29 ஜூலை, 2011

புரட்சியும், பூர்ஷ்வாவும்!

ரு டீ சாப்புடலாமா தோழர்?” தோழர் கேகே கேட்டால் மறுக்க முடியுமா?

வாங்க தோழர் போகலாம்வாசித்துக் கொண்டிருந்த ஏழு தலைமுறைகள்நூலை டேபிளில் வைத்துவிட்டு கிளம்பினேன்.

அக்கம் பக்கம் சில தோழர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளை பிரித்து வாசித்துக் கொண்டிருந்தார்கள். புரட்சி வருவது குறித்த செய்தி ஏதாவது தேறுகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். தோழர்கள் பெரும்பாலும் இரண்டு வார தாடி வைத்திருப்பார்கள். ஜிப்பா அணிவார்கள். தோளில் ஜோல்னா பை. பையில் ஓரிரண்டு ரஷ்ய மொழிப்பெயர்ப்பு புத்தகங்கள் நிரந்தரமாக இருக்கும். புதுத்தோழர் ஒருவர் பேராசானின் பொதுவுடைமை வாசித்துக் கொண்டிருந்தார். அவரது கண்கள் கலங்கியிருந்தது ஏனென்று தெரியவில்லை. இரவு முழுவதும் வாசித்திருக்கலாம். அவரையும் புரட்சிக்கு ஆயத்தப்படுத்தும் பணி கேகே தோழர் தலையில் தான் விடியும்.

முப்பதுக்கு இருபது அளவில் ஒரே அறையாக இருந்த கட்சியின் கிளை அலுவலகம் கிட்டத்தட்ட ஒரு நூலகம். தோழர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் இங்கு வந்து தேவையான நூல்களையோ, செய்தித்தாள்களையோ இலவசமாகவே வாசிக்கலாம். ஆனால் தினத்தந்தி வைப்பதில்லை என்று இயக்கத்தை சார்ந்த தோழர்கள் தவிர்த்து வேறு யாரும் இந்தப் பக்கம் வருவதில்லை. கட்சிப் பத்திரிகைகளையும், ரஷ்ய மொழிப்பெயர்ப்பு நூல்களையும் வெகுஜனங்கள் வாசிக்கும் நிலையை ஏற்படுத்துவதே புரட்சிக்கு இடும் வித்து என்பதாக தோழர் கேகே சிந்தித்து சிலாகித்துச் சொன்னார். ஆனால் வித்து இடும் பணி அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. வெகுஜனங்கள் ஒத்துவர வேண்டுமே?

நீளவாக்கில் இருந்த பெஞ்சில் மத்திய அரசை கண்டித்து அச்சிடப்பட்ட சூடான சுவரொட்டிகள் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இன்று இரவு தான் தோழர்களோடு போய் ஒட்டவேண்டும். எல்லா சுவரொட்டிகளுமே மத்திய அரசே! மத்திய அரசே!என்றுதான் ஆரம்பிக்கும். கண்டிக்கிறோம்என்றோ விடுதலை செய்!என்றோ முடியும். இடையில் இருக்கும் எழுத்துக்களை மட்டும் அவ்வப்போதான பிரச்சினைகளின் அடிப்படையில் இயக்கத்தின் பொலிட்பீரோ முடிவெடுத்துச் சொல்லும்.

சமீபத்தில் தான் இந்த இயக்கத்தோடு என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். தீவிரப் புரட்சிச் செயல்பாடுகளின் மீதிருந்த அதீத ஆர்வத்தால் நான் இங்கு இணைந்ததாக நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. இங்கு வருவதற்கு முன்பாக இப்போதிருக்கும் ஆளுங்கட்சியில் தீவிர செயல்பாடுகளை கொண்டிருந்தேன். அந்தக் கட்சியின் 153வது வட்டச் செயலாளருக்கும் எனக்கும் தகராறு. கக்கூஸ் காண்ட்ராக்டில் அவர் பல லட்சம் ஊழல் செய்திருந்ததாக கண்டுபிடித்தேன்.

ஒண்ணுக்கு போறவனும் ரெண்டுக்கு போறவனும் கொடுக்குற ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் காசுலே என்னத்தய்யா லட்சக்கணக்குலே ஊழல் பண்ணமுடியும்?” செயல்வீரர் கூட்டத்தில் திருப்பிக் கேட்டார் வட்டம்.

அவர் கேட்ட கேள்வி நியாயம் தான். ஆனால் எந்த வேலை வெட்டியோ, பூர்வீக சொத்தோ இல்லாத அவர் எப்படி புதிய டாடா சஃபாரி வாங்கியிருக்க முடியும்? அவருக்கு கட்சி கொடுத்தது கக்கூஸ் காண்ட்ராக்ட் மட்டுமே. எனவே அதை வைத்து மட்டுமே விஞ்ஞானப்பூர்வமாக பெரிய ஊழல் செய்து சம்பாதித்திருப்பார் என்று நம்பினேன்.

கட்சியில் என் குற்றச்சாட்டை யாரும் ஆமோதிக்கவோ, ஒரு பிரச்சினையாகவோ பார்க்கும் மனநிலையிலோ இல்லை. இந்த கட்சி ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான கட்சி என்பதை உணர்ந்தேன். கால் சென்டரில் (Call Centre என்று தெளிவாக வாசிக்கவும்) செக்யூரிட்டியாக காலத்தை தள்ளும் எனக்கு கக்கூஸ் காண்ட்ராக்ட் கூட வேண்டாம் அய்யா. குறைந்தபட்சம் ஏதாவது ஒரு ஊராட்சி மன்றத்தில் குப்பை அள்ளும் காண்ட்ராக்ட்டையாவது கொடுத்திருக்க வேண்டாமா? எல்லாவற்றையும் வட்டச் செயலாளர், கொட்டச் செயலாளர் வகையறாக்களே தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தால் நாங்களெல்லாம் அரசியலில் இருந்து மக்களுக்கு என்ன பிரயோசனம்?

சிந்திக்க சிந்திக்க கட்சித்தலைமை உண்மைத் தொண்டர்களுக்கும், தமிழ் சமூகத்துக்கும் செய்துவரும் அளப்பரிய துரோகங்கள் புலப்பட்டது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து விலகிச் செல்கிறது என்பதை முழுமையாக உணர்ந்தேன். ஈழத்தமிழர் பிரச்சினையை கட்சி கையாளும் முறை சரியில்லை என்று கூறி கட்சியை விட்டு வெளியேறினேன்.

கடந்த தேர்தலில் தோழர் கேகே இருந்த இயக்கத்தோடு உடன்பாடு வைத்துக் கொண்டு தேர்தலை சந்தித்திருந்தோம். எனவே தோழர் கேகே எனக்கு நன்கு அறிமுகமாகியிருந்தார். இப்போது அவரது இயக்கத்தின் பொலிட்பீரோ எதிர்க்கட்சியோடு உடன்பாடு கண்டிருந்ததால் ஆளுங்கட்சி மீது தார்மீகக் கோபம் கொண்டிருந்தார் தோழர். மாறி மாறி வைத்துக் கொள்ளும் இந்த தேர்தல் உடன்பாடுகளின் மீது தோழர் கேகேவுக்கும் உடன்பாடில்லை. ஆனாலும் புரட்சி வரும் வரை புரட்சிக்கான ஆயத்தங்களை தயார் செய்யவும், கட்சி அலுவலகத்துக்கு வாடகை கொடுக்கவும், மற்ற செலவினங்களுக்காகவும் இதுபோன்ற சமரசங்களுக்கு பொலிட்பீரோ உடன்படுகிறது என்று அவர் எனக்கு விளக்கினார்.


ட்டச்செயலாளரின் கக்கூஸ் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் தோழர்!கட்சியை விட்டு வெளியேறிய எனக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டப்போது சொன்னார் தோழர் கேகே. பாராட்டுக் கூட்டத்தில் ஆறு பேர் கலந்து கொண்டார்கள்.

எப்படி அம்பலப்படுத்துவது?” அம்பலப்படுத்துவது, அம்மணப்படுத்துவது மாதிரியான சொற்கள் எனக்கு அப்போது புதியதாக இருந்தது.

துண்டுப் பிரசுரம் கொடுப்போம் தோழர். அந்த வட்டச் செயலாளர் காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் கக்கூசுக்கு வரும் ஒவ்வொரு பாட்டாளித் தோழருக்கும் தலா ஒரு துண்டுப் பிரசுரம் கொடுப்போம். அவர் வீட்டுக்கு அக்கம் பக்கத்து வீடுகளிலெல்லாம் துண்டுப் பிரசுரம் வினியோகம் செய்வோம். அவரது ஊழலை வெகுஜனங்களுக்கு எடுத்துச் சொல்வோம். துண்டுப் பிரசுரம் மூலமாக கலகம் புரிவோம். கலகம் சிறுபொறி. சிறுபொறி நெருப்பாகும். புரட்சி நெருப்பு!ஆவேசமாக குரலை ஏற்றி, இறக்கி தோழர் சொன்னபோது எனக்கு புல்லரித்தது. மயிர்க்கால்கள் கூச்செறிந்தது.

என்னுடைய செலவில் பிட்நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு வட்டச்செயலாளர் அம்பலப்படுத்தப் பட்டார். ஆனால் அம்பலப் படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு ஆளுங்கட்சி பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்தது ஏனென்றே தெரியவில்லை. நான் தோழர்களின் இயக்கத்துக்கு வந்த வரலாற்றுப் பின்னணி இதுதான்.

இந்த இயக்கத்துக்கு வருவதற்கு முன்பாக புரட்சி என்றாலே எனக்கு புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் தான் தெரியும். புரட்சி எப்படியிருக்கும் என்று எனக்கு சொல்லித் தந்தவர் தோழர் கேகே. புதியதாக கட்சிக்கு வருபவர்களுக்கு கட்சியின் கொள்கை மற்றும் செயல்விளக்க செயல்பாடுகளைப் பற்றியும் பொதுவுடைமை சித்தாந்தங்கள் குறித்தும், புரட்சியின் அவசியம் குறித்தும் விருப்பத்தோடு பாடமெடுப்பார்.

ஆரம்பத்தில் தோழர் சொன்ன புரட்சி எந்த வடிவத்தில் எந்த நிறத்தில் அமைந்திருக்கும் என்று என்னால் தீர்மானிக்க இயலவில்லை. தோழர் சொன்னதை வைத்துப் பார்த்தால் ஜூராசிக் பார்க் டைனோசர் வடிவில் புரட்சி இருந்திருக்க வேண்டும். ஆனால் அது எப்போது வரும்? எப்படி வரும்? என்பதைப் பற்றி தோழருக்கே தெளிவில்லாத நிலை இருந்ததால் என் மனதில் அமீபா வடிவில் புரட்சி பதிந்துப் போனது.

தோழர் கேகே மவுண்ட் ரோட்டில் ஒரு ஏசி கம்பெனியில் வேலை பார்க்கிறார். இயக்கத்தின் தொழிற்சங்கப் பொறுப்பில் அவர் இருப்பதால் அவர் வேலை செய்யாமலேயே அவருக்கு கம்பெனி சம்பளம் தந்து கொண்டிருந்தது. அவரை வேலை செய்யச் சொன்னால் எங்கே ஒட்டுமொத்த வேலைநிறுத்தம் அறிவித்து விடுவாரோ என்று கம்பெனி நிர்வாகத்துக்குப் பயம். அடிக்கடி தோழர் கேகே டெல்லிக்கெல்லாம் போய்விட்டு வருவார். ஒருமுறை மக்கள் சீனத்துக்கு கூட நேரில் சென்று தொழிற்சங்க புரட்சிகரச் செயல்பாடுகளை கற்றறிந்து வந்தவர் அவர். இயக்கத்தின் முழுநேர ஊழியராக அவர் இருந்ததால் அவருக்கு பிரயாணச் செலவுகளையெல்லாம் இயக்கமே பார்த்துக் கொள்ளும். ஆங்காங்கே பிரயாணித்து புரட்சிக்கான விதைகளை ஊன்றிவருவதை தவம் போல செய்துவந்தார் தோழர் கேகே.


தோழர் ஒரு சிங்கிள் டீயும், நுரை தட்டாம ஒரு முழு கப் டீயும் போடுங்க!சினேகபாவத்தோடு நாயரிடம் சொன்னார் தோழர் கேகே. தோழருக்கு டீ க்ளாஸ் தளும்ப தளும்ப கப் டீ சூடாக இருக்க வேண்டும். அப்படியே சாப்பிடுவார்.

யான் தோளர் இல்லா. நாயர்டீக்கடைக்காரர் தோழர் என்பதை ஒரு சாதியாக புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

பார்த்தீங்களா தோழர்? புரட்சி சீக்கிரமா வராததால வர்க்கம் சாதியாவும், குழுக்களாவும் பிரிஞ்சு பேயாட்டம் ஆடிக்கிட்டிருக்கு!தோழர் கேகே பேசும் ஒவ்வொரு சொல்லையுமே இடைவிடாது ஒரு டயரியில் குறித்துக் கொண்டே வந்தால் ஆண்டு முடிவில் பொதுவுடைமை சைஸுக்கு ஒரு புத்தகத் தொகுதி போட்டு விடலாம்.

தம்மு அடிக்கிறீங்களா தோழர்?” கேகே தம் அடித்து நான் பார்த்ததில்லை. எனக்கு அப்போதைக்கு ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும் போலிருந்தது.

தோழர் கேகே கொஞ்சம் சிந்தித்தார். அவர் சிந்திக்கும் போது புருவங்கள் இரண்டையும் நெறிப்பார். நெற்றியின் மத்தியில் சின்னதாக முட்டை போல சதைக்கோளம் தோன்றும். இதுபோன்று அவர் சிந்திக்கும் நேரங்களில் ஏதோ பொதுவுடமை முத்து அவரது வாயிலிருந்து சிந்தப் போகிறது என்பதை உணரலாம்.

சட்டென்று சொன்னார். நீங்க இன்னமும் கூட பூர்ஷ்வாவா தானிருக்கீங்களா தோழர்?”

தலைமீது இடி விழுந்தாற்போல இருந்தது. சமூகத்தில் வேசிமகன் என்று ஒருவனைப் பார்த்து சொல்லப்படுவது எவ்வளவு இழிவானதாக கருதப்படுகிறதோ, அதற்கு இணையான இழிவு பொதுவுடைமை இயக்கத்தில் தீவிரமாக செயல்படும் ஒரு தோழரைப் பார்த்து பூர்ஷ்வாஎன்று சொல்லப்படுவதும்.

சினிமா பார்ப்பது பூஷ்வாத்தனம், உழைக்கும் தோழர்களை, ஒடுக்கப்பட்ட தோழர்களை சினிமா சுரண்டுகிறதுஎன்று ஒருமுறை தோழர் சொன்னதால் தியேட்டருக்குப் போய் படம் பார்ப்பதையே விட்டுவிட்டேன். ஆனால் 1917க்கும் 1990க்கும் இடையில் வந்த ரஷ்யத் திரைப்படங்களை பார்ப்பது பூர்ஷ்வாத்தனமில்லை என்று இயக்கம் விலக்கு அளித்திருந்தது. ரஷ்யமொழியை கற்றுக் கொண்டு அந்தப் படங்களை பார்த்துக் கொள்ளலாம் என்று வாளாயிருந்து விட்டேன்.

அப்படிப்பட்ட என்னைப் பார்த்து தோழர் பூர்ஷ்வாஎன்று சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. என்ன தோழர் சொல்றீங்க? சிகரெட்டு பிடிக்கிறது பூர்ஷ்வா மனப்பான்மையா?”

ஆமாங்க தோழர். சிகரெட்டு கம்பெனி முதலாளிகள் கோடி கோடியா மக்களை சுரண்டறதுக்கு நீங்க மறைமுகமா துணை போறீங்க! புகை புரட்சிக்கு நிச்சயமா பகை!!

என்ன தோழர் இப்படி சொல்றீங்க? தோழர் காஸ்ட்ரோ கூட புகைப்பழக்கம் கொண்டவர் தானே

என்ன தோழர். என்னிடம் விவாதமா? பொதுவுடைமையை நாலு முறை கரைச்சிக் குடிச்சவன் நான். இருந்தாலும் இதுபோன்ற விவாதங்கள் புரட்சி தொடர்பான விவாதங்களுக்கு தொடக்கப்புள்ளியா அமையுறதாலே கண்டிப்பா தொடரணும்னு பொலிட்பீரோ அறிவுறுத்தியிருக்கு. க்யூபாவில் புரட்சி வந்துடிச்சி. தோழர் காஸ்ட்ரோ புகை பிடிக்கிறார். இந்தியாவில் புரட்சி வருவதற்கான ஏற்பாடுகளை தானே நாம செஞ்சுக்கிட்டிருக்கோம். புரட்சி வரட்டும். நாடெங்கும் செங்கொடி பறக்கட்டும். நாமும் புகைப்பிடிப்போம் தோழர்!பரவசமாக சொன்னார் தோழர் கேகே. புரட்சி வரும் வரை திருமணம் செய்வதையே கூட தள்ளிப் போட்டிருந்த அவருக்கு புரட்சியின் மீதிருந்த நம்பகத்தன்மையை சந்தேகம் கொள்ள இயலாது. நான் சொன்ன காஸ்ட்ரோ லாஜிக்கை சந்தேகமேயில்லாமல் தவிடுபொடியாக்கி இருந்தார் தோழர்.

நீங்க இன்னும் மாவோவை உணரலை. அதால தான் இதுமாதிரி அரைகுறையா விவாதிக்கிறீங்க!தீவிரமாகவும், திடமாகவும் சொன்னார் தோழர்.

இல்லீங்க தோழர். மாவாவை நான் உணர்ந்திருக்கேன். முன்னாடியெல்லாம் அந்தப் பழக்கமிருந்தது. வாயி வெந்து உள்ளே ஓட்டை ஆயிட்டதாலே இப்போ தம்மு மட்டும் தான்என் நாக்கில் சனி. ஏடாகூடமாக உளற ஆரம்பித்தேன்.

நீங்க பூர்ஷ்வா என்பதற்கு இது தக்க உதாரணம் தோழர். புரட்சியாளன் மாவோவை மறந்து மாவா என்ற போதைப்பொருள் பின்னாடி விவாதத்தில் போறீங்க பாருங்க. இதுமாதிரியான தனிமனித ஆசாபாசங்கள் புரட்சியை தாமதப்படுத்தும்

தோழர் கேகேயிடம் தர்க்கம் செய்து வெல்ல முடியாது என்று புரிந்துப் போயிற்று. சட்டென்று ஒரு ஐடியா வந்தது. போனமாசம் அமெரிக்க முதலாளித்துவ அடக்குமுறை எதிர்ப்பு பேரணிக்கு கேரளாவுலேருந்து வந்திருந்த தோழர்கள் கூட புகை பிடிச்சாங்களே தோழர்!

நல்லா கவனிச்சுப் பார்க்கணும் தோழர். அவங்க பிடிச்சது பீடி. பீடி சுற்றும் இலட்சக்கணக்கான பாட்டாளிகளை அவங்க வாழ வைக்கிறாங்க!

இதற்குள்ளாக நாயர் டீ போட்டு டேபிளில் சூடாக வைத்தார். யோசித்துப் பார்த்ததில் தோழர் கேகே சொல்வதில் இருந்த புரட்சிவாதமும், அறமும் புரிந்தது. ஆனாலும் அப்படி பார்க்கப் போனால் டீ குடிப்பது கூட பூர்ஷ்வாத்தனம் என்பதாக ஆழமாக பொதுவுடைமை மனதோடு சிந்தித்தேன். ஒரு கப் டீக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்னவென்று என் பார்வை உலகளவில் விரியத் தொடங்கியது. இதையெல்லாம் தோழரிடம் விவாதித்தால் அதற்கும் தயாராக எதிர்விவாதத்தை ஏடாகூடமாக வைத்திருப்பார். எனவே புரட்சி வரும் வரை தோழர்களுக்கு தெரியாமல் தம்மடித்து ரகசிய பூர்ஷ்வாவாக வாழ்ந்து தொலைக்க வேண்டியது தான் என்று முடிவெடுத்தேன். அமைதியாக, எதிர்த்துப் பேசாமல் ஏதோ சிந்தனைபாவத்தில் இருந்த என் முகத்தைப் பார்த்த தோழருக்கு நான் புரட்சிக்கு லாயக்கானவன் தான், என்னை தேத்திவிடலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும்.

கவலைப்படாதீங்க தோழர். உங்களுக்குள்ளே ஒளிஞ்சுக்கிட்டிருக்கிற பூர்ஷ்வாவை விரட்டியடிச்சி உங்களை புரட்சியாளனா மாத்துறதுக்கு நானாச்சி. என்னை நம்புங்க!

புரட்சி நாளை வருமென்று தோழர் நம்புகிறார். தோழரை நான் நம்புகிறேன்.

(நன்றி : புதிய தலைமுறை)

28 ஜூலை, 2011

டால்ஃபின்களை காப்பாற்றிய சிட்டுக்குருவிகள்!

கேம்பல் ரிவர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்திருக்கும் ஒரு தீவு நகரம். இங்கிருக்கும் நதியில் அடிக்கடி கடல் உட்புகுந்து, கரைமட்டம் அதிகரிக்கும். அப்படியொரு நாளின் அதிகாலை ஆறு மணியளவில் பாப் சோல்க் தன் வீட்டின் முகப்பில் இருந்த புற்களை வெட்டிக் கொண்டிருந்தார்.

யதேச்சையாக நதிக்கரையோரம் பார்த்தவருக்கு ஆச்சரிய அதிர்ச்சி. சுமார் பத்து அடி நீளமுள்ள நான்கு அபூர்வ வகை டால்பின் மீன்கள், கரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். கடல்நீர் உட்புகுந்தபோது இவற்றையும் அடித்துவந்து கரையோரத்தில் தள்ளிவிட்டு, மீண்டும் உள்வாங்கியிருக்கிறது.

நான்கு உயிர்களையும் காக்க வேண்டுமே? என்ன செய்வது, ஏது செய்வது என்று புரியவில்லை. யாரை தொடர்பு கொண்டு என்ன கேட்க வேண்டும்?

உடனடியாக உள்ளூர் மீன்வளத்துறைக்கும், கடல் தொடர்பான துறை அதிகாரிகளையும் தொடர்புகொள்ள முயற்சித்தார். அதிகாலையில் எந்த அலுவலகம்தான் இயங்கிக் கொண்டிருக்கும்?
டால்ஃபின்களை உயிரோடு காக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் சமூக வலைத்தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் இச்செய்தியை பகிர்ந்தார். “நதியோரத்தில், என் வீட்டு வாசலில் நான்கு டால்ஃபின்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன”

பாப் செய்தது இவ்வளவுதான். இவருடைய செய்தியை இணையத்தில் அறிந்த உள்ளூர் ரேடியோ ஸ்டேஷன் அலற ஆரம்பித்தது. செய்தி கேட்ட தன்னார்வலர்கள் பலரும் பக்கெட்டோடு பாப் வீட்டுக்கருகே படையெடுக்க ஆரம்பித்தார்கள். சுமார் எண்பது பேர் காலை ஏழு மணிக்கே அவர் வீட்டு வாசலில் குழுமினார்கள். டால்ஃபின் மீட்புக்குழு தயார்.

பக்கெட்டில் நீரெடுத்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த டால்ஃபின்கள் மீது ஊற்றினார்கள், உடல் ஈரம் வற்றிவிடக் கூடாது என. அவை இருந்த இடத்தில் இருந்து நதிக்குள் செல்ல சிறு கால்வாய் வெட்டினார்கள். கால்வாயில் போதிய நீர் வருமாறு செய்தார்கள். டால்ஃபின்கள் அதுவாகவே மெதுவாக நகர்ந்து, ஆற்றுக்குள் நீந்தி, கடலுக்கு சென்றது.

சடுதியில் நடந்து முடிந்த விஷயங்கள் இவை. “இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை. இணையத்தின் மூலமாக இப்படியெல்லாம் கூட நல்லது செய்யமுடியும் என்பதை இன்றுதான் அறிந்தேன்” என்று இம்முறை ஆனந்த அதிர்ச்சியோடு சொல்கிறார் பாப் சோல்க்.

இணையம் இருமுனை கத்தி. அரட்டையடிக்கப் பயன்படும் சமூக வலைத்தளங்களை, சமூகப் பணிகளுக்கும் கூட பாப் பயன்படுத்தியதைப் போல பயன்படுத்தலாம்.

(நன்றி : புதிய தலைமுறை)

27 ஜூலை, 2011

தெய்வத்திருமகள்!

மகள் அப்பாவுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை அள்ளித்தருவாள் என்பது கருவானபோதே தெரிந்திருந்தால், நானும் என் அப்பாவுக்கு மகளாக பிறந்திருப்பேன்!

23 ஜூலை, 2011

காஞ்சனா

பெரிய ஹீரோ. பெரிய டைரக்டர். பெரிய மியூசிக் டைரக்டர். என்றெல்லாம் ஏகத்துக்கும் எதிர்ப்பார்த்து முதல் நாள் முதல் காட்சியே தியேட்டருக்குப் போய் உட்கார்ந்து பல்பு வாங்கியதும் உண்டு.

என்னவோ ஒரு படம். மூன்று மணிநேரத்தை போக்கியாக வேண்டும் என்கிற கட்டாயத்தால் தியேட்டருக்குப் போய் இன்ப அதிர்ச்சியும் அடைந்தது உண்டு.

காஞ்சனா இரண்டாவது அனுபவத்தை தருகிறாள்.

சரண் தயாரிப்பில், லாரன்ஸின் இயக்கத்தில் முனி பார்த்திருக்கிறேன். முதல் தடவை பார்க்கும்போது மொக்கையாகவும், பின்னர் யதேச்சையாக டிவியில் அடிக்கடி காண நேரும்போது ‘அட சுவாரஸ்யமா இருக்கே’ என்று உட்கார்ந்தது உண்டு.

அதே கதை. அதே ஹீரோ. அதே இயக்குனர். கதாபாத்திரங்களை மட்டும் கொஞ்சம் ஷேப் அடித்து, டிங்கரிங் செய்து குலுக்கிப் போட்டால் முனி பார்ட் டூ ரெடி. முதல் பார்ட்டில் எங்கெல்லாம் ‘லாக்’ ஆகியது என்பதை கவனமாக பரிசீலித்து, காஞ்சனாவில் அதையெல்லாம் ‘ரிலீஸ்’ செய்திருப்பதில்தான் லாரன்ஸின் வெற்றியே இருக்கிறது. எந்திரன் ரிலீஸின் போதே ஜிலோவென்றிருந்த உட்லண்ட்ஸில் காஞ்சனாவுக்கு திருவிழாக் கூட்டமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தமிழில் நிச்சயமாக ஹிட். தெலுங்கில் அதிநிச்சயமாக சூப்பர் டூப்பர் ஹிட்.

ஒரு பேய்ப்படத்தை பார்த்து தியேட்டரே வயிறு வலிக்க சிரித்துத் தீர்ப்பது அனேகமாக தமிழ் சினிமா வரலாற்றில் இதுதான் முதல் தடவையாக இருக்கக்கூடும். ஒரு அட்டகாச காமெடி. அடுத்தக் காட்சி மயிர்க்கூச்செறிய வைக்கும் திகில். இப்படியே மாற்றி, மாற்றி அழகான சரமாக திரைக்கதையை தொடுத்திருக்கிறார் லாரன்ஸ்.

கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் என்று எல்லாருமே இந்த உத்தி புரிந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கோவைசரளா. மனோரமாவின் உயரத்தை தாண்டுமளவுக்கு அபாரமான டைமிங் சென்ஸ் இவருக்கு.

லஷ்மிராய் மட்டும் தேவையில்லாமல் வருகிறார். ஃபேஸ் கொஞ்சம் சப்பை என்றாலும், பீஸ் நல்ல சாண்டல் வுட். அதிலும் இடுப்பு முட்டை பாலிஷ் போட்ட மொசைக் தரை மாதிரி பகட்டாக பளபளக்கிறது.

காஞ்சனாவும் இதர இரண்டு ஆவிகளும் லாரன்சுக்குள் புகுந்திருக்கிறார்கள் என்பதை காட்டும் அந்த டைனிங் டேபிள் காட்சி அநியாயத்துக்கு நீளம். ஆனாலும் நீளம் தெரியாதவகையில் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருப்பதில், தான் ‘ரியல் மாஸ்’ என்பதை நிரூபிக்கிறார் லாரன்ஸ். நடனக் காட்சியில் மாற்றுத் திறனாளிகளை புகுத்தியிருப்பது துருத்திக் கொண்டு தெரிகிறது என்றாலும் நல்ல முயற்சி.

முதல் பாதியின் ஒட்டுமொத்த சுவாரஸ்யத்தையும், இரண்டாம் பாதியில் தன் முதுகில் சுமக்கிறார் சரத்குமார், எம்.எல்.ஏ., இந்த பாத்திரத்தை தைரியமாக ஒத்துக்கொண்டு நடித்த எம்.எல்.ஏ.,வை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஓவர் ஆக்டிங் ஆகியிருக்கக் கூடிய அபாயம். நீண்டகால திரையுலக அனுபவம் வாய்ந்த சரத் ‘அண்டர்ப்ளே’ செய்து அசத்தியிருக்கிறார். நடிப்புச் சாதனையாளர் நடிகர் திலகம் நடிக்க விரும்பி, கடைசிவரை வாய்க்காமல் போன பாத்திரம், சரத்துக்கு கிடைத்தது எவ்வளவு பெரிய புண்ணியம்? சரத்தின் கேரியரில் குறிப்பிடத் தகுந்த மைல்கல் காஞ்சனா.

படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தாலும், கடைசி பகுதி ரத்த வெறியாட்டம் அச்சமூட்டுகிறது. படம் பார்த்த குழந்தைகளுக்கு நீண்டகால கொடுங்கனவுகளை வழங்கவல்லது. குறிப்பாக ரத்தச்சிவப்பான க்ளைமேக்ஸ் பாடல். இவ்வளவு வன்முறை வெறியாட்டத்தோடு ஒரு பாடலை சமீபத்தில் பார்த்ததாக நினைவில்லை.

திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை, பிரச்சார நெடியின்றி இயல்பாக ஒரு கமர்சியல் படத்தில் செருகியிருப்பதற்காகவே காஞ்சனாவை எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்கலாம்.

காஞ்சனா – கட்டாயமா பார்க்கணும்ணா...

21 ஜூலை, 2011

அசோகர் கல்வெட்டு


ங்கள் தெருவில் ஒரு பெந்தகொஸ்தே சர்ச் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஓர் ஐயர் வீடு. ஐயர் கொஞ்சம் வயதானவர். அவர் வீட்டுத் தோட்டம் சரியாகப் பராமரிக்கப் படாமல் எப்போதும் புல்லும் பூண்டும் மண்டிக்கிடக்கும். இன்று காலை நான் அலுவலகத்துக்கு வரும்போது, அந்தத் தோட்டத்தை நடுத்தர வயதுடைய ஒருவர் கடப்பாரை, மண்வெட்டிகொண்டு, ஒழுங்குசெய்துகொண்டு இருந்ததைப் பார்த்தேன். கொஞ்சம் கூன் விழுந்த அந்த நடுத்தர வயது மனிதரை எங்கோ பார்த்த தாக நினைவு. பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அவரைப் பார்த்து லேசாகப் புன்முறுவல் செய்தேன்.

 யாரோ ஒருவர் சம்பந்தம் இல்லாமல் நின்று சிரிப்பதைப் பார்த்த அந்த நபர், 'இன்னா சார்... உங்க வூட்ல ஏதாச்சும் வேலை இருக்கா?'' என்று திக்கித் திக்கிப் பேசினார். குரலைக் கேட்டதுமே அடையாளம் கண்டுகொண்டேன். அது அமல்ராஜேதான்!

அமல்ராஜ் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ரங்கிமலை ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. ஐந்தாவதுக்குப் பிறகு, தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தேன். பையன்களுக்கு 'ஏ’ செக்‌ஷன். பெண்களுக்கு 'பி’ செக்‌ஷன். 'ஏ’ செக்‌ஷனில் மட்டுமே 106 பேர். முதல் வரிசையில் நான் அமர்ந்து இருந்தேன். எனக்கு அருகில் கொஞ்சம் கூன் போட்ட ஒரு பையன் உட்கார்ந்து இருந்தான். அவனை அது வரை பார்த்தது இல்லை. அவன் மடிப்பாக்கம் பஞ்சாயத்துப் பள்ளியில் இருந்து வந்திருந்தான். பார்த்ததுமே தெரிந்துகொள்ளலாம், அவனுக்கு வயதுக்கு ஏற்ற போதுமான மூளை வளர்ச்சி கிடையாது என்பதை.

சீருடை என்கிற விஷயம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதே, மாணவர்களுக்குள் வேற்றுமை இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால், அதில் கூட நுண்ணிய அளவில் வேறுபாடு இருப்பதை அரசுப் பள்ளிகளில் தெரிந்துகொள்ளலாம். ஏழை மாணவர்கள் காட்டன் சட்டை போட்டு இருப்பார்கள். கொஞ்சம் நடுத்தர வர்க்கத்துப் பையன்கள் டெரிகாட்டன் அணிந்து இருப்பார்கள். வசதியான வீட்டுப் பையன்கள் பாலியஸ்டர் அல்லது சைனா சில்க் அணிந்து இருப்பார்கள்.

அமல்ராஜ், சைனா சில்க் சட்டை அணிந்து இருந்தான். நான் வெள்ளை டெரிகாட்டன் சட்டையும் பிரவுன் நிற டவுசரும் அணிந்து இருந்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போதே, அவனுக்கு 16 வயது இருக்கும். வகுப்பில் பேன்ட் அணிந்து வந்தவன் அவன் மட்டும்தான். அவனுடைய அப்பா, அப்போது ஊரில் பெரிய ஆள். நிலம் நீச்சு, பரம்பரைச் சொத்து என்று கொஞ்சம் தாராளமாகவே இருந்தது. அவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரத்தின் மூத்த மகன் நம்ம அமல்ராஜ்.

புதிய நோட்டையும் புத்தகங்களையும் முகர்ந்து பார்த்தபோது வந்த வாசனையும், முதல் நாள் வகுப்பு தந்த மகிழ்ச்சியும் இன்னமும் மனதில் ஓரமாக இருக்கிறது. சொர்ணாம்பிகை மிஸ்தான் கிளாஸ் டீச்சர். முதல் நாள் என்பதால், பாடம் எதுவும் எடுக்கவில்லை. டேபிளில் இருந்த நொச்சிக் குச்சிக்கும் வேலை இல்லை.

கதைக்கு இடையே சின்ன இடைச் செருகல்...


நொச்சி என்பது மரமாகவும் வளராமல், செடியாகவும் குறுகிப்போகாமல் வளரக்கூடிய ஒரு தாவரம். நொச்சிக் குச்சி வளைந்து கொடுக்கும் தன்மைகொண்ட, உறுதியான கொம்பு. எருமை மாடு ஓட்டு பவர்கள் நொச்சிக் கொம்பைப் பயன்படுத்து வதைக் கிராமங்களில் காணலாம். இந்தக் குச்சியைவைத்து நுங்கு சைக்கிள் தயாரித் தால், பலன் அமோகம். நொச்சியின் இலை நல்ல வாசனைகொண்டது. காய்ந்த நொச்சி இலைகளை நெருப்பில் எரித்தால் யாகங்களில் வருவதுபோல வெண்மையான புகை வரும். இந்தப் புகை, கொசுக்களையும் பூச்சிக்களையும் அழிக்கவல்லது.
அப்போது எல்லாம் வகுப்பறை டேபிளில் தினமும் ஒரு புதிய நொச்சிக் குச்சிதயாரித்து வைக்க வேண்டும். இதற்காக வாத்தியார் களின், டீச்சர்களின் அல்லக்கை மாணவர் யாராவது வகுப்புக்கு ஒருவர் இருப்பர். அந்த அல்லக்கை வேலையை எட்டாவது வரை நான் செய்து வந்தேன். எட்டா வதுக்குப் பிறகு, பொறுக்கிப் பசங்க பட்டியலில் நான் சேர்ந்துவிட்டதால், பத்மநாபனோ வேறு யாரோ டீச்சருக்கு அல்லக்கையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். நொச்சிக் குச்சிக்கு டிமாண்ட் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக, நுணா மரத்தின் கிளையை உடைத்து, பிரம்பு தயார் செய்துவைக்க வேண்டும். கறு நிற நுணாம்பழம் சுவையாக இருக்கும். ஆனால், வாசனை அவ்வளவு சிலாக்கியமாக இருக்காது!

ஓ.கே. கமிங் பேக் டு தி பாயின்ட்...

சொர்ணாம்பிகை டீச்சரின் வகுப்பு  முடிந்ததுமே ஒல்லித் தமிழய்யா வந்தார். ஒல்லித் தமிழய்யா ரொம்ப ஜாலியான ஆள். டைமிங் கமென்ட்கள் அடிப்பதில் கில்லாடி. கோபம் வந்துவிட்டால் மட்டும், நொச்சிக் குச்சி பிய்ந்துபோகும் அளவுக்கு விளாசிவிடுவார். குச்சியே பிய்ந்துவிடும் என்றால், அது பிய்யக் காரணமான முதுகின் கதி என்னவென்று சொல்ல வேண்டியது இல்லை.

அன்று வகுப்புக்கு வந்த ஐயா எல்லோரையும் உயிரெழுத்து, மெய் எழுத்து எழுதச் சொன்னார். உயிர் எழுத்துக்களை வரிசையாக எழுதிவிட்டேன். மெய்யெழுத்து எழுதும்போது, மட்டும் கொஞ்சம் திணறிப்போனேன். எல்லார் நோட்டுக்களையும் வரிசையாக நடந்தவாறே கவனித்து வந்த ஐயா, அமல்ராஜின் நோட்டைப் பார்த்து உலகையே வெறுத்து விட்டார். அவன் எழுதியதில் ஒன்றுகூட சத்தியமாகத் தமிழில் இல்லை. அது எந்த மொழி என்று ஐயாவால்கூடக் கண்டு பிடிக்க இயலவில்லை.

''என்னய்யா இது? அசோகர் கல் வெட்டை அப்படியே பார்க்குறது மாதிரி இருக்கே?'' என்றார்.

அமல்ராஜ் அமைதி காத்தான். அவனுக்கு லேசாகத் திக்குவாய். வேகமாகப் பேச முடியாது.

''ஏன்டா, கேட்டுக்கிட்டு இருக்கேன். உன்னால பதில்கூடச் சொல்ல முடியாதா... வாய்ல என்ன கொழுக்கட்டையா?'' என்றவாறே நொச்சிக் குச்சியை எடுத்தார். பக்கத்தில் இருந்த பையன், ''ஐயா, அவனுக்குச் சரியாப் பேச வராது'' என்றான்.

''சரி... உன்னோட பேரை நோட்டுல எழுது!'' என்றார், ஐயா கண்டிப்பான குரலில்.

அமல்ராஜ் எழுதியது மீண்டும் அசோகர் கல்வெட்டு மாதிரியே இருந்தது. அமல்ராஜால் அவன் பெயரைக்கூட எழுத முடியவில்லை என்பதுதான் சோகம்.

''நீயெல்லாம் எப்படிடா ஆறாம் கிளாஸ் வந்தே?'' என்று கோபமாகக் கேட்டவாறே நொச்சிக் குச்சியால் அடித்து விளாசிவிட்டார் ஐயா. முதுகிலும் உள்ளங்கையிலும் ஏராளமான அடிகளைப் பொறுமையாக வாங்கிய அமல்ராஜ், ஒரு சின்ன எதிர்ப்புக்கூடத் தெரிவிக்கவில்லை. சிலை மாதிரி உணர்ச்சிகளைக் காட்டாமல் மௌனமாக வந்து அமர்ந்தான். அவனது கையைப் பிடித்துப் பார்த்தேன். சிவந்து போய் ரத்தம் கட்டியிருந்தது. அமல்ராஜைப் பார்க்க ரொம்பப் பாவமாக இருந்தது.

மறு நாள் காலையில் ஹெட்மாஸ்டர் ரூம் அல்லோலகல்லோலப்பட்டது. அமல்ராஜின் அப்பா அவரது உறவினர்களோடு வந்து, மகன் அடிபட்டதற்காக நீதி கேட்டுக்கொண்டு இருந்தார். அவனால் அ, ஆ என்றுகூட எழுத முடியவில்லை என்று சொன்ன தமிழய்யாவின் நியாயம் சுத்தமாக எடுபடவில்லை. ''அதைச் சொல்லிக் கொடுக்கத்தான் உங்ககிட்டே அனுப்புறேன்!'' என்று அமல் ராஜின் அப்பா அழும்பு செய்தார். ''ஆறாம் கிளாஸ்ல எப்படிங்க அ, ஆ, இ, ஈ கத்துக் கொடுக்க முடியும்?'' என்று ஐயாவின் கேள்வியை அவர்கள் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நிராகரித்தார் கள். கடைசியாக, தமிழய்யா நொந்துபோய் மன்னிப்பு கேட்டதாக நினைவு.

அன்று முதல் அமல்ராஜை எந்த வாத்தியாரும், டீச்சரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவன் பாட்டுக்கு வகுப்புக்கு வருவான். கடைசி வரிசையில் மந்தமாக உட்காருவான். ஏதோ எழுதுவான். பரீட்சைகூட அசோகர் கல்வெட்டு மொழியில்தான் எழுதுவான். எப்போதுமே எல்லா பேப்பரிலுமே மார்க் 'ஜீரோ’தான். ஓரிரு டீச்சர்கள் பரிதாபப்பட்டு ஐந்தோ, பத்தோ ரிவிஷன் டெஸ்டில் தந்ததும் உண்டு.

மற்ற பையன்களைப்போல விளையாட்டிலும் அமல்ராஜுக்கு ஆர்வம் இல்லை. அவனுடைய சைனா சில்க் வெள்ளைச் சட்டையில் மட்டும் ஒருநாள்கூட நான் அழுக்கைக் கண்டது இல்லை. பாட்டா செருப்புதான் அணிவான். கையில் கோல்டு கலர் வாட்ச் கட்டி இருப்பான். கழுத்தில் தடிமனான செயின். விரல்களில் மோதிரம் என்று மிருதங்க வித்வான் கெட்-அப்பில் அசத்துவான்.

தமிழய்யா அவனது எழுத்தை 'அசோகர் கல்வெட்டு’ என்று விமர்சித்து இருந்ததால், அவனை மற்ற மாணவர்களும் 'அசோகர் கல்வெட்டு’ என்றே பட்டப் பெயர் வைத்து அழைத்தோம். அமல்ராஜ் என்று அட்டெண்டென்ஸில் அழைப்பதோடு சரி. தமிழய்யா அட்டெண்டன்ஸ் எடுத்தால் அமல்ராஜ் என்று சொல்ல வேண்டிய நேரத்தில்கூட 'அசோகர் கல்வெட்டு’ என்றுதான் குசும்பாகச் சொல்வார். அமல்ராஜால் உடனே 'உள்ளேன் ஐயா’ சொல்ல முடியாது. கையை மட்டும் தூக்கிக் காட்டுவான்.

ஆறாம் வகுப்பில் 105 பேர் தேர்ச்சி பெற்றார்கள். வெற்றி வாய்ப்பை இழந்த ஒரே மாணவன் அசோகர் கல்வெட்டு மட்டுமே. காரணம், சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

நான் ஏழாம் வகுப்புக்குப் போன பின்பு, அசோகர் கல்வெட்டைப் பார்ப்பது குறைந்துபோனது. எப்போதாவது பார்த்தால் சினேகமாகச் சிரிப்பதோடு சரி. அவனுக்கு மூடு இருந்தால், பதிலுக்குச் சிரிப்பான். இல்லை என்றால், உர்ர் என்று போய்விடுவான்.

பள்ளிக் கட்டடம் கட்ட நிதி திரட்டிய போது அமல்ராஜின் அப்பா பெருத்த தொகை ஒன்றை அளித்தார் என்று கேள்விப்பட்டேன். வகுப்புகள் மாற மாற, அசோகர் கல்வெட்டையே சுத்தமாக மறந்துவிட்டோம். ஓரிரண்டு ஆண்டுகளில் பள்ளியைவிட்டு, அவன் நின்றுவிட்டான் என்று நினைக்கிறேன்.

ஃப்ளாஷ்பேக் ஓவர்

ன்னோடு ஆறாம் வகுப்பு படித்த அதே அமல்ராஜ்தான் இன்று காலை ஐயர் வீட்டில் தோட்ட வேலை செய்துகொண்டு இருந்தவன். அழுக்கான லுங்கி அணிந்து இருந்தான். சட்டை இல்லை. வியர்வையில் உடல் நனைந்து இருந்தது. உழைப்பின் பலனால் ஆர்ம்ஸ் கொஞ்சம் வெயிட்டாக இருந்ததுபோலத் தெரிந்தா லும், கூன் போட்ட முதுகால் சுத்தமாக அவன் தோற்றத்துக்குக் கம்பீரம் இல்லை.

''நான்தான்டா குமாரு... உங்கூட ஆறாவது படிச்சேனே?''

அவனால் நினைவுபடுத்திப் பார்க்க இயலவில்லை. பொத்தாம் பொதுவாகச் சிரித்தான். அவனுக்கு வயது இப்போது 33 அல்லது 34 ஆக இருக்கலாம். ஆனால், 45 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் இருக்கிறான்.

'ஞாபகமில்ல!''

'பரவாயில்லை அமல். நல்லா இருக்கியா?'

'ம்ம்ம்... நல்லாத்தான் இருக்கேன். கட்டட வேலை பார்க்குறேன். வேலை இல்லாத நாள்ல இதுமாதிரி தோட்ட வேலையும் செய்வேன்.'

முன்பைவிட இப்போது திக்கு கொஞ்சம் பரவாயில்லை. தொடர்ச்சியாகப் புரியும்படி பேசுகிறான்.
வேறு எதுவும் பேசாமல், ''வர்றேன்டா!'' என்று சொல்லிவிட்டு, விடைபெற்றேன். அவனுக்கு இப்போதாவது அவன் பெயரை எழுதத் தெரியுமா என்று கேட்க ஆவல். கேட்காமலேயே கிளம்பிவிட்டேன்.

அவன் அப்பா இருந்த இருப்புக்கு இவன் இந்த நிலைக்கு வந்திருக்க வேண்டி யதே இல்லை. விசாரித்துப் பார்த்தால் ஏதோ ஒரு கதை நிச்சயம் இருக்கும். அவன் தம்பி, தங்கைகள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டால், அந்தக் கதை யின் அவுட்லைன் கிடைத்துவிடும்.

 அமல்ராஜ் மாதிரி பசங்களைப் பார்க் கும்போதும், அதே கனம்!இடுப்பிலும் கையிலும் குழந்தையோடு... கூடப் படித்த கவிதா மாதிரி பெண்களை எங்காவது ரேஷன் கடையிலோ, மருத்துவமனையிலோ காண நேர்ந்தால்... எனக்கு லேசாக மனசு கனக்கும்.

(நன்றி : ஆனந்த விகடன் 20.07.2011 இதழ்)