். பெரும் படைப்பிரிவுகளை கூட கொரில்லா முறையில் அனாயசமாக திடீர் தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டார். மெக்ஸிகோவில் ஜிரோநிமாவின் புகழ் பெருகுவதை கண்ட அமெரிக்க அரசாங்கம் மெக்ஸிகோவுக்கு உதவியாக தன்னுடைய படைப்பிரிவுகளை (நம்ம அமைதிப்படை மாதிரி) அனுப்பி வைத்தது. அவற்றையும் தொடர்ந்து ஜிரோநிமா சுளுக்கெடுத்து வந்தார்.

நம் வீரப்பன் தண்ணி காட்டிய ரேஞ்சுக்கு ஜிரோநிமாவும் தன் சிறிய படைப்பிரிவை வைத்து இரண்டு ஏகாதிபத்திய அரசுகளுக்கும் அள்ளு கொடுத்தது எத்தனை ஆண்டுகள் தெரியுமா? இருபத்தெட்டு ஆண்டுகள்! கடைசியாக உதைவாங்கியே அலுத்துப் போன அமெரிக்க அரசாங்கம் 1886ஆம் ஆண்டு ஐயாயிரம் பேர் கொண்ட பெரிய படை ஒன்றினை ஜிரோநிமாவை கைது செய்ய அனுப்பி வைத்தது.

ஐயாயிரம் பேரும் முற்றுகையிட்டபோதும் ஜிரோநிமாவை அவ்வளவு சுலபமாக நெருங்கமுடியவில்லை. கடைசியாக பொதுமன்னிப்பு உள்ளிட்ட சில நிபந்தனைகளோடு ஜிரோநிமா சரணடைய முன்வந்தார். ஜிரோநிமா சரணடையும் போது அவரது பெரும்படையும் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டது. ஜிரோநிமாவுடன் சரணடைந்த பெரும்படையில் இருந்தவர்கள் மொத்தமே (குழந்தைகள், பெண்கள் உட்பட) முப்பத்தெட்டு பேர் தான்.

அதன் பின்னர் 23 ஆண்டுகள் அமைதியாக உயிர்வாழ்ந்த ஜிரோநிமா 1909ல் தன்னுடைய எழுபத்தி ஒன்பதாவது வயதில் இயற்கையான முறையில் மரணமடைந்தார். தன் கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும் என்றுமே விட்டுக் கொடுக்காத ஜிரோநிமா கடைசிக் காலத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தான் ஆச்சரியம். பின்னர் ஜிரோநிமாவை கதாநாயகனாகவும், வில்லனாகவும் சித்தரித்து ஏராளமான திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.

இன்றைக்கும் செவ்விந்தியர்கள் அமெரிக்க கிராமங்களில் சிறுபான்மையினராக வசிக்கிறார்கள், தங்கள் கலாச்சார வேர்களை இழந்து...

23 மே, 2011

திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியா

தந்தை பெரியாரின் அணுக்கமான தொண்டராக இருந்தவர் குத்தூசி குருசாமி. இவரது அந்நாளைய கட்டுரைகளுக்கு அரசு அபராதம் விதிக்கும். விதிக்கப்பட்ட அபராதங்களை வாசகர்களிடமே வசூலித்து கட்டுவார். அபராதம் விதிக்கப்படும் கட்டுரைகளையே குத்தூசியார் தரவேண்டுமென்று மேலும், மேலும் வாசகர்கள் வசூல் மழை பொழிவார்கள்.

அவரது எழுத்துப் பாணி அச்சுஅசலாக நாத்திகச் செம்மல் இரா.தியாகராசன் அவர்களுக்கும் இருந்ததால், சின்னக்குத்தூசியார் என்கிற பெயரே இவருக்கு நிலைபெற்றது. படிக்கும் காலத்திலேயே திராவிட இயக்க சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். ஆசிரியராக தனது வாழ்வினை தொடங்கியவர், பின்னர் பத்திரிகைத்துறையிலும் முத்திரை பதித்தார்.

கலைஞரை எதிர்த்து கட்சி கண்ட ஈ.வெ.கி.சம்பத்தின் நெருங்கிய நண்பர் இவர் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தமிழ் தேசியக்கட்சி காங்கிரஸில் ஐக்கியமானபோது, காமராசரின் நவசக்தியில் சின்னக்குத்தூசியார் காரசாரமான தலையங்கங்கங்களை தீட்டிவந்தார். எத்தனையோ பத்திரிகைகளை இவரது எழுத்து அலங்கரித்து வந்தாலும், என்றுமே எதிலுமே கொள்கை சமரசம் செய்துக் கொண்டதேயில்லை.

திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியாவாக வாழ்ந்துவந்த சின்னக்குத்தூசியார் நேற்றுடன் அழியாப்புகழ் பெற்று இயற்கையோடு கலந்திருக்கிறார். தமிழ் பத்திரிகையாளர்களுக்கு திராவிட இயக்கம் குறித்த எந்த ஐயம் ஏற்பட்டாலும், சின்னக்குத்தூசியாரை தொடர்பு கொள்ளலாம். இதைப்பற்றி அவருக்கு தெரியாததே இல்லை எனலாம். பகுத்தறிவு, சுயமரியாதை ஆகிய கொள்கைகளுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தார். காலமெல்லாம் பார்ப்பனீயத்தை தீரத்தோடு எதிர்த்து வாழ்ந்த சின்னக்குத்தூசியார் பிறப்பால் பார்ப்பனர் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.

அவரது இறுதிக்கால வாழ்வு பெரும்பாலும் நக்கீரன் ஆசிரியர் அண்ணாச்சியையே சார்ந்திருந்திருக்கிறது. தனக்கென குடும்பம் ஏற்படுத்திக் கொள்ளாத சின்னக்குத்தூசியாருக்கு சொந்த மகனாகவே அண்ணாச்சி செயல்பட்டிருக்கிறார். அவரது பூவுடல் கூட பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது அண்ணாச்சியின் நக்கீரன் அலுவலகத்தில்தான். அந்திமக் காரியங்களையும் அண்ணாச்சியே முன்நின்று செய்திருக்கிறார்.

“கலைஞர் என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துப் பேசுவார்” என்று பா.ராகவன் அவரது அஞ்சலிக்குறிப்பில் எழுதியிருக்கிறார். முழுக்க முழுக்க இக்கருத்தில் இருந்து முரண்படுகிறேன்.

1992 பாபர் மசூடி இடிப்புக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக முரசொலியில் எதிர்த்து எழுதிவந்தார் சின்னக்குத்தூசியார். 1998 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., நான்கு எம்.பி.க்களோடு தமிழகத்தில் வலுவாக காலூன்றியது. அப்போதைய அரசியல் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய அரசியலுக்காக பா.ஜ.க.வோடு சமரசம் செய்து, கூட்டணி வைத்துக்கொள்ளும் நிலையிலும் இருந்தது.

சின்னக்குத்தூசியாரை அழைத்த கலைஞர், இனி பா.ஜ.க. எதிர்ப்பு விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கும்படி கேட்டுக் கொண்டார். அரசியல் கூட்டணிக்காக கொள்கைக்கு எதிராக செயல்படுவதில் தனக்கு விருப்பமில்லை என்று இவர் மறுப்பு தெரிவிக்க, கலைஞரின் குரலில் கடுமை கூடியது.

“உங்களுக்கு மட்டும்தான் தலையங்கம் எழுத வரும்னு இல்லே. நானே நல்லா எழுதுவேன். தெரியுமில்லே?”

“நான் எழுதறதைவிட நீங்க நல்லா எழுதுவீங்க, நிறைய பேர் படிப்பாங்கன்னும் எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு, முரசொலியில் இருந்து மூட்டை கட்டியவர் சின்னக்குத்தூசியார். கழகம், பாஜகவோடு கூட்டணியில் இருந்தவரை திமுகவோடு, தனக்கு பெரிய இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டார்.

கொள்கைக்காக வாழ்வை தியாகம் செய்த இந்த மகத்தானவரை, திராவிட இயக்கத்தவன் ஒவ்வொருவனும் தன் நெஞ்சில் ஏற்றி வைத்து சுமக்க வேண்டும்.

21 மே, 2011

துரோகிகளும், தியாகிகளும்

1991 மே 22. அதிகாலை. ராஜீவ் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது. பள்ளி விடுமுறை. குட்டிப்பையன் நான். மேல்சட்டையுடன், ஜட்டியை விட மேலான ஒரு டவுசர் மட்டுமே அணிந்திருந்த நான் ’ஆபத்து’ புரியாமல் குதூகலித்தேன். தேர்தல் நேரம். டீக்கடை வாசலில் அதிமுக-காங்கிரஸார் குவிந்து சோகமாகவும், விஷமமாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை கண்டதுமே எனக்கு ஒருமாதிரியான வெறி. தூரத்தில் அவர்களைப் பார்த்து மோதிர விரலை நீட்டி, “போட்டுட்டோம் பார்த்தீங்கள்லே” என்று வெறுப்பேற்றி விட்டு வீட்டுக்கு ஓடினேன்.

பின் தொடர்ந்து ஓடி வந்த தொண்டர்களும், குண்டர்களும் வீட்டை சூறையாடி விட்டார்கள். எனது பெரியப்பாவின் மண்டை உடைந்தது. நல்ல வேளையாக எவருடைய உயிருக்கும் சேதாரமில்லை. தொடர்ந்த கலவரத்தால் எங்கள் ஊரிலிருந்த திமுகவினர் உடைமைகள் பறிபோயின. உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல். திமுகவினர் அதிகம் பேர் இருந்த பெரிய காய்கறி மார்க்கெட் ஒன்று எரிக்கப்பட்டது. பிரச்சாரத்துக்கு வைத்திருந்த அலங்கார வளைவுகள் தீவைக்கப்பட்டன. சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

இது என்னுடைய சொந்த அனுபவம். தமிழகம் முழுக்க இதுதான் நிலைமை.

வட மாவட்டம் ஒன்றில் கட்சிக்கொடி கம்பத்தை வெட்ட வந்தவர்களிடம் இருந்து, கம்பத்தை காப்பாற்ற கட்டிப்பிடித்த தொண்டரின் கை வெட்டப்பட்டது. இதுமாதிரி நிறைய. எம்.ஜி.ஆர் மரணத்தின் போது ஏற்பட்ட வன்முறையை விடவும், மிக அதிகமான கொடூரமான வன்முறையை திமுகவினர் சந்தித்த தருணம் அது.

ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் என்பதாலேயே ஒரே நாளில் கொலைகாரர்கள் ஆனோம். கொலைப்பழியின் காரணமாக எங்கள் இயக்கம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அடுத்து வந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. திரும்பவும் ஐந்து ஆண்டுகள் கழிந்து ஆட்சிக்கு வந்தும் கொலைப்பழி தீரவில்லை. ஜெயின் கமிஷன் நெருப்பாற்றில் நீந்தி சமீபத்தில்தான் கரை சேர்ந்தோம்.

ஆனாலும் நாங்கள் துரோகிகள். 2009 மே மாதத்துக்குப் பிறகு அரசியல் பேச வந்து விட்டவர்கள் எல்லாம் தியாகிகள்.

இருபதாண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அதிமுக மற்றும் காங்கிரஸ் குண்டர்களால் வெறித்தனமாக தாக்கப்பட்டு உயிரையும், உடமையையும் இழந்த கழகத் தோழர்களுக்கு வீரவணக்கம்!

20 மே, 2011

ஸ்ரீராமருக்கே ஜெயம்!

புண்ணிய பூமியாம் பாரதத்தின் 110 கோடி ஹிந்து மகாஜனங்களுக்கு இருக்கும் மத அபிமானமும், சூடு, சொரணையும், அம்மாவின் தேசமாம் ஸ்ரீ தமிழகத்தின் ஏழு கோடி ஹிந்துக்களும் கூட இருக்கிறது என்பதை தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகிறது. குஜராத்தில் நடந்து வரும் நல்லாட்சியைப் போன்றே தமிழகத்திலும் உலகின் ஒரே ஒப்பற்ற தங்கத் தாரகை அம்மாவின் ஆட்சி மலர்ந்திருக்கிறது. ராவணன் ஆட்சி ஒழிந்திருக்கிறது. ராமர் ஆட்சி விடிந்திருக்கிறது.

நடந்தது தேர்தல் அல்ல, இராமாயணம். புரட்சித்தலைவி அம்மா ஸ்ரீராமர். சின்னம்மா ஸ்ரீலட்சுமணர். துக்ளக் ஸ்ரீமான் ராமசாமி ஆஞ்சநேயர். திருக்குவளை தீயசக்தி ராவணன். அண்டோமேனியா சூர்ப்பனகை. இருட்டுக்கடை அல்வா புகழ் ஆற்காடு கும்பகர்ணன். இப்படியாக ஏகப்பட்ட ஒப்புமைகளை இராமாயணத்துக்கும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கும் நாம் ஒப்பிட்டு பார்க்க இயலும்.

தர்மத்தின் வாழ்வுதனை 2006ல் சூது வென்றாலும், 2011ல் தர்மமே வெல்லும் என்பது உறுதியாயிற்று. குடிகார திம்மியாக ஆரம்பத்தில் அறியப்பட்டு, அம்மாவால் மனம் மாற்றமடைந்த முற்போக்கு திராவிட திம்மியும் கூட, இராமர் பாலம் கட்ட ஸ்ரீ அணில் உதவியது போல அம்மாவுக்கு கொஞ்சமாக உதவியது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிரதிபலனாக அந்த குடிகார கட்சிக்கு ஊருக்கு ஒரு டாஸ்மாக் பார் லைசென்ஸை அம்மா கொடுத்திருக்கலாம். அதுவே அதிகம். ஆனாலும் பரந்த மனதோடு, அருள்பாலித்து 29 எம்.எல்.ஏ.க்களை வழங்கி கவுரவித்திருக்கிறார். இனியாவது இவர்கள் திராவிடம், முற்போக்கு போன்ற பழம் பஞ்சாங்க வார்த்தைகளை மூட்டை கட்டிவிட்டு அ ஃபார் அம்மா, சி ஃபார் சின்னம்மா, மோ ஃபார் மோடி, ஹி ஃபார் ஹிந்து என்று புது பாடம் படித்து, வழி தவறிய ஆடுகளாய் அலையாமல் வாழ முற்பட வேண்டும்.

அம்மாவின் புனித பதவியேற்பு விழாவுக்கு ஸ்ரீமான் மோடி, ஸ்ரீமான் ராமசாமி, ஸ்ரீமான் பொன்.ராதாகிருஷ்ணன் என்று நம்மவாளாக திரளானோர் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தது கண்கொள்ளாக் காட்சி. அம்மா பதவியேற்க இருக்கிறார் என்பதை அறிந்து சங்கிலித் திருடர்கள், அண்டோமேனியா கட்சியினரின் அராஜக ஆட்சி நடக்கும் ஆந்திராவுக்கு ஓடிப் போய்விட்டார்கள் என்கிற பேருண்மையை அம்மாவே பத்திரிகை நண்பர்களிடம் வெளிப்படுத்தினார். அம்மாவுக்கே தெரியாத இன்னொரு உண்மையையும் நாம் இங்கே சொல்லியாக வேண்டியிருக்கிறது. தகதகக்கும் ஆதிபராசக்தியாம் அம்மாவின் அருளாட்சி தரும் வெப்பம் சங்கிலித் திருடர்களுக்கு மட்டுமல்ல, சட்னித் திருடர்களையும் ஓட ஓட விரட்டும். அண்டோமேனியாவின் ஆட்சி அண்டை மாநிலமான கேரளாவிலும் ஏற்பட்டிருப்பதால், இனி தமிழகத்தின் தீயசக்திகள் ஆந்திரா மட்டுமின்றி, கேரளாவுக்கும் ஓட்டம் பிடிக்கும்.

ஆயிரத்து இருநூறு கோடி ரூபாயை அனாவசியமாக கொட்டி திருக்குவளை தீயசக்தி கம்பெனியினர், மவுண்ட்ரோட்டில் கட்டிய இண்டியன் ஆயில் எண்ணெய் டேங்கை அம்மா புறக்கணித்திருக்கிறார். பாராட்டுகிறோம். அம்மா, கோட்டையே என் கோயில் என்று முழங்கியிருக்கிறார். சிலிர்த்துக் கொள்கிறோம். அகிலம் ஆளும் கருமாரியான அம்மாவுக்கு இங்கே ஓர் கோரிக்கையை முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறோம். மிஷினரிகள் செய்த சதி காரணமாக நமது அ.இ.அ.தி.மு.கழகத்துக்கு சொந்தமான கோட்டைக்கு புனித ஜார்ஜ்என்று அண்டோமேனியா வகையறாக்களின் மதப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அப்பெயரை நீக்கி ஸ்ரீராமர் பெயரையோ, அல்லது ஸ்ரீராமருக்கு ஒப்பான சக்தியை பெற்றிருக்கும் புரட்சித்தலைவி அம்மா பெயரையோ கோட்டைக்கு சூட்ட வேண்டும். புனித புரட்சித்தலைவி அம்மா கோட்டைஎன்று பெயர் வைக்கப் படுமேயானால், நம் சந்ததி மட்டுமின்றி, நம் ஈரேழு சந்ததியும் அம்மா புகழ் பாடும். தீயசக்திக்கு இகழ் கூடும்.

திருக்குவளை தீயசக்தி மட்டுமே தீயது என்று தமிழகத்தின் ஹிந்துக்கள் இதுவரை தவறாக நினைத்திருந்தோம். பாண்டிச்சேரியில் ஒரு புதிய தீயசக்தி உருவாகி, அது நம் அம்மாவையே ஏமாற்றி ஆட்சியையும் பிடித்திருக்கிறது என்பதை அம்மா நேற்றைய அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார். தமிழகத்து தீயசக்தியை அம்மா எப்படி வதம் செய்தாரோ, அதுபோலவே 2016 தேர்தலில் பாண்டிச்சேரி தீயசக்தியையும் வதம் செய்வார். அதற்காக தமிழகத்தின் ஏழு கோடி ஹிந்து பெருமக்களும் அம்மா பின் அணிவகுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எது எப்படியோ, வாழும் ஸ்ரீராமராய் தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் அம்மாவுக்கே இறுதி ஜெயம் என்பது உறுதியாகி இருக்கிறது. இந்த ஜெயத்துக்கு பின்னால் ஜே ஜே என்று ஜால்ரா அடித்து பஜனை பாடிய தேர்தல் கமிஷனுக்கும், இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த நேர்மையான அதிகாரிகளான பிரவீண்குமார், சகாயம் போன்றவர்களுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

வாழ்க அம்மா. வீழ்க திராவிட திம்மிகள்.


பின்குறிப்பு : இந்த பதிவுக்காக அம்மா பெயரிட்டு கூகிளில் படம் தேடினோம். கடந்த ஆட்சிக்கால தீய்சக்திகள் கூகிளில் ஏதோ தில்லுமுல்லு செய்து, அம்மா பெயரையிட்டு படம் தேடினால் ஆபாசப் படங்கள் நிறைய வருவதைப் போல செட்டிங்க்ஸ் செய்திருக்கிறார்கள். இதற்காக அமெரிக்க கணினி வல்லுனர்கள் மதுரை ரவுடிகளால் தொலைபேசியில் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஹிந்து தர்மத்தில் நம்பிக்கை கொண்ட மென்பொருள் வல்லுனர்கள் இதற்கு ஏதேனும் பரிகாரம் செய்தால் தேவலை. அம்மா பெயரிட்டு படங்களை தேடினால் 1991க்குப் பின்னான அம்மா படங்கள் மட்டுமே கிடைக்குமாறு செய்யவேண்டும் என்று கூகிள், யாஹூ நிறுவனங்களை கேட்டுக் கொள்கிறேன்.

18 மே, 2011

ஹீரோ!

இந்த கட்டுரையை எழுதி மிகச்சரியாக இன்றோடு ஈராண்டு ஆகிறது. வெட்டுக்காயத்தோடு தொலைக்காட்சிகளில் அன்று காட்டப்பட்ட முகம் பிரபாகரனாக இருக்காது என்று திடமாக நம்பினேன். இப்போதும் நம்புகிறேன். ஆனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஈராண்டில் சிதைந்தே வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த 2009 நவம்பர் 27 வரை அவர் உயிரோடிருப்பதாக பெருத்த நம்பிக்கையிலேயே இருந்தேன். அவர் மீதும், அவர் கட்டமைத்த இயக்கத்தின் மீதும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். அவற்றில் பலவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் கூட. ஆயினும் அவர்மீதான 'ஹீரோ ஒர்ஷிப்' எனக்கு எப்போதும் குறைந்ததேயில்லை. அவர் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்றும் வீரவணக்கத்துக்கு உரித்தானவரே. இதுவரை உலகம் காணா ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம்!


எம்.ஜி.ஆரை என்றிலிருந்து பிடித்தது, கமல்ஹாசனை எப்போதிலிருந்துப் பிடித்தது என்பதெல்லாம் நினைவில் இல்லாததைப் போலவே பிரபாகரனை எப்போதிலிருந்து பிடித்தது என்பதும் நினைவில்லை. நினைவு தெரிந்தபோது என் வீட்டு வரவேற்பரையில் இருந்தது மூவரின் படங்கள். அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன். ஒருமுறை கூட்டுறவு வங்கி ஒன்றில் அப்பா கடனுக்கு முயற்சித்திருந்தார். வீட்டுக்கு வெரிஃபிகேஷனுக்கு வந்த வங்கி அதிகாரி பிரபாகரன் படமெல்லாம் இருக்கிறது என்று கூறி கடன் தர மறுத்த நகைச்சுவையும் நடந்தது.

மூன்றாவதோ, நான்காவதோ படித்துக் கொண்டிருந்தபோது கோடை விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். நாளிதழ்களை சத்தம் போட்டு படித்து தமிழ் கற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் செய்திகளை உரக்கப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த வழியாக நடந்து வந்த மாமா பளாரென்று அறைந்தார். அந்த மாமா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். ஏன் அடித்தார் என்று தெரியாமலேயே அழுதுக் கொண்டிருந்தபோது தாத்தாவிடம் சொன்னார். “பிரபாகரனைப் பத்தி தப்புத்தப்பா நியூஸ் போட்டிருக்கான். அதையும் இவன் சத்தம் போட்டு படிச்சுக்கிட்டிருக்கான்”. எண்பதுகளின் இறுதியில் தமிழகம் இப்படித்தான் இருந்தது. பிரபாகரன் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர்.

நேருமாமா மாதிரி எங்கள் குடும்பத்தில் ‘பிரபாகரன் மாமா’. ஆந்திர நண்பன் ஒருவன் எனக்கு அப்போது உண்டு. சிரஞ்சீவி படம் போட்ட தெலுங்குப் பத்திரிகைகளை காட்டி, எங்க மாமா போட்டோ வந்திருக்கு பாரு என்று காட்டுவான். தெலுங்குக் குடும்பங்களில் பெண்களுக்கு சிரஞ்சீவி ’அண்ணகாரு’. எனவே குழந்தைகளுக்கு ‘மாமகாரு’ என்று சொல்லி வளர்ப்பார்கள். நானும் பெருமையாக பிரபாகரன் படங்கள் வந்தப் பத்திரிகைகளை காட்டி, “எங்க மாமா போட்டோ உங்க மாமா போட்டோவை விட நிறைய புக்லே, பேப்பருலே வந்திருக்கு. உங்க மாமா சினிமாவில் தான் சண்டை போடுவாரு. எங்க மாமா நெஜமாவே சண்டை போடுவாரு” என்று சொல்லி வெறுப்பேற்றி இருக்கிறேன். உண்மையில் பிரபாகரன் எனக்கு மாமன்முறை உறவினர் என்றே அப்போது தீவிரமாக நம்பிவந்தேன்.

தீபாவளிக்கு வாங்கித்தரப்படும் துப்பாக்கிக்கு பெயர் பிரபாகரன் துப்பாக்கி. போலிஸ் - திருடன் விளையாட்டு மாதிரி பிரபாகரன் - ஜெயவர்த்தனே விளையாட்டு. ரோல் கேப் ஃப்ரீ என்று ஆஃபர் கொடுத்தால் ஜெயவர்த்தனேவாக விளையாட எவனாவது விஷயம் தெரியாத பயல் மாட்டுவான். நாம் சுட்டுக்கிட்டே இருக்கலாம், அவன் செத்துக்கிட்டே இருப்பான்.

சென்னையின் கானா பாடகர்கள் பிரபாகரனை பாட்டுடைத் தலைவனாக்கி பாடுவார்கள். பிரபாகரனின் வீரதீர சாகசங்கள் போற்றப்பட்டும், ஈழத்தமிழர் அவலமும் உருக்கமாகப் பாடப்படும். பிரபாகரன் பெயர் பாடகரால் உச்சரிக்கப்படும் போதெல்லாம் விசில் சத்தம் வானத்தை எட்டும்.

குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ந்து நன்கு விவரம் தெரியும் வயதுக்குள் நுழைந்தபோது துன்பியல் சம்பவமெல்லாம் நடந்து முடிந்து விட்டிருந்தது. சூழலே வேறுமாதிரியாகி விட்டது. பள்ளியிலோ, பொதுவிடங்களிலோ பிரபாகரன் பெயரை சொன்னாலே ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். உள்ளுக்குள் பதிந்துவிட்ட அந்த கதாநாயகப் பிம்பத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்க வேண்டியதாயிற்று.

அந்தக் காலத்திலேயே பத்திரிகைகளில் எழுதுவார்கள். பிரபாகரன் மரணம், பிரபாகரன் ஆப்பிரிக்காவுக்கு தப்பித்து ஓட்டம், என்று விதவிதமாக யோசித்து எழுதுவான்கள் மடப்பயல்கள். இப்போது போலெல்லாம் உடனடியாக அது உண்மையா, பொய்யாவென்றெல்லாம் தெரியாது. உண்மை ஒருநாளில் வெளிவரலாம். ஒருவாரம் கூட ஆகலாம். அதுவரை மனம் படபடவென்று அடித்துக் கொள்ளும். தமிழ்நாட்டில் கலைஞருக்குப் பிறகு வதந்திகளால் அதிகமுறை சாகடிக்கப்பட்டவர் பிரபாகரன் ஒருவராகத்தான் இருக்கும். என் தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால் நேதாஜி மாதிரி நம் மாவீரனின் முடிவும் உலகுக்கு தெரியாததாக அமையவேண்டும்.

தலைவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். கொலைப்பழி இருக்கலாம். குற்றச்சாட்டுகள் இருக்கலாம். அதையெல்லாம் தாண்டிதான் அவரை நேசிக்கிறேன். அவரை நேசிக்க எந்த சித்தாந்தமோ, இன உணர்வோ, மொழிப்பாசமோ எனக்குத் தேவைப்படவில்லை. அவர் ஒரு ஹீரோ என்பது எனக்கு பசுமரத்தாணியாய் சிந்தனையில் ஓங்கி அறையப்பட்டுவிட்ட விஷயம். அவர் ஹீரோவாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது, வீரத்தைக் கொடுக்கிறது.

இந்த நேசத்துக்கெல்லாம் அவர் உரியவர்தான். இதுவரை உலகில் தோன்றிய மாவீரர்களில் மிகச்சிறந்தவராய் ராஜேந்திரச் சோழனை நினைத்திருந்தேன். மாவீரன் பிரபாகரன் ராஜேந்திரச்சோழனை மிஞ்சிவிட்டார். நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான் என்று இதுவரை உலகம் கண்ட எந்த மாவீரனுக்கும் சளைத்தவரல்ல எங்கள் பிரபாகரன். மற்றவர்கள் எல்லாம் ஓரிரு நாடுகளையோ, நான்கைந்து மன்னர்களையோ வென்றவர்கள். இலங்கை மட்டுமன்றி அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் என்று உலகையே எதிர்த்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக தினவோடு, திடமோடு போராடிய வரலாறு உலகிலேயே மாவீரன் பிரபாகரனுக்கு மட்டும் தான் உண்டு. இதுவரை உலகம் காணாத ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரன் தானென்று தமிழினம் மார்நிமிர்த்து சொல்லிக் கொள்ளலாம்.

வதந்திகள் சாகடிக்கலாம். வரலாறு வாழவைக்கும்!