15 நவம்பர், 2012

ட்விட்டர் கைதுகள்.. தூண்டும் விவாதங்கள்!

நாள் : 17 நவம்பர் 2012, மாலை 5 மணி
இடம் : பி.எட்.அரங்கு, லயோலா கல்லூரி, சென்னை

சைபர் சட்டங்கள் - முறைப்படுத்தவா? முடக்கவா?
- வழக்கறிஞர் சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்


அரசு இயந்திரம்: சாமானியர்களுக்கா? பிரபலங்களுக்கா?
- சையது, சேவ் தமிழ்சு இயக்கம்


இணைய உலகிலும் கருத்துரிமைக்கு சாவுமணி அடிக்கும் அரசு!
- ராதிகா கிரி, ஊடகவியலாளர்


விவாதங்கள் நடத்துவது: கருத்தை மாற்றவா? காயப்படுத்தவா?
- கஜேந்திரன், ஊடகவியலாளர்


சமூக வலைத்தளங்கள் தொடர்பான இப்பிரச்சினையில் தங்களது பார்வைகள்
- யுவகிருஷ்ணா, கார்ட்டூனிஸ்ட் பாலா, நிர்மலா கொற்றவை, உண்மைத்தமிழன்


எதிர்கொள்வது எப்படி - கலந்துரையாடல்
----------------------------
அனைவரும் வருக
----------------------------

14 நவம்பர், 2012

துப்பாக்கி

Wait is over.

தேசத்துரோகியான ஒரு காவல்துறை அதிகாரியை, நேர்மையான உளவுத்துறை அதிகாரியான விஜய் விசாரணை செய்கிறார். அவருடைய அலுவல்ரீதியான துப்பாக்கியையும், ஒரு இல்லீகல் துப்பாக்கியையும் டேபிள் மீது எடுத்து வைக்கிறார். உளவுத்துறை அதிகாரி ஏதாவது ‘பஞ்ச்’ டயலாக் அடித்துவிடுவாரோ என்கிற மரண அச்சத்தில், தேசத்துரோகி இல்லீகல் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறார். க்ளைமேக்ஸிலும் நேர்மையற்ற ஒரு மிலிட்டரி அதிகாரி, இதே பஞ்ச் டயலாக் பயத்தில் இதே போல தற்கொலை செய்துக் கொள்கிறார். சூப்பர் ஸ்டார் சிவாஜியின் ‘ஆபிஸ் ரூம்’ காட்சிகள் நினைவுக்கு வருகிறது.

வழக்கமான விஜய் ஃபார்முலா படமல்ல இது என்பதற்கு இக்காட்சிகளே அத்தாட்சி. திருப்பாச்சி காலத்தில் தனக்கே தனக்கென்று உருவான தனித்துவ ஃபார்முலாவை உடைக்கும் துணிச்சலான முயற்சியை ‘நண்பன்’ ஒப்புக்கொண்டபோதே விஜய் தொடங்கிவிட்டார். துப்பாக்கியில் இது முழுமை பெற்றிருக்கிறது. எவ்வளவு நாளைக்குதான் தமிழ்நாட்டிலேயே ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருப்பது என்கிற அலுப்பு அவருக்கும் ஏற்பட்டிருக்கலாம். துப்பாக்கி தெலுங்கிலும் ஹிட் அடிக்கும் என்கிற செய்தி தேனாக காதில் பாய்ந்துக் கொண்டிருக்கிறது. ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படலாம். கேரளாவிலும் ஹிட். இந்திய தேசிய உணர்வுகொண்ட திரைப்படம் என்பதால் எஃப்.எம்.எஸ்.ஸிலும் கதறக் கதற கல்லா கட்டப்போகிறது. இந்த தீபாவளி ‘தள’தீபாவளி.

இளையதளபதிக்கு வருடா வருடம் வயது குறைந்துக்கொண்டே போகிறது. மிக விரைவில் அவர் குழந்தை நட்சத்திரமாக மாறிவிடுவாரோ என்று அஞ்சக்கூடிய அளவுக்கு இளமை ஊஞ்சலாடுகிறது. ஸ்மார்ட்டில் கில்லி, ஆக்‌ஷனில் போக்கிரி என்று துப்பாக்கி முழுக்க முழுக்க விஜய் ஷோ. முழுநீஈஈஈள திரைப்படமென்றாலும், இன்னும் கொஞ்ச நேரத்துக்கு தளபதியை ஸ்க்ரீனில் பார்த்துக்கொண்டே இருக்கமாட்டோமா என்று படம் முடிந்ததும் ஏக்கம் பிறக்கிறது.

ஏழாம் அறிவு மொக்கையாகி விட்டதால், துப்பாக்கியின் திரைக்கதையை சிரத்தையெடுத்து செதுக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக இண்டர்வெல் பிளாக் மரண மாஸ். ஒரு காட்சியில் நாயை ஸ்க்ரீனில் பார்த்து தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. இராம.நாராயணனின் முந்தைய  நாய், குரங்கு, பாம்பு ரெக்கார்டுகளை எல்லாம் இக்காட்சியில் அசால்ட்டாக உடைத்து எறிந்திருக்கிறார் முருகதாஸ். படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதி ஹீரோவுக்கும், இயக்குனருக்குமே ஒதுக்கப்பட்டு விட்டதால், பிரும்மாண்டமான ஸ்க்ரிப்டுக்கு கருக்காக செலவு செய்திருக்கிறார்கள். க்ளைமேக்ஸில் பிரதிபாகாவேரி மாதிரியான பெரிய கப்பல் வெடிக்கும்போது, ஊசிப்பட்டாசு வெடிப்பதைப் போல ஃபீலிங். போலவே போஸ்ட் ப்ரொடக்‌ஷன் ஏனோதானோவென்று இருக்கிறது. நேற்று வந்த நாளைய இயக்குனர்களே இந்த மேட்டரில் கலக்கிக் கொண்டிருக்கும்போது, தமிழின் சுபாஷ்கய்யான முருகதாஸ் இன்னமும் ரமணா, கஜினி காலத்திலேயே தேங்கிப் போய் கிடக்கிறார்.
ஹீரோயின் காஜல். வழக்கம்போல தொட்டுக்க ஊறுகாய்தான். இருந்தாலும் மணம், குணம், நெடி நிரம்பிய காரமான மிளகாய் ஊறுகாய். எப்போதும் ‘ஹாட்’டாக சுர்ரென்று இருக்கிறார். முதல் இரவில் புதுக்கணவன் உதடை கடித்து வைத்துவிடுவானோ என்று பதட்டப்படும் புதுப்பொண்ணை மாதிரியே எல்லா சீனிலும் பரபரவென்று ரியாக்‌ஷன். முத்தத்துக்கு தயாராகி உதடுகளை தயார்படுத்தும் அழகுக்காகவே காஜலுக்கு பாரதரத்னா வழங்கலாம். இவர் தோன்றும் முதல் காட்சியிலேயே, உடன் படம் பார்த்த தோழர் ஒருவர் ‘pad வைத்திருக்கிறாரா?’ என்று அவதூறான சந்தேகத்தைக் கிளப்பினார். இதற்காகவே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்ததில் ‘ஒரிஜினல் டெவலப்மெண்ட்’தான் என்பதை இறுதியில் ஊர்ஜிதம் செய்துக்கொள்ள முடிந்தது. சந்தேகம் கிளப்பிய தோழரை 66-ஏவில் உள்ளே தள்ளலாம்.

வாராது வந்த மாமணியாய் இளையதளபதி ஓர் ஒரிஜினல் ஹிட் அடிக்கும்போது திருஷ்டிப் படிகாரமாய் ஹாரிஸ் ஜெயராஜ். ‘கூகிள் கூகிள்’ (இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) பாடலைத் தவிர்த்து, வேறெதுவும் செல்ஃப் எடுக்கவில்லை. கூகிள் பாடலில், ஷங்கர் ஸ்டைலில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒரு காட்சியில் தோன்றுகிறார். விஜய் படமாச்சே என்று, க்ளைமேக்ஸுக்கு முன்பு குத்து, குத்துவென ஒரு குத்துப்பாட்டை எதிர்ப்பார்த்தால், ஒரு சோகையான டூயட். மெலடியான தேசபக்திப் பாடலும் (ஜேசுதாஸ்?) படம் முடிந்தபிறகே வருகிறது. எவ்வளவு மரணமொக்கையான விஜய் படமென்றாலும் பாடல்கள் மட்டும் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பும். துப்பாக்கியில் பாடல்களும், பின்னணி இசையும் பரிதாபம். முருகதாஸின் ரமணாவுக்கு இசைஞானியின் பின்னணி இசை நினைவுக்கு வந்து ஏங்கவைக்கிறது.

வில்லன் வெயிட் என்பதால் ஹீரோ அதைவிட வெயிட்டாகிறார். கடைசியில் ‘என்னை அடிச்சியே கொல்லு’ என்று விஜய் சவால்விட, வில்லனுக்கு பக்கத்தில் இருப்பவர் ‘வேணாம். ஏதோ தந்திரம் செய்றான். அவனை உன்னாலே அடிக்க முடியாது’ என்று தரும் பில்டப்தான் ஒரிஜினல் ஹீரோயிஸம். இத்தனை காலமாக விஜய் பக்கம் பக்கமாக பேசிய பஞ்ச் டயலாக்குகள் எவ்வளவு வீண் என்பதை அவர் உணர்ந்திருப்பார்.

இஸ்லாமியத் தீவிரவாதம், இந்திய தேசப்பக்தி என்று வழக்கமான பலகீனமான ஜல்லிதான். என்றாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கப் போனால் பரபரப்பான திரைக்கதை, விஜய்யின் பெர்ஃபாமன்ஸ் என்று ’போர்’ அடிக்காமல் துப்பாக்கியை பார்க்க முடிகிறது. பொதுவாக விஜய் படங்களை குழந்தைகள் வெகுவாக ரசிப்பார்கள். இப்படம் இளைஞர்களை டார்கெட் வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ‘வயலன்ஸ்’ கொஞ்சம் அதிகமென்றும் தோன்றியது. முந்தைய விஜய்யின் வயலண்ட் படங்களிலெல்லாம் ஆக்‌ஷன் ரசிக்கவைக்கும், திகில்படுத்தாது. துப்பாக்கியில் வெளிப்படும் ரத்தமும், புல்லட் சத்தமும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. விஜய் படத்துக்குதான் கொஞ்சம் புதுசு.

துப்பாக்கி : குறி கச்சிதம்

9 நவம்பர், 2012

புயல் : இரண்டு டயரிக்குறிப்புகள்


நவம்பர் 1966.

1966. நவம்பர் 3. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். அன்று விடுமுறை தினமா அல்லது புயல் காரணமாக விடுமுறை விட்டிருந்தார்களா என்று நினைவில்லை.

புயல் சென்னையை தாக்கப் போகிறது என்று பரபரப்பு. நாளிதழ்கள் மட்டுமே அப்போது செய்திகளை அறிய ஒரே வழி. விடுதி அறையில் ரேடியோ இல்லை. நண்பர்களோடு அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். ஓங்கி வளர்ந்த மரங்கள் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. விளம்பர ஹோர்டிங் பலகைகள் காற்றுக்கு
த் தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்தன.

மாடிக்குப் போய் மழையைப் பார்க்கலாம் என்று திடீர் ஆசை. பேய்மழை கொட்டிக் கொண்டிருந்தது. அசுர காற்றும் தன் பங்குக்கு தாண்டவமாடியது. அறை சன்னல்கள் படபடவென்று அடித்துக் கொண்டன. காற்றின் வேகம் தாங்காமல் சில சன்னல்கள் பிய்த்துக்கொண்டும் பறந்தன. வெளிச்சமுமில்லை. எதைப் பார்த்தாலும் ஒரு மாதிரியாக ‘க்ரே’வாகவே தெரிந்தது. இருந்தாலும் புயலை ‘லைவ்’வாக பார்க்கும் எங்கள் ஆசையை எதுவுமே தடுக்கவில்லை.

உயரமான அலைகளோடு ஒரு கப்பல் தத்தளித்துக் கொண்டிருந்ததை கடலில் பார்த்தோம். க
ப்பலையும் விட உயரமாக அலைகள் சீறின. காற்று அக்கப்பலை கரைக்குத் தள்ளிக்கொண்டு வந்தது. கப்பலோ மீண்டும் கடலுக்குள் செல்ல அடம் பிடித்தது. இந்தத் தள்ளு முல்லு நீண்டநேரம் நடந்தது. வென்றது இயற்கையே. துறைமுகத்துக்குத் தெற்கே செத்துப்போன திமிங்கிலத்தை மாதிரி கரை தட்டி நின்றது அந்தக் கப்பல்.

அதே நேரம் SS Damatis என்கிற பெரிய கப்பல் ஒன்று புயலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு எதிரே மெரீனாவில் கரை தட்டியது. மூன்றாவதாக ஒரு கப்பலும் தென்சென்னை கடற்பகுதியில் கரை ஒதுங்கியது.

பிற்பகல் புயல் வலுவிழந்தது. ஆனாலும் காற்று பலமாகவே வீசியது. மெரீனாவில் கரை ஒதுங்கிய கப்பலைப் பார்க்கப் போனோம். சூறைக்காற்றால் மணல் பறந்து ஊசியாக எங்கள் உடம்பில் குத்தியது. எங்களது விடுதித் தோழர் ஒருவரிடம் கேமிரா இருந்தது. அவர் கப்பலை படம் எடுத்தார். Damatis கப்பல் ஒரு பக்கமாக மணலுக்குள் புதைந்து மாட்டிக் கொண்டிருந்தது.

பிற்பாடு அந்த கப்பலை அங்கிருந்து முழுமையாக அகற்ற முடியாமல், அதனுடைய இரும்பு பாகங்கள் கடலுக்குள்ளேயே நீட்டிக் கொண்டிருந்தன. கடலில் குளிப்பவர்கள் அடிக்கடி அப்பகுதியில் இரும்பு கிராதிகளுக்கு இடையே சிக்கி மரணமடைவார்கள். இந்நிலை நீண்டகாலத்துக்கு நீடித்தது.

அப்போதெல்லாம் சென்னைப் பல்கலைக்கழக கட்டிடத்தில் நாங்கள் தேர்வு எழுதும்போது, புயலில் சிக்கிய அந்த கப்பலின் அமானுஷ்யமான தோற்றம் அடிக்கடி நினைவுக்கு வந்து திகில்படுத்தும்.

(
நன்றி : டாக்டர் ஆர். சங்கரன், http://sankaran4412.blogspot.in)


2012. அக்டோபர்

2012. அக்டோபர் இறுதி நாள்.  அடைமழை. ‘நிலம்’ புயல் வெறித்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. புயலால் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக, கடமையே கண்ணென்று அலுவலகத்தில் இருந்தேன். ட்விட்டர் மூலமாகதான் மழை பெய்கிறதா, காற்று அடிக்கிறதா என்பதை தெரிந்து கொண்டிருந்தேன்.

மூன்று மணி வாக்கில் நண்பர் நரேன் கைபேசியில் அழைத்தார். “என்னய்யா ரிப்போர்ட்டர் நீ. கப்பல் ஒண்ணு பெசண்ட் நகரில் கரை ஒதுங்கிக் கிடக்குது. நீ பாட்டுக்கு ஆபிஸ்லே கம்முன்னு உட்கார்ந்திருக்கேன்னு சொல்றீயே” என்று உசுப்பிவிட்டார்.

ரோஷத்துடன் இரு சக்கர வாகனத்தை உதைத்து, பெச
ன்ட்நகர் நோக்கிக் கிளப்பினேன். புயல் காற்று, பெருமழை இதுவெல்லாம் மக்களை எவ்வகையிலும் அச்சப்படுத்தவில்லை என்பதைப் போக்குவரத்து நெரிசல் மூலமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. இயற்கைச் சீற்றங்கள் என்றால் முன்பெல்லாம் மக்கள், கூடுகளில் தஞ்சம் புகும் பறவைகள்  போல வீடுகளில் முடங்கிக் கிடப்பார்கள். மழையோ, வெயிலோ தன் கடமை பணி டிராபிக் ஜாமில் முடங்கிக் கிடப்பதே என்று இப்போதெல்லாம் எந்நேரமானாலும் சாலைகளில் தவம் கிடக்கிறார்கள். சென்னை நகரம் சாதாரண நாட்களிலேயே ரொம்ப அழகு. அதிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் சென்னை ரொம்ப ரொம்ப அழகு. போதாக்குறைக்கு இப்போது புயல்மழை வேறு.

இப்படிப்பட்ட
ச் சூழலில் பைக்கில் செல்வது கிட்டத்தட்டத் தற்கொலை முயற்சிதான். பெசன்ட் நகர் கடற்கரையை நெருங்கியபோதுதான் தெரிந்தது, என்னை மாதிரி ஆயிரக்கணக்கானவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று. அரசு எவ்வளவுதான் புயல் பற்றி எச்சரித்தாலும், புயலை நேரில் பார்க்கவேண்டும் என்கிற ஆவலில் குடும்பம், குடும்பமாக ஆட்டோவில் கடற்கரைக்கு வரும் கூத்தை என்னவென்று சொல்லி ஜீரணித்துக் கொள்வது?

போதாக்குறைக்கு கப்பல் ஒன்று கரை ஒதுங்கி விட்டது. சொல்லவும் வேண்டுமா? ஆளாளுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் போனை போட்டு, “மச்சான், இங்கே ஒரு கப்பல் கரை ஒதுங்கிக் கிடக்குது. வர்றீயா?” என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடலை பார்த்தால் கிட்டத்தட்ட சுனாமி மாதிரி சீறிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கோ வேடிக்கை பார்க்கும் வெறி.


கரை ஒதுங்கி நின்ற கப்பல் கருப்புச் சாத்தான் மாதிரி தோற்றத்தில் பயமுறுத்தியது. பெயர் மட்டும் சாந்தமாக வைத்திருக்கிறார்கள். ’பிரதிபா காவேரி’யாம். ஆயில்/கெமிக்கல் டேங்கர் வகை கப்பல் இது. நல்லவேளையாக கப்பலில் ‘சரக்கு’ எதுவுமின்றி காலியாக இருந்ததால் பெரிய பிரச்சினை இல்லை. புயலில் தடுமாறி, அலைமோதி வந்து கடலோரமாக செருகிக் கொண்டிருக்கிறது. கரையிலிருந்து கடலுக்குள் நூறு, நூற்றி ஐம்பது மீட்டர் தூரத்தில் கப்பல். சில சிப்பந்திகளுக்கு உள்ளே காயம் பட்டிருக்கிறது. அலைமோதிக்கொண்டிருந்த கடலில் தீரமாக சில மீனவ இளைஞர்கள் படகு ஓட்டி, காயம்பட்டவர்களை
க் காப்பாற்றி அழைத்து வந்து, ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

தொலைக்காட்சி சேனல்கள் கேமிராவும், கையுமாக குவிந்துவிட்டாலும் படமெடுப்பது மிகச்சிரமாக இருந்தது. ஆளையே தள்ளும் காற்றுக்கு கேமிரா தாக்குப்பிடிக்குமா? அப்படியும் சில துணிச்சலான டி.வி.க்கள் ‘லைவ்’ செய்ய ஆரம்பித்தன.

“சொல்லுங்க சார். நீங்க என்ன பார்த்தீங்க”

“நான் கரையோரமா வந்துக்கிட்டிருந்தேனா... அப்போ திடீர்னு கப்பல் கரையை நோக்கி அப்படியே தடுமாறி வந்துக்கிட்டிருந்திச்சி...”


பாவம் மக்கள். எந்த சேனலை வைத்தாலும் இதே “நீங்க என்ன பார்த்தீங்க?”தான்.


கேமிரா செல்போனை யார்தான் கண்டுபிடித்ததோ என்று நொந்துகொண்டேன். தாஜ்மகாலுக்கு முன்
நிற்கும் தோரணையில் மக்கள் ஆளாளுக்கு கப்பல் முன்பாக நின்று தங்கள் செல்போனில் தங்களையே படம் பிடித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

“கப்பலுக்குள்ளாற உசுருக்கு நிறைய பேர் போராடிக்கிட்டிருக்காங்க, ஏதோ எக்ஜிபிஸன் பார்க்குற மாதிரி எல்லோரும் வேடிக்கை பார்க்க வந்துட்டானுங்க...” என்று ஒட்டுமொத்தமாக மக்கள், மீடியா என்று எல்லோரையும் சேர்த்து திட்டிக் கொண்டிருந்தார் ஒரு வயதான பெண். கரையோரமாக கடலுக்கு நெருக்கமாக இருக்கும் குடிசை ஒன்றில் வசிக்கிறவர். இன்னும் சில நேரங்களில் புயல் கரையை கடக்கும்போது, இவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். அதனால்தான் அவருக்கு உயிரின் அருமை தெரிந்திருக்கிறதோ என்னமோ.

(நன்றி : புதிய தலைமுறை)

8 நவம்பர், 2012

66-A : ஏன் எதிர்க்க வேண்டும்?


இந்தியாவில் சட்டங்களை எழுதுபவர்கள் மற்றும் திருத்துபவர்களின் சட்ட அறிவைக் குறித்து நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. பல்வேறு நாடுகளின் சட்டங்களை வாசித்தவர்கள். இத்துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்பதையெல்லாம் நாம் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு நம் சமூகம் குறித்த சரியான புரிதல் இருக்கிறதா என்பதுதான் நம்முடைய சந்தேகம். ஒரு புதிய சட்டத்தின் மூலமோ, சட்டத் திருத்தத்தின் மூலமோ அதிகாரத்தில் இருப்பவர்கள் சாதாரண மனிதர்களை மிக சுலபமாக பழிவாங்க முடிந்தால் அந்த சட்டமோ, சட்டத் திருத்தமோ எவ்வளவு அபத்தமானது.. ஆபத்தானது?

பெங்களூரில் மாலினி என்ற பெண் தற்கொலை செய்துக்கொண்டார்இவர் ஐ.ஐ.எம்.மில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்தார். இவருக்கும், இவரது காதலருக்கும் ஏதோ தகராறு. வாய்ச்சண்டை போட்டு காதலர் பிரிந்துச் சென்றதும் ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் இட்டார். “மகிழ்ச்சியான நாள் இன்று. கேர்ள்ஃப்ரண்டை பிரிந்துவிட்டேன். சுதந்திரநாள் வாழ்த்துகள்”. மாலினி தற்கொலை செய்துக் கொண்டார். காதலரின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் இந்த தற்கொலைக்கு தூண்டுதல் என்று காவல்துறை கருதிஅவர்மீது இன்ஃபர்மேஷன் ஆக்ட் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்அனேகமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையோடுவேறு சில தண்டனைகளும் கிடைக்கலாம்.

அடிக்கடி இந்தியாவில் சைபர் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்துவது தொடர்கதை ஆகிவிட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தோடு ஒப்பிடுகையில் சைபர் சட்டத்தின் தண்டனை ஒப்பீட்டளவில் அதிகம். ஐ.டி. சட்டம் 66-ஏவின் படி causing annoyance or inconvenience electronically என்று குறிப்பிடப்படும் குற்றத்துக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை (இதனால் உயிரிழப்பு ஏற்பட்டால் மேலும் சில ஆண்டுகள்) வழங்கப்படுகிறது. இதில் annoyance என்று சொல்லப்படுவதற்கு என்ன வரையறை என்கிற தெளிவு இல்லை. கலைஞரை யாராவது திட்டினால் நான் irritate ஆவேன். அவ்வாறு திட்டியவரின் மீது 66-ஏவின் படி வழக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றால் இது என்ன நீதி?

‘துப்பாக்கி திரைப்படம் மொக்கை’ என்று எனக்கு தோழர் கார்க்கி ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார். அதை நம்பி நாலு பேருக்கு நானும் ஃபார்வேர்ட் செய்கிறேன். இதனால் இளையதளபதி விஜய் மன உளைச்சல் அடைந்தால், அவர் கார்க்கி மீதும் என் மீதும் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை காவல்துறையும், நீதித்துறையும் ஏற்றுக்கொள்ளவைக்கும் செல்வாக்கும், அதிகாரமும் விஜய்க்கு உண்டல்லவா? மேலும் இப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டவரை கைது செய்ய வாரண்ட் அவசியமில்லையாம்.

66- என்னவோ இண்டர்நெட்டில் ஈடுபடும் காமன்மேன்களை மட்டும்தான் அடக்கும் என்று நினைத்தோ என்னவோ ஊடகங்கள் போதுமான எதிர்ப்பைத் தெரிவிப்பதில்லை. ஒருவகையில் குஷியாக கூட இருப்பதாகத் தோன்றுகிறது. பொதுவாக பத்திரிகைகளில் எழுதப்படுவதற்கு ‘அவதூறு வழக்கு’கள் தொடுக்கப்படுவது வழக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ‘அவதூறு வழக்கு’ இன்று நாடு முழுக்க பிரபலமாகியிருக்கிறது. அவதூறு வழக்கு என்பது கிட்டத்தட்ட விசாரணைக் கமிஷன் மாதிரி. பெரியதாக செய்கூலி, சேதாரம் ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆனால் இணையத்தில் எழுதுபவர்கள் மீது மட்டும்தான் 66-ஏ பாயுமென்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.

இன்று அச்சில் வரும் எல்லா ஊடகங்களுமே இணைய வடிவையும் கொண்டிருக்கிறது. அவ்வகையில் எந்த ஒரு பத்திரிகையின் மீதும், தொலைக்காட்சி சேனல் மீதும் 66-ஏ-வை பாயவைக்க முடியும். any information which he knows to be false, but for the purpose of causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred or ill will, persistently by making use of such computer resource or a communication device என்றுதான் சட்டம் கூறுகிறது. இந்த communication device என்கிற பதம் வெறுமனே இணையத்துக்கு மட்டுமல்ல. டிவி, மொபைல்போன் ஆகியவற்றுக்கும் கூட பொருந்தும் இல்லையா? எனவே 66-ஏ என்பது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமின்றி, ஊடகங்களுக்கும் கூட அச்சுறுத்தல்தான் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு கட்டுரை எழுதியதற்காக அந்த பத்திரிகையின் நிருபரில் தொடங்கி ஆசிரியர், பதிப்பாளர் அத்தனை பேரும் மூன்று வருட சிறைத்தண்டனை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்கிற வகையில் 66-ஏ-வை எதிர்க்க அனைவருமே (ஊடகங்களும் சேர்த்துதான்) கடமைப்பட்டவர்கள் ஆகிறோம்.

தவறாமல் வாசிக்கவும் : 66-ஏ குறித்த அய்யா தருமியின் பதிவு

5 நவம்பர், 2012

யார் ஜெயிப்பது நல்லது?


அமெரிக்கா தனது அதிபரை நவம்பர் 6ம் தேதி தேர்தெடுக்கிறது.யார் அதிபர் ஆனால் இந்தியாவுக்கு நல்லது?

நவம்பர் 6ம் தேதி அமெரிக்கா தனது அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கப் போகிறது. தேர்ந்தெடுக்கப்படப் போவது அமெரிக்க அதிபர்தான் என்றாலும், அவர் அடுத்த நான்காண்டுகளுக்கு உலகின் பல முக்கியமான விஷயங்களைத் தீர்மானிப்பவராக இயங்குவார் என்பதுதான் வரலாறு? ஒபாமா, ரோம்னி இந் இருவரில் யார் வந்தால் இந்தியாவிற்கு நல்லது?  

அவுட் சோர்சிங் :

பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் அலுவல்கங்களில் நடக்க வேண்டிய பணிகளையும், விற்பனை தொடர்பான ஃபாலோ அப் பணிகளையும் செலவைக் குறைப்பதற்காக அமெரிக்காவுக்கு வெளியே உள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்றன. இதில் கணிசமான பணிகள் இந்தியாவில் உள்ள பிபிஓ கம்பெனிகளுக்கு கிடைக்கின்றன. நம் இளைஞர்கள் பலருடைய வேலை வாய்ப்புக்கள் இதைச் சார்ந்திருக்கின்றன. அதே போல் பல மென்பொருள் வேலைகளும். இந்த விஷ்யத்தில் இந்த ஒருவரின் நிலை என்ன?

அவுட்சோர்சிங் பணிகளால் அமெரிகாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய  வேலைளை கணிசமாக இந்தியா அள்ளிக்கொண்டு போகிறது என்கிற ஒபாமாவின் அலட்டலுக்கு அமெரிக்காவிலேயே பெரிய ஆதரவில்லை. அதனால் ஒபாமாவே இந்த விஷயத்தை ஒரு அளவுக்கு மேல் பிரமாதப்படுத்தமாட்டார்.

ரோம்னியைப் பொறுத்தவரை  தொழில் வர்த்தகப் பின்புலத்தில் வந்தவர் என்பதால், இந்தியாவுடனான இப்போதைய அமெரிக்க வணிக உறவை ஆதரிப்பவராகவே அவர் இருக்கிறார். அவரது சொந்த நிறுவனமே கூட பல இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. குறிப்பாக அவரது நிறுவனம் நிறைய ‘அவுட்சோர்ஸ்’ பணிகளை இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறது. இந்திய நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் பணிகள் குறித்த ஒபாமாவின் கருத்துக்கு நேரெதிரான கருத்து கொண்டவராகவே ரோம்னியை சித்தரிக்கிறார்கள்.

வணிகம் :

அவுட்சோர்சிங் குறித்த ஒபாமாவின் கருத்துக்கள் இந்தியர்களுக்கு எதிரானது என்கிற பார்வை  காரணமாக, இந்திய ஊடகங்கள்  ஒபாமாவால் இந்தியாவுக்கு பிரயோசனமில்லை என்பது போல் ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றன. ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமான வணிக உறவு வழக்கத்தை விடவும் அதிகமாகவே பலப்பட்டிருக்கிறது என்று டெமாக்ரடிக் கட்சியினர் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். ஒபாமாவின் அதிகாரப்பூர்வமான முதல் இந்திய விஜயத்தின் போது, அவர் நூற்றுக்கணக்கான தொழிலதிபர்களை தன்னோடு அழைத்துவந்து இந்தியாவுக்கு ஏராளமான தொழிற்வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்ததைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்

ரோம்னி அமெரிக்காவின் டாலர் மதிப்பு சர்வதேச அளவில் வீழ்ந்துக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, இதற்கெல்லாம் சீனாவின் வியாபாரக் கொள்கைகள் காரணமாக இருப்பதாக ஆதங்கப்படுகிறார்.
யார் அடுத்த அதிபரானாலும் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். சீனாவா, இந்தியாவா என்று வரும்போது பல அமெரிக்க அரசியல்வாதிகள் இந்தியாவையே விரும்புகிறார்கள். ஆனால் அவர்களே வெறுத்தாலும் அவர்கள் பொருளாதாரத்தைச் சீனா தன் கைக்குள் வைத்திருக்கிறது எனபது இன்னொரு யதார்த்தம்.

அயலுறவு :

ஒபாமா, ரோம்னி இருவருமே தேர்தல் பிரச்சாரங்களில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம். இந்தியா அமெரிக்காவின் நம்பகமான நாடுகளில் ஒன்று என ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அயல்நாட்டு கொள்கை பற்றிய விவாதத்தில் இருவரும் மிகக்கவனமாக இந்தியாவைப் பற்றி தவறாக ஏதும் பேசிவிடக் கூடாது என்று தவிர்த்திருக்கிறார்கள்.

ஆனால் ஆப்கானிஸ்தான், ஈர்ராக் ஆகிய நாடுகளிலிருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ளும் போது அமெரிக்கா என்ன நிலை மேற்கொள்ளும் என்பதைப் பொறுத்து பல விஷயங்கள் தீர்மானமாகும்.  ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் போது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற டம்மி அரசாங்கத்தை அமெரிக்கா அங்கு விட்டுச் செல்லுமானால் அதை பாகிஸ்தான் இந்தியாவிற்க்கு எதிராகப் பயன்படுத்தும் என இந்தியா நினைக்கிறது. அதே போல் இந்தியாவின் கைப்பாவைகளை ஆட்சியில் அமர்த்திவிட்டுப் போகுமானால் அது பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலைப் பாதிக்கும் என பாகிஸ்தான் நினைக்கிறது. இதை எப்படி அமெரிக்கா பாலன்ஸ் செய்யப் போகிறது என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும்.

இன்னொரு விஷ்யம் ஈரான். இந்தியா, ஈரானிலிருந்து கச்சா கச்சா எண்ணெய் பெறுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறது,. ஈரானிய எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்த ஒரு திருப்தியான உடன்பாட்டுக்கு ஒபாமாவின் இந்திய வருகையின்போது இருநாடுகளும் வந்தன. ஆனால் சில காலமாக ஒபாமாவின் கறார்த்தனத்தால் நாம் விரும்பிய அளவு எதிர்ப்பார்க்கும் அளவு எண்ணெயை ஈரானிலிருந்து இறக்குமதி செய்யமுடியவில்லை. இந்த பற்றாக்குறையால் இந்தியாவில் எரிபொருள் விலையேற்றம் தவிர்க்க இயலாத விஷயமாகி விட்டது.  ஈரானிய எண்ணெயை மற்ற நாடுகளுக்கு விற்கும் விவகாரத்தில் ஒபாமாவை விட தான் கறாராக இருக்கப் போவதாக ரோம்னி அறிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட வகையில் நமக்கு கெட்ட சகுனம். ரோம்னி இஸ்ரேலின் ஆதரவாளர். இஸ்ரேலின் நலன்களுக்காக இரான் தாக்கப்பட வேண்டும் என்ற நிலையை அவர் எடுத்தால் அது நம் நிலையை இன்னும் சிக்கலாக்கும்.

விசா விவகாரங்கள் :

கடந்த நான்காண்டுகளில் ஒபாமா அரசு H1B விசா வழங்கும் விஷ்யததில் முன்பிருந்த அரசுகளைவிடத் தாராளமாக நடந்து கொள்வதற்கில்லை. ஆனால் இந்திய அறிவியலாளர்களுக்கு சிகப்புக் கம்பளம் விரிக்க அவரது கட்சி எப்போதும் தயாராக இருக்கிறது. கல்விக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களையும், அங்கேயே விசாவில் பணியாற்றும் பட்டதாரிகளுக்காகவும் பயன்தரும் வண்ணமாக குடிபெயர்வு விதிகளை தளர்த்துவேன் என்று ஒபாமா வாக்குறுதி தருகிறார். ரோம்னியைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் கொஞ்சம் பழைய பஞ்சாங்கம். ரோம்னி தனது பிரசாரத்தின் போது வெளியிட்ட ஒரு கருத்து இந்தியர்க்ளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சட்ட ரீதியாக குடியேறியவர்களின் துணைவர், குழந்தைகளுக்கு வழங்கப்ப்டும் விசா எண்ணிக்கைகள் மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்த இருப்பதாக அவர் சொல்லியிருக்கிறார். எச்1பி விசா குறித்த புதிய கொள்கைகளை அவர் முன்வைத்தால் மட்டுமே, அதைக் குறித்துத் தெளிவாக முடிவுக்கு வரமுடியும்

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் :

அமெரிக்கா வாழ்இந்தியர்கள் எவை எவற்றை முதன்மையானப் பிரச்னைகளாக கருதுகிறார்கள் என்பதை அடையாளம் காண்பதில் இரு வேட்பாளர்களுமே கொஞ்சம் குழப்பத்தில்தான் இருக்கிறார்கள். வணிகம், குடி பெயர்தல், இந்திய தேசிய பாதுகாப்பு, அணுக்கொள்கை என்று ஏராளமான பிரச்னைகளில் அமெரிக்காவின் அணுக்கத்தை இந்தியர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். எனவேதான் சமீபமாக அமெரிக்க ஆட்சி நிர்வாகத்தில் தாமாக முன்வந்து இந்தியர்கள் இணையும் போக்கு அதிகரிக்கிறது. அனீஷ் சோப்ரா, கால் பென் போன்றோர் ஒபாமாவின் நிர்வாகத்தில் பணியாற்றுகிறார்கள். பாபி ஜிண்டால், நிக்கி ஹாலி போன்றோர் ரிபப்ளிகன் கட்சியின் ஆளுநர்கள். இவர்களைப் போலவே நிறைய அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஆளுகையில் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.

கடைசிக்கட்ட நிலவரத்தின் படி ஒபாமா மீண்டும் வந்தால் இந்தியாவுக்கு நல்லது என்று பெரும்பாலான அமெரிக்காவாழ் இந்தியர்கள் கருதுகிறார்கள். இவர்களில் நாலில் மூவர் ஒபாமாவுக்கு ஓட்டளிக்கப் போவதாகவே கணக்கெடுப்புகள் வாயிலாகத் தெரிந்திருக்கிறது.

இறுதியாக  
யார் வெல்வார்கள் எனப்து முக்கியமில்லை. கற்பனைகள் ஏதுமின்றி எதிர்காலத்தை எதிர்கொள்ளப் பழகுவோம்.

(நன்றி : புதிய தலைமுறை)