பிழைப்புக்கு காதல் படங்களை எடுத்தாலும் நிஜவாழ்க்கையில் சேரன் காதலுக்கு எதிரானவர். தன்னுடைய மகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ளாதவர். அந்த காதலை உடைக்க தன்னுடைய சினிமா செல்வாக்கை பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்து நடத்துபவர் என்றெல்லாம் இணையத்தளங்களில் சேரன் மீது ஏராளமான விமர்சனங்கள்.
இதிலிருந்து சேரன் தன்னுடைய மகளின் காதலை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் காதலுக்கு எதிரானவர் அல்ல என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சந்துரு குறித்து சமீபத்தில் அவருக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. ஊடகங்களில் சேரன் சொல்வதைப் போல சந்துருவின் பின்னணி, சேரனின் முதல் மகளிடம் முறைகேடாக இணையத்தளத்தில் சாட்டிங் செய்தது போன்ற காரணங்கள் இருந்திருக்கலாம். எனவேதான் தன் மகளுக்கு இவர் ஏற்றவரல்ல என்கிற அடிப்படையில் காதலை எதிர்த்திருக்கலாம். ஒரு தகப்பனாக தன் கடமையை சேரன் சரியாகதான் செய்கிறார் என்று தோன்றுகிறது.
காதலை ஆதரிக்கிறோம் என்கிற பெயரில் சேரனின் தனிப்பட்ட குடும்ப விவகாரத்தை (அது இன்று சந்திக்கே வந்துவிட்டிருந்தாலும்) கொச்சைப்படுத்துவது சரியல்ல. அவர் காதலுக்கு எதிரானவர் என்று ‘பிம்பம்’ கட்டியெழுப்புவது வடிகட்டிய அயோக்கியத்தனம். சேரனோ, சந்துருவோ, தாமினியோ சாதி பற்றி எதுவுமே இதுவரை பேசாத நிலையில், இளவரசன் – திவ்யா காதலோடு இதை ஒப்புமைப்படுத்திப் பேசுவது அறிவார்ந்த செயல் அல்ல. குறிப்பாக பாமகவும், அதன் தொண்டர்களும் இவ்விவகாரத்தில் மைலேஜ் தேடுவது பச்சை சந்தர்ப்பவாதமே தவிர வேறெதுவுமில்லை.
பதினெட்டு வயது பெண்ணுக்கு தன்னுடைய வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருக்கிறதா என்றால் சட்டப்படி இருக்கிறது. ஆனால் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் துணை சரியான துணையில்லை என்று ஆதாரப்பூர்வமாக பெற்றோர் கருதும் நிலையில், அப்பெண்ணின் காதல் கண்ணை மறைக்கிறது எனும்போது சட்டம் வெறும் சட்டமாக மட்டும் செயல்படக்கூடாது. அப்பெண்ணுக்கு தகுந்த நிபுணர்களின் கவுன்சலிங் தேவை. நீதிமன்ற கண்காணிப்பில் அப்பெண்ணிடம் பெற்றோர் தங்கள் தரப்பை பேசுவதற்கான வாய்ப்பு தரப்பட வேண்டும். சேரன், சந்துரு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது காவலர்களால் விசாரித்து உண்மை வெளிவரவேண்டும். ஒரு பெண்ணை ஏமாற்றும் நோக்கில் சந்துரு காதலித்திருந்தால் அவர்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருவேளை சேரன் பொய் சொல்லியிருந்தால் சந்துருவுக்கு ஆதரவாக சட்டம் செயல்படவேண்டும். வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் தாமினியின் உரிமையை அதே சட்டம் உறுதி செய்யவேண்டும்.