22 ஜூலை, 2009

அரசூர் வம்சம்!

சதா சர்வகாலமும் கணநேர இடைவெளியுமின்றி சுழன்று கொண்டிருக்கும் பழக்காத்தட்டிலிருந்து ஒலித்துக்கொண்டிருக்கும் ஒப்பாரி சங்கீதம் ங்கொய்யென்று இன்னமும் ரீங்காரமிட சோம்பேறி ராஜா காலைக்கடமை சிக்கலுக்காக சமையல்காரனிடம் வல்லாரை லேகியத்தை அதட்டி கேட்டு வாங்கி கொண்டிருக்க குளத்தில் குளிக்கும் ராணியின் பெருத்த ஸ்தனங்களை புகையிலை பிராமண குடும்பத்தின் இளையவாரிசு சங்கரன் மொட்டை மாடியில் எட்டிப்பார்த்து சிலிர்த்து கொண்டிருக்க

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
பாதிமறைத்த ஸ்தனமும்
பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்
வாழைத் தொடையும்
வடிவான தோளுமாய்க்
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ

சுப்பம்மா கிழவியின் வாயில் மூத்த பெண்டுகள் இன்றென்னவோ தமிழில் பாட நேற்று பாடிய தெலுங்குக் கீர்த்தனையே மேல் என்று அகஸ்மாத்தாக சிரமப் பரிகாரத்துக்கு கிரகத்துக்கு வந்த சுப்பிரமணியர் நினைத்து நொந்து கொண்டிருக்க அவரது மூத்த வாரிசு எந்த நூற்றாண்டிலோ துர்மரணம் சம்பவித்துக் கொண்ட குருக்கள் பெண்ணோடு சம்போகம் சுகிக்க சேடிப்பெண்ணிடம் வாயுபச்சாரம் செய்ய சொல்லி புஸ்திமீசை கிழவன் வற்புறுத்த சிநேகாம்பாளுக்கும் மன்னி காமாட்சிக்கும் ஏழாம் பொருத்தம் என்றாலும் எப்போதுமா ஒருவரையொருவர் கடங்காரிகள் தூஷித்து கொண்டிருப்பார்கள் என கிட்டாவய்யன் வெறுத்துபோக பிரின்ஸ் ஜீவல்லரி லைட் வெயிட் கலெக்சன் வளையல் மாதிரி வயசன் காற்றில் பறந்துகொண்டிருக்க வடையும் சுவியமும் நெய்யப்பமும் யாரோ சுட்டுக்கொண்டிருக்கும் வாசனை வந்துக் கொண்டிருக்க நொங்கம்பாக்கம் வீட்டில் வைத்திக்கு தட்டில் நாலு இட்லி வைத்து லோட்டா லோட்டாவாக சாம்பார் ஊற்றி கொண்டிருக்கும் கோமதிக்கு தன் கூடப்பிறந்தாளை சங்கரனுக்கு கட்டிவைக்க வேணுமாய் எண்ணம் வந்திருக்க கருத்த ராவுத்தன் வாழைமட்டையில் பொடி அடைத்துகொண்டிருக்க பிராமண அனுசார அனுஷ்டானம் அனுமதிக்கலேன்னாலும் மாசாமாசம் புகையிலை பொடி வகையறாவில் வர்ற தட்சணை அசூயையை சுப்பிரமணிய அய்யருக்கு போக்கிவிட குப்புசாமி அய்யன் நெருப்பு அனலில் வேக வரப்போகும் ஆம்படையானுக்காக பகவதி குட்டி கண்ணில் மைத்தீட்ட அய்யங்கார் ஜோசியன் தேவதைகளை யந்திரத்தில் பிரதிஷ்டை செய்ய கொட்டக்குடி தாசி வெத்தலை சுண்ணாம்பு போட்டு சிவந்த வாயால் முத்தம் தர கிராம்பு ஏலக்காய் வாசனை தூக்கலில் மெய்மறக்க துரைமார்களும் துரைசானிகளும் துரைபாஷை பேசி குரிசு சங்கிலியை தூக்கிக் காட்ட புகையிலை நாற்றமும் கப்பலும் கட்டைவண்டியுமாய் மாறிமாறி பயணிக்க என்னென்னவோ எங்கெங்கோ யார் யாராலோ எது எதுவோ நடந்துகொண்டிருக்க நான் பாட்டுக்கு எதையோ எழுதி கிறுக்கி கசக்கி கிழித்துபோடும் வேளையில் மூன் ட்ராவல் பண்ணனுமா வாத்தியாரே எங்ககிட்டே 3000 பிசி ஆடி மாடல் ஸ்பேஸ்கார் சகாய வெலைக்கு இருக்கு வாங்கிக்கிறீயா ஒன்லி பிப்டி தவுசண்ட் ருபீஸ் என்று நெட்டையுமாய் ஒருவன் குட்டையுமாய் இருக்கும் இன்னொருவனுமாக பனியன் சகோதரர்கள் வியாபாரம் பேசுகிறார்கள்.

* - * - * - * - * - * - * - * -



நூலின் பெயர் : அரசூர் வம்சம்!

நூல் ஆசிரியர் : இரா.முருகன்

விலை : ரூ.175

பக்கங்கள் : 464

வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

* - * - * - * - * - * - * - * -

சாதாரணமாக ஐநூறு பக்கப் புத்தகத்தை என்னால் இரண்டு நாட்களில் வாசித்து விட முடியும். வேலை வெட்டி எதுவுமில்லையென்றால் தூங்காமல் கொள்ளாமல் கசாப்புக்கடை ஆடுகளின் தலையை எண்ணாமல் வெட்டுவது மாதிரி ஒரே நாளில் ஆயிரம் பக்கங்களை கூட போட்டுத் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்க முடியும். இரா.முருகனின் அரசூர் வம்சத்தை முடிக்க இருபது நாட்கள் ஆகிவிட்டது. முருகனின் மொழி மிக எளியது, இக்காலக்கட்டத்திற்கு புதியது அல்லது ரொம்பவும் பழையது என்றாலும் புதினத்தில் ஏற்றியிருக்கும் கனத்தின் மீதான புரிதலுக்காக ஒவ்வொரு பக்கத்தையும் இருமுறையாவது மீள்வாசிப்பு செய்ய தூண்டுகிறது. எத்தனை முறை வாசித்தாலும் சுவாரஸ்யம் இம்மியளவும் குறைவதில்லை என்பதால் முருகனுக்கு அரோகரா.

காலத்தை முன்னும் பின்னும் ஓட்டிச்செல்ல கால இயந்திரம் விஞ்ஞானிகளால் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் எழுத்தாளனுக்கு இது மாந்திரிக யதார்த்தவாதம் மூலமாக சாத்தியமாகியிருக்கிறது. ஆசிரியர் எடுத்துக்கொண்ட காலக்கட்டம் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்றாலும் பனியன் சகோதரர்கள் அவ்வப்போது முன்னும் பின்னுமாக வினோத நாலுசக்கர கருப்பு வண்டியில் போய்வருகிறார்கள்.

என்றோ மரித்துப்போன அழகுப் பெண்களை மந்திரத்தால் வரவழைத்து கதாபாத்திரங்களை கூட விடுவதும், சுகிக்க விடுவதும் எழுத்தாளனுக்கு ஆகாத காரியமல்ல. தொங்கிப்போன ராணியோடு வம்சவிருத்திக்காக மட்டுமே கூடும் ராஜா, செத்துப்போன புஷ்டிமீசைக் கிழவன் சேடிப்பெண்ணை வாய் உபச்சாரத்துக்கு வற்புறுத்துதல், குருக்கள் பெண்ணோடு சாமிநாதனின் சம்போகம், அம்பலப்பழை சகோதரர்கள் அர்த்த ராத்திரியில் தத்தம் மனைவிகளை சரியாக கண்டறிந்து எழுப்பி தனியறைக்கு அழைத்துச்சென்று புணர்தல், கப்பலில் துரைசானிகள் மதுமயக்கத்தில் சாமிநாதனை கூட்டாக வன்புணர்தல் என்று இந்நவீனம் முழுக்க ஊடே தொடர்ந்து பரவியிருக்கிறது புணர்ச்சி வாசனை.. புகையிலை வாசனையையும், ஏலம் கிராம்பு வாசனையையும் தாண்டி.

நினைவுகளோடே நிம்மதியாய் பயணிக்கும் வேளையில் நனவு யதார்த்தத்தையும், இருத்தலுக்கான சமரசங்களையும் கடமையாக சுட்டிக்காட்டுகிறது நாவல். இறந்த காலத்தின் எச்சமாய் நிகழ்காலம் இருப்பதுபோல நிகழ்காலத்தின் எச்சமாய் எதிர்காலம் அமையும். ‘அந்த காலம் மாதிரி வருமா?’ என்று எந்த நூற்றாண்டிலும் எவனாவது ஒரு கிழவன் முனகிக் கொண்டிருக்கத்தான் போகிறான்.

ஒன்றரை நூற்றாண்டுக்கு முந்தைய பிராமணர்களையும், அவர்களது அச்சுப்பிச்சு அசட்டு நடைமுறைகளையும் கேலியும், கிண்டலுமாக அணுகுகிறார் நூலாசிரியர். இருத்தலைக் காத்துக்கொள்ள செய்துகொண்ட சமரசங்களான புகையிலை வியாபாரம், மதம் மாறுதல் ஆகியவற்றை ஆசிரியர் ஆதரிக்கிறாரா, மறுதலிக்கிறாரா, கேலி செய்கிறாரா என்பதை அவரது தொனியில் அறிய கடினமாவும் இருக்கிறது.

இத்தனைக்கும் சங்கரனும், சாமிநாதனும் அவருடைய கொள்ளுத் தாத்தாக்களாக கூட இருக்கலாம் என்பதை அவரது முன்னுரையில் அறியமுடிகிறது. காரைக்குடிக்கு ரொம்ப பக்கம் என்பதாலும், நூலாசிரியர் கொடுக்கும் சுலப க்ளூக்கள் சிலவற்றாலும் சிவகங்கைச்சீமை தான் அரசூர் என்று சுலபமாக கணிக்க தோன்றுகிறது. சாமிநாதனை தீவைத்து யாராவது கொன்றார்களா (ராணியின் வேலையா) அல்லது யதேச்சையாக பிடித்த தீயா என்பதை வாசகர்களின் யூகத்துக்கு விட்டுவிடுகிறார் முருகன். ஆதித்த கரிகாலனை போட்டுத் தள்ளியது யாரென்றே இன்னமும் யூகிக்க சோம்பேறித்தனம் படும் என்னை மாதிரி வாசகர்களுக்கு இது பெருத்த சோதனை. கருடகர்வ பங்கம்.

இந்நூலை வாசித்தபிறகு தான் தன்னுடைய இடத்தை தமிழில் நிரப்பப் போகும் எழுத்தாளராக இரா.முருகனை சுஜாதா கணித்தாரா என்று சரியாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் தமிழின் அதிமுக்கிய நாவல்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படுமேயானால், அப்பட்டியலில் இடம்பெறத் தகுதியானதே ‘அரசூர் வம்சம்’. தீவிரவாசிப்புக்கு பழக்கப்படாதவர்கள் மறுபேச்சின்றி இந்நூலை தவிர்த்து விடலாம். இந்நாவலின் கனமும், நடையும், லாஜிக்கும் புரிபடாதவர்களுக்கு இது மொக்கையாகவும் தோன்றக்கூடும்.

நாவல் முடியும்போது எல்லாம் சுபம் தான். ஆனாலும் எங்கோ ஏதோ நிரப்பப்படாமல் வெறுமை சூழ்கிறது. நாவலாசிரியர் தன் வாசகனுக்கு முன்வைக்க விரும்பியது இந்த வெறுமை தானென்றால் அரசூர் வம்சத்தின் மன்னனாக அவருக்கே க்ரீடம் சூட்டி விடலாம்.

அரசூர் வம்சம் - அமானுஷ்ய அனுபவம்!

18 ஜூலை, 2009

திருவிளையாடல்


வெங்கடேசுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது பள்ளியின் புல் பூண்டுக்கு கூடத்தெரியும். இருந்தும் இரண்டு பேரும் எப்போதும் ஒரே ஜமாவில் கும்மியடிப்பது பலருக்கு ஆச்சரியம். என்னைப் பொறுத்தவரை கருத்து வேறு, நட்பு வேறு. அவனுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

எங்கள் பள்ளியையும், பக்கத்தில் இருக்கும் மகளிர் மேல்நிலைப் பள்ளியையும் பிரிப்பது ஒரு ஐந்தடி உயர சுவர் மட்டுமே. சுவற்றுக்கு கீழே நான்கைந்து செங்கல்களை போட்டு உயரம் கூட்டி பக்கத்து கிரவுண்டில் விளையாடும் சிட்டுக்குருவிகளை பார்த்து ரசிப்பது எங்கள் பொழுதுபோக்கு. நீலநிற தாவணி, வெள்ளை ஜாக்கெட், இரட்டைப் பின்னல் என்று Auspicious ஆக அந்த காலத்தில் இருந்த மாதிரியான பிகர்களை இப்போதெல்லாம் காணமுடியாது.

நான் ஒன்பதாம் வகுப்பு அனுவை சைட்டு அடித்துக் கொண்டிருந்தாலும் (அது என் மாமா பொண்ணாக்கும்) அவ்வப்போது +1 படிக்கும் தேன்மொழியையும் ஜூட்டு விட்டுக் கொண்டிருந்தேன். காரணம் தேனு வெங்கடேசின் ஆளு. அவனை வெறுப்பேற்றவே பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லும் தேனுவை வேண்டுமென்றே சைக்கிளில் பாலோ செய்வேன். அனுவைப் பொறுத்தவரை என்னுடைய மாமா பெண் என்பதால் மட்டுமே எனக்கு ஈர்ப்பு இருந்தது என்று நினைக்கிறேன். அவளுக்கும் என் மீது பெரிய ஈர்ப்பு எதுவும் இருந்ததாக தெரியவில்லை. எனக்கும் ஒரு பிகர் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளவே “அனு என்னோட ஆளு” என்று ஜமாவில் சொல்லி வைத்திருந்தேன்.

அது ஒரு சுபயோகத் திருநாளாக இருந்திருக்கக் கூடும். வழக்கம்போல செங்கல் போட்டு பக்கத்து கிரவுண்டில் ஸ்கிப்பிங் விளையாடும் பிகர்களின் அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தோம். எதற்கெடுத்தாலும் “என்ன பெட்டு” என்று கேட்பதை வழக்கமாகக் கொண்ட வெங்கடேசுக்கு தான் அந்த யோசனை வந்தது.

“தில்லு இருக்கிற எவனாவது ஸ்கூல் டைம்லே பக்கத்து கிரவுண்டை ஒரு சுத்து சுத்தி வரணும். எவனாவது அதை சாதிச்சி காட்டினா, அவனை நான் பீராலேயே குளிப்பாட்டுறண்டா. பெட்டு ஓகேவா?”

அவன் கீரி என்றால், நான் பாம்பு. மசால் வடையை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் எலி மாட்டும் என்றும் அவனுக்கு தெரியும். அவன் பெட் கட்டினால் சும்மாவாச்சுக்கும் அவனை வெறுப்பேற்றவாவது நான் சிலிர்த்துக் கொண்டு வருவது வழக்கம். ஆனால் இந்த முறை அவன் வைத்திருப்பது அக்னிப் பரிட்சை. கரணம் தப்பினாலும் கருகிவிடுவோம். இருந்தாலும் சவால் விட்டிருப்பது என் பிரியத்துக்குரிய எதிரி ஆயிற்றே? ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். லேடிஸ் ஸ்கூல் ஹெட்மாஸ்டரை நினைத்தால் தான் கொஞ்சம் பயமாக இருந்தது. காதலன் படத்தில் வரும் பெண் போலிஸ் அதிகாரி மாதிரி இருப்பார். எங்கள் ஹெட் மாஸ்டரிடம் போட்டுக் கொடுத்து விட்டால் முதுகுத்தோல் உறிந்துவிடும்.

சிவா உசுப்பி விட்டான். “கிச்சா இருக்கறப்பவே பெட்டு கட்டறியா வெங்கடேசு? திருப்பதிக்கே லட்டா, சிவகாசிக்கே பட்டாசா?”

“டேய்.. டேய்.. நிறுத்துரா. தில்லு இருக்கறவன், ஆம்பளைன்னு சொல்லிக்குறவன் எவனா இருந்தாலும் என் பந்தயத்தை ஒத்துக்கலாம். முடியலன்னா சொல்லிடுங்க. எனக்கொண்ணும் நஷ்டம் இல்லே. நீங்க ஓடினாலும் சரி, ஓடாம பாதியிலே திரும்பிட்டாலும் சரி. எனக்கெதுவும் கொடுக்க வேண்டியதில்ல. ஜெயிச்சுட்டா மட்டும் ஜெயிச்சவனுக்கு மட்டுமில்லே, நம்ம ஜமா மொத்தத்துக்கும் பீரோட பிரியாணி!” லேடிஸ் ஸ்கூல் க்ரவுண்டை சுற்றி வருவது ஏதோ உலகத்தை சுற்றி வருவது மாதிரியான பில்டப் கொடுத்து வெங்கடேஷ் பேசினான்.

எனக்கு சுர்ரென்று ஏறியது. ”நாளைக்கு ஈவ்னிங் மூணரை மணிக்கு நான் சுத்தறேண்டா. ஈவ்னிங் ஏழு மணிக்கு ரம்பா ஒயின்ஸ்லே பீரு, எட்டரை மணிக்கு பாய் கடையிலே பிரியாணி. ஓகேவா மச்சி?”

எலி கரெக்டாக மசால் வடைக்கு மாட்டியதை நினைத்து சந்தோஷப்பட்ட வெங்கடேஷ், “ஆல் த பெஸ்ட் மச்சான்!” என்று சொல்லிவிட்டு சபையை களைத்தான்.

சிவாவோடு சேர்ந்து ப்ளான் போட்டேன். மூணரை மணிக்கு எங்களுக்கு பி.டி. பீரியடு. கிரிக்கெட் விளையாடுவது போல பாவ்லா காட்டி பந்தை பக்கத்து கிரவுண்டில் எறிந்துவிட்டு, பந்தெடுக்கப் போவது போல போய் க்ரவுண்டை ஒரு முறை சுற்றி வந்துவிடலாம். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பந்தெடுக்க வந்தேன் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்.

மூன்றரை மணி என்பதால் ரெண்டு ஸ்கூல் ஹெட்மாஸ்டர்களும் சாப்பிட்டு விட்டு லைட்டாக கிரக்கத்தில் இருப்பார்கள். சரியான நேரம். ஹெட்மாஸ்டர் ரூமுக்கு அருகில் ஒரு ஸ்பையை தற்காலிகமாக நிறுத்தி மாஸ்டர் ரவுண்ட்ஸுக்கு வருகிறாரா என்று கண்காணிப்பதாக ஏற்பாடு. செந்தில் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

மூன்று மணிக்கெல்லாம் எங்கள் செட் க்ரவுண்டை முற்றுகையிட ஆரம்பித்தது. ஸ்டெம்பு நட்டு பவுலிங் செய்து கொண்டிருந்தேன். சிவா பேட்டிங், வெங்கடேஷை காணவில்லை. பெட்டு கட்டிவிட்டு இந்த நாய் எங்கே போய்விட்டான்?

அவன் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. சாட்சிகளின் முன்னிலையில் இன்று சாதித்தே தீருவது என்று முடிவெடுத்துவிட்டேன். பெட்டுக்காக மட்டுமில்லாமல் எல்லோரது கவனத்தையும் கவரும் அட்வென்ச்சர் ஆகவும் அது இருக்கும் என்று என் மனதுக்கு பட்டது. க்ரவுண்டை சுற்றி வருகையில் ஒருவேளை தேன்மொழியோ, அனுவோ என்னை கவனிக்கக்கூடும். “ஹீரோ” அந்தஸ்தை மிக சுலபமாக பெரும் வழியாகவும் அந்த திட்டத்தை நினைத்தேன்.

மற்ற பசங்க கொஞ்சம் சுரத்து குறைந்துபோயே இருந்தார்கள். எப்போதும் காட்டான் போல ஆடும் சிவா கூட டொக்கு வைத்து ஆடிக் கொண்டிருந்தான். மாட்டினால் மொத்த டீமுக்கும் ஆப்பு என்று அவர்கள் பயந்ததாக பட்டது. ”அப்படியே மாட்டிக்கிட்டாலும் ஒரு பய பேரை கூட சொல்லமாட்டேன். நீங்க என் கூட விளையாடினதா கூட சொல்லமாட்டேன். போதுமா?” என்று சொல்லி தைரியப் படுத்தினேன்.

மூன்றரை மணியாக இன்னமும் ஐந்து நிமிஷங்கள் என்று மணியின் வாட்சில் நேரம் பார்த்தோம். அப்போது மணி மட்டும் தான் கைக்கடிகாரம் அணிவான். எங்கேயோ இருந்து வெங்கடேஷும் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டான். பந்தை கையில் எடுத்தவன் சுற்றும் முற்றும் பார்த்தேன். மாஸ்டர்கள் யாரும் கண்ணில் படவில்லை. ஹெட்மாஸ்டர் நாலு மணிக்கு மேல் தான் ரவுண்ட்ஸுக்கு வருவார். அவர் அப்படியே சீக்கிரம் கிளம்பிவிட்டால் கூட நம்ம கண்காணி செந்தில் ஓடிவந்து சொல்லிவிடுவான்.

ஹய்ட் த்ரோவாக இல்லாமல் ஸ்லோப்பாக லேடீஸ் க்ரவுண்ட் நோக்கி முழுபலத்தையும் திரட்டி பந்தை வீசினேன். அப்போது தான் பந்து மைதானத்தின் அந்த முனைக்கு போய் சேரும். ஒரு ரவுண்ட் அடிக்க வாகாக நேரம் கிடைக்கும். பந்தை எறிந்தவுடன் எந்த திசையில் போய் விழுந்தது என்று கூட பார்க்கவில்லை. சுவரை நோக்கி ஓட ஆரம்பித்தேன். ஓடிவந்த வேகத்தை பயன்படுத்தி கையை சுவர் மீது அழுத்தி ஒரே ஜம்ப்...

பின்னால் பசங்க ஓடிவரும் சத்தம் கேட்டது. நான் நினைத்ததற்கு மாறாக மறுபுறம் மைதானம் மேடாக இல்லாமல் கொஞ்சம் பள்ளமாக இருந்ததால் பேலன்ஸ் செய்யமுடியாமல் குப்புற விழுந்தேன். கை முட்டி இரண்டிலும் சிராய்ப்பு. இரத்தம் எட்டிப் பார்த்தது. கால் கொஞ்சம் சுளுக்கிக் கொண்டதைப் போல வலி. நிமிர்ந்து மைதானத்தைப் பார்த்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட நீலநிற பட்டாம்பூச்சிகள் ஸ்கிப்பிங், கோகோ, ரிங்க் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இந்த மைதானத்தை சுற்றி ஓடிவர குறைந்தது மூன்று நிமிடங்கள் ஆகும். அதற்குள்ளாக ஆசிரியர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது. முதல்முறையாக பயம்...

காக்கி பேண்டும், வெள்ளைச் சட்டையுமாக திடீரென்று ஒருவன் தங்கள் மத்தியில் ஓடுவதை கண்டதுமே சில பெண்கள் அவசரமாக ஒதுங்கினார்கள். சில பேர் கூச்சலிட்டார்கள். மைதானத்தின் இடதுப்பக்கமாக ஓட ஆரம்பித்தேன். திரும்பிப் பார்த்தேன், கண்களில் உற்சாகமும், ஆச்சரியமுமாக என் நண்பர்கள்.. சத்தமாக கத்தி என்னை உற்சாகப்படுத்துவதாக நினைத்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தார்கள். வெங்கடேஷின் முகத்தில் மட்டும் குரோதம்!

ஓடு.. ஓடு.. ஓடிக்கொண்டேயிரு என்று உள்மனசு சொல்ல மாராத்தான் வீரனின் மன உறுதியோடு பாதி மைதானத்தை தாண்டி ஓடிக்கொண்டிருந்தேன். பந்து எங்கே போய் விழுந்தது என்று தெரியவில்லை. பந்தை விட்டு விட்டு ஓடவேண்டியது தான். தேடிக்கொண்டிருந்தால் மாட்டிக் கொள்வோம். இன்னும் கொஞ்ச தூரத்தில் பள்ளிக் கட்டடம் வந்துவிடும். உள்ளே வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது என்று மனசுக்குள் வேண்டியபடி ஓட...

அய்யகோ! ஆண்டி க்ளைமேக்ஸ் ஆகிவிட்டதே?

பள்ளிக் கட்டடத்துக்கு அருகில் வந்தபோது ரெண்டு பள்ளியின் ஹெட்மாஸ்டர்களும் என் வருகையை எதிர்பார்த்து நிற்பது போல நின்று கொண்டிருந்தார்கள். ”இந்த ஆளு எப்படி இங்கே வந்தான்? இந்த ஆளு வெளியே வந்திருந்தாலே செந்தில் ஓடிவந்து சொல்லியிருப்பானே? அவனுக்கு என்ன ஆச்சி?” என்று நினைத்தேன்.

“சார் பந்து விழுந்திடிச்சி.. எடுக்க வந்தேன்!”

காதைப் பிடித்து திருகி, “மானத்தை வாங்குறதுக்குன்னே மடிப்பாக்கத்துலே இருந்து வந்து சேர்ந்திருக்கானுங்க! சாரி மேடம்! ஐ அபாலஜைஸ் ஃபார் தி இன்கண்வீனியன்ஸ்” என்று அந்த ஹெ.எம்.மிடம் சொல்லிவிட்டு “என் பின்னாலேயே வாடா!” என்று சொல்லிவிட்டு முன்னால் போனார்.

மாலை போட்ட ஆடு மாதிரி அவர் பின்னாலேயே போனேன். என் கெட்ட நேரம். என் மாமா பொண்ணு அனு வேறு எதிரில் வந்தாள். நேராக என்னை நோக்கி வந்தவள் என் காதில் கிசுகிசுத்துவிட்டு ஹெட்மாஸ்டரிடம் சென்று ஏதோ சொன்னாள். தூரத்தில் திரும்பிப் பார்த்தேன். ஏற்கனவே நம்பியார் மாதிரி என்னைப் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் பாதி நம்பியாராகவும், பாதி வீரப்பாவாகவும் மாறி கொடூர புன்னகை புரிந்து கொண்டிருந்தது போல தெரிந்தது.

ஹெட்மாஸ்டர் ரூமுக்கு வெளியே செந்தில் வேறு முட்டிப் போட்டுக் கொண்டிருந்தான். அவனருகில் சென்று முட்டி போடுமாறு சொன்ன ஹெச்.எம். ரூமுக்குள் போய்விட்டார். இன்னமும் ஒரு மணி நேரத்துக்கு முட்டி போட்ட பின்னர் “பூஜை” வேறு செய்வார். நினைக்கும் போதே முட்டியும், முதுகும் வலித்தது போல இருந்தது.

“மச்சான்! வெங்கடேஷ் துரோகம் பண்ணிட்டாண்டா!” - செந்தில்

“என்னடா ஆச்சி?”

“மேத்ஸ் மாஸ்டர் கிட்டே மேட்டரை சொல்லி ஹெச்.எம். வரைக்கும் பிரச்சினையை எடுத்து வந்துட்டான். நாயி என்னை வேற போட்டுக் கொடுத்துட்டான்”

மேத்ஸ் மாஸ்டருக்கும், எனக்கும் ஆகவே ஆகாது. அந்த ஆளு நடத்தும் ட்யூஷனில் வீராப்பாக நான் சேராமல் இருந்தேன். ”சந்தர்ப்பம் பார்த்து போட்டு கொடுத்துட்டானே அந்தாளு?” என்று உறுமினேன்.

“செந்திலு நாம ரெண்டு பேரும் அடிபடப்போறது உறுதி. அதே நேரத்துலே நம்ம அக்ரிமெண்டை மீறுன வெங்கடேஷையும் போட்டுடணும்” சொல்லிவிட்டு எழுந்து நேராக ஹெச்.எம். ரூமுக்கு போனேன். நடந்ததெல்லாம் தப்பு என்று சொல்லி, வெங்கடேஷ் தான் என்னை அதுபோல லேடிஸ் க்ரவுண்டில் ஓட சொன்னான் என்றும் உண்மையை ஒப்புக் கொண்டேன். ப்யூனை விட்டு வெங்கடேஷை பிடித்து வரச் சொன்னார் ஹெச்.எம்.

சிறிது நேரத்திலேயே காட்சி மாறியது.

நானும், செந்திலும் மாட்டிக் கொண்டதை பார்த்து கொக்கரித்து சிரித்துக் கொண்டிருந்த வெங்கடேசும் இப்போது எங்களோடு சேர்ந்து முட்டிப் போட்டுக் கொண்டிருந்தான்.

“வெங்கடேசு! ஆனாலும் உன்னை லைப்லே மறக்க மாட்டேண்டா!”

“எதுக்குடா?” வெறுப்போடு கேட்டான்.

“உன்னால தாண்டா அனு எனக்கு கிடைச்சா!”

”!!!!???????”

“எப்படின்னு கேளேன். நான் மாட்டிக்கிட்டதுமே நேரா என் காதுலே வந்து ‘இவ்ளோ தைரியசாலியா நீ இருப்பேன்னு நினைக்கலை. ஐ லவ் யூ!'ன்னு சொல்லிட்டுப் போயிட்டா மச்சான். நீ மட்டும் ஹெச்.எம். கிட்டே போட்டு கொடுக்கலைன்னு வெச்சிக்கோ, அனு எனக்கு கிடைச்சிருக்க மாட்டாடா.”

ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்ற வெங்கடேஷின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. நான் சொன்னதை கேட்டதுமே செந்திலுக்கு மகிழ்ச்சி பொங்கியது.

“எப்படியோ வெங்கடேஷ் புண்ணியத்துலே கிச்சா செட்டில் ஆகிட்டான். ஃபிகரு ஒர்க் அவுட் ஆயிடிச்சி. நடக்குறதெல்லாம் நல்லதுக்கு தாண்டா!”

“டேய் பந்தயத்துலே ஜெயிச்சிருந்தா தானேடா வெங்கடேஷ் பீர் வாங்கி கொடுத்திருப்பான். இதோ இப்போ தோத்தவன் சொல்றேன். இன்னைக்கு எல்லாருக்கும் பார்ட்டிடா! நான் பந்தயத்துலே தோத்திருந்தாலும் லைஃப்லே ஜெயிச்சுடேண்டா! ஐ யாம் வெரி ஹாப்பியஸ்ட் மேன் இன் த வோர்ல்ட்”

(சுபம்)




கதையை அப்படியே சுபம் போட்டு விட்டுவிட ஆசை தான். ஆனாலும் உண்மையில் நடந்தது என்னவென்று சொல்லுவது தானே தர்மம்! ஒரு சின்ன ப்ளாஷ்பேக்!

காதைப் பிடித்து திருகி, “மானத்தை வாங்குறதுக்குன்னே மடிப்பாக்கத்துலே இருந்து வந்து சேர்ந்திருக்கானுங்க! சாரி மேடம்! ஐ அபாலஜைஸ் ஃபார் தி இன்கண்வீனியன்ஸ்” என்று அந்த எச்.எம்.மிடம் சொல்லிவிட்டு “என் பின்னாலேயே வாடா!” என்று சொல்லிவிட்டு முன்னால் போனார்.

மாலை போட்ட ஆடு மாதிரி அவர் பின்னாலேயே போனேன். என் கெட்ட நேரம். என் மாமா பொண்ணு அனு வேறு எதிரில் வந்தாள். நேராக என்னை நோக்கி வந்தவள் என்னிடம் மெதுவாக,

“பொறுக்கி, நல்லா மாட்டிக்கிட்டியா? ஸ்கூல் விட்டு போறப்போ சைக்கிள்லே வந்து கட் அடிச்சி தொல்லை கொடுக்குறே இல்லே, உங்க ஹெச்.எம். கிட்டே நல்லா போட்டு விடறேன்”

ஹெட்மாஸ்டரிடம் சென்று, “சார் இந்த பொறுக்கி அடிக்கடி எங்களையெல்லாம் டிஸ்டர்ப் பண்றான் சார். ஸ்கூல் விட்டு போறப்போ ரோட்ல வந்து லவ் லெட்டர் கொடுக்கிறான் சார்!”

“அவனை தோலை உரிச்சி தான் இன்னிக்கு வீட்டுக்கு அனுப்பப் போறேன். நீங்க பயப்படாதீங்கம்மா. இனிமேல உங்களையெல்லாம் டிஸ்டர்ப் பண்ணமாட்டான்” ஹெச்.எம்.

தூரத்தில் திரும்பிப் பார்த்தேன். ஏற்கனவே நம்பியார் மாதிரி என்னைப் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் பாதி நம்பியாராகவும், பாதி வீரப்பாவாகவும் மாறி கொடூர புன்னகை புரிந்து கொண்டிருந்தது போல தெரிந்தது.

பிரபாகரன் - பா.ராகவன்!

மே 19-ஆம் தேதி பிரபாகரனின் உடல் நந்திக்கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்திருந்தது. மே 26-ஆம் தேதி ‘பிரபாகரன் - வாழ்வும், மரணமும்!’ என்ற தலைப்பில் கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. பிரபாகரனின் மரணத்தை உலகப் புத்தக வரலாற்றில் முதன்முறையாக பதிவு செய்திருக்கிறது கிழக்கு. இந்த வேகம் அசாத்தியமானது. மாவீரர் தினத்தின் போது பிரபாகரன் தோன்றி ஈழமக்களுக்கு தன்னுடைய செய்தியை அறிவிப்பாரேயானால் கதீட்ரல் சர்ச்சில் கிழக்கு பதிப்பகம், நூலாசிரியர் பா.ராகவனும் பாவமனிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளோடு இந்த விமர்சனத்தை தொடங்குகிறேன்.

பிரபாகரனைத் தவிர்த்து ஈழவரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது. உலகத் தமிழர்களுக்கு ஒரிஜினல் ஹீரோ. ஈழமக்களுக்கு கடவுளைப் போன்றவர். அவரது சிந்தனைகளை, குணாதிசயங்களை, செயல்பாடுகளை ஈழத்தமிழர்கள் உட்பட யாரும் இதுவரை மிகையின்றி, சார்பின்றி சொன்னதில்லை. தமிழர் மனதில் கட்டப்பட்டிருக்கும் பிரபாகரன் பிம்பமும் அத்தனை துல்லியமானதல்ல. இந்நிலையில் பிரபாகரனுக்கு டயரி எழுதியிருக்கும் பழக்கம் இருக்குமேயானால், அந்த டயரியை வாங்கிப் பார்த்து எழுதியதைப் போல நுணுக்கமாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

இதே பதிப்பகம் ஆறுமாதக் காலத்துக்கு முன்பாக ‘பிரபாகரன்’ என்ற புத்தகத்தை வேறொரு எழுத்தாளர் எழுதி வெளியிட்டிருக்கிறது. அதே மனிதரின் வாழ்க்கையை இன்னொருமுறையும் புத்தகமாக பதிவு செய்திருப்பதில் இருந்தே பிரபாகரனுக்கான அசைக்க முடியாத இடத்தின் அவசியத்தை உணரலாம். முதல் புத்தகத்துக்கும், இப்புத்தகத்துக்கும் கூட நிறைய வேறுபாடுகளை நடை அடிப்படையில் உணரலாம். இந்நூல் குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்ததால் வாரத்துக்கு வாரம் அத்தியாயத்தின் முடிவில் ஏற்றப்படும் டெம்போவை நூல்முழுக்க காணமுடிகிறது. கிழக்கின் பாணியான வழக்கமான ஓப்பனிங் பில்டப், ஆல்பிரட் துரையப்பா படுகொலையோடு தொடங்குகிறது.

இந்நூலில் இரண்டு ஆச்சரியங்கள். ஒன்று பிரபாகரன். மற்றொன்று பா.ராகவன். பிரபாகரன் ஆச்சரியப்படுத்துவதில் அதிசயம் ஒன்றுமில்லை. யாரும் இதுவரை அறிந்திடாத நுணுக்கமான விவரங்களை திரட்டியிருப்பதில் பாரா நூல்முழுக்க ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஆல்பிரட் துரையப்பாவை போட்டுவிட்டு நேரே சுன்னாகம் போய், பஸ் ஸ்டாண்டில் இறங்கி, 769ஆம் நம்பர் பஸ்ஸுக்காக காத்திருந்து ஏறி.. இவ்வாறாக பிரபாகரன் ஏறிச்சென்ற பஸ்ஸின் ரூட் நம்பரைக் கூட பதிவு செய்திருக்கும் லாவகம்.

சில இடங்களில் இந்த நுணுக்கம் எழுத்தாளரின் வேகத்தில் சறுக்கியிருப்பதாகவும் வாசகனாக உணரமுடிகிறது. 70களின் தொடக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் தமிழக அரசியல் தலைவர்களிடம் ஆதரவு திரட்ட தமிழகத்துக்கு படையெடுக்கிறார்கள். அவர்கள் முக்கியமாக சந்திக்க விரும்பியது பெரியாரை, குறிப்பாக அண்ணாதுரையை என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அண்ணாதுரை காலமான நிலையில் கலைஞரை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். (பார்வை : பக்கம் 34)

சுயம்புவாக பிரபாகரன் உருவான வரலாறு எளிமையான, ஆனால் கவரக்கூடிய மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரே அவர் இயக்கத்துக்கான பயிற்சிமுறைகளை ஏற்படுத்தியது. வெளிநாடுகளில் வற்புறுத்தி பயிற்சிபெற்ற சிலரும் ‘தலைவரோட பாடங்களுக்கு ஈடாகாது’ என்று ஒப்புக்கொண்ட அழகும், அழகோ அழகு.

80களின் தொடக்கத்தில் வல்லரசுகளுக்கான பனிப்போர் மாதிரி நடந்த கலைஞர் - எம்.ஜி.ஆர் ஈழ ஆதரவுப் போரை பதிவு செய்திருப்பதில் நூலாசிரியரின் சார்புத்தன்மை வெளிப்படுகிறது. கிட்டத்தட்ட புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பேசுவதையே நூலாசிரியரும் பேசுகிறார். எம்.ஜி.ஆருக்கு இவ்விவகாரத்தில் புனிதத்தன்மையை ஏற்படுத்தும் விதமான சிந்தனை. கலைஞர் அப்போதுதான் முதன்முறையாக, அதுவும் எம்.ஜி.ஆர் ஆர்வம் காட்டியதால் இவ்விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டார் என்பது போன்ற தொனி தெரிகிறது. கலைஞர் அதற்கு முன்பாகவே பலமுறை ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து தமிழக பொதுமேடைகளில் பேசியிருக்கிறார். இலங்கைக்கு செல்ல கலைஞருக்கு மட்டும் விசா கொடுக்கக்கூடாது என்று சிங்கள ஆட்சியாளர்கள் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருந்ததாகவே கூட அக்காலத்தில் பேசிக்கொள்வார்கள்.

இந்தியாவில் ஈழம் குறித்து பரவலாகப் பேசப்பட காரணமாக இருந்த மதுரை டெசோ மாநாட்டைப் பற்றி நூலில் பெரியதாக ஏதும் காணக்கிடைக்கவில்லை. வாஜ்பாய், பகுகுணா உள்ளிட்ட தேசிய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நிகழ்வு அது. டெசோவில் புலிகள் பங்கேற்க மறுத்ததற்கு பிரபாகரனின் நியாயம் என்னவென்றும் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.

550971231 - இந்த எண் என்னவென்று யாருக்காவது தெரியுமா? உலகம் சுற்றும் மர்ம வாலிபன் கே.பி. என்கிற குட்டி என்கிற குமரன் பத்மநாதன் என்கிற செல்வராஜா குமரனின் தாய்லாந்து நாட்டு குடியுரிமை எண். 1984ல் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவரது நடவடிக்கைகள் இருட்டானவை. இவர் யார்? என்ன செய்துக்கொண்டிருக்கிறார்? என்பது கடந்த சிலமாதங்களாக மட்டுமே ஒவ்வொன்றாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அவரது குடியுரிமை எண் உள்ளிட்ட பல விவரங்களை தேடி தேடி எழுதியிருக்கிறார் பா.ராகவன்.

1983 ஜூலைக்கலவரத்தின் கொடூரத்தை சில பத்திகளிலேயே உணரவைத்து, அதிரடியாக அதற்கு பதிலடி தந்த புலிகளின் வீரத்தை வர்ணிக்கிறார். கமாண்டர் செல்லக்கிளி தலைமையிலான அந்த மோதலில் பிரபாகரன், புலேந்திரன், கிட்டு உள்ளிட்டோரும் நேரடியாக பங்கேற்கிறார்கள். இயக்கத்தின் தலைவரே கமாண்டர் ஒருவரின் தலைமையை ஏற்று போரிடும் பாங்கு அற்புதம். பதிமூன்று சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்ட அத்தாக்குதலில் தான் பிரபாகரனின் களமாடும் திறமை வெளிப்பட்டது. ஒன்பது பேரை வீழ்த்தியிருந்தார் பிரபாகரன். ஜி3 ரக துப்பாக்கியப் பயன்படுத்திய பிரபாகரன் அதற்காக செலவிட்டது ஒன்பது குண்டுகள். ஒரு துப்பாக்கி ரவையின் விலை இருபத்தி ஐந்து ரூபாய். இப்பகுதியை வாசிக்கும்போது உடலெல்லாம் சிலிர்க்கிறது. சந்தேகமே வேண்டாம். இதுவரை உலகம் கண்ட மாவீரர்களில் பிரபாகரனுக்கு நாம் முதலிடம் தயங்காமல் கொடுக்கலாம்.

பிரபாகரன் அற்புதமாக சமைப்பார். கோழியடித்துக் குழம்பு வைப்பார். மீன் சமைப்பதில் பாலசிங்கம் கில்லாடி. பிரபாகரனின் தோழர்கள் துணி துவைப்பார்கள். வீடு பெருக்கி சுத்தம் செய்வார்கள். ஹாஸ்டல் வார்டன் மாதிரி அடேல் பாலசிங்கம் அத்தனை பேரையும் கட்டி மேய்ப்பார். சென்னை திருவான்மியூரில் பிரபாகரன் வாழ்ந்த தினங்களை ஒரு மேன்ஷன் வாசனையோடு விவரிக்கிறார் பாரா.

பிரபாகரனின் காதல் கூட ஒருமாதிரி முரட்டுத்தனமாகவே சொல்லப்படுகிறது. அதாவது விஜயகாந்த் பாணி காதல். செயல்வெறி வீரரை, நாட்டுக்காக தன்னைத்தானே நேர்ந்துக் கொண்டவரை காதலித்து மணந்தவர் மதிவதனி. பிரபாகரன் செய்த தியாகங்களில் சரிபாதியை இவருக்கும் விட்டுத்தருவதே நியாயம். இந்திய வரலாற்றில் நாடிழந்து காடும், பாலைவனமுமாக அலைந்த ஹூமாயுன் உடனேயே திரிந்த அவரது மனைவி நினைவுக்கு வருகிறார். ஹூமாயுனின் மனைவி மொகலாயரின் வீர வரலாற்றுக்குப் பரிசாக பெற்றெடுத்த அக்பரைப் போலவே மாவீரன் சார்லஸ் ஆண்டனியை ஈழத்துக்காக பெற்றுத் தந்தார் மதிவதனி.

ஈழத்தில் ஆயுதம் ஏந்திய போராளி இயக்கங்கள் கிட்டத்தட்ட முப்பதி ஒன்பது இருந்திருக்கின்றன. புலிகள் இயக்கம் தவிர்த்து ஏனைய இயக்கங்கள் இந்தியாவின் உளவுத்துறையான ரா அமைப்புக்கு அடிவருடிகளாக மாறிவிட்டன. புலிகள் இயக்கம் மட்டுமே என்றுமே ’ரா’வைச் சார்ந்து ஒத்து செயல்பட்டதில்லை. இந்நூலை வாசிப்பவர்கள் ஈழத்துக்கு வில்லன் சிங்களவனா இந்தியாவா என்று யோசிப்பார்கள். இந்திராகாந்திக்குப் பிறகு ராஜீவ் காலத்திலான இந்தியச் செயல்பாடுகளை விறுப்பு வெறுப்பின்றி பாரா எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். குறிப்பாக தீக்‌ஷித்தின் கை. புலிகள் இயக்கத்தில் துரோகிகள் களையெடுக்கப்பட்டதையும் (மாத்தையா போன்றவர்கள்) விறுவிறுப்பாக பேசிக்கொண்டே போகிறார்.

ஆனாலும் சகோதரப் படுகொலைகள் குறித்து புலிகளை மாதிரியே நூலாசிரியரும் ‘ஆமாய்யா. ராவுக்கு அடிவருடி ஆனாங்க. போட்டுத் தள்ளினோம்’ என்பது மாதிரி மிக லைட்டாக பேசுவது வருத்தத்தை தருகிறது. சிறீசபாரத்தினம் கிட்டுவால் கொடூரமாக போட்டுத்தள்ளப்பட்டதை ரொம்பவும் லேசான வார்த்தைகளில் நிரப்புகிறார். பிரபாகரனுக்கு இணையாக தமிழகத்தில் நேசிக்கப்பட்ட ஆளுமைகளில் சபாரத்தினமும் ஒருவர். அவர் படுகொலை செய்யப்பட்ட செய்தியை செய்தித்தாளில் வாசித்து கண்ணீர் விட்டவர்களை நான் நேரில் கண்டிருக்கிறேன்.

யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர் வெளியேற்றம், இயக்கத்திலிருந்த இஸ்லாமியர்கள் கதி, மலையகத் தமிழர்கள் - இவர்களையெல்லாம் பாரா கண்டுகொள்ளவேயில்லை. அதுபோலவே கருணா வெளியேறிய சந்தர்ப்பம் பற்றிய தகவல்களும் மிகக்குறைவு. அமைதிப்படைச் செயல்பாடுகள், இந்தியாவோடு புலிகள் மோதவேண்டிய சூழலை விவரிக்கும்போது, புலிகள் இலங்கையோடு சேர்ந்து செயல்பட்டதையும் குறிப்பிட்டதாக தெரியவில்லை. இந்தியாவோடு பிரபாகரன் மோதவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய திலீபனின் மரணம் பற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கலாம். அதே நேரத்தில் துணி வியாபாரிகளாகவும், குறி சொல்பவர்களாகவும் வேடமணிந்து ரா செயல்பட்டதை விலாவரியாக புன்னகைத்துக்கொண்டே எழுதிக்கொண்டு போகிறார் பாரா.

சகோதரப்படுகொலைகளை லேசாக எடுத்துக்கொண்ட நூலாசிரியர் ராஜீவ் படுகொலையை மிக சீரியஸாக எடுத்துக்கொண்டு புலிகள் செய்த மிகப்பெரியத் தவறு என்பதாக சாடுகிறார். அதற்கு முன்பாக ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பற்றி கோடிட்டு மட்டுமே காட்டுகிறார். அசோகா ஓட்டலில் பிரபாகரன் சிறைவைக்கப்பட்டாரா என்பது பற்றி பளிச்சென்று எழுதவில்லை. அதே நேரத்தில் சென்னையில் பிரபாகரன் மனைவி சிறைவைக்கப்பட்டதாக சொல்லப்படுவது பற்றியும் குறிப்புகள் எதுவுமில்லை. அந்த ஒப்பந்தத்தில் எம்.ஜி.ஆரின் பிரதிநிதியான பண்ரூட்டி ராமச்சந்திரனின் ரோலையும் சொல்லியிருக்கலாம்.

1991, திருப்பெரும்பெரும்புதூர் துன்பியல் சம்பவத்துக்குப் பிறகான பிரபாகரனின் வாழ்க்கை அவசர அவசரமாக நூலாசிரியரால் எழுதப்பட்டிருப்பதாக உணரமுடிகிறது. பிரபாகரன் சிந்தித்து, பொட்டு அம்மான் செயல்பட்டு, ரகு என்கிற ரகுவரன் என்கிற பாக்கியச் சந்திரன் என்கிற சிவராசன் நடத்தியதே அத்துன்பியல் சம்பவம் என்று தீர்ப்பு தருகிறார் நூலாசிரியர். இதே சிவராசன் இதற்கு முன்பாக வெற்றிகரமாக செயல்பட்டது கோடம்பாக்கம் பத்மநாபா படுகொலை என்பதையும் மறக்காமல் சொல்கிறார்.

“ஒரு காலத்தில் இலங்கைத் தீவின் மூன்றிலொரு பகுதி நிலப்பரப்பையும், மூன்றில் இரண்டு பகுதி கடற்பரப்பையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆண்டு கொண்டிருந்த பிரபாகரனையும், அவரது இயக்கத்தவர்களையும் வன்னிப்பகுதியில் ஐந்து சதுர கிலோ மீட்டர் பரப்புக்குள் சுருக்கிவிட்டோம்; மொத்தமாகப் பிடித்துவிடுவோம் என்று இலங்கை ராணுவம் அறுதியிட்டு சொல்லுமளவு நிலைமை படிப்படியாக மாறிப்போனதன் தொடக்கக் கண்ணி ராஜீவ் படுகொலையில் தான் இருக்கிறது” - இவ்வாறாக நூலாசிரியர் எழுதுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை.

இன்னும் மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் பிரபாகரனுக்கு மூன்றிலொரு பகுதி நிலப்பரப்பு, மூன்றில் இருபகுதி கடற்பரப்பு கிடைத்ததெல்லாம் ராஜீவ் படுகொலைக்குப் பிறகே. அடுத்த பத்தாண்டுகளில் பிரபாகரனும், அவரது இயக்கமும் அடைந்த வளர்ச்சி அலாதியானது. 91க்கும் 2006க்கும் இடையிலான சம்பவங்கள் இந்நூலில் விலாவரியாக காணக்கிடைக்கவில்லை. இலங்கையை சுருளவைத்த காட்டுநாயக்கா தாக்குதல் போன்றவற்றையாவது குறிப்பிட்டிருக்கலாம்.

நூலின் கடைசி அத்தியாயங்கள் வாரப்பத்திரிகை கவர்ஸ்டோரி பரபரப்பைக் கொண்டிருக்கிறது. நிஜமாகவே அவை வாரப்பத்திரிகையில் கவர்ஸ்டோரியாக வந்தவைதான் என்பதை நூலின் முன்னுரையில் அறிந்துகொள்ளவும் முடிகிறது. பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்று இந்த அத்தியாயங்களில் அடித்துப் பேசுகிறார் நூலாசிரியர். இதற்காக தான் சேகரித்த தரவுகளைப் பட்டியலிடுகிறார். அதே நேரத்தில் பிரபாகரன் மரணமடையவில்லை என்று நம்புபவர்கள் சொல்லும் காரணங்களையும் நேர்மையாக பத்தி பத்தியாக எழுதியிருக்கிறார்.

பிரபாகரன் இல்லாத நிலையில் அடுத்தது என்ன? என்று கேள்வி எழுப்பும் பா.ராகவன் தமிழருக்கான எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையை அச்சத்தோடு பேசுகிறார். முத்தாய்ப்பாக அவர் எழுதியிருப்பது : “ஓரினம் உரத்து அழக்கூடத் தெம்பில்லாமல் தேங்கிக் கிடக்கிறது. இன்னொரு இனமோ இனிப்பு வழங்கி, ஆடிப்பாடிக் கொண்டாடுகிறது. எப்படி இந்த இருவரும் ஒன்றாக வாழமுடியும்?”

நூலின் பெயர் : பிரபாகரன் - வாழ்வும், மரணமும்!

நூல் ஆசிரியர் : பா.ராகவன்

விலை : ரூ.100/-

பக்கங்கள் : 208

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

ஒவ்வொரு தமிழர் இல்ல நூலகத்திலும் கட்டாயம் இடம்பெற வேண்டிய நூல். பா.ராகவனின் மாஸ்டர் பீஸ் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. மிக முக்கியமான இந்நூலின் அட்டைப்படம் மட்டும் என்னை அவ்வளவாக கவரவில்லை. விஜயகாந்த் படத்தின் ஓப்பனிங் சீன் மாதிரி ஃபயராக இருக்கவேண்டாமா பிரபாகரன் புத்தகத்தின் அட்டைப்படம்?

வேலுபிரபாகரனின் காமக்கதை!


காதல் என்ற சொல்லுக்கு எந்த பொருளுமில்லை. பெண்ணின் உடல் மீதான ஈர்ப்பும், காமமுமே நம் சமூகத்தில் காதல் என்று சொல்லப்படுகிறது. இந்த காதல் என்ற கருமாந்திரம் இல்லாவிட்டால் இந்தியர்கள் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு முன்பே பல்பை கண்டுபிடித்து ஆட்டு ஆட்டுவென்று ஆட்டியிருப்பார்கள் என்ற சிந்தனையை உரக்கச் சொல்லவே காதல் கதை என்ற செல்லுலாய்டு குப்பையை கொட்டியிருக்கிறார் வேலுபிரபாகரன்.

சென்சார் இப்படத்தைப் போட்டுக் குதறியதில் எந்த தப்புமேயில்லை. பாடாவதி படத்தை திரும்ப திரும்ப சோர்வடையாமல் போட்டுப் பார்த்து வெட்டித்தள்ளிய சென்சார் அதிகாரிகளுக்கு கலாச்சார அமைச்சகம் சம்பள உயர்வு கொடுக்கலாம். பாடல் காட்சிகளிலும், ஏனைய காட்சிகளிலும் தாராளமாக செமி நியூட். படத்தில் நடித்த நடிகைகளுக்கு மார்பகம் குறித்த பிரக்ஞையே சற்றும் இல்லை என்பதால் தமிழ் சினிமா ஹாலிவுட் அளவுக்கு சைஸில் பெருத்து விட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.

காதல் மற்றும் காமம் குறித்த வேலுபிரபாகரனின் உளறல்களுக்கு இடையே பகுத்தறிவுப் பிரச்சாரக் கொடுமை. ஒரு காட்சியில் வேலுபிரபாகரன் பெரியார் வேடத்தில் தோன்றிப் படுத்துகிறார். பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கிறது? கொஞ்சமும் சரக்கில்லாத மூன்றாந்தர இந்த பிட்டுப் படத்தை எடுத்துவிட்டு இத்தனை நாளாக ஊடகங்களில் வேலு பிலிம் காட்டிக் கொண்டிருந்தது ரொம்பவும் ஓவர். ரஜினிகாந்த் இப்படத்துக்கு பொருளாதார ரீதியாக உதவியிருந்தால் அதைவிட நகைச்சுவை வேறெதுவுமில்லை.

ஹீரோயின் ஷெர்லினின் கண்கள் மட்டும் ஆறுதல். முதல் படமென்றாலும் திறந்த மனதோடே கேமிராவை அணுகியிருக்கிறார். பாபிலோனா உள்ளிட்ட மற்ற கட்டைகளும் தங்கள் திறமையை சிறப்பாகவே வெளிக்காட்டியிருக்கிறார்கள். இவர்களின் இடுப்புக்கும், மார்புக்கும் ஸ்பெஷல் லைட்டிங் அமைப்பதிலேயே கேமிராமேனின் மொத்தக் கவனமும் இருந்திருக்கிறது.

பெண் உடல் மீதான கிளர்ச்சி இளைஞர்களுக்கு இருப்பதாலேயே நாட்டில் நடைபெறுகிற குற்றங்களில் எண்பது சதவிகிதம் பாலியல் குற்றமாக இருக்கிறது என்று முதல் காட்சியிலேயே பாடம் போதிக்கும் வேலுபிரபாகரன் இப்படம் மூலமாக தீர்வு எதையும் முன்வைக்கவில்லை. மாறாக மேலும் பாலியல் குற்றங்கள் முன்பைவிட தீர்க்கமாக நடைபெற உந்துசக்தியாக இப்படத்தின் காட்சிகளை அமைத்திருக்கிறார். வரைமுறையற்ற காமத்துக்கு சுதந்திரம் கோருகிறார். இந்த கண்ணறாவியைப் பார்த்துவிட்டு எந்த மாதிரியான விவாதம் சமூகத்தில் கிளம்பும் என்று அவர் எதிர்பார்க்கிறாரோ புரியவில்லை.

பிரபல கவர்ச்சி நடிகையை வேலுபிரபாகரன் திருமணம் செய்துகொண்டு சில நாட்கள் வாழ்ந்திருக்கிறார். அவர் மீது கொண்டது காதலல்ல, வெறும் காமம் என்றுணர்ந்து விலகியிருக்கிறார். பிறகு வேறொரு பெண்ணிடம் காதல்வசப்பட்டு.. மன்னிக்கவும் காமவசப்பட்டு, பின்னர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். எனவே காதல் என்பது பொய், காமம் என்பதே மெய் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இப்படியாக சொந்தவாழ்வில் ஏற்பட்ட சில காம, காதல் குளறுபடிகளால் மனம் குழம்பி ‘வேலுபிரபாகரனின் காதல் கதை' என்று படமெடுத்து மக்களையும் குழப்ப கிளம்பியிருக்கிறார்.

ஆர்ட் டைரக்‌ஷன் தவிர்த்து தொழில்நுட்பரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் மகா மகா மட்டமான படைப்பு இது. ஒரு மேட்டர் படத்துக்கு எப்படி இசையமைக்க வேண்டுமோ, அப்படியே கச்சிதமாக இசையமைத்திருக்கிறார் இசைஞானி. தியேட்டரில் எக்ஸ்ட்ரா பிட் ஓட்டாதது ஒன்றுதான் பாக்கி. மற்றபடி முழுநீல வண்ணப்படம். அரங்கு நிறைந்து ஓடுகிறது. இதுபோதாதா வேலுபிரபாகரனுக்கு?

16 ஜூலை, 2009

மோகன் அண்ணா!


எனக்கு சிறுவயதாக இருந்தபோது மடிப்பாக்கத்தில் முடிவெட்டும் கடை எல்லாம் இருந்ததாக நினைவில்லை. கன்னியப்பன் ஒவ்வொருத்தர் வீடாக வந்து முடிவெட்டி விட்டு செல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவருக்கு வேலை அதிகம். பெருசுகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் முடிவெட்டிக் கொள்ளும் என்பதால் வாரநாட்களில் தான் பையன்களுக்கு முடிவெட்டுவார். அதுவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எந்த பையனும் தலைநீட்ட வீடுகளில் அனுமதிக்கப்படாது என்பதால் மற்றக்கிழமைகளில் வந்து வெட்டிவிட்டு ரெண்டு ரூபாயோ, மூன்று ரூபாயோ வாங்கிச் செல்வார்.

எனக்கு முடிவெட்டும் போது தலையை அசைத்துக்கொண்டே இருப்பேன். அவருக்கு வாகாக தலையை காட்டமாட்டேன். “சாவுற காலத்துலே சங்கரா, சங்காரான்னு கெடக்க வேண்டிய வயசுலே இவங்கிட்டே அவஸ்தைப் படுறேன்!” என்று புலம்பிக்கொண்டே வெட்டுவார். முடிவெட்டி முடித்ததும் கண்ணாடியைப் பார்த்து நொந்துவிடுவேன். அம்மா “ஷாட்டா வெட்டுங்க” என்று தான் கன்னியப்பனிடம் சொல்லியிருப்பார். கன்னியப்பனோ கிட்டத்தட்ட மொட்டையே அடித்துவிடுவார். மீண்டும் முடி வளர்ந்து ஒரு நிலைக்கு வர கிட்டத்தட்ட ஆறுமாதமாகிவிடும். ஒருநாள் திடீரென்று அந்த கன்னியப்பன் இறந்துப் போனார். கன்னியப்பனுக்கு நான்கு மகன்கள் என்பதாக நினைவு. கன்னியப்பனின் இரண்டாவது மகன் தான் மோகன் அண்ணா. மற்ற மகன்கள் வேறு வேறு தொழில்களுக்கு மாறிவிட மோகன் அண்ணா மட்டும் அப்பாவின் தொழிலை தொடர்ந்தார்.

கன்னியப்பன் வீடு வீடாக சென்று நாவிதம் செய்து பெரியதாக சொத்து எதுவும் சேர்த்துவிடவில்லை. சம்பாதித்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் குடித்தே அழித்தார். மோகன் அண்ணா இளைஞராக இருந்ததால் கொஞ்சம் புத்திக் கூர்மையோடு செயல்பட்டார். கூட்ரோடில் ஒரு கடை வாடகைக்கு பிடித்து சுழலும் நாற்காலி போட்டார். கண்ணாடிக்கதவு போட்டு பச்சைக்கலர் ட்யூப் லைட்டை பொருத்தி நவீன மோஸ்தரில் ஒரு கடையை உருவாக்கினார். கன்னியப்பன் போல ரெண்டு ரூபாய், மூன்று ரூபாய்க்கெல்லாம் முடிவெட்டாமல் ஒரு வரையறுக்கப்பட்ட தொகையை தன் வேலைக்கு கூலியாக வாங்கினார் மோகன். ஊர் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் அவரவர் வீட்டுக்கே சென்று முடிவெட்டி விட்டு வருவார். மடிப்பாக்கத்தில் முதன்முதலாக சலூன்கடை வைத்தது மோகன் அண்ணா தான் என்று நினைக்கிறேன்.

சலூன்கடை வைத்திருந்தது மட்டுமல்லாமல் மோகன் அண்ணாவுக்கு வேறு பணிகளும் இருந்தது. ஊரில் யார் இறந்தாலும் மரண அறிவிப்பினை ஊர்முழுக்க சொல்வது மோகன் அண்ணாவுக்கு சாதிரீதியாக கொடுக்கப்பட்ட பணி. அவர் தந்தை செய்துவந்த இந்தப் பணியை மோகன் அண்ணாவும் எந்த முகசுளிப்புமின்றி தொடர்ந்து செய்துவந்தார். கூடுதல் வருமானம் இதில் கிடைத்ததும் கூட அவர் இந்த பணியை விரும்பி செய்ய காரணமாக இருந்திருக்கலாம்.

இழவு விழுந்த வீட்டில் செய்யவேண்டிய கருமாந்திரப் பணிகள் அனைத்தையும் மோகன் அண்ணா செய்யவேண்டியிருந்தது. தாசரி அழைத்துவருவதிலிருந்து பாடை கட்டுபவன், பறைமோளம் அடிப்பவன், பல்லாக்கு அலங்காரம் செய்பவன் என எல்லோரையும் ஒருங்கிணைத்து சுடுகாட்டில் பிணம் எரியும்வரை மோகன் அண்ணாவின் கடமைகள் தொடரும். பதினாறாவது நாள் காரியத்துக்கான ஏற்பாடுகளும் கூட மோகன் அண்ணாவின் மேற்பார்வையில் தான் நடக்கும். காரியத்துக்கு என்றிருக்கும் அய்யரை கூட்டிவருவதிலிருந்து குளத்தங்கரை மண்டபத்தை புக் செய்வது எல்லாமே மோகன் அண்ணாவே செய்வார்.

யார் வீட்டுப் பக்கமாவது மோகன் அண்ணாவை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம், எங்கேயோ எழவு விழுந்திருக்கிறது என்று. அய்யர் வீடுகளின் மரணம் ஏற்பட்டால் மோகன் அண்ணாவின் சாங்கியரீதியான வேலைகள் எதுவும் தேவைப்படாது என்றாலும் இறந்தவர் கொஞ்சம் ஊரில் பிரபலமான அய்யராக இருந்தால் எல்லோருக்கும் போய் துக்கச்செய்தி சொல்லுவார். இதற்காக அவர் காசு எதுவும் அய்யர் வீடுகளில் வாங்கமாட்டார். அவரவர் விருப்பப்பட்டு குவார்ட்டரோ, ஹாஃபோ வாங்கிக் கொடுத்தால் அது போதுமானது.

சுபகாரியங்களின் போதும் மோகன் அண்ணாவின் தேவை மடிப்பாக்கம் வாசிகளுக்கு தேவைப்பட்டது. அதிகாலையில் மணமகனுக்கு எண்ணெய் நலங்கு வைப்பது போன்ற சடங்குகள் எல்லாம் மோகன் அண்ணாவுக்கு தான் எப்படி முறைப்படி செய்வது என்று தெரியும். கல்யாணத்தில் வண்ணாத்திக்கு துணி கொடுப்பது போன்ற சடங்குகள் கூட உண்டு. மடிப்பாக்கத்தில் யாருக்கு வண்ணான் - வண்ணாத்தியை எல்லாம் தெரியும்? மோகன் அண்ணா தான் எங்கேயோ போய், யாரையோ கூட்டி வருவார்.

ஊரில் மக்கள்தொகை பெருக்கம் ஏற்பட்டு மரணவிகிதம் அதிகரிக்க அதிகரிக்க அவரால் அவர் தொடங்கிய சலூன் கடையில் அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை. எப்போதும் கடையை மூடிவிட்டு சாவு செய்தி சொல்லும் வேலையில் பிஸியாக இருப்பார். வாடிக்கையாளர்கள் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட மற்ற முடிவெட்டும் நிலையங்களுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் மோகன் அண்ணாவுக்கு குடிப்பழக்கமும் உச்சநிலைக்கு போயிருந்ததால் தொழில்நேரத்தில் குடித்துவிட்டு சொதப்பவும் ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் அவரால் சலூன் தொழிலை தொடர்ந்து செய்யமுடியவில்லை. கடையை இழுத்து மூடிவிட்டு தெரிந்தவர்களுக்கு மட்டும் அவரது அப்பாவைப் போல வீட்டுக்கு போய் சவரம் செய்ய ஆரம்பித்தார். நல்லவேளையாக அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் சம்பாதித்த பணத்தில் ஒரு சொந்தவீடு வாங்கியிருந்தார். இதன்பிறகு முழுக்க முழுக்க எங்காவது எழவு விழுந்தால் மட்டுமே சம்பாதிக்க முடிந்தது, சுபகாரியங்களில் வருமானம் ரொம்ப கம்மி. எப்போதாவது ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்களுக்கு தெரிந்த இடங்களை காட்டிவிட்டு மிகக்குறைவான கமிஷன் வாங்குவார்.

குடிக்க கையில் காசில்லாத நேரத்தில் அவரது தொழில்பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு டிவிஎஸ்50யில் ஊரை ரவுண்டடிப்பார். “என்ன நாயக்கரய்யா தாடி விட்டிருக்கீங்க? திருப்பதி போறீங்களா?” என்று எதிர்படுபவரை கேட்பார். “அட அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. நேரமில்லே” என்று சொன்னால் உடனே கிடைக்கும் இடத்தில் உட்காரவைத்து ஷேவிங் செய்துவிடுவார். கொடுக்கும் காசை வாங்கிக் கொள்வார். ஒரு ‘கட்டிங்'குக்கு தேவையான துட்டு கிடைத்ததும் நேராக மதுக்கடைக்கு வண்டியை விடுவது அவர் வழக்கமாக இருந்தது. மோகன் அண்ணாவுக்கு அதிர்ஷ்டவசமாக பிறந்தது ரெண்டுமே பையன்கள். பையன்கள் சுமாராக படித்து, வளர்ந்து ஏதோ வேலை, வெட்டிக்கு போய் சம்பாதிக்கிறார்கள். அப்பா, தாத்தா செய்த தொழிலை தொடர அவர்களுக்கு விருப்பமில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மோகன் அண்ணா செத்துப் போய் விட்டார். யார்யாரோ செத்தப் போதெல்லாம் ஊருக்கே செய்தி சொன்ன அவர் செத்துப் போனதை அக்கம்பக்கத்துக்கு சொல்லக்கூட ஆளில்லை. எதேச்சையாக அவர் வீட்டுப் பக்கமாக போனபோது தான் எனக்கே தெரிந்தது. மோகன் அண்ணாவுக்கு நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பதுக்குள் வயதிருக்கலாம். கொஞ்சம் ஒல்லியாக இருப்பார். எவ்வளவு தண்ணி அடித்திருந்தாலும் அண்ணன் சுறுசுறுப்பாக கில்லி மாதிரி சுழன்று சுழன்று வேலை பார்ப்பார். எனக்குத் தெரிந்து அவர் வாழ்நாளில் ஒரு லட்சம் லிட்டராவது மது அருந்தியிருப்பார் என்று நினைக்கிறேன். “இவ்ளோ தண்ணியடிக்கிறீங்களே? ஒடம்புக்கு ஏதாவது ஆயிடாது?” என்று கேட்டால் “தண்ணியால நான் சாவமாட்டேன்டா” என்பார். இப்போது கூட அவர் செத்ததற்கு மஞ்சக்காமாலையை தான் காரணமாக சொல்கிறார்கள்.

மோகன் அண்ணா மரித்துப் போனதற்காக ஊரே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது, “இனிமே யாராவது செத்தா இழவு வேலையை எல்லாம் யாரு பார்க்குறது?” என்று.