22 ஜூன், 2012

புதைக்கப்படுகிறது புரட்சி?


எண்பத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக உலகப் பொதுவுடைமை சிந்தனையாளர்களின் புரட்சித் தலைவர் என்று போற்றப்படும் ரஷ்யத் தலைவர் லெனின் காலமானார். இத்தனை ஆண்டுகளாக அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல், பதப்படுத்தி ரஷ்ய அரசால், மாஸ்கோவில் செஞ்சதுக்கம் எனும் இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவ்வுடலை இப்போது அடக்கம் செய்யவேண்டும் என்கிற குரல் ரஷ்யாவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

பல்வேறு தடைகளை தாண்டி, இடையறாப் போராட்டங்கள் மூலம் ஒரு யுகப்புரட்சியை முன்னெடுத்ததால் ஏற்பட்ட உச்சக்கட்ட மனக்களைப்பு. ஆட்சியாளராக ஒரு நாளைக்கு பதினாறு மணி நேர கடும் உழைப்பு. புரட்சிக்கு முன்பாக உள்நாட்டுப் போர்களில் பங்கெடுத்ததால் ஏற்பட்ட உடல்நல குறைபாடுகள். பலமுறை இவர் மீது பிரயோகிக்கப்பட்ட கொலைமுயற்சிகள். அதுபோன்ற ஒரு முயற்சியின் போது இவரது தொண்டையில் சிக்கிய துப்பாக்கிக் குண்டு. அதை நீக்க ஒரு அறுவை சிகிச்சை. இன்னும் ஏராளமான காரணங்கள். புரட்சி மூலமாக 1917ல் ஆட்சிக்கு வந்த லெனினின் உடல், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக சீர்க்குலைவு அடைந்துக்கொண்டே போனதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

1924, ஜனவரி 21 அன்று தனது ஐம்பத்து மூன்றாவது வயதில் லெனின் காலமானார். ‘நியூரோசிபிலிஸ்’ எனப்படும் நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சினைகளே அவரது மறைவுக்கு காரணமென்று மருத்துவர்களால் சொல்லப்பட்டது. லெனின் மறைந்தபோது ரஷ்யப்புரட்சியை கடுமையாக எதிர்த்தவரும், லெனினின் எதிரியாக கருதப்பட்டவருமான பிரிட்டிஷ் தலைவர் வின்ஸ்டன் சர்ச்சிலின் அஞ்சலி சுவாரஸ்யமானது. “ரஷ்யர்களின் துரதிருஷ்டம் லெனினின் பிறப்பு. அதைவிட மோசமான படுமோசமான துரதிருஷ்டம் அவருடைய இறப்பு”. சம்பிரதாயத்துக்காக சொல்லாமல், சர்வநிச்சயமாக சொல்லலாம். ரஷ்யர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு லெனின்.

எனவேதான் அவரது உடலை புதைக்க அப்போதிருந்த ரஷ்ய கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர்களுக்கு மனமில்லை. எதிர்கால விஞ்ஞான வளர்ச்சியில் எது வேண்டுமானால் சாத்தியமாகலாம் என்று கூறி, லெனினின் உடலை பதப்படுத்தி பாதுகாக்க முடிவெடுத்தார்கள். ஒருவேளை இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பம் வருமேயானால், லெனினை உயிர்ப்பிக்க வைக்கலாம் என்றுகூட அவர்கள் நம்பியிருக்கலாம்.

மூன்று நாட்கள் லெனினின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பத்து லட்சம் பேர் அஞ்சலி செலுத்திய பிறகு, அவரது உடல் பதப்படுத்தப்பட்டு நிரந்தர காட்சியாக மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த இடத்துக்கு லெனின் மாஸோலியம் என்று பெயர் சூட்டப்பட்டது. ‘மாஸோலியம்’ என்றால் கல்லறை என்று பொருள். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகளாக பல கோடி உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் லெனினின் உடலை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ரஷ்யாவில் நாத்திகம் ஒரு மதமாகவே நிலைநின்று விட்டாலும், கிறிஸ்தவ ஆதிக்கத்துக்கு செல்வாக்கு அதிகம். அவ்வப்போது கிறிஸ்தவ குருமார்கள் லெனின் உடல் முறையாக அடக்கம் செய்யப்படாதது குறித்து முணுமுணுத்தாலும், வெளிப்படையாக குரல் கொடுக்க தைரியமின்றி கிடந்தார்கள்.

1989ஆம் ஆண்டு ரஷ்ய பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர், “லெனின் தனது உடலை தனது தாயாரின் சமாதிக்கருகில் புதைக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே செஞ்சதுக்கத்தில் இருக்கும் அவரது உடலை செயிண்ட் பீட்டஸ்பர்க்கில் புதைக்க வேண்டும்” என்று சொன்னார். நாடு முழுக்க அவருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

1990ஆம் ஆண்டு லெனினால் உருவாக்கப்பட்ட சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு (யு.எஸ்.எஸ்.ஆர்) சிதறியது.கம்யூனிஸம் தோற்றுவிட்டதுஎன்று கூறி, ரஷ்யப் புரட்சியின் அடையாளங்களாக இருந்த நினைவுச்சின்னங்கள் பலவும் அப்போது அழிக்கப்பட்டது. பொதுமக்களே இந்த அழிப்புப் பணியில் ஆர்வமாக இருந்தார்கள். ரஷ்யாவின் அசைக்கமுடியாத சர்வாதிகாரியாக திகழ்ந்த ஸ்டாலினின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால் அப்போதும் கூட லெனினின் உடலை அடக்கம் செய்வது குறித்து யாரும் நினைத்துப் பார்க்கக்கூட இல்லை. ஏனெனில் ரஷ்யர்களிடம் அவருக்கு இருந்த இமேஜ் அந்தளவுக்கு அசைக்க முடியாததாக இருந்தது.

காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. எழுபதுகளிலும், எண்பதுகளில் பிறந்து வளர்ந்த தலைமுறைக்கு முந்தையத் தலைமுறை மாதிரி பெரியளவில்லெனின் செண்டிமெண்ட்இப்போது இல்லை. இந்த சூழலைப் புரிந்துகொண்ட மிக்கேல் கோர்ப்பச்சேவ் (சோவியத் ரஷ்யா சிதற காரணமாக இருந்தவர்) சில ஆண்டுகளுக்கு முன்பாக, யாரும் பேச விரும்பாத இந்த விஷயத்தை பேசத் தொடங்கினார். “புதைந்துப்போன விஷயங்களை தோண்டியெடுக்கும் நிலையில் நாம் இப்போது இல்லை. இன்னமும் லெனின் உடலை நாம் பதப்படுத்தி, பாதுகாத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமேயில்லை. அவரது குடும்பத்தினர் விரும்பியபடி முறையாக மரியாதை செய்து அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது” என்றார்.

கோர்ப்பச்சேவின் இந்தப் பேச்சுக்கு கம்யூனிஸ்ட்டு ஆதரவாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியபோதிலும், அவரது கருத்துக்கும் நிறைய பேர் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினார்கள். கிட்டத்தட்ட நான்கைந்து காலமாக எதிரும், புதிருமாக வரிந்து கட்டிக்கொண்டு ரஷ்யர்கள் இந்த விஷயத்தை விவாதித்து வருகிறார்கள். ரஷ்ய ஆளுங்கட்சி இந்த விவகாரத்தை முள் மேல் பட்ட சேலையாக மிகக்கவனமாக கையாண்டு வருகிறது. அதே நேரம் லெனினின் உடல் புதைக்கப்பட வேண்டும் என்கிற மனவோட்டத்தை மக்களிடம் ஏற்படுத்தும் பணிகளையும் மறைமுகமாக செய்துவந்தது. கடந்த ஆண்டு லெனினின் உடலை புதைக்கலாமா என்று மக்களிடம் கருத்துகோரி ‘குட் பை லெனின்’ என்கிற இணையத்தளத்தை கூட உருவாக்கி இருந்தது.

மூன்றாவது முறையாக விளாதிமீர் புடின் ரஷ்ய அதிபராகிவிட்ட நிலையில் மீண்டும் ‘லெனின் உடல் புதைப்பு’ விவகாரத்தை தீவிரமாக்கியிருக்கிறார். குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல சில நாட்களுக்கு முன்பாக புடினுக்கு நெருக்கமானவரும், ரஷ்ய கலாச்சார அமைச்சருமான விலாடிமீர் மெடின்ஸ்கியை வைத்து ஒரு கருத்து கூற வைத்திருக்கிறார்.

“லெனினின் உடல் இத்தனை காலமாக அடக்கம் செய்யப்படாமல் இருப்பது அபத்தமானது. மரியாதைக்குரிய தலைவரான அவரது உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட வேண்டும். தனது உடல் எளிமையான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது அவரது கடைசி ஆசை. அதைகூட இத்தனை ஆண்டுகளாக நாம் செய்யாமல் இருப்பது வெட்கத்துக்குரியது. தற்போது அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சோவியத் வரலாற்று நினைவிடமாக மாற்றிவிடலாம்” என்று ரஷ்ய வானொலிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பொரிந்து தள்ளியிருக்கிறார் மெடின்ஸ்கி.

முன்பு 89ல் லெனின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக அமைச்சர் ஒருவர் பேசியபோது எழுத கடும் எதிர்ப்பெல்லாம் இப்போது இல்லை. மாறாக இணையத்தளத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 56 சதவிகிதம் பேர் லெனினின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றே கருத்து தெரிவித்திருக்கிறார்கள். முந்தையக் கணக்கெடுப்பில் 48 சதவிகிதம் பேர் இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். வருடா வருடம் லெனினின் உடலை அடக்கம் செய்யவேண்டும் என்கிற கருத்துக்கு ரஷ்யர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. நடப்பு நிலவரத்தை பார்த்தால் விரைவில் லெனினின் உடல் அடக்கம், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவரது தாயாரின் சமாதிக்கருகே நடக்கும் என்றுதான் தெரிகிறது.

இந்த விவகாரங்கள் சூடு பிடிப்பதற்கு முன்பாக ரஷ்ய கம்யூனிஸ்ட்டு கட்சி தன் கவலையை தெரிவித்திருந்தது. “சோவியத்தின் வரலாற்றை மாற்றி எழுத நினைக்கிறார்கள். புரட்சித் தலைவர் லெனினின் நினைவுகளை மக்கள் மனதில் இருந்து முற்றிலுமாக அகற்ற நினைக்கிறார்கள்” என்று அக்கட்சி கருத்து தெரிவித்திருந்தது.

புரட்சியை புதைக்க முடியுமா என்கிற கேள்விக்கு காலம்தான் விடையளிக்க வேண்டும்.

(நன்றி : புதிய தலைமுறை)

21 ஜூன், 2012

குமுதம் பிரார்த்தனை கிளப்


போன ஞாயிறு கொஞ்சம் ஓய்வாக இருந்தேன். வீட்டு லைப்ரரியில் சேகரிப்பில் இருந்த பழைய புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். பழைய ‘குமுதம்’ இதழ் ஒன்று கிடைத்தது. எந்த புத்தகம் வாங்கினாலும் உடனே அட்டையிலோ, முதல் பக்கத்திலோ தன்னுடைய கையெழுத்தை போட்டு வைத்துக் கொள்வது அப்பாவின் வழக்கம். அதுபோலவே புத்தகத்தில் அவரை கவர்ந்த வாசகங்கள் ஏதேனும் இருந்தால் அடிக்கோடிட்டு வைத்திருப்பார். கட்டுரைகள் அருகே அப்பிரச்சினை குறித்த அவரது கருத்தை சுருக்கமாக (வாசகர் கடிதம் மாதிரி) எழுதிவைப்பார். இதழைப் புரட்டும்போது உள்ளே ‘பிரார்த்தனை கிளப்’ பகுதியில் prayed என்று எழுதி கீழே கையெழுத்திட்டிருந்தார். நீண்டநாள் கழித்து அவரது அழகான கையெழுத்தை கண்டது மகிழ்ச்சியை தந்ததோடு, வேறு சில சிந்தனைகளையும் கிளறியது.


குமுதம் ‘பிரார்த்தனை கிளப்’ என்கிற பகுதியை இந்த தலைமுறை குமுதம் வாசகர்கள் எவ்வளவு பேர் அறிந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆசிரியர் எஸ்.ஏ.பி-க்கு கூட்டுப் பிரார்த்தனையில் நம்பிக்கை அதிகம். பிரார்த்தனை மூலமாக இறைவனிடம் எதையும் சாதித்துவிடலாம் என்கிற கருத்தை கொண்டிருந்தவர். எனவேதான் தன்னுடைய இதழில் ‘பிரார்த்தனை கிளப்’ என்கிற வாசகர்கள் அமைப்பை உருவாக்கியிருந்தார். நோய் நொடியில் இருப்பவர்கள், அறுவைச்சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் என்று இன்னலில் இருப்பவர்கள் குமுதத்துக்கு கடிதம் எழுதிப் போடுவார்கள். பிரார்த்தனை கிளப் பகுதியில் அக்கடிதம் பிரசுரிக்கப்படும். கீழே ஆசிரியர் ‘இவருக்காக இன்ன நேரத்தில் அனைவரும் அவரவர் வழிபடும் இடத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம்’ என்று வாசகர்களை கோருவார்.

சிறுவயதில் அப்பகுதியை வாசிக்கும்போது ‘டைம் வேஸ்ட்’ என்று நினைப்பேன். எங்கோ இருக்கும் யாருக்கோ எதற்காகவோ யார் மெனக்கெட்டு பிரார்த்திப்பார்கள் என்றெல்லாம் கருதியிருக்கிறேன். ஆனால் என்னுடைய அப்பாவே அதை தொடர்ச்சியாக பின்பற்றி வந்திருக்கிறார் என்பது எனக்கு கொஞ்சம் லேட்டாகத்தான் தெரிந்தது. பிற்பாடு நானெடுத்த குட்டி கணக்கெடுப்பு ஒன்றில் அப்போதிருந்த குமுதம் வாசகர்கள் (பிரார்த்தனையில் நம்பிக்கை கொண்டவர்கள்) பெரும்பாலான பேர் நேரமெடுத்து, மெனக்கெட்டு இந்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொள்ளும் வழக்கம் கொண்டவர்கள் என்பதை அறிந்துகொண்டேன். உள்ளகரம் ஆயில்மில் அருகே ஒரு யாக்கோபு சர்ச் உண்டு. ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை அந்த தேவாலயத்துக்கு சென்றபோது, குமுதம் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒரு அன்பர் மனமுருக ‘யாருக்கோ’ பிரார்த்திருத்துக் கொண்டிருந்ததை கூட கண்டிருக்கிறேன்.

இப்போது குமுதத்தில் ‘பிரார்த்தனை கிளப்’ வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஞாயிற்றுக்கிழமை ஒன்பது முதல் ஒன்பது மணிக்குள்ளாக வாசகர்கள் ஒட்டுமொத்தமாக முகம் தெரியாத யாரோ ஒருவருக்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவார்களா என்பதற்கு நிச்சயமுமில்லை.

கடந்த இருபது ஆண்டுகளில் மனிதநேயம் நிறைய வளர்ந்திருக்கிறது. மனித உரிமை அமைப்புகள் நிறைய உருவாகியிருக்கின்றன. சாதி, சமய, இன, தேச வேறுபாடுகள் குறித்த பிரக்ஞை குறைந்திருக்கிறது. அடுத்தவர் மீதான அக்கறை அதிகரித்திருக்கிறது. அதேநேரம் ஆன்மீகமும் பல்வேறு வடிவங்களில் முன்பிலும் அதிகமாக மக்களை ஈர்க்கிறது. இப்படியெல்லாம் ஒரு தோற்றம் எனக்குள் இருக்கிறது. சமகால தலைமுறை குறித்து சமகாலத்தில் வாழும் யாருக்கும் இருக்கும் பெருமிதம்தான் இது. ஆனால், போன தலைமுறையிடம் இருந்த ஏதோ ஒன்று, இன்றைய தலைமுறையிடம் ‘மிஸ்’ ஆகிறது என தோன்றுகிறது. முந்தையத் தலைமுறை அதற்கு முந்தையத் தலைமுறையோடு ஒப்பிட்டு இவ்வாறாக ‘ஃபீல்’ செய்ததாக தெரியவில்லை.

என் அப்பாவை விட நான் அறிவாளி. என் அப்பாவுக்கு கிடைத்த வாய்ப்புகளைவிட எனக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கிறது. அவரைவிட வசதியாக வாழ்கிறேன். அவர் நினைத்தே பார்க்க முடியாத உயரங்களை நான் அனாயசமாக அடைகிறேன். ஆனால் அவரளவுக்கு நான் உன்னதமானவனாக, உண்மையானவனாக இல்லை. சமூகம் குறித்த அப்பாவின் மதிப்பீடும், அக்கறையும் அவரளவுக்கு எனக்கில்லையோ என்கிற குற்றவுணர்வு தோன்றுகிறது.

கடந்த தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்குமான மரபுத்தொடர்ச்சியில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கும், இப்போதையத் தலைமுறைக்கும் தொடர்ச்சியே இல்லாத விரிசலுக்கும் வாய்ப்பிருக்கிறது. எதை, எங்கே தொலைத்திருக்கிறோம் என்பதைக் குறித்து கொஞ்சம் துல்லியமாகவே ஆராய வேண்டும்.


20 ஜூன், 2012

மனசாட்சி வியாபாரம்



முந்தையப் பதிவான ‘வாய்ப்பும்,யோக்கியதையும்’ பதிவின் தொடர்ச்சியாக இதைக் கொள்ளலாம். ஏனெனில் அப்பதிவு பூடகமாக எழுதப்பட்டிருந்தது என்று சில நண்பர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். என்ன எழவு பூடகம் என்று புரியவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்களாக இருப்பவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி சம்பளம் வாங்கிக் கொள்ளலாம். அது வெறும் கூலி. உழைப்புக்கு தரப்படுவது. ஆனால் டாட்டாவுக்கு விளம்பரப்படம் எடுத்ததாலேயே லீனா கைக்கூலி என்பது மாதிரியான அதிசய விளக்கங்களை பின்னூட்டங்களில் பெற நேர்ந்தது.

காலச்சுவடு நிறுவனத்தின் மீது ஷோபாசக்தி நீண்டகாலமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துக் கொண்டிருந்தார். ‘பிராமின்ஸ் டுடே’ என்கிற சாதியப் பத்திரிகை காலச்சுவடு முகாமில் இருந்து வந்துக் கொண்டிருப்பதாக. காலச்சுவடு சார்பாக இது மறுக்கப்பட்டு வந்தது. அந்த குறிப்பிட்ட பத்திரிகைக்கான டி.டி.பி/வடிவமைப்புப் பணிகளை மட்டுமே தாங்கள் செய்துத் தருவதாகவும், இது தொழில்ரீதியான உறவேயன்றி, உணர்வுரீதியான உடன்பாடான உறவல்ல என்பது மாதிரியான மறுப்பு அது. ஆனாலும் காலச்சுவடு பற்றி எப்போது ஷோபா விமர்சிக்கும்போதும் ‘பிராமின்ஸ் டுடே’-வுக்கு கட்டாயம் இடஒதுக்கீடு உண்டு.

இம்மாதிரி ஒரு குற்றச்சாட்டு என் மீதோ, உங்கள் மீதோ சாட்டப்பட்டால் நாம் என்ன செய்வோம்? அதைதான் காலச்சுவடும் செய்தது. ஷோபா தொடர்பான ‘ஓட்டை’கள் ஏதேனும் மாட்டுமா என புலனாய்வு செய்தது. இந்த தூண்டிலில் மாட்டியது லீனா. டாடா ஸ்டீலுக்கான புதிய விளம்பரங்களை ஓகில்வி நிறுவனம் தனது தளத்தில் வெளியிடும்போது கிரெடிட்ஸ் பகுதியில் ‘தேஜஸ்வினி’ திட்டம் குறித்த விளம்பரத்துக்கு இயக்குனர் லீனாமணிமேகலை என்கிற தகவல் வெளிப்பட்டிருந்தது. ஷோபாவை மாட்டவைக்க எதுவும் கிடைக்காவிட்டால் என்ன, அவருடைய நண்பரான லீனாவை மாட்டிவிட்டால் போதுமே. குறைந்தபட்சமாகவாவது ஷோபாவை சங்கடப்படுத்தலாம் என்பதே காலச்சுவடின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். மற்றபடி அதே டாட்டா ஸ்டீல் நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக காலச்சுவடின் பின்பக்க அட்டையில் விளம்பரம் தருகிறேன் என்று சில லட்சங்களை தர முன்வந்தால், காலச்சுவடு ஆதிவாசிகளுக்கு நியாயம் தேடும் அறச்சீற்றத்தோடு மறுக்குமென நாம் கருத இடம் ஏதுமில்லை.

ஆனால் காலச்சுவடு என்ன நினைத்ததோ அதை சாதித்துக் கொண்டது என்றே தோன்றுகிறது. அது பற்ற வைத்த தீ செழிப்பாகவே எரிந்தது. லீனாவுடைய எதிரிகள் மட்டுமின்றி அவரது நண்பர்களும் கூட கறாராக அறம் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஜெயமோகனும் தன் பங்குக்கு எழவு வீட்டில் வேர்க்கடலை விற்க கிளம்பிவிட்டார். இச்சந்தர்ப்பத்தைபயன்படுத்தி காலச்சுவடு கண்ணன், அ.மார்க்ஸ் ஆகியோரிடம் தனக்கு ஏற்கனவே இருக்கும் பழையகணக்கு வழக்குகளை தீர்த்துக் கொள்கிறார். அதையெல்லாம் விட ஆச்சரியம். எப்போதோ செத்துப்போய் அடக்கம் செய்துவிட்டவர்களை எல்லாம் தோண்டியெடுத்து இழிவுசெய்யும் ஜெயமோகன் அப்பதிவில் இவ்வாறாக எழுதுகிறார். “தமிழில் இந்த அளவுக்கு கீழ்த்தரமான வன்மம் வேறெங்காவது வெளிப்படுகிறதா என்றே ஆச்சரியமாக இருக்கிறது. என்ன கொடுமை சார் இதெல்லாம்?

அத்தோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. “அன்புள்ள அல்லிக்கு...” பாணியில் தினமும் யாராவது ஒரு வாசகர் ஜெயமோகனிடம் உலகின் சர்வபிரச்சினைகளுக்கும் தீர்வு கேட்டு கடிதம் எழுதுவது வழக்கம். இந்த குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக பாண்டியன் எம்.கெ. என்பவர் கடிதம் எழுதி, அதற்கு ஜெயமோகன் பதிலும் அளிக்கிறார். வழக்கமான ஊன்னா தான்னா பாணியிலான படுநீளமான, கொட்டாவி விடவைக்கும் பதில்தான். தொடர்ச்சியாக ஜெயமோகனின் பதிவுகளை வாசித்து வருகையில் அவர் கடந்த ஜென்மத்தில் ராஜாஹரிச்சந்திராவாக பிறந்திருப்பாரோ என்கிற சந்தேகம் நமக்கு எழாமல் இருக்காது. இந்தப் பதிவும் அவ்வகையிலான செல்ஃப் ப்ரமோஷன் பதிவுதான். முழுக்க சிங்குலர் பர்சனில் ‘அரசாதி அரச அரச குலோத்துங்க’ பாணியில் அவரை அவரே வாழ்த்தி, பாராட்டி, மெய்சிலிர்த்து, கண்கலங்கி சிலாகித்துக் கொள்கிறார். இதெல்லாம் நமக்குப் பிரச்சினையில்லை. தினம் தினம் இவரை வாசித்து நம்மை நாமே துன்புறுத்திக் கொள்ளும் மசோகிஸ்ட்டுகளாக ஜெயமோகனால் ஏற்கனவே நாம் உருவெடுத்துவிட்டோம்.

நைசாக தலைவர் ’பிட்டை’செருகுகிறார். ‘சிந்துசமவெளி’ என்கிற ‘பிட்டு’ படத்தில் தனக்கு பங்களிப்பே இல்லை. ஆனாலும்அதை என்னோடு தொடர்புபடுத்தி அவதூறு பேசுகிறார்கள் என்கிறார். நன்றாக நினைவிருக்கிறது. அப்படம் வெளிவருமுன்பாக ஜெயமோகன் தனது தளத்தில் ‘சிந்து சமவெளி’ குறித்து விரிவாக எழுதிய விளம்பரக் கட்டுரை ஒன்று. இயக்குனர் சாமி எப்படிப்பட்ட அப்பாடக்கர். சினிமாத்தொழில் எப்படி இவருக்கு நிறைவை அளிக்கிறது என்றெல்லாம் விஸ்தாரமாக எழுதியிருக்கிறார். இப்போது மிகக்கவனமாக தனக்கும், சிந்துசமவெளிக்குமான உறவை வரலாற்றில் இருந்து முற்றிலுமாக மறைக்க நினைக்கிறார் ஜெயமோகன். விக்கிப்பீடியாவில் ஏதாவது ஆதாரம் தட்டுப்படுமா என்றெல்லாம் தேடிப்பார்க்காதீர்கள். விக்கிப்பீடியா என்பது விஷ்ணுபுரம் ஏரியா.

//அந்தப்படத்தில் பங்களிப்பாளர்களின் பெயர்களில் என்பெயர் சொல்லப்படவில்லை // என்று எப்படித்தான் வாய்கூசாமல் இவரால் சொல்லமுடிகிறதோ தெரியவில்லை. மேற்கண்ட விளம்பரம் சிந்துசமவெளி திரைப்படத்துக்கான இசைவெளியீட்டின் போது வெளியிடப்பட்டது. இன்றும் சிந்துசமவெளி எங்காவது ‘கில்மா’ படம் ஓடும் தியேட்டர்களில் ஓடினால், அதற்காக ஒட்டப்படும் சுவரொட்டிகளில் நாம் ‘ஜெயமோகன்’ பெயரை காணலாம். ஜெயமோகன் தனது தளத்தில் பதிந்திருக்கும் தினமலர் நேர்காணலில் கூட ‘நான் கடவுள்’, ’அங்காடித்தெரு’ படங்களைத் தொடர்ந்து ‘சிந்து சமவெளி’ படத்துக்கு வசனம் எழுதிக்கொண்டு இருக்கிறார்என்றே இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே தான் திரைப்பங்களிப்பு அளித்த திரைப்படங்களாக இரண்டே இரண்டு படங்களை (நான் கடவுள், அங்காடித்தெரு) மட்டும் குறிப்பிடுகிறார். அவை அதுவரை திரையில் பேசப்படாத ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை இத்யாதி, இத்யாதியெல்லாம் பேசுவதால் அவற்றை மட்டும் தன்னுடைய கணக்கில் சேர்த்துக் கொள்கிறார். முன்பாக படுதோல்வியடைந்த ‘கஸ்தூரி மான்’ என்கிற திரைப்படத்துக்கும் இவர்தான் வசனம் என்று அறிகிறோம். என்ன காரணமோ தெரியவில்லை. அது ஜெமோவின் அக்கவுண்டுக்கே வரவில்லை. ஒருவேளை ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களைப் பற்றி அது பேசவில்லையோ என்னவோ? ஜெயமோகனைப் போல செய்துவிட்ட ஒரு வேலையை செய்யவேயில்லை என்று லீனா மறுக்கவில்லை.

இப்படிப்பட்ட ஜெயமோகன்தான் போலிவேடதாரிகள், தங்கள் மூளைகளை விற்பனைக்காக சந்தையில் விரித்து வைத்திருப்பவர்கள், அற்ப பிழைப்பு வாதிகள், சில்லறை நோக்கங்களுக்காக வாழ்பவர்கள் என்று தனக்கு உவப்பில்லாதவர்கள் அத்தனை பேர் மீதும் முத்திரை குத்திக் கொண்டிருக்கிறார்.

என்ன செய்வது? ஊர் ரெண்டு பட்டிருக்கிறது. ஜெயமோகனுக்கு கொண்டாட்டம்தான்!

16 ஜூன், 2012

வாய்ப்பும், யோக்கியதையும்


ஓகில்வி & மாதர் (ஓ & எம்) என்பது ஓர் உலகளாவிய விளம்பர நிறுவனம். உலகம் முழுக்க 450 அலுவலகங்கள். 120 நாடுகளில் இயங்குகிறது. சுமார் இருபதாயிரம் ஊழியர்கள். விளம்பரம் என்றாலே உங்களுக்கு நினைவு வரும் விளம்பரங்கள் பத்து என்றால், அதில் குறைந்தபட்சம் ஐந்தாவது ஓ & எம் நிறுவனம் எடுத்தவையாகதான் இருக்கும். நம்மூரிலேயே ஃபெவிகால், ஹட்ச் என்று பேசப்பட்ட அவர்களது விளம்பரங்கள் ஏராளம். சினிமாவில் ‘வார்னர் பிரதர்ஸ்’ எப்படியோ, விளம்பரத்துறையில் இவர்கள் அப்படி என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்த நிறுவனம் ஒரு விளம்பரப்படம் இயக்கச் சொல்லி ஒரு இயக்குனரை கேட்டுக்கொண்டால் அவரால் மறுக்கவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.

அவ்வாறு மறுக்கக்கூடிய ‘தில்’ இருப்பவர்கள், ‘அக்கிரகாரத்தில் கழுதை’ மாதிரி ஆர்ட் படங்கள் எடுத்துதான் காலத்தை ஓட்ட முடியும். ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த இயக்குனராவது, “ரஜினி தமிழனுக்கு எதுவும் செய்யவில்லை. மைசூரில்தான் தான் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்கிறார்” என்கிற கருத்தையையோ, தமிழ்தேசிய-திராவிட-இடதுசாரி-லொட்டு-லொசுக்கு கொள்கைகளையோ முன்வைத்தோ இங்கு மறுக்கக்கூடிய சூழல் இருக்கிறது என்று யாரேனும் நினைக்கிறீர்களா?

நல்லதோ, கெட்டதோ. உலகமயமாக்கல் சூழலில் யாரும் வாய்ப்புகளை தவறவிட விரும்புவதில்லை. ஆனானப்பட்ட அறிவுப்பேராசான் மார்க்ஸே கூட ‘பொதுவுடைமை’ எழுதவும், முதலாளி வர்க்கத்துக்கு எதிரான கருத்துகளை சிந்திக்கவும் பொருளாதாரரீதியாக ஏங்கெல்ஸ் என்கிற முதலாளிதான் உதவியிருக்கிறார். தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு பொருளுதவி செய்தவர்களுள் சில பார்ப்பனர்களும் அடக்கம். நாமெல்லாம் எம்மாத்திரம்?

ஓரிரு விதிவிலக்குகள் நிச்சயமாக இருக்கலாம். எல்லா இயக்கங்களிலுமே கொள்கை சமரசத்துக்கு துளியும் ஆட்படாதவர்கள் நான்கைந்து பேராவது இருக்கத்தான் செய்கிறார்கள். கிட்டத்தட்ட இது துறவி மனநிலை. துறவியாக வாழ நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது பேரால் முடியாது. இதற்காக இந்த தொண்ணூற்றி ஒன்பது பேரும் அயோக்கியர்கள் என்று பொருளல்ல. வாய்ப்புகளுக்காகவும், அங்கீகாரத்துக்காகவும் ஏங்கும் அல்பஜீவிகள்தான் எல்லாருமே. இதில் யார் சின்ன அல்பம், யார் பெரிய அல்பம் என்று பட்டிமன்றம் வைப்பதைவிட அபத்தமான செயல்பாடு வேறொன்று இருக்க முடியாது.

யாரோ ஒருவர் மாட்டிக் கொண்டால், ஒட்டுமொத்தமாக சூழ்ந்து அவரை சாத்துவது என்பதை நம்முடைய பண்பாட்டுச் செயல்பாடாகவே வைத்துக் கொண்டிருக்கிறோம். இவர்களில் எத்தனை பேர் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்துக் கொண்டு, நாம் எந்தவகையிலும் எங்குமே சமரசமே செய்துக் கொண்டதில்லை என்று சீதை மாதிரி தீக்குளித்து நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்? சிறு சமரசங்கள் பரவாயில்லை. பெரிய சமரசம்தான் தப்பு என்று சப்பைக்கட்டு கட்டித்தானே நம்முடைய யோக்கியதையை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்?

அடிக்கடி அறிவுஜீவிகள் ‘நடுத்தர வர்க்கத்து மனோபாவத்தை’, சாதாரண லவுகீக செயல்களில் எல்லாம் கண்டுபிடித்து கிண்டலடிப்பதும், கண்டிப்பதும் வழக்கம். அறிவுசார் செயல்பாடுகளில் அறிவுஜீவிகளின் நடவடிக்கையும் அச்சு அசலாக நடுத்தர வர்க்கத்து மனப்பான்மையோடே இருப்பதை பல்வேறு விவகாரங்களில் வெளிப்படையாகவே கண்டுகொள்ள முடிகிறது. நம் சூழலில் செயல்படும் பெரும்பாலான அறிவுஜீவிகள் அல்லது அறிவுஜீவி ஜீப்பில் தாமாக வந்து ஏறிக்கொண்ட கோமாளிகளும் எவ்வகையிலும் நடுத்தர மனப்பான்மையை தாண்ட முடியாதவர்கள் என்பதே உண்மை. நடுத்தர வர்க்கத்துக்கே உரிய பொறாமை, பொச்சரிப்பு, புறம் பேசுதல் என்று எல்லா நடவடிக்கைகளையும் கைக்கொள்ளும் இவர்கள் எப்படி அறிவுஜீவிகளாக இருக்கமுடியும்?

பைபிளை எனக்கு ஏன் பிடிக்குமென்றால் “உங்களில் யார் யோக்கியரோ, அவர் முதல் கல்லை எறியலாம்” என்கிற வசனத்துக்காக. நம்மூரில் எப்போதும், யார்மீதாவது லோடு, லோடாக கல் எறியப்படுவது வாடிக்கை. முதல் கல்லை எறிந்தவரிடம் மட்டுமல்ல, கடைசிக்கல்லை எறிந்தவர் வரை யாரிடமும் யோக்கியதையை எதிர்பார்க்க முடியவில்லை.

14 ஜூன், 2012

ஓர் அணில் உதவி


நாமக்கல் அருகே உள்ள நல்லிப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர்  திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து வருகிறார்.  ஆறு செமஸ்டர்களை நிறைவு செய்துவிட்டு ஏழாவது செமஸ்டரில் அடியெடுத்து வைக்கும் அந்த மாணவர், நல்லிப்பாளையம் UCO வங்கியில் கல்விக் கடன் பெற்று படித்து வருகிறார். ஏழை மாணவர் என்பதால் வட்டிக்கு அரசு அளிக்கும் மானியம் பெறத் தகுதியானவர்.

கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்த வேண்டியதில்லை. தொழிற்கல்வி பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு வட்டிக்கான மானியமும் உண்டு.இந்த மானியத்தை கடனளிக்கும் வங்கிகள் அவர்களே அரசு நியமித்துள்ள வங்கிளிடமிருந்து  பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தத் தகவல்களை ஜூன்7 2012  புதிய தலைமுறையில் வெளியிட்டிருந்தோம்

விதிகள் இவ்வாறிருக்க  வட்டித் தொகையான 24000 ரூபாயைக் கட்டினால்தான் இந்த செமஸ்டருக்கான கடன் தொகையைத் தரமுடியும் என வங்கி மேலாளார் கண்டிப்பாகச் சொல்லி விட்டார். கடந்த ஆண்டும் இதே போல வற்புறுத்தி 16500 ரூபாயைச் செலுத்தச் சொல்லியிருக்கிறார். கல்லூரி திறக்கிற நேரமானதால் அவரது பெற்றோருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.கந்து வட்டிக்காரர்களிடம் 36 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கி வங்கியில் பணம் கட்டிவிட்டனர்.

கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்த வேண்டியதில்லை. தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டிக்கான மானியமும் உண்டு. என்ற தகவல்களை வெளியிட்டிருந்த புதிய தலைமுறைக் கட்டுரையில் Education Loan Task force (ELTF) என்ற அமைப்பின் இணைய முகவரியையும் வெளியிட்டிருந்தோம். இந்த அமைப்பு அப்துல் கலாமின் கனவான விஷன் 2020 என்பதால் உந்தப்பட்டு அவரது ஆசியுடன் நடந்து வரும் அமைப்பு. ஸ்ரீநிவாசன்  என்ற விருப்ப ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி/ இந்த அமைப்பை முன்னின்று நடத்தி வருகிறார். .

புதிய தலைமுறையைப் படித்த விக்னேஷ்,  ஸ்ரீநிவாசனை ஜூன் 7ம் தேதி இரவு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு தனது பிரச்சினையத் தெரிவித்துள்ளார். ஸ்ரீநிவாசன் மறுநாள் UCO வங்கியின் நல்லிப்பாளையம் கிளை மேலாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விதிகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் வங்கி மேலாளார் ஆணவமாகப் பதில் சொன்னதாக ஸ்ரீநிவாசன் தெரிவிக்கிறார். “நீ யார் கிட்ட வேணா போய்ச் சொல்லிக்கோ, வட்டி கட்டினால்தான் பணம் கொடுக்க முடியும். எங்கள் பாங்க் விதிகள் அப்படித்தான் சொல்கின்றன” என்று சொல்லிவிட்டார்.

உடனே ஸ்ரீநிவாசன் அன்றே மேலதிகாரிகளை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு நடந்ததைத் தெரிவித்திருக்கிறார். அவரது மின்னஞ்சலில் புதிய தலைமுறைக் கட்டுரையைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அன்று மாலை (ஜூன் 8) வங்கியின் துணைப் பொது மேலாளர் திரு வெங்கடாச்சலம் ஸ்ரீநிவாசனுடன் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்கிறார். அவர் கிளை மேலாளரைத் தொடர்பு கொண்டு விதிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியிருந்திருக்க வேண்டும். சிறிது நேரத்தில் வங்கிக் கிளை மேலாளரே விக்னேஷைத் தொடர்பு கொண்டு அடுத்த செமஸ்டருக்கான கல்விக் கட்டணத்திற்குரிய வரைவோலையை வங்கியில் வந்து வாங்கிக் கொள் என்று சொல்லியிருக்கிறார். ஜூன் 9ம் தேதி விக்னேஷ் வங்கிக்குச் சென்று வரைவோலையைப் பெற்றுக் கொண்டுவிட்டார்.

இது போல் இந்தக் கிளையில் இன்னும் எத்தனை மாணவர்களுக்கு நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஸ்ரீநிவாசன் வங்கி நிர்வாகத்திடம் தெரிவிக்கிறார். ஜூன் 9ம் தேதி மாலை கோவை மண்டல மேலாளர் பாஷா ஸ்ரீநிவாசனைத் தொடர்பு கொண்டு தான் ஜூன் 11ம் தேதியன்று  வங்கிக் கிளைக்கே சென்று விசாரணை நடத்த இருப்பதாக தெரிவித்தார் .


அவர் விசாரணைக்கு வந்த போது 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவரிடம்  வங்கிக் கிளை மேலாளர் மூலம் சந்தித்து வரும் பிரச்சினைகளத் தெரிவித்ததாக அறிகிறோம். தகுதியுள்ள மாணவர்களுக்கு அவர்களிடம் வட்டியாக வாங்கிய பணத்தைத் திருப்பியளிக்க ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளதாக திரு. பாஷா புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறையைப் படித்து முறையிட்ட மாணவருக்கு மின்னல் வேகத்தில் உதவிகளைப் பெற்றுத் தந்த ELTF அமைப்பிற்கும், ஸ்ரீநிவாசனுக்கும், அவர்  மின்னஞ்சலின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த UCO வங்கியின் மேலதிகாரிகளுக்கும் பணிவன்போடு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் ஆற்றிய பணி மிகப் பெரிது.
இது ஒரு வங்கியில் ஒரு கிளையில் மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. இது போன்று அநேகமாக எல்லா வங்கிகளிலும் ஏதோ ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கிளைகளில் மாணவர்களும் பெற்றோர்களும் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள்.

வங்கிகளின் மேல் அதிகாரிகள் வங்கிக் கிளைகளில் விதிமுறைகளின்படி தகுதியான மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை மேற்பார்வையிட மண்டல வாரியாக சமூக அமைப்புக்கள், பத்திரிகையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அதே போல் கல்விக் கடன் தொடர்பான புகார்களை மின்னல் வேகத்தில் விசாரித்து அவற்றைத் தீர்ப்பதற்கென்று பிரத்யேக குறை தீர்க்கும் மையங்கள் அமைக்கப்பட வேண்டும் எனப் புதிய தலைமுறை வலியுறுத்துகிறது.


(நன்றி : புதிய தலைமுறை - ஆசிரியரின் தலையங்கத்திலிருந்து...)