1 ஜூன், 2012

கல்விக்கடன் - FAQs


கல்விக்கடன் குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளுக்கு

விடையளிக்கிறார் கல்விக்கடன் சேவைப்படையின்

ஒருங்கிணைப்பாளர் பிரைம் பாயிண்ட் சீனிவாசன்


+2 முடித்து விட்டேன். எனக்கு கல்விக்கடன் வேண்டும். யாரை தொடர்பு கொண்டு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு (Indian Banker’s Association) கல்வி வளர்ச்சிக்கான மாதிரித் திட்டத்தை உருவாக்கியிருக்கிறது. இத்திட்டத்தின் அடிப்படையில்தான் கல்வி பெறுவதற்கான கடன் வசதி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது உதவித்தொகை அல்ல, கடன். வட்டியும் உண்டு. +2 முடித்த மாணவர்கள் தங்களுக்கு எந்தெந்த வகையில் உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) பெற என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை முதலில் பரிசீலித்து, இறுதியாகவே கல்விக்கடன் பெற முயற்சிக்க வேண்டும். அவரவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் எந்த பொதுத்துறை/தேசிய வங்கியிலும் கல்விக்கடன் பெறலாம். வங்கி மேலாளரை அணுகி கல்விக்கடன் பெறுவதற்கான விதிமுறைகள் என்னென்ன என்று தெரிந்துக்கொண்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். கடன் தரமுடியுமா முடியாதாவென்று விண்ணப்பம் அளித்த தேதியிலிருந்து பதினைந்து முதல் முப்பது நாட்களுக்குள்ளாக வங்கிகள் மாணவர்களுக்கு பதில் அளித்தாக வேண்டும். கல்லூரியில் சேர்ந்தபிறகே வங்கியை அணுகுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னைக் கேட்டால் +2 தேர்வு எழுதியதுமே, மாணவருடன் பெற்றோரும் சென்று, அருகிலிருந்து வங்கிக்கு சென்று மேலாளரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, ஆலோசனை கேட்டு வைத்துக் கொள்வது நலம்.

யார் யாருக்கெல்லாம் கல்விக்கடன் மறுக்கப்படும்?

கல்விக்கடன் பெற எல்லா மாணவர்களுக்கும் தகுதியுண்டு. ஆனால் வேலைவாய்ப்புக்கு வாய்ப்பில்லாத கல்விக்கு கடன் வழங்க வங்கிகள் தயங்குகின்றன. கடன் என்பதால் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்கிற நியாயமான அச்சம் வங்கிகளுக்கு இருக்கிறது. அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் பயில்பவர்களுக்கு கண்டிப்பாக கல்விக்கடன் கிடைக்காது.

என்னென்ன சான்றிதழ்கள்/ஆவணங்கள் தரவேண்டும்?

+2 மதிப்பெண் சான்றிதழ், முகவரி சான்றுக்காக ரேஷன் அட்டை, பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூபாய் நாலரை லட்சத்துக்குள் இருந்தால், தாசில்தார் ரேங்கில் இருக்கும் அரசு அதிகாரி ஒப்பளித்த வருமானச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இத்துடன் கல்லூரியில் சேர்ந்தற்கு சான்றாக அட்மிஷன் கார்ட், மொத்தமாக எவ்வளவு செலவு ஆகும் என்பதற்கான மதிப்பீடு (estimate) ஆகியவையையும் தந்தாக வேண்டும்.

கடனுக்கு பிணை அல்லது உத்தரவாதம் தரவேண்டுமா?

கடன் தொகை நாலு லட்ச ரூபாய் வரை இருந்தால் பிணையோ, உத்தரவாதமோ தேவையில்லை. நான்கு முதல் ஏழரை லட்சம் ரூபாய் வரை ஆக இருந்தால், மூன்றாம் நபர் ஜாமீன் தரவேண்டும். ஏழரை லட்சம் முதல் பத்து லட்ச ரூபாய் வரைக்குமேயானால் சொத்துபிணை வைக்கவேண்டியிருக்கும்.

வட்டிக்கு மத்திய அரசின் மானியம் இருக்கிறதென்று கேள்விப்பட்டேன். அதை பெற என்ன செய்யவேண்டும்?

தொழில்நுட்பம் மற்றும் பணிசார்ந்த (professional) கல்வி பயில்பவர்களுக்கு வட்டி மானியம் உண்டு. பெற்றோரின் வருமானச் சான்றிதழ் இதற்காகத்தான் கேட்கப்படுகிறது. இச்சான்றிதழை வைத்தே வட்டிக்கு மானியத்தை மத்திய அரசிடம் வங்கிகள் கேட்டுப்பெற முடியும். கல்விக்கடன் பெறும்போதே சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் வட்டிக்கு மானியம் குறித்த விளக்கங்களை கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.

எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் கடன் கொடுக்க மறுக்கும்/தாமதிக்கும் வங்கிகள் குறித்து யாரிடம் புகார் செய்ய வேண்டும்?

வங்கிகளில் எல்லா கிளைகளிலுமே, குறிப்பிட்ட அந்த வங்கிக்கு மண்டல மேலாளர் யாரென்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும். கடன் தர மறுக்கும்/தாமதிக்கும் குறிப்பிட்ட வங்கியின் கிளை குறித்து மண்டல மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். அவரிடமும் நியாயம் கிடைக்கவில்லை என்று தோன்றினால் அந்த வங்கியின் தலைவருக்கு மின்னஞ்சல்/மடல்/தொலைபேசி மூலம் தெரியப்படுத்தலாம். ரிசர்வ் வங்கி இம்மாதிரி கல்விக்கடன் குறித்த புகார்களை விசாரிக்கவென்றே சிறப்பு அதிகாரியை நியமித்திருக்கிறது. எந்த வங்கியாக இருந்தாலும் இவரிடம் புகார் அளிக்க முடியும்.

வட்டி மற்றும் கடனை திருப்பிச் செலுத்தும் முறை என்ன? படிக்கும்போதே செலுத்த வேண்டுமா? படித்து முடித்து வேலை கிடைத்தபிறகு செலுத்திக் கொள்ளலாமா?

படிக்கும்போதே வட்டியையோ, கடனையோ திருப்பிக் கட்டச் சொல்லி எந்த வங்கி மேலாளரும் வற்புறுத்த முடியாது. படித்து முடித்து ஒருவருடம் கழித்து (அல்லது) வேலை கிடைத்த ஆறு மாதத்திற்குப் பிறகு அசலோடு வட்டியையும் சேர்த்து மாதாந்திரத் தவணையாக கட்டத் தொடங்க வேண்டும். கடனையும், வட்டியையும் திருப்பிச் செலுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் அவகாசம் தரப்படும்.

குடும்பச் சூழலால் பாதியில் படிப்பை விட்டு விட்டேன். நான் வாங்கிய கல்விக்கடனை வட்டியோடு திருப்பி செலுத்தியே ஆகவேண்டுமா?

ஏற்கனவே குறிப்பிட்டது மாதிரி இது உதவித்தொகை அல்ல. கடன். எந்தச் சூழலிலும் கடன் என்றால் அதை திருப்பிச் செலுத்தியே ஆகவேண்டும்.

முதல் ஆண்டுக்கு கடன் கொடுத்துவிட்டு, இரண்டாம் அல்லது ஆண்டுகளில் கடன் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?

இம்மாதிரி நிகழ்வது அபூர்வமானது. மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நல்ல கல்வியை பெறவேண்டும் என்கிற சமூகநோக்கத்துக்காகவே கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கடன் வாங்கிவிட்டோமே என்று கடனுக்காக கல்லூரிக்குப் போய்வந்தால் அதை பெற்றோர் சகித்துக் கொள்கிறார்களோ இல்லையோ, கடன் கொடுத்த வங்கியால் நிச்சயம் சகித்துக் கொள்ள முடியாது. தங்களிடம் கடன் பெற்ற மாணவர்கள், அதைவைத்து ஒழுங்காக கல்வி கற்கிறார்களா என்று சரிபார்க்கவே வங்கி மேலாளர்கள் மதிப்பெண்களை விசாரித்து தெரிந்துக் கொள்கிறார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத மாணவர்களை அக்கறையோடு கண்டிக்கிறார்கள். தங்களிடம் கடன் பெற்ற மாணவன் நன்றாக படிக்க வேண்டும், படித்து நல்ல வேலையில் சேர்ந்து தங்கள் கடனை திருப்பிக் கட்டவேண்டும் என்று வங்கிகள் எதிர்ப்பார்க்கின்றன. முதல் ஆண்டுக்கு கொடுத்து, அடுத்த ஆண்டுக்கு மறுப்பது மாதிரியான விஷயங்கள் மிக மிக அரிதானது. இம்மாதிரியான விஷயங்களுக்கு துல்லியமான வரையறைகள் ஏதுமில்லை. ஆனால் நியாயமே இல்லாமல் மறுக்கப்படுகிறது என்றால் மண்டல மேலாளரிடமோ, வங்கித் தலைவரிடமோ அல்லது ரிசர்வ் வங்கியின் சிறப்பு அதிகாரியிடமோ புகார் தெரிவிக்கலாம்.

ஒரு குடும்பத்தில் ஒருவர்தான் கல்விக்கடன் பெறமுடியும் என்று சொல்கிறார்கள். அது உண்மையா?

அப்படியெல்லாம் கிடையாது. அண்ணன் கடன் வாங்கியிருந்தால், தம்பிக்கோ தங்கைக்கோ கடன் தரமுடியாது என்று எந்த வங்கியும் மறுக்க முடியாது. ஆனால் கடன் தொகை அண்ணன், தம்பிக்கும் சேர்த்து நாலு லட்ச ரூபாய்க்கு மேல் செல்லுமேயானால் பிணை, வைப்பு ஆகிய விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும்.

கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது வங்கி என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும்?

மற்ற கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமோ அதே நடவடிக்கைகள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கும் பொருந்தும். போலிஸ் விசாரணை, கோர்ட் நடவடிக்கை, பாஸ்போர்ட் முடக்கம் என்று எல்லா நடவடிக்கைகளையும் வங்கி எடுக்க முடியும். அவ்வளவு ஏன். கடன் திருப்பிக் கட்ட மறுப்பவர் பணி செய்யும் நிறுவனத்தை கூட வங்கி அணுகலாம். கடன் என்றால், அதைத் திருப்பிக் கட்டத்தானே ஆக வேண்டும்?



கல்விக்கடன் சேவைப்படை

கல்விக்கடன் விஷயத்தில் மாணவர்களுக்கும், வங்கிகளுக்கும் பாலமாக கல்விக்கடன் சேவைப்படை (education loan task force) இயங்குகிறது. சமூக முன்னேற்றத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் தன்னார்வலர்களால் இது நடத்தப்படுகிறது. கல்விக்கடன் பெறுவதில் மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, விளக்கங்கள் தேவைப்பட்டாலோ இந்தப் படையினர் உதவுகிறார்கள். info@eltf.in என்கிற மின்னஞ்சல் முகவரியில் இவர்களை தொடர்பு கொள்ளலாம். eltf.in என்கிற இணையத்தளத்தில் கல்விக்கடன் குறித்த தகவல்களை பகிர்ந்து வைத்திருக்கிறார்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

31 மே, 2012

பிரதி ஞாயிறு 9.00 மணி முதல் 10.30 வரை

அனேகமாக +2 படிக்கும்போது என்று நினைக்கிறேன். தினத்தந்தியில் அந்த விளம்பரத்தைக் கண்டேன். “கட்டழகுக் கன்னியை கயவர் நால்வர் கதறக் கதறக் கற்பழிக்கும் கதை!” என்று கேப்ஷன் போட்டு, ஆனந்த் தியேட்டரில் வெளியான ஓர் ஆங்கிலப் படத்தின் விளம்பரம் கால்பக்க அளவுக்கு வந்திருந்தது. கான்செப்டே புதுசாக இருக்கிறதே என்று ‘ஏ’வலோடு, ஸ்கூல் கட்டடித்துவிட்டு நண்பர்களோடு ஆனந்த் தியேட்டருக்கு படையெடுத்தோம். படத்தின் பெயர் மறந்துவிட்டது. பெயரா முக்கியம்?

ம்ஹூம்.

ஒன்று. கட்டழகுக் கன்னி என்று விளம்பர வாசகத்தை எழுதிய எழுத்தாளர் நெஞ்சறிந்து பொய் சொல்லியிருந்தார். தினத்தந்தியில் ‘இளம் அழகி’ என்று செய்தியில் குறிப்பிடப்படுபவர், போட்டோவில் பேரன் பேத்தி எடுத்த கிழவியாக இருப்பதைப் போன்ற ‘ஐரனி’ தான் குறிப்பிட்ட அந்த திரைப்படத்திலும்.

இரண்டு. ஃபாரினிலும் கூட ரேப் சீனை இலைமறை காய்மறையாக – அதாவது இளநீர் வெட்டுவது, மானை புலி வேட்டையாடுவது மாதிரி குறியீடுகளால் உணர்த்துவது – எடுக்கும் பழக்கம் இருக்கிறது போல. ‘பிட்டு’ எதிர்ப்பார்த்து போனவர்கள் பிட்டுக்கு மண் சுமந்து முதுகில் சாட்டையடி வாங்கிய சிவபெருமான் ரேஞ்சுக்கு புண்பட்டு போனோம்.

ஆனாலும், அந்த விளம்பர வாசகம் மட்டும் இத்தனை வருடங்கள் கழித்தும் நினைவடுக்குகளில் இருந்து தொலையாமல் வசீகரித்துக் கொண்டே இருக்கிறது.

நேற்று ஏதோ ஒரு சேனலில் யதேச்சையாக ஒரு மொக்கைப்படத்தைக் காண நேர்ந்தது. லேசான ‘கில்மா’ காட்சிகள் இருந்ததால், சுவாரஸ்யத்தோடு முழுப்படத்தையும் காண அமர்ந்தேன்.

என்ன ஆச்சரியம்..? ‘கட்டழகுக் கன்னியை கயவர் நால்வர் கதறக் கதறக் கற்பழிக்கும் கதை!’ தான் ஒன்லைனர். படத்தின் பெயர் ‘பிரதி ஞாயிறு 9.00 மணி முதல் 10.30 வரை. படுமோசமான மேக்கிங். அதெல்லாம் பிரச்சினையில்லை. கண்டெண்ட் ஈஸ் த கிங்.

நான்கு கயவர்கள் நெருங்கிய நண்பர்கள். ஒன்றாகவே எல்லா கெட்ட காரியத்தையும் செய்பவர்கள். திருச்சிக்கு செல்லும்போது ஒரு ஓட்டலில் ‘அந்தமாதிரி’ ஃபிகருக்காக வெயிட் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதே ஓட்டலின் அடுத்த அறையில் ஒரு கம்பெனியின் இண்டர்வ்யூ நடந்துக் கொண்டிருக்கிறது. அந்த இண்டர்வ்யூக்கு வரும் ஒரு ஃபிகர் தவறுதலாக இவர்களது அறைக்குள் நுழைந்துவிட, கடும்போதையில் இருக்கும் நால்வரும் சேர்ந்து...

அடுத்த காட்சியே ஒரு ட்விஸ்ட். நால்வரில் ஒருவனுக்கு திடீர் திருமணம். மணப்பெண்ணின் முகத்தைப் பார்க்காமலேயே தாலி கட்டிவிடுகிறான். முதலிரவில்தான் தெரிகிறது. தான் தாலி கட்டிய பெண், அந்த திருச்சி ஓட்டலில் சின்னாபின்னப் படுத்தப்பட்டவள். வாழ்க்கையே நொந்து கொத்துக்கறி ஆகிறான். போட்டுத் தள்ளவும் முடியாது. புதியதாக மணமான பெண் இறந்துவிட்டால், தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வந்து விசாரணை நடத்துவார்கள். வெளியே சொல்லவும் முடியாது. ஏனெனில் கற்பழிப்புக் குற்றம். கவுரவமான குடும்பம். இருதலை கொல்லியாக இல்லாமல் பலதலை கொல்லியாக தினம் தினம் மனதளவில் செத்து செத்து விளையாடுகிறான். நெருங்கிய நண்பர்கள் மற்ற மூவருக்கும் இவளை அறிமுகப்படுத்தவும் முடியாது. அவமானம்.

இப்படியாக நாயகனின் மனக்கொந்தளிப்புகளும், அவனுக்கும் அவனது மனைவிக்குமான கேட் & மவுஸ் விளையாட்டும்தான் படத்தின் பிற்பாதி. நாயகனாக நடித்திருப்பவர் எல்.கே.ஜி. பையன் ரத்தக்கண்ணீர் நாடகத்தில் நடித்திருப்பதைப் போன்ற பிரமாதமான ரியாக்‌ஷன்கள் தருகிறார். பான்பராக்கை வாயில் போட்டு குதப்பி, தலையில் துப்பிவிட்டால் எப்படியிருக்குமோ அப்படியொரு ஹேர்ஸ்டைலில் கருணாஸ் நண்பர்களில் ஒருவராக நடித்திருக்கிறார். அவரே பாடி, ஆடியிருக்கும் ஒரு குத்துப்பாட்டு ஓக்கே. நண்பர்கள் எல்லாம் கல்யாணம் ஆகாத இளைஞர்கள் எனும்போது நாற்பதை கடந்த தொப்பை பார்ட்டிகளை நடிக்கைவைக்கும் கலாச்சாரம் என்றுதான் நம்மூரில் ஒழியுமோ. டிவியில் லொள்ளுசபா மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஒரு விக்கு மண்டையரும் நான்கு இளைஞர்களில் ஒருவர். ஒரே ஒருவர் மட்டும் ஓரளவுக்கு இளைஞர் மாதிரியிருக்கிறார்.

இந்தப் படத்தையே உருப்படியான இயக்குனர் ஒருவர், கொஞ்சம் சுமாரான பட்ஜெட்டில் மீண்டும் ரீமேக் செய்தால் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக தரமுடியும். முதல் பாதி நகைச்சுவை, இரண்டாம் பாதி க்ரைம் ட்விஸ்ட்டுகள் என்று நம்மூரின் அச்சு அசல் க்ரைம் ஸ்டோரி ஃபார்முலா. எந்த காலத்துக்கும் ஒர்க் அவுட் ஆகக்கூடிய சப்ஜெக்ட். செண்டிமெண்டுகளை அசைத்துப் பார்க்கும் துணிச்சல் என்று மொக்கைப்படமாக இருந்தாலும் பாராட்டக்கூடிய அம்சங்கள் நிறைய இருக்கிறது.

படத்தின் பெரிய ஆறுதல் ‘கதை’ என்றால்.. ஆச்சரியம் ஹீரோயின். “சென்னைப் பட்டினம், எல்லாம் கட்டணம்.. கையை நீட்டினா காசுமழை கொட்டணும்” என்றொரு பாடலை பார்த்திருக்கிறீர்களா? ‘அள்ளித் தந்த வானம்’ படத்தில் அப்பாடலுக்கு பிரபுதேவாவோடு ஆடும் குட்டிப்பெண் கல்யாணியை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இல்லையென்றால் ‘ஜெயம்’ படத்தில் சதாவின் தங்கையாக நடித்த பாப்பையாவது நினைவிருக்கும். அந்த பாப்பாதான் இப்போ பீப்பாயாக மாறி, ஐமீன் பேபி கல்யாணி குமாரி பூர்ணிதாவாக மாறி கவர்ச்சிக் கடலில் குதித்திருக்கிறார். காட்டன் புடவை அவருக்கு மிக பாந்தமாக இருக்கிறது. குறிப்பாக மஞ்சள் புடவை. பாடல் காட்சிகள் சிலவற்றில் ‘பேட்’ வைத்திருப்பது தெரிகிறது. அதற்கான நிர்ப்பந்தமும் புரிகிறது. மாநிறம், களையான முகம். ஹோம்லியான பாடிலாங்குவேஜ். விடிகாலையில் குளித்து, ஈரத்தலையில் டவல் சுற்றி, பூசை முடித்து, தீபாரதனை தட்டோடு ஒரு காட்சியில் எதிர்படும் பூர்ணிதாவை பார்க்கும்போது இவரையே கல்யாணம் கட்டிக்கலாமா என்கிற எண்ணம் நம்மைப் போன்ற ஒவ்வொரு இளைஞருக்கும் தோன்றும். அவ்வளவு தெய்வீகக்களை முகத்தில். கொஞ்சம் குள்ளம் என்பதுதான் பிரச்சினை.

இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதா என்று தெரியவில்லை. டிவிடியாவது கிடைக்குமாவென்றும் தெரியவில்லை. எப்போதாவது சன் குழும சேனல்களில் காணும் பாக்கியம் கிடைத்தால் நீங்களும் என்னைப்போல பரமபிதாவால் ஆசிர்வதிக்கப்பட்டவரே.

28 மே, 2012

அழவைத்த இறுதிக்காட்சி


தியேட்டரை விட்டு வெளியேறும்போது உணர்ச்சிகரமாக மூக்கை சிந்திக்கொண்டே, கசியும் கண்ணீரை மற்றவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று அவசரமாக கைக்குட்டையால் துடைத்துக்கொண்டோ பார்வையாளர்கள் வெளியேறுவது அத்திபூத்தாற்போல சினிமாவில் நடக்கும் அபூர்வ நிகழ்வு. அதிசயங்கள் ஆச்சர்யமானவை. ஆனாலும் அவற்றுக்கு பஞ்சமேதுமில்லை.

1997ல்மென் இன் ப்ளாக்வெளிவந்தபோது பெரிய வரவேற்பை பெற்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை. முன்பாக அது காமிக்ஸாக வந்து சக்கைப்போடு போட்ட ஃபேண்டஸி கதை. ரோட்டன் டொமாட்டோஸ் போன்ற கறார் விமர்சனத் தளங்கள் தூக்கிவைத்து கொண்டாடியதில் கொட்டோ கொட்டுவென்று வசூல் மழை பேய்மழையாய் கொட்டி தீர்த்தது. இண்டிபெண்டன்ஸ் டே திரைப்படம் வெளியானபோது பலரையும் கவர்ந்த வில் ஸ்மித், மென் இன் ப்ளாக் மூலம் ஓவர்நைட் சூப்பர் ஸ்டார் ஆனார்.

கதை ரொம்ப சிம்பிள். மென் இன் ப்ளாக் என்பது அமெரிக்க அரசின் ஓர் ரகசிய அமைப்பு. பூமியில் இருக்கும் வேற்றுக்கிரகவாசிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும், கண்காணிக்கும் பொறுப்பு இவ்வமைப்புக்கு இருக்கிறது. இவ்வமைப்பில் பணியாற்றும் ஏஜெண்ட் ஜே (வில் ஸ்மித்), ஏஜெண்ட் கே (டாம்மி லீ ஜோன்ஸ்) இவர்களது சாகஸங்களும், வினோத அனுபவங்களும் தான் கதை. ஏஜெண்ட் ஜே லொடலொடவென வம்படியாக பேசிக்கொண்டேயிருக்கும் பாத்திரம். ஏஜெண்ட் கே அவருக்கு நேரெதிர். வயது தந்த அனுபவங்களின் காரணமாக வேலையில் சின்சியராக, கறாராக, உம்மணாம் மூஞ்சியாக இருப்பவர். நடிகர்கள், கதை, திரைக்கதை மற்ற கந்தாயங்களைவிட கிராஃபிக்ஸ் துல்லியமாக இருப்பது இப்படவரிசைக்கு மிக அவசியம்.

முதல் படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பையடுத்து 2002ல் இரண்டாம் பகுதி வெளிவந்தது. வசூலில் சோடை போகாவிட்டாலும், விமர்சகர்கள் டவுசரை கயட்டி விட்டார்கள். முந்தைய பாகத்தை கொண்டாடிய ரோட்டன் டொமாட்டோஸ் காறித் துப்பிவிட்டது.  இதனால் எல்லாம் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனான வில்ஸ்மித்துக்கு மட்டும் இந்த கான்செப்டில் நல்ல நம்பிக்கை இருந்தது. மூன்றாவது பாகத்தை எடுத்து, பழைய வரவேற்பை பெற்றே தீரவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.

போனவாரம் மூன்றாம் பாகம் வெளிவந்துவிட்டது. 1969ல் ஏஜெண்ட் கே, கையை வெட்டி, கைது செய்து நிலவில் சிறைவைத்திருக்கும் போரிஸ் என்கிற கிரிமினல் முப்பதாண்டுகளுக்கும் மேலான கடுஞ்சிறையில் இருந்து தப்பிக்கிறான். தப்புவதோடு இல்லாமல், தான் கைதான 1969க்கு மீண்டும் கடந்தகாலத்தில் பயணித்து, தனது கையை வெட்டுவதற்கு முன்பாகவே ஏஜெண்ட் கே-யை போட்டுத் தள்ள திட்டமிடுகிறான். விஷயத்தை கேள்விப்பட்டு தானும் அதே காலத்துக்குப் பயணித்து ஜே-வை, கே காப்பாற்றுவதுதான் கதை. ஃபேண்டஸிக்கே காதுகுத்தும் மெகா ஃபேண்டஸி. நிலாவுக்கு அப்போலோ விண்கலத்தில் நீல்ஆர்ம்ஸ்ட்ராங் கும்பல் பயணிக்கும் தேதியில் கதை நடக்கிறது. அந்த குழு பயணிக்கும் விண்கப்பலில் ஒரு இன்ஸ்ட்ரூமெண்டை செருகி ஜே-வும், கே-வும் உலகை காப்பாற்றுகிறார்கள். இதன் மூலமாக வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு படையெடுப்பதை தடுக்கும் ஒரு சேஃப்டி ஷீல்டை (கோல்கேட் நம் பற்களை பாதுகாக்க ஏற்படுத்தியிருக்கும் பாதுகாப்பு வளையம் மாதிரி) நிறுவுகிறார்கள். இதைத் தடுத்து, கே-வை போட்டுத் தள்ள நினைக்கும் போரிஸையும் போட்டுத் தாக்குகிறார்கள். கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் சிறு கரெக்‌ஷன் செய்துவிட்டு வெற்றிகரமாக நிகழ்காலத்துக்கு திரும்புகிறார் ஜே. டென்ஷனான க்ளைமேக்ஸ். உலகை காப்பதை மட்டுமே தொழிலாக கொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத்தின் தியாகம். கடைசியாக ‘நாம ஜெயிச்சிட்டோம் என்று ஆனந்தக் கூத்தாடும் அதே வழக்கமான ஹாலிவுட் க்ளைமேக்ஸ். கிட்டத்தட்ட டிபிக்கல் ஹாலிவுட் படமாக மாறிவிட்ட இதை க்ளைமேக்ஸுக்கு பிந்தைய ஒரு சிறிய ட்விஸ்ட் க்ளைமேக்ஸால் ஒட்டுமொத்தமாக பார்வையாளர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை மாற்றியமைத்திருக்கிறார்கள். அந்த ஒன்றரை நிமிட காட்சியால் மூன்றாவது பாகம் மட்டுமின்றி, மென் இன் ப்ளாக் சீரியஸுக்கே பெரிய மரியாதை ஏற்பட்டிருக்கிறது. காமெடி, ஃபேண்டஸி, காதுகுத்து காட்சிகள் என்று ஜூகல்பந்தியாக கும்மியடிக்கும் மென் இன் ப்ளாக்குக்கு புதுவண்ணத்தை வாரியிறைத்திருக்கிறது இந்த செண்டிமெண்ட் காட்சி. ஜே-வுக்கும், கே-வுக்கும் இடையிலிருக்கும் உறவு வெறுமனே பணி சார்ந்ததில்லை என்கிற ரகசியத்தை போட்டுடைக்கிறது. “உன் அப்பா ஒரு ஹீரோன்னு மட்டும் நினைவு வெச்சிக்க என்கிற வசனம் யாரைத்தான் சிலிர்க்க வைக்காது. திரையில் பாருங்கள் நீங்களும் நிச்சயம் சிலிர்ப்பீர்கள். நம்மூரில் சேரன் எடுத்த ‘தவமாய் தவமிருந்து ஏற்படுத்திய உணர்வுகளை வெறும் ஒன்றரை நிமிடங்களில் பன்மடங்காய் பெருக்கிக் காட்டுகிறது இப்படம்.

மூன்றாவது பாகம் முப்பரிமாணத்தில் வந்திருப்பதும் பெரிய ப்ளஸ். வில்ஸ்மித் 1969க்குப் பயணிக்கும் காட்சியை விஷூவல் ட்ரீட் என்றெல்லாம் வெறுமனே பாராட்டிவிட முடியாது. இக்காட்சியை ஸ்க்ரிப்ட் ரைட்டர் எப்படி எழுதியிருப்பார் என்று கிராபிக்ஸ் செய்துகூட கற்பனை செய்துவிடமுடியவில்லை. ‘ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுத்திருக்கிறோம் என்று நம்மூரில் யாராவது சொன்னால், அதை ‘ஜோக்காகதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னும் 1992ல் வெளியான ‘ஜட்ஜ்மெண்ட் டே தரத்துக்கு கூட நாம் தொழில்நுட்பத்திலோ, கதை சொல்லும் உத்தியிலோ வளரவில்லை என்பதுதான் யதார்த்தம்.

“நம்மூருக்கு இதெல்லாம் தேவையா, நம் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக படம்பிடித்துக் காட்டவே எமக்கு தாவூ தீருகிறதே? என்று நம் படைப்பாளிகள் கேட்கலாம். ஆனால் எம்.ஐபி.-3 போன்ற பிரும்மாண்ட ஃபேண்டஸி திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகும் அதே நாளில், தமிழ்நாட்டின் குக்கிராமமான கிடாரம் கொண்டானைச் சேர்ந்த முருகேசனும் க்யூப் ப்ரொஜக்‌ஷனில், டி.டி.எஸ். ஒலியமைப்பில் தன் தாய்மொழியான தமிழிலேயே பார்த்துவிடுகிறான் என்கிற சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘எந்திரன் மாதிரி முயற்சிகளை அவன் வரவேற்கிறான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சினிமா நம்மூரில் சர்வநிச்சயமாக வெறும் கலை மட்டும் அல்ல. தயாரிப்பவர்களுக்கு தொழில். பார்வையாளனுக்கு பொழுதுபோக்கு. இதனைப் புரிந்துகொண்டு தமது சிந்தனைத் தளத்தை (ஹாலிவுட்டையோ, கொரியன் படங்களையோ பிட் அடிக்காமல்) விரிவாக்கிக் கொள்வதே நம்மூர் படைப்பாளிகளை வரலாற்றில் இடம்பெற வைக்கும்.

இரண்டாம் பாகத்துக்கு ஏற்பட்ட களங்கத்தை மூன்றாம் பாகத்தில் போக்கிவிட்ட திருப்தி வில்ஸ்மித் க்ரூப்புக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. ரோட்டன் டொமாட்டோஸும் இரண்டாம் பாகம் அளவுக்கு மோசமில்லை, முதல் பாகம் அளவுக்கு சூப்பருமில்லை என்று ரெண்டுங்கெட்டான்தனமாக படத்தின் வெற்றியை ஒப்புக்கொண்டிருக்கிறது. பார்வையாளர்களைப் பொறுத்தவரை எம்.ஐ.பி. 3-க்கு பெரிய வரவேற்பு. குறிப்பாக ஆசியாவில் கன்னாபின்னா ஹிட். நான்காவது பாகம் எடுத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று சொல்லாமல், அதுகுறித்து பரிசீலிப்பேன் என்று ‘ஜோக் அடிக்கிறார் வில்ஸ்மித். இயக்குனருக்கு வில்ஸ்மித்தை விட நகைச்சுவையுணர்ச்சி அதிகம். “ஓக்கே நோ ப்ராப்ளம். நான்காவது பாகத்தில் நிஜமாகவே வில்ஸ்மித் இல்லை. அவரது மகன் ஜேடன் ஸ்மித்தான் நடிக்கப் போகிறார் என்று பதிலுக்கு ஜோக் அடிக்கிறார். இதெல்லாம் ‘ஜோக்காக இல்லாவிட்டாலும் பெரிய பிரச்சினை இல்லை. தன்னுடைய வாய்ப்பை தனது மகன்தானே தட்டிப் பறிக்கப் போகிறான் என்று வில்ஸ்மித் திருப்தி அடைந்துக் கொள்வார். மகனிடம் தோற்பதைவிட சந்தோஷமான விஷயம் ஒரு தகப்பனுக்கு வேறென்ன இருந்துவிடப் போகிறது?

26 மே, 2012

டீ-யா வேலை பார்க்கணும் பாஸ்!

உழைக்கும் மக்களின் பிரியத்துக்குரிய உற்சாக பானமான ‘டீ’
அடுத்த ஆண்டு முதல் தேசிய பானமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது

பிப்ரவரி 26, 1858ல் மணிராம் திவான், பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்டார். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் பலமாக காலூன்ற ஆரம்பகாலங்களில் செயல்பட்டவர் அவர். ஆயினும் பிற்பாடு முதல் இந்திய சுதந்திரப்போரின் எழுச்சியை அஸ்ஸாமில் பரப்பியவர் என்கிற அடிப்படையில் அவரது உயிர் பறிக்கப்பட்டது.

அஸ்ஸாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் எழுபத்தைந்தாம் ஆண்டு விழா கடந்த மாதம் நடந்தது. விழாவில் கலந்துக் கொண்டு பேசிய திட்டக்குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், டீ இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்கப்படும்” என்று அறிவித்து பலமான கைத்தட்டலைப் பெற்றார். நம்மூர் டீக்கடை நாயர்களும் இந்த அறிவிப்பால் குஷியாகியிருக்கிறார்கள்.

முதல் பத்திக்கும், இரண்டாம் பத்திக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றால் டீ இந்தியாவின் தேசியபானமாக அறிவிக்கப்படப் போவது மணிராம் திவானின் 212வது பிறந்தநாள் அன்றுதான். அஸ்ஸாமில் சிங்போ எனப்படும் பழங்குடியினர் உண்டு. இவர்கள் தேயிலைகளை பயிரிட்டு பயன்படுத்துவதை பிரிட்டிஷாருக்கு முதன்முதலாக தெரிவித்தவர் மணிராம். இதையடுத்து கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் அஸ்ஸாமில் முகாமிட்டு, தேயிலை எஸ்டேட்களை நிறைய உருவாக்கினார்கள். அந்தக் காலக்கட்டத்தில் இங்கே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சீன நாட்டு தேயிலைக்கு சுத்தமாக மவுசு போனது (இந்தியத் தேயிலையும், சீனத் தேயிலையும் வகைரீதியாக வேறுபட்டவை). அதுவரை ‘டீ’ என்பது ஆடம்பரபானமாக இருந்து வந்தது. இந்தியாவில் தேயிலை எஸ்டேட்கள் பெருக, பெருக அடித்தட்டு மக்களும் தங்களுடைய அத்தியாவசியத் தேவையாக ‘டீ’யை ஏற்றுக் கொண்டார்கள்.

பிரிட்டிஷாரின் அஸ்ஸாம் டீ கம்பெனியின் திவானாக மணிராம் நியமிக்கப்பட்டார். பிற்பாடு சுதேசிக் கொள்கைகளில் ஆர்வம் கொண்ட அவர் பணியிலிருந்து விலகி, சொந்தமாக டீ எஸ்டேட் உருவாக்கினார். முதன்முதலாக டீ எஸ்டேட் உருவாக்கிய இந்தியர் என்கிற பெருமையை பெற்றார். இந்த தொழில் மட்டுமன்றி இரும்பு, நிலக்கரி, தங்கம், செராமிக், ஐவரி, கைத்தறி, படகு தயாரித்தல், கட்டுமானம், யானை வர்த்தகம் என்று வகைதொகையில்லாமல் தொழில்கள் செய்து, கொடிகட்டிப் பறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரர், பன்தொழில் வித்தகர் என்றெல்லாம் ஏராளமான  சிறப்புகள் இருந்தாலும் ‘டீ’ தான் தீயாய் அவரது புகழை இன்றும் பரப்பி வருகிறது. இன்று நாம் குடிக்கும் ஒவ்வொரு கப் ‘டீ’லும் மணிராம் சர்வநிச்சயமாக கலந்திருக்கிறார். 
 ‘டீ’யின் ரிஷிமூலம் எதுவென்று சரியாக வரலாற்றில் பதியப்படவில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சீனர்கள் கப், கப்பாக குடித்துத் தள்ளினார்கள் என்பதில் இருந்துதான் ஓரளவுக்கு சீரான வரிசையில் தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலேயே கின் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சீனாவில் ‘டீ’ பிரபலமான பானமாக இருந்ததாகவும் சொல்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தேயிலைத் தொழிலில் சீனர்கள் உலகெங்கும் கொடிகட்டிப் பறந்தார்கள். இந்தியாவில் இத்தொழில் பிரபலமாகும்வரை சீனர்களை இதில் அடித்துக்கொள்ள ஆளே இல்லாத நிலை இருந்தது.

பண்டைய சீனாவில் ‘டீ’யை ‘ச்சா’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த பெயர் பாரசீகத்துக்குப் போனபோது ‘ச்சாய்’ என்று திரிந்திருக்கிறது. இப்போதும் நம்மூரில் ‘டீ’யை ‘ச்சாயா’ என்று பாதிபேர் விளிப்பது குறிப்பிடத்தக்கது. தைவான் பக்கமாக இருந்தவர்கள் ‘டே’ என்று இதை அழைக்க, அவர்களோடு வணிகத் தொடர்பில் இருந்த ஐரோப்பியர்களால் ‘டீ’ என்று நாமகரணம் சூட்டப்பட்டது.

தயார் செய்யப்படும் பானங்களில் இன்று உலகளவில் ‘டீ’ தான் லீடர். காபி, சாக்லேட், குளிர்பானங்கள், மதுபானங்கள் என்று மீதியிருக்கும் எல்லா பானங்களையும் அருந்துபவர்கள் நூற்றுக்கு ஐம்பது பேர் அருந்துகிறார்கள் என்றால், மீதி ஐம்பது பேர் அருந்துவது டீ.

உலகிலேயே ‘டீ’ அதிகம் போடப்படுவது இந்தியாவில்தான். சராசரியாக ஒவ்வொரு இந்தியரும் முக்கால் கிலோ டீத்தூளை முழுங்குவதாக ஒரு கணக்கெடுப்பு இருக்கிறது. 750 கிராம் x 122 கோடி-யென்று கால்குலேட்டரில் கணக்கு போட்டு பார்த்தீர்களேயானால், ஒரு வருடத்துக்கு நம்முடைய டீத்தூள் தேவை என்னவென்று துல்லியமாக தெரிந்துக் கொள்ளலாம். துருக்கியர்கள் நம்மைவிட மோசம். வருடத்துக்கு ஆளொன்றுக்கு இரண்டரை கிலோ டீத்தூள் தேவைப்படுகிறதாம். ஆனால் மக்கள் தொகை நம்மை ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை என்பதால், இவ்விஷயத்தில் நாம் தான் ‘டீ’ம் லீடர். உற்பத்தி அடிப்படையில் சீனா, இந்தியா, கென்யா, இலங்கை, துருக்கி ஆகியவை டாப் ஃபைவ் நாடுகள். 
 டுத்த ஆண்டுதான் ‘தேசிய பான’ முடிசூட்டு விழா நடக்கப் போகிறது என்றாலும், இப்போதே நாட்டில் ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது.

அமுலின் தாய்மாநிலமான குஜராத்தில் இருந்து ‘பால்தான் இந்தியாவின் தேசியபானம்’ என்று அறிவிக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்படுகிறது. குஜராத் கூட்டுறவு பால் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு இதை வலியுறுத்துகிறது. “எல்லா நாடுகளிலுமே, எல்லா வயதினருக்கும் பொதுவான பானமாக பால் தான் இருக்கிறது. இத்தனைக்கும் வெண்மைப் புரட்சியை சாதித்துக் காட்டியவர்கள் நாம். இப்போது இந்த தேசிய பானம் என்கிற அறிவிப்பே தேவையற்றது. இந்தியாவின் தேசிய உணவு என்று அரிசி சோற்றையோ, சப்பாத்தியையோ அறிவித்திருக்கிறார்களா என்ன?” என்று பொங்கியெழுகிறார் அந்த கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனரான ஆர்.எஸ்.சோதி.

பஞ்சாப்பின் ரெஸ்டாரண்டுகளோ ‘லஸ்ஸிதான் நம் நாட்டின் தேசிய பானம்’ என்று களமிறங்கியிருக்கிறார்கள். அதற்காக அரசினை கவருவதற்காக ‘லஸ்ஸி திருவிழா’வெல்லாம் நடத்தி ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் நம்மூர் டாஸ்மாக் குடிமக்கள்தான் களமிறங்கவில்லை.

டயர்டா இருக்கு பாஸ். ஒரு டீ அடிப்போம் வர்றீங்களா?


(நன்றி : புதிய தலைமுறை)

25 மே, 2012

மூங்கில் இலை காடுகளே

மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்

இரவு பத்து மணிக்கு மேலே எஃப்.எம். கேட்பவர்கள் நிச்சயம் இந்தப் பாடலை கேட்டிருப்பீர்கள். ‘நல்ல பாட்டாச்சே, ஆனா என்ன படம்னு தெரியலை’ என்றும் நினைத்திருப்பீர்கள். முப்பது வயதை கடந்து காதோர நரை ஆரம்பித்திருப்பவர்களுக்கு இந்தப் படமும் தெரியும். இந்தப் பாடலுக்கு நடித்த நடிகரையும் தெரியும்.

எண்பதுகளில் வந்த லோ-பட்ஜெட் படங்களில், அதுவும் விசு படமாக இருந்தால் நிச்சயமாக திலீப் இருப்பார். காதலனாகவும், பணக்கார இளைஞனாகவும், பாந்தமான புருஷனாகவும்.. பெரிய வெரைட்டி ஏதுமில்லாத பாத்திரங்களில் நடித்தவர். சிவந்த நிறம். பிரவுன் கண்கள். மீசையை அழகாக திருத்தியிருப்பார். இவரது ஹேர்ஸ்டைல் சிறப்பானது. உடைகள் நாகரிகமாக இருக்கும்.

மாப்பிள்ளையில் சூப்பர் ஸ்டாருக்கு மச்சானாக காமெடியில் கலக்கினார். அதற்குப் பிறகு திடீரென்று காணோம். ஏதோ பிஸினஸ் செய்துக் கொண்டிருந்தார் என்று அவ்வப்போது சினிமா துணுக்குகளில் வாசித்திருக்கிறேன். கேஸ் ஏஜென்ஸி எடுத்திருப்பதாகவும், அதில் சினிமாவை விட அதிகம் சம்பாதிப்பதாகவும் செய்திகள் வரும்.

இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னால் தினகரன் வசந்தத்தில் இவரது பேட்டி வந்திருந்தது. படத்தைப் பார்த்ததுமே ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு பெருத்துப் போய் இருந்தார். அழகான அவரது ஹேர்ஸ்டைல் மிஸ்ஸிங். புருவம் கூட நரைத்திருந்தது. வடநாட்டு முதியவர் மாதிரியான தோற்றத்தில் இருந்தார். திமிர்த்தனமாக எதிர்த்துப் பேசும் பொண்டாட்டியை பளாரென்று அறையும் அந்த கோபக்கார இளைஞனை காணவே காணோம்.

உடல் உபாதையால் பெரும் சிரமத்தில் இருப்பதாக அப்பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பதும் அவர் பேச்சில் தெரிந்தது. மீண்டும் திரையுலகில் நுழைந்து செகண்ட் இன்னிங்ஸ் ஆட தயாராக இருப்பதாக நம்பிக்கையோடு சொல்லியிருந்தார்.

இன்று அதே தினகரனின் இணையத்தளத்தில் அவரது மரணச் செய்தியை வாசித்தபோது இனம்புரியாத துன்பமும், பீதியும் ஏற்படுகிறது. நம் கண்ணுக்கெதிரே மின்னி, மறைந்த நட்சத்திரங்களின் வாழ்வை ஏதோ ஓர் ஆர்வத்தில் தெரிந்து வைத்துக் கொள்கிறோம். அவர்களது ஏற்றம் நமக்கு மகிழ்ச்சியை அளித்ததோ இல்லையோ, இறக்கம் வருத்தத்தை நிச்சயம் தருகிறது. மரணம் கடுமையான துன்பத்தை ஏற்படுத்துகிறது. மரணம் குறித்த நியாயமான அச்சம், இதுபோன்ற மரணங்களை கேள்விப்படும்போது பன்மடங்கு அதிகரிக்கிறது.

முன்பாக பாண்டியன், முரளி போன்றவர்களின் மரணம் இம்மாதிரியான பீதியை கடுமையாக ஏற்படுத்தியது. போனவாரம் கூட யதேச்சையாக ஏதோ ஒரு டீக்கடையில் ‘துள்ளி எழுந்தது காற்று, சின்ன குயிலிசை கேட்டு’ கேட்டபோது, என்னையறியாமலேயே சிலதுளி கண்ணீர் சிந்தினேன். நாம் பார்த்து, பழகியிராதவர்களுக்கு அழுகிறோமென்றால் அவர்கள் நம்முடைய சிறுவயது நினைவடுக்குகளில் புதைந்துப் போனவர்கள் என்பதே காரணமாக இருக்கக்கூடும். நம்முடைய அழுகை அவர்களுக்காகவா அல்லது தொலைந்துப்போன நம் பால்யத்துக்காகவா என்பதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை.

அடுத்தமுறை எங்காவது ‘மூங்கில் இலை காடுகளே’ கேட்கும்போதும் இதேபோல என் கண்களில் ஈரம் கசியும் என்பது நிச்சயம்.