4 டிசம்பர், 2013

மசாலாவே வாழ்க்கை!

தீவிர இலக்கியத்தின் வாசல் மட்டுமல்ல. ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமும் வெகுஜன இலக்கியமே என்று தீவிரமாக நம்புகிறோம். இலக்கியத்துக்கு மட்டுமல்ல. வெகுஜன முயற்சிகள் சமூகத்தின் எல்லா தளங்களிலும் ஏற்படும் இடைவெளிகளையும் நிரப்புகின்றன. எல்லா துறைகளுமே தொடர்ச்சியான இயங்குதலுலை நடத்த இது அத்தியாவசியமான பணியும் கூட.

துரதிருஷ்டவசமாக டிஜிட்டல் தலைமுறை இளைஞர்களுக்கு வெகுஜன கலை இரண்டாம் தரமானதாகவோ அல்லது தீண்டப்பட தகாததாகவோ படுகிறது. அவர்களை சொல்லி குற்றமில்லை. பல்வேறு காரணங்களால் தொண்ணூறுகளின் இறுதியில் ஏற்பட்ட தொய்வு இதற்கு காரணமாகிறது. எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் பிறந்த எங்களுக்குதான் சமையலுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் ‘மசாலா’ எவ்வளவு அவசியமானது என்று தெரியும். நண்பர்களுக்குள் பேசிக்கொள்ளும்போது இதையெல்லாம் மிகத்தீவிரமாக விவாதித்திருக்கிறோம்.  இதன் விளைவே LIPS (எ) Life is pulp society. நாங்கள் நம்பும் கருத்தாக்கங்களுக்கு எங்களுடைய பங்காக எதையாவது செய்யவேண்டும். அது நமது கடமையும் கூட.

LIPS அமைப்பின் தொடக்கம் வரும் ஞாயிறு (08-12-2013) அன்று காலை 10.30 மணிக்கு சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில் நிகழ்கிறது.

எங்களது முதல் நிகழ்வே ‘வாசகருக்கு மரியாதை’

வாசகர்தான் வேர் என்கிற அடிப்படையில், வெகுஜன இதழ்களை வாசிக்கவும், வாசித்தபின் அதுகுறித்த கருத்துகளை வெளிப்படுத்தவும் (நம் மொழியில் சொல்லப்போனால் பின்னூட்டம், கமெண்ட்) கடந்த முப்பத்தைண்டு ஆண்டு காலமாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் வாசக மனங்களின் மன்னன் அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களுக்கு சிறியளவில் பாராட்டு விழா நடத்துகிறோம். ‘அந்நியன்’ திரைப்படத்தில் ஒரு பத்திரிகையாளர் பாத்திரத்துக்கு வாத்யார் சுஜாதா, அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களது பெயரை சூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பத்திரிகை அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாராட்டு விழாக்கள் நிறைய நடைபெற்றிருக்கிறன. நாம் நடத்தப்போவது அப்படியே உல்டா. ஒரு பத்திரிகை ஆசிரியர், வாசகரை பாராட்டுகிறார். அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களை கவுரவித்து உரையாற்ற குங்குமம் இதழின் முதன்மை ஆசிரியர் அண்ணன் தி.முருகன் அவர்கள் பெருமனதோடு ஒப்புக்கொண்டிருக்கிறார். இடம் கொடுத்து உதவும் பனுவல் புத்தக நிலையத்தாருக்கும், பரிசல் செந்தில்நாதன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எவ்வளவோ எழுத்தாளர்களோடு ‘வாசகர் சந்திப்பு’ நடைபெற்றிருக்கிறது. ஒரு வாசகரோடு வாசகர் சந்திப்பு நடத்த அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். தொடர்ச்சியாக இம்மாதிரி நிகழ்வுகளை நடத்த உத்தேசித்திருக்கிறோம். உங்களது அன்பான வருகையும், அவசியமான ஆலோசனையும் எங்களை வழிநடத்த வேண்டுமென்று விரும்புகிறோம். ஞாயிறு காலை உங்கள் அனைவரின் அப்பாயிண்ட்மெண்டும் எங்களுக்கு தேவை.

28 நவம்பர், 2013

வெள்ளை யானை

சென்னையின் ஆதிவாசிகள் யாரென்ற சர்ச்சைக்கு விடை காண முடியாத விவாதங்கள் கடந்த அரைநூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. நகரமாக நாகரிகமடைந்த சென்னை ‘தலித்’ மக்களின் உழைப்பாலும், உணர்வாலும் உருப்பெற்ற நகரம் என்கிற கோணத்தை, தகுந்த ஆதாரங்களோடு ஜெயமோகனின் ‘வெள்ளை யானை’ வெளிப்படுத்துகிறது.

நாவலை இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை. சோம்பலின் காரணமாக தினம் இருபது, இருபத்தைந்து பக்கங்கள் என பாதியைதான் நெருங்கிக் கொண்டிருக்கிறேன். வரும் சனிக்கிழமை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. அதற்குள்ளாக முழுமையாக வாசித்துவிடவேண்டும் என்று ஆசை. அடுத்த இருநாட்களில் ‘சோம்பேறித்தனம்’ தற்காலிகமாகவாவது விலகவேண்டும். வாசித்தவரையில் இது ஜெயமோகனின் முக்கியமான படைப்பு பங்களிப்பாகதான் தோன்றுகிறது.

இந்நூல் திராவிட இயக்கத்தின் தோற்றம், இருப்பை கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கக்கூடும் என்று நாவல் வெளிவருவதற்கு முன்பாக நண்பர் ஒருவர் கணிப்பாக சொன்னார். இதுவரை எனக்கு அப்படி தோன்றவில்லை. ஒருவேளை இறுதி அத்தியாயம் நெருங்கும்போது ஏதாவது ‘உள்குத்து’ வைத்திருப்பாரோ என்னமோ?

திராவிட இயக்கம் பார்ப்பனரல்லாதவர்களுக்கான இயக்கம் என்றாலும், சாதிய படிநிலையில் பழகிவிட்ட சமூகமரபின் காரணமாக, அந்த ‘பார்ப்பனரல்லாதவர்களில்’ தலித்களை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். பார்ப்பனரல்லாத முற்பட்ட சாதியினர், சுதந்திரம் பெற்ற சில வருடங்களிலேயே தன்னிறைவை அடைந்துவிட்ட நிலையில் அறுபதுகளில் தொடங்கி தங்கள் உரிமைகளுக்காக போராடும் பிற்படுத்தப்பட்டோரின் ஆதிக்கம் திராவிட இயக்கத்தில் தொடர்ந்து வருகிறது. எனவே இன்றைய நிலையில் திராவிட இயக்கத்தை பிற்படுத்தப்பட்டோரின் இயக்கம் என்றுகூட குறிப்பிடலாம் அல்லது விமர்சிக்கலாம். தர்மபுரி, மரக்காணம் நிகழ்வுகளுக்கு திராவிட இயக்கங்கள் காட்டிய எதிர்வினைகளின் தீவிரத்தை ஒப்பிட்டுப் பார்த்து இம்முடிவுக்கு யாருமே சுலபமாக வரலாம்.

சாதியை சகட்டுமேனிக்கு கேள்விக்குள்ளாக்கும் இன்றைய உலகமயமாக்கல் சூழலிலும் கூட தலித்களுக்கான இடம் முற்போக்கு இயக்கங்களான திராவிட இயக்கங்களில் கூட சிறுபான்மையாகதான் (பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளில்தான்) கிடைக்கிறது.

இந்த நடைமுறை பின்னணியோடு ‘வெள்ளை யானை’யை வாசிப்பதே சரியாக இருக்கும். இந்நாவல் சென்னையை உருவாக்கிய ‘தலித்’களின் பங்களிப்பையும், அந்தப் பங்களிப்புக்கு உரிய பலன் அச்சமூகத்துக்கு கிடைக்காத அவலத்தையும் சுட்டுவதாகவே புரிந்துக்கொள்கிறேன். இதை சொல்லும்போது, இது திராவிட இயக்கத்தை எதிர்ப்பதான தோற்றத்தை தருமே தவிர, உண்மையான நோக்கம் அதுவாக இருக்காது என்று நம்புகிறேன்.

முந்தைய ஜெயமோகன் படைப்புகளோடு ஒப்பிடுகையில் ‘இலக்கியத்தன்மை’, ‘படைப்பூக்கம்’ மாதிரியான உன்னதங்கள் இதில் குறைவாக இருப்பதாக தீவிர இலக்கிய வாசகர்கள் கருதக்கூடும். என்னைப்பொறுத்தவரை இதில் அம்மாதிரி கற்பிதங்களை காட்டிலும், அவருடைய எழுத்து நாலுகால் பாய்ச்சலில் செயல்வேகத்தோடு கூடியிருப்பதாக கருதுகிறேன். வர்ணனைகளும், உருவகங்களும், குறியீடுகளும் மட்டுமே இலக்கியம் ஆகிவிடாது என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

ஒரு நிகழ்வில் இந்த நாவலை குறிப்பிட்டு, இது ஒரு நாவலாக இல்லாமல் ‘திட்டமாக’ உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கவிஞர் சங்கரராமசுப்பிரமணியன் குறிப்பிட்டார். அது பாராட்டா அல்லது எதிர்விமர்சனமா என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் திட்டமிடாமல் ஒரு சிறு ஹைக்கூவை கூட எழுதமுடியாது என்பதுதான் என் புரிதல்.

வெள்ளை யானைக்கு ஆவணத்தன்மை சற்று கூடுதலாகவே இருக்கிறது. ஆவணங்கள் இலக்கியமாகுமா என்று விவாதித்து இனி நம் நேரத்தை போக்கிக் கொள்ளலாம் :-)

25 நவம்பர், 2013

இரண்டாம் உலகம்

நல்ல ஐடியா. எல்லோருக்குமே குறைந்தது இரண்டு உலகங்கள் இருக்கிறது. இரண்டாம் உலகம் என்பது கனவாக இருக்கக்கூடும். அல்லது மனப்பிறழ் காரணமாக தாமே உருவாக்கிக்கொள்ளக் கூடிய இன்னொரு உலகாகவும் இருக்கலாம். சுலபமாக மற்றவர்களுக்கு வார்த்தையால் கூட சொல்லி புரியவைக்க முடியாத இரண்டாம் உலகத்தை திரையில் காட்சிகளாக்கி காட்டுவது என்கிற சவாலை செல்வராகவன் முயற்சித்திருக்கிறார்.

கனவுலகம் எல்லாருக்குமே பாதுகாப்பான உலகம். அந்த உலகின் இயக்கத்தை கனவு காண்பவன் தன் கையில் இருக்கும் ரிமோட்டால் கட்டுப்படுத்தலாம். நாம் நினைத்த பெண்ணை காதலிக்கலாம். நமக்கு பிடிக்காதவனை ரஜினி ஸ்டைலில் பறந்து பறந்து அடிக்கலாம். ஆடி காரில் உலா வரலாம். தம் அடிக்கலாம். பீர் குடிக்கலாம். அயல்நாட்டு அழகிகளோடு ஜல்சா செய்யலாம். கனவு காண பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா. கனவுகள் அந்தரங்கமானவை. கனவு முடிந்து விழித்தபிறகு பெரும்பாலும் அவை நினைவில் நிற்பதில்லை. தான் கண்ட கனவு என்று யாராவது விடும் கதை அனேகமாக புனைவாகதான் இருக்கும். முக்கியமாக கனவுக்கு வண்ணமில்லை. கருப்பு வெள்ளையில்தான் கனவு இருக்குமென்று உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். எனக்கெல்லாம் கனவு வந்தே கால் நூற்றாண்டு இருக்குமென்பதால், அது கருப்புவெள்ளையா, வண்ணமா, சினிமாஸ்கோப்பா என்பதெல்லாம் நினைவிலேயே இல்லை. மேலும், கனவில் ‘ஒலி’ உண்டா என்கிற குழப்பமும் இருக்கிறது. இப்படியிருக்கையில் அப்துல்கலாம் போன்றவர்கள் கனவுகாண சொல்லும்போது, அது எப்படி இந்திய இளைஞர்களுக்கு சாத்தியமாகும் என்று அயர்ச்சிதான் ஏற்படும்.

இது ஒரிஜினல் கனவு. பகல் கனவு என்றொன்று உண்டு. சும்மா உட்கார்ந்து மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, பைக்கில் பயணிக்கும்போதோ, டாய்லெட்டில் இருக்கும்போதோ சுய இன்பம் மாதிரி நாமாக ‘விஷூவல்’ அமைத்து, சிந்தனையிலேயே ஓட்டும் ஃபிலிம் இன்னொரு வகை கனவு. ஆண்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் இவ்வகை கனவுகள் அவர்களது பாலியல் வறட்சிகளுக்கு பசுமை பாய்ச்சக்கூடிய தன்மை கொண்ட கனவுகளாகவே இருக்கக்கூடும். இம்மாதிரி கனவிலேயே காலத்தை ஓட்டினால், பொழைப்பு நாறிவிடுமென்று பாலகுமாரன் அடிக்கடி எழுதுவார்.

செல்வராகவன் காட்ட விரும்பிய இரண்டாம் உலகம் கனவாகவோ அல்லது மனப்பிறழ்வாகவோ இருக்கிறது என்கிற கோணத்தில் பார்த்தேன். அப்படியும் படம் ஓக்கே ரகம் கூட இல்லை.

இது நிஜமாகவே ‘பண்டோரா’ மாதிரி கிரகம் என்று அவர் எடுத்திருந்தால் அதற்கான உழைப்போ, ரசிகனுக்கு பரிமாறப்பட வேண்டிய ஃபேண்டஸியான உணர்வோ திரையில் தென்படவில்லை. ‘அவதார்’ எடுப்பதற்கான டெக்னாலஜி வரும்வரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு கருவை அடைகாத்து சுமந்து, அதுவரை திரைக்கதையை செதுக்கிக் கொண்டிருந்தார் கேமரூன் என்பார்கள். செல்வராகவன் இரண்டாம் உலகத்துக்காக இன்னும் சிலவருடங்கள் பிள்ளைத்தாய்ச்சியாகவே இருந்திருக்கலாம்.

படம் பார்த்த கவிஞர் ராஜசுந்தரராஜன் புது ‘கான்செப்ட்’ சொன்னார். ஒரு உலகம் திராவிட உலகம். மற்றொன்று ஆரிய உலகம். அனுஷ்காவுக்கு அதனால்தான் ‘வர்ணா’ என்று பெயர் என்றார். அவரது இந்த பார்வைக்காகவே இன்னொரு முறை ஆரிய-திராவிட அரசியல் படமாக இதை அணுகிப் பார்த்தால் வேலைக்காகுமா என்று பார்க்கவேண்டும்.

அனுஷ்கா ஆண்ட்டி ஆகிவிட்டார். தொப்பை குலுங்க அவர் ஓடியாடி சண்டை போடுவதை காண அதிர்ச்சியாகவும், ஆயாசமாகவும் இருக்கிறது. ஒருவேளை அதனாலேயே கூட படம் பிடிக்கவில்லையோ என்னவோ?

22 நவம்பர், 2013

தருண் தேஜ்பால்

இந்தியப் பத்திரிகையுலகில் பணிபுரியும் இளம் பத்திரிகையாளர்களின் Idol Journalistகளில் ஒருவரான தருண் தேஜ்பாலுக்கு என்ன நடந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். செய்தியை வாசித்தவுடனேயே ஆத்திரம்தான் வந்தது. ஆத்திரம் அறிவிழக்கச் செய்யும். என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மிக இழிவான மொழியில் ஒரு நிலைத்தகவல் இட்டிருந்தேன். அதை வாசித்த என்னுடைய நலம் விரும்பியான, தமிழ் இதழியல் துறையில் மரியாதையாக மதிக்கப்படும் மூத்தப் பத்திரிகையாளர் ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னை கடுமையாக கண்டித்தார். தன் துறையின் இளையவர்கள் தடம் மாறிச் செல்லும்போது ஒரு ஆசான் எதை செய்யவேண்டுமோ அதைதான் அவர் செய்தார். ஏன் அவ்வளவு கேவலமான மொழியை பயன்படுத்தினேன் என்று கொஞ்சம் விரிவாக சிந்தித்துப் பார்த்தேன்.

ஒரு மனிதனையோ, இயக்கத்தையோ, லட்சியத்தையோ, கொள்கையையோ வீழ்ச்சி அடைய செய்யவேண்டுமானால் ஓர் ஆதிகாலத்து தந்திரம் இருக்கிறது. மண், பொன், பெண். நாகரிக உலகில் மண்ணைக் காட்டி மயக்குவது இன்று கடினம். அப்படி மயங்கியவர்கள் நில அபகரிப்பு வழக்குகளில் உள்ளே இருக்கிறார்கள். பொன்னுக்கு மயங்கியவர்கள் ஊழல் வழக்கில் நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டைக் காட்டிலும் மூன்றாவதான ‘பெண்’தான் ஒரு மனிதனை ஒட்டுமொத்தமாக வீழச்செய்கிறது. இதுதான் என்றுமே வெல்லக்கூடிய பிரம்மாஸ்திரமாகவும் இருக்கிறது.

உலகம் தோன்றியதிலிருந்தே ஆண்கள் இந்த விஷயத்தில் அயோக்கியர்கள் என்பதால் மிகச்சுலபமாக அவர்களை வீழ்த்த முடிகிறது. சபலத்துக்கு ஆட்பட்டவன் எவ்வளவுதான் திறமைசாலியாகவோ, நல்லவனாகவோ இருந்துத் தொலைத்தாலும்.. பல்லாண்டுகள் கடினப்பட்டு அவன் உருவாக்கிய உழைப்புக் கோட்டை ஒரே புகாரில் சுக்குநூறாக உடைகிறது.

நிறைய உதாரணங்களை பட்டியலிட முடியும். கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த அற்புதமான திராவிட இயக்கம் எந்தெந்த சந்தர்ப்பங்களில் பிளவுப்பட்டது என்பதை கொஞ்சம் கூர்மையாக கவனித்தால், ‘பெண்ணுடல்’ அரசியல் ஆயுதமாகவும் பயன்பட்டதை உணர்ந்துகொள்ளலாம். உலகளவில் பார்த்தோமானால் சமகால உதாரணங்களாக ஆனானப்பட்ட கிளிண்டனும், ஜூலியன் அசாஞ்சேவுமே கூட இந்த தாக்குதலுக்கு தப்பவில்லை.

குறிப்பாக அரசியல், சினிமா, ஊடகம் மூன்று துறைகளிலும் ஒருவரை முற்றிலுமாக அழித்தொழிக்க பெண் புகார் குற்றச்சாட்டு போதுமானது. நம்மூரில் கூட சமீபத்தில் இரு ஊடக குழுமங்களுக்கு இடையே நடந்த பனிப்போரில் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்பது நமக்கே தெரியும்தானே.. இணையத்திலும்கூட சில இலக்கியவாதிகள் இதனால்தானே ‘டவுசர்’ கழட்டப்பட்டார்கள்? தன் நிழலைக்கூட நம்பாதவர்கள் மட்டுமே தங்கள் இமேஜை நல்லபடியாக வரலாற்றில் பதியவைக்க முடியும்.

உறுதிப்படுத்தப்பட்ட சில அரண்மனை ரகசியங்களை இதுமாதிரி பொதுவிடங்களில் பகிர்ந்துக்கொள்ள முடியாது. ஆனால் உறுதியாக சொல்ல முடியும். உறுதியானவர்களை உடையவைக்க காலம் காலமாக ‘காமம்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயக்குனர் மதுர்பண்டார்க்கரின் திரைப்படங்கள் சில இப்பிரச்சினையை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது.

தருண் தேஜ்பால் மீதான குற்றச்சாட்டு வருவதற்கு சரியாக பத்து நாட்களுக்கு முன்பாக, ஓர் ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாலுமகேந்திரா பேசினார். பவா செல்லத்துரையின் பதினைந்து வயது மகனுக்கு சொல்வதைப்போல, எல்லாருக்குமாக ‘அட்வைஸ்’ செய்தார். குறிப்பாக இலக்கியம், சினிமா உள்ளிட்ட கலைத்துறைகளில் பிரபலம் அடைபவர்களுக்காக அவருடைய பேச்சு அமைந்தது. “வளர்ந்து வருபவர்கள் ‘பெண்’ விஷயத்தில் கூடுதல் ஜாக்கிரதையாக இருங்கள். மொத்த உழைப்பும் வீணாகிவிடும். இது என் தனிப்பட்ட அனுபவத்தில் உணர்ந்த உண்மை” என்றார். பாலுமகேந்திரா சொன்னதுமே நிறைய பேர் சிரித்தார்கள். அவரும் புன்முறுவலோடு சொன்னாலும், அதற்குப் பின்னான அவரது நிரந்தர வேதனையை உணர்ந்துக்கொள்ள முடிந்தது. ஏனெனில் அவருக்கு சமூகத்தில் இருக்கும் இமேஜ் அதுமாதிரியானது. ஏதாவது பழைய பாலுமகேந்திரா படங்களின் பாடல்களை டிவியில் போடும்போது, அவரை சிலாகித்துப் பேசுவேன். அம்மாவுக்கு கோபம் வரும். “அந்தாளு ஒரு அயோக்கியன்” என்பார்கள். அம்மாவை சொல்லியும் குற்றமில்லை. ஷோபா தலைமுறை ஆட்கள் இப்படித்தான் பேசுவார்கள்.

தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது மூத்தப் பத்திரிகையாளர்களும் பாலுமகேந்திரா சொன்ன அட்வைஸைதான் எனக்கும் சொல்வார்கள். “இந்த துறையிலே ரொம்ப ஈஸியா கிடைக்கும் தம்பி. இந்த வேலையோட தன்மை அப்படி. சோத்து மூட்டைக்குள்ளே பெருச்சாளி பாய்ஞ்சா மாதிரி பாய்ஞ்சிடாதே. லைஃபே ஸ்பாயில் ஆயிடும்” என்பார்கள். சொன்னவர்கள் பெரும்பாலும் அவர்கள் லைஃபை ஏதோ ஒரு கட்டத்தில் ‘ஸ்பாயில்’ செய்துக்கொண்டவர்கள்தான். அனுபவம்தான் பெரிய ஆசான். தற்காலிக மகிழ்ச்சியையும், அதன் பிறகான முடிவேயில்லாத துயரத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் சொன்னால் சரியாகதானிருக்கும். கொஞ்சம் அதீதமாக இருந்தாலும், ‘ஆணாகப் பிறப்பதே பாவம்’ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. இம்மாதிரி குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பொதுவில் அவமானப்படுகிறார்கள் என்பதோடு பிரச்சினை முடிந்துவிடுவதில்லையே. காலத்துக்கும் குடும்பத்தில் இருப்பவர்களின் முகத்தில் எப்படி விழிப்பார்கள்?

தருண் மீது புகார் கொடுத்த பெண், தருணின் மகளுக்கு தோழர் என்கிறார்கள். எப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறார் :-(

தருண் தேஜ்பாலின் தற்போதைய வீழ்ச்சி, கிளிண்டனுக்கு விரிக்கப்பட்ட ‘கண்ணி’ மாதிரி இருக்கக்கூடுமோ என்று எனக்கு உறுதியான சந்தேகம் இருக்கிறது. இதற்காக புகார் கொடுத்த பெண்ணை நான் கொச்சைப்படுத்துவதாக அர்த்தமில்லை. புகார் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இப்படியொரு ‘நிகழ்தகவு’க்கும் வாய்ப்பிருப்பதை நாம் பரிசீலித்தாக வேண்டும். இன்னும் ஆறு மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. ‘Sting operation’க்கு பேர்போன தெஹல்காவும், அதனுடைய ஆசிரியரும் என்னென்ன பூதங்களை, விளக்கைத் தேய்த்து வெளிவரச் செய்வார்களோ என்கிற அச்சம் ஏராளமானோருக்கு இருக்கக்கூடும். இந்த குற்றச்சாட்டு தெஹல்காவை முடக்கச் செய்யும் முயற்சியாக கூட இருக்கலாம். முறையாக புகார் தெரிவிக்கப்படாத நிலையில் அவசரம் அவசரமாக கோவா முதல்வர் இப்பிரச்சினையில் காட்டும் கூடுதல் ஆர்வத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது. எனவேதான் தெஹல்காவை காக்க தன்னை தற்காலிகமாக தியாகம் செய்துக் கொண்டிருக்கிறார் தருண் தேஜ்பால்.

மீண்டும் பாலுமகேந்திராவுக்கே வருகிறேன். பல நிகழ்ச்சிகளில் அவர் ஒரு படத்தின் காட்சியை விவரித்துச் சொல்வார். ஒரு கலைஞன் தன் எதிரியிடம் சொல்வானாம். “என்னை என்ன வேண்டுமானாலும் அவதூறாக திட்டிக்கொள். அதில் உண்மை இருக்கலாம். ஆனால் என் உழைப்பை மட்டும் பழிக்காதே. நான் அதற்கு விசுவாசமாக இருக்கிறேன்”

தருண் தேஜ்பால் மீது எனக்கு இன்னமும் மரியாதை இருக்கிறது.

19 நவம்பர், 2013

3D விகடன்

அந்த காலத்தில் விகடகவி புதூர் வைத்தியநாத அய்யர் என்றொருவர் இருந்தார். ஒரே நேரத்தில் பத்து விஷயங்களை கவனித்து எதிர்வினை ஆற்றும் ஆற்றல் பெற்ற தசாவதானியாம் அவர். காமெடி வெண்பாக்கள் நிறைய இயற்றுவாராம். அவருடைய கவிதைகளை பத்திரிகைகள் சீண்டவில்லை என்றோ அல்லது வேறு ஏதாவது காரணமோ தெரியவில்லை. திடீரென்று ஒரு பத்திரிகை ஆரம்பித்து நடத்த ஆரம்பித்தார். ஆனந்த விகடன்.

உலகமும், தேசமும் சீரியஸாக சிடுமூஞ்சித்தனமாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் ‘சிரி’யஸாக இயங்கியது விகடன். அரசு வேலையை உதறி சுயத்தொழில்தான் என்று தன்னம்பிக்கையோடு களமிறங்கியிருந்தார் இளைஞரான திருத்துறைப்பூண்டி சுப்ரமணியன் ஸ்ரீனிவாசன். மெயில் ஆர்டர் பிசினஸ் தொடங்கினார். அதாவது ‘துட்டு’ அனுப்பினால், வினோதமான பொருள் உங்கள் வீடு தேடி வரும். ஒரு ரூபாய்க்கு நூறு பொருள் மாதிரி கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் ஸ்ரீனிவாசனின் மெயில் ஆர்டர் பிசினஸ் சக்கைப்போடு போட்டது. இந்த தொழிலை அபிவிருத்தி செய்ய பத்திரிகைகளில் விளம்பரம் தரவேண்டும். அன்றிருந்த விளம்பர ஏஜென்ஸிகள் அடித்த கொள்ளை கமிஷனைப் பார்த்து, ஏற்கனவே இருந்த பிசினஸோடு அட்வர்டைஸிங் ஏஜென்ஸியையும் சேர்த்து செய்ய ஆரம்பித்தார் ஸ்ரீனிவாசன்.

இப்படித்தான் விளம்பரத் தேவைக்காக விகடனும், புதூர் வைத்தியநாத அய்யரும் ஸ்ரீனிவாசன் என்கிற எஸ்.எஸ்.வாசனுக்கு அறிமுகமானார்கள். ஒரு நாள் விளம்பரம் தருவதற்காக அய்யரை பார்க்க வந்திருந்தார் வாசன். சிரிக்க சிரிக்க பத்திரிகை நடத்தும் அய்யர் அன்று சீரியஸாக இருந்தார். “இனிமேல் விளம்பரம் கொடுக்க வேற பத்திரிகை பார்த்துக்கோப்பா. செலவு கட்டுப்படி ஆவலை. தனியாளா ஓடியாடி நடத்துறதுக்கும் கஷ்டமாயிருக்கு. ஆனந்த விகடனை இழுத்து மூடறதா இருக்கேன்”

வாசன் யோசித்தார். நாமே நடத்தினால் என்ன. இதுதான் வாசனின் ஸ்டைல். விளம்பரம் கொடுக்க விளம்பர ஏஜென்ஸிகள் எதற்கு. நாமே நடத்திவிட்டு போகலாமே. விளம்பரங்களை வெளியிட பத்திரிகைகளை ஏன் தொங்கவேண்டும். நாமே பத்திரிகை நடத்தலாமே. அய்யரிடம் பேரம் பேசினார். ஒரு எழுத்துக்கு இருபத்தைந்து ரூபாய் என்று கணக்கு போட்டு, ‘ஆனந்தவிகடன்’ என்கிற எட்டு எழுத்துகளுக்கு இருநூறு ரூபாய் கொடுத்து வாங்கினார். இது எண்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. இன்று ஆனந்தவிகடன் ஒரே ஒரு பிரதியின் விலையே இருபது ரூபாய்.

வாசன் கைக்கு மாறியதுமே பத்திரிகையும் மாறத்தொடங்கியது. சித்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், பத்திரிகைக்கு அஸ்திவாரமாக அய்யர் கருதிய ‘ஆனந்தம்’ மட்டும் அப்படியே இருந்தது. சிரிக்க வைக்கும் பத்திரிகை, சித்திரங்களும் அபாரம் என்று ஊர் பேசியது. வாசனுக்கு முழுமையான திருப்தி கிடைக்கவே கிடைக்காது. தன்னுடைய பத்திரிகையில் இடம்பெறும் எழுத்துகளும் சூப்பர் என்று எல்லோரும் பேசவேண்டும் என்று முயற்சித்தார். கல்கியை பிடித்தார். சிறந்த எழுத்தாளர்களுடன், சிறந்த ஓவியர்கள் என்கிற கூட்டணிதான் விகடனின் வெற்றி ஃபார்முலா. நல்ல எழுத்துகளை மிக நல்ல வடிவத்தில் வாசகர்களுக்கு வழங்கவேண்டும் என்கிற அமரர் வாசனின் தரக்கொள்கையை இன்றுவரை நூற்றாண்டை நெருங்கும் விகடன் அப்படியே கடைப்பிடித்து வருகிறது.

அதே நேரம் மாற்றங்களுக்கும் விகடன் அஞ்சியதே இல்லை.
ஐம்பதுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட திராவிட எழுச்சியின் போது விகடன் அடைந்த மாற்றம் முக்கியமானது. வெகுஜன வாசகர்களை கவரும் எளிய தமிழில் திராவிட எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கியிருந்தார்கள். இந்த மாற்றத்தை உணர்ந்துக்கொள்ளாத அல்லது ஏற்றுக்கொள்ள விரும்பாத பத்திரிகைகள் பலவும் பொலிவிழந்தன. எண்ணற்ற பத்திரிகைகள் மக்கள் செல்வாக்கினை இழந்து கடையை இழுத்து பூட்டிக்கொண்டது. அரசியல்ரீதியாக காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தாலும் திராவிட தாக்கத்தை ஏற்றுக்கொண்டு, கவுரவம் பார்க்காமல் விகடனில் இந்த புதுத்தமிழ் நடையை புத்திசாலித்தனமாக புகுத்தினார் வாசன்.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் ரேடியோ-டிவி போட்டிகளை விகடன் தன்னுடைய புகைப்படக் கலைஞர்களின் திறமையைக் கொண்டு சமாளித்தது. ரேடியோவாலும், அந்தகால டிவியாலும் செய்யமுடியாத நேரடிகள அனுபவ சாகஸங்களை ஜூ.வி. மாதிரியான இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னலிஸ பத்திரிகையை அறிமுகப்படுத்தி செய்தது. திரைப்படங்களும் ‘கலர்’ ஆகி பத்திரிகைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் நீடித்த இந்த காலத்தில் வாசனின் புதல்வர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஒரு பத்திரிகையில் செய்யக்கூடிய எல்லா சாத்தியங்களையும் கையாண்டு வெற்றிகண்டார்.

இப்போது மூன்றாவது தலைமுறை. வாசனின் பேரன் பா.சீனிவாசன் பொறுப்பிலிருக்கிறார். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பத்திரிகைகளுக்கு பல்முனை போட்டி. மில்லெனியமின் ஆகச்சிறந்த புரட்சியான இணையத்தை மரபான அச்சுப் பத்திரிகைகள் எப்படி எதிர்கொண்டு, தங்கள் இருத்தலியத்தை தக்கவைத்துக்கொள்ளப் போகின்றன என்கிற கேள்விக்கு விடைகாணவேண்டிய காலம். தன் பங்காக ஆனந்த விகடன் 3D அனுபவத்தை வாசகர்களுக்கு முன்வைத்திருக்கிறது.
தொண்ணுறுகளில் ஸ்டீரியோகிராம் தொழில்நுட்ப முறையில் பின்னட்டையில் 3Dயை அறிமுகப்படுத்தியது விகடன். இப்போது ரெட், சியான் அனாக்லிப் கண்ணாடிகளை அணிந்து நேரடியாகவே விகடனில் அச்சிடப்படும் படங்களையும், ஓவியங்களையும் முப்பரிமாணத்தில் பார்க்கக்கூடிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். விகடனுக்கு மட்டுமின்றி, தமிழ் இதழியலுக்கே நாலுகால் பாய்ச்சலை உருவாக்கித்தரும் முக்கியமான மாற்றம் இது. நீளம், அகலம் என்று இருபரிமாணத்தில் அடங்கியிருந்த வாசிப்புக்கு, ஆழத்தை உணரக்கூடிய கூடுதலான இன்னொரு பரிமாணத்தை சேர்த்திருக்கிறார்கள். விகடன் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் இத்தொழில்நுட்பத்தை எப்படி தமிழ் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதையெல்லாம் எதிர்காலம் முடிவு செய்துக்கொள்ளட்டும். ஆனால், அனைவராலும் தமிழ் பத்திரிகைத்துறையில் இது எழுந்து நின்று இருகைதட்டி பாராட்டப்பட வேண்டிய முக்கியமான புரட்சி.

இந்த கனவை சாத்தியமாக்க விகடன் குழுவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்திருக்க வேண்டும். குறிப்பாக ரெஜிஸ்ட்ரேஷன் பார்க்கவேண்டிய அச்சு ஊழியர்கள், இமைக்க மறந்து வேலை பார்த்திருப்பார்கள். லே-அவுட் பணியாளர்களும் ஒன்றுக்கு பத்துமடங்கு உழைப்பை செலுத்தியிருப்பார்கள். 3டி பக்கங்களுக்காக எடிட்டோரியல் குழுவினர் கற்பனையை தாறுமாறாக பறக்க செய்திருப்பார்கள். ஒட்டுமொத்தமாக விகடன் தாத்தாவுக்கு அட்டென்ஷனில் ஒரு சல்யூட்.
ஓராண்டுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து திரும்பிய நண்பர் ஒருவர் 3டியில் அச்சிடப்படும் பத்திரிகை ஒன்றை காட்டினார். என் கையில் கூட கொடுக்காமல் மிகக்கவனமாக அவரே பக்கங்களை புரட்டிக் காண்பித்தார். Word’s most beautiful என்கிற அப்பத்திரிகையை கண்ணாடி போட்டு பார்த்தபோது, முதன்முதலாக ஒரு பெண்ணிடம் ‘ஐ லவ் யூ’ சொன்னபோது ஏற்பட்ட பரவசத்தை மீண்டும் அடைந்தேன். “இதெல்லாம் உங்க ஊருக்கு வர்றதுக்கு இன்னும் நாற்பது, ஐம்பது வருஷம் ஆவும்” என்றார். ஏக்கத்தோடு “ம்” கொட்டினேன். வெறும் இருபது ரூபாய் செலவில் அந்த ஏக்கத்தை இவ்வளவு சீக்கிரமாக விகடன் தாத்தா போக்குவார் என்று கனவிலும் நினைக்கவில்லை. 3டி விகடன் இதழ் கடைக்கு வந்த அன்று மாலை, அதே ‘ஐ லவ் யூ’ பரவசத்தை இரு மடங்காக உணர்ந்தேன். என்ன இருந்தாலும் என் தாய்மொழியில் 3டியை பார்க்கிறேன் இல்லையா. கல்வெட்டு, பட்டயம், ஓலைச்சுவடி, பேப்பர் என்று மரபான எல்லா அச்சு ஊடகவடிவங்களையும் தாக்குப்பிடித்து வாழும் என் தமிழ், முப்பரிமாண தொழில்நுட்பத்துக்கும் தயாராகிவிட்டதை காணும்போது எழும் உணர்ச்சியலைகளுக்கு அளவேயில்லை. ஒரே ஒரு குறைதான். எண்பது ஆண்டுகளாக விகடன் தாத்தா எல்லா மாற்றங்களையும் உள்வாங்கி, விதம்விதமாக தன் கெட்டப்பை மாற்றிக்கொண்டிருக்கிறார். 3டியில் அவரை ஒரு முழுப்பக்கத்துக்கு காட்டியிருக்க வேண்டாமா விகடன் ஓவியர்கள்? அப்புறம், ஆனந்தவிகடன் ஆசிரியருக்கு இன்னொரு கோரிக்கை. தயவுசெய்து ‘டைம்பாஸ்’ இதழையும் 3டி வடிவில் வெளியிட ஆவன செய்யவும். எவ்வளவு செலவு ஆனாலும் சரி. ஆவலோடு காத்திருக்கிறோம்.
அ-னா, ஆவன்னா வாசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே உற்ற தோழனாக இருந்த ஆனந்த விகடன் மீது, சில ஆண்டுகளாக கடுமையான மனக்கசப்பு இருந்தது. ‘ஆனந்தம்’ போய், ‘அழுமூஞ்சி’ விகடனாக அதுமாறிவிட்டதால் ஏற்பட்ட கடுப்பு. ஜூ.வி.தான் அரசியலுக்கு என்று தண்ணீர் தெளித்துவிட்டபிறகு, ஆ.வி.யிலும் ஏன் பக்கம் பக்கமாக, குறிப்பாக கலைஞரை மட்டும் குறிவைத்து வன்மமான அரசியல் என்று ஓர் ஆதங்கம். கலைஞர் தாத்தாவும், விகடன் தாத்தாவும் சமகாலத்தவர்கள்தானே? ஒரு தாத்தாவை இன்னொரு தாத்தா இப்படி ஏதோ சொத்துத்தகராறு மாதிரி தனிப்பட்ட முறையில் அளவுதாண்டி தாக்கலாமா என்று கோபம். அதனாலேயே நான்கு ஆண்டுகளாக விகடனை காசு கொடுத்து வாங்குவதில்லை. அலுவலகத்துக்கு வந்து புரட்டுவதோடு சரி (அரசியல் கட்டுரைகளை ஏறெடுத்தும் பார்க்கவே மாட்டேன்).

தாத்தாவுக்கும் பேரனுக்குமான இயல்பான ஊடல்தான் அது. விகடன் தாத்தா மீதிருந்த அந்த கோபம் இந்த 3டியால் மொத்தமாக ஓடியே போய்விட்டது. என்ன இருந்தாலும் நம்ம தாத்தா இல்லையா?