சாதாரண பேனா காணாமல் போனாலே துடிதுடிக்கின்ற இளகியமனதுக்கு
சொந்தக்காரர்கள் தமிழர்கள். தலைநகர் சென்னையில் சமீபத்திய சில வருடங்களில் காணாமல் போன முக்கியமான சில லேண்ட்மார்க்குகள் இவை...
உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன் ஓட்டல்
சென்னையில்
‘சந்திப்பு’ என்றாலே, ஒரு காலத்தில் உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன் தான். நகரின் இதயப்
பகுதியில் அமைந்திருந்தது உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன். அண்ணா சாலை –
கதீட்ரல் சாலை சந்திப்பில். காட்டுக்குள் அமர்ந்திருப்பதைப் போன்ற தோற்ற மயக்கத்தை
ஏற்படுத்தும். திறந்தவெளியில் வாகனத்தை நிறுத்தி, சூடாக போண்டாவோ, மசாலா தோசையையோ
உள்ளே தள்ளலாம். ‘ட்ரைவ் இன்’ எனப்படும் வாகனத்திலிருந்தே உணவு அருந்தும்
வசதிகொண்ட சென்னையின் முதல் ஓட்டலாக இது இயங்கத் தொடங்கியது. அட்டகாசமான ஃபில்டர்
காபி குடிக்கலாம். இலக்கியமோ, சினிமாவோ எதை வேண்டுமானாலும் நேரம் போவது தெரியாமலேயே
அரட்டையடித்து கழிக்கலாம்.
1962ஆம்
ஆண்டு 18 ஏக்கர் நிலம், தோட்டக்கலைத் துறையினரிடமிருந்து குத்தகைக்கு
எடுக்கப்பட்டது. நடிகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரும்
கூடிப்பழகும் இடமாக நாளடைவில் பரிணாமம் பெற்றது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும்
சென்னையின் நடுத்தர வர்க்கத்தினருக்கு வேடந்தாங்கலாக உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன்
திகழ்ந்தது. இடையே ஏராளமான நவீன ஓட்டல்கள் சென்னையில் பெருகிவிட்டாலும்,
உட்லண்ட்ஸுக்கான மவுசு மட்டும் மக்களிடம் கடைசிவரை குறையவேயில்லை.
சில
வருடங்களுக்கு முன்பு தனியாரிடம் குத்தகைக்கு விடப்பட்ட இந்த இடத்தை மீண்டும்
தோட்டக்கலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென அரசுரீதியான அரசியல் அழுத்தம்
தரப்பட்டது. உயர்நீதிமன்றம் வரை விவகாரம் சென்று, கடைசியாக 2008ல் உட்லண்ட்ஸ்
ட்ரைவ் இன் இழுத்து மூடப்பட்டது. 46 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்தது.
அப்போதைய
அரசாங்கம் அதே இடத்தில் ‘செம்மொழிப் பூங்கா’ அமைத்தது. பூங்காவும் சிறப்பான
ஏற்பாடுதான் என்றபோதிலும், அந்த இடத்தை இப்போது கடக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம்
பழைய உட்லண்ட்ஸ் ரசிகர்கள் அன்றைய அரசாங்கத்தை இன்னமும் சபித்தபடியே
கடக்கிறார்கள்.
மூர் மார்க்கெட்
சென்ட்ரல்
ரயில் நிலையம் சென்னையின் அடையாளங்களில் ஒன்று. அதையொட்டி ஒரு காலத்தில் ஒரு
வணிகவளாகம் சீரும், சிறப்புமாக செயல்பட்டு வந்தது. 1898ல் ஜார்ஜ் மூர் என்கிற
வெள்ளைக்காரத்துரை அடிக்கல் நாட்டி உருவாக்கப்பட்ட வளாகம் இது. பிராட்வே சாலையில்
வணிகர்களுக்கு இடம் போதவில்லை என்பதால் இது உருவாக்கப்பட்டது.
ஆரம்பத்தில்
இறைச்சிக்கடை, உணவுப் பொருட்களுக்கான அங்காடிகள், பூக்கடைகள் என்றிருந்த
மார்க்கெட் பிற்பாடு பரிணாமம் பெற்று பழங்காலப் பொருட்கள், கலைப்பொருட்கள்,
புத்தகங்கள், செல்லப் பிராணிகள் என்று பன்முகத்தன்மை பெற்றது. இங்கு ஒரு பொருள்
கிடைக்காவிட்டில், சென்னையில் வேறெங்குமே கிடைக்காது என்கிற நிலை கடந்த
நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தது. பழையப் பொருட்களை மலிவுவிலையில் செகண்ட்
ஹேண்ட் ஆக வாங்க வேண்டுமானால் மூர்மார்க்கெட்தான் ஒரே கதி.
சென்ட்ரல்
ரயில்வே ஸ்டேஷனை விரிவுபடுத்த இந்திய ரயில்வே இந்த இடத்தை கையகப்படுத்த நினைத்தது.
வணிகர்களின் எதிர்ப்பால் இம்முயற்சி வெற்றிபெறவில்லை. 1985ஆம் ஆண்டு ஒரு ‘மர்மமான’
தீவிபத்தால் இந்த வளாகம் முற்றிலுமாக சீர்க்குலைந்தது. பின்னர் அதே இடத்தில்
சென்னைப் புறநகர் ரயில்வே முனையமும், ரயில் முன்பதிவுக்கான நிலையமும் அமைந்தது.
1986ல்
மூர்மார்க்கெட் இருந்த இடத்துக்கு மேற்கே ‘லில்லி பாண்ட் காம்ப்ளக்ஸ்’ என்கிற
பெயரில் மூர்மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஒரு வளாகத்தை அரசு அமைத்துக் கொடுத்தது.
ஆயினும் பழைய மார்க்கெட்டுக்கு இருந்தமாதிரியான வரவேற்பு, புதிய மார்க்கெட்டுக்கு
கிடைக்கவில்லை. இடையே தி.நகர் பெரும் வணிககேந்திரமாக உருவெடுத்துவிட்டது.
புத்தகங்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், டிவிடி, செல்லப் பிராணிகள் என்று பல்வேறு
விஷயங்கள் இன்னும் விற்றுக் கொண்டிருந்தாலும் சொல்லிக் கொள்ளும்படி விற்பனை இல்லை. பழம்பெருமையின் மிஞ்சிய நினைவுகளாக, சோகையான விளக்கொளியில், கடனுக்கே என்று இயங்கிக் கொண்டிருக்கிறது இப்போதைய மூர்மார்க்கெட்.
சென்ட்ரல் ஜெயில்
இந்தியாவின்
பழமையான சிறைச்சாலைகளில் ஒன்று சென்னை சென்ட்ரல் சிறைச்சாலை. 1837ல் இயங்கத்
தொடங்கிய இச்சிறைச்சாலை 172 வருடங்களாக லட்சக்கணக்கானோரை தங்கவைத்து, கடைசியாக
2009ல் தன் மூச்சை நிறுத்திக் கொண்டது. இதற்குப் பதிலாக புதிய சிறைச்சாலை நவீன
வசதிகளுடன் சென்னை புறநகர் புழலில் உருவாக்கப்பட்டது.
பிரிட்டிஷ்
ஆட்சிக்காலத்தில் தீவாந்தர தண்டனை பெற்ற கைதிகள் அந்தமான் சிறைச்சாலைக்கு
அனுப்பப்படுவார்கள். இந்தியா முழுக்க இருந்து அதுபோல அனுப்பப்படும் கைதிகள் சென்னை
துறைமுகத்தில் இருந்து கப்பலில் அழைத்துச் செல்லப்படுவார்கள். கப்பலில்
ஏற்றுவதுவரை அவர்களை சிறைபிடித்து வைக்கவே சென்னையில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது.
பதினோரு ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான சிறைச்சாலையை கட்டுவதற்கு
அப்போது ஆன செலவு ரூ.16,496/- மட்டுமே.
சுதந்திரக்
காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வீர்சாவர்க்கர் ஆகியோர் இங்கு
அடைபட்டிருந்தார்கள். தமிழக முதல்வர்கள் சி.என்.அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி,
ஜெயலலிதா ஆகியோரும் இங்கு சிறைவாசிகளாக இருந்ததுண்டு.
சிறை
இடிக்கப்பட்ட இடம் சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காகவும், அரசு பொதுமருத்துவமனைக்கு
கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்காகவும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இடிக்கப்படுவதற்கு
முன்பாக முன்னாள் சிறைவாசிகள் பலரும் நேரில் வருகைதந்து, பழம் நினைவுகளை மீட்டிக்
கொண்டது உணர்ச்சிப்பூர்வமான ஒரு தருணம்.
ஜெமினி ஸ்டுடியோ
திரையுலக
ஜாம்பவான் கே.சுப்பிரமணியம் 1940ஆம் ஆண்டு, சென்னை அண்ணாசாலையில் இருந்த அந்த
இடத்தை விற்றபோது, அதன் மதிப்பு 86,000 ரூபாய். திருத்துறைப்பூண்டி சுப்பிரமணியன்
சீனிவாசன் (ஆனந்தவிகடன் உரிமையாளர் எஸ்.எஸ்.வாசன்) என்பவர் வாங்கி ஜெமினி
ஸ்டுடியோஸ் என்று பெயரிட்டார். முன்னதாக இது மோஷன் பிக்சர் ப்ரொடியூஸர்ஸ் ஸ்டுடியோ
என்கிற பெயரில் இயங்கி வந்தது.
குதிரைப்
பந்தயங்களில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர் வாசன். அடிக்கடி ஜெயிக்கிற தன்னுடைய அதிர்ஷ்டக்கார
குதிரையான ஜெமினியின் பெயரையே, தன்னுடைய ஸ்டுடியோவுக்கும் சூட்டினார். தென்னிந்திய
திரைப்படத்துறையே ஒரு காலத்தில் ஜெமினியில் இயங்கிவருமளவுக்கு, இந்த ஸ்டுடியோ
செல்வாக்கு பெற்றிருந்தது. அருகில் இருக்கும் அண்ணா மேம்பாலத்தை, இன்னும் கூட ‘ஜெமினி மேம்பாலம்’ என்றே பழைய சென்னைவாசிகள் குறிப்பிடுகிறார்கள்.
கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு சிறப்பாக செயல்பட்ட ஸ்டுடியோ, பிற்பாடு பல்வேறு
காரணங்களால் களையிழக்கத் தொடங்கியது.
ஸ்டுடியோ
இருந்த ஒரு பகுதியில் ஜெமினி பார்சன் என்கிற பெயரில் வணிகவளாகம் உருவானது. ஜெமினி
ஸ்டுடியோ இருந்த இடத்தில் இப்போது ‘தி பார்க்’ என்னும் நட்சத்திர ஓட்டல் இயங்கிக்
கொண்டிருக்கிறது.
கெயிட்டி தியேட்டர்
1914ல்
சென்னையில் சினிமா காட்டவென்றே ஒரு நிரந்தரமான அரங்கினை ஆர்.வெங்கையா என்பவர்
அமைத்தார். தென்னிந்தியாவில் சினிமா
தியேட்டர் கட்டிய முதல் இந்தியர் என்கிற பெருமையையும் பெற்றார். அந்த அரங்கம்
கெயிட்டி. அண்ணாசாலைக்கு வெகு அருகாமையில், நரசிங்கபுரம் ரேடியோ மார்க்கெட்டை
ஒட்டி, சிந்தாதிரிப்பேட்டையில் இது அமைந்தது.
மவுனப்படங்கள்
காலத்திலேயே கிட்டத்தட்ட இருபதாண்டுகள் தாக்குப்பிடித்த தியேட்டர், பிற்பாடு
பேசும் படங்கள் வெளிவந்தபோது சக்கைப்போடு போட்டது. இளையராஜாவின் முதல் படமான
அன்னக்கிளி இங்கே தாறுமாறாக ஓடியதாக பழைய திரைப்பட ரசிகர் ஒருவர்
நினைவுறுத்துகிறார்.
எழுபதாவது
ஆண்டு நிறைவை முன்னிட்டு, 1983ல் திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டது. ஏர்கண்டிஷன்
வசதி செய்யப்பட்டது. அதன்பிறகு பெரும்பாலும் ஆங்கிலப்படங்கள். குறிப்பாக சைனீஸ்
சண்டைப்படங்கள்.
இரண்டாயிரங்களின்
தொடக்கத்தில் கெயிட்டி கொஞ்சம் கொஞ்சமாக மூச்சை நிறுத்தத் தொடங்கியது.
இரண்டாந்தரப் படங்களாக திரையிடப்பட்டுக் கொண்டிருக்க, ரசிகர்களின் ஆதரவை
முற்றிலுமாக இழந்தது. 2005ஆம் ஆண்டு ஒருவழியாக தன்னுடைய நூற்றாண்டை காண்பதற்கு
ஒன்பது ஆண்டுகள் முன்பாகவே தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. தற்போது இங்கே ஒரு
வணிகவளாகம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
வெறும்
திரைப்படங்களை மட்டுமே திரையிட்டுக் கொண்டிருந்த அரங்கம் அல்ல இது. ஏராளமான
ஆவணப்படங்களையும் திரையிடும் அரங்காக இருந்தது. வன உயிர்கள் குறித்த அற்புதமான
ஆவணப்படமான ’ப்யூட்டிஃபுல் ப்யூப்பிள்’ பள்ளி மாணவர்களின் ஆதரவோடு இருநூறு
நாட்களுக்கும் மேலாக இங்கே ஓடியது குறிப்பிடத்தக்கது.
(நன்றி : புதிய தலைமுறை)
(நன்றி : புதிய தலைமுறை)