4 ஜனவரி, 2013

‘ராஜா’ங்கம்

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை ‘நீதானே என் பொன்வசந்தம்’. காதல், காதலர்கள், ஈகோ என்று ஏற்கனவே பார்த்து சலித்த கதையை ஃப்ரெஷ்ஷாக கவுதம் இயக்கியிருக்கிறார். ஆனாலும் இசைதான் படத்தை திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டுகிறது.
முப்பத்தியெட்டு வருடங்களாக ஒரு இசையமைப்பாளர் எப்படி அதே consistencyயை தொடர்ச்சியாக maintain செய்ய முடியும் என்று எப்படி யோசித்தாலும் புரிபடவில்லை. அதனால்தான் இளையராஜா இசைஞானி. இதுவரை வந்த இளையராஜா படங்களிலேயே சிறைச்சாலையும், ரமணாவும்தான் பின்னணியிசையில் தலைசிறந்தது, அந்த சாதனையை உடைக்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீ.எ.பொ.வ மிகச்சுலபமாக உடைத்தெறிந்திருக்கிறது. எங்கே டிரம்ஸ் அடிக்க வேண்டும், எங்கே கிடாரை மீட்டவேண்டும், எங்கே வயலினை முழங்கவேண்டும் என்பது மட்டுமில்லாமல் எங்கே மவுனிக்க வேண்டும் என்கிற வித்தையை கற்றுத் தேர்ந்திருப்பதில்தான் ராஜாவின் இமாலய வெற்றி அடங்கியிருக்கிறது. இயக்குனர் எடுத்திருக்கும் காட்சிகளின் வீரியத்தை அல்லது பலகீனத்தை முழுமையாக உணர்ந்து, எங்கே மேம்படுத்த வேண்டும், எங்கே சரிக்கட்ட வேண்டும் என இளையராஜா அளவுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் உலகில் வேறு யாரும் இருந்துவிட முடியாது.
பாடல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கிட்டத்தட்ட முக்கா மணி நேரத்துக்கு ராஜா பாட்டுதான். பல பாடல்களை கவுதம் திரும்பத் திரும்ப ரிபீட் அடித்திருப்பதால் எப்படியும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீ.எ.பொ.வ பாடல்களாலேயே நிறைந்திருக்கிறது. ஒரு சர்வதேசத்தரம் வாய்ந்த வீடியோ இசை ஆல்பத்தை காணும் அனுபவம் இதனாலேயே படம் பார்க்கும்போது கிடைக்கிறது. இந்த அற்புதமான, அழகான அனுபவத்தை உள்வாங்கிக் கொள்ள முடியாதவர்களை பார்த்து அனுதாபம்தான் கொள்ள முடிகிறது.
நீ.எ.பொ.வ.வின் எட்டு பாடல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எட்டு அதிசயங்கள். ‘காற்றை கொஞ்சம் நிற்கச் சொன்னேன்’ என்று கார்த்திக் பாடும்போது, லேசாக காற்றடித்து உங்கள் முன்னந்தலை முடி அசைந்து நிற்கும் உணர்வு உங்களுக்கு ஏற்படவில்லையெனில், உங்கள் காதில் ஏதோ கோளாறு என்று பொருள். ‘சாய்ந்து சாய்ந்து உனை பார்க்கும்போது’ என யுவன்ஷங்கர் ராஜா உருகும்போது தேன்வந்து பாயுது காதினிலே. அப்போது காதைத் தொட்டுப் பாருங்கள். நிஜமாகவே தேனின் பிசுபிசுப்பு. ‘என்னோடு வா வா’வுக்கு உங்கள் கால்கள் தாளம் போடவில்லையெனில், சைக்காலஜிக்கலாகவே எதனாலோ நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளலாம். ‘பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா’, ’சற்று முன்பு பார்த்த’, ’முதல் முறை’ என்று, படத்தின் எல்லாப் பாடல்களிலுமே ராஜா நிகழ்த்தியிருக்கும் சாதனை அசாத்தியமானது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராஜாவின் இசையை மட்டுமே பிரதானமாக நம்பி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ராஜாவின் நண்பர்கள் அவருடைய இசையில் படமெடுத்திருக்கிறார்கள். ராஜாவே சொந்தமாக படம் எடுத்திருக்கிறார். ஆனால் இதுவரை எந்த இயக்குனரும் தன்னுடைய ஈகோவை சுத்தமாக விட்டுக் கொடுத்து, அவருக்கு தந்திராத மிகப்பெரிய இடத்தை, கவுரவத்தை நீ.எ.பொ.வ.வில் கவுதம் தந்திருக்கிறார். நாடி, நரம்பெல்லாம் ராஜாவின் இசைவெறி ஏறிப்போன ஒரு ரசிகனால் மட்டுமே இப்படிப்பட்ட படத்தை கொடுக்க முடியும். படத்தின் டைட்டிலே ராஜாவுக்கு செய்யப்பட்டிருக்கும் tributeதான் எனும்போது, மேலும் விளக்கி விளங்கிக்கொள்ள ஏதுமில்லை.
once again thank you gautham!

31 டிசம்பர், 2012

bye bye 2012


2012, சொல்லிக் கொள்ளும்படியான வருடமாக இல்லையென்றாலும், நிச்சயமாக மோசமான வருடம் இல்லை.
வருடத்தின் தொடக்கத்தில் திடீரென அர்த்தமில்லாத ஏதோ ஒரு மிதப்பு வந்து ஒட்டிக்கொண்டது. இதுதந்த எதிர்மறையான கூடுதல் உற்சாகத்தில் இலக்கு நோக்கிய பாதையை கொஞ்சம் தவறியிருக்கிறேன். எல்லாமே எனக்குத் தெரியும், என்னைவிட்டா வேறு யார் இருக்கா என்றெல்லாம் கொஞ்சம் முட்டாள்த்தனமாக இருந்திருக்கிறேன். நல்லது, கெட்டதை எடைபோட முடியாமல் குழம்பியிருக்கிறேன். போதாக்குறைக்கு எப்பவுமே இல்லாத ஆசையாக சினிமா ஆசை வேறு. டிஸ்கஷன், லொட்டு, லொசுக்கென்று நிறைய நேரம் தேவையில்லாமல் வீணானது.
நல்ல நண்பர்கள் வாய்த்தவர்கள் பாக்கியவான்கள். தவறாக எடுத்துக் கொள்வேனோ என்று நினைக்காமல் சரியான நேரத்தில் இதையெல்லாம் சுட்டிக் காட்டினார்கள். ஆகஸ்ட்டு மாத வாக்கில் ஏதோ ஒரு போதிமரத்தடியில் மல்லாந்து படுத்திருந்தபோது திடீரென்று ஞானம் வந்துவிட்டது. காலத்தை எப்படியெல்லாம் வீணடித்திருக்கிறேன் என்று அடுத்த இருமாதங்களுக்கு பொறுமையாக அசை போட்டேன். எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்பது தெளிவாய் புரிந்தது.
வருடத்தின் கடைசி இரு மாதங்களில் கிடைத்திருக்கும் ‘எனர்ஜி லெவல்’ முன்னெப்போதும் இருந்ததில்லை. இதே லெவல் அடுத்த வருடமும் நீடித்தால் நிச்சயமாக ஏதோ ஒரு கோட்டைக்கு ராஜாதான். வருடத் தொடக்கத்தில் ஏற்பட்ட பேரழிவுகளை கடைசியில் வேகவேகமாக சீரமைக்க முடிந்தது. குறிப்பிடும்படியாகவும் பணியாற்ற முடிந்தது. என்ன ஒரே வருத்தம். பதினாறு அடி பாயவேண்டிய இடத்தில் நாலு அடிதான் பாய்ந்திருக்கிறேன். இந்த தூரத்தையும் சேர்த்து அடுத்தாண்டு கூடுதலாக பாய்ந்தாக வேண்டும். 2013 முழுக்க நிற்க நேரமிருக்காது என்று தோன்றுகிறது.
தீவிரமாக யோசித்துப் பார்த்தால் வருடம் முழுக்க மகிழ்ச்சியாகவே இருந்திருக்கிறேன். இந்த மனநிலையை தக்கவைத்துக் கொள்ள முடிந்ததற்கு என்னை சுற்றியிருக்கும் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

29 டிசம்பர், 2012

என்றும் முதுமை அடையாத கன்னி

படம் : முருகு

தாவணிக் கனவுகள்’ படத்தில் சிவாஜி ஒரு டயலாக் சொல்வார். “சிந்துபாத் கதையா? நான் பட்டாளத்துலே சேர்ந்தப்போ ஆரம்பமாச்சி. இப்போ ரிட்டையரும் ஆயிட்டேன். கதை மட்டும் முடிஞ்சபாடில்லே”.

தாவணிக் கனவுகள் திரைப்படம் வந்தே இருபத்தெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இடையில் நடிகர் திலகம் சிவாஜி கூட காலமாகி விட்டார். ஆனால் சிந்துபாத்தின் கன்னித்தீவுக்கு மட்டும் முடிவேயில்லை.

கன்னித்தீவு கதையை எழுதுபவரின் பெயரை சஸ்பென்ஸாக, சர்ப்ரைஸாக வைத்திருக்க ‘தினத்தந்தி’ விரும்புகிறது. கோகோ கோலா ஃபார்முலா மாதிரி இது டாப் சீக்ரெட். ஐம்பத்தி மூன்று ஆண்டுகளாக ஒரே கதாசிரியர்தான் எழுதி வருகிறார் என்கிறார்கள். ஆனாலும் இதை எழுதுவதற்காக அவர் ஒருமுறை கூட சலிப்பு கொண்டதே இல்லையாம். இத்தனைக்கும் அவர் பத்திரிகையுலக ஜாம்பவான்களில் ஒருவர். ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரங்கள் போதாமல் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருந்தவர். கன்னித்தீவுக்கு படம் வரையும் ஓவியர்கள் மட்டும் மாறி வருவதை தொடர்ந்து வாசிக்கும் நாமே அறியமுடியும்.

முடிவே இல்லாத சமாச்சாரங்களுக்கு கன்னித்தீவை ஒப்பிட்டு ஜோக் அடிப்பது தமிழ் சமூகத்தின் வழக்கம்.

நிருபர் : உங்க வயது பதினாறுன்னு நீங்க சொல்றது அப்பட்டமான பொய்.

நடிகை : எப்படி சொல்றீங்க?

நிருபர் : தினத்தந்தியில் கன்னித்தீவு கதையை ஆரம்பத்திலே இருந்து படிச்சிட்டு வர்றதா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கீங்களே?

1982ஆம் ஆண்டு ‘சாவி’ பத்திரிகையில் வெளிவந்த ஜோக் இது. ஒருவகையில் சொல்லப் போனால் இப்போதெல்லாம் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் இப்போது ஒளிபரப்பப்படும் மெகாசீரியல்களுக்கு முன்னோடியே நம் ‘கன்னித்தீவு’தான்.

நம்முடைய இந்த கிண்டலையெல்லாம் தினத்தந்தி சீரியஸாக பொருட்படுத்தாமல், ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்வதால்தான் கன்னித்தீவு பத்தொன்பதாயிரமாவது நாளை நெருங்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. “உலகளவில் எந்த ஒரு ‘காமிக்ஸ்’ தொடரும் இத்தனை நாட்களாய் தொடர்ந்ததில்லை. அந்த வகையில் இது ஒரு உலகசாதனை. தினத்தந்தி நிர்வாகம் இந்த சாதனையை கின்னஸுக்கு விண்ணப்பித்தால், நிச்சயம் அப்புத்தகத்திலும் ‘கன்னித்தீவு’ இடம்பெறும்” என்கிறார் காமிக்ஸ் ஆர்வலரான விஸ்வா.

கன்னித்தீவின் கதைதான் என்ன?

கதையின் மூலம் மட்டுமே அரபுக்கதைகளிலிருந்து எடுக்கப்பட்டது. மற்றபடி கதையின் போக்கு முழுக்க முழுக்க ஆசிரியரின் கற்பனைதான். நாயகன் சிந்துபாத் ஓர் அரசனின் தளபதி. கன்னித்தீவு என்பது அழகிகள் நிறைந்த தீவு. உலகின் சிறந்த அழகிகளையெல்லாம் சிறைபிடித்து இத்தீவில் அடைத்து, உல்லாசமாக இருப்பது வில்லனான மந்திரவாதி மூசாவின் பொழுதுபோக்கு. சமகால உலக அழகி யாரென்று அறிய அவன் ஒரு மந்திரக்கண்ணாடி பயன்படுத்துவான். அந்த கண்ணாடி ஒருமுறை கதையின் நாயகி லைலாவை காட்டுகிறது. லைலாவை வழக்கமான முறையில் சிறைபிடிக்க முடியாத மூசா, கடுப்பில் மந்திரசக்தி கொண்டு அவளை அளவில் சிறியவளாக மாற்றி விடுகிறான். மீண்டும் லைலா பழைய உருவத்தை அடையவேண்டுமானால் கன்னித்தீவுக்கு போய் மந்திரவாதி மூசாவை பிடிக்க வேண்டும். இந்த பொறுப்பு அரசனால் தளபதி சிந்துபாத்திடம் ஒப்படைக்கப் படுகிறது. முடிவில்லா பயணத்தை நோக்கிச் செல்கிறான் சிந்துபாத். இந்தப் பயணத்தில் அவனுக்கு ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள்தான் கதை.மொத்தம் ஏழு பயணம். ஒவ்வொரு பயணத்திலும் துண்டு துண்டாக கிளைக்கதைகள் நிறைய தோன்றும். இந்த ஒவ்வொரு கதைக்கும் ஏதோ ஒரு தொடர்ச்சி இருக்கும். இதுதான் கன்னித்தீவின் வடிவம்.

யாரேனும் தொடர்ச்சியாக கன்னித்தீவைப் படிக்கிறார்களா?

“குறிப்பிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து ஒரு சுற்றாக திரும்பத் திரும்ப நடப்பதாக கதை கொண்டுச் செல்லப் படுகிறது. தொடர்ந்து வாசிக்கும்போது ஏற்கனவே வாசித்த நிகழ்வுகள் மீண்டும் வருவதைப் போல இருக்கும். இதனால்தான் பலருக்கும் தொடர்ச்சியாக படிக்க ஆர்வம் இருப்பதில்லை. அதனால் என்ன? என் தாத்தாவும் கன்னித்தீவு படித்திருப்பார். என் அப்பாவும் படித்தார். இப்போது நானும் படிக்கிறேன். கன்னித்தீவு தலைமுறைகளை கடந்தது. அதுதான் இத்தொடரின் மகத்தான சாதனை” என்கிறார் கன்னித்தீவு வாசகரான அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன். கன்னித்தீவு உருவானதில் தொடங்கி, அதன் பின்னணித் தகவல்களையும், எழுத்தாளரையும், ஓவியர்களையும் பற்றிய விவரங்களோடு தனியொரு புத்தகமாக தினத்தந்தி வெளியிட வேண்டும் என்பது இவரது கோரிக்கை.

தினத்தந்திக்கு சிந்துபாத் எவ்வளவு முக்கியம் என்பதற்கு ஒரு நிகழ்வு சான்று. அப்பத்திரிகையின் நிறுவனர் ஆதித்தனார் காலமானபோது அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு கருத்துப்படம் 1981ல் வெளியானது. அதில் ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை போட்டு, தினத்தந்தியின் சாகாவரம் பெற்ற பாத்திரங்களான சாணக்கியன், ஆண்டியார் ஆகியோரோடு சிந்துபாத்தும் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக வரையப்பட்டிருந்தது.
கன்னித்தீவுக்கு இத்தனை கெளரவம் கிடைப்பதற்கு  முக்கியமான காரணம்  வாசகர்களிடம் அது ஏற்படுத்தியுள்ள மகத்தான தாக்கம் இலக்கியவாதிகளும் கூட இதற்கு தப்பவில்லை. வைரமுத்து எழுதிய ஒரு கவிதையில் ‘கன்னித்தீவு முடியும்வரை ஆயுள் இருக்க வேண்டுமென்று ஆசை பலர்க்கு இருக்கிறது’ என்கிற வரிகள் இடம்பெறுகிறது.

முடிவேயில்லா கதை பற்றிய கட்டுரையை எப்படி முடிப்பது? ஓர் ஒருவரி கதையோடு இக்கட்டுரையை முடிக்கிறோம்.

‘உலகத்தின் கடைசி தினமன்று சிந்துபாத், கன்னித்தீவை வாசித்துக் கொண்டிருந்தான்’.

(நன்றி : புதிய தலைமுறை)

27 டிசம்பர், 2012

நீதானே என் பொன்வசந்தம்


யானை விழுந்தால் எழ முடியாது என்பார்கள். ஒருவேளை எழுந்துவிட்டால் முன்பைவிட கம்பீரமாக நடக்கும். நடுநிசிநாய்களில் விழுந்த கவுதம் நீ.எ.பொ.வில், ராஜாவின் தோளில் கைபோட்டு கம்பீரமாக எழுந்து நின்றிருக்கிறார். கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளில் வந்த அத்தனை காதல் படங்களின் உணர்வுகளையும் ஒரே படத்தில் மொத்தமாக கொட்டித் தந்திருக்கிறார். உருகி, மருகி காதலித்த ஒருவராலேயே இம்மாதிரி படமெடுக்க முடியும். கவுதம் நல்ல காதலன். கொஞ்சம் விட்டாலும் ‘குஷி’யாகி விடக்கூடிய ஸ்க்ரிப்ட்டை லாகவமாகக் கையாண்டிருக்கும் கவுதமின் சாமர்த்தியத்தை எப்படி மெச்சுவதென்றே தெரியவில்லை. லைக் யூ கவுதம்.

‘நீதானே என் பொன் வசந்தம்’ உங்களுக்கு பிடிக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட சில தகுதிகளில் ஏதேனும் ஒன்றேனும் இருக்க வேண்டும்.

• நீங்கள் ஆணாக இருக்க வேண்டும். அல்லது பெண்ணாக இருக்க வேண்டும்.

• உங்களுக்கு பார்ப்பதிலோ, கேட்பதிலோ பிரச்சினை இருக்கக்கூடாது.

• குறைந்தபட்சம் ஒரே ஒரு முறையாவது ஒருதலையாகவாவது காதலித்திருக்க வேண்டும்.

• காதலி/காதலன் திருமண ரிசப்ஷனுக்கு தெரியாத்தனமாகப் போய், மனம் நொந்து விடிய விடிய சரக்கடித்து மட்டையாகி இருக்க வேண்டும்.

இதெல்லாம் இல்லாமலேயே கூட பிடிக்கலாம். காதலைப் பிடிக்குமென்றால்...

வருணும், நித்யாவும் மட்டுமே வாழும் ஓர் உலகம். அந்த உலகத்துக்குள் அவர்களுக்கு தெரியாமல் உங்களால் பார்வையாளராக பிரவேசிக்க முடிந்துவிட்டால் போதும். நீ.எ.பொ. ராஜபோதை கொடுக்கும். பின்னணிக்கு ராஜா. போதாதா?

ஐந்தரை நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டாக நீளும் இண்டர்வெல் ப்ளாக் தமிழ் சினிமாவில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மகத்தான சாதனைகளில் ஒன்று. இவ்வாண்டின் சிறந்த நடிகை சமந்தா என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஒரே ஷாட் என்றாலும் குளோசப், மிட், லாங் என்று கேமிராமேன் நிகழ்த்தியிருக்கும் மேஜிக்கை உணரமுடியாதவர்கள் சினிமா பார்ப்பதே வீண். 

இசை ஒரு படத்தை எந்தளவுக்கு உச்சத்துக்கு கொண்டுச் செல்லும் என்பதற்கு இப்படம் ஓர் உதாரணம். காதலும், இசையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். இதை உணர்ந்ததால்தான் கவுதம் ராஜாவை தேர்ந்தெடுத்திருக்கிறார். இருபது வருடங்கள் கழித்துக் கேட்டாலும் சிலிர்க்கவைக்ககூடிய இசையை இளையராஜா அள்ளித் தெளித்திருக்கிறார். ராஜா இன்றி இப்படம் சாத்தியமாகியிருக்க வாய்ப்பேயில்லை.

சகலகலா வல்லவன், மன்னன் என்று ஆணாதிக்க மனோபாவமாய் ரசித்து வளர்ந்தவர்களுக்கு நாயகன், நாயகி இருவரையும் ஸ்க்ரிப்ட்டில் பேலன்ஸ் செய்து, கழைக்கூத்தாடியாய் கயிற்றில் நடந்திருக்கும் ‘நீ.எ.பொ.’ மாதிரி சப்ஜெக்டுகளை உடனடியாக ஏற்றுக் கொள்வதில் தயக்கமிருப்பது இயல்புதான். பெண் பார்வையில் காதலை சொன்ன ‘பூ’வுக்கு நேர்ந்த கதிதான் நமக்கு ஏற்கனவே தெரியுமே?

ஆனாலும், ஐஸ்ப்ரேக்கர் என்கிறவகையில் இது முக்கியமான படம். அனுபவ நிகழ்வுகளை அப்பட்டமாக, கொஞ்சம் கூடுதல் புத்திசாலித்தனத்தோடு திரைக்குக் கொண்டுவந்திருக்கும் பரிசோதனை முயற்சி. பின்னால் வருபவர்கள் இதை பின்பற்றி நிச்சயம் சிகரமேறுவார்கள்.

வெர்டிக்ட் : சான்ஸே இல்லை மச்சான். சச் எ வொண்டர்ஃபுல் மூவி...

26 டிசம்பர், 2012

மரபுநோய் தவிர்

பாவ புண்ணியங்கள் மட்டுமல்ல. நோய்களும் நம்மை தலைமுறை தலைமுறையாக துரத்துகின்றன. வரும் முன் காப்பது எப்படி?

அப்பாவும், தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும், எள்ளுத் தாத்தாவும் நமக்கு சேர்த்துவைத்து விட்டுப் போவது என்ன?

பரம்பரைச் சொத்து.

அது மட்டுமா? அவர்களுடைய தனிப்பட்ட குணாதிசயம், ரசனை, பழக்க வழக்கங்கள் எல்லாமே உங்களை ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்துக்குள்ளாக்குகிறது. நமது மரபணுக்களில் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் சமாச்சாரம் இது என்று அறிவியல் சொல்கிறது. உங்கள் தாத்தா நாதஸ்வர வித்வானாக இருந்திருக்கும் பட்சத்தில், நீங்கள் அட்டகாசமாக சாக்ஸபோன் வாசிப்பதாக இருந்தால், அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இவை மட்டுமின்றி அவர்களுடைய நோய்களையும் நம் மரபணுக்களில் விதையாக ஊன்றிச் செல்கிறார்கள் என்பதுதான் வேதனை. அவர்கள் விட்டுச் செல்லும் சொத்து மட்டும் வேண்டும். நோய்கள் வேண்டாம் என்றால் எப்படி?

கவலைப்படாதீர்கள். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கவும் அறிவியல் ஒரு வழியை கண்டுபிடித்துத் தந்திருக்கிறது.

செர்ஜி மிகாலோவிச் ப்ரின் என்று பெயர் சொன்னால் உடனே தெரியாது. ஆனால் ‘கூகிள்’ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் என்று சொன்னால் தெரியுமில்லையா? இந்த செர்ஜியின் மனைவி ஒரு உயிரியல் தொழில்நுட்பப் பட்டதாரி. கம்ப்யூட்டர் விற்பன்னரும், உயிரியல் தொழில்நுட்பம் தெரிந்தவரும் இணைந்தால் என்னாகும்? ஆராய்ச்சிதான். மனித மரபணுக்கள் தொடர்பாக நிறைய துறைசார்ந்த பேராசிரியர்களிடம் நாட்கணக்கில் பேசி, பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது நமது மூதாதையர்களிடமிருந்து நமது மரபணுக்களில் கடத்தப்படும் செய்திகள், கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும் டேட்டாபேஸ் மாதிரி. அவற்றை வாசித்துப் புரிந்துக் கொண்டால் மென்பொருளை திருத்துவது மாதிரி நமக்குத் தேவையான சில திருத்தங்களை செய்துக் கொள்ளலாம்.

இதெல்லாம் பொழப்பத்த வேலை. எதிர்காலத்தை முன்கூட்டியே தெரிந்துக் கொள்ளாத வாழ்க்கையே ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்றெல்லாம் நிறைய பேர் செர்ஜியை விமர்சித்தார்கள்.

செர்ஜி மெனக்கெட்டு இவ்வளவு ஆராய்ச்சிகளுக்குள் தன்னை உட்படுத்திக்கொள்ள ஒரு தனிப்பட்ட காரணம் இருந்தது. அவரது தாயாரை பார்கின்சன் நோய் தாக்கியிருந்தது. இது பரம்பரையாக தாக்கக்கூடிய நோய் என்று அவர் நினைத்தார். இதிலிருந்து தன்னை எப்படி எதிர்காலத்தில் காத்துக் கொள்வது என்கிற தேடலில் மூழ்கியதின் விளைவே இதெல்லாம் (பிற்பாடு அந்த நோய் பரம்பரையாக கடத்தப்படுவதல்ல என்ற முடிவுக்கு அவர் வந்தது வேறு கதை).

இப்படியாகதான் 23andMe என்கிற மரபணு பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கிற ஒரு நிறுவனத்தை தம்பதிசமேதரராய் தொடங்கினார்கள். 23 என்கிற எண் நம்முடைய குரோமோசோம் ஜோடிகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.

2007ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மரபுரீதியாக நமக்கு என்ன நோய்கள் வரும் என்பதை அறிந்துக்கொள்ள ஓர் எளிமையான முறையை கண்டறிந்தது. அதாவது நம் எச்சிலை துப்பினால் போதும். அதில் இருக்கும் டி.என்.ஏ.க்களை ஆராய்ந்து, அவர்கள் வாசித்துக் கொள்வார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு நமக்கு வரக்கூடிய மரபார்ந்த நோய்களை அறிவார்கள். இவற்றை தவிர்ப்பதோ, கட்டுப்படுத்துவதோ எப்படி என்று மருத்துவர்கள் மூலமாக ஆலோசனை சொல்வார்கள். 2008ஆம் ஆண்டு இந்த சோதனை முறையை வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக டைம் பத்திரிகை அறிவித்தது. அமெரிக்கர்கள் பலரும் கடந்த ஐந்தாண்டுகளில் இச்சோதனையை மேற்கொண்டு, எதிர்காலத்தில் தமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நோய்களின் தாக்குதலை சமாளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்கர்கள் மட்டும்தான் மனிதர்களா.. அவர்களுக்கு மட்டும்தான் பரம்பரை நோய்கள் வருமா.. இந்த நவீன சோதனைமுறை அவர்களுக்கு மட்டும்தானா என்று அவசரமாக மனம் குமுறாதீர்கள்.

நமக்கும் இந்த வசதி வந்துவிட்டது. அதிலும் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் மரபணு நோய்களை முன்கூட்டியே கண்டறியும் சோதனையை செய்யும் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. எக்ஸ்கோட் லைஃப் சயின்சஸ் என்கிற நிறுவனம் இந்த குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள மட்டுமே பெரும் முதலீட்டில் களமிறங்கியிருக்கிறது. அதற்காக சோதனைக்கு நம்முடைய சொத்தையே எழுதி வாங்கிவிடுவார்களோ என்று அச்சப்பட வேண்டியதில்லை. சோதனைக் கட்டணம் ரொம்பவும் அதிகமல்ல, அதே நேரம் ரொம்பவும் குறைவுமல்ல.

இச்சோதனையை மேற்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

www.xcode.in என்கிற இணையத்தள முகவரிக்குச் சென்று உங்கள் மரபணுக்களை சேகரிக்க வேண்டிய kitஐ கோரலாம். இரண்டு நாட்களில் உங்கள் வீட்டுக்கு வந்துவிடும். எச்சிலை சிறிய ட்யூப்பில் துப்பிவிட்டு, அவர்கள் குறிப்பிடுவதைப் போல தயார் செய்துவிட்டு போன் செய்தால் போதும். கூரியர் மூலமாக அவர்களே வீட்டுக்கு வந்து பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள். மருத்துவமனைக்கோ, பரிசோதனைக் கூடத்துக்கோ அலைய வேண்டியதில்லை.

மொத்தமே அவ்வளவுதான். உங்களுடைய ரிப்போர்ட்டை நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்குள்ளாக உங்கள் வீட்டுக்கே அனுப்பிவிடுவார்கள்.

சர்க்கரை நோய், கொழுப்பு, இதயநோய், வாதம் தொடர்பான நோய்களுக்கான சோதனைமுறைகள்தான் இப்போதைக்கு இருக்கிறது. எதிர்காலத்தில் மரபுரீதியாக வரக்கூடிய மற்ற நோய்களை கண்டறிவதற்கான வசதியும் இங்கே கிடைக்கும். உங்களுக்கு என்னென்ன நோய்கள் வரக்கூடுமென்று சொல்லுவதோடு, அவற்றை தவிர்க்கவோ கட்டுப்படுத்தவோ என்னென்ன மாதிரியான உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள், ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம் என்று மருத்துவ ஆலோசனையும் தருகிறார்கள். இப்போது இருக்கும் சோதனை முறைக்கு அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய்வரைதான் செலவாகும்.

அப்புறமென்ன? என்னென்ன நோய் வருமோ என்று அஞ்சி நடுங்காமல், ஒரு சோதனையை எடுத்துவிட்டு வருமுன் காக்க தயாராகுங்கள்.

இந்த நிறுவனத்தின் நிறுவனர் இளைஞரான டாக்டர் சலீம் முகம்மது. சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர். நண்பரோடு இணைந்து தொடங்கியிருக்கிறார். 2007ல் அமெரிக்காவில் பட்டமேற்படிப்பு படிக்கும்போதே, இந்தியாவிலும் இத்தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்த விரும்பினார். ஆனால் சோதனைமுறைக்கு அப்போது செலவு மிக அதிகம். இப்போது இந்தியர்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு தொழில்நுட்பம் சகாயம் ஆகியிருப்பதால், தைரியமாக களத்தில் குதித்திருக்கிறார்.

(நன்றி : புதிய தலைமுறை)