28 மே, 2012

அழவைத்த இறுதிக்காட்சி


தியேட்டரை விட்டு வெளியேறும்போது உணர்ச்சிகரமாக மூக்கை சிந்திக்கொண்டே, கசியும் கண்ணீரை மற்றவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று அவசரமாக கைக்குட்டையால் துடைத்துக்கொண்டோ பார்வையாளர்கள் வெளியேறுவது அத்திபூத்தாற்போல சினிமாவில் நடக்கும் அபூர்வ நிகழ்வு. அதிசயங்கள் ஆச்சர்யமானவை. ஆனாலும் அவற்றுக்கு பஞ்சமேதுமில்லை.

1997ல்மென் இன் ப்ளாக்வெளிவந்தபோது பெரிய வரவேற்பை பெற்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை. முன்பாக அது காமிக்ஸாக வந்து சக்கைப்போடு போட்ட ஃபேண்டஸி கதை. ரோட்டன் டொமாட்டோஸ் போன்ற கறார் விமர்சனத் தளங்கள் தூக்கிவைத்து கொண்டாடியதில் கொட்டோ கொட்டுவென்று வசூல் மழை பேய்மழையாய் கொட்டி தீர்த்தது. இண்டிபெண்டன்ஸ் டே திரைப்படம் வெளியானபோது பலரையும் கவர்ந்த வில் ஸ்மித், மென் இன் ப்ளாக் மூலம் ஓவர்நைட் சூப்பர் ஸ்டார் ஆனார்.

கதை ரொம்ப சிம்பிள். மென் இன் ப்ளாக் என்பது அமெரிக்க அரசின் ஓர் ரகசிய அமைப்பு. பூமியில் இருக்கும் வேற்றுக்கிரகவாசிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும், கண்காணிக்கும் பொறுப்பு இவ்வமைப்புக்கு இருக்கிறது. இவ்வமைப்பில் பணியாற்றும் ஏஜெண்ட் ஜே (வில் ஸ்மித்), ஏஜெண்ட் கே (டாம்மி லீ ஜோன்ஸ்) இவர்களது சாகஸங்களும், வினோத அனுபவங்களும் தான் கதை. ஏஜெண்ட் ஜே லொடலொடவென வம்படியாக பேசிக்கொண்டேயிருக்கும் பாத்திரம். ஏஜெண்ட் கே அவருக்கு நேரெதிர். வயது தந்த அனுபவங்களின் காரணமாக வேலையில் சின்சியராக, கறாராக, உம்மணாம் மூஞ்சியாக இருப்பவர். நடிகர்கள், கதை, திரைக்கதை மற்ற கந்தாயங்களைவிட கிராஃபிக்ஸ் துல்லியமாக இருப்பது இப்படவரிசைக்கு மிக அவசியம்.

முதல் படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பையடுத்து 2002ல் இரண்டாம் பகுதி வெளிவந்தது. வசூலில் சோடை போகாவிட்டாலும், விமர்சகர்கள் டவுசரை கயட்டி விட்டார்கள். முந்தைய பாகத்தை கொண்டாடிய ரோட்டன் டொமாட்டோஸ் காறித் துப்பிவிட்டது.  இதனால் எல்லாம் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனான வில்ஸ்மித்துக்கு மட்டும் இந்த கான்செப்டில் நல்ல நம்பிக்கை இருந்தது. மூன்றாவது பாகத்தை எடுத்து, பழைய வரவேற்பை பெற்றே தீரவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.

போனவாரம் மூன்றாம் பாகம் வெளிவந்துவிட்டது. 1969ல் ஏஜெண்ட் கே, கையை வெட்டி, கைது செய்து நிலவில் சிறைவைத்திருக்கும் போரிஸ் என்கிற கிரிமினல் முப்பதாண்டுகளுக்கும் மேலான கடுஞ்சிறையில் இருந்து தப்பிக்கிறான். தப்புவதோடு இல்லாமல், தான் கைதான 1969க்கு மீண்டும் கடந்தகாலத்தில் பயணித்து, தனது கையை வெட்டுவதற்கு முன்பாகவே ஏஜெண்ட் கே-யை போட்டுத் தள்ள திட்டமிடுகிறான். விஷயத்தை கேள்விப்பட்டு தானும் அதே காலத்துக்குப் பயணித்து ஜே-வை, கே காப்பாற்றுவதுதான் கதை. ஃபேண்டஸிக்கே காதுகுத்தும் மெகா ஃபேண்டஸி. நிலாவுக்கு அப்போலோ விண்கலத்தில் நீல்ஆர்ம்ஸ்ட்ராங் கும்பல் பயணிக்கும் தேதியில் கதை நடக்கிறது. அந்த குழு பயணிக்கும் விண்கப்பலில் ஒரு இன்ஸ்ட்ரூமெண்டை செருகி ஜே-வும், கே-வும் உலகை காப்பாற்றுகிறார்கள். இதன் மூலமாக வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு படையெடுப்பதை தடுக்கும் ஒரு சேஃப்டி ஷீல்டை (கோல்கேட் நம் பற்களை பாதுகாக்க ஏற்படுத்தியிருக்கும் பாதுகாப்பு வளையம் மாதிரி) நிறுவுகிறார்கள். இதைத் தடுத்து, கே-வை போட்டுத் தள்ள நினைக்கும் போரிஸையும் போட்டுத் தாக்குகிறார்கள். கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் சிறு கரெக்‌ஷன் செய்துவிட்டு வெற்றிகரமாக நிகழ்காலத்துக்கு திரும்புகிறார் ஜே. டென்ஷனான க்ளைமேக்ஸ். உலகை காப்பதை மட்டுமே தொழிலாக கொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத்தின் தியாகம். கடைசியாக ‘நாம ஜெயிச்சிட்டோம் என்று ஆனந்தக் கூத்தாடும் அதே வழக்கமான ஹாலிவுட் க்ளைமேக்ஸ். கிட்டத்தட்ட டிபிக்கல் ஹாலிவுட் படமாக மாறிவிட்ட இதை க்ளைமேக்ஸுக்கு பிந்தைய ஒரு சிறிய ட்விஸ்ட் க்ளைமேக்ஸால் ஒட்டுமொத்தமாக பார்வையாளர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை மாற்றியமைத்திருக்கிறார்கள். அந்த ஒன்றரை நிமிட காட்சியால் மூன்றாவது பாகம் மட்டுமின்றி, மென் இன் ப்ளாக் சீரியஸுக்கே பெரிய மரியாதை ஏற்பட்டிருக்கிறது. காமெடி, ஃபேண்டஸி, காதுகுத்து காட்சிகள் என்று ஜூகல்பந்தியாக கும்மியடிக்கும் மென் இன் ப்ளாக்குக்கு புதுவண்ணத்தை வாரியிறைத்திருக்கிறது இந்த செண்டிமெண்ட் காட்சி. ஜே-வுக்கும், கே-வுக்கும் இடையிலிருக்கும் உறவு வெறுமனே பணி சார்ந்ததில்லை என்கிற ரகசியத்தை போட்டுடைக்கிறது. “உன் அப்பா ஒரு ஹீரோன்னு மட்டும் நினைவு வெச்சிக்க என்கிற வசனம் யாரைத்தான் சிலிர்க்க வைக்காது. திரையில் பாருங்கள் நீங்களும் நிச்சயம் சிலிர்ப்பீர்கள். நம்மூரில் சேரன் எடுத்த ‘தவமாய் தவமிருந்து ஏற்படுத்திய உணர்வுகளை வெறும் ஒன்றரை நிமிடங்களில் பன்மடங்காய் பெருக்கிக் காட்டுகிறது இப்படம்.

மூன்றாவது பாகம் முப்பரிமாணத்தில் வந்திருப்பதும் பெரிய ப்ளஸ். வில்ஸ்மித் 1969க்குப் பயணிக்கும் காட்சியை விஷூவல் ட்ரீட் என்றெல்லாம் வெறுமனே பாராட்டிவிட முடியாது. இக்காட்சியை ஸ்க்ரிப்ட் ரைட்டர் எப்படி எழுதியிருப்பார் என்று கிராபிக்ஸ் செய்துகூட கற்பனை செய்துவிடமுடியவில்லை. ‘ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுத்திருக்கிறோம் என்று நம்மூரில் யாராவது சொன்னால், அதை ‘ஜோக்காகதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னும் 1992ல் வெளியான ‘ஜட்ஜ்மெண்ட் டே தரத்துக்கு கூட நாம் தொழில்நுட்பத்திலோ, கதை சொல்லும் உத்தியிலோ வளரவில்லை என்பதுதான் யதார்த்தம்.

“நம்மூருக்கு இதெல்லாம் தேவையா, நம் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக படம்பிடித்துக் காட்டவே எமக்கு தாவூ தீருகிறதே? என்று நம் படைப்பாளிகள் கேட்கலாம். ஆனால் எம்.ஐபி.-3 போன்ற பிரும்மாண்ட ஃபேண்டஸி திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகும் அதே நாளில், தமிழ்நாட்டின் குக்கிராமமான கிடாரம் கொண்டானைச் சேர்ந்த முருகேசனும் க்யூப் ப்ரொஜக்‌ஷனில், டி.டி.எஸ். ஒலியமைப்பில் தன் தாய்மொழியான தமிழிலேயே பார்த்துவிடுகிறான் என்கிற சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘எந்திரன் மாதிரி முயற்சிகளை அவன் வரவேற்கிறான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சினிமா நம்மூரில் சர்வநிச்சயமாக வெறும் கலை மட்டும் அல்ல. தயாரிப்பவர்களுக்கு தொழில். பார்வையாளனுக்கு பொழுதுபோக்கு. இதனைப் புரிந்துகொண்டு தமது சிந்தனைத் தளத்தை (ஹாலிவுட்டையோ, கொரியன் படங்களையோ பிட் அடிக்காமல்) விரிவாக்கிக் கொள்வதே நம்மூர் படைப்பாளிகளை வரலாற்றில் இடம்பெற வைக்கும்.

இரண்டாம் பாகத்துக்கு ஏற்பட்ட களங்கத்தை மூன்றாம் பாகத்தில் போக்கிவிட்ட திருப்தி வில்ஸ்மித் க்ரூப்புக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. ரோட்டன் டொமாட்டோஸும் இரண்டாம் பாகம் அளவுக்கு மோசமில்லை, முதல் பாகம் அளவுக்கு சூப்பருமில்லை என்று ரெண்டுங்கெட்டான்தனமாக படத்தின் வெற்றியை ஒப்புக்கொண்டிருக்கிறது. பார்வையாளர்களைப் பொறுத்தவரை எம்.ஐ.பி. 3-க்கு பெரிய வரவேற்பு. குறிப்பாக ஆசியாவில் கன்னாபின்னா ஹிட். நான்காவது பாகம் எடுத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று சொல்லாமல், அதுகுறித்து பரிசீலிப்பேன் என்று ‘ஜோக் அடிக்கிறார் வில்ஸ்மித். இயக்குனருக்கு வில்ஸ்மித்தை விட நகைச்சுவையுணர்ச்சி அதிகம். “ஓக்கே நோ ப்ராப்ளம். நான்காவது பாகத்தில் நிஜமாகவே வில்ஸ்மித் இல்லை. அவரது மகன் ஜேடன் ஸ்மித்தான் நடிக்கப் போகிறார் என்று பதிலுக்கு ஜோக் அடிக்கிறார். இதெல்லாம் ‘ஜோக்காக இல்லாவிட்டாலும் பெரிய பிரச்சினை இல்லை. தன்னுடைய வாய்ப்பை தனது மகன்தானே தட்டிப் பறிக்கப் போகிறான் என்று வில்ஸ்மித் திருப்தி அடைந்துக் கொள்வார். மகனிடம் தோற்பதைவிட சந்தோஷமான விஷயம் ஒரு தகப்பனுக்கு வேறென்ன இருந்துவிடப் போகிறது?

26 மே, 2012

டீ-யா வேலை பார்க்கணும் பாஸ்!

உழைக்கும் மக்களின் பிரியத்துக்குரிய உற்சாக பானமான ‘டீ’
அடுத்த ஆண்டு முதல் தேசிய பானமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது

பிப்ரவரி 26, 1858ல் மணிராம் திவான், பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்டார். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் பலமாக காலூன்ற ஆரம்பகாலங்களில் செயல்பட்டவர் அவர். ஆயினும் பிற்பாடு முதல் இந்திய சுதந்திரப்போரின் எழுச்சியை அஸ்ஸாமில் பரப்பியவர் என்கிற அடிப்படையில் அவரது உயிர் பறிக்கப்பட்டது.

அஸ்ஸாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் எழுபத்தைந்தாம் ஆண்டு விழா கடந்த மாதம் நடந்தது. விழாவில் கலந்துக் கொண்டு பேசிய திட்டக்குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், டீ இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்கப்படும்” என்று அறிவித்து பலமான கைத்தட்டலைப் பெற்றார். நம்மூர் டீக்கடை நாயர்களும் இந்த அறிவிப்பால் குஷியாகியிருக்கிறார்கள்.

முதல் பத்திக்கும், இரண்டாம் பத்திக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றால் டீ இந்தியாவின் தேசியபானமாக அறிவிக்கப்படப் போவது மணிராம் திவானின் 212வது பிறந்தநாள் அன்றுதான். அஸ்ஸாமில் சிங்போ எனப்படும் பழங்குடியினர் உண்டு. இவர்கள் தேயிலைகளை பயிரிட்டு பயன்படுத்துவதை பிரிட்டிஷாருக்கு முதன்முதலாக தெரிவித்தவர் மணிராம். இதையடுத்து கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் அஸ்ஸாமில் முகாமிட்டு, தேயிலை எஸ்டேட்களை நிறைய உருவாக்கினார்கள். அந்தக் காலக்கட்டத்தில் இங்கே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சீன நாட்டு தேயிலைக்கு சுத்தமாக மவுசு போனது (இந்தியத் தேயிலையும், சீனத் தேயிலையும் வகைரீதியாக வேறுபட்டவை). அதுவரை ‘டீ’ என்பது ஆடம்பரபானமாக இருந்து வந்தது. இந்தியாவில் தேயிலை எஸ்டேட்கள் பெருக, பெருக அடித்தட்டு மக்களும் தங்களுடைய அத்தியாவசியத் தேவையாக ‘டீ’யை ஏற்றுக் கொண்டார்கள்.

பிரிட்டிஷாரின் அஸ்ஸாம் டீ கம்பெனியின் திவானாக மணிராம் நியமிக்கப்பட்டார். பிற்பாடு சுதேசிக் கொள்கைகளில் ஆர்வம் கொண்ட அவர் பணியிலிருந்து விலகி, சொந்தமாக டீ எஸ்டேட் உருவாக்கினார். முதன்முதலாக டீ எஸ்டேட் உருவாக்கிய இந்தியர் என்கிற பெருமையை பெற்றார். இந்த தொழில் மட்டுமன்றி இரும்பு, நிலக்கரி, தங்கம், செராமிக், ஐவரி, கைத்தறி, படகு தயாரித்தல், கட்டுமானம், யானை வர்த்தகம் என்று வகைதொகையில்லாமல் தொழில்கள் செய்து, கொடிகட்டிப் பறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரர், பன்தொழில் வித்தகர் என்றெல்லாம் ஏராளமான  சிறப்புகள் இருந்தாலும் ‘டீ’ தான் தீயாய் அவரது புகழை இன்றும் பரப்பி வருகிறது. இன்று நாம் குடிக்கும் ஒவ்வொரு கப் ‘டீ’லும் மணிராம் சர்வநிச்சயமாக கலந்திருக்கிறார். 
 ‘டீ’யின் ரிஷிமூலம் எதுவென்று சரியாக வரலாற்றில் பதியப்படவில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சீனர்கள் கப், கப்பாக குடித்துத் தள்ளினார்கள் என்பதில் இருந்துதான் ஓரளவுக்கு சீரான வரிசையில் தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலேயே கின் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சீனாவில் ‘டீ’ பிரபலமான பானமாக இருந்ததாகவும் சொல்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தேயிலைத் தொழிலில் சீனர்கள் உலகெங்கும் கொடிகட்டிப் பறந்தார்கள். இந்தியாவில் இத்தொழில் பிரபலமாகும்வரை சீனர்களை இதில் அடித்துக்கொள்ள ஆளே இல்லாத நிலை இருந்தது.

பண்டைய சீனாவில் ‘டீ’யை ‘ச்சா’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த பெயர் பாரசீகத்துக்குப் போனபோது ‘ச்சாய்’ என்று திரிந்திருக்கிறது. இப்போதும் நம்மூரில் ‘டீ’யை ‘ச்சாயா’ என்று பாதிபேர் விளிப்பது குறிப்பிடத்தக்கது. தைவான் பக்கமாக இருந்தவர்கள் ‘டே’ என்று இதை அழைக்க, அவர்களோடு வணிகத் தொடர்பில் இருந்த ஐரோப்பியர்களால் ‘டீ’ என்று நாமகரணம் சூட்டப்பட்டது.

தயார் செய்யப்படும் பானங்களில் இன்று உலகளவில் ‘டீ’ தான் லீடர். காபி, சாக்லேட், குளிர்பானங்கள், மதுபானங்கள் என்று மீதியிருக்கும் எல்லா பானங்களையும் அருந்துபவர்கள் நூற்றுக்கு ஐம்பது பேர் அருந்துகிறார்கள் என்றால், மீதி ஐம்பது பேர் அருந்துவது டீ.

உலகிலேயே ‘டீ’ அதிகம் போடப்படுவது இந்தியாவில்தான். சராசரியாக ஒவ்வொரு இந்தியரும் முக்கால் கிலோ டீத்தூளை முழுங்குவதாக ஒரு கணக்கெடுப்பு இருக்கிறது. 750 கிராம் x 122 கோடி-யென்று கால்குலேட்டரில் கணக்கு போட்டு பார்த்தீர்களேயானால், ஒரு வருடத்துக்கு நம்முடைய டீத்தூள் தேவை என்னவென்று துல்லியமாக தெரிந்துக் கொள்ளலாம். துருக்கியர்கள் நம்மைவிட மோசம். வருடத்துக்கு ஆளொன்றுக்கு இரண்டரை கிலோ டீத்தூள் தேவைப்படுகிறதாம். ஆனால் மக்கள் தொகை நம்மை ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை என்பதால், இவ்விஷயத்தில் நாம் தான் ‘டீ’ம் லீடர். உற்பத்தி அடிப்படையில் சீனா, இந்தியா, கென்யா, இலங்கை, துருக்கி ஆகியவை டாப் ஃபைவ் நாடுகள். 
 டுத்த ஆண்டுதான் ‘தேசிய பான’ முடிசூட்டு விழா நடக்கப் போகிறது என்றாலும், இப்போதே நாட்டில் ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது.

அமுலின் தாய்மாநிலமான குஜராத்தில் இருந்து ‘பால்தான் இந்தியாவின் தேசியபானம்’ என்று அறிவிக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்படுகிறது. குஜராத் கூட்டுறவு பால் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு இதை வலியுறுத்துகிறது. “எல்லா நாடுகளிலுமே, எல்லா வயதினருக்கும் பொதுவான பானமாக பால் தான் இருக்கிறது. இத்தனைக்கும் வெண்மைப் புரட்சியை சாதித்துக் காட்டியவர்கள் நாம். இப்போது இந்த தேசிய பானம் என்கிற அறிவிப்பே தேவையற்றது. இந்தியாவின் தேசிய உணவு என்று அரிசி சோற்றையோ, சப்பாத்தியையோ அறிவித்திருக்கிறார்களா என்ன?” என்று பொங்கியெழுகிறார் அந்த கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனரான ஆர்.எஸ்.சோதி.

பஞ்சாப்பின் ரெஸ்டாரண்டுகளோ ‘லஸ்ஸிதான் நம் நாட்டின் தேசிய பானம்’ என்று களமிறங்கியிருக்கிறார்கள். அதற்காக அரசினை கவருவதற்காக ‘லஸ்ஸி திருவிழா’வெல்லாம் நடத்தி ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் நம்மூர் டாஸ்மாக் குடிமக்கள்தான் களமிறங்கவில்லை.

டயர்டா இருக்கு பாஸ். ஒரு டீ அடிப்போம் வர்றீங்களா?


(நன்றி : புதிய தலைமுறை)

25 மே, 2012

மூங்கில் இலை காடுகளே

மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்

இரவு பத்து மணிக்கு மேலே எஃப்.எம். கேட்பவர்கள் நிச்சயம் இந்தப் பாடலை கேட்டிருப்பீர்கள். ‘நல்ல பாட்டாச்சே, ஆனா என்ன படம்னு தெரியலை’ என்றும் நினைத்திருப்பீர்கள். முப்பது வயதை கடந்து காதோர நரை ஆரம்பித்திருப்பவர்களுக்கு இந்தப் படமும் தெரியும். இந்தப் பாடலுக்கு நடித்த நடிகரையும் தெரியும்.

எண்பதுகளில் வந்த லோ-பட்ஜெட் படங்களில், அதுவும் விசு படமாக இருந்தால் நிச்சயமாக திலீப் இருப்பார். காதலனாகவும், பணக்கார இளைஞனாகவும், பாந்தமான புருஷனாகவும்.. பெரிய வெரைட்டி ஏதுமில்லாத பாத்திரங்களில் நடித்தவர். சிவந்த நிறம். பிரவுன் கண்கள். மீசையை அழகாக திருத்தியிருப்பார். இவரது ஹேர்ஸ்டைல் சிறப்பானது. உடைகள் நாகரிகமாக இருக்கும்.

மாப்பிள்ளையில் சூப்பர் ஸ்டாருக்கு மச்சானாக காமெடியில் கலக்கினார். அதற்குப் பிறகு திடீரென்று காணோம். ஏதோ பிஸினஸ் செய்துக் கொண்டிருந்தார் என்று அவ்வப்போது சினிமா துணுக்குகளில் வாசித்திருக்கிறேன். கேஸ் ஏஜென்ஸி எடுத்திருப்பதாகவும், அதில் சினிமாவை விட அதிகம் சம்பாதிப்பதாகவும் செய்திகள் வரும்.

இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னால் தினகரன் வசந்தத்தில் இவரது பேட்டி வந்திருந்தது. படத்தைப் பார்த்ததுமே ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு பெருத்துப் போய் இருந்தார். அழகான அவரது ஹேர்ஸ்டைல் மிஸ்ஸிங். புருவம் கூட நரைத்திருந்தது. வடநாட்டு முதியவர் மாதிரியான தோற்றத்தில் இருந்தார். திமிர்த்தனமாக எதிர்த்துப் பேசும் பொண்டாட்டியை பளாரென்று அறையும் அந்த கோபக்கார இளைஞனை காணவே காணோம்.

உடல் உபாதையால் பெரும் சிரமத்தில் இருப்பதாக அப்பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பதும் அவர் பேச்சில் தெரிந்தது. மீண்டும் திரையுலகில் நுழைந்து செகண்ட் இன்னிங்ஸ் ஆட தயாராக இருப்பதாக நம்பிக்கையோடு சொல்லியிருந்தார்.

இன்று அதே தினகரனின் இணையத்தளத்தில் அவரது மரணச் செய்தியை வாசித்தபோது இனம்புரியாத துன்பமும், பீதியும் ஏற்படுகிறது. நம் கண்ணுக்கெதிரே மின்னி, மறைந்த நட்சத்திரங்களின் வாழ்வை ஏதோ ஓர் ஆர்வத்தில் தெரிந்து வைத்துக் கொள்கிறோம். அவர்களது ஏற்றம் நமக்கு மகிழ்ச்சியை அளித்ததோ இல்லையோ, இறக்கம் வருத்தத்தை நிச்சயம் தருகிறது. மரணம் கடுமையான துன்பத்தை ஏற்படுத்துகிறது. மரணம் குறித்த நியாயமான அச்சம், இதுபோன்ற மரணங்களை கேள்விப்படும்போது பன்மடங்கு அதிகரிக்கிறது.

முன்பாக பாண்டியன், முரளி போன்றவர்களின் மரணம் இம்மாதிரியான பீதியை கடுமையாக ஏற்படுத்தியது. போனவாரம் கூட யதேச்சையாக ஏதோ ஒரு டீக்கடையில் ‘துள்ளி எழுந்தது காற்று, சின்ன குயிலிசை கேட்டு’ கேட்டபோது, என்னையறியாமலேயே சிலதுளி கண்ணீர் சிந்தினேன். நாம் பார்த்து, பழகியிராதவர்களுக்கு அழுகிறோமென்றால் அவர்கள் நம்முடைய சிறுவயது நினைவடுக்குகளில் புதைந்துப் போனவர்கள் என்பதே காரணமாக இருக்கக்கூடும். நம்முடைய அழுகை அவர்களுக்காகவா அல்லது தொலைந்துப்போன நம் பால்யத்துக்காகவா என்பதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை.

அடுத்தமுறை எங்காவது ‘மூங்கில் இலை காடுகளே’ கேட்கும்போதும் இதேபோல என் கண்களில் ஈரம் கசியும் என்பது நிச்சயம்.

24 மே, 2012

பெட்ரோல், ஐ.பி.எல்

பெட்ரோல் விலை உயர்வு ஏன் என்று இன்றோ, நாளையோ மன்மோகன்சிங்கோ, ப.சிதம்பரமோ அல்லது யாரோ விளக்கம் அளிக்கப் போகிறார்கள். மம்தா, ஜெயலலிதா வழக்கம்போல எதிர்த்திருப்பார்கள். வைகோவின் அறச்சீற்ற எதிர்ப்பு நாளிதழ்களின் ஆறாம் பக்கத்தில் பெட்டிச் செய்தியாக வரும். எதிர்க்கிறாரா இல்லையா என்கிற குழப்பம் கலைஞரின் அறிக்கையில் இருக்கும். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பத்து பேர் கூடும் மாபெரும் அறப் போராட்டத்தை பனகல் மாளிகை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தும். பூப்புனித நீராட்டு விழா மாதிரி இதெல்லாம் வழக்கமாக நடக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள்.

இருபத்து மூன்றாம் புலிகேசி பரம்பரையில் வந்த நமக்கு இந்த சடங்குகளில் ஒன்றும் பெரிய பிரச்சினையில்லை. அடுத்த முறை பெட்ரோல் போடும்போது மட்டும் இதற்கு காரணமானவர்களின் தாயின் கற்பை பழித்துவிட்டு, பிற்பாடு மறந்துபோய்விடுவோம். ஆனால் பெட்ரோல் விலை உயர்வு என்று கேள்விப்பட்டதுமே, ஒட்டுமொத்தமாக ஆப்கானிஸ்தானுக்கு படையெடுத்த அமெரிக்கத் துருப்புகள் மாதிரி பெட்ரோல் பங்குக்கு படையெடுத்து பெட்ரோல் போடுபவர்களின் தாலியறுத்து, மொத்த பெட்ரோலையும் தீர்த்து ‘பெட்ரோல்’ ஸ்டாக் இல்லை என்று பங்க் ஓனரை போர்டு மாட்டவைத்து, பங்குகளின் வாசலில் நீண்ட க்யூவில் கசகசவென நின்று, சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கோயிந்தசாமிகளை பிடித்து குப்புறப் படுக்கவைத்து நாலு சாத்து சாத்தலாமா என்றுதான் ஆத்திரம் வருகிறது.
இரவு 12.01க்கு பெட்ரோல் ரூ.7.50 ஏறுகிறது என்றால், பதினோரு மணிக்கு போய் பெட்ரோல் போட்டு பணத்தைச் சேமித்து பங்களாவா கட்டிதொலைக்கப் போகிறார்கள். ஏழரை ரூபாய்க்கு ஒரு கிங்ஸும், சாந்தி பாக்கும் கூட கிடைக்காது என்று தெரியாத அறிவிலிகளா நம் மக்கள். மிஞ்சிப்போனால் ஒரு டூவீலரை கொண்டுபோய் மூன்று லிட்டர் போடுவார்களா. இருபத்து இரண்டு ரூபாய் பைசா மிச்சப்படுத்தி எலெக்‌ஷனில் நின்று வாக்காளர்களுக்கா துட்டு கொடுக்கப் போகிறார்கள். நம் ஜனங்களின் மிடில் க்ளாஸ் அற்பத்தனத்துக்கு ஓர் அளவேயில்லையா?

நம் சமகாலத்தில் நாம் பார்க்கும் மிகப்பெரிய அநியாயம் மத்திய அரசு பெட்ரோலிய நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து அடிக்கும் கொள்ளையென்றால், அதற்கு நம் மக்கள் கொடுக்கும் உடனடி ரியாக்‌ஷன்தான் மிகப்பெரும் அபத்தம்.


போட்டோ உதவி : தோழர் கவாஸ்கர்


*************************

ஐ.பி.எல். திட்டமிட்டு படமாக்கப்படும் ஒன்றரை மாத மெகாசீரியல் என்கிற மனோபாவத்துக்கு எப்போதோ வந்துவிட்டாலும், வாய் நமநமவெனும் போதெல்லாம் மாணிக்சந்த் போடுவதைப் போல ஏப்ரல்-மே மாதங்களில் ஐ.பி.எல்.லுக்கு அடிக்ட் ஆகிவிடுவதை தவிர்க்க முடியவில்லை. இறுதிப் போட்டியும், அதற்கு முந்தையப் போட்டியும் சென்னையில் நடக்கிறது என்பதால் மற்ற அணிகள் போட்டி போட்டு கஷ்டப்பட்டு தோற்று, சென்னையை ஃபைனலுக்கு அனுப்புவதில் மும்முரமாக இருந்ததை காணும்போது, ‘அடடா.. இதுவல்லவா விளையாட்டு?’ என்று தோன்றுகிறது.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், சில சமயங்களில் மைதானத்தை தாண்டிய ஓரிரு சுவாரஸ்யங்கள் ஐ.பி.எல்.லை மேலும் சுவாரஸ்யப்படுத்துவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மும்பை வீரர் போலார்ட் (மேற்கிந்தியத் தீவுகள்) சென்னை வீரர் பிராவோவுக்கு (இவரும் மேற்கிந்தியத் தீவுகள்தான்) முந்தாநாள் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாராம். “மூட்டை கட்டிக்கொண்டு ரெடியாக இரு. நாளைய போட்டியில் சென்னை தோற்றதும் நீ விமானம் பிடித்து நம்மூருக்கு செல்லவேண்டும்”. பிராவோவுக்கு சமர்த்து போதாது. பதிலுக்கு குறுஞ்செய்தி அனுப்பவில்லை.

மாறாக நேற்றையப் போட்டியில் முக்கியமான கட்டத்தில் போலார்டின் விக்கெட்டை பிராவோ வீழ்த்தினார். தலையை தொங்கப் போட்டுக்கொண்டு பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த போலார்டிடம் பிராவோ நேரடியாக சொல்கிறார். “தம்பி, நேரா போய் மூட்டை முடிச்சுகளை ரெடி பண்ணு. இன்னிக்கு நைட்டே கூட நம்மூருக்கு ஃப்ளைட் பறக்குதாம்”. பீமன் சைஸில் இருக்கும் போலார்ட், அவருக்கு எதிரில் தத்தணூண்டாக தெரியும் பிராவோவை உடனடியாக ஒரு அப்பு அப்பியிருந்தால் இன்னும் ஆட்டம் களைகட்டியிருக்கும். துரதிருஷ்டவசமாக போலார்ட் ஹர்பஜன்சிங்கும் அல்ல. பிராவோ, வாயை மட்டுமே வைத்து கிரிக்கெட்டில் காலம் தள்ளும் ஸ்ரீசாந்துமல்ல.

22 மே, 2012

+2


+2 ரிசல்ட் வெளியாகும் போதெல்லாம் இந்தப் பரபரப்பை நீங்களும் அனுபவித்திருக்கலாம். அலுவலகத்தில் கணினி இருக்கும் எல்லோரது மேஜையும் காலையிலேயே பரபரப்பாக இருக்கும். அலுவலக உதவியாளர்களில் ஆரம்பித்து மேலதிகாரிகள் வரையும் கூட “என் மச்சினிச்சி எழுதியிருக்கா, இந்தாங்க நம்பர், பாஸ் பண்ணிட்டிருப்பா.. ஆனா மார்க் என்னன்னு பாருங்க” என்பார்கள். நான் +2 தேர்வெழுதியபோது இணையம் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. மாலைமுரசு அல்லது மாலைமலர் சிறப்பு பதிவைப் பார்த்துதான் நம்பர் வந்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

இன்றைய சூழலில் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லாருமே தேறிவிடுகிறார்கள். அப்போதெல்லாம் பத்துக்கு மூன்று பேர் அல்லது நாலு பேர் வெற்றிவாய்ப்பை இழந்துவிடுவார்கள். மறுநாள் காலை தினத்தந்தி பார்த்தால் ”மாணவன் தற்கொலை - பெற்றோர் கதறல்!” ரீதியிலான செய்திகளை நிறைய பார்க்கமுடியும்.

பலவருடங்களுக்கு முன்பு நடந்தது என்றாலும் அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. காலை ஐந்தரை மணிக்கெல்லாம் அப்பா என்னை எழுப்புகிறார். அவர் நாலு, நாலரைக்கெல்லாம் எழுந்து கார்த்திகேயபுரம் பால் பூத்துக்கு சென்று பால் வாங்கிவருவது வழக்கம். நானோ ஏழரை, எட்டு மணிக்கு எழுந்து “அம்மா காப்பி ரெடியா?” என்று கேட்பேன்.

“சீக்கிரம் எழுந்திருடா. இன்னைக்கு உனக்கு ரிசல்ட் வருது!”

“ரிசல்ட் பதினொரு மணிக்கு தாம்பா வரும். கொஞ்ச நேரம் தூங்குறேனே?”

“ச்சீ.. இன்னைக்கு கூட இவனுக்கு தூக்கமா? புள்ளைய பெத்துக்கறதுக்கு பதிலா ஒரு தொல்லைய பெத்து வெச்சுருக்கேன்! எழுந்துர்றா.. கோயிலுக்கு போவணும்!”

வேண்டாவெறுப்பாக எழுந்தேன். குளித்து முடித்து அப்பாவின் சொல்படி பட்டை அடித்துக்கொண்டு தாத்தா - பாட்டி படம் முன்னால் நின்று பிரார்த்தனை செய்தேன். சாமி படங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. அப்போதே எனக்குள் கடவுள் மறுப்பு சிந்தனை இருந்திருக்கிறது என்பதை நினைத்தால் இப்போது பெருமையாக இருக்கிறது. கல்யாண கந்தசாமி கோயிலுக்கு சைக்கிளில் உட்காரவைத்து அழைத்துப் போனார் அப்பா.

“கடகராசி, ஆயில்ய நட்சத்திரம். பேரு குமரன். இன்னைக்கு ரிசல்ட் வருது. பாஸ் பண்ணனும்னு சொல்லி ஒரு அர்ச்சனை பண்ணுங்கோ சாமி!” அர்ச்சனைத் தட்டில் ஒரு இருபது ரூபாய்.

நான் ஒழுங்காக எழுதி இருந்தால் பாஸ் செய்யப்போகிறேன். இதற்கு போய் கடவுளுக்கு லஞ்சம் கொடுக்க நினைக்கிறாரே அப்பா என்று கோபம் வந்தது. வேண்டா வெறுப்பாக நவக்கிரகங்களை அப்பாவோடு சுற்றினேன். கோயிலில் என்னைப் போல நிறைய மாணவர்களும், மாணவிகளும்.. என் அப்பாவைப் போல நிறைய அப்பாக்களும் வந்திருந்தார்கள். அன்றைக்கு கல்யாண கந்தசாமிக்கும், அர்ச்சனை செய்த அய்யருக்கும் நல்ல வசூல்.

வீட்டுக்கு திரும்பும் வழியில் மூர்த்தி எதிர்பட்டார். அவர் ஒரு ஈழத்தமிழர். எங்கள் வீட்டுக்கு முன்பிருந்த ஒரு வீட்டில் குடியிருந்தார். சிறுவயதில் எப்போதோ ஒருமுறை அவரிடம் ”பெரியவன் ஆகி பிரபாகரன் மாதிரி துப்பாக்கியெல்லாம் வெச்சுப்பேன், கெட்டவங்களை சுடுவேன்” என்று சொல்லியிருந்தேன். அதனால் அவருக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும்.

“என்ன சார்? குமாருக்கு இன்னைக்கு ரிசல்ட்டா?” ஜாலியாக கேட்டார்.

“ஆமாம் மூர்த்தி. பையன் விளையாட்டுப் பையன் தான்னாலும், எப்படியாவது பாஸ் பண்ணிடுவான்!”

அப்பாவுக்கு என் மீதிருந்த நம்பிக்கை பயம் கொடுத்தது. என்ன எழுதி கிழித்திருந்தேன் என்பது எனக்குத்தானே தெரியும்? நான் படித்தது காமர்ஸ் க்ரூப். தமிழ், ஆங்கிலம் மொழிகள் தவிர்த்து காமர்ஸ், எகனாமிக்ஸ், மேத்ஸ், அக்கவுண்டன்ஸி சப்ஜெக்டுகள் இருந்தது. பத்தாவது வரை தமிழ்வழிக்கல்வி படித்திருந்த என்னை தேவையில்லாமல் +1 சேரும்போது ஆங்கிலவழிக்கு மாற்றியிருந்தார் அப்பா.

தமிழைப் பொறுத்தவரை எனக்கு பிரச்சினையில்லை. தமிழில் நான் தோல்வியடைந்தால் தான் அது அதிசயம். ஆங்கிலமும் பரவாயில்லை. காமர்ஸ், எகனாமிக்ஸ் இரண்டுமே கதை எழுதி சமாளித்துவிட்டேன். அக்கவுண்டன்ஸி பிட் அடித்திருந்தேன். மேத்ஸ் மட்டுமே எனக்கு பெருத்த சந்தேகத்தை விளைவித்தது, இரண்டு ஆண்டுகளாக மேத்ஸ் க்ளாஸ் அட்டெண்ட் செய்ததாக நினைவில்லை, ட்யூஷனும் வைத்துக்கொள்ளவில்லை. தேர்வெழுதும் போது எனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஆனந்தராஜ் ஒழுங்காக எழுதியிருந்தான் என்றால் நான் தேறிவிடுவேன், என்னைப் பார்த்து எழுதிய சிவராமனும் தேறிவிடுவான்.

எட்டு மணிக்கு அப்பா அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டார். பதினொரு மணிக்காக நான் காத்திருக்க ஆரம்பித்தேன். மடிப்பாக்கம் கூட்டுரோடுக்கு பதினொரு மணிக்கு மாலைமுரசு வந்துவிடும். ஆனால் பத்தரை மணிக்கே செயிண்ட்தாமஸ் மவுண்டுக்கு பேப்பர் வந்துவிடும். சைக்கிளை எடுத்துக்கொண்டு செயிண்ட் தாமஸ் மவுண்டுக்கு சென்று பேப்பரை வாங்கிவிட தீர்மானித்தேன். உதவிக்கு பக்கத்து வீட்டு கோபாலையும் அழைத்துக் கொண்டேன்.

பத்தேகால் மணிக்கு ரயில்வே ஸ்டேஷனில் இருந்தேன். அங்கிருந்த நியூஸ் பேப்பர் ஸ்டால் முன் பெரிய கூட்டம். ரஜினிபடத்தை முதல் நாள் பார்க்க க்யூவில் நிற்பதைப் போல டென்ஷன். பத்தரை மணிக்கு மாலைமலர் வந்தது. காசுகொடுத்து வாங்கிய பேப்பர் கசங்கி இருந்தது கொஞ்சம் கடுப்படித்தது. செங்கை-எம்.ஜி.ஆர் மாவட்ட முடிவுகளை பார்க்கத் தொடங்கினேன். என் ரெஜிஸ்டர் எண்ணை நினைவில் வைத்திருந்தாலும், பதட்டத்தில் மறந்துவிடுவேனோ என்று கையிலும் எழுதி வைத்திருந்தேன். கோபாலும் ஆர்வத்தோடு எண்களை பார்த்துக்கொண்டே வந்தான்.

ம்ஹூம்... என் எண் மட்டுமல்ல, என் எண்ணுக்கு அருகிலிருந்த பல எண்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இருந்தால் தானே தெரிவதற்கு? வாழ்க்கையிலே முதல் தடவையாக பெரிய தோல்வி. விளையாட்டில் கூட தோற்க விரும்பாத என் மனம் உடைந்து, கண்கள் கலங்கியது. அப்பா எப்படியும் ரிசல்ட் பார்த்திருப்பார். வீட்டுக்கு வந்து மிதிப்பாரா தெரியவில்லை. அப்பா அடிப்பாரோ இல்லையோ கண்டிப்பாக அம்மாவிடம் அடி உண்டு.

சோர்வாக சைக்கிளை மிதித்தேன். என்னைவிட கோபாலுக்கு தான் சோகம் அதிகமாக இருந்தது. வரும் வழியில் ஒரு சூப்பர் ஃபிகர் அவள் அம்மாவோடு எதிரில் வந்துகொண்டிருந்தாள். “தம்பி! ரிசல்ட்டு தானே? கொஞ்சம் பேப்பர் காட்டுப்பா!” என்று அத்தை (அழகான பெண்ணுக்கு அம்மாவெல்லாம் நமக்கு அத்தைதானே?) கேட்க, தாராளமாக பேப்பரை கொடுத்தேன். ஃபிகர் ஆர்வத்தோடு அது எண் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தது.

“அம்மா. நான் பாஸ் ஆயிட்டேன்!” குதூகலமாக அந்த ஃபிகர் சொல்ல, எனக்கு வெறுப்பாக இருந்தது. போலியாக சிரித்தேன்.

“ரொம்ப தேங்க்ஸ் தம்பி. நீ பாஸ் ஆயிட்டியா?” அத்தை கேட்க, ஃபிகர் எதிரில் என் கவுரவத்தை காத்துக் கொள்வதற்காக “பாஸ் ஆயிட்டேங்க..” என்று பொய் சொன்னேன்.

நான் ஃபெயில் ஆனது குறித்து கூட எனக்கு பதட்டமில்லை, என்னோடு ஒண்ணாம் வகுப்பில் இருந்து கூட படித்த செந்தில் பாஸ் ஆகியிருக்கக்கூடாது என்று மனதுக்குள் வேண்டிகொண்டேன். அவனுடைய எண் வேறு எனக்குத் தெரியாது. நேராக செந்தில் வீட்டுக்கு சைக்கிளை விட்டேன். நல்லவேளையாக வீட்டில் தான் இருந்தான்.

"மச்சான்.. பேப்பர் வந்துடிச்சாடா?” ஆர்வத்தோடு கேட்டான்.

“ம்ம்.. வந்துருச்சிடா.. உன் நம்பர் என்ன?”

“நானே பார்த்துக்கறேன். கொடுடா!” என்றான். அவனுடைய அம்மா எட்டிப் பார்த்தார்.

”கிருஷ்ணா.. நீ பாஸ் ஆயிட்டியாடா?” அம்மா நிலைமை புரியாமல் கேள்வி கேட்டார்.

எந்த பதிலும் சொல்லாமல், செந்தில் ரிசல்ட் என்ன ஆயிற்று என்று பார்த்துக் கொண்டிருந்தேன். என் நிலைமையே பரவாயில்லை. செந்தில் தேடிக்கொண்டே இருந்தான். இருந்த எல்லாப் பக்கங்களையும் புரட்டி, புரட்டி தேடினான். திருவண்ணாமலை மாவட்ட தேர்வு முடிவுகளையெல்லாம் கூட தேடிப் பார்த்தான்.

“மச்சான். அது நம்ப டிஸ்ட்ரிக்ட் ரிசல்ட் இல்லேடா!”

“பரவாயில்லை.. பார்த்துக்கலாம். ஏதாவது ப்ரிண்டிங் மிஸ்டேக் ஆகியிருக்காதா என்ன?” செந்திலின் பதில் எனக்கு மகிழ்ச்சியை வரவழைத்தது. பையனும் காலி. சூப்பர்!

“செந்திலு! என்னாடா ஆச்சி?” செந்தில் அம்மா கேட்டார்.

“பார்த்துக்கிட்டே இருக்கேம்மா!”

“எத்தனை தடவை பார்த்தாலும் நம்பர் இருந்தாதானேடா தெரியும்?”

செந்திலுக்கு சொல்ல விடையேதும் இல்லை. எங்கள் வகுப்பில் இருந்த இருபத்தாறு பேர்களில் பத்தொன்பது பேர் வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டார்கள் என்று புள்ளிவிவரம் தெரிவித்தது. பரவாயில்லை மெஜாரிட்டி எங்கள் பக்கம் தான்.

ஆயினும் பின்னர் மதிப்பெண்கள் வந்தபிறகு கிடைத்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. மேத்ஸ் எக்ஸாம் ஆனந்தராஜை பார்த்து எழுதினேன். அந்த தறுதலை ஏகப்பட்ட அடிஷனல் ஷீட் வாங்கி எழுதினான். உலகத்திலே மேத்ஸ் எக்ஸாமை கற்பனை செய்து எழுதிய ஒரே நாயாக அவன் தான் இருப்பான். அந்த ராஸ்கலுக்கு கிடைத்த மார்க் இருநூறுக்கு பதிமூன்று. அவனைப் பார்த்து அட்சரம் பிசகாமல் எழுதிய அப்பாவியான நான் பெற்றதோ இருநூறுக்கு முப்பத்தொன்று. என்னைப் பார்த்து எழுதிய சிவராமன் எழுபது மதிப்பெண் பெற்று வெற்றியே பெற்றுவிட்டான். என்னத்தை தான் பேப்பர் திருத்தினான்களோ தெரியவில்லை.