“இயற்கையை பழிக்காதேடா பாவி..” அப்பா அடிக்கடி சொல்வார்.
அடிவானம் கறுக்கும்போதே எங்களுக்கெல்லாம் அடிவயிற்றில் அச்சம் எழும். தூறல் விழ ஆரம்பித்தாலே ‘எழவெடுத்த மழை’ என்று இயல்பாக எங்கள் உதடுகள் உச்சரிக்கும். அப்பாவுக்கு கண்மூடித்தனமாக கோபம் வரும்.
நாங்கள் மழையை வசைபாடும்போதெல்லாம், அவர்தான் மழைக்கு வக்காலத்து வாங்குவார்.
“பழிக்காம.. இந்த எழவெடுத்த மழையை பாராட்டவா சொல்றீங்க.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதே இயற்கைதான் நம்மை மொத்தமா குடும்பத்தோட பலிவாங்கப் பாத்துச்சி” என்பேன்.
அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டார்.
அந்தந்த பருவத்தில் வெயிலும், மழையில் இயற்கையின் இயல்பு. அதனால் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அதற்கு மனிதப்பிழைதான் காரணம் என்பது அவருடைய ஆணித்தரமான வாதம்.
அவர் சொல்வது அறிவியல்ரீதியாக சரிதான். நான் கற்ற கல்வி அவருடைய தர்க்கத்தை ஏற்றுக் கொள்கிறது.
ஆனால்-
கருமேகம் சூழ்ந்து வானம் இருட்ட ஆரம்பிக்கும்போதெல்லாம் என் வயிற்றுக்குள் சடுகுடு நடக்கிறது.
ஆமாம் சார்.
நான் வரதராஜபுரத்துக்காரன். எனக்கு அப்படிதான் இருக்கும்.
மழைத்தூறல் விழுந்ததுமே மகிழ்ச்சியில் பெண் மயில் தோகை விரிக்கும் என்பார்கள். எங்கள் வரதராஜபுரத்துக்காரர்களுக்கு ‘மழை’ என்கிற சொல் காதில் விழுந்தாலே முகம் பேயறைந்துவிடும்.
அப்பா மட்டும் விதிவிலக்கு. அவரைப் பற்றி அப்புறம் பார்ப்போம்.
மழையை யாராவது வெறுக்க முடியுமா என்று கேட்டீர்களேயானால், நீங்கள் புண்ணியவான். மழையை ரசிக்கும் மனசை உங்களுக்கு பரம்பொருள் அருளியிருக்கிறது.
மன்னித்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டிலேயே மழையை அதிகம் வெறுக்கும் மனிதர்களாக வரதராஜபுரத்துக்காரர்கள் சமீபத்தில் மாறிப்போனோம்.
ஏன் என்பதற்கு ஒரு சிறிய நினைவூட்டல்.
ஆண்டு 2015. தேடி டிசம்பர் ஒன்று. உங்களில் யாருக்காவது நினைவிருக்கிறதா?
ஒருவேளை அந்த தேதியில் நீங்கள் சென்னையில் இருந்திருந்தால், சாகும்வரை அந்நாளை மறந்திருக்க மாட்டீர்கள். நாங்களெல்லாம் அன்றைய ஊழித்தாண்டவத்தை நினைத்து நாள்தோறும் இன்றும் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறோம்.
பரவாயில்லை.
அந்த ஆண்டு நவம்பர் மாதமே வானத்தை யாரோ திட்டமிட்டு வாள் கொண்டு கிழித்திருப்பார்களோ என்று சந்தேகம் கொள்ளுமளவுக்கு வரலாறு காணாத மாமழை பொழிந்தது. மாலை ஆனாலே மழைதான். ஒட்டுமொத்த சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆறு, ஏரி, குளம், வாய்க்கால், குழியெல்லாம் தளும்பத் தளும்ப தண்ணீர்.
குடிக்கும் தண்ணீரைகூட காசு வாங்கி குடிக்கும் கூட்டம்தானே? அந்த மழையை சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றோம். அந்த ஆண்டு தீபாவளியை அவ்வளவு சிறப்பாக கொண்டாடினோம்.
மழை, செகண்ட் இன்னிங்ஸ் ஆடுமென்று யாருக்கு தெரியும்? டிசம்பர் முதல் நாளிலேயே பேயாட்டம் ஆடியது. போதுமான முன்னறிவிப்பு இல்லாமல் ஆட்சியாளர்கள் வேறு காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே பெரிய ஏரியான செம்பரம்பாக்கத்தை வேறு திறந்து விட்டார்கள். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் பிரளயமே நேர்ந்துவிட்டது.
ஒட்டுமொத்த ஊரும் நீரில் மிதந்தது. ஆடு மாடுகளோடு மனிதர்களும் அடையாற்றில் அடித்துக்கொண்டு போனார்கள். ஒரு வாரத்துக்கு மின்சாரம் இல்லை. லட்சக்கணக்கான குடும்பங்களின் அன்றாட அலுவல்கள் மொத்தமாக முடங்கி, அத்தனை பேரும் வீட்டுக்குள் அடைந்துக் கிடந்தார்கள். பாடுபட்ட சேர்த்த அத்தனையும் வெள்ளத்தில் அடித்துக் கொண்டுச் செல்வதை கண்டு மனம் நொந்தார்கள். வீட்டின் தரைத்தளம் முழுக்க நீரால் நிரம்ப, மொட்டை மாடிக்கு போய் மழையில் நனைந்தவாறே உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.
தன்னார்வலர்களின் தொண்டு உள்ளத்தால்தான் மீண்டது சென்னை. அரசிடம் நியாயம் கேட்ட மக்களுக்கு, “நூற்றாண்டு கண்டிராத மழை. நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று பதில் சொன்னார்கள் ஆட்சியாளர்கள்.
எல்லா நிகழ்வுகளையும் நீங்களும் டிவியில் பார்த்திருப்பீர்கள். செய்தித்தாள்களில் வாசித்திருப்பீர்கள். இரண்டு மாடி கட்டிடங்கள் வரை மூழ்கிய நிலையில், மிதக்கும் நகரமான வெனிஸை போன்ற ஓர் ஊரை அப்போது அடிக்கடி டிவியில் காட்டிக்கொண்டே இருந்தார்கள். நினைவிருக்கிறதா?
மக்கள், குடும்பம் குடும்பமாக படகுகளில் அகதிகளாக வெளியேறிக் கொண்டே இருந்தார்களே. ஹெலிகாஃப்டர் வந்துதான் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்ற முடிந்ததே. தன்னார்வலர்களும், மீட்புப் படையினரும் பணிபுரிய மிகவும் சிரமப்பட்டார்களே. அந்த ஊர்தான் வரதராஜபுரம். நான் வசிக்கும் பகுதி.
தாம்பரத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம்தான். இயற்கை வனப்பு சூழ்ந்த பகுதி. கிணறு வெட்ட வேண்டாம். பள்ளம் தோண்டினாலே போதும். பத்தடியில் இளநீர் சுவையில் தெளிவான குடிநீர். சென்னை, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் என்று முக்கிய நகரங்களுக்கு மையத்தில் அமைந்திருக்கும் அழகான ஊர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இங்கே சல்லிசான விலைக்கு இரண்டு கிரவுண்டு நிலம் வாங்கிப் போட்டிருந்தார் அப்பா.
அண்ணனும், நானும் வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் வீடு கட்டினோம். பங்களா மாதிரி பெரிய வசதியான வீடு. அப்பாவுக்கு மழையை பிடிக்கும் என்பதால், வீட்டுக்குள்ளேயே மழை பெய்வதற்கு ஏதுவாக பழைய வீடுகள் பாணியில் வீட்டுக்கு நடுவே ஓர் அழகான முற்றம். வீட்டுக்கும் முன்பும் பின்புமாக பெரிய தோட்டம். நிறைய மரங்கள். அக்கம் பக்கம், சொந்தம் பந்தம், உற்றார் உறவினர் அத்தனை பேரும் மூக்குமேல் விரல்வைத்து ஆச்சரியப்படுமளவுக்கு அத்தனை அழகான வீடு. கூட்டுக் குடும்பமாய் அவ்வளவு சந்தோஷமாய் வாழ்ந்து வந்தோம்.
நாங்கள் கட்டியிருக்கும் வீடு கடல் மட்டத்துக்கு கீழே இருக்கிறது என்கிற புவியியல் உண்மையெல்லாம் அப்போது தெரியாது. ஒரு காலத்தில் இங்கே பிரும்மாண்டமான ஏரி இருந்தது. அந்த ஏரியின் நீர்ப்பாசனம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு உதவியது என்பதெல்லாம் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. அதையெல்லாம் யாராவது எடுத்துச் சொல்லியிருந்தாலும்கூட, வீடு கட்டும்போது எங்கள் தலையில் ஏறியிருக்காதுதான்.
2015ல் பெய்த மழைதான் இதையெல்லாம் நினைவுறுத்தியது.
அந்த டிசம்பர் ஒன்று நாள்ளிரவில் எங்கள் வீடே ஆற்றுக்கு மத்தியில் கட்டப்பட்டதை போன்று ஆனது. அழையா விருந்தாளியாக அடையாறு எங்கள் வரவேற்பறைக்குள் நுழைந்தது. குழந்தை குட்டிகளோடு மொட்டைமாடியில் குளிரில் விரைத்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு ஆறுதல்படுத்தகூட தெம்பில்லாமல் அச்சத்தோடு இருந்தோம். பசி மயக்கம் வேறு. யாராவது காப்பாற்ற வருவார்களா, உயிர் பிழைப்போமா என்கிற அச்சத்துடன் கழிந்த அந்த முழு இரவை எப்படிதான் அவ்வளவு சுலபமாக மறக்க முடியும்?
உடுத்திய உடையை தவிர வேறொன்றும் எங்கள் கைவசமில்லை. ஒரே இரவில் எல்லாம் இருந்தும் ஏதுமற்றவர்களாகிப் போனோம். குழந்தைகள், பெண்களோடு ஒரு வார காலம் அகதிகளாக தாம்பரத்தில் ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டோம். சாப்பாட்டுக்கு வரிசையில் நின்று தட்டேந்தினோம். அப்போது என் தம்பி மனைவி பச்சை உடம்புக்காரி. குழந்தை பிறந்து பதினைந்து நாட்கள்தான் ஆகியிருக்கும். அப்போது நாங்கள் அடைந்த மன உளைச்சலை இப்போது வார்த்தைகளில் முழுமையாக விவரிக்க முடியுமா என்பதே சந்தேகம்தான்.
இப்போது சொல்லுங்கள்.
மழை பெய்தால், நாங்கள் மயில் மாதிரி தோகை விரித்து மகிழவா முடியும்?
ஆனால்-
அப்பா அப்படியேதான் இருக்கிறார்.
சொல்லப்போனால், மயிலைவிட மகிழ்ச்சி அவருக்குதான்.
என் வாழ்நாளில் அப்பா, மழைக்காக எங்கும் ஒதுங்கியதில்லை. குடைபிடித்து நடந்ததில்லை. ரெயின்கோட் அணிந்ததில்லை.
“மழைன்னா நனையனும். எங்க ஊருலே அப்படிதான். ஆடு, மாடெல்லாம் குடை பிடிச்சி பார்த்திருக்கியா? அதென்னவோ தெரியலை. இந்த மெட்ராசுலேதான் அவனவன் மழையிலே நனையுறதுன்னாலே அப்படி அலறுறான். நனைஞ்சா காய்ச்சல் வரும்னு சொல்றான். தண்ணீதான் உலகத்தோட ஜீவன். அதுலே நனைஞ்சு காய்ச்சல் வருதுன்னா, நீ உன் உடம்பை பார்த்துக்கற லட்சணம் அப்படி” ஒவ்வொரு மழையின் போதும் இதுமாதிரி ஒவ்வொரு வியாக்கியானம் பேசுவார்.
அப்பாவுக்கு தர்மபுரி பக்கமாக மழையே பார்க்காத ஏதோ ஒரு வறண்ட ஊராம். அவருக்கு பத்து வயது இருக்கும்போது மிகப்பெரிய பஞ்சம் வந்ததாம். சுற்றுவட்டார மொத்தப் பகுதியுமே பாலைவனமாகி, பஞ்சம் பிழைக்க குடும்பம் குடும்பமாக இடம்பெயர்ந்தார்களாம். தன்னுடைய பால்ய வயது உறவுகளையும், நட்புகளையும் பிரிந்ததற்கு மழை பொய்த்ததே காரணம் என்பார். அதற்காக வெயிலையும் அவர் திட்டியதில்லை.
அப்படி இப்படி எப்படியோ படித்து சென்னைக்கு வந்தார். அரசு வேலையில் இணைந்தார். தன்னுடைய வேரை இங்கே உறுதியாக நிலைப்படுத்திக் கொண்டார்.
அக்னி வெயில் முடிந்தாலே போதும். அடிக்கடி அம்மாவிடம், “அடிவானம் கறுக்குற மாதிரியில்லே. இந்த வருஷம் சீக்கிரமே மழை வரப்போகுது” என்பார். மழை வர தாமதமானால் அவருக்கு இரத்த அழுத்தம் எகிறிவிடும். கடற்கரைக்கு போய் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போதுதான் அவரால் சமநிலைக்கு வரமுடியும். அவருடைய பழைய விஜய் சூப்பர் ஸ்கூட்டரின் ஸ்டெப்னியில் ‘மாமழை போற்றுதும்’ என்று பெயிண்டால் எழுதி வைத்திருப்பார். அப்படிப்பட்ட மழை வெறியர்.
அம்மாவுக்கும், அப்பாவுக்கும் கல்யாணம் ஆனதே ஐப்பசி மாதம்தான். அடைமழையில்தான் தாலி கட்டினார். முப்பத்து முக்கோடி தேவர்களும் மழையால் அட்சதை இட்டு எங்களை ஆசிர்வதித்தார்கள் என்று அடிக்கடி கல்யாணப் பெருமை பேசுவார்.
அவருக்கு ஐப்பசியில் முகூர்த்தம் அமைந்துவிட்டது என்கிற ஒரே காரணத்தால் எங்கள் வீட்டில் அத்தனை பேருக்கும் ஐப்பசியில்தான் கல்யாணம் என்பதில் பிடிவாதமாக இருந்து சாதித்தார்.
அப்பாவுடைய மழைக்காதலை அம்மா, திருமணமான சில காலத்திலேயே புரிந்து, அவருடைய அலட்டல்களை சகித்துக் கொண்டார். எங்களுக்குதான் கடுப்பு. “ஏம்பா, சிவாஜி மாதிரி ஓவர் ஆக்டிங் பண்றே..?” என்று நக்கலடிப்போம்.
சிறுவயதில் நாங்கள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருப்போம். மழை பெய்தால், “லீவு போட்டுட்டு மழையை ரசிங்கடா” என்பார். அப்போதெல்லாம் அப்பாவே லீவு போடச் சொல்கிறார் என்று மகிழ்ச்சியாகதான் இருந்தது.
ஆனால்-
முக்கியமான தேர்வுகள் வந்தபோதெல்லாம் கூட மழையென்றால், “எக்ஸாமெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். வர வர மழையை பார்க்கிறதே அபூர்வமாயிக்கிட்டிருக்கு. அதை ரசிக்காம படிப்பு என்ன வேண்டிக் கிடக்கு?” என்று அவர் கேட்டபோது எங்களுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.
அக்காவுக்கு காலேஜில் கடைசிநாள் தேர்வு. அன்று திடீரென கோடைமழை. அக்காவை, தேர்வெழுதப் போகக்கூடாது என்று சொல்லி அப்பா ஒரே அடம். இவர் வேற மாதிரி அப்பா என்பதை நாங்கள் உணர்ந்துதான் இருந்தோம். மழை பொழிந்தால் ‘மவுன ராகம்’ ரேவதி, ‘ஓஹோ.. மேகம் வந்ததே’ என்று ஆடிப்பாடினால் ரசிக்கலாம். பூர்ணம் விசுவநாதன் ஆடினால் சகிக்குமா?
எங்கள் அப்பா அப்படிதான் ஆடிக்கொண்டிருந்தார்.
நாங்கள் எல்லாம் காலேஜ், ஆபிஸ் என்று செட்டில் ஆகி, ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் அல்லல் பட்டுக் கொண்டிருந்தோம். அப்போதும்கூட மழை வந்தால் குடும்பமாக உட்கார்ந்து கும்மியடித்து கொண்டாட வேண்டும் என்கிற அப்பாவின் அன்புக்கட்டளை எங்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியது. “இதே ரோதனையாப் போச்சிப்பா” என்று சலித்துக்கொண்டே அவரை கடந்துச் செல்வோம்.
அப்பா டிவியில் செய்திகள் மட்டும்தான் பார்ப்பார். குறிப்பாக செய்திகளின் இறுதியில் இடம்பெறும் வானிலை தகவல்கள். செய்தித்தாளிலும்கூட மழை பற்றிய தகவல்களைதான் தேடி வாசிப்பார். நம்மூர் மழை மட்டுமல்ல. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் பொழிந்த மழை பற்றியெல்லாம் அப்டேட்டாக இருப்பார். நுங்கம்பாக்கம் வானிலைமைய இயக்குநர் ரமணனுக்கு மனதளவில் ரசிகர் மன்றமே வைத்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அப்பா ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்ததுமே சொன்னார்.
“நானும், உங்கம்மாவும் மேகாலயாவுக்கு டூர் போகப் போறோம்”
எங்களுக்கு நினைவு தெரிந்ததில் இருந்து அவர்கள் இருவரும் வெளியூருக்கு எங்கேயும் போனதாக நினைவே இல்லை. எப்போதும் அப்பாவுக்கு ஆபிஸ், அம்மாவுக்கு வீட்டு வேலையென்றே எங்களுக்காக தங்கள் இளமைக்காலம் மொத்தத்தையும் தொலைத்தவர்கள்.
ஆச்சரியமாக கேட்டேன். “நீங்க டூர் போறது நல்ல விஷயம்பா. ஆனா, காசி ராமேஸ்வரம்னு சொன்னாகூட ஓக்கே. அதென்ன மேகாலயா?”
“அங்கேதாண்டா சிரபூஞ்சி இருக்கு. உலகத்துலே அதிகம் மழை பொழிகிற ஊர். மனுஷனா பொறந்த ஒவ்வொருத்தனும் தரிசிக்க வேண்டிய புண்ணியஸ்தலமே அதுதாண்டா”
இதற்கும் மேல் அவரைப் பற்றி என்னதான் சொல்ல? அந்த கொடூரமான டிசம்பர் மழைக்கு பிறகும்கூட மழைமீதான நேசம் அவருக்கு எள்ளளவும் குறையவில்லை என்பதுதான் எங்களுக்கு அதிர்ச்சி. மாறாக நாங்களெல்லாம் மழையை தெலுங்கு சினிமா வில்லனை மாதிரி வெறுக்க ஆரம்பித்து விட்டோம்.
அந்த மழையோடு சரி.
அதன்பிறகு எங்களுடைய வேண்டுதலை ஏற்றோ என்னவோ வருணபகவான், நீண்ட விடுமுறைக்கு போய்விட்டார். அதற்கு அடுத்த ஆண்டு வந்த வார்தா பெரும்புயலிலும்கூட காற்றுதான் கோரத்தாண்டவம் ஆடி லட்சக்கணக்கான மரங்களை பலி கொண்டதே தவிர்த்து, மழையோ வெள்ளமோ இல்லாமல் நாங்கள் மீண்டும் தண்ணிக்கு சிங்கி அடிக்க ஆரம்பித்தோம்.
அப்பாதான் தவிக்க ஆரம்பித்தார். பால்கனியில் ஈஸிசேரில் அமர்ந்துக் கொண்டு அடிவானத்தை பார்த்துக்கொண்டே இருப்பார். கையை நெற்றி மீது வைத்து கண்சுருக்கிப் பார்த்து, “வானம் இருட்டற மாதிரி இல்லே?” என்பார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லே. சாயங்காலம் சூரியன் மறையுறப்போ எப்பவுமே கருப்பு மேகம்தான் இருக்கும்” என்று சொன்னால் முகம் வாடி அப்படியே உட்கார்ந்து விடுவார்.
திடீரென இரவில் எழுந்து தோட்டத்துக்கு வருவார். இப்படி அப்படியுமாக மெதுவாக தளர்ந்த நடை போடுவார். யாராவது யதேச்சையாக எழுந்து அவரைப் பார்த்துக் கேட்டால், “லேசா ஈரக்காத்து அடிக்குது. மண்வாடையும் வீசுது. அனேகமா காஞ்சிவரத்துக்கு அந்தப் பக்கம் மழைன்னு நெனைக்கிறேன்” என்பார்.
அய்யோடா என்றிருக்கும்.
ஒருமுறை அம்மா என்னிடம் சொன்னார். “ப்ளீஸ்டா. அப்பாவை கோச்சுக்காதீங்க. நீங்கள்லாம் மழையை தொல்லையா பார்க்குறீங்க. அவருக்கு அதுதான் எப்பவும் கனவு. சின்ன வயசுலே மழை இல்லாததாலே சொந்த மண்ணை பிரிஞ்ச மனுசண்டா”
அப்பாவை அம்மா புரிந்துக் கொண்ட மாதிரி நாங்கள் இருவரையுமே புரிந்துக் கொண்டுதான் இருந்தோம். இருந்தாலும் பதில் சொன்னேன்.
“அம்மா, தாம்பரத்துலே அனாதைங்க மாதிரி நம்ம குடும்பம் தவிச்ச அந்த வாரத்தை நினைச்சுப் பாரு. புதுசா பொறந்த உன் பேத்தியை வெச்சுக்கிட்டு நீ எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு. எல்லாம் இந்த மழையாலேதானே?”
“நம்ம நியாயம் நமக்கு. அவரு நியாயம் அவருக்கு” அப்பாவை விட்டுக் கொடுக்காமல்தான் அம்மா சொன்னார்.
மழையை நாம் நேசித்தாலும் சரி. வெறுத்தாலும் சரி. எவ்வித பாகுபாடு பார்க்காமல் எல்லோருக்கும் பொதுவாகதான் பெய்கிறது மழை. பருவம் தப்புவதும் அப்படிதான். இயற்கையின் புதிர் விளையாட்டுக்கு அற்பப் பிறவிகளான மனிதர்களிடம்தான் விடை ஏது?
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே வரலாறு காணாத வெயிலில் வாடினோம். “மழை பெய்ஞ்சித் தொலைக்கக் கூடாதா?” என்று வரதராஜபுரத்து ஆட்களே ஏங்குமளவுக்கு அப்படியொரு அசுர வெயில்.
அப்பா மட்டும் குஷியானார். “இப்படி வெயில் காட்டு காட்டுன்னு காட்டிச்சின்னா, அந்த வருஷம் கண்டிப்பா அடைமழை நிச்சயம். 1967லே இப்படிதான் ஆச்சு. அப்போ அடிச்ச புயல்லே ஒரு கப்பலு, மெரீனா பீச்சுலே கரை ஒதுங்கி மாசக்கணக்குலே கிடந்துச்சி. நாங்கள்லாம் ஆதம்பாக்கத்துலே இருந்து நடந்தே போயி பார்த்தோம்”
தேவுடா. அப்பா இப்போது வெயிலையும் ரசிக்க ஆரம்பித்து விட்டாரா? ஒவ்வொரு வருட மழைக்கும் அவரிடம் ஒவ்வொரு கதை உண்டு. அவரது அனுபவ ஞானம் கொண்டு, இந்தாண்டு பெருமழை நிச்சயம் என்று கணித்தார்.
போனமாதம் காலையில் கடுமையான வெயிலில் கார் ஓட்டிக் கொண்டிருந்தேன். அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நேரம் தப்பி செம டென்ஷன். நந்தனம் சிக்னலில் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடையாததால் பேரணி மாதிரி டிராஃபிக் ஜாம்.
திடீரென செல்போன் கிணுகிணுத்தது. மனைவி calling. நேரம் கெட்ட நேரத்தில் அவரிடமிருந்து போன் வராது. ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே தொடர்பு கொள்வார்.
ஸ்பீக்கரை போட்டு “ஹலோ..” சொன்னேன்.
“மாமாவுக்கு திடீர்னு நெஞ்சுவலிங்க. இந்து மிஷன் ஆஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க”
பதில்கூட சொல்லாமல் போனை கட் செய்தேன். வண்டியை ‘யூ டர்ன்’ எடுக்கவே அரை மணி நேரம் ஆகிவிட்டது. என் அவசரம் மற்றவர்களுக்கு எப்படி தெரியும். நான் தாம்பரம் போய் சேர்ந்தபோது எல்லாமே முடிந்துவிட்டது.
அப்பா, சில நாட்களாகவே சோர்வாகதான் தெரிந்தார். சர்க்கரை, இரத்த அழுத்தம் என்றெல்லாம் அவருக்கு உடல்ரீதியாக பிரச்சினைகள் இருந்தாலும் இவ்வளவு சீக்கிரமாக விடைபெற்றுக் கொள்வார் என்று யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.
அம்மா, அழக்கூட மறந்து உறைந்துப் போயிருந்தார். ஐம்பது ஆண்டுகால தாம்பத்யம் அவருக்கு எவ்வளவோ நல்ல நினைவுகளை பரிசளித்துவிட்டுதான் சென்றிருக்கிறது. அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என்று குடும்பமே கதறிக் கொண்டிருக்க எனக்கு மட்டும் ஏனோ அழுகையே வரவில்லை.
அப்பாவுக்கு இறுதியஞ்சலி செலுத்த வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாமே அவரை மழையோடு தொடர்பு படுத்திதான் நினைவு கூர்ந்தார்கள்.
“மழைன்னா மனுஷனுக்கு அவ்வளவு உசுரு”
“மழை பெய்யுறப்போ எல்லாம் உங்கப்பாதாம்பா நினைவுக்கு வருவாரு”
அப்பாவை வெறித்து பார்த்துக்கொண்டே இருந்தன். கொஞ்சம் நேரம் ஒதுக்கி தினமும் அவரோடு இன்னும் கொஞ்சம் நெருங்கி பேசிப்பழகி இருக்கலாமோ என்று தோன்றியது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எங்களோடு மழையில் அவர் போட்ட ஆட்டமெல்லாம் நினைவுக்கு வந்தது. அவர் கடைசிவரை அப்படியேதான் இருந்தார். நாங்கள்தான் வளர்ந்ததும் மழையிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டோம்.
சுட்டெரிக்கும் வெயிலில்தான் அப்பா இறுதி யாத்திரை சென்றார். எந்த வெயிலால் சொந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்தாரோ, அதே வெயில்தான் கடைசிவரை அவரோடு வந்துக்கொண்டே இருந்தது.
இடுகாட்டில் நடக்க வேண்டிய சடங்கெல்லாம் நடந்து முடிந்தது. அண்ணன் கொள்ளி வைக்கப் போகிறான். மூடியிருந்த விறகு விலக்கி, அப்பாவின் முகத்தை இறுதியாக பார்க்கிறேன். விபூதி பூசியிருந்த அவரது நெற்றியின் மீது சட்டென்று ஒரு பொட்டு ஈரம். வானத்தைப் பார்த்தேன். இருள் மேகம் எங்கள் தலைக்கு மேலே கூடியிருந்தது. குளிரான பெரிய மழைத்துளிகள் சடசடவென்று கொட்டியது. நான் முதன்முதலாக பெருங்குரலெடுத்து வெடித்து அழ ஆரம்பித்தேன்.
(நன்றி : தினகரன் தீபாவளிமலர்)
ஓவியம் : ஸ்யாம்
3 நவம்பர், 2017
16 ஆகஸ்ட், 2017
படம் வரைந்து பாகம் குறித்தலும் படமெடுத்து பாடம் நடத்துதலும்!
முன்குறிப்பு : ‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. என் பால்ய அனுபவங்களில் இருந்து வந்தடைந்திருக்கும் தரிசனம் இது.
வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட கோலங்களுமே ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ படங்களில் காட்சிப்படுத்தப் படுகின்றன. மாறாக காட்சியையோ, கோலத்தையோ காணாத வயதுக்கு வாராதோர்தான் வயதுக்கு வந்தோருக்கான படங்களை காண்பதற்கான மனப்பாங்கு கொண்டவர்களாக அமைந்திருக்கிறார்கள். காணவேண்டிய தேவையும் அவர்களுக்கே இயல்பாய் ஏற்படுகிறது.
‘துண்டு நிச்சயம் உண்டு’ என்கிற முன்முடிவோடே பால்யத்தை ஒட்டிவாழும் பார்வையாளர்கள் இம்மாதிரி படங்களுக்கு அரங்கம் முன்பாக ஆவலோடு குழுமுகிறார்கள். மீசைக்கு கீழே சில அங்குல மயிர் இல்லாவிட்டாலும், இருக்கையை நிரப்ப ஆள்வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர்களும் சட்டத்துக்கு விரோதமாக திரையரங்கு பணியாளர்களால் உள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
வயதுக்கு வந்தோருக்கு மட்டும் படங்கள், வயதுக்கு வாராதோருக்கு புரியக்கூடிய அளவிலான மேலோட்டமான பாணியில் எடுக்கப்பட்டாலும், முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கான திரட்சியான காட்சிகளோடு மேற்கத்தியப் பாணி திரைப்படமாக்கலை மேற்குத் தொடர்ச்சி மலை வாசனையோடு தருவது வாடிக்கை.
நிற்க.
அடிப்படையில் பாலியல் பசியை பேசினாலும், பருவப் பசிக்கு தீனி போட்டாலும் வயதுக்கு வந்தோருக்கான படங்கள் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமானது அல்ல என்பதே என் துணிபு.
சரி, விமர்சனத்துக்குள் நுழைவோம்.
* * *
நான்கு இளைஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிறது. அவனுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. இதுவே அவர்கள் இருவருக்குமான ஆண் x பெண் முரணை ஏற்படுத்துகிறது.
தன்னுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்பது ஒருவகையில் அவனுக்கு மகிழ்வையும் தருகிறது. இரவு வேளைகளில் மது அருந்திவிட்டு, அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் இல்லம் திரும்புகிறான். இதனால் இரவில் அவன் செய்யவேண்டிய அடிப்படை வேலைகளை செய்ய முடியாமல் போகிறது.
புதியதாக மணம் ஆன ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான இந்த அகசிக்கல் பாலியல் அங்கதச்சுவையோடு நீலமாக காட்சிப்படுத்தப் படுகிறது. இருவருக்குமான ஊடல் கூடலை நோக்கிச் செல்லாதவகையில் திரைக்கதை புதுமையான உத்தியில் இயக்குநர் சாஜனால் கையாளப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வயதுக்கு வாரா ரசிக மீன்குஞ்சுகளுக்கு தூண்டிலில் போடப்படும் மண்புழு.
* * *
வனப்பு வாரியிறைக்கப்பட்ட பேரிளம்பெண். அவளது உடல் கட்டோடு குழலாட ஆடவென்று கச்சிதமாக இருக்கிறது. கணவன் அயல்நாட்டில் பொருள் ஈட்டுகிறான். இப்பெண்ணுக்கு பக்கத்து இல்லத்தில் வசிக்கக்கூடிய கட்டிளங்காளை ஒருவன் தினசரி அதிகாலை உடற்பயிற்சி செய்வது வழக்கம். காம்பவுண்டு தாண்டி கட்டிளங்காளை. இங்கே காமப்பசி அடங்கா காரிகை.
அந்த பேரிளம்பெண்ணின் காமம் கலங்கரை விளக்க ஒளியாய் காளையை எட்டுகிறது. கண்கூசும் காமவொளியை தாங்கவொண்ணா துயரம் கொண்டவனாய், விளக்கை அணைக்க காம்பவுண்டு தாண்டி வருகிறான். அணைக்க வேண்டியது விளக்கையல்ல. விளக்கு ஏந்திய மங்கையை என்று உணர்கிறான்.
காமச்சுவையில் இருவரும் கரைபுரண்டு ஓடுகிறார்கள். சலிக்க சலிக்க காமம். விடிய விடிய ஹோமம். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்கிற மரபான பாலியல் செயல்பாடுகளில் மனதை வசம் இழக்கிறார்கள் இருவரும்.
இந்த காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் நேர்த்தியான ஒளியமைப்பும், படத்தொகுப்பாளரின் தாராள மனசும் பார்வையாளர்களுக்கு ஓர் ஐரோப்பிய திரைப்படத்தை காணும் அற்புத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.
* * *
போதையிலே சுகம் காண்கிறான் மாணவன் ஒருவன். ஆரம்பத்தில் விளையாட்டாக பீர் என்கிற மதுபானத்தை சுவைக்கிறான். அதிலிருந்து சற்று முன்னேறி பிராந்தி, ரம் என்று ஐரோப்பிய பானங்களை பதம் பார்க்கிறான்.
ஒருக்கட்டத்தில் பானங்கள் பானகம் மாதிரி இனிக்கிறது. அவனது தேவை, மேலும் போதை மேலும் மயக்கம். கஞ்சா புகைக்கிறான். அந்த போதையும் போதாமல் பாலியல் தொழிலாளிகளை நாடுகிறான். போதைகளில் சிறந்தது போகம் என்று உணர்கிறான்.
* * *
மூன்று வெவ்வேறு கிளைகளாக விரிந்த இந்த சிறுகதையாடல்களை கடைசியாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனைக் காட்சியை நயமாக சேர்த்து பெருங்கதையாடலாக மாற்றுகிறார் இயக்குநர் சாஜன். அவரை எவ்வளவு விரித்துப் பாராட்டினாலும் தகும்.
முதல் கதையில் திருப்தியடையாத புதுமனைவி, கணவனின் நண்பர்களில் ஒருவனோடு கூடுகிறாள். இந்த காட்சி பார்வையாளனுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை தருவதோடு வயதுக்கு வராத பார்வையாளர்கள் எதிர்காலத்தில் வேலை செய்யாவிட்டால் என்னவாகும் என்கிற படிப்பினையை பெறக்கூடிய பாடத்தையும் வழங்குகிறது.
இரண்டாவது கதையில், பக்கத்துவீட்டு பாலகனோடு பந்து விளையாடும் பெண், அற்பமான பாலியல் தேவைக்காக அற்புதமான இல்வாழ்க்கையை இழப்பதாக கதையின் போக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது.
மூன்றாவது கதையில் போதைக்கு பாதை தேடிய மாணவன், பாதை தவறி பல்லாவரத்தில் பாக்கு போட்டுக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவு.
* * *
‘மது, மங்கை, மயக்கம்’ என்கிற இத்திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் சுட்டுவதை போல வயதுக்கு வந்தோருக்கான பாலியல் படம் மட்டுமல்ல. பாலியலை மிகைபுனைவாக கருதும் பாலகர்களுக்கான படமும்தான். எதிர்பாலினத்தவரான பெண்களிடம் என்ன இருக்கிறது என்று அறிய ஆர்வமாக முற்படும் ஆண்களுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. ஆண்களிடம் என்ன இருக்கிறது என்பதே ஆண்களுக்கு தெரியாத நம் சமகால சூழலில், ஆண் பெண் இருவரிடமும் என்னென்ன இருக்கிறது என்று படம் வரைந்து பாகம் குறிக்க முற்பட்ட இயக்குநரின் முயற்சி துணிச்சலான முயற்சி.
முதிர்ச்சியான பார்வையாளன் இம்மாதிரி படங்களில் அழகியல் பாடம் கற்பான். ஐரோப்பிய புது அலை திரைப்படங்களில் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் உலகம் முழுக்க செய்தது இதைதான். ஆட்டுமந்தை மூளை கொண்டவர்களோ ‘துண்டு’ போடசொல்லி அரங்கில் விசில் அடித்து கலாட்டா செய்வார்கள். யார் யாருக்கு எது வேண்டுமோ, அவரவருக்கு அது அது கிட்டட்டும்.
வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட கோலங்களுமே ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ படங்களில் காட்சிப்படுத்தப் படுகின்றன. மாறாக காட்சியையோ, கோலத்தையோ காணாத வயதுக்கு வாராதோர்தான் வயதுக்கு வந்தோருக்கான படங்களை காண்பதற்கான மனப்பாங்கு கொண்டவர்களாக அமைந்திருக்கிறார்கள். காணவேண்டிய தேவையும் அவர்களுக்கே இயல்பாய் ஏற்படுகிறது.
‘துண்டு நிச்சயம் உண்டு’ என்கிற முன்முடிவோடே பால்யத்தை ஒட்டிவாழும் பார்வையாளர்கள் இம்மாதிரி படங்களுக்கு அரங்கம் முன்பாக ஆவலோடு குழுமுகிறார்கள். மீசைக்கு கீழே சில அங்குல மயிர் இல்லாவிட்டாலும், இருக்கையை நிரப்ப ஆள்வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர்களும் சட்டத்துக்கு விரோதமாக திரையரங்கு பணியாளர்களால் உள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
வயதுக்கு வந்தோருக்கு மட்டும் படங்கள், வயதுக்கு வாராதோருக்கு புரியக்கூடிய அளவிலான மேலோட்டமான பாணியில் எடுக்கப்பட்டாலும், முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கான திரட்சியான காட்சிகளோடு மேற்கத்தியப் பாணி திரைப்படமாக்கலை மேற்குத் தொடர்ச்சி மலை வாசனையோடு தருவது வாடிக்கை.
நிற்க.
அடிப்படையில் பாலியல் பசியை பேசினாலும், பருவப் பசிக்கு தீனி போட்டாலும் வயதுக்கு வந்தோருக்கான படங்கள் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமானது அல்ல என்பதே என் துணிபு.
சரி, விமர்சனத்துக்குள் நுழைவோம்.
* * *
நான்கு இளைஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிறது. அவனுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. இதுவே அவர்கள் இருவருக்குமான ஆண் x பெண் முரணை ஏற்படுத்துகிறது.
தன்னுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்பது ஒருவகையில் அவனுக்கு மகிழ்வையும் தருகிறது. இரவு வேளைகளில் மது அருந்திவிட்டு, அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் இல்லம் திரும்புகிறான். இதனால் இரவில் அவன் செய்யவேண்டிய அடிப்படை வேலைகளை செய்ய முடியாமல் போகிறது.
புதியதாக மணம் ஆன ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான இந்த அகசிக்கல் பாலியல் அங்கதச்சுவையோடு நீலமாக காட்சிப்படுத்தப் படுகிறது. இருவருக்குமான ஊடல் கூடலை நோக்கிச் செல்லாதவகையில் திரைக்கதை புதுமையான உத்தியில் இயக்குநர் சாஜனால் கையாளப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வயதுக்கு வாரா ரசிக மீன்குஞ்சுகளுக்கு தூண்டிலில் போடப்படும் மண்புழு.
* * *
வனப்பு வாரியிறைக்கப்பட்ட பேரிளம்பெண். அவளது உடல் கட்டோடு குழலாட ஆடவென்று கச்சிதமாக இருக்கிறது. கணவன் அயல்நாட்டில் பொருள் ஈட்டுகிறான். இப்பெண்ணுக்கு பக்கத்து இல்லத்தில் வசிக்கக்கூடிய கட்டிளங்காளை ஒருவன் தினசரி அதிகாலை உடற்பயிற்சி செய்வது வழக்கம். காம்பவுண்டு தாண்டி கட்டிளங்காளை. இங்கே காமப்பசி அடங்கா காரிகை.
அந்த பேரிளம்பெண்ணின் காமம் கலங்கரை விளக்க ஒளியாய் காளையை எட்டுகிறது. கண்கூசும் காமவொளியை தாங்கவொண்ணா துயரம் கொண்டவனாய், விளக்கை அணைக்க காம்பவுண்டு தாண்டி வருகிறான். அணைக்க வேண்டியது விளக்கையல்ல. விளக்கு ஏந்திய மங்கையை என்று உணர்கிறான்.
காமச்சுவையில் இருவரும் கரைபுரண்டு ஓடுகிறார்கள். சலிக்க சலிக்க காமம். விடிய விடிய ஹோமம். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்கிற மரபான பாலியல் செயல்பாடுகளில் மனதை வசம் இழக்கிறார்கள் இருவரும்.
இந்த காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் நேர்த்தியான ஒளியமைப்பும், படத்தொகுப்பாளரின் தாராள மனசும் பார்வையாளர்களுக்கு ஓர் ஐரோப்பிய திரைப்படத்தை காணும் அற்புத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.
* * *
போதையிலே சுகம் காண்கிறான் மாணவன் ஒருவன். ஆரம்பத்தில் விளையாட்டாக பீர் என்கிற மதுபானத்தை சுவைக்கிறான். அதிலிருந்து சற்று முன்னேறி பிராந்தி, ரம் என்று ஐரோப்பிய பானங்களை பதம் பார்க்கிறான்.
ஒருக்கட்டத்தில் பானங்கள் பானகம் மாதிரி இனிக்கிறது. அவனது தேவை, மேலும் போதை மேலும் மயக்கம். கஞ்சா புகைக்கிறான். அந்த போதையும் போதாமல் பாலியல் தொழிலாளிகளை நாடுகிறான். போதைகளில் சிறந்தது போகம் என்று உணர்கிறான்.
* * *
மூன்று வெவ்வேறு கிளைகளாக விரிந்த இந்த சிறுகதையாடல்களை கடைசியாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனைக் காட்சியை நயமாக சேர்த்து பெருங்கதையாடலாக மாற்றுகிறார் இயக்குநர் சாஜன். அவரை எவ்வளவு விரித்துப் பாராட்டினாலும் தகும்.
முதல் கதையில் திருப்தியடையாத புதுமனைவி, கணவனின் நண்பர்களில் ஒருவனோடு கூடுகிறாள். இந்த காட்சி பார்வையாளனுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை தருவதோடு வயதுக்கு வராத பார்வையாளர்கள் எதிர்காலத்தில் வேலை செய்யாவிட்டால் என்னவாகும் என்கிற படிப்பினையை பெறக்கூடிய பாடத்தையும் வழங்குகிறது.
இரண்டாவது கதையில், பக்கத்துவீட்டு பாலகனோடு பந்து விளையாடும் பெண், அற்பமான பாலியல் தேவைக்காக அற்புதமான இல்வாழ்க்கையை இழப்பதாக கதையின் போக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது.
மூன்றாவது கதையில் போதைக்கு பாதை தேடிய மாணவன், பாதை தவறி பல்லாவரத்தில் பாக்கு போட்டுக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவு.
* * *
‘மது, மங்கை, மயக்கம்’ என்கிற இத்திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் சுட்டுவதை போல வயதுக்கு வந்தோருக்கான பாலியல் படம் மட்டுமல்ல. பாலியலை மிகைபுனைவாக கருதும் பாலகர்களுக்கான படமும்தான். எதிர்பாலினத்தவரான பெண்களிடம் என்ன இருக்கிறது என்று அறிய ஆர்வமாக முற்படும் ஆண்களுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. ஆண்களிடம் என்ன இருக்கிறது என்பதே ஆண்களுக்கு தெரியாத நம் சமகால சூழலில், ஆண் பெண் இருவரிடமும் என்னென்ன இருக்கிறது என்று படம் வரைந்து பாகம் குறிக்க முற்பட்ட இயக்குநரின் முயற்சி துணிச்சலான முயற்சி.
முதிர்ச்சியான பார்வையாளன் இம்மாதிரி படங்களில் அழகியல் பாடம் கற்பான். ஐரோப்பிய புது அலை திரைப்படங்களில் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் உலகம் முழுக்க செய்தது இதைதான். ஆட்டுமந்தை மூளை கொண்டவர்களோ ‘துண்டு’ போடசொல்லி அரங்கில் விசில் அடித்து கலாட்டா செய்வார்கள். யார் யாருக்கு எது வேண்டுமோ, அவரவருக்கு அது அது கிட்டட்டும்.
5 ஆகஸ்ட், 2017
சிவாஜி சிலை
ஜூலை 21, 2006.
அந்நாள் வரை ‘பிக்பாக்கெட்’ என்பது புனைவு என்று கருதிக் கொண்டிருந்தேன்.
சிறுவயதிலிருந்தே வெறித்தனமான எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதால் சிவாஜியை கொஞ்சம்கூட பிடிக்காது. சிவாஜி படங்கள் பார்ப்பதை புறக்கணிப்பது மட்டுமில்லாமல், சிவாஜிக்கு ரசிகர் என்று யாராவது தெரிந்தால் அவர்களையும் புறக்கணிக்குமளவுக்கு வெறித்தனம்.
அந்த பைத்தியம் தெளிந்தது ஜூலை 2001ல்.
அப்போது தி.நகரில் பாகிரதி அம்மாள் தெருவில் இருந்த ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தினமும் போக் ரோடு வழியாக சிவாஜி வீட்டை கடந்துதான் என்னுடைய டிவிஎஸ் சேம்ப் பயணிக்கும்.
ஆற்காடு சாலையை கடக்கும்போது ஆட்டோமேடிக்காக கன்னத்தில் போட்டுக் கொள்வேன். அந்த சாலையில்தான் எம்.ஜி.ஆர் வாழ்ந்தார். அவருடைய நினைவில்லம் அமைந்திருக்கிறது. இப்போதும் எங்கேயாவது எம்.ஜி.ஆர் படத்தையோ, சிலையையோ காணும்போது ஆட்டோமேடிக்காக கைகள் கன்னத்தில் போட்டுக் கொள்கின்றன. அதே நேரம் சிவாஜி வீட்டை ஒரு வெறுப்போடுதான் கடப்பேன். அங்கே கூடியிருக்கும் ரசிகர்கள் மெண்டல்கள் மாதிரிதான் எனக்கு தோன்றுவார்கள்.
சிவாஜி மறைந்த அன்று அந்த சாலையை கடக்கும்போதுதான் அனிச்சையாக கண்கள் கலங்கின. அன்று முழுக்க சிவாஜி பாடல்களை கேட்டு, அவர் குறித்த செய்தித் தொகுப்புகளை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருந்த ஒரு மகத்தான மேதையை இதுநாள் வரை அவமதித்துக் கொண்டிருந்திருக்கிறோமே என்று தோன்றியது. அதன் பிறகே தொடர்ச்சியாக சிவாஜி நடித்த படங்களை பார்த்து அவருடைய தன்னிகரற்ற மேதமையை உணர்ந்தேன்.
ஸ்டாப்.
சிவாஜி மறைந்ததில் தொடங்கி அவருக்கு மணிமண்டபம், சிலை என்று கோரிக்கைகள் அரசுக்கு தமிழர்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஏதேதோ காரணங்களால் சிவாஜி மீது அசூயை கொண்டிருந்த ஜெயலலிதா, அவற்றை கண்டுகொள்ளவே இல்லை.
தான் ஆட்சிக்கு வரும்போது சிவாஜிக்கு சிலை வைக்கப்படுமென்று கலைஞர் உறுதியளித்தார்.
சொன்னதை செய்பவர் ஆயிற்றே. 2006ல் ஆட்சிக்கு வந்ததுமே ஆளுநர் உரையில் சிவாஜி சிலையை அறிவித்தார். கடற்கரை சாலை ஐஜி அலுவலகத்துக்கு எதிரே சிவாஜிக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கினார். பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்ட சிலை போலவே கம்பீரமான வெண்கலசிலையும் சிற்பி நாகப்பாவால் செய்யப்பட்டது.
ஜூலை 21 அன்றுதான் சிவாஜி சிலை திறப்புவிழா. திடீரென்று யாரோ அல்லக்கைகள், அதிமுக தூண்டுதலால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சிலை திறப்புவிழாவுக்கு தடைவாங்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ‘தடையை உடைப்போம்’ என்று கர்ஜித்தார் கலைஞர். உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் போராடி, ஒருவழியாக மாலை மூன்று மணியளவில் அத்தனை பிரச்சினைகளையும் கட்டுக்கு கொண்டுவந்தார்கள்.
தமிழ் திரையுலகமே திரண்டு வந்து கலந்துகொள்ள போகிறது. திடீர் சிவாஜி ரசிகனாகிவிட்ட நான் அன்று காலையிலிருந்தே ஒருமாதிரி நெகிழ்வான நிலையில் இருந்தேன். விழாவுக்கு போயே ஆகவேண்டும். முதல் நாளே சிவாஜி சிலையை தரிசித்தே ஆகவேண்டும் என்று மனசு அடித்துக் கொண்டது. மனசுக்குள் நிரந்தரமாக சம்மணம் போட்டு அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் ரசிகன் மட்டும் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான்.
மாலை நெருங்க நெருங்க மனசு தாங்கவில்லை. இப்போது மயிலாப்பூரில்தான் அலுவலகம். அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விழா. ஹீரோஹோண்டாவை முறுக்கி கடற்கரைக்கு விட்டேன்.
மணல்பரப்புக்கு அந்தப் பக்கம் கடலலை. சாலையில் மனித அலை. நான் இருந்த இடத்தில் இருந்து மேடை சுமார் அரை கி.மீ. தூரத்தில் இருந்தது. அதற்கு மேல் ஒரு இன்ச் கூட முன்னேற முடியாத அளவுக்கு நெரிசல்.
ரஜினிகாந்த் பேசிக்கொண்டிருக்கிறார்.
“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே கடற்கரை சாலையில் இரண்டு இளைஞர்கள் நடந்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு இளைஞன் சொல்கிறான். ‘நண்பா, இதே சாலையில் எனக்கு சிலை வைக்குமளவுக்கு முன்னேற வேண்டும்’
அடுத்த இளைஞன் சொல்கிறான். ‘உனக்கு சிலை அமைக்கக்கூடிய அதிகாரத்தை நான் எட்ட வேண்டும்’
சிலையாக விரும்பியவர் சிவாஜி. சிலை அமைத்தவர் கலைஞர்”
திரண்டிருந்தவர்களின் கரவொலி கடலொலியை மிஞ்சியது. எனக்கு பின்னே ஒருவன் கூட்டத்தில் இடித்துக் கொண்டே இருந்தான். திரும்பி முறைக்க, “சாரி பாஸ்” என்றான். அவனை விட்டு விலகி இன்னும் சற்று முன்னேறினேன்.
ஏதோ குறைவது போல தோன்ற சட்டென்று பேண்ட் பின்பாக்கெட்டை தொட்டுப் பார்த்தபோதுதான் ‘பர்ஸை காணோம்’ என்று தெரிந்தது. இடித்துக் கொண்டிருந்தவன் உருவிவிட்டிருக்கிறான். இருபத்தைந்தாயிரம் பேர் கூடியிருந்த அந்த கூட்டத்தில் அவனை எங்கே தேடுவது, அவனது முகம்கூட நினைவில் இல்லை. பர்ஸில் நாலு கிரெடிட் கார்ட், ரெண்டு டெபிட் கார்ட், கொஞ்சம் பணம் இருந்தது.
இதற்கிடையே விழா முடிந்து விஐபிகள் கிளம்பத் தொடங்கினர். கூட்டம் அப்படியே வரிசை கட்டி சிலையை தரிசித்துவிட்டு கலையத் தொடங்கியது. இரவு 9.30 மணியளவில்தான் என்னால் நடிகர் திலகத்தை அருகே தரிசிக்க முடிந்தது. சிலர் கையிலேயே கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டிக் கொண்டிருந்தார்கள். கோயில் கொடிமரத்தின் முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுவது மாதிரி நிறைய பேர் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு நெடுஞ்சாண்கிடையை போட்டுவிட்டு, ஹீரோ ஹோண்டோ எங்கிருக்கிறது என்று தேடத் தொடங்கினேன். நல்லவேளை வண்டியை எவனும் லவட்டவில்லை.
அந்நாள் வரை ‘பிக்பாக்கெட்’ என்பது புனைவு என்று கருதிக் கொண்டிருந்தேன்.
சிறுவயதிலிருந்தே வெறித்தனமான எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதால் சிவாஜியை கொஞ்சம்கூட பிடிக்காது. சிவாஜி படங்கள் பார்ப்பதை புறக்கணிப்பது மட்டுமில்லாமல், சிவாஜிக்கு ரசிகர் என்று யாராவது தெரிந்தால் அவர்களையும் புறக்கணிக்குமளவுக்கு வெறித்தனம்.
அந்த பைத்தியம் தெளிந்தது ஜூலை 2001ல்.
அப்போது தி.நகரில் பாகிரதி அம்மாள் தெருவில் இருந்த ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தினமும் போக் ரோடு வழியாக சிவாஜி வீட்டை கடந்துதான் என்னுடைய டிவிஎஸ் சேம்ப் பயணிக்கும்.
ஆற்காடு சாலையை கடக்கும்போது ஆட்டோமேடிக்காக கன்னத்தில் போட்டுக் கொள்வேன். அந்த சாலையில்தான் எம்.ஜி.ஆர் வாழ்ந்தார். அவருடைய நினைவில்லம் அமைந்திருக்கிறது. இப்போதும் எங்கேயாவது எம்.ஜி.ஆர் படத்தையோ, சிலையையோ காணும்போது ஆட்டோமேடிக்காக கைகள் கன்னத்தில் போட்டுக் கொள்கின்றன. அதே நேரம் சிவாஜி வீட்டை ஒரு வெறுப்போடுதான் கடப்பேன். அங்கே கூடியிருக்கும் ரசிகர்கள் மெண்டல்கள் மாதிரிதான் எனக்கு தோன்றுவார்கள்.
சிவாஜி மறைந்த அன்று அந்த சாலையை கடக்கும்போதுதான் அனிச்சையாக கண்கள் கலங்கின. அன்று முழுக்க சிவாஜி பாடல்களை கேட்டு, அவர் குறித்த செய்தித் தொகுப்புகளை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருந்த ஒரு மகத்தான மேதையை இதுநாள் வரை அவமதித்துக் கொண்டிருந்திருக்கிறோமே என்று தோன்றியது. அதன் பிறகே தொடர்ச்சியாக சிவாஜி நடித்த படங்களை பார்த்து அவருடைய தன்னிகரற்ற மேதமையை உணர்ந்தேன்.
ஸ்டாப்.
சிவாஜி மறைந்ததில் தொடங்கி அவருக்கு மணிமண்டபம், சிலை என்று கோரிக்கைகள் அரசுக்கு தமிழர்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஏதேதோ காரணங்களால் சிவாஜி மீது அசூயை கொண்டிருந்த ஜெயலலிதா, அவற்றை கண்டுகொள்ளவே இல்லை.
தான் ஆட்சிக்கு வரும்போது சிவாஜிக்கு சிலை வைக்கப்படுமென்று கலைஞர் உறுதியளித்தார்.
சொன்னதை செய்பவர் ஆயிற்றே. 2006ல் ஆட்சிக்கு வந்ததுமே ஆளுநர் உரையில் சிவாஜி சிலையை அறிவித்தார். கடற்கரை சாலை ஐஜி அலுவலகத்துக்கு எதிரே சிவாஜிக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கினார். பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்ட சிலை போலவே கம்பீரமான வெண்கலசிலையும் சிற்பி நாகப்பாவால் செய்யப்பட்டது.
ஜூலை 21 அன்றுதான் சிவாஜி சிலை திறப்புவிழா. திடீரென்று யாரோ அல்லக்கைகள், அதிமுக தூண்டுதலால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சிலை திறப்புவிழாவுக்கு தடைவாங்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ‘தடையை உடைப்போம்’ என்று கர்ஜித்தார் கலைஞர். உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் போராடி, ஒருவழியாக மாலை மூன்று மணியளவில் அத்தனை பிரச்சினைகளையும் கட்டுக்கு கொண்டுவந்தார்கள்.
தமிழ் திரையுலகமே திரண்டு வந்து கலந்துகொள்ள போகிறது. திடீர் சிவாஜி ரசிகனாகிவிட்ட நான் அன்று காலையிலிருந்தே ஒருமாதிரி நெகிழ்வான நிலையில் இருந்தேன். விழாவுக்கு போயே ஆகவேண்டும். முதல் நாளே சிவாஜி சிலையை தரிசித்தே ஆகவேண்டும் என்று மனசு அடித்துக் கொண்டது. மனசுக்குள் நிரந்தரமாக சம்மணம் போட்டு அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் ரசிகன் மட்டும் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான்.
மாலை நெருங்க நெருங்க மனசு தாங்கவில்லை. இப்போது மயிலாப்பூரில்தான் அலுவலகம். அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விழா. ஹீரோஹோண்டாவை முறுக்கி கடற்கரைக்கு விட்டேன்.
மணல்பரப்புக்கு அந்தப் பக்கம் கடலலை. சாலையில் மனித அலை. நான் இருந்த இடத்தில் இருந்து மேடை சுமார் அரை கி.மீ. தூரத்தில் இருந்தது. அதற்கு மேல் ஒரு இன்ச் கூட முன்னேற முடியாத அளவுக்கு நெரிசல்.
ரஜினிகாந்த் பேசிக்கொண்டிருக்கிறார்.
“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே கடற்கரை சாலையில் இரண்டு இளைஞர்கள் நடந்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு இளைஞன் சொல்கிறான். ‘நண்பா, இதே சாலையில் எனக்கு சிலை வைக்குமளவுக்கு முன்னேற வேண்டும்’
அடுத்த இளைஞன் சொல்கிறான். ‘உனக்கு சிலை அமைக்கக்கூடிய அதிகாரத்தை நான் எட்ட வேண்டும்’
சிலையாக விரும்பியவர் சிவாஜி. சிலை அமைத்தவர் கலைஞர்”
திரண்டிருந்தவர்களின் கரவொலி கடலொலியை மிஞ்சியது. எனக்கு பின்னே ஒருவன் கூட்டத்தில் இடித்துக் கொண்டே இருந்தான். திரும்பி முறைக்க, “சாரி பாஸ்” என்றான். அவனை விட்டு விலகி இன்னும் சற்று முன்னேறினேன்.
ஏதோ குறைவது போல தோன்ற சட்டென்று பேண்ட் பின்பாக்கெட்டை தொட்டுப் பார்த்தபோதுதான் ‘பர்ஸை காணோம்’ என்று தெரிந்தது. இடித்துக் கொண்டிருந்தவன் உருவிவிட்டிருக்கிறான். இருபத்தைந்தாயிரம் பேர் கூடியிருந்த அந்த கூட்டத்தில் அவனை எங்கே தேடுவது, அவனது முகம்கூட நினைவில் இல்லை. பர்ஸில் நாலு கிரெடிட் கார்ட், ரெண்டு டெபிட் கார்ட், கொஞ்சம் பணம் இருந்தது.
இதற்கிடையே விழா முடிந்து விஐபிகள் கிளம்பத் தொடங்கினர். கூட்டம் அப்படியே வரிசை கட்டி சிலையை தரிசித்துவிட்டு கலையத் தொடங்கியது. இரவு 9.30 மணியளவில்தான் என்னால் நடிகர் திலகத்தை அருகே தரிசிக்க முடிந்தது. சிலர் கையிலேயே கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டிக் கொண்டிருந்தார்கள். கோயில் கொடிமரத்தின் முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுவது மாதிரி நிறைய பேர் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு நெடுஞ்சாண்கிடையை போட்டுவிட்டு, ஹீரோ ஹோண்டோ எங்கிருக்கிறது என்று தேடத் தொடங்கினேன். நல்லவேளை வண்டியை எவனும் லவட்டவில்லை.
22 ஜூலை, 2017
ரஜினி - கமல்

ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் தூளியில் தூங்கிக் கொண்டிருந்தேன். நினைவு தெரிந்தபோது இருவரும் எதிரெதிர் துருவமாக வளர்ந்து நிற்கிறார்கள். தனித்தனியாக தாங்கள் வளருவதற்காக இருவரும் சேர்ந்து பேசி எடுத்த முடிவு என்றார்கள்.
அவ்வப்போது இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று பத்திரிகைகள் பரபரப்பாக ஏதாவது எழுதும். ரஜினியோ, கமலோ அதை கண்டுகொண்டதே இல்லை.
பிறவி கமல் ரசிகனான எனக்கு ரஜினியோடு அவர் சேர்ந்து நடிப்பதில் விருப்பமே இருந்ததில்லை. ஏனெனில், ரஜினிக்கு நடிக்கவே தெரியாது என்று உறுதியாக இருந்தேன். தொண்ணூறுகளில் கொஞ்சம் ரசனை மேம்பட்ட காலத்தில் ரஜினியும் ஒரு முக்கியமான நடிகராக மனசுக்குள் உட்கார்ந்தார். இருவரது ஸ்டைலும் வேறு வேறு. இருவரையும் தனித்தனியாக தனித்தனி மனநிலைகளில் ரசிக்க முடியும் என்கிற முதிர்ச்சி ஏற்பட்டது. இருவரும் இணைந்து நடிக்கும் பட்சத்தில் எழுபதுகளின் இறுதியில் இருவரின் ரசிகர்களுக்கும் கிடைத்த ஃபுல் மீல்ஸ் விருந்து கிடைக்குமே என்று மனசு ஏங்கத் தொடங்கியது.
என்னுடைய தலைமுறைக்கு கிட்டாத விருந்து அது. இன்றுவரை எட்டா விருந்தும்கூட.
போகட்டும்.
ஓரளவுக்கு ‘விக்ரம் வேதா’ அந்த விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறது.
கமல்ஹாசன் – விக்ரமாதித்தன், ரஜினிகாந்த் – வேதாளம் என்கிற ஐடியாவே பரவசப்படுத்துகிறது. ரஜினியும், கமலும் இப்போதைக்கு இணைய சாத்தியமில்லை என்பதால் – இணைந்தாலும் வயது காரணமாக இருவருக்குமான பழைய கெமிஸ்ட்ரி உருவாக வாய்ப்பில்லை என்பதாலும் - நடிப்புப் பாணியில் அவர்களை முடிந்தளவுக்கு பிரதிபலிக்கக்கூடிய விஜய் சேதுபதி – மாதவன் இணையை தேர்ந்தெடுத்ததும்கூட நுணுக்கமான தேர்வுதான்.
ஆனால்-
இந்த அட்டகாசமான ‘ஐடியா’வை, ரசிகன் conceive செய்ய முடியாத அளவுக்கு கூடுதல் புத்திசாலித்தனமாக இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எடுத்துவிட்டதால், ஆஹாஓஹோவென்று கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய ‘விக்ரம் வேதா’, ஓக்கே என்கிற லெவலில் நின்றுவிட்டது.

படம் நெடுக விரவியிருக்கும் புத்திசாலித்தனமும், பர்ஃபெக்ட்னெஸ்சுமே வெகுஜன ரசிகர்களிடமிருந்து படத்தை அந்நியப்படுத்தக் கூடிய தன்மையை கொண்டிருக்கிறது. ஷங்கர் மாதிரி வெற்றிகரமான இயக்குநர்கள் வேண்டுமென்றே படத்தில் சில faultகளை, லாஜிக் மிஸ்டேக்குகளை திணிப்பதுண்டு. அவற்றை ரசிகனே கண்டுபிடித்து, இயக்குநரைவிட தான் புத்திசாலி என்று அவனுடைய ஈகோவை அவனே திருப்திபடுத்திக் கொள்வதற்காக செய்யப்படும் குறும்பு விளையாட்டு அது. ‘விக்ரம் வேதா’, அதிகபட்ச சாத்திய மிலிட்டரி ஒழுங்குடன் இருப்பதே, படத்தின் ஆகப்பெரிய பலவீனம்.
இயக்குநர்கள் அடிப்படையில் அறிவுஜீவிகளாக இருக்க வேண்டும். ரசிகர்களும் தங்களுடைய wave lengthக்கு இணையாக இருப்பார்கள் என்கிற அவர்களுடைய நம்பிக்கை பாராட்டத்தக்கதே. இருந்தாலும், ஓவியா ஒருவேளை அரசியலுக்கு வந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போடும் அளவுக்கே தமிழனின் அறிவு இயங்கிக் கொண்டிருக்கிறது. படம் முழுக்க ஏகத்துக்கும் இறைக்கப்பட்ட பாத்திரங்கள் ஒவ்வொன்றுமே, தத்தமது பங்கை பக்காவாக செய்திருப்பதால் பிரதானப் பாத்திரங்களான விக்ரம் – வேதா மீது குவிய வேண்டிய ஈர்ப்பு சிதறுகிறது. உதாரணத்துக்கு வரலட்சுமி பாத்திரம். அவர் இல்லாமலேயே இந்த கதையை சொல்லியிருக்க முடியும். இருப்பினும் அந்த பாத்திரத்தை வைத்துவிட்டதாலேயே அவருக்கென்று வலிந்து சில காட்சிகளை உருவாக்கி, அதை கதையோடு ஒட்டவைக்க முயற்சித்திருப்பது போன்றவை, பார்வையாளனுக்கு ஒரே டிக்கெட்டில் ஒன்பது படத்தை பார்ப்பது போன்ற ஆயாசத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு குற்றவாளியை ஒரு போலிஸ் அதிகாரி பிடிக்க முயற்சிக்கிறார். ஒவ்வொரு முறை மாட்டும்போதும் ஒரு புதிரை போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறான் குற்றவாளி. அந்த புதிர் முடிச்சுகளையெல்லாம் ஒவ்வொன்றாக அந்த அதிகாரி அவிழ்த்துக் கொண்டே வருவதுதான் கிளைமேக்ஸ். இதுதான் ஐடியா. இதைதான் புஷ்கர்-காயத்ரி எடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த கதையை சொல்வதற்கு காதை சுற்றி மூக்கை தொடுகிறார்கள்.
நான்லீனியர் வகை கதை சொல்லல், கேட்பவனுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடிய உத்தியாக இருக்க வேண்டுமே தவிர, அதுவே கதைக்கு கூடுதல் சுமையாக அமைந்துவிடக்கூடாது. ‘விக்ரம் வேதா’வில் அப்படி அமைந்துவிட்டது.
எல்லாவற்றையும் மீறி இது நல்ல படம். Hardcore சினிமா ரசிகன் ரசித்து ரசித்து சுவைக்க ஏராளமான ஐட்டங்களை கொண்டிருக்கும் படம். ‘ஆரண்ய காண்டம்’ மாதிரி ஃபேஸ்புக்கில் நீண்டகாலத்துக்கு பேசப்படும்.
19 ஜூலை, 2017
தேசத்துரோகிகளா ஜனரஞ்சக எழுத்தாளர்கள்?
“அந்த நாள் அப்படியே நினைவிருக்கிறது. 1985, ஜூன் 24. அன்று என் தந்தையார் மறைந்த நாள். அலுவலகத் தோழர்களோடு அமர்ந்து திவச உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
வாசலில் நிழலாடியது. கையில் ப்ரீப்கேஸ். கண்களில் கூலிங் கிளாஸ். சஃபாரி அணிந்த அவர், ‘ஐ ஆம் ராஜேஷ்குமார் ஃப்ரம் கோயமுத்தூர்’ என்று அறிமுகம் கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்.
அப்பாவே நேரில் வந்து ஆசிர்வதிப்பதாக நினைத்து சிலிர்த்தேன்!”
நெகிழ்ச்சியாக தன்னுடைய ஆரம்பகால நினைவுகளோடு பேச ஆரம்பிக்கிறார் ‘பாக்கெட் நாவல்’ ஜி.அசோகன். தமிழ் மாத நாவல் உலகின் முடிசூடா மன்னனாகிய இவர், கடந்த முப்பத்தி இரண்டு வருடங்களாக இத்துறையில் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார். ‘பாக்கெட் நாவல்’ பத்திரிகையின் 350வது இதழ் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டே நம்மிடம் பேசினார்.
“அப்பா, பத்திரிகையுலகில் மிகவும் பிரபலம். ‘வாலிபம்’ எல்.ஜி.ராஜ் என்றால் எல்லாருக்குமே தெரியும். ஃப்ரீலான்ஸ் ஓவியர். ‘ராணி’ பத்திரிகையின் முதல் அட்டைப்படத்தை வரைந்தவர் அவர்தான். நிறைய பத்திரிகைகள் நடத்தினார். அப்போதெல்லாம் பத்திரிகையாளன் வீட்டு அடுப்பில் பூனைகள் உறங்குவது வழக்கம்தான்.
நாங்கள் நான்கு சகோதரர்கள். மூன்று சகோதரிகள். அடிப்படைக் கல்வித் தகுதியான எஸ்.எஸ்.எல்.சி. படித்தால் போதும். மீதி விஷயங்களை வாழ்க்கை அனுபவத்தில்தான் கற்கவேண்டும் என்பது அப்பாவின் முடிவு.
அப்படிதான் நானும் அந்தகால எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு அப்பாவின் சீடனாக அவரது பத்திரிகை வேலைகளுக்கு துணையாக வந்துவிட்டேன். அவரது ஓவியங்களை எடுத்துக் கொண்டு பத்திரிகை அலுவலகங்களுக்கு போவதும், சன்மானம் வாங்கி வருவதுமாக இருந்ததால் இயல்பாகவே எனக்குள் பத்திரிகைகள் மீது ஈடுபாடு வந்துவிட்டது...” கண்சிமிட்டுகிறார் ஜி.அசோகன்.
“எப்போது ‘பாக்கெட் நாவல்’ ஆரம்பித்தீர்கள்?”
“1981ல் அப்பா காலமாகி விட்டார். அவர் நடத்திக் கொண்டிருந்த பத்திரிகையை நான் ஆசிரியராகி தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தேன். பத்திரிகை ஆசிரியராகும்போது என் வயது இருபதுதான். சில வருடங்களிலேயே மாத நாவல் நடத்த வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அப்பா, அப்போது நிறைய டைட்டில்ஸை ரெஜிஸ்டர் செய்து வைத்திருந்தார். அதில் ஒன்றுதான் ‘பாக்கெட் நாவல்’. 1971 வாக்கில் இந்த டைட்டிலில் சில மாத நாவல்களையும் கொண்டு வந்திருக்கிறார்.
அதையே மீண்டும் தூசு தட்ட முடிவெடுத்தேன். வெகுஜன இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த அத்தனை எழுத்தாளர்களுக்கும் கடிதம் எழுதி கதை கேட்டேன். மகரிஷி, வாஸந்தி, ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் உடனடியாக சம்மதம் தெரிவித்தனர். ராஜேஷ்குமார் நேராகவே சென்னைக்கு வந்துவிட்டார். சில எழுத்தாளர்களை அவரவர் வசிக்கும் ஊருக்கே போய் சந்தித்து கதை கேட்டேன். அதுவும் பட்டுக்கோட்டை பிரபாகரிடம் கதை வாங்க பட்டுக்கோட்டைக்கே போயிருந்தேன். பல எழுத்தாளர்கள் என்னை ஊக்குவித்தாலும், சிலரிடம் கசப்பான அனுபவங்களும் கிடைத்தன.

1985, நவம்பர் மாதம் ‘பாக்கெட் நாவல்’ முதல் இதழைக் கொண்டு வந்தேன். அப்போதிலிருந்து இன்றுவரை என்னை ஆதரிக்கும் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ், பாலகிருஷ்ணன்) ஆகியோரின் படத்தைதான் இந்த 350வது இதழின் அட்டைப்படமாக கொண்டு வந்திருக்கிறேன். இதைவிட வேறெப்படி என்னால் நன்றியை தெரிவிக்க முடியும்?”
“இத்தனை ஆண்டுகளாக ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வது போல சலிக்கவில்லையா?”
“எப்படி சலிக்கும்? விரும்பிதானே இந்த வேலையை செய்கிறேன். ‘பாக்கெட் நாவல்’ கொண்டு வந்த காலத்தில் சந்தையில் சுமார் ஐம்பத்தோரு மாத நாவல்கள் எனக்கு போட்டியாக இருந்தன. அவர்களோடு போட்டியிட்டு முன்னணிக்கு வந்ததே சுவாரஸ்யமான பயணம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். பிரபலமான எழுத்தாளர்களான பாலகுமாரன், சிவசங்கரி உள்ளிட்டோர் எனக்குதான் முதன்முதலாக மாத நாவல் எழுதினார்கள். அதற்கு முன்பாக அவர்கள் இதழ்களில் எழுதும் தொடர்கள்தான் புத்தகமாகும்.
‘பாக்கெட் நாவ’லைத் தொடர்ந்து ராஜேஷ்குமாருக்கு என்றே ‘கிரைம் நாவல்’, பட்டுக்கோட்டை பிரபாகருக்கு என்றே ‘எ நாவல் டைம்’ (பின்னர் பாலகுமாரன் இதில் எழுதினார்), ‘குடும்பநாவல்’ என்று வரிசையாக மாதநாவல்களை தொடங்கினேன்.
மாதநாவல்கள் மட்டுமின்றி வேலைவாய்ப்புச் செய்திகளை வழங்கும் ‘ஜாப் கைடுலைன்ஸ்’ மாத இதழ், பங்குமார்க்கெட் தகவல்களை தரும் ‘பங்கு மார்க்கெட்’ வார இதழ், ‘சினிமாலயா’ என்கிற சினிமா மாதப் பத்திரிகை, ‘சக்தி காமிக்ஸ்’ என்கிற காமிக்ஸ் பத்திரிகை, ‘சுபயோகம்’ என்கிற ஜோதிடப் பத்திரிகை என்று ஏகத்துக்கும் பத்திரிகைகள் நடத்தியிருக்கிறேன். என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுவாரஸ்யமாகவும் ஆக்கியவை நான் நடத்திய, நடத்தும் பத்திரிகைகள்தான்”
“மாத நாவல்களில் பெரிய வெற்றியை நீங்கள் எட்டியதற்கு என்ன காரணம்?”
“யார் நாவலை அனுப்பினாலும் வாசித்துவிட்டுதான் போடுவேன். பிரபலமான எழுத்தாளர் கொடுத்த கதையாக இருந்தாலும், வாசகர்களுக்கு தேவையான சுவாரஸ்யம் அதில் இல்லையென்றால், ‘வேறு கதை கொடுங்க’ என்று தைரியமாக கேட்பேன்.
எங்கள் பத்திரிகைகளை பெரிய பதவிகளில் இருப்பவர்கள் நிறைய பேர் வாசிக்கிறார்கள். குறிப்பாக காவல்துறையினர், நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள். கிரைம், அவங்க சப்ஜெக்ட் ஆச்சே? அதனால்தான் கதைத் தேர்வில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. அதுவே என்னுடைய வெற்றிக்கு காரணம்.
ஒன்று தெரியுமா? ‘வேறு நாவல் கொடுங்க’ என்று நான் சொன்னபோதும் கோபப்படாமல் வேறு கதையை பிரபலமான எழுத்தாளர்கள் கூட கொடுத்திருக்கிறார்கள். வாசகர் பார்வையிலேயே இப்படி நான் கேட்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த பரஸ்பர புரிதலும் நம்பிக்கையும்தான் 350 இதழ்களை நான் கொண்டு வரக் காரணம்”
“அடிக்கடி இலக்கிய நாவல்களையும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகிறீர்களே..?”
“எங்களுடைய ‘குடும்ப நாவல்’ வாசகர்களுக்கு இலக்கியமும் தேவைப்படுகிறது. சுந்தரராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’, க.நா.சு.வின் ‘பொய்த்தேவு’, ஹெப்சிபா ஜேசுதாஸனின் ‘புத்தம் வீடு’, அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ உள்ளிட்ட இலக்கிய நாவல்களை நாங்கள் வெளியிட்டதற்கு நல்ல வரவேற்பு. மூத்த படைப்பாளிகளுக்கு மரியாதை கொடுத்து சம்பந்தப்பட்ட படைப்புகளுக்கு அனுமதி வாங்கி, உரிய சன்மானம் கொடுத்துதான் வெளியிடுகிறோம்.
இதுதவிர கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’, நா.பார்த்தசாரதியின் ‘மணிபல்லவம்’ மாதிரியான க்ளாசிக்குகளையும் பாகம் பாகமாக மாதந்தோறும் வெளியிட்டிருக்கிறோம்.
வெகுஜன வாசகர்களுக்கு இலக்கியத்தின் மீதும் ஈடுபாடு உண்டு. இந்த உண்மையை இலக்கியத்தில் இருப்பவர்களாக சொல்லிக் கொள்பவர்கள்தான் உணராமல் இருக்கிறார்கள். வெகுஜன வாசகர்கள் மீது தீண்டாமை அனுசரிக்கிறார்கள்.
அதிலும் ஜனரஞ்சக எழுத்தாளர்களை இலக்கியவாதிகள், தேசத் துரோகிகளாகவே பார்க்கிறார்கள். இம்மாதிரி இடைவெளி தீவிர இலக்கியத்துக்கும், வெகுஜன இலக்கியத்துக்கும் ஏற்பட்டு விட்டதால்தான் புதியதாக வெகுஜன எழுத்தாளர்கள் உருவாவது குறைந்திருக்கிறது.
தீவிர இலக்கியம் என்னும் சீரிய இடத்துக்கு வாசகர்களை ஏற்றிவிடும் ஏணியே வெகுஜன இலக்கியம்தான். அது உதாசீனப்படுத்தப் பட்டால் எதிர்காலத்தில் இலக்கிய எழுத்தாளர்கள் மட்டுமே இருப்பார்கள். வாசகர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். அவரவர் எழுதியதை அவரவரே வாசித்துக் கொள்ள வேண்டியதுதான்”
“புதியதாக எழுத வருபவர்களில் நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள்..?”
“பெண் எழுத்தாளர்கள் அனைவரையுமே குறிப்பிடலாம். கீதாராணி, ஆர்.சுமதி, பரிமளா ராஜேந்திரன், ஜி.ஏ.பிரபா உள்ளிட்டோரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஆண் எழுத்தாளர்களில் ஜி.ஆர்.சுரேந்திரநாத், சுப.தனபால் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். தொடர்ச்சியாக எழுதியும் வருகிறார்கள்.
இன்னும் நிறைய புதிய எழுத்தாளர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். நிறைய கதைகள் பரிசீலனையில் இருக்கின்றன”
“இத்தனை ஆண்டுகளில் மறக்கமுடியாத அனுபவம் ஏதாவது..?”
“ஒருமுறை பட்டுக்கோட்டை பிரபாகரோடு சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரபாகரின் அப்பா எங்கள் இருவரையும் அழைத்து, ‘தொழில் ரீதியாக உங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால் இருந்துவிட்டு போகட்டும். ஆனால், நீங்கள் இருவருமே எனக்கு மகன்கள்தான். தனிப்பட்ட முறையில் உங்கள் நட்பு சிதையக் கூடாது’ என்று கூறி எங்களிடம் வாக்கு கேட்டார். அதிலிருந்து பிரபாகரிடம் மட்டுமல்ல. அத்தனை எழுத்தாளர்களிடமும் எதிர்ப்பார்ப்பில்லாத நட்பினை தொடர்கிறேன்”
“அடுத்து?”
“எங்கள் நாவல்களை இப்போது ‘நாவல் ஜங்ஷன்’ என்கிற இணையத்தளத்தில் பதிவேற்றுகிறோம். அயல்நாடுகளில் இருந்தெல்லாம் லட்சக்கணக்கானோர் வாசிக்கிறார்கள். குறிப்பாக பழைய கிளாசிக் நாவல்கள் இந்தத் தளத்தில் சக்கைப்போடு போடுகிறது.
நீண்டகாலமாகவே அரசியல் விமர்சன பத்திரிகை ஒன்று கொண்டுவரும் எண்ணம் இருக்கிறது. ‘கும்கி’ என்கிற மாத இதழின் மூலம் அந்த எண்ணம் விரைவில் நிறைவேறப் போகிறது.
பழம்பெரும் எழுத்தாளரும், காமிக்ஸ் உலகின் ஜாம்பவானுமாகிய முல்லை தங்கராசன் அவர்களின் அத்தனை படைப்புகளுக்கும் உரிமை வாங்கி வைத்திருக்கிறேன். வரிசையாக அவற்றை வெளியிடப் போகிறேன்”
(நன்றி : குங்குமம்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)