23 செப்டம்பர், 2008

பரபரப்பான பத்து நிமிடங்கள்!



ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே அந்த காட்சியை நம்மால் பார்த்திருக்க முடியும். பத்தே நிமிடங்களில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தை சென்னையில் பரபரப்பான பகல்வேளையில் கடப்பது சாத்தியமா? ஆம்புலன்சுக்கு கூட வழிவிட மனமில்லாத சென்னை வாகன ஓட்டிகளின் சவாலை ஒரு காவல்துறையின் ஊர்தி கடந்து சாதித்திருக்கிறது. சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் சாலைகளில் கடந்ததை பார்த்தவர்கள் மின்னலை கண்டதாக சொல்கிறார்கள். சபாஷ் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை. ஷூமேக்கர் வேகத்தில் ஒரு போலிஸ்காரர் காரை ஓட்டிச்செல்ல காரணம் என்னவாக இருக்கும்?

ஒரு உயிரைக் காக்க...

ஹிதேந்திரன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன். அப்பா அசோகனும், அம்மா புஷ்பாஞ்சலியும் மருத்துவர்கள். மகாபலிபுரத்துக்கு அருகில் இருக்கும் திருக்கழுக்குன்றத்தில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை அப்பாவின் பைக்கை எடுத்துக்கொண்டு நண்பனை சந்தித்து திரும்பியவனுக்கு எமன் ஒரு மீன்பாடி வண்டி ரூபத்தில் வந்தது. எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தில் தலையில் ஹிதேந்திரனுக்கு அடிபட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டவன் நினைவிழந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோவுக்கு கொண்டு செல்லப்பட்டான்.

பரிசோதித்த மருத்துவர்கள் கை விரித்தார்கள். ஹிதேந்திரனின் மூளை செயல் இழந்து விட்டது (பிரைன் டெத்). கிட்டத்தட்ட மரணம். இதயம் மட்டுமே துடிக்கும். பெற்றோரும் மருத்துவர்கள் ஆயிற்றே? பிரச்சினையை புரிந்துகொண்டார்கள். தன் மகனின் உடல் உறுப்புகளை தானமாக தர விரும்பினார்கள். கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்டன. புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா நகரில் இருக்கும் செரியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனுக்கு இதயம் அவசரமாக தேவைப்பட்டது. ஹிதேந்திரனின் இதயம் அகற்றப்பட்டு 20 நிமிடங்களில் அந்த சிறுவனுக்கு பொருத்தப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னையின் 20 கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் அடைவது சாத்தியமா?

மருத்துவமனையின் நிர்வாகம் சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையை அணுகினார்கள். பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொண்ட கூடுதல் ஆணையாளர் சுனில் உடனடியாக ஒரு உதவி ஆணையாளரை அனுப்பி வைத்து உதவுமாறு உத்தரவிட்டார். உதவி கமிஷனர் மனோகரன் இந்த ஆபரேஷனுக்கு திட்டமிட்டார். தன் சக அதிகாரிகளோடு தொடர்புகொண்டவர் குறிப்பிட்ட அந்த நேரத்துக்கு போக்குவரத்து சிக்கல் இல்லாதவாறு திட்டம் தீட்டினார். சிக்னல்கள் முழுக்க போலிசாரின் கட்டுப்பாட்டுக்கு சில நிமிடங்களில் வந்தது. ஒரு ஆம்புலன்ஸில் இதயத்தை எடுத்துச் செல்லவும், அந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிட ஆக்சண்ட் காரில் ஏ.சி. மனோகரனே முன்செல்லவும் திட்டம் தீட்டப்பட்டது.

ஹிதேந்திரனின் இதயத்தை ஒரு பெட்டியில் வைத்து படபடப்போடு மருத்துவர்கள் ஓடிவந்தார்கள். படபடப்பில் இருந்ததால் ஆம்புலன்ஸில் ஏறுவதற்கு பதிலாக ஏ.சி.யின் காரில் ஏறிவிட்டார்கள். ஒரு நொடியை கூட வீணடிக்க விரும்பாத ஏ.சி. தனது டிரைவரான கான்ஸ்டபிள் மோகனை புயல்வேகத்தில் ஓட்ட சொன்னார். ஏ.சி.யின் கார் இலகுவாக செல்ல வழியெங்கும் போக்குவரத்து சீர் செய்யப்பட்டிருந்தது. போனில் போலிஸ்காரர்களிடம் பேசியபடியே வழியில் இருந்த தடங்கல்களையெல்லாம் அகற்றினார் ஏ.சி.

மேட்லி ரோடு, தி.நகர் புதிய மேம்பாலம், லயோலா, சூளைமேடு, அமைந்தகரை, அண்ணா வளைவு வழியாக சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் மோகன் காரை விரட்டினார். திருப்பங்களில் கூட பிரேக்கில் மோகன் காலை வைக்கவில்லை. ஆக்ஸிலேட்டரில் வைத்த காலை எடுக்கவேயில்லை. பொதுவாக போக்குவரத்தில் இந்த தூரத்தை கடக்க சுமார் 50 நிமிடங்களில் இருந்து ஒன்றரை மணி நேரம் வரை பிடிக்கும். மருத்துவர்கள் கொடுத்திருந்த டார்கெட் 20 நிமிடம். பத்தே நிமிடங்களில் செரியன் மருத்துவமனையை ஏ.சி.யின் கார் அடைந்திருந்தது. ஆறு மணி நேரம் நடந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை சக்சஸ்!

இனி ஹிதேந்திரனின் இதயம் வாழும்!!

மருத்துவத்துறை காவல்துறையோடு இணைந்து இந்த சாதனையை செய்திருக்கிறது. சென்னையில் மருத்துவத்துறை சாதனைகள் புரிவது ஒன்றும் அதிசயமல்ல என்றாலும், காவல்துறையின் இந்த அதிரடி சாதனை சென்னை மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. வாய்ப்புகள் கிடைத்தால் எங்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்துக் காட்டிய சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு சல்யூட்.

5 செப்டம்பர், 2008

விகடன் தாத்தாவின் பரிசு



பரிசு பெறுவது என்றாலே மகிழ்ச்சி தானே? சிறுவயதில் எவ்வளவோ நாட்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வருவார், ஒரு பேனாவாவது தருவார் என்றெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன். கிறிஸ்துமஸ் தாத்தா ஏமாற்றியிருந்தாலும் இப்பொது விகடன் தாத்தா பரிசு தந்து இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறார். என் தாத்தா கூட எனக்கு பரிசு எதுவும் தந்ததில்லை. பரிசு என்பதை விட பலரும் உயர்வாக மதிக்கும் பத்திரிகையின் அங்கீகாரம் என்பது தான் எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது. இப்போது நான் கையில் கட்டிக்கொண்டிருக்கும் பாஸ்ட் ட்ராக் வாட்ச் விகடன் தாத்தா பரிசாக தந்தது. நேரம் பார்க்கும்போதெல்லாம் வாட்சுக்குள் இருந்து ‘நேரத்தை ஒழுங்காக பயன்படுத்து' என்று விகடன் தாத்தா அட்வைஸ் செய்வது போலவே இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஆனந்த விகடனில் கவிதை (?) போன்ற தோற்றமளிக்கும் எனது எழுத்து கால் பக்கத்துக்கும் குறைவான இடத்தில் வந்திருந்தது. புத்தகத்தை எடுத்துக் கொண்டு அக்கம்பக்கத்தில் இருந்த ஒவ்வொரு வீடாகப் போய் “விகடனில் என் எழுத்து வந்திருக்கிறது” என்று ஜம்பம் அடித்துக் கொண்டேன். வாசித்த சில பேர் பாராட்டுவதற்கு பதிலாக (என் குடும்ப உறுப்பினர்கள் உட்பட) நல்லவேளையாக காறி உமிழாமல் விட்டதே பெரிய விஷயமாக போய் விட்டது. ம்ம்ம்.. ஞானச்சூனியங்களுக்கு எங்கிருந்து பின்நவீனத்துவ இலக்கியங்கள் புரியப் போகிறது? அதன் பின்னர் அப்படி ஒரு கவிதை எழுதியதையே மறந்துவிட்டிருந்தேன்.

இன்று மதியம் சாப்பிட்டு முடித்தபிறகு கண்ணை திறந்துகொண்டே தூங்கிக்கொண்டிருந்த போது ஒரு போன். ”விகடனில் இருந்து ஜி.எம். சீனிவாசன் பேசுறேன். நீங்க ரெண்டு வாரத்துக்கு முன்னாடி யூத் செக்‌ஷனில் எழுதியிருந்த கவிதைக்கு ஒரு வாட்ச் ப்ரைஸ் கிடைச்சிருக்கு. ஆபிஸ் வந்து கலெக்ட் பண்ணிக்குங்க”. தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்தேன். இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையோடு மரியாதையாகவே “சரிங்க சார்.. ஓக்கே சார்.. ரொம்ப தேங்க்ஸ் சார்..” என்று சொல்லி போனை வைத்தேன். எல்லாரும் திட்டுன ஒரு கந்தாயத்துக்கு விகடனாவது, பரிசு கொடுப்பதாவது என்று நினைத்தேன். அதுவும் விகடனின் ஜி.எம். (மார்க்கெட்டிங்) போன் செய்து ஒரு சாதாரண வாசகரோடு பேசுவாரா?

இருந்தாலும் ஒரு நப்பாசை. விகடனோடு தொடர்புடைய வேறொரு நண்பருக்கு தொலைபேசி, ”விகடனில் சீனிவாசன் என்ற பெயரில் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டேன். “இருக்கிறார். அவர் தான் ஓனர்” என்றார் நண்பர். “ஹலோ சீரியஸா கேட்குறேன்” என்று சொல்லி மேட்டரை சொன்னபின்பு, விகடனில் ஜி.எம்.மாக இன்னொரு சீனிவாசன் இருப்பது உறுதியானது. என் அலுவலகத்திலிருந்து பத்து நிமிட இருச்சக்கர வாகன பயண தூரம் தான், ஆனால் வழக்கமாக டிராபிக்கில் முப்பது நிமிடமாகும். ஆர்வம் தாங்காமல் நேராக விகடன் அலுவலகத்துக்கே சென்று விட்டேன்.

பரிசு கிடைத்திருப்பது உண்மைதான் என்று விகடன் ஊழியர் சொன்னபோது நம்பவே முடியவில்லை. முகத்தில் அந்த பிரமிப்பை காட்டாமல் 'எவ்வளவோ பாத்துட்டோம், இதெல்லாம் ரொம்ப சாதாரணம்' என்பது போல நடிப்பது கொஞ்சம் கடினம் தான். விருந்தினரை உபசரிப்பது போல வாசகர்களையும் உபசரிப்பதில் விகடனின் பாரம்பரியம் இன்னமும் கில்லி மாதிரி நின்று ஆடுகிறது. பரிசுக்கு பொறுப்பான அந்த ஊழியர் விகடனின் புதிய வடிவம் பற்றி கருத்து கேட்டார். விலை பதினைந்து ரூபாய்க்கு எகிறிவிட்டதால் சர்க்குலேஷன் குறைந்திருக்கிறதா என்று கேட்டதுக்கு, ”இல்லை, கூடியிருக்கிறது” என்று சொல்லி அதிர்ச்சி அளித்தார்.

பரிசுகள் வழங்குவதில் எப்போதுமே விகடன் குழுமத்துக்கு இணையாக யாருமே இல்லை. பவளவிழா கொண்டாட்டத்தின் போது ஒரு கோடி ரூபாய்க்கு பரிசு வழங்கியிருந்தார்கள். இதெல்லாம் பத்திரிகைத் துறையில் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத சாதனை. இப்போது விலை கூடியிருந்தாலும் லேப்டாப், செல்போன் என்றெல்லாம் அதிரடியாக பரிசுகள் வழங்குவதால் வாசகர்கள் அதிகரித்திருக்கிறார்களாம். சென்னையில் இருக்கும் வாசகர்களுக்கு அவர்களது அலுவலகத்துக்கே வரவழைத்து பரிசு கொடுத்து வருகிறார்கள்.

ஜி.எம். அறையில் விகடனின் உயரதிகாரி ஒருவர் எனக்கு பரிசினை கையளித்தார். ஜி.எம்.மும் விகடனின் புதிய வடிவம் குறித்து கேட்டார். அதுவுமில்லாமல் “புதிய விகடன் குறித்த கருத்துக்களை நேரடியாக விகடன் ஆசிரியரிடமே சொல்லிவிடுங்கள்” என்று போனில் லைனை போட்டு வேறு கொடுத்துவிட்டார். பத்திரிகையாளர்களிடம் பேசுவது என்றாலே எனக்கு கொஞ்சம் உதறல் தான். “விகடன் குறித்த எண்ணங்களை தயவுசெய்து எழுதியோ, நேரம் கிடைத்தால் அலுவலகத்துக்கு வந்து நேரிலோ சொல்லுங்கள். வாசகர்களது விருப்பு, வெறுப்புகளை என்றுமே விகடன் புறந்தள்ளியது இல்லை” என்று விகடனின் ஆசிரியர் அசோகன் சொன்னார். இருவருக்கும் நன்றி சொல்லி வெளியே வந்தேன்.

எனக்குப் பிடித்த கருப்பு நிறத்தில், அசத்தல் ஸ்டைலான டைட்டனின் பாஸ்ட் ட்ராக் வாட்ச் தான் பரிசு. சிலந்தி வலை படமெல்லாம் போட்டிருக்கிறது. ஸ்பைடர் மேன் ட்ரெஸ் போட்டுக்கொண்டு இந்த வாட்ச்சை கட்டிக்கொண்டால் செம மேட்ச்சாக இருக்கும். ஒரே ஒரு குறை. இதில் ஆனந்த விகடன் லோகோ இல்லை. யாரிடமாவது ஆனந்த விகடனின் பரிசு என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். விகடன் தாத்தா படம் பொறித்திருந்தால் கொஞ்சம் கெத்தாக இருந்திருக்கும்.

25 ஆகஸ்ட், 2008

பாலாவின் நாட்டு நடப்பு!

சிறுவயதில் கையில் கிடைக்கும் சாக்பீஸையோ, கரித்துண்டையோ வைத்து வீடெல்லாம் கிறுக்கிக் கொண்டிருந்தால் உங்களுக்கெல்லாம் உதை கிடைத்திருக்கும் தானே? குட்டிப்பையன் பாலாவையோ அவரது தாத்தா மேலும் கிறுக்க ஊக்குவித்திருக்கிறார். விளைவு? நாடறிந்த பத்திரிகையான குமுதத்தின் பிரதான கார்ட்டூன் ஓவியராக இன்று வளர்ந்திருக்கும் கார்ட்டூன் பாலா.

தினமணி, விகடன் இதழ்கள் தங்கள் பத்திரிகைகளில் வெளிவந்த கார்ட்டூன்களை புத்தகமாக போடுவது வழக்கம். முதன்முறையாக குமுதத்தில் அப்படிப்பட்ட ஒரு முயற்சி நடந்திருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளாக தன் தூரிகையால் அரசியல்வாதிகளின் தூக்கத்தை கெடுத்த பாலாவின் கார்ட்டூன்கள் “நாட்டு நடப்பு” என்ற பெயரில் கவர்ச்சிகரமான வடிவத்தோடு, தரமான பேப்பரில் 160 பக்க புத்தகமாக வெளியிட்டிருக்கிறது குமுதம். விலை ரூ.100/-

புத்தகத்தின் பின் அட்டையில் 2006 தேர்தல் நேரத்தில் பாலா கிறுக்கிய “பாசக்கிளிகள்” கார்ட்டூனுக்கு கலைஞர் முரசொலியில் அடைந்த எரிச்சலையே பாலாவுக்கான அறிமுகமாக தந்திருப்பது நல்ல பாராட்டுப் பத்திரம். வைகோ திமுக கூட்டணியை விட்டு வெளியே போகப்போகிறார் என்ற யூகங்கள் வருவதற்கு முன்பாகவே தீர்க்கதரிசனமாக அதை கார்ட்டூனாக வரைந்தவர் பாலா என்பது குறிப்பிடத்தக்கது. நடந்த நிகழ்வுகளை மட்டுமே கிண்டலடித்து கார்ட்டூன் போடுவதை விட, அரசியலை கூர்ந்து கவனித்து என்ன நடக்கப் போகிறது என்பதையும் கார்ட்டூனாக போடும் கலை பாலாவுக்கு நன்கு கைவந்திருக்கிறது.


பாலாவின் கோபம் முழுக்க முழுக்க கலைஞர் மீதும், அம்மா மீதும் தான் போலிருக்கிறது. கருப்பு எம்.ஜி.ஆர் குறித்த கார்ட்டூன்கள் குறைவு. ஒருவேளை எதிர்காலத்தில் நிறைய போடுவாரோ என்று தெரியவில்லை. 'கூட்டணி மாறுதல்' குறித்த நையாண்டிகள் ரொம்பவும் அதிகம், பாவம் இதனால் பாலாவிடம் அதிகமாக மாட்டிக்கொண்டு அவதிப்படுபவர் டாக்டர் அய்யா தான். பத்திரிகைகளில் இடம்பெறும் கவர்ஸ்டோரிகளுக்கு, பாலோ-அப் கொடுப்பது வாடிக்கையான ஒன்று. “பாசக்கிளிகள்” கார்ட்டூனுக்கு “வேஷக்கிளி” கார்ட்டூன் மூலமாக பாலோ-அப் கொடுத்தது அருமையான கிரியேட்டிவிட்டி. சமூகம், நாடு, உலகம் மீதான தனது கோபத்தினை கார்ட்டூன் மூலமாக நையாண்டியாக வெளிப்படுத்துவது பாலாவின் ஸ்பெஷாலிட்டி.

முன்னுரையில் தனது தாத்தாவுக்கும், அம்மாவுக்கும் புத்தகத்தை சமர்ப்பிப்பதாக பாலா குறிப்பிட்டிருக்கிறார். பின்னட்டையில் குழந்தை போல இருக்கும் அவரது போட்டோவை போட்டதை தவிர்த்திருக்கலாம். நிறைய பேர் ஆட்டோ அனுப்பி அடையாளம் காண அந்த போட்டோ வசதியாக இருக்கும். வேறு ஒரு துறையில் பணிபுரிந்துகொண்டு ஆர்வத்துக்காக ஓவியம் வரைந்துகொண்டிருந்த பாலாவை கார்ட்டூன் வரையத்தூண்டி, அவருக்குள் இருந்த திறமையை ஊக்குவித்து இன்றைய நிலையில் நிறுத்தியிருக்கும் பாலபாரதிக்கும் முன்னுரையில் செய்நன்றி காட்டியிருக்கிறார் பாலா.

பாலாவின் கார்ட்டூன் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம். கேட்பதை விட புத்தகத்தை புரட்டிப் பார்ப்பதே உங்களுக்கு அதிக சுவாரஸ்யத்தை தரும். சுவாரஸ்யமான பார்வைக்கு இந்த புத்தகம் நிச்சயமான உத்தரவாதத்தை தருகிறது. ஒவ்வொரு வீட்டு நூலகத்திலும் இடம்பெற வேண்டிய அவசியமான புத்தகம். குமுதம் வெளியிட்டிருக்கும் பாலாவின் “நாட்டு நடப்பை” வாங்க விரும்புபவர்கள் 9940619748 (குருராஜன்) என்ற தொலைபேசி எண்ணுக்கு பேசி உங்கள் வீட்டுக்கே புத்தகத்தை வரவழைக்கலாம். அல்லது பிரபல புத்தகக் கடைகளிலும் “நாட்டு நடப்பை” வாங்கலாம்.

வீடியோ பைரசி போல புக் பைரசியும் தார்மீகக் குற்றம். எனவே நீங்கள் காசு கொடுத்து வாங்கும் புத்தகத்தை யாருக்கும் இரவல் கொடுக்காதீர்கள். புத்தக விற்பனை மூலமாக எழுத்தாளர்களுக்கும், ஓவியர்களுக்கும் கிடைக்கும் ராயல்டி தொகை மிகவும் குறைவு. புத்தகங்களை இரவல் கொடுப்பதின் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் கொஞ்சம் நஞ்சம் ராயல்டி தொகைக்கும் வேட்டு வைத்துவிடாதீர்கள்.

1 ஏப்ரல், 2008

கண்ணும் கண்ணும்


மக்களின் ஆதரவைப் பெறாமல் தோல்வியடையும் படங்களில் பத்துக்கு ஒன்பது குப்பையாக இருக்கும், சில பல அரிய நேரங்களில் ஏதாவது ஒரு மாணிக்கமும் இந்த குப்பைகளோடு சேர்ந்துவிடுவது ஒன்று. அப்படிப்பட்ட ஒரு படம் கண்ணும் கண்ணும். இது வெளியான நேரத்தில் படம் குறித்த பெரிய எதிர்ப்பார்ப்பில்லை என்பதால் இப்படத்தை தவறவிட்டேன். ஊடகங்களில் நல்லமுறையில் விமர்சனம் வந்தபோது படம் பார்க்க ஆசைப்பட்டேன். விமர்சனம் வெளிவருவதற்குள்ளாகவே பல திரையரங்குகளில் படம் தூக்கப்பட்டு விட்டதால் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த சனிக்கிழமை ஃபிலிம் சேம்பரில் திரையிடப்பட்டதால் பார்க்க முடிந்தது.

குற்றால அருவிகளுக்கும், தென்பொதிகைச் சாரலுக்கும் நன்றிகூறி, வில்லன் விதியாக அறிமுகம் என்று டைட்டில் கார்டு போடும்போதே இயக்குனர் மாரிமுத்துவுக்கு கவிதைகள் குறித்த பரிச்சயம் உண்டு என்பது தெரிகிறது.

ஓபனிங் சாங், அதிரவைக்கும் டிடிஎஸ் இசை இல்லாமல் கதாநாயகனின் அறிமுகம் பார்த்து ரொம்ப காலமாகிறது. கதாநாயகிக்கு மட்டும் ஓபனிங் சாங். பாடல் வரிகள் இசையால் அழுத்தப்படாமல் அட்சர சுத்தமாக காதில் விழுகிறது. ‘Cleavage' காட்டுவதெல்லாம் நார்மலாகிவிட்ட தமிழ்ச்சூழலில் நான்கு இளம்பெண்கள் இருந்தும் ஒரு நொடி கூட எந்தப் பெண்ணின் இடுப்பையோ, மார்புப்பிளவையோ காட்டாமல் படமெடுத்திருப்பது இயக்குநருக்கு சவலாக இருந்திருக்கக் கூடும். விரசம் தான் வில்லன் என்று நினைத்திருப்பாரோ என்னவோ?

விரசத்தை விரட்டிய இயக்குனர் வணிகத் தேவைக்காக படத்தோடு பொருந்தாத வடிவேலுவின் காமெடிக் காட்சிகளை இணைத்திருக்கிறார். வாய்விட்டு சிரிக்கும் காமெடி தான் என்றாலும் படத்தின் கதையோடு ஒன்றி பார்க்கும் பார்வையாளர்களுக்கு இடையூறு.

படம் முழுக்க குற்றால அருவி ஒரு பாத்திரமாகவே வந்துப் போகிறது. அஃறிணைகளை கதையோடு ஒன்றவைப்பது இயக்குனர் சரண் பாணி. மாரிமுத்து அதே பாணியை வேறு கோணத்தில் அணுகியிருக்கிறார். பாலசுப்பிரமணியெம் பார்வையில் நாம் காணும் குற்றாலம் நேராகப் பார்ப்பதை விட கொள்ளை அழகாக இருக்கிறது.

அனைவரும் குடும்பத்தோடு காணக்கூடிய திரைப்படம். படத்தில் நம்மை கவரக்கூடிய எல்லா அம்சங்களையும் தாண்டி இயக்குனர் மாரிமுத்துவே ஒவ்வொரு ப்ரேமையும் வியாபித்திருக்கிறார். லாபம் எதுவும் சம்பாதிக்கா விட்டாலும் நல்ல இயக்குனரை தமிழுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு ஹேட்ஸ் ஆப்!! இந்த இயக்குனரிடம் ஒரு ஐந்து கோடியை கொடுத்து படமெடுக்கச் சொன்னால் எல்லாத் தரப்பு மக்களையும் கவருவது போல படத்தை கண்டிப்பாக எடுத்துத் தருவார் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.

வெகுவிரைவில் ‘இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' போடாமலா இருந்துவிடப் போகிறார்கள்?

இப்படம் வணிகரீதியான வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு சில காரணங்கள் இருக்கலாம் :

- சண்டை இல்லை, குத்துப்பாட்டு இல்லை என்பது போன்ற நிறைய ‘இல்லை' படத்தில் உண்டு. நல்ல படமென்றாலும் கூட தற்போதைய ட்ரெண்டுக்கு சம்பந்தமில்லாத களமாகவும், படைப்பாகவும் இருப்பதால் படம் பார்ப்பவர்களுக்கு பழைய படத்தை பார்க்கும் அனுபவம் ஏற்படுகிறது. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை இருபடங்களுக்கு இடையே வந்திருந்தால் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.

- பின்னணி இசை மகா மோசம். பாடல் காட்சிகளுக்கு இதே இசையமைபாளர் தான் இசையமைத்தாரா என்ற சந்தேகம் வருகிறது. பல காட்சிகளில் பின்னணி இசை வசனத்தை விழுங்குகிறது. வசனங்கள் இல்லாத காட்சிகளில் நம் காதுகளுக்கு தொந்தரவும் தருகிறது.

- படம் தயாராகி மிக தாமதமாக வெளியானால் வெற்றிபெறும் வாய்ப்பு நூற்றில் ஒன்று தான் என்பது தமிழ் சினிமாவின் விதி. நவம்பர் 2006லேயே பலகாட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது தெரிகிறது, படம் வெளியானதோ 2008.

- படம் மார்ச் 21 அன்று வெளியாகியிருக்கிறது. வருடம் முழுவதும் புத்தகத்தை புரட்டிப் பார்க்காத தறுதலை மாணவன் கூட விழுந்து விழுந்து படிக்கும் பரிட்சை நேரமது. பரிட்சை நேரங்களில் வெளியிடப்படும் படங்கள் வெற்றிவாய்ப்பை இழப்பது சகஜமே. பத்தாதற்கு தமிழக வரலாறு காணாத கோடைமழையும் அந்த வாரம் கொட்டித் தீர்த்தது. தியேட்டர் ஈயடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.

- இழவு வீட்டுக் காட்சிகள் மெகாநீளம். சீரியலில் இந்தக் காட்சிகளை ரசிக்கும் தாய்க்குலங்கள் கூட சினிமாவில் இழவுக்காட்சிகளை நிராகரிக்கிறார்கள். கதாநாயகியின் அண்ணனும், அப்பாவும் தனித்தனியாக இறந்துப் போனாலும் இரண்டு மரணங்கள் குறித்த கதாபாத்திரங்களின் ரியாக்‌ஷன் தனித்தனியாக நேரத்தை விழுங்கும் வகையில் நீளமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

- கதாநாயகி அழும்போது அசிங்கமாக இருக்கிறார். சிரிக்கும்போது கூட ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி அழகாக இல்லை.

27 பிப்ரவரி, 2008

டோண்டுல்கர்

ஒரு காலத்தில் நான் கருத்துக்களம் ஒன்றில் களமாடிக் கொண்டிருந்தபோது அருண் என்ற நண்பர் ஒரு திரி இட்டிருந்தார். இரட்டைத் தம்ளர் முறை பற்றி சாடி வந்திருந்த பதிவு அது. அதை எழுதியவர் டோண்டு ராகவன் என்று அருண் சொல்லியிருந்தார். அத்திரியில் இருந்த கருத்துக்கள் குறித்த எனது மாறுபாடுகளை மிகக்காரமான மொழியில் எழுதியிருந்தேன். டோண்டு ராகவன் என்ற பெயரை கண்டதுமே ஒரு முப்பது வயது அம்பி என்ற எண்ணம் தான் அப்போது இருந்தது.

அருண் ரொம்ப நாட்களாக என்னை வலைப்பூ ஒன்று தொடங்கச் சொல்லி அப்போது வற்புறுத்தி வந்தார். எனக்கு தொழில்நுட்ப அறிவு இல்லையென்று சொல்லி தள்ளிப் பொட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் அருணின் டார்ச்சர் தாங்காமல் ஒரு பிளாக்கர் அக்கவுண்ட் தொடங்கிவிட்டேன். தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைப்பதற்கு டெம்ப்ளேட்டில் செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் அருண் தான் சொல்லிக் கொடுத்தார். ஆனால் பிளாக்கர் அக்கவுண்டை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. நிறைய பதிவுகளில் பின்னூட்டங்கள் இருந்ததை கண்டேன். அதுபோல எங்காவது பின்னூட்டம் போடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அருண் டோண்டு சாரின் தீவிர ரசிகர் என்பதால் டோண்டுவின் பதிவை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.

எனவே நான் பதிவு எழுதத்தொடங்கி பிள்ளையார் சுழியாக டோண்டு சார் அவர்களின் பதிவில் துரதிருஷ்டவசமாக என் முதல் பின்னூட்டம் ஒன்றினை ஆர்வக்கோளாறில் பதிந்தேன். அது என்ன கருமம் என்று எனக்கு இப்போது நினைவில்லை. பின்னூட்டம் ரிலீஸ் ஆனதுமே Luckyluke என்ற பெயரையும், அவதாரையும் கண்ட எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உடனே என் வலையில் ஒரு அறிமுகப்பதிவு ஒன்றினையும் சும்மா பதிந்து வைத்தேன். கமெண்டு மாடரேஷன் மாதிரியான சங்கதிகள் அப்போது எனக்கு தெரியாது. வலையை சும்மா தொடங்கி விட்டோம், எதுவும் எழுதவெல்லாம் வேண்டாம். தேவைப்பட்டால் ஆங்காங்கே (குறிப்பாக டோண்டு பதிவில்) பின்னூட்டம் மட்டும் போடலாம் என்பதே என்னுடைய அப்போதைய தீர்மானமாக இருந்தது.

மறுநாள் காலை சும்மா டைம் பாஸுக்கு என் வலைப்பூவை திறந்தவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. என்னை அன்பாக ‘டோண்டுவுக்கு பின்னூட்டம் போடவேண்டாம்' என்று கூறி ஒரு பின்னூட்டமும், அதற்கு கீழே பைந்தமிழில் நான்கைந்து பின்னூட்டங்களும் போடப்பட்டிருந்தது. “எவண்டா அது?” என்று பொங்கியெழுந்து என்னை திட்டி பின்னூட்டம் போட்டவர்களை வகுந்தெடுத்து சில பதிவுகள் போட்டேன். அப்படி போடத்தொடங்கிய பதிவுகள் இன்று போயும், போயும் பெயரிலியிடம் எல்லாம் போய் சண்டை போடும் லெவலுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. எனவே நான் பதிவுலகுக்கு வந்ததற்கு டோண்டுவும், போலி டோண்டுவும் சமபங்கு புண்ணியம் கட்டிக் கொள்கிறார்கள்.

ஆரம்பத்தில் டோண்டு சாரை நக்கல் அடித்து ஏதாவது பதிவு போட எண்ணினால் அவருக்கு தொலைபேசி அனுமதி கேட்பேன். “அதனால என்ன கண்ணா? பதிவு தானே போட்டுக்கோ!” என்பார். தொடர்ந்து இரண்டு மூன்று முறை அதுபோல கேட்டபின்னர், “இதுக்கெல்லாம் எதுக்கு அனுமதி? என்னை பத்தி உன் மனசுலே என்ன நினைச்சுருக்கியோ அதை எழுதப்போறே? வேணாம்னு சொன்னாலும் பதிவிலே இல்லாட்டியும், மனசுலே இருக்கும் இல்லியா?” என்று ஒருமுறை கேட்டார். அதன் பின்னர் அவரை பற்றி நல்லவிதமாக எழுதவும் சரி, நக்கலடிக்கவும் சரி அனுமதி கேட்பதில்லை.

அதர் ஆப்ஷன் கமெண்டு பற்றியெல்லாம் எனக்கு அவ்வளவாக அறிவில்லாத காலத்தில் யாராவது குறும்பு டீம் நண்பர் யார் பெயரிலாவது ஏதாவது ஏடாகூட கமெண்டு போட்டுவிடுவார். அந்த கமெண்டு டோண்டு சாருக்கு சம்பந்தமில்லாததாக இருந்தாலும் கூட போன் செய்து அது ஒரு போலி கமெண்டு, நீக்கிவிடு என்பார். அப்போதெல்லாம் டோண்டு சாருக்கு அதர்-ஆப்ஷன் கமெண்டுகள் மீது அப்படி ஒரு கொலைவெறி!

அவருக்கு பிடித்தமாதிரி அல்லது அவர் ரசிக்கும்வகையில் யார் பதிவெழுதி இருந்தாலும் உடனடியாக ஆஜராகி ஒரு பின்னூட்டம் போட்டுவிடுவது அவர் வாடிக்கை. அதுபோலவே அவருக்கு பிடிக்காத பதிவெழுதுபவர்களுக்கு அவரது பின்னூட்டம் கேரண்டி. அவர் தொடர்பிலிருக்கும் பதிவராக இருந்தால் உடனடியாக தொலைபேசி பாராட்டு தெரிவிப்பார்.

ரவி, நான், கிழுமாத்தூர், வரவனை, பொட்டீக்கடை உள்ளிட்ட கொலைவெறிக்குழு ஒன்று வெயிட்டாக அப்போது ஃபார்ம் ஆகி இருந்தது. எந்த பதிவாக இருந்தாலும் மொத்தமாக கும்மி நூறு, நூற்றி ஐம்பது பின்னூட்டங்களாவது போட்டுவிடுவது எங்கள் வாடிக்கை. துரதிருஷ்டவசமாக டோண்டு சாரின் பதிவில் அதர்-அனானி ஆப்ஷன்களை டிஸேபிள் செய்திருந்ததால் அவரது பதிவுகளில் எங்களால் கும்மி அடிக்க முடியவில்லை. ஒரு வலைப்பதிவர் சந்திப்பில் நேரில் சந்தித்து அதர்-அனானிகளுக்கு அவரது பதிவில் இடமளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். காமராஜர் பாணியில் ”ஆகட்டும், பார்க்கலாம்!” என்றவர் மறுநாளே அதர்-அனானி ஆப்ஷனை திறந்துவைத்து இன்ப அதிர்ச்சி அளித்தார்.

தனிமனித ஆளுமை மேம்பாடு (பர்சனாலிட்டி டெவலப்மெண்ட்) குறித்து அவரது அனுபவங்கள் வாயிலாக மிக அற்புதமாக எழுதக்கூடிய எழுத்தாளர் அவர். துக்ளக், அரசியல், கேள்வி-பதில் என்று மொக்கை போடாமல் அவரது அனுபவங்களை பிரதானமாக அவரது வலையில் பதிந்தால் எதிர்காலத்தில் வலையுலக வரலாற்றில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அவருக்கு இருக்கும். அவரது முரட்டு வைத்தியம் தொடர்களின் தீவிர ரசிகன் நான். குறிப்பாக IDPLல் பணிபுரியும்போது அவர் சைக்கிளில் அலுவலகத்துக்கு சென்றது குறித்த பதிவு நான் அடிக்கடி வாசிக்கும் பதிவுகளில் ஒன்று.

முரளிமனோகராக அவரை எல்லோரோடும் சேர்ந்து கும்மியப்பிறகு ஏனோ அவரிடம் தொலைபேசவும், நேரில் பார்க்கவும் எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஆனால் அவரோ அதுகுறித்த எந்த கோபமுமின்றி “ஹல்லோ.. லக்கிலூக்!” என்று பேச ஆரம்பித்தார். அது தான் டோண்டு சார். காண்டு கஜேந்திரன் தொடர்பதிவுகளை நான் எழுதித்தள்ளுவதை யார் வாசிக்கிறார்களோ இல்லையோ, டோண்டு சார் வாசித்து முதலில் பாராட்டி விடுகிறார். அவரது தலையை டெண்டுல்கர் உடலோடு ஒட்டிப் போட்ட “டோண்டுல்கர்” கிராபிக்ஸ் படத்தை நிரம்பவும் ரசித்தார். பதிவுலக மோதல்களையெல்லாம் ஒருபுறம் தள்ளிவைத்து தன்னை எதிர்த்து எழுதுபவர்களிடமும் நல்ல முறையில் நட்பு பாராட்டுவார். பதிவுலகை தவிர்த்து தனிப்பட்ட முறையிலும் என்னோடு நட்பாக இருப்பவர்களில் டோண்டு சாரும் ஒருவர்.

அவரது மத-சாத வெறியை தவிர்த்துப் பார்த்தோமானால் (அது கூட நேரில் பழகும்போது தெரியாது) தனிப்பட்ட முறையில் எல்லோரும் நேசிக்கக்கூடிய, நட்பு பாராட்டக்கூடிய ஒரு நல்ல மனிதர் டோண்டு ராகவன்!!