26 ஜூலை, 2012

காணாமல் போனவை @ சென்னை


சாதாரண பேனா காணாமல் போனாலே துடிதுடிக்கின்ற இளகியமனதுக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள். தலைநகர் சென்னையில் சமீபத்திய சில வருடங்களில் காணாமல் போன முக்கியமான சில லேண்ட்மார்க்குகள் இவை...

உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன் ஓட்டல்
சென்னையில் ‘சந்திப்பு’ என்றாலே, ஒரு காலத்தில் உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன் தான். நகரின் இதயப் பகுதியில் அமைந்திருந்தது உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன். அண்ணா சாலை கதீட்ரல் சாலை சந்திப்பில். காட்டுக்குள் அமர்ந்திருப்பதைப் போன்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தும். திறந்தவெளியில் வாகனத்தை நிறுத்தி, சூடாக போண்டாவோ, மசாலா தோசையையோ உள்ளே தள்ளலாம். ‘ட்ரைவ் இன்’ எனப்படும் வாகனத்திலிருந்தே உணவு அருந்தும் வசதிகொண்ட சென்னையின் முதல் ஓட்டலாக இது இயங்கத் தொடங்கியது. அட்டகாசமான ஃபில்டர் காபி குடிக்கலாம். இலக்கியமோ, சினிமாவோ எதை வேண்டுமானாலும் நேரம் போவது தெரியாமலேயே அரட்டையடித்து கழிக்கலாம்.

1962ஆம் ஆண்டு 18 ஏக்கர் நிலம், தோட்டக்கலைத் துறையினரிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டது. நடிகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரும் கூடிப்பழகும் இடமாக நாளடைவில் பரிணாமம் பெற்றது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் சென்னையின் நடுத்தர வர்க்கத்தினருக்கு வேடந்தாங்கலாக உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன் திகழ்ந்தது. இடையே ஏராளமான நவீன ஓட்டல்கள் சென்னையில் பெருகிவிட்டாலும், உட்லண்ட்ஸுக்கான மவுசு மட்டும் மக்களிடம் கடைசிவரை குறையவேயில்லை.

சில வருடங்களுக்கு முன்பு தனியாரிடம் குத்தகைக்கு விடப்பட்ட இந்த இடத்தை மீண்டும் தோட்டக்கலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென அரசுரீதியான அரசியல் அழுத்தம் தரப்பட்டது. உயர்நீதிமன்றம் வரை விவகாரம் சென்று, கடைசியாக 2008ல் உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன் இழுத்து மூடப்பட்டது. 46 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்தது.

அப்போதைய அரசாங்கம் அதே இடத்தில் ‘செம்மொழிப் பூங்கா’ அமைத்தது. பூங்காவும் சிறப்பான ஏற்பாடுதான் என்றபோதிலும், அந்த இடத்தை இப்போது கடக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பழைய உட்லண்ட்ஸ் ரசிகர்கள் அன்றைய அரசாங்கத்தை இன்னமும் சபித்தபடியே கடக்கிறார்கள்.
  
மூர் மார்க்கெட்
சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னையின் அடையாளங்களில் ஒன்று. அதையொட்டி ஒரு காலத்தில் ஒரு வணிகவளாகம் சீரும், சிறப்புமாக செயல்பட்டு வந்தது. 1898ல் ஜார்ஜ் மூர் என்கிற வெள்ளைக்காரத்துரை அடிக்கல் நாட்டி உருவாக்கப்பட்ட வளாகம் இது. பிராட்வே சாலையில் வணிகர்களுக்கு இடம் போதவில்லை என்பதால் இது உருவாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இறைச்சிக்கடை, உணவுப் பொருட்களுக்கான அங்காடிகள், பூக்கடைகள் என்றிருந்த மார்க்கெட் பிற்பாடு பரிணாமம் பெற்று பழங்காலப் பொருட்கள், கலைப்பொருட்கள், புத்தகங்கள், செல்லப் பிராணிகள் என்று பன்முகத்தன்மை பெற்றது. இங்கு ஒரு பொருள் கிடைக்காவிட்டில், சென்னையில் வேறெங்குமே கிடைக்காது என்கிற நிலை கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தது. பழையப் பொருட்களை மலிவுவிலையில் செகண்ட் ஹேண்ட் ஆக வாங்க வேண்டுமானால் மூர்மார்க்கெட்தான் ஒரே கதி.

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனை விரிவுபடுத்த இந்திய ரயில்வே இந்த இடத்தை கையகப்படுத்த நினைத்தது. வணிகர்களின் எதிர்ப்பால் இம்முயற்சி வெற்றிபெறவில்லை. 1985ஆம் ஆண்டு ஒரு ‘மர்மமான’ தீவிபத்தால் இந்த வளாகம் முற்றிலுமாக சீர்க்குலைந்தது. பின்னர் அதே இடத்தில் சென்னைப் புறநகர் ரயில்வே முனையமும், ரயில் முன்பதிவுக்கான நிலையமும் அமைந்தது.

1986ல் மூர்மார்க்கெட் இருந்த இடத்துக்கு மேற்கே ‘லில்லி பாண்ட் காம்ப்ளக்ஸ்’ என்கிற பெயரில் மூர்மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஒரு வளாகத்தை அரசு அமைத்துக் கொடுத்தது. ஆயினும் பழைய மார்க்கெட்டுக்கு இருந்தமாதிரியான வரவேற்பு, புதிய மார்க்கெட்டுக்கு கிடைக்கவில்லை. இடையே தி.நகர் பெரும் வணிககேந்திரமாக உருவெடுத்துவிட்டது. புத்தகங்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், டிவிடி, செல்லப் பிராணிகள் என்று பல்வேறு விஷயங்கள் இன்னும் விற்றுக் கொண்டிருந்தாலும் சொல்லிக் கொள்ளும்படி விற்பனை இல்லை. பழம்பெருமையின் மிஞ்சிய நினைவுகளாக, சோகையான விளக்கொளியில், கடனுக்கே என்று இயங்கிக் கொண்டிருக்கிறது இப்போதைய மூர்மார்க்கெட்.
  
சென்ட்ரல் ஜெயில்
இந்தியாவின் பழமையான சிறைச்சாலைகளில் ஒன்று சென்னை சென்ட்ரல் சிறைச்சாலை. 1837ல் இயங்கத் தொடங்கிய இச்சிறைச்சாலை 172 வருடங்களாக லட்சக்கணக்கானோரை தங்கவைத்து, கடைசியாக 2009ல் தன் மூச்சை நிறுத்திக் கொண்டது. இதற்குப் பதிலாக புதிய சிறைச்சாலை நவீன வசதிகளுடன் சென்னை புறநகர் புழலில் உருவாக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தீவாந்தர தண்டனை பெற்ற கைதிகள் அந்தமான் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவார்கள். இந்தியா முழுக்க இருந்து அதுபோல அனுப்பப்படும் கைதிகள் சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் அழைத்துச் செல்லப்படுவார்கள். கப்பலில் ஏற்றுவதுவரை அவர்களை சிறைபிடித்து வைக்கவே சென்னையில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது. பதினோரு ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான சிறைச்சாலையை கட்டுவதற்கு அப்போது ஆன செலவு ரூ.16,496/- மட்டுமே.

சுதந்திரக் காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வீர்சாவர்க்கர் ஆகியோர் இங்கு அடைபட்டிருந்தார்கள். தமிழக முதல்வர்கள் சி.என்.அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் இங்கு சிறைவாசிகளாக இருந்ததுண்டு.

சிறை இடிக்கப்பட்ட இடம் சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காகவும், அரசு பொதுமருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்காகவும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இடிக்கப்படுவதற்கு முன்பாக முன்னாள் சிறைவாசிகள் பலரும் நேரில் வருகைதந்து, பழம் நினைவுகளை மீட்டிக் கொண்டது உணர்ச்சிப்பூர்வமான ஒரு தருணம்.
  
ஜெமினி ஸ்டுடியோ
திரையுலக ஜாம்பவான் கே.சுப்பிரமணியம் 1940ஆம் ஆண்டு, சென்னை அண்ணாசாலையில் இருந்த அந்த இடத்தை விற்றபோது, அதன் மதிப்பு 86,000 ரூபாய். திருத்துறைப்பூண்டி சுப்பிரமணியன் சீனிவாசன் (ஆனந்தவிகடன் உரிமையாளர் எஸ்.எஸ்.வாசன்) என்பவர் வாங்கி ஜெமினி ஸ்டுடியோஸ் என்று பெயரிட்டார். முன்னதாக இது மோஷன் பிக்சர் ப்ரொடியூஸர்ஸ் ஸ்டுடியோ என்கிற பெயரில் இயங்கி வந்தது.

குதிரைப் பந்தயங்களில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர் வாசன். அடிக்கடி ஜெயிக்கிற தன்னுடைய அதிர்ஷ்டக்கார குதிரையான ஜெமினியின் பெயரையே, தன்னுடைய ஸ்டுடியோவுக்கும் சூட்டினார். தென்னிந்திய திரைப்படத்துறையே ஒரு காலத்தில் ஜெமினியில் இயங்கிவருமளவுக்கு, இந்த ஸ்டுடியோ செல்வாக்கு பெற்றிருந்தது. அருகில் இருக்கும் அண்ணா மேம்பாலத்தை, இன்னும் கூடஜெமினி மேம்பாலம்என்றே பழைய சென்னைவாசிகள் குறிப்பிடுகிறார்கள். கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு சிறப்பாக செயல்பட்ட ஸ்டுடியோ, பிற்பாடு பல்வேறு காரணங்களால் களையிழக்கத் தொடங்கியது.

ஸ்டுடியோ இருந்த ஒரு பகுதியில் ஜெமினி பார்சன் என்கிற பெயரில் வணிகவளாகம் உருவானது. ஜெமினி ஸ்டுடியோ இருந்த இடத்தில் இப்போது ‘தி பார்க்’ என்னும் நட்சத்திர ஓட்டல் இயங்கிக் கொண்டிருக்கிறது.
  
கெயிட்டி தியேட்டர்
1914ல் சென்னையில் சினிமா காட்டவென்றே ஒரு நிரந்தரமான அரங்கினை ஆர்.வெங்கையா என்பவர் அமைத்தார்.  தென்னிந்தியாவில் சினிமா தியேட்டர் கட்டிய முதல் இந்தியர் என்கிற பெருமையையும் பெற்றார். அந்த அரங்கம் கெயிட்டி. அண்ணாசாலைக்கு வெகு அருகாமையில், நரசிங்கபுரம் ரேடியோ மார்க்கெட்டை ஒட்டி, சிந்தாதிரிப்பேட்டையில் இது அமைந்தது.

மவுனப்படங்கள் காலத்திலேயே கிட்டத்தட்ட இருபதாண்டுகள் தாக்குப்பிடித்த தியேட்டர், பிற்பாடு பேசும் படங்கள் வெளிவந்தபோது சக்கைப்போடு போட்டது. இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி இங்கே தாறுமாறாக ஓடியதாக பழைய திரைப்பட ரசிகர் ஒருவர் நினைவுறுத்துகிறார்.

எழுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 1983ல் திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டது. ஏர்கண்டிஷன் வசதி செய்யப்பட்டது. அதன்பிறகு பெரும்பாலும் ஆங்கிலப்படங்கள். குறிப்பாக சைனீஸ் சண்டைப்படங்கள்.

இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் கெயிட்டி கொஞ்சம் கொஞ்சமாக மூச்சை நிறுத்தத் தொடங்கியது. இரண்டாந்தரப் படங்களாக திரையிடப்பட்டுக் கொண்டிருக்க, ரசிகர்களின் ஆதரவை முற்றிலுமாக இழந்தது. 2005ஆம் ஆண்டு ஒருவழியாக தன்னுடைய நூற்றாண்டை காண்பதற்கு ஒன்பது ஆண்டுகள் முன்பாகவே தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. தற்போது இங்கே ஒரு வணிகவளாகம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

வெறும் திரைப்படங்களை மட்டுமே திரையிட்டுக் கொண்டிருந்த அரங்கம் அல்ல இது. ஏராளமான ஆவணப்படங்களையும் திரையிடும் அரங்காக இருந்தது. வன உயிர்கள் குறித்த அற்புதமான ஆவணப்படமான ’ப்யூட்டிஃபுல் ப்யூப்பிள்’ பள்ளி மாணவர்களின் ஆதரவோடு இருநூறு நாட்களுக்கும் மேலாக இங்கே ஓடியது குறிப்பிடத்தக்கது.

(நன்றி : புதிய தலைமுறை)

25 ஜூலை, 2012

உம்மாச்சிக்குட்டியை பிரேமிச்ச நாயருட கதா


நடிகர், கதையாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று சீனிவாசனுக்கு பல முகங்கள் உண்டு. சென்னை பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜூனியர். மலையாள சினிமாவுலகில் நையாண்டிக்கும், கருப்பு நகைச்சுவைக்கும் பெயர்போனவர். மோகன்லாலின் எக்கச்சக்க சூப்பர்ஹிட் படங்களின் பின்னணியில் இருந்தவர்.

மல்லுவுட்டில் இவ்வளவு செல்வாக்கோடு இருப்பவர் நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும்? தன்னுடைய ஒரே மகனை ’லிட்டில் சூப்பர் ஸ்டார்’ ஆகவோ, ‘இளைய தளபதி’யாகவோ உருமாற்றி, மசாலா படங்களில் பஞ்ச் டயலாக் அடிக்கவைத்து கேரளாவுக்கு முதல்வர் ஆக்கியிருக்க வேண்டுமா இல்லையா?

இல்லை. சீனிவாசனின் மகன் வினீத் இயக்குனர் ஆகியிருக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த வினீத், தற்கால தென்னிந்திய ஹீரோக்களை போலவே பொலிவான தோற்றம் கொண்டவர். 2008ல் வெளிவந்த ‘சைக்கிள்’ படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். 2009ல் ‘மகன்டே அச்சன்’னில் திரையிலும் தன்னுடைய அப்பா சீனிவாசனுக்கு மகனாகவே நடித்தார். இரண்டு படங்களுமே சூப்பர்ஹிட் என்றாலும், “திஸ் ஈஸ் நாட் மை கப் ஆஃப் காஃபி” என்று முடிவெடுத்தார் வினீத். அருமையான பாடகரான வினீத்துக்கு இசையிலும், இயக்கத்திலும்தான் ஆர்வம். தானே பாடல் எழுதி, பாடி ஆல்பங்களை இயக்கினார். அடுத்து திரைப்பட வாய்ப்புக்காக அலைந்துக் கொண்டிருந்தார்.

சீனிவாசனுக்கும், உச்சநடிகர் ஒருவருக்கும் அப்போது உரசல் ஏற்பட்டிருந்தது. “உன் மகன் எப்படி இங்கே காலூன்றுகிறான் என்று பார்த்துவிடுகிறேன்” என்று உச்சநடிகர் உருமினாராம். தன்னுடைய தனிப்பட்ட விரோதத்தால் மகனுடைய வாழ்க்கை பாதிக்கப்படுமோவென்று சீனிவாசன் கவலைப்பட, அவருடைய கவலையைப் போக்க முன்வந்தார் இன்னொரு உச்சநடிகரான திலீப். நம்மூர் அஜித்தைப் போலவே கேரளாவில் தன்னம்பிக்கைக்கு பெயர்போன திலீப்புக்கு இளையவர்களை மேலே தூக்கிவிடுவதில் ஆர்வம் அதிகம். சொந்தமாக படமெடுத்து வினீத்தை இயக்குனராக களமிறக்கினார் திலீப். ‘மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்’. முற்றிலும் புதுமுகங்களை வைத்து, சுமார் இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இப்படம் ஆறு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்து அசத்தியது. கேரளர்கள் மீதான கம்யூனிஸ தாக்கம், அவர்களது இயல்பு வாழ்க்கையில் எவ்வாறாக பிரதிபலிக்கிறது என்பதை படம் பிடித்துக் காட்ட வினீத்துக்கு ஆர்வம்.

முதல் படம் வெற்றியடைந்து விட்டதால் அடுத்த படத்துக்கான கருவை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தார் வினீத். எம்.ஜே.அக்பரின் சிறுகதை ஒன்றினை வாசித்துக் கொண்டிருந்தபோது சட்டென்று மூளைக்குள் பல்பு எரிந்தது. தன்னுடைய இரண்டாவது படத்தின் நாயகன் வினோத்தையும், நாயகி ஆயிஷாவையும் அந்த சிறுகதையில் கண்டுகொண்டார். காதல்தான் கரு என்பதில் உறுதியானார். செக்கஸ்லோவியாவுக்கு பயணமாக சென்றிருந்தபோது ஏற்பட்ட உணர்வெழுச்சியில் மடமடவென்று காட்சிகளை எழுதத் தொடங்கினார். தட்டத்தின் மறயத்து திரைப்படம் வினீத்தின் மனதுக்குள் வளரத் தொடங்கியது. அவர் எழுதிய முதல் காட்சியே நாயகன், நாயகியிடம் காதலைத் தெரிவிக்கும் காட்சிதான். “அக்காட்சியை எழுதும்போது வினோத்தின் மனநிலையிலேயே நானும் இருந்தேன். அவனுடைய படபடப்பான மூச்சுக்காற்றை உணர்ந்தேன். கூடவே ஆயிஷாவின் மிரட்சியையும்” என்கிறார் வினீத்.

ஸ்க்ரிப்ட் தயாரானதும் தனக்கான குழுவினரை தேடினார். முதல் படத்துக்கு இசையமைத்த ஷான் ரஹ்மானையே இப்படத்துக்கும் தேர்ந்தெடுத்தார். பாடல்கள் தேன். பின்னணி வசீகரம். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜோமோன் ஜான் அமைந்தது பத்மநாபசாமியின் அனுக்கிரகம். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ காம்பினேஷனில் மதமறுப்புக் காதலை வலியுறுத்தும் திரைப்படம் உருவாகத் தொடங்கியது. பட்ஜெட் சுமார் நாலு கோடி. ஸ்க்ரிப்ட்டை வாசித்துப் பார்த்த சீனிவாசன் தானே தயாரிக்க முன்வந்தார். ஆனால் செலவு அவரது சக்திக்கும் மீறியது. வினீத்தின் முந்தையப் படத்தை தயாரித்து சீனிவாசனுக்கு திலீப் உதவியதைப் போல, இம்முறை நடிகர் முகேஷ் முன்வந்தார். அவரும் சீனிவாசனும், இணைந்து தயாரித்தார்கள். மலையாளத் திரையுலகில்தான் எத்துணை பெருந்தன்மையாளர்கள் இருக்கிறார்கள்? இம்மாதிரி உதாரணங்களை தற்கால தமிழ் சினிமாவுலகில் தேடினாலும் கிடைப்பதில்லை.

வினீத்தின் முந்தையப் படத்தில் நடித்த நிவின்பாலியே இதிலும் கதாநாயகனாக நடித்தார். வெளிவந்த ஒரு வாரத்திலேயே பதினான்கு கோடிக்கும் மேலாக வசூலித்து ‘ப்ளாக் பஸ்டர் ஹிட்’ அடித்திருக்கிறது படம். மலையாளத் திரைப்பட உலகத்தின் அடுத்த பத்தாண்டுகளை ஆளப்போகிற சூப்பர்ஹிட் இயக்குனரையும் அடையாளம் காண்பித்திருக்கிறது.

“நாயர் பையன், இஸ்லாமியப் பெண்ணை காதலிக்கிறான்” என்கிற அரதப்பழசான ஒன்லைன். நம்மூரில் பாரதிராஜா சக்கைப்போடு போட்ட அதே ‘அலைகள் ஓய்வதில்லை’ கதைதான். விஜய்க்கு நிரந்தரப் புகழ் கொடுத்த அதே ‘காதலுக்கு மரியாதை’ கதைதான். தலைமுறைகள் மாறலாம், காதல் மாறாது என்பதால், மீண்டும் அதே காதலை இன்றைய இளைஞர்களின் மனப்போக்குக்கு ஏற்ப மாற்றியமைத்து வென்றிருக்கிறார் வினீத். மம்முட்டி, லால்களின் ஆதிக்கம் குறைந்தநிலையில், இந்திய சினிமா மசாலாப் போக்கோடு போரிட முயன்று, தன்னுடைய பொருளாதார போதாமையால் தடுமாறிக் கொண்டிருந்த மலையாளத் திரையுலகுக்கு சரியான திசையை காட்டியிருக்கிறது ‘தட்டாத்தின் மறயாது’.

மலையாளி இந்து நாயர் பையன் என்று காட்டுவதற்காக நாயகன் பாரம்பரிய பட்டுவேட்டி, சட்டை, சந்தனம் என்றில்லாமல் நார்மலான கேரளனாக இருக்கிறான் என்பது பெரும் ஆறுதல். மரபு என்பது கேரளர்களுக்கு உயிர். அந்த தேன்கூட்டில் பெரிய சலசலப்பின்றி கல்லெறிந்திருக்கிறார் வினீத். கட்டுப்பெட்டியான இஸ்லாமியக் குடும்பம் என்று நாயகியின் பின்புலம் காட்டப்பட்டாலும், உலகமயமாக்கலின் தாக்கத்தில் அவர்களும் அவர்களையறியாமலேயே மாறியிருப்பதை நாயகி பாத்திரம் வாயிலாக இயல்பாக காட்டுகிறார். நாயகியின் அக்காவுக்கோ, அம்மாவுக்கோ கிடைக்காத வாய்ப்புகள் இவளுக்கு கிடைக்கிறது. இவளை கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். இசைக்குழுவில் பாட அனுமதிக்கிறார்கள்.

கண்டதும் காதல் என்றாலும் தனக்கும், அவளுக்கும் பொருந்துமா என்று தன் வீட்டுச்சூழலை மையப்படுத்தி வினோத் சிந்திக்கும் காட்சிகள் அபாரம். அரசியல் பின்புலம் கொண்ட பணக்காரக் குடும்பத்தின் பெண். மதம் ஒரு பிரச்சினை என்றால், வர்க்கம் இன்னொரு பிரச்சினை. காலையிலிருந்து இரவுவரை மாத்ரூபூமியில் மூழ்கிப்போய் முத்தெடுக்கும் அப்பா (அப்படி என்னத்தைதான்யா இந்த மாத்ரூபூமிகாரன் எழுதறான்?), சாணி அள்ளுவதற்காகவே பிறந்த தங்கையைப் பார்த்து நொந்துபோய், ”மாடு வளர்ப்பதற்கு பதில் நம் வீட்டில் நாய் வளர்க்கக்கூடாதா?” என்றெல்லாம் வகை தொகையில்லாமல் சிந்தித்து தனக்கும் அவளுக்குமான யதார்த்த முரணை மெல்லிய நகைச்சுவையோடு பகிர்ந்துக் கொள்கிறான். “ச்சே.. ஒரு அட்டாச்ட் பாத்ரூம் கூட இல்லை. ஆயிஷா கிட்டே எப்படி இதுதான் என் வீடுன்னு காட்டுவேன்”

இவனுடைய காதலுக்கு இன்னொரு பிரச்சினை. நாலு வருடமாக ஆயிஷாவை இன்னொருவன் காதலிக்கிறான். அவன் ஆயிஷா இடம்பெற்ற இசைக்குழுவில் பாடும் பாடகன். பாடுபவர்கள் அழகாக வேறு இருந்துத் தொலைக்கிறார்கள். போதாக்குறைக்கு அவனுக்கு சிக்ஸ்பேக் வேறு உண்டு. “கேரளாக்காரனுக்கு எதுக்கு சிக்ஸ் பேக்? மம்முட்டியும், மோகன்லாலும் சிக்ஸ்பேக் வெச்சிக்கிட்டா திரியறாங்க?”

ஆயிஷாவுடன் முதன்முறையாக பழகும் சந்தர்ப்பம் வினோத்துக்கு கிடைக்கிறது. கேமிரா, இசை, இயக்கம், எழுத்து, நடிப்பு என்று அனைத்து அம்சங்களுமே கவித்துவமாக இயங்கும் காட்சி அது. “வடகேரளாவின் தென்றல் காற்று என் முகத்தில் வீசியது. இருளான வராண்டாவில் அவளும், நானும் மட்டும் நடந்துக் கொண்டிருந்தோம். நிழலில் இருந்து வெளிச்சத்துக்கு அவள் நடந்த காட்சி, முகிலிலிருந்து நிலவு வெளிவரும் காட்சிக்கு ஒப்பானதாக இருந்தது”

தடங்கல்கள் தடையல்ல. எப்படியோ, அடித்துப் பிடித்து ஆயிஷாவிடம் காதலை சொல்கிறான் வினோத். இவன் எதிர்ப்பார்க்கும் பதில் வர தாமதமாகிறது. வினோத்தின் கம்யூனிஸ நண்பன் ஒருவன் சொல்கிறான். “மற்றவர்களின் உணர்வுகளை மதி. அவளுக்கு உன்னை காதலிக்க ஆர்வமில்லை. திரும்பத் திரும்பத் தொல்லை தராதே”. நன்கு யோசித்துப் பார்த்ததில் வினோத்துக்கும் இது உண்மையென்றே படுகிறது. கடைசியாக ஒருமுறை அவளை பார்த்துவிட்டு மட்டும் வருவதற்காக செல்கிறான். இவன் எதிர்பாராவிதமாக இவனிடம் அவள் தனது காதலை ‘பிராக்டிக்கல்’ ஆக சொல்கிறாள். “இறந்துப்போன என்னுடைய அம்மாவுக்குப் பிறகு என்னை இவ்வளவு முக்கியமாக நினைத்த வேறொருவரை நான் சந்திக்கவில்லை. எனவே உன்னை காதலிக்கிறேன்”

அவளிடம் காதலைப்பெறுவதில் வெற்றி கண்டவன், தங்கள் காதலை எப்படி வெற்றியடைய வைத்தான் என்பதுதான் உருக உருக, சிரிக்க சிரிக்க, லேசான டிராமாவோடு சொல்லப்பட்டிருக்கும் மீதி கதை. இரண்டாம் பாதியில் நம்மூர் விக்ரமன் பாணியில் பாசிட்டிவ்வாக வாழ்க்கையில் முன்னேறுகிறான் நாயகன். உள்ளூர் போலிஸ் உதவியோடு ஹெல்மெட் விற்று பணம் சம்பாதிக்கிறான். பிறகு ஒரு பர்தா கடை திறக்கிறான். “உலகத்திலேயே பர்தா ஷாப் வைத்திருக்கும் ஒரே இந்து நான்தான்”

ஒரு சாதாரண காதல்கதையை அனைவருக்கும் பிடிக்கும் மாதிரியான ட்ரீட்மெண்டில் கொடுத்திருப்பதுதான் வினீத்தின் வெற்றி. காட்சிகளை சுவாரஸ்யப்படுத்த அவர் சின்ன, சின்ன போங்கு ஆட்டம் ஆடுகிறார். அதுவும் பார்வையாளர்களை செமையாக வசீகரிக்கிறது என்பதால் இந்த வயலேஷனை எல்லாம் மன்னித்துவிடலாம். படத்தின் கதைக்கு நேரடித் தொடர்பு இல்லையென்றாலும், இரண்டு குட்டி ஃப்ளாஷ்பேக்குகள் அசத்துகிறது. ஒன்று குட்டி கேங் ஸ்டோரி. இன்னொன்று வினோத்தின் தங்கையை ஒரு தலையாக ‘இன்று போய் நாளை வா’ பாணியில் லவ்வும் இன்னொரு இளைஞனின் ப்ளாஷ்பேக். ஆனால் இந்த காட்சிகளையும் நைச்சியமாக கதைக்குள் இணைக்கும் கலையால்தான் வினீத் மலையாளத் திரையுலகின் கவனிக்கப்பட வேண்டிய இயக்குனர்களில் ஒருவராக உருமாறுகிறார்.

நம்மூர் இளைஞனுக்கு திராவிடப் பாதிப்பு எப்படியோ, அப்படியே கேரள இளைஞனுக்கு கம்யூனிஸப் பாதிப்பு இருக்கிறது. சிறு சிறு காட்சிகளில் இதை வினீத் வெளிப்படுத்தவும் செய்கிறார். லேசான நையாண்டியோடு கம்யூனிஸம் பேசினாலும், அந்த சித்தாந்தம் மீது அவர் கொண்டிருக்கும் மரியாதையையும் புரிந்துகொள்ள முடிகிறது. படம் முழுக்க ஆங்காங்கே பின்னணியில் சேகுவேரா போஸ்டர்களில் காணப்படுகிறார். முக்கியமான காட்சி ஒன்றில் போஸ்டரில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் அக்காட்சியை வெகுவாக சுவாரஸ்யப்படுத்துகிறது. “நீங்கள் இன்று எங்களை கொன்றொழிக்கலாம். ஆனாலும் கடைசியில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்”

மலையாளப் படம், அதுவும் காதல் படம். நிச்சயம் ‘பிட்’ இருக்குமென்று, ஆவலோடு நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு நம்மூர் ஊன்னா தான்னாக்கள் தியேட்டருக்கு ஓடுவார்கள். சாரி ஜெண்டில்மென். இந்தப் படத்தில் ஹீரோயினின் முகத்தைத் தவிர வேறெதையும் காட்டவேயில்லை. இப்போதெல்லாம் எந்தப்பட ஹீரோயினைப் பார்த்தாலும், “என்னா தொப்புளுடா” என்றுதான் அதிசயிக்கத் தோன்றுகிறது. நீண்டகாலத்துக்குப் பிறகு ஓர் நாயகியைப் பார்த்து “என்னா அழகுடா” என்று ஆச்சரியம் கிளம்புவது இந்தப் படத்தில்தான். இஷாதல்வாருக்கு ஒருமாதிரியான இரானியத் தோற்றம். பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரபானி மாதிரி மங்களகரமாக இருக்கிறார். அளவான லிப்ஸ்டிக், பாந்தமான உடைகள் என்று திரையில் பார்த்ததும் நமக்கே காதலிக்கத் தோன்றும்போது.. வினோத், ஆயிஷாவை கண்டவுடன் காதலில் விழுந்ததில் ஆச்சரியமேதுமில்லை.

வினீத் சீனிவாசன் – மலையாளத் திரையுலகில் நிகழ்ந்திருக்கும் அதிசயம். இதே அதிசயத்தை பாரதிராஜா, தன் மகன் மனோஜ் மூலமாக இங்கே நிகழ்த்தியிருக்க முடியும். துரதிருஷ்டவசமாக அம்மாதிரி அதிசயங்கள் நமக்கு வாய்ப்பதில்லை.

23 ஜூலை, 2012

The darknight rises


ஷங்கர் தன்னுடைய சில சூப்பர்ஹிட் திரைப்படங்களுக்கு எதையெல்லாம் கச்சாவாக தேர்ந்தெடுத்திடுத்திருக்கிறார்?

மண்டல் கமிஷன் பரிந்துரை செயல்பாடுகளுக்கு வந்த நிலையில் ‘ஜெண்டில்மேன்’. மத்தியில் நரசிம்மராவ், மாநிலத்தில் ஜெயலலிதா என்று ஊழல் மலிந்த சூழலில் ‘இந்தியன்’. இந்தியாவெங்கும் தங்களை ஆளும் கட்சிகள் மீது மக்களுக்கு அதிருப்தி பெருகிக்கொண்டே போன வேளையில் ‘முதல்வன்’. பாஜக ஆட்சி ஊழல் தடுப்பில் ஒட்டுமொத்தமாக செயலிழந்து நின்ற வேளையில் ‘அந்நியன்’. இப்படியாக ஷங்கரை இம்மாதிரியான சப்ஜெக்ட்களை திரும்பத் திரும்ப (நமக்கு அந்த சப்ஜெக்ட் உவப்பானதா இல்லையா என்பது வேறு விஷயம்) தேர்ந்தெடுக்க அரசியல்-சமூகச் சூழல் நிர்ப்பந்தப்படுத்துகிறது. திரைப்படமாக்க எடுத்துக் கொள்ளும் பிரச்சினைகளில் ஷங்கர் தனிப்பட்ட முறையில் எந்தப் பக்கம் என்பது தெரியாது. ஆனால் பொதுமக்களின் மனப்போக்கை ஒட்டியவகையில், அந்த மனப்போக்கை ஆதரிப்பதோடு மேலும் தூண்டும் வகையிலாக தன்னுடைய திரைப்படங்களை எடுக்கிறார். வெற்றிக்காக அவர் கண்டுபிடித்து வைத்திருக்கும் சுலபமான சூத்திரம் இது.

டார்க்நைட் ரைசஸ் திரைப்படத்தில் நோலனும் இதே ஃபார்முலாவை கையாண்டிருப்பதாக தெரிகிறது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் காமிக்ஸ் என்பது கலாச்சாரமாக உருவெடுத்த சமாச்சாரம். எந்த ஒரு ஹாலிவுட் இயக்குனருக்குமே ஏதேனும் புகழ்பெற்ற காமிக்ஸை படமாக எடுத்துத் தீரவேண்டும், ஒரு சூப்பர்ஹீரோவை திரையில் பறக்கவைத்து க்ளாப்ஸ் அள்ளவேண்டும் என்கிற ஆசை இல்லாமல் இருக்காது. தெரிந்தோ, தெரியாமலேயோ நம்மூர் பார்த்திபனைப் போல வித்தியாச விரும்பியாக பெயரெடுத்துவிட்ட நோலனுக்கும் இதே ஆசை இருந்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். ஹாலிவுட்டில் யாரும் பெரியதாக சாதித்துவிடாத ‘பேட்மேன்’ பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டார். நோலன் என்றாலே நான் லீனியர் மங்காத்தா என்று ரசிகர்கள் அவர்களாகவே முடிவுகட்டிக் கொள்ள, தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள தனக்கு ஒரு சூப்பர்ஹீரோ தேவை என்று அவர் நினைத்திருக்கலாம்.

பேட்மேனை ரீபூட்டிய பேட்மேன் பிகின்ஸ், ரசிகர்களை கொண்டாட்டத்துக்கு தள்ளிய டார்க்நட்டுக்குப் பிறகு இப்போது டார்க்நைட் ரைசஸ். படத்துக்கு ‘டார்க்நைட் ரைசஸ்’ என்று பெயரிட்டு, ‘தி லெஜெண்ட் எண்ட்ஸ்’ என்று துணைத்தலைப்பில் நோலன் ஆடியிருக்கும் குறும்பு ஆட்டம் அவருக்கே உரியது. இவரது படத்தில் காட்சிகள்தான் நான்லீனியராக இருக்கும் என்றால் ட்ரையாலஜியில் எடுத்திருக்கும் பேட்மேன் படங்களையே நான்லீனியராகதான் எடுத்திருக்கிறார். முதல் பாகத்துக்குப் பிறகு வரவேண்டிய படம் மூன்றாம் பாகமாக வந்திருக்கிறது. பேட்மேனுக்கு க்ராண்ட் ஓபனிங் தரவேண்டும் என்று நினைத்திருந்தால், டார்க்நைட்டைதான் நோலன் முதலாவதாக எடுத்திருக்க வேண்டும்.

பொதுவாக ஹாலிவுட் படங்களில் முதல் பாகம் சூப்பர் டூப்பராக இருக்கும். இரண்டாம் பாகம் நன்றாக இருக்கும். மூன்றாம் பாகம் சுமாராகவோ, மொக்கையாகவோ இருக்கும். பேட்மேனைப் பொறுத்தவரை எனக்கு மூன்றாவது பாகமும் முதல் இரண்டு பாகங்களைப் போலவே பிரமாதமாக அமைந்துவிட்டதாக தோன்றுகிறது. ஒருவேளை முதல் படத்தை பார்க்காதவர்கள் நேரடியாக மூன்றாவது படத்தை பார்த்தால் புரியாமல் போகலாம். ஆனால் மொக்கையாக தோன்றுவதற்கு எந்த சாத்தியமுமில்லை. லீக் ஆஃப் ஷேடோஸ், கமிஷனர், டபுள் ஃபேஸ் என்று ஓரளவாவது பின்னணி தெரிந்திருக்க வேண்டியது இப்படத்தை பார்ப்பதற்கு அவசியம்.

டார்க்நைட் ரைசஸ் இப்போதைய அமெரிக்க அரசியலை மறைமுகமாக முன்நிறுத்தி பேசக்கூடியதாக இருக்கிறது. புரட்சி, பொதுவுடைமை மாதிரியான சொற்களின் மீது அமெரிக்கர்களுக்கு இருந்த வெறுப்பு மறைந்து, இப்போது கேலியும் கிண்டலும் பிறந்திருக்கிறது. அதைதான் நோலன் இப்படத்தில் படம் பிடித்துக் காட்டுகிறார். புரட்சி குறித்த மிக மோசமான நையாண்டியை டார்க்நைட் ரைசஸ் உருவாக்குகிறது. ‘வால்ஸ்ட்ரீட் முற்றுகை’ மாதிரியான அடித்தட்டு அமெரிக்கர்களின் உணர்வை முற்றிலுமாக நிராகரித்து, சராசரி நடுத்தட்டு அமெரிக்கனின் இன்றைய மனவோட்டத்தை வெளிப்படுத்துகிறார் நோலன் (இதே மாதிரி நம்மூர் ஷங்கரும் நடுத்தரஜோதியில் ஐக்கியமாகக் கூடியவர்தான் என்பதாலேயே இப்பதிவின் ஆரம்பத்தில் அவர் வருகிறார்).

இடதுசாரி சித்தாத்தங்கள் மீது மரியாதை வைத்திருப்பவன் என்கிற முறையில் ‘டார்க்நைட் ரைசஸ்’ எனக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். புரட்சி, பொதுவுடைமை குறித்த மூர்க்கமான கிண்டல். ஆனால் நோலனின் திரைப்படம், தான் பேசும் அரசியலுக்கு எதிர்நிலையில் இருப்பவர்களையும் கூட ரசிக்கவைக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

சரி. புரட்சி வேண்டாம். வேறு என்ன புண்ணாக்கைதான் ஏற்றுக்கொள்ள சொல்கிறார் என்று பார்த்தோமானால், கிட்டத்தட்ட நம்மூர் அப்துல்கலாம் வகையறாக்கள் வழங்குவது மாதிரியான மொக்கைத் தீர்வுகளைதான் நோலனும் முன்வைக்கிறார். அமெரிக்க அன்னாஹசாரேவான ஒபாமாவின் ‘யெஸ் வீ கேன்’ என்கிற, இதுவரையில் உலகில் யாருக்குமே தோன்றாத தாரகமந்திரத்தை வலியுறுத்துகிறார் (நவம்பரில் அதிபர் தேர்தல் என்பதை மனதில் கொள்க). சூப்பர்ஹீரோவாக இருந்தாலும் முதுகெலும்பு முறிக்கப்படும். ஆனால் அச்சமின்றி போராடினால் வெற்றி நிச்சயம் என்கிறார்.

இருபதாம் நூற்றாண்டு சூப்பர் ஹீரோக்களை கொண்டாடிய நூற்றாண்டு. அப்போது அமெரிக்காவுக்கு எதிரி இருந்தான். தங்களைக் காத்துக்கொள்ள ஒரு ரட்சகன் சூப்பர்ஹீரோவாக வருவான் என்கிற அமெரிக்கர்களின் மூடநம்பிக்கையை முதலீடாக்கி, சூப்பர்ஹீரோக்கள் காமிக்ஸ்களிலும், நாவல்களிலும், திரைப்படங்களிலும் கல்லா கட்டினார்கள். மாறாக இந்த நூற்றாண்டு ஒவ்வொருவனும்  தானே சூப்பர்ஹீரோ ஆகிவிடும் வாய்ப்பினை அமெரிக்கர்களுக்கு வழங்குகிறது. ஒவ்வொருவனும் தன்னை ஜீனியஸ் என்று கருதிக்கொள்ளும் நிலையில், அவன் காதில் போய் சூப்பர் ஹீரோ பறப்பான், அவனை யாருமே வீழ்த்த முடியாது என்று பூச்சுற்ற முடியவில்லை. எனவேதான் பேட்மேனை நல்ல உள்ளம் கொண்ட சராசரி மனிதன் என்று நிறுவ நோலன் இப்படத்தில் மெனக்கெட்டிருக்கிறார். கடைசியாக பேட்மேனே கூட “எவனொருவன் மற்றவர்களுக்கு உணவளிக்கிறானோ, உடையளிக்கிறானோ அவனெல்லாம் ஹீரோதான்” என்று எம்.ஜி.ஆர் படகாலத்து தத்துவம் பேசிவிட்டு படத்தை முடிக்கிறார். தி லெஜெண்ட் ரியல்லி எண்ட்ஸ்.

இவ்வாறாக அமெரிக்காவை மட்டுமே மனதில் நிறுத்தி, அமெரிக்கர்களின் மனவோட்டத்தை பேசும் திரைப்படம் உலகமெங்கும் எப்படி சக்கைப்போடு போடுகிறது என்கிற கேள்வி எழுகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிக் கொண்டிருக்கிறது என்று பேச்சுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படி நிஜமாகவே சுருங்கும்பட்சத்தில் அந்த கிராமத்தின் பெயர் அமெரிக்காவாகதான் இருக்கக்கூடும். இதுதான் யதார்த்தம். நாம் கம்யூனிஸமோ, நாசிஸமோ, பாஸிசமோ, எந்த கருமத்தையோ பேசுபவர்களாக இருந்தாலும் மனதளவில் நம்மையறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கர்களாக மாறிக்கொண்டிருக்கிறோம்.

திரைக்கதையில் நிறைய க்ளிஷேக்கள் அடங்கிய மசாலாப்படம்தான் என்றாலும், அதையும் கலையாக உருமாற்றும் திறன் படைத்தவர் கிறிஸ்டோபர் நோலன் என்பதற்கு இப்படமும் ஓர் உதாரணமாக அமைகிறது.

17 ஜூலை, 2012

வெற்றி : எட்டிவிடும் உயரம்தான்!


“மற்றவர்கள் என்னை இளக்காரமாக மதிப்பிட்ட தருணங்கள்தான், என்னை நானே உலகத்துக்கு நிரூபித்துக்கொள்ள உதவியது” டாக்டர் சூர்யா பாலி, எம்.பி.பி.எஸ்., பைரலி காவோன் கிராமம், ஜான்பூர், உத்தரப் பிரதேசம்.
ஹோலி, தீபாவளி மாதிரி பண்டிகைகள் வந்தாலே சிறுவன் சூர்யாவுக்கு குஷி. நல்ல சாப்பாடு சாப்பிடலாம். கையில் தட்டு ஏந்திக் கொண்டு கிராமத்திலிருக்கும் பண்ணை வீடுகளுக்கு செல்வான். சில வீடுகளில் இனிப்போடு நல்ல சாப்பாடு கிடைக்கும். சில வீடுகளில் எரிச்சலோடு துரத்தி அடிப்பார்கள். கேலி, கிண்டல் எதுவாக இருந்தாலும் சூர்யாவை பாதித்ததில்லை. பழங்குடி இனத்தில் பிறந்து, பண்ணையில் அடிமையாக வேலை செய்பவருக்கு மகனான தான் இதற்கெல்லாம் சங்கோஜப்படலாமா? சாப்பாடுதான் முக்கியம்.
சிறுவயதில் சூர்யா பச்சை மண். தன்னுடைய வர்க்கம், சாதி, பிழைப்பு எல்லாமே இறைவனால் விதிக்கப்பட்ட இயல்பான விஷயங்கள் என்று வாழ்ந்தான். ஆனால் படிக்காதவராக இருந்தாலும், ஓரளவு விவரம் தெரிந்த அவனுடைய அப்பாவுக்கு அப்படியில்லை. அடிமை சேவகத்தை வெறுத்தார். பழங்குடி இனத்தில் பிறந்த ஒரே பாவத்துக்காக தன்னுடைய பரம்பரையே அடிமை வாழ்க்கை வாழும் அவலத்தை எண்ணி தினம் தினம் கண்ணீர் விட்டார். தன்னைத்தானே நொந்துக்கொண்டு கழிவிரக்கத்தோடு எத்தனைநாளைதான் கழிக்க முடியும்? ஒரு நாள் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிவிட்டார். மனைவி, குழந்தைகள், பிறந்து வாழ்ந்த கிராமம். எதுவுமே அவருக்கு பொருட்டாகத் தெரியவில்லை. யாருமற்ற தனிமைதான் தன்னுடைய இழிவைப் போக்குமென சித்தார்த்தனைப் போல கிளம்பிவிட்டார்.
தனிமை வெறுத்து மீண்டும் அவர் தன் குடும்பத்தோடு இணைய பத்து ஆண்டுகளாகியது. இடைப்பட்ட காலத்தில் சூர்யாவின் தாய் மீது குடும்பப்பாரம் விழுந்தது. மேல்சாதியினர் வீடுகளில் வீட்டு வேலை பார்த்தார். விசேஷங்களில் சமையல் வேலை. அக்கம் பக்கத்து வீடுகளுக்கு கிணற்றில் இருந்து நீர் இறைத்துக் கொடுப்பது மாதிரி துண்டு துக்கடா வேலைகள். அதில் வந்த சொற்ப வருமானத்தில் குழந்தைகளுக்கு கால்வயிற்று கஞ்சி.
சூர்யாவுக்கு குடும்பச்சூழல் புரிந்தபோது அவன் கிராமத்திலிருந்த ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். கல்வி இலவசம்தான் என்றாலும், பாடப்புத்தகங்கள் வாங்க கொஞ்சம் காசு வேண்டுமல்லவா? காட்டுக்குச் சென்று பேரிக்காய் உள்ளிட்ட பழங்களைப் பறிப்பான். அருகிலிருக்கும் நகரங்களுக்கு சென்று காசுக்கு விற்பான். அதிர்ஷ்டவசமாக சில வருடங்களில் புத்தகத்துக்கு பழங்களை பண்டமாற்று செய்யும் வாய்ப்பு கூட அவனுக்கு கிடைத்தது.
ஏழைவீட்டுக் குழந்தைகள் என்றாலே சிலருக்கு இளக்காரம்தான். சூர்யாவின் ஆசிரியர்கள் சிலர் அவனைக் கேட்டார்கள். “உன் அம்மா, அப்பாவில் தொடங்கி பரம்பரையே பண்ணைக்கு அடிமைச் சேவகம் செய்து வாழ்ந்தவர்கள்தான். நீயும் அதைத்தான் செய்யப்போகிறாய். அப்படியிருக்கையில் இவ்வளவு கஷ்டப்பட்டு படித்து என்ன கிழிக்கப் போகிறாய்?”
சூர்யாவிடம் பதில் இல்லை. எனினும் கல்வி தன்னுடைய, தன் குடும்பத்தின் நிலையை மாற்றும் என்கிற எண்ணம் மட்டும் அவனுக்குள் வலுவாகப் பதிய ஆரம்பித்தது. நெஞ்சுக்குள் எரிந்துக்கொண்டிருந்த தீ படிக்க, படிக்கத்தான் அடங்கியது. ஒரு பழங்குடியின மாணவன் மற்ற மாணவர்களைவிட நன்றாகப் படிப்பதை அந்தப் பள்ளியின் உரிமையாளரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பண்டிட்ஜி எனப்படும் அவர் சாதி, மத அடிப்படையில் வாழ்ந்து வந்தவர். படிக்க விடாமல் பல தடைகளை ஏற்படுத்த, சூர்யா பள்ளி மாறினான்.
சார்சி எனும் ஊரில் இருந்த நடுநிலைப் பள்ளியில் சேர்ந்தான். அவனுடைய கிராமத்திலிருந்து பதினோரு கிலோ மீட்டர் தூரம். செருப்பில்லை. வெறுங்காலில் அரக்கப் பரக்க அவன் பள்ளிக்கு ஓடுவதைப் பார்த்த கிராமம் சிரித்தது. “பண்ணை வேலை பார்க்குறதுக்கு பட்டணத்துப் பள்ளியில் போய் படிக்கிறானே?”
மழைக்காலங்கள்தான் பிரச்னை. பள்ளிக்குச் செல்ல முடியாது. இரண்டே இரண்டு செட் சீருடைகள்தான் அவனிடமிருந்தது. நனைந்த சீருடைகள் காயாமல் எப்படி பள்ளிக்குப் போவது?
ட்யூஷன் மற்றும் புத்தகச் செலவுகளுக்கு இப்போது சூர்யாவுக்கு வேறு வேலை கிடைத்தது. பள்ளி முடிந்ததும், அருகிலிருந்த சைக்கிள் கடையில் வேலைக்கு சேர்ந்தான். பஞ்சர் ஒட்டுவதில் தொடங்கி அத்தொழிலில் கொஞ்சம் கொஞ்சமாக நிபுணத்துவம் பெற்றான். வந்த வருமானம் கல்விச் செலவுக்கும், ஓரளவு குடும்பச் செலவுக்கும் உதவியது.
எல்லா சிரமங்களையும் கடந்து, எட்டாம் வகுப்பில் சூர்யா முதல் ரேங்க் வாங்கியபோது பள்ளியே ஆச்சரியப்பட்டது. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி. அவனுடைய பரம்பரையிலேயே பத்தாம் வகுப்பை கடந்த முதல் ஆள் அவன்தான். இப்போது சூர்யாவுக்கு தன்னுடைய எதிர்காலம் குறித்த ஒரு லட்சியம் தோன்றியது. எப்பாடு பட்டாவது டாக்டர் ஆகிவிட வேண்டும். தனக்கு ஏழு வயது இருக்கும்போது, தன்னுடைய தம்பி மருத்துவவசதி இல்லாமல் மரணித்தது சூர்யாவின் ஆழ்மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது இதற்கு ஒரு காரணம். நிரந்தர நோயாளியாகி விட்ட அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம், மருத்துவராகி அவரை நல்லவிதமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மற்றொரு காரணம்.
பிரச்சினைகளுக்கு இடையில் பண்ணிரெண்டாம் வகுப்பையும், வழக்கம்போல நல்ல மதிப்பெண்களோடு கடந்தார் சூர்யா. மருத்துவம் சேருவதற்கு தேவைப்பட்ட பணத்தை புரட்ட முனைந்தார். தட்டினால் திறக்குமென அவர் நம்பிய எல்லாக் கதவுகளும் பலமாக இழுத்து பூட்டப்பட்டிருந்தன. பதினேழு வயது சூர்யாவுக்கு வாழ்க்கை வெறுத்தது. ஏற்கனவே வாழ்க்கை வெறுத்து எப்படி அவருடைய அப்பா ஊரைவிட்டுச் சென்றாரோ, அதுபோலவே யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல், எல்லாவற்றையும் துறந்து எங்கோ சென்றார் சூர்யா.
ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தவருக்கு திடீரென்று குடும்ப நினைவு வந்தது. தன்னுடைய அண்ணனுக்கு தொலைபேசினார். “உன் கல்விக்காக பணம் புரட்டி வைத்திருக்கிறேன். உடனே ஊருக்கு வா” என்றார் அண்ணன். அதை நம்பி ஊருக்கு வந்தவருக்கு அதிர்ச்சி. அண்ணன் வைத்திருந்த பணமோ வெறும் மூவாயிரம்தான். மெடிக்கல் தேர்வுக்கு பயிற்சி தரும் கோச்சிங் சென்டர் கட்டணத்துக்கே இது சரியாகப் போய்விடும். டாக்டர் கனவை தள்ளிப் போட்டுவிட்டு யதார்த்தத்துக்கு திரும்பினார் சூர்யா. பனாரஸ் ஹிந்து கல்லூரியில் பி.எஸ்.சி வகுப்பில் சேர்ந்தார்.
அற்புதங்கள் நம்ப முடியாதவைதான். ஆனாலும் அவை அவ்வப்போது நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. சூர்யா சற்றும் எதிர்பாராத அற்புதம் ஒன்று அவரது கல்லூரி விடுதி வார்டன் மூலமாக நடந்தது. இவரது கதையை, கனவை கேட்டு உருகிவிட்ட அந்த நல்ல மனம் கொண்ட வார்டன், சூர்யாவை டாக்டராக்கி அழகு பார்ப்பது என்று முடிவெடுத்து விட்டார். இலவச தங்கும் வசதி, மாதாமாதம் செலவுக்கு ரூ. 500, அட்மிஷனுக்கு பொருளாதார ஏற்பாடு என்று அவர் தடாலடியாக ஏற்பாடு செய்தார். அலகாபாத் மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் கதவுகள் சூர்யாவுக்காக அகலமாக திறந்தது.
மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் வசதியான குடும்பச் சூழலில் இருந்து வருகிறவர்கள். சூர்யாவைக் கண்டு அவர்களுக்கு ஆரம்பத்தில் கோபம் வந்தது. பிற்பாடு கேலி பிறந்தது. சூர்யாவின் நடை, உடை பாவனைகளை எள்ளி நகையாடத் தொடங்கினார்கள். பொருளாதாரப் பின்புலம் இல்லாததால் மற்றவர்களை மாதிரி நாம் இருக்க முடியவில்லை என்கிற யதார்த்தம் புரிந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் மற்றவர்கள் தரும் மனவுளைச்சலை அவரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. படித்துக்கொண்டே பணம் சம்பாதிக்க வேண்டும். ஏற்கனவே பள்ளி படிக்கும்போது அவர் மேற்கொண்ட வழிமுறைதான்.
சூர்யா ஓரளவுக்கு நன்றாக எழுதுவார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று அவர் அவ்வப்போது எழுதினாலும், இத்திறமையை இதுவரை யாரிடமும் வெளிக்காட்டியதில்லை. தனக்குத் தெரிந்த எழுத்தை பத்திரிகைகளுக்கு தந்து சம்பாதிக்க முடியுமா என்று முயற்சிக்கத் தொடங்கினார். ஆல் இந்தியா ரேடியோவில் நிகழ்ச்சிகளை வழங்கும் வாய்ப்பு இதன் மூலம் அவருக்கு கிடைத்தது.
வேலை, படிப்பு நேரம் தவிர்த்து மீத நேரத்தை கல்லூரி நூலகத்தில் கழிக்கத் தொடங்கினார். தனிமை அவருக்கு வரம். கேலிகளிலிருந்து காக்கும் கேடயம்.
பெரும் போராட்டத்துக்குப் பிறகு ஒரு வழியாக எம்.பி.பி.எஸ். முடித்து டாக்டர் சூர்யா ஆனார். கனவினை நனவாக்கிப் பார்க்கும் பாக்கியம் அனைவருக்கும் கிட்டிவிடுவதில்லை. சூர்யாவுக்கு கிடைத்தது. அடுத்து எம்.டி. படிக்க அதே கல்லூரியில் உதவித்தொகையுடன் கூடிய வாய்ப்பு கிடைத்தது. “என் வாழ்க்கையிலேயே பதினைந்தாயிரம் ரூபாயை ஒட்டுமொத்தமாக இப்போதுதான் பார்த்திருக்கிறேன்” என்றார் சூர்யா.
எந்த கல்லூரியில் மற்ற மாணவர்களால் கேலி செய்யப்பட்டு மனவருத்தம் அடைந்தாரோ, இப்போது அதே கல்லூரியில் பயிற்றுநராக (faculty) மாணவர்களுக்கு பாடம் போதித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸ் இன் ஹெல்த் மேனேஜ்மெண்ட் (MHM) படிக்க அவருக்கு IFB உதவி கிடைத்திருக்கிறது.
“மருத்துவம் என்பது முழுக்க முழுக்க சேவை அடிப்படையிலான தொழில். பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் மருத்துவம் படிக்கக்கூடாது” என்கிறார் டாக்டர் சூர்யாபாலி. க்ளோபல் ஹெல்த் டெவலப்மெண்ட் மிஷன் என்கிற பெயரில் ஒரு அரசுசாரா நிறுவனத்தைத் தொடங்கி கிராம மக்களுக்கு சேவை செய்கிறார். மருத்துவக் கட்டுரைகளை போஜ்புரி, அவாதி ஆகிய உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்த்து புத்தகங்கள் பதிப்பிக்கிறார். நோய்களைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பாடல்கள் எழுதி பாடி பிரச்சாரம் செய்கிறார். தன்னுடைய கிராமத்தில் எல்லா வசதிகளும் கொண்ட ஒரு மருத்துவ மையத்தை உருவாக்குவது அவரது நோக்கம்.
உத்தரப் பிரதேசத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் ’கோண்டு’ பழங்குடி இனத்தில் பிறந்த சூர்யா, அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் மருத்துவம் கற்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார். ‘நீ படித்து என்னத்தைக் கிழிக்கப் போகிறாய்?’ என்று, அன்று சூர்யாவைக் கேட்டவர்களுக்கு, இன்றைய அவரது உயரம் மவுனச் சிரிப்போடு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது.
சூர்யாவின் வாழ்க்கை நம்மூர் மாணவர்களுக்கும் சொல்லும் பாடம் ஒன்றே ஒன்றுதான். படிங்க, படிங்க.. அதுதான் வாழ்க்கையின் வெற்றிப் படிக்கட்டுங்க...

(நன்றி : புதிய தலைமுறை)

16 ஜூலை, 2012

பில்லா-2

பிரபாகரனை நேரில் போய் பார்த்துவிட்டு வந்தவர்கள்கூட இவ்வளவு தில்லாக தாம் இயக்கிய படங்களில் காட்சிகளை வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. ராஜீவ்காந்தி கொலையை ‘இந்தியப் பார்வையில்’ படமாக்கிய குற்றப்பத்திரிகைக்கு கூட இங்கே தடைவிதிக்கப்பட்டது. ஆனால், பில்லா-2 படத்தின் டைட்டில் நேரடியாக ஈழத்தில் நடத்தப்பட்ட இந்திய ராணுவ அமைதிப்படையின் கொடூரங்களை பட்டியலிடுகிறது. இப்போது தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஓர் இனத்தின் நியாயமான வலியை கருப்பு வெள்ளை புகைப்படங்கள் வாயிலாக இரண்டரை, மூன்று நிமிடங்களில்  பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். “நாங்களெல்லாம் பாவமில்லையா?” என்று இதில் யாரும் இறைஞ்சவில்லை. டேவிட்பில்லாவின் சிறுவயதுக் காட்சிகள் என்கிற சாக்கில் ‘இதுதான் உண்மையில் நடந்தது’ என்று நெற்றியில் அடித்தாற்மாதிரி  நறுக்கென்று மவுனமொழியில் காட்சியாக்கி தருகிறார்கள். படம் பார்த்துவிட்டு ‘மொக்கை’ என்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், பிலாக்கிலும் விமர்சனம் எழுதிய மொக்கைகள் எத்தனைபேர் இப்படத்தின் டைட்டிலை புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை.

தமிழகத்தில் அகதிமுகாம்களின் நிலை பற்றிய வர்ணனைகள் தமிழ் சினிமாவில் இடம்பெற்றதாக தெரியவில்லை. லீனாமணிமேகலை இயக்கிய ‘செங்கடல்’ ஆவணப்படம் விதிவிலக்கு. ஓரளவுக்கு நந்தா, ராமேஸ்வரம் படங்களில் காட்சியாக்க முயற்சித்திருக்கிறார்கள் (வேறு சில படங்களும் இருக்கலாம், இவை நான் பார்த்தவை மட்டுமே). கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘சபரி’யில்தான் அகதிமுகாம்களில் நம் அதிகாரிகளின் அத்துமீறல் நேரடியாக விமர்சிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அதுவும் கேப்டனின் ஹீரோயிஸத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான காட்சியாகவே அமைந்தது. படத்தின் தொடக்கத்தில் இரண்டு, மூன்று காட்சிகள்தான் என்றாலும் பில்லா-2வில் இது வலுவாக காட்டப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் ஒரே ஒரு காவல்துறை அதிகாரியைதான் காட்டியிருக்கிறார்கள். அகதிகளை நம் அதிகாரவர்க்கம் எதற்காகவெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று பிரச்சாரநெடி ஏதுமின்றி இயல்பான முறையில் காட்டியிருக்கிறார்கள்.

இதற்காக பில்லா-2வை ஈழப்பிரச்சாரத் திரைப்படமாகவெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. முந்தைய அஜீத்தின் படவெளியீட்டின்போது ஈழத்தமிழர்களோடு அவருக்கு நேர்ந்த பிரச்னைக்கு பரிகாரமாககூட பார்க்கலாம். ஆனாலும், ‘சென்ஸாரில் தட்டிவிடுவார்களோ?’ என்றெல்லாம் அச்சப்படாமல் நேரடியாக சொல்ல நினைத்ததை நேர்மையாக சொல்லியிருப்பதற்காக பாராட்டலாம். ஒருவகையில் எதிர்காலத்தில் தமிழர்கள் தங்கள் நியாயத்தை இந்தியத் திரைமொழியில் பேச பில்லா-2 பிள்ளையார்சுழி போட்டிருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

படத்தை முதல் நாள் முதல் காட்சி ப்ரீமியர் ரேட்டில் பார்த்த அணில் ரசிகர்கள் உடனடியாக எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், ட்விட்டர், பிலாக், மொட்டைக் கடிதாசி என்று எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தி, ‘படம் மொக்கை’ என்று பிரச்சாரம் செய்து, தம் கடமையை முடித்துக் கொண்டார்கள். இந்தப் பிரச்சாரம் வழக்கமாக அஜித்தின் எல்லாப் படங்களுக்கும் செய்யப்படுவதுதான். பில்லா-2 நிச்சயமாக ‘சுறா’வோ, ‘வில்லு’வோ அல்ல. அதே நேரம் பில்லா-1, மங்காத்தா அளவுக்கு கெத்துமில்லை. ஓரிருமுறை பார்க்கக்கூடிய படம்தான். அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கலாம். எந்த முன்முடிவுமின்றி பார்ப்பவர்களுக்கும் நல்ல படம் என்றே தோன்றும். சக்ரிடோலட்டிக்கு படமே எடுக்கத் தெரியவில்லை என்பவர்கள், தமிழில் இதற்கு முன்பாக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படங்கள் என்று எதை கருதுகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழின் ஒரு சராசரி இயக்குனரால் இப்படத்தின் தரத்தில் பாதியைக் கூட எட்டமுடியாது என்பதுதான் நிஜம். ப்ரீக்குவல் என்பதால் ஒருவேளை பில்லா-1ஐ விட அடக்கி வாசிக்கவேண்டும் என்கிற எண்ணம் படக்குழுவினருக்கு இருந்திருக்கலாம். ரசிகர்களும் கூட பில்லா-1க்கு முன்பாக நடக்கும் கதை என்கிற உணர்விலேயே படம் பார்த்தால், எவ்வளவு சுவாரஸ்யமாக முன்கதைச் சுருக்கத்தை சொல்கிறார்கள் என்பதை உணரலாம்.  அடுத்ததாக ஒருவேளை பில்லாவின் சீக்குவல் எடுக்கப்பட்டால் பங்களா கட்டி புகுந்து விளையாடுவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கலாம்.

இதுபோன்ற கேங்ஸ்டர் படங்களுக்கு க்ரைம் அளவுக்கு செக்ஸும் ஒரு முக்கியமான அம்சம். பில்லா-1ல் நயன்தாரா, நமீதா என்று இந்த மேட்டர் அமர்க்களம். ஆனால் ஏனோ இப்படத்தில் ஏனோ ரொம்ப சைவமாக இருந்திருக்கிறார்கள். ஓங்குதாங்காக ரேஸ் குதிரை மாதிரி ப்ரூனோ அப்துல்லா இருக்கிறார். செம கட்டை என்று சொல்லமுடியாவிட்டாலும், சொல்லிக் கொள்ளும்படியாக ஓமணக் குட்டி இருக்கிறார். இருவரையும் தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரிதான் இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார். அந்த பாலியல் விடுதி பாடல் காட்சியும் ஆகா, ஓகோவென்று இல்லை. ஏற்கனவே ‘சிந்தனை செய்’ என்கிற திரைப்படத்தில் அபாரமாக எடுக்கப்பட்ட பாடல்காட்சி ஒன்றின், சுமார் பிரதியாகவே அப்பாட்டும் அமைந்திருக்கிறது.

இரண்டாம் பாதியில் வரும் பில்டப் பாடல் நிச்சயமாக இதுவரை தமிழில் படமாக்கப்பட்ட மிகச்சிறப்பான பாடல் என்று சொல்லலாம். முழுக்க கிராஃபிக்ஸ், யுவன்ஷங்கரின் அதிரடி மியூசிக், நா.முத்துக்குமாரின் ஷார்ப் லிரிக்ஸ், அல்டிமேட் ஸ்டாரின் அதிரடி ஸ்டைல் என்று எல்லா ஏரியாவிலும் சிக்ஸர் அடிக்கும் பாட்டு இது. பில்லா-வின் தீம் மியூசிக் படத்தின் தொடக்கத்தில் எங்கும் வந்துவிடாத அளவுக்கு யுவன்ஷங்கர்ராஜா மிக ஜாக்கிரதையாக இருந்திருக்கிறார். டேவிட் பில்லா, டான் ஆகும் இடைவேளைக் காட்சியில்தான் (அதுவும் மெல்லியதாக) அந்த இசையைக் கொண்டு வருகிறார். அதுபோலவே பில்லா-1ல் வரும் இண்டர்போல் ஆபிஸர், ப்ரீக்குவலிலும் ஒரு காட்சியில் பில்லா சாதா ஆளாக இருக்கும்போது அவருக்கு அறிமுகமாகிறார். ஏற்கனவே எடுக்கப்பட்ட படத்தின் தொடர்ச்சி கெடாதவகையில், முன்கதையை கையாளுவது சாதாரணமான விஷயமல்ல. பில்லா-2 அவ்வகையில் பர்ஸ்ட் க்ளாஸில் தேறுகிறது.

படத்தின் வசனங்கள் ‘ஷார்ப்’ என்றாலும், ஓவர் புத்திசாலித்தனமோ என்றுகூட ஒருக்கட்டத்தில் சலிப்படைய வைக்கிறது. பில்லாவின் உலகம் முட்டாள்கள் அற்றது என்று தோன்றுகிறது. ‘தல’ எதைப் பேசினாலும், அது ‘பஞ்ச்’ ஆகத்தான் இருக்கவேண்டும் என்று இயக்குனர், வசனகர்த்தாவிடம் கேட்டுக் கொண்டாரோ என்னவோ தெரியவில்லை. அக்கா செத்துப் போகும்போது சுடுகாட்டுக்கு வந்தும், ‘தல’ ஏதாவது பஞ்ச் வைத்துவிடுவாரோ என்று மனசு பதறுகிறது.

“இவர் சுட்டுக் கொண்டே இருக்கிறார், மற்றவர்கள் செத்துக்கொண்டே இருக்கிறார்கள்” என்றெல்லாம் படத்தை குறை சொல்பவர்கள், இதற்கு முன்பாக ஏதாவது சினிமா பார்த்திருக்கிறார்களா என்றே சந்தேகம் வருகிறது. திரைக்கதை கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தாலும் படமாக்கம், நடிகர்களின் ஃபெர்பாமன்ஸ், கேமிரா, எடிட்டிங் என்று தொழில்நுட்பரீதியாக சிறப்பான விருந்து பில்லா-2.

படம் மொக்கை. வேஸ்ட்டு. பில்லா இல்லை நல்லா என்றெல்லாம் எழுதினால் ஃபேஸ்புக்கிலும், பிளாக்கிலும் நூற்றி சொச்சம் ‘லைக்’, ’கமெண்டு’ எல்லாம் கிடைக்குமென்றாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ரிஸ்க் எடுத்து இதை சொல்கிறேன்.

அஜீத் ரசிகர்களுக்கு அட்டகாசம். ஆக்‌ஷன் பிரியர்களுக்கு விஷூவல் ட்ரீட். இந்த இரண்டு கேட்டகிரியிலும் இல்லாதவர்கள் பவர்ஸ்டாரின் ‘ஆனந்தத் தொல்லை’ ஆகஸ்ட்டில் வெளியாகும்வரை பொறுமையாக காத்திருக்க வேண்டியதுதான்.